சித்திரைத் திருநாள் வாழ்த்துக் கவிதையை முகநூலில் பதிந்திருந்தேன். நேரம் கடந்தாலும் பரவாயில்லை என இங்கேயும் பதிகிறேன்.
சந்தனத் தென்றல் தேரில்
சரக்கொன்றைப் பூந்துகில் சூடி
சோதிப் பேரொளியாய்ப் பூத்த
சித்திரை மகளே வருக!
பத்தரை மாற்றுப் பொன்னை
இளவேனில் காலம் தன்னை
பதினோரு திங்களாய்க் காண
இகத்தில் தவம் நோற்றோம்!
தேனுறைத் தமிழின் சுவையாய்
தண்ணிலவு உலவும் பொழிலாய்
தெளிந்த நன்னீரின் இதமாய்
தரைமேல் மலர்ந்த திருவே!
குன்றாத வளங்கள் தருவாய்
நலியாத நன்மை சேர்ப்பாய்
வெற்றித் திருமகள் நாளும்
நீங்காத தன்மை அருள்வாய்!
சங்கம்கண்ட தமிழைப் போல
சகத்தில் யாண்டும் இன்பமேவ
முத்திரை பதிக்கும் சித்திரையாக
மேதினியில் யாவரையும் வாழ்விப்பாயே!
அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக