ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

சங்கே முழங்கு

முதல் முழக்கம்



1942 -ல் அடிமை  இந்தியாவில் நடந்தது ஆங்கிலேயர்களுக்கு எதிராக "வெள்ளையனே வெளியேறு" இயக்கம். கிட்ட தட்ட 69 ஆண்டுகள் கழித்து இந்நாள் தொடங்கியுள்ளது "கொள்ளையனே வெளியேறு" என்று அன்னா ஹசாரே தொடங்கியுள்ள ஊழலுக்கு எதிரான போராட்டம். இந்த போராட்டம் மாணவர்கள், இல்லத்தரசிகள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பு மக்களையும் இனம்,மொழி,பேதம் என்ற எல்லைகளை தாண்டி இணைத்துள்ளது.  "என்னதான் சொல்லுங்க, ஊழலை ஒழிக்க முடியாது" என்று சொல்லுவோர் கூட அன்னாவின் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று ரகசியமாக விரும்பாமல் இல்லை.அன்னா ஹசாரே இந்த போராட்டத்தை நடத்த கூடிய சரியான நபர் இல்லை அவர் ஒரு ஊழல்வாதி என்று சேற்றை வாரி இறைக்கும் சிலருக்கு சொல்வது என்ன வென்றால் - உங்களில் யார் ஒருவர் சுத்தமானவரோ அவர் முதலில் கல் எறியுங்கள் என்பது தான். ஒரு உயரிய இலட்சியத்தை நோக்கி ஒருவர் முதல் அடி எடுத்தால் அந்த லட்சியத்தின் தாக்கம் அவர் தீயவராக இருந்தாலும் அவரை நெறிப்படுத்தும்.நல்லவனாக்கும். சரி இந்த போராட்டத்தின் மூலம் நாட்டில் ஊழல் ஒழிந்து விடுமா இல்லை இதுவும் கடந்து போகுமா என்பதை காலம் மட்டுமே சொல்லும். ஆனால் சுதந்தர இந்தியாவில் இந்த போராட்டம் ஒரு மைல்கல். ஊழலில் திளைக்கும் அரசியல் கட்சிகளுக்கும், அந்த ஊழல்வாதி அரசியல்வாதிகளை கையில் போட்டுக் கொண்டு கொள்ளை லாபம் சம்பாரிக்கும் பண முதலைகளுக்கும் இந்த போராட்டம் மக்கள் அடிக்கும் எச்சரிக்கை மணி. இந்த மணி ஓங்கி ஒலிக்கட்டும். இது வெறும் எச்சரிக்கை மணியாக மட்டும் இல்லாமல் வெற்றி முரசாக மாறட்டும். முதல் முழக்கம் ஊழலுக்கு எதிராக.

இரண்டாம் முழக்கம்




லாக்-அப்  மரணங்கள் பற்றி நாளிதழ்களில் செய்தி
வெளியாகாத நாளே இல்லை என்னும் அளவுக்கு தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இது மட்டும் அல்லாமல் என்கௌன்டர் கொலைகள் மூலம் தனக்கு இடைஞ்சல் என்று கருதும் ரௌடிகளை அப்புறப்படுத்த போலீசை ஆள்பவர்கள் பயன்படுத்தி வருவதும் வாடிக்கை ஆகிவருகிறது. குற்றவாளிகளை வளர்த்து விடுவதில் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் பங்கு மிக அதிகம் என்பதை பிறந்த குழந்தை கூட சொல்லும். இந்நிலையில் குற்றவாளிகள் என்று கருதப்படும் நபர்களை நீதித்துறையில் நிறுத்த வேண்டிய காவல் துறையே நீதித்துறையை மதியாமல் குற்றவாளிகளை கொல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை. லாக்-அப் மரணங்களை பொறுத்த வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது இறந்தவரின் குடும்பத்தினர் மட்டுமே.லாக்-அப் மரணத்தை நிகழ்த்திய காவல்துறையினரை வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்தவுடன் காவல் துறை இந்த விஷயத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல கை கழுவி விடும். அரசு தரப்பும் பாதிக்கப் பட்டவரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கொடுத்தவுடன் நகர்ந்து கொள்ளும். ஆனால் லாக் அப் மரணத்தால் கணவனை இழந்து வாடும் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அல்லது மனைவியை இழந்து வாடும் கணவனுக்கும் நீதி என்பது எட்டாக்கனியே. நீதிக்காக போராடும் பண வசதியோ, கல்வியோ இல்லாத மக்கள் வாழும் இந்த நாட்டில் லாக்-அப் மரணங்கள் மற்றும் என்கௌன்டர் மரணங்கள் நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் நிகழ்வு. சந்தன கடத்தல் வீரப்பன் என்கௌன்டர் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால் அரசாங்கத்திற்கே நீதித்துறை மீது நம்பிக்கை இல்லை என்பது தான். வீரப்பனை உயிருடன் பிடித்திருந்தால் அவனை இயக்கிய சூத்திரதாரிகள் யார் என்பது மக்கள் மன்றத்தில் தெரிந்திருக்கும். ஆனால் பொதுமக்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பில் உள்ள அரசுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. லாக்-அப் மற்றும் என்கௌன்டர் மரணங்கள் நீதித்துறையை பலவீனப்படுத்தும் செயல். இத்தகைய செயலில் ஈடுபடும் போலீசாருக்கு ஒருவர் உயிர் கொலை புரிந்தால் என்ன தண்டனை கிடைக்குமோ அதே தண்டனை வழங்க வேண்டும். என்கௌன்டர் என்ற பெயரில் போலீசே குற்றவாளிகளை கொல்லும் செயலுக்கு அரசு துணை போகக்கூடாது. இரண்டாம் முழக்கம் நீதிக்கு ஆதரவாக.
மூன்றாம் முழக்கம்



செஹ்லா மசூத்
செஹ்லா மசூத், நியமத் அன்சாரி இவர்களை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. செஹ்லா மசூத் மத்ய பிரதேச மாநிலத்தை சார்ந்த சமூக ஆர்வலர். மத்திய பிரதேசத்தில் உள்ள ஆலைகளிலும் மற்றும் சட்டர்பூர் மாநிலத்தில் நிகழும் சுற்று சூழல் சீர்கேடுகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். இதற்கு அவர் கொடுத்த விலை - தன்னுடைய உயிர். தன் வீட்டின் முன்னே நிறுத்தி இருந்த காரில் ஏறப் போன அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போல் அன்சாரியும் ஜார்கந்து மாநிலத்தில் நடந்த ஊழல் குற்றங்களை தட்டிக் கேட்டமைக்காக தன் வீட்டிலேயே அடித்துக் கொல்லப்பட்டார். இதே போல் ஆண்டு தோறும் பல நூறு சமூக ஆர்வலர்களை இந்த மண்ணில் இழந்து வருகிறோம் நாம். குற்றம் செய்தவர்களோ ஆட்சியாளர்களின் தயவினால் சுதந்திரமாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பத்திரிக்கைகள், வானொலி, டிவி போன்ற ஊடகங்களின் பணி என்ன. இத்தகைய சமூக ஆர்வலர்களின் பணியை மக்களுக்கு எடுத்து சொல்வது தானே. ஆனால் அவர்களோ சினிமா செய்திகளையும், கிரிக்கெட் செய்திகளையும் போட்டால் தன் கடமை முடிந்தது என்று இருந்து விடுகிறார்கள்.

நியமத் அன்சாரி



அன்னாவின் உண்ணாவிரதத்தை பற்றி செய்தி வெளியிட்டால் மட்டும் போதுமா, கங்கை நீரை தூய்மை படுத்த கோரி 73 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சாது நிகமானந்தா- வை பற்றி ஊடகங்களில் ஒரு வரி செய்தி கூட வரவில்லை. சமூக ஆர்வலர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஊடங்களுக்கு உள்ள சுணக்கம் காரணமாக பல தன்னார்வலர்கள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே மறைந்து விடுகிறார்கள். எனவே இந்த மூன்றாம் முழக்கம் பத்திரிக்கை எழுச்சிக்காக.  பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி ஆகியன மக்கள் பிரச்சனைக்காக போராடும் எண்ணற்ற தன்னார்வலர்கள் பற்றி மக்களுக்கு எடுத்து செல்ல உறுதி கொள்ள வேண்டும்.  தன்னார்வலர்கள் பின்னே பத்திரிக்கை உலகம் திரளுமாயின் இந்தியாவை பீடித்திருக்கும் பல பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது என்பதை நிருபிக்கும் தருணம் இது.  



நான்காம் முழக்கம்


ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேருக்கு மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப் பட இருக்கிறது. உலகத்தில் 139 நாடுகளில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் உயிரை எடுக்கும் அதிகாரம் உலகில் எவருக்கும் இல்லை. ஆளும் அரசாங்கங்கள் உட்பட. எனவே குற்றவாளிகள் எனக் கருதப்படும் மூவரை மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அவர்கள் தண்டனை காலம் முடிவடைந்தவுடன் அவர்களை விடுவிக்க வேண்டும். எய்தவன் எங்கேயோ இருக்க அம்பை நோவது ஏன் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்ததும் ஆள்பவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றங்கள் உறுதியாக நிரூபிக்க படவில்லை என்பதும் குற்றவாளிகள் என்று அடையாளம் காண்பிக்கப்படும் பலரும் இன்றும் வெளியே சுதந்திரமாக உலவுவதும் நாம் கண்ணார காணும் நிஜம். இந்த அழகில் அப்பாவிகளை தூக்கில் போட்டு தமிழர்களை மேலும் கொன்று குவிக்க அரசாங்கமே துணை போக வேண்டாம். ஈழத்தில் நிகழ்ந்த தமிழ் கொலைகள் போதாதா. இன்னும் எவ்வளவு தமிழ் ரத்தத்தை இந்த மண்ணில் வீணாக சிந்த வேண்டும். பாதசாரிகள் மீது குடிபோதையில் கார் ஏற்றி கொன்ற கான் நடிகருக்கும், மும்பை வெடிகுண்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளிடம் தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட தத் நடிகருக்கும் ஒரு நீதி. பணபலமோ, அதிகாரபலமோ இல்லாதோ அப்பாவிகளுக்கு ஒரு நீதி. ஒரு வேலை அரசாங்கம் தூக்கு தண்டனை வழங்க முற்பட்டால் முதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்களை மும்பையில் கொன்று குவித்த அப்துல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கட்டும். அதன் பிறகு இந்த மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கலாம். இதனால் நான் தூக்கு தண்டனையை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். முதலில் அரசாங்கத்திற்கு கசாபுக்கு தண்டனை வழங்கும் தைரியம் உள்ளதா என்பதை சோதித்து பார்க்கவே இந்த கேள்வியை எழுப்புகிறேன். ராஜீவின் இழப்பு இந்தியாவிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு என்பதை மறுப்பதற்கு இல்லை. எனினும் ராஜீவின் பெயரால் அநீதி இழைப்படுவதை அவரே விரும்ப மாட்டார்.இந்த நான்காம் முழக்கம் தூக்கு தண்டனைக்கு எதிராக.தனி மனித உரிமைக்கு ஆதரவாக.   

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்,
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
ஆண்மை சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோருக்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே !!! சங்கே முழங்கு !!!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதிதனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்! தமிழ் எங்கள் மூச்சாம்!