
ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை
தவமிருந்து இரையாக்கிக் கொண்டது கொக்கு
எத்தனையோ மனிதர்களைக் கடந்து
ஒரு புத்தனை உருவாக்கி
காத்திருந்து ஞானம் பெற்றது போதி
அகழ்வாரைத் பொறுத்து காலங்கள் பலகடந்து
முடிவில் தனதாக்கிக் கொண்டது பூமி
மதிப்பில்லா புதையல்களைப் புறம் தள்ளி
தொழுவத்தில் அவதரித்த தேவனுக்குத் தொட்டிலாகி
வரலாற்றில் இடம் பெற்றது அத்தி
நெடிய பாறையை ஓயாமல் முட்டி வீழ்த்தி
தன்னுள் சேர்த்து அணைத்துக் கொண்டன அலைகள்
என்றாவது திரும்ப வருவாயெனக்
வருடங்களை விழுங்கி காத்திருக்கும் என்னை மட்டும்
வாழத் தெரியாதவள் எனப் பெயரிட்டு விரைகிறது உலகம்