திங்கள், நவம்பர் 07, 2011

வந்தான் வென்றான்


சமீபத்திய தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில் வேலாயுதம் முந்தியதா இல்லை 7 -ஆம் அறிவு முந்தியதா என்று விஜய் ரசிகர்களும் சூர்யா ரசிகர்களும் கச்சை கட்டி மோதிக் கொள்ளும் இந்த நேரத்தில் எந்த திரைப்படம் வெற்றி வாகை சூடியது என்பது பற்றி ஒரு அலசல். முதலில் தெளிவு படுத்த வேண்டியது ஒன்று உண்டு - அது நான் விஜய் ரசிகையும் அல்ல சூரியா ரசிகையும் அல்ல. எனவே எனது விமர்சனம் எந்த சமரசத்திற்கும் உடன் பட்டது அல்ல என்பதே.
சூர்யா, விஜய் இருவரும் திறமையான நடிகர்கள்.  திரைத்துறையில் பல வருடமாக இருந்து பல வெற்றி திரைப்படங்களை நமக்கு அளித்து  இருக்கிறார்கள். சூர்யா படத்திற்கு படம் காட்டும் வித்யாசமான நடிப்பும், தன் உடலை வருத்தி - 20 வயது இளைஞன் கதாபாத்திரம் முதல் 60 வயது முதிய கதாபாத்திரம் வரை பொருந்துவதற்காக மெனக்கிடுவதாகட்டும், நடனம், சண்டை என்று எல்லாவற்றிலும் அற்புதமாக மிளிர்பவர். விஜய்யும் சூரியாவிற்கு இளைத்தவர் அல்ல. நடனம், சண்டை, காமெடி என்று பல தளங்களில் பரிமளிப்பவர். இப்படி இருக்க எந்த நடிகர் சினிமாவின் அடுத்த தளத்திற்கு தனது புதிய திரைப்படம் மூலம் சென்றார் என்ற கேள்வி எழுகிறது. 


விஜய் படம் என்றால் பொழுது போக்குக்கு கண்டிப்பான கியாரண்டி உண்டு. மசாலா ஆக்ஷன் தூக்கலான கதை, அரசியல் பலம் வாய்ந்த அல்லது மந்திரியாகவோ முதலமைச்சராகவோ பதவியில் உள்ள வில்லன், தொப்புள் காட்டும் செகண்ட் ஹீரோயின் , குடும்ப குத்துவிளக்கு பர்ஸ்ட் ஹீரோயின், அண்ணனே/மகனே உலகம் என்று வாழும் தங்கை அல்லது தாய் கதாபாத்திரம் என்று சினிமாவின் இலக்கணங்கள் மீறாத கதை அமைப்பு கொண்ட படம்  என்றால் கண்ணை மூடிக் கொண்டு விஜய் படம் என்று தைரியமாக சொல்லலாம்.

சூரியா படங்கள் அந்தளவுக்கு யூகிக்க கூடிய கதை அமைப்பு உள்ள படங்கள்  இல்லை என்றாலும் பல சமயம் நல்ல திரை கதையிலும் சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்திற்காக திணிக்கப்படும் மசாலா விஷயங்கள் விஜய் படத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல. ஆக்ரோஷமாக படம் முழுவதும் கத்திக் கொண்டிருக்கும் வில்லன், அறிமுக தத்துவ பாடல், முறுக்கு மீசை, அருவாள் என்று பல படங்களில் சூரியா படமும்  பார்முலா வட்டத்தில் சிக்கியுள்ளது கொஞ்சம் வருந்த தக்கதே.

 
ஒரு திரைக்கதை பல சமரசங்களுக்கு பிறகே திரைப்படமாக எடுக்கப்படுகிறது என்பதும், வியாபார நோக்கதிற்காக மட்டுமே எடுக்கப்படுகிறது   என்பதும், எப்படியாவது ரசிகர்களை இரண்டரை மணி நேரம்  தியேட்டரில் உட்கார வைக்க  வேண்டும் என்ற கட்டாயத்திற்காக பல கவர்ச்சி அம்சங்கள் சேர்க்கப்பட்டு அலங்கோலப்படுகிறது என்பதும் நான் அறியாதது அல்ல. எனினும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களான சூரியா மற்றும் விஜய்யும் தனது புதிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றார்களா என்றால் இல்லை என்றே தான் சொல்ல வேண்டும்.




முதலில் வேலாயுதம் - விஜய் ஜெயம் ரவிக்கு இணையாக "ரீமேக்" விஜய்யாக அவதாரம் எடுத்து ரொம்ப நாள் ஆயிற்று. கடைசியாக எந்தப் விஜய் படம் ரீமேக் இல்லை என்பதே நினைவில் இல்லை. வேலாயுதமும் "ஆசாத்" என்ற தெலுங்கு படத்தின் தழுவலே. விஜய் தனது ரோலுக்காக எந்த படத்திலும் பெரிய அளவு மெனக்கிடுவதில்லை என்பது அடுத்த குறை. அதாவது எந்த படத்திலும் பெரிய அளவுக்கு கெட்டப்பை மாத்தி நடிக்க எத்தனிப்பதில்லை. (அப்படி நடிச்சாலும் யார் பார்ப்பா என்று நீங்க முணுமுணுக்கறது கேட்குது) பார்முலா மரத்தையே சுற்றி சுற்றி வரும் விஜய் நாலு பாட்டு, அஞ்சு சண்டை, இரண்டு அழுகை சீன் என்று சின்ன வட்டத்தில் சுழன்று பார்ப்பவருக்கும் அலுப்பு மூட்டுகிறார்.
வேலாயுதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சந்தானம் காமெடியில் ஏற்கனவே உச்சத்தில் உள்ளார். விவேக், வடிவேலு ஆகியோர் விட்ட இடத்தை அவர் நிரப்ப வேண்டிய அந்தஸ்தில் உள்ளதால் இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனை என்று கூற முடியாது. விஜய் அந்தோணி பாடல்கள் மாஸ் மற்றும் கிளாஸ் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தின் மூலம் சிறிதளவாவது பயன் அடைந்தவர் என்றால் அது ஹன்சிகாவும், ஜெனீலியாவும் தான். ஏன் என்றால் அவர்களுக்கு மட்டும் தான் புதிய பட வாய்ப்பு கிடைக்கும் முகாந்திரம் உள்ளது. மற்றபடி வேலாயுதம் - புதிய மொந்தையில் பழைய கள்.

அடுத்து 7-ஆம் அறிவு. அற்புதமாக தொடங்கும் திரைக்கதை காதல், டூயட் பாடல்,  பிரிவு மீண்டும் சோகப் பாட்டு என்று பாதியிலேயே நொண்டி அடிக்கிறது. சுருதிஹாசன் அற்புதமாக நடித்துள்ளார். சில பல இடங்களில் சூரியாவையே மறக்கச் செய்கிறார். ஆனாலும் திரைக்கதையில் பல கதாபாத்திரங்கள்  என்ன ஆகியது என்பதே தெரியாமல் அமைக்கப் பட்டுள்ளது. உதாரணம் அந்த ப்ரொபசர் பாத்திரம். அவரை போலீஸ் கைது செய்ததா என்பது கடைசி வரை தெரியவில்லை. வழக்கம் போல கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் அத்தனை அடி அடித்த பின் எழும் ஹீரோ வில்லனை துவைத்து தொங்கபோடுவதை இன்னும் எத்தனை சினிமாவில் பார்த்து  நொந்து போக வேண்டுமோ. கின்னஸ் பக்ரு மற்றும் சுருதி ஹாசன் போன்றோருக்கு இந்த படத்தின் மூலம் வேறு பட வாய்ப்புகள் கிடைக்க வழி உண்டு. ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல தாளம் போட வைக்கிறார். முருகதாசிற்கு அடுத்த படத்திலாவது நல்ல எடிட்டர் அமைய வாழ்த்துக்கள்.  7-ஆம் அறிவு - ஆற்றின் குறுக்கே எழுப்பட்ட மணல் பாலம். 



சரி ரெண்டு படமுமே சுமார் தானா ரெண்டுமே நல்லா இல்லையா என்று கேட்பவர்களுக்கு என்னோட அட்வைஸ். படத்தோட மெசேஜ் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக 7-ஆம் அறிவு வேலாயுதத்தை விட நிச்சயம் முன்னணியில் உள்ளது அப்படின்னு சொல்லுவேன். தமிழர்கள் எத்தகைய பாரம்பரியம் கொண்டவர்கள் என்பதும்  நமது மருத்துவம், வான சாஸ்திரம், அறிவியல் அறிவு ஆகியன இன்றிருக்கும் மேற்கத்திய நாகரிகத்தை விட எத்தனை உயர்வானது, விரிவானது, ஆழமானது என்பதை காட்டும் முகமாக இருந்ததால் 7-ஆம் அறிவு-க்கே  எனது வோட்டு . எல்லாருக்கும் தெரிஞ்ச மெசேஜ் தான். இருந்தாலும் தமிழன்  திரைப்படத்தின் மூலமாக மெசேஜ் சொன்னா தானே கேட்பான். வேலாயுதம் மெசேஜ் நல்லா இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் அடாவடி பண்றவனை தட்டி கேட்டால் என்ன நடக்கும் என்று கொஞ்சம் மதுரை அல்லது சென்னை பக்கம் போய் பாத்துட்டு வந்து சொல்லுங்க பாஸ் என்றே சொல்ல தோன்றுகிறது. காவலன் வந்த போது ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காமல் தவித்த விஜய் அநியாயத்தை தட்டி கேளுங்கள் என்று சொல்லும் போது கேட்க கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது. தட்டி கேட்ட ஜெனீலியா மற்றும் அவரது நண்பர்களுக்கு என்ன ஆச்சின்னு படத்துல வர்ற முதல் காட்சியை நீங்க பார்த்திங்களா விஜய் அப்படின்னும் கேட்க தோணுது. 


இத்தகைய படங்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த இரண்டு நடிகர்களும் செய்ய  வேண்டியது உண்டு. அது திரை துறையில் காலுன்ற கஷ்டப்படும் இளம் நடிகர்களுக்கு தங்கள் படத்தின் மூலம் வாய்ப்பு அளிப்பது, நல்ல இயக்குனர்களை அறிமுகப்படுத்துவது, ஆண்டு தோறும் ஒரு படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்று நடிப்பது அல்லது அப்படிப் பட்ட கதை அம்சம் உள்ள திரைப்படத்தை தயாரிப்பது போன்ற எதாவது ஒன்றை கடைபிடித்தால் இவர்களுக்கு திரைத்துறையில் அழிவில்லாத ஒரு இடம் நிச்சயம் உண்டு.


உங்களுக்கு ரெண்டு படத்தையும் பார்க்க நேரம் கிடைத்தால் ரெண்டு படத்தையும் பாருங்க. அப்படி இல்லேன்னா 7-ஆம் அறிவு-க்கு நேரம் ஒதுக்குங்கள்.  யாம் பெற்ற இன்பம்(உங்களுக்கு துன்பமாக இருந்தால்..மன்னிக்கவும்) பெருக இவ்வையகம்.

வியாழன், நவம்பர் 03, 2011

கதம்ப மாலை - 3

மனிதன் எங்கே
பெய்ஜிங் சீனா-வில் சாலை விபத்தில் அடிபட்டு ரோட்டோரம் கிடந்த குழந்தையை எண்ணற்ற பாதசாரிகள் கண்டும் உதவாமல் சென்றது மனதை சுட்டது. ஒரு வேளை சரியான நேரத்தில் முதலுதவி கிடைத்திருந்தால் குழந்தை இன்று உயிருடன் இருந்திருக்குமோ என்னமோ. அந்த குழந்தையின் தாயின் கண்ணீர் முகம் நினைவில் இருந்து அகல மறுக்கிறது. ரோட்டோரம் கிடந்தது பண மூட்டையாயின் யாரும் பார்க்காமல் சென்றிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆப்பிரிக்காவில் பட்டினி சாவு, சிறிலங்காவில் ஈழப்  போரில் எண்ணற்ற தமிழர்கள் உயிர் இழந்தது, துருக்கி நில நடுக்க உயிரிழப்பு ஆகியன யார் மனதிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. இந்த அவசர யுகத்தில் தன் பிள்ளை தன் குடும்பம் தன் வீடு என்ற சிறிய வட்டத்தில் மனித மனம் சுருங்கி கடுகளவாகி விட்டது.  பெரியோர் ,முதியோர்  ஆகியோருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. மாசற்ற குழந்தைக்கு உதவக் கூடவா ஒருவரும் முன்வரவில்லை என்பதை நினைக்க நினைக்க மனம் பதறுகிறது.  குழந்தை அடிபட்டு ரோட்டில் கிடந்த போது 18  பேர் அதை கடந்து சென்றுள்ளனர். 19  நபராக ரோட்டில் சென்ற குப்பை அகற்றும் பணி செய்யும் பெண்மணி ஒருவர் அந்த அடிபட்ட குழந்தையை அதன் தாயிடம் எடுத்து சென்று சேர்ப்பித்துள்ளார். அவரை போன்ற ஒரு சிலர் இருப்பதால் தான் நாட்டில் மழை பொழிகிறது. சீனா என்றில்லை இந்தியாவிலும் சாலை விபத்தில் அடிபட்டவரின் நிலை இது தான். உயிர் காக்க உதவுவதற்கு பதில் அடிபட்டவரின் பணம், நகை ஆகியவற்றை களவாட கண்டிப்பாக ஒரு கும்பல் கூடிவிடும். நாகரிகத்தின் தொட்டில் என்று தங்களை அடையாள படுத்திக்கொள்ளும் இந்தியா போன்ற நாடுகளும்,  உலகின் பெரிய வலிமை வாய்ந்த நாடாக காட்டிக் கொள்ளும் சீனா போன்ற நாடுகளும் தங்கள் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எங்கு பிறர் துன்பம் கண்டு இரங்கும் மனநிலை உள்ள மக்கள் வசிக்கிறார்களோ, எங்கு சின்னஞ்சிறு குழந்தை முதல் முதியோர் வரை சமமான பாதுகாப்பு உள்ளதோ  அந்த நாடே வலிமை வாய்ந்த நாடு. அதுவே நாகரீகத்தின் தொட்டில். மற்றதெல்லாம் மனித தோல் போர்த்திய கொடிய மிருகங்கள் வசிக்கும் காடு மட்டுமே.



இயற்கை என்னும் இளைய கன்னி

வட அமெரிக்காவில் வந்து குடியேறிய பிறகே பருவ கால சுழற்சியை நேரில் கண்டு உணர முடிந்தது - பனிக்காலம், வசந்தகாலம், கோடைகாலம், முன்பனிக்காலம் என்ற நான்கு விதமான காலங்களும் ஒவ்வொன்றிற்கும் உரித்தான பண்டிகைகளும், அதை கடைப்பிடிப்பதன் நோக்கமும் இவ்வளவு வருடங்களுக்கு பிறகு அத்துபடியாகிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் முன்பனிக்காலத்தில் மரங்கள் நிறம் மாறும் அழகை(Fall Colors) எத்தனை முறை கண்டாலும் அலுப்பதில்லை. மஞ்சள், சிவப்பு, இளம் சிவப்பு, மனம் மயக்கும் பச்சை என்று பல்வேறு வண்ணங்களில் இலைகள் கொண்ட மரங்களை கண்டு களிக்க இந்த முறை நாங்கள் சென்றது டென்னிசியில் உள்ள ஸ்மோக்கி மௌன்டைன் தேசிய பூங்காவிற்கு. அமெரிக்கா-வில் அதிகமான மக்களால் பார்வையிடப்படும் தேசிய பூங்காவான ஸ்மோக்கி மௌன்டைன் தேசிய பூங்கா வண்ணங்களின் குவியமாக காட்சி அளித்தது. அடிக்கும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சியை கண்டு களிப்பதற்காக வந்திருந்தனர். சலசலக்கும் ஓடைகளும், வெண்மேகம் தங்கும் மலை முகடும், வண்ணங்கள் தெறித்தார் போன்ற மலை பிரதேசமும், சிலு சிலு வென்ற வாடை காற்றும் அள்ள அள்ள தெவிட்டாத அழகு. குடும்பத்தினர், நண்பர் என்று வெகு நாட்களாக பார்க்காத பலரை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக இருந்தது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் குடும்பத்தினருடன் அவசியம் பார்க்க வேண்டிய இடம். ஒரு வேளை அங்கு செல்ல முடியாவிட்டாலும் தெற்கு கரோலினாவில் உள்ள ஆஷ்வில் சென்றும் அப்பளசியன் மலை தொடரின் அழகை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினருடன் சென்றால் பூங்காவினுள் அமைந்து உள்ள பல நூறு குடில்களில் (cabin ) ஒன்றை வாடகைக்கு எடுத்து பூங்காவின் இயற்கை அழகை அருகிலேயே கண்டு களிக்கலாம்.பார்வைக்கு விருந்தளிக்கும் சில புகைப்படங்கள் கீழே.
  


நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது
என்னடா தலைப்பு இப்படி இருக்கே ஒருவேளை நான் அதிமுக அனுதாபியோ என்று நினைக்க வேண்டாம். எவ்வளவு மோசமான அரசியல்வாதிகள் வந்தாலும் கடுகளவேனும் நன்மை நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் வாழ்க்கையை நடத்தும் கடைசி குடிமகன் போன்ற நம்பிக்கைவாதி நான் என்று கொள்ளலாம். உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது அதிமுக. முன்னமே சட்டசபை தேர்தலை பற்றி நான் எழுதியது போன்று இது அதிமுகவிற்கு விழுந்த வோட்டு அல்ல. மக்கள் திமுக மேல் கொண்ட தீராத அதிருப்தி காரணமாக அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படாமல் "கடவுளுடனும் மனசாட்சியுடனும் மட்டுமே கூட்டு" என்று தேர்தலுக்கு முன்பு முழங்கி பின்னர் கூட்டணிக்காக ஏங்கி தவித்து நின்ற தேமுதிக விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு தடாலடியாக சரிந்துள்ளது நல்லதற்கே. மக்களை அவ்வளவு சீக்கிரம் முட்டாள் ஆக்கிவிட முடியாது என்று தேமுதிக-விற்கு இதன் மூலம் புரிந்தால் நலம்.
கூட்டணி இல்லாமல் அனைத்து பெரிய கட்சிகளும் தனியாக நின்று எதிர்கொண்ட இந்த தேர்தல் ஒரு அதிசயம். இதன் மூலம் தனித்து நிற்கும் கட்சிகளுக்கு தங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை சீர்துக்கி பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும், கூட்டணி பலத்தால் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடிய கட்சிகள் தற்போது தனித்து நின்றதால் மக்கள் மனதில் தாங்கள் எந்த இடத்தில் உள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளும் முகமாக அமைந்ததாலும் இந்த தேர்தல் வரலாற்றில் ஒரு மைல் கல்.  ஆனாலும் "உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது அதிசயம் அல்ல" என்று வாய் ஜாலம் காட்டும் கருணாநிதி இந்த தோல்வி மூலம் ஒன்றும் தெரிந்து கொள்ளபோவதில்லை என்பது மட்டும் உண்மை.கருணாநிதிக்கு உள்ள குடும்ப பிரச்சனையில் அவரால் வெற்றி தோல்வியை சீர் தூக்கிப் பார்த்து கட்சியை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஜெயலலிதா இந்த வெற்றியை சாமர்த்தியமாக கையாண்டால் அதிமுகவுக்கு ஏறுமுகம் தான். வேண்டும் போது காலில் விழுவதையும் வேண்டாத போது கழுத்தை பிடிப்பதையும் கொள்கையாக வைத்திருக்கும் ஜெயலலிதா மக்களின் எண்ண ஓட்டத்தை படித்து அவர்களுக்கு பயன் தரும் பல நல்ல திட்டங்களை ஊழலற்ற முறையில் செயல்படுத்தினால் அவரை வீழ்த்த எவரும் இல்லை. ஜெயிப்பாரா அல்லது வெற்றி தந்த மமதையில் வீழ்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

அமலா பால்
தோன்றின் புகழோடு தோன்றுக
"இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது ஆப்பிள் சக நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்த செய்தி கேட்டு. கல்லூரி படிப்பை கூட முடிக்காத ஸ்டீவ், தனது ஆப்பிள் நிறுவனம் மூலம் உருவாக்கிய ஐ-பாடு, ஐ-பாட், ஐ-போன், மாக் வகை பி.சி- க்கள் போன்ற நவீன கருவிகளால் தொலைபேசி, இசை, கம்ப்யூட்டர் என்று எல்லா துறைகளையும்  நவீனப்படுத்தினார்  என்று சொன்னால் மிகை இல்லை. ஒரு தனி மனிதனால் எந்த வகையான மாற்றத்தை இந்த உலகத்தில் கொண்டு வர முடியும் என்பதற்கு சிறந்த இரு வார்த்தை பதில் - ஸ்டீவ் ஜாப்ஸ். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் உபயோகப்படுத்தக் கூடிய எளிய வகை வன்பொருள்கள், அதை வடிவமைத்த விதம், தொழில்நுட்பம் மற்றும் அதை அற்புதமான சந்தை பொருள் ஆக்கிய வித்தை ஆகியன ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏற்படுத்தி கொடுத்தன என்று சொன்னால் மிகை இல்லை. பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்டு, மேற்படிப்புக்கு வழி இல்லாததால் கல்லூரி படிப்பை கை விட்டு, பின்பு தனி நபர் கணினியை தனது வாகன கூடத்தில் இருந்து உற்பத்தி செய்து விற்று, தனது இருபத்தி ஒன்றாவது வயதில் கோடீஸ்வரன் ஆனது என்று ஸ்டீவ் நடந்து வந்த பாதை பற்றி படிக்க படிக்க நமக்கு வியப்பு வராமல் இருக்காது. பிறகு தான் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே  வெளியேற்றப்பட்டு நெக்ஸ்ட் என்னும் கம்ப்யூட்டர் நிறுவனம் மூலம் இரண்டாவது சகாப்தத்தை தொடங்கினார். அதன் பின் பிக்சார் என்ற நிறுவனம் மூலம் அவர் தயாரித்த அனிமேஷன் படங்களுக்கு உலகெங்கும் தட புடல் வரவேற்பு. எந்த ஆப்பிள் நிறுவனம் அவரை வெளியேற்றியதோ அந்த நிறுவனமே சில பல சரிவுகளுக்கு பிறகு அவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. பின்னர் அவர் ஆப்பிள் நிறுவனத்தை எவ்வாறு உலகப் புகழ் பெற செய்தார் என்பது அனைவரும் அறிந்தது. ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் அவர் ஆற்றிய தொடக்க உரையை கேட்க கீழே கிளிக் செய்யவும்.
அவர் சொன்னதில் என்னை தொட்ட மூன்று சிந்தனைகள் - வாழ்க்கையானாலும், வேலையானாலும் நீங்கள் விரும்புவதை தேர்ந்தெடுத்து செய்யுங்கள். அதுவே மனமகிழ்ச்சிக்கு சிறந்த வழி. நீங்கள் உங்களுக்காக வாழுங்கள். யாரை திருப்தி படுத்தவும் நீங்கள் வாழ வேண்டாம். வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அர்த்தம் நிறைந்தது. எனவே வாழ்கை அர்த்தமற்ற அலங்கோலம்அல்ல. அர்த்தம் பொதிந்த அற்புதம். அவர் அனுபவத்தில் இருந்து வந்த இந்த சிந்தனைகள் ஆழமானது;  வாழ்க்கையில் நம்மால் முடிந்த வரை கடைபிடிக்க வேண்டியது.