சனி, ஜூன் 28, 2014

கதம்ப மாலை - 6

எனக்கு ஒரு லைக் போடுங்க

காலை எழுந்தவுடன் பேஸ்புக்கில் கைகுலுக்கி ,வாட்ஸாப்பில் பழகி, ட்விட்டரில் கதைத்து, இன்ஸ்டாக்ராமில் புகைப்படம் பரிமாறி என்று வாழ்க்கை எவ்வளவு வேகமாய் மாறிவருகிறது. முன்பு நான் எழுதிய ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது. "இன்றைய நண்பர்களின் எண்ணிக்கை எனது புகைப்படத்திற்கு விழுந்த "லைக்"கில் இருந்து அறியப்படுகிறது' என்று. நாம் எழுதிய அல்லது பகிர்ந்த ஒரு விஷயம் எந்தளவிற்கு நமது நண்பர்களின் கவனத்தை ஈர்த்தது , எத்தனை பேர் அதை விரும்பினார்கள் என்பதில் தான் எத்தனை ஆர்வம் கொள்கிறோம். என்னுடைய புகைபடத்திற்கு லைக் போடலை, இந்த கமெண்ட் சரியாய் இல்லை போன்ற விஷயங்களுக்கு எல்லாம் நட்பை முறித்தவர்கள் ஏராளம். மற்றவர்களின் ஒப்புதல் தான் நமக்கு எல்லாமே என்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துவது மட்டும் அன்றி நம்மை பற்றிய மதிப்பீடை நாமே உயர்த்திக் கொள்வது  போன்ற ஒரு சூழலும் பேஸ்புக் வந்த பின் இன்று ஏற்பட்டு உள்ளது. இது போன்ற போலியான மாயை, உண்மையான எந்த ஒரு விமர்சனத்தையும் தாங்கும் அளவிற்கு யாரையும் பக்குவப்படுத்த வில்லை என்பதே  நிதர்சனமான உண்மை.




ஸ்ரீ திவ்யா 

தோழியிடம் உனது குழந்தை அதிகமாக சிரிப்பதில்லை என்று சாதரணமாக சொன்னது கூட நீ எப்படி அவ்வாறு கூறலாம் என்று சண்டையில் வந்து முடிவடைகிறது. நான் தினமும் நடைப்பயிற்சி செல்லும் வழியில் என்னை வம்பிழுக்கும் சிறுமியை பற்றி அவளுடைய தாய்  தந்தையரிடம் - உங்கள் குழந்தையை கண்டியுங்கள் என்று சொல்ல தயக்கமாய் இருக்கிறது. காரணம் பிறர் சொல்லும் உண்மையை காது கொடுத்து கேட்கும் அளவிற்கு பக்குவம் உள்ளவர்களா அவர்கள் என்ற எண்ணம் தான். போலியான வெளித் தோற்றத்தை வைத்து அடுத்தவரை மதிக்கவும், அடுத்தவர் சொல்லும் உண்மையான விமர்சனத்திற்கு வம்படியாக தப்பர்த்தம் கற்பிக்கும் இன்றைய சூழலில் நேர்மையான விமர்சனத்தை ஏற்கும் பக்குவத்தை நமது இன்றைய சந்ததியினருக்கு மட்டுமல்லாது  அடுத்த சந்ததியினருக்கு இல்லை என்பது நிச்சயம் கவலைக்கு உரியது.

இன்று நிறைய டீன் ஏஜ் பருவத்தினர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் புகைப்படங்களுக்கு விழும் லைக்கை உண்மை என்று நம்பி தற்பெருமையும் பெருமிதமும் கொள்வது எவ்வளவு ஆபத்தானது. இந்த குழந்தைகள் தன்னை போல அதிகம் லைக் விழும் பெண்களிடமோ அல்லது ஆண்களிடமோ நட்பு கொள்வர். தம்மை போல் அல்லாதவரை கிண்டல் செய்யவும், தனிமை படுத்தவும் இவர்களால் முடியும்.இது எத்தகைய சமுதாயத்தை உருவாக்குமோ என்று நினைத்தால் பதைபதைக்கிறது.
உண்மையில் ஒருவரின் நிறை குறைகளை பகுத்து கூறும் நேர்மையான குரலை அந்நியப்படுத்தும் வேலையை தான் பலர் செய்கிறார்கள்.



அனுஷ்கா

அலுவகத்தில் உயரதிகாரி முதல் கூட பணிபுரியும் ஊழியர் வரை யாரும் இத்தகைய மனப்போக்கிற்கு விதி விலக்கல்ல. வீட்டிலும் கணவனோ மனைவியோ இதே போன்ற மன நிலையுடன் தான் இருக்கிறார்கள். எல்லாருக்கும் என்னை பிடிக்குது, ஆனா உனக்கு என்னை பத்தி குறை சொல்வதே வேலை என்று மனைவியோ கணவனோ கோபம் கொள்வது எத்தனை வீட்டில் நடக்கிறது. நமது உள்ளுக்குள் இருக்கும் "நார்சிசிஸ்ட்டை" திருப்திப்படுத்தத் தான்  எத்தனை எத்தனை வழிகள். அடுத்த முறை அந்த "லைக்" பட்டனை கடனே என்றே அழுத்தும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள். இன்றைய சமுதாயத்திற்கு தேவை உண்மை என்ற கசப்பு மருந்து சில குவளைகளும் ஒரு அன்-லைக் பட்டனும் தான்.