வெள்ளி, பிப்ரவரி 25, 2011

காதல் என்பது கடவுள் அல்லவா

காதலர் தினம் இந்த வருஷமும் வந்துட்டு போயாச்சு. வாழ்த்து அட்டைகள் , பரிசுகள் பரிமாறுதல், பூங்கொத்து அனுப்புதல், துணைவியையோ, காதலியையோ  இரவு விருந்துக்கு அழைத்து செல்லுதல் என்று அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் கொண்டாடி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். காதலர் தினம் கொண்டாடுவது நல்லதுன்னு நினைக்கற அதே நேரத்தில்,  காதலை/அன்பை தெரிவிக்கறதுக்கு வருஷத்துல இந்த ஒரு நாள் மட்டும் தான் என்பது போன்ற ஒரு பிம்பத்தை இது போன்ற கொண்டாட்டங்கள் உண்டாக்குதுனு தோன்றவும் செய்கிறது. இந்த ஒரு நாலாவது ஏதாவது செய்யறாரே/ளே  அதையும் வேண்டான்னு சொல்ல சொல்றீங்களா அப்படின்னு சிலர் முணுமுணுக்கறதும்  காதில் விழுகிறது.


இன்றைய அவசர யுகத்தில் காதலிக்கறதுக்கு/அன்பை பரிமாறிகிறதுக்கு எல்லாம் எங்கே நேரம், தினம் தினம் ஆபிஸ் போய்ட்டு வந்து குடும்பத்தை கவனிக்கவே நேரம் சரியா இருக்கு, இதுல காதலாவது கத்திரிக்காயாவது அப்படின்னு நிறைய பேர் அலுத்துக்கொள்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இயந்திரமயமான இந்த வாழ்க்கை சூழலில் பாலைவன சோலை போல இளைப்பாறுவதற்கும், ஆறுதல் கொள்வதற்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் காதல் கண்டிப்பாக தேவை.

காதல்....நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவு தான் என்ற  திரைப்பட பாடல் வரிகள் காதலுக்கு அழகான விளக்கம் தருகிறது. வெவ்வேறு விதமான வாழ்க்கை முறைகள், அனுபவங்கள், ரசனைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொள்ளுதல் ஒரு அதிசய நிகழ்வு தான். ஆனாலும் அந்த அன்பும் அக்கறையும் வாழ்நாள் முழுவதும் தொடருகிறதா   என்ற கேள்வி எழாமல் இல்லை.  வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு, அலுவலக வேலை 
என்று பெண்களும் ஆண்களும் வாழ்க்கை என்னும் இந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சிய வெறியுடன்   ஓடி கொண்ட இருக்கின்றனர்.
எதற்காக இந்த வேகம் எதை சாதிக்க இவ்வாறு சென்று கொண்டு இருக்கிறோம் என்ற நிதானம் வருவதற்குள் முக்கால்வாசி  வாழ்க்கை 
முடிந்து விடும். 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை
பண்பும் பயனும் அது

என்று அன்பை முன்னிறுத்தி பேசுகிறது குறள்.  அன்பு என்பதன் அளவுகோல் என்ன? காதலர் தினம் அன்று வாங்கும் மற்றும் கொடுக்கும் பரிசுகள் மட்டும் அன்பின் அளவுகோலாகிவிடுமா  என்ன? எனக்கு தெரிந்த ஒருவர் மனைவிக்கு சில வருடங்களாக வயிற்றுவலி. ஆனாலும் மனைவி அதை பெரிதாக எண்ணவில்லை. ஏதோ கை வைத்தியம் பார்த்து சமாளித்து வந்தார். கணவரும் மனைவியின் உடல் நிலை பற்றி  தெரிந்தும் மனைவியை மருத்துவரிடம் அழைத்து செல்ல எத்தனிக்கவில்லை. மிகவும் மோசமான வயிற்று வலியால் மனைவி துடித்த ஒரு நாள் மருத்துவரிடம் சென்று காண்பித்தால் அந்த மருத்துவர் "நீங்கள் ஏன் இவ்வளவு தாமதம் செய்தீர்கள் இப்பொழுது நோய் முற்றி விட்டது இனி நாங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை"  என்று கூறிவிட்டார். அந்த பெண்மணி சில நாட்களிலேயே உயிர் இழந்தார். அந்த கணவரோ நன்கு படித்தவர் தான். 
மனைவிக்கு வைத்தியம் செய்யும் அளவுக்கு பொருள் வசதியும் உண்டு. எனினும்
பொருள் வசதி  இருந்தும் மனைவியை அன்பாக கவனிக்க தெரியவில்லை. இன்று தனது கடைசி காலங்களை தனியாக கழித்து 
வருகிறார்.  இது ஒரு உதாரணம் தான். இந்தியாவில் இது போன்று பல மனைவிகள் தங்கள் உடல் நலத்தை ஒரு பொருட்டாக கருதாமல் குடும்பத்திற்காக உழைத்து வருகின்றனர்.  அதிக அளவில் கான்சர், காச நோய் போன்றவற்றால் உயிரிழப்பது இந்திய ஆண்களை விட இந்திய பெண்கள் தான் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. இந்திய ஆண்கள் தான் காதலிக்கு நினைவு சின்னம் கட்டுவதில் வல்லவர்கள் என்பது உலகம் அறிந்த ஒன்றாயிற்றே. எனவே யாரும் தாஜ்மஹால் கட்ட பிரயத்னப்படாதீர்கள்.  வாழும் காலத்தில் அவரவர்  இணை மகிழ்ச்சியாக இருக்க அன்பாக
ஒரு குடிசையேனும் கட்டுங்கள்.

அன்பை வெளிப்படுத்த ஆடம்பர வார்த்தைகள் தேவை இல்லை. ஆரவாரங்கள் 
தேவை இல்லை. எவ்வுயிரையும் தன்னுயிர் போல் எண்ணும் பாங்கு உள்ள ஒருவருக்கு அன்பு செலுத்துவது என்பது சுலபமானது.  அன்பாக பேசுவதற்கு அதிக நேரம் தேவை இல்லை. தொலைக்காட்சியையும், கணினியையும் சிறிது நேரம் நிறுத்தி வைத்தாலே அன்பை வெளிப்படுத்த தேவையான காலமும் நேரமும் நிறையவே கிடைக்கும்.  குடும்பத்தினரோடு அளவளாவுங்கள், குடும்பத்தினரின் உலகத்தை அறிய முயற்சி செய்யுங்கள், குடும்ப வேலைகளில் பங்கெடுத்து கொள்ளுங்கள், உங்களால் முடிந்த உதவிகளை கேட்காமலே செய்யுங்கள். வாரம் ஒரு முறையேனும் குடும்பத்தினரை வெளியில் அழைத்து செல்லுங்கள்.  செல்வதற்கு செலவில்லாத கடற்கரை, கோயில், பூங்கா போன்ற பல இடங்கள் உண்டு. மனம் திறந்து பாராட்டுங்கள். வாரத்தில் எதாவது ஒரு நாளில் ஒரு வேளையேனும் மனைவிக்கு சமையல் வேலையில் இருந்து ஓய்வு கொடுங்கள். மனைவி/குழந்தைகளின்  
விருப்பம்  அறிந்து அவர்கள் விரும்பும் துறையில் அவர்களை 
உற்சாகப்படுத்துங்கள்.  நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக எதையும் செய்வீர்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்கு விதையுங்கள். அன்பிற்கு முதல் எதிரி "தான்" என்கிற அகந்தை. ஆங்கிலத்தில் "ஈகோ" என்பார்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஈகோ என்ற மாயச்சுவர் உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  பெண்களாக இருப்பின் தொலை காட்சியை அணைத்து விட்டு குழந்தைகளை அணையுங்கள். அக்கம் பக்கம் வெட்டி பேச்சுகளை தவிர்த்து கணவனோடு அளவளாவி மகிழுங்கள். அப்புறம் என்ன எல்லா நாட்களும் உங்களுக்கு காதலர் தினம் தான்.

வாழ்க்கையில் சந்தோஷம் தருவது பணம் மிகுதியாக இருந்த நாட்கள் அல்ல. இரு மனம் இணைந்த நாட்களே உண்மையான மகிழ்ச்சியை தருவது. பல குறை நிறைகளை கொண்ட ஒரு பெண்ணை ஆணோ அல்லது ஒரு ஆணை பெண்ணோ உண்மையாக நேசிக்க முடிந்தால் எந்த குறையும் இல்லாத இறைவனை எவ்வளவு அதிகமாக நேசிக்க முடியும் என்று எண்ணிப்பாருங்கள்.ஆம் காதலும் கடவுளை கண்டறிய அழகான சுலபமான  வழி.  





புதன், பிப்ரவரி 16, 2011

நான் ஆணையிட்டால்

 தமிழ்நாட்டுல எலக்க்ஷன்   வரப்போகுது. ஆள் ஆளுக்கு அரசியலுக்கு வருவேன், எலக்க்ஷன்ல நிப்பேன்னு பயமுறுத்திக்கிட்டு  இருக்கற இந்த நேரத்தில பத்திரிக்கைகளும் அவங்க பங்குக்கு "அரசியலுக்கு ரஜினி சாரு வந்துருக்காக , நம்ம அண்ணன் விஜய் வந்திருக்காக, பங்காளி விஜயகாந்த் வந்திருக்காக" என்று சகட்டு மேனிக்கு அள்ளி விட்டிட்டு இருக்குது. ஒரு வேளை அரசியல்ல குதிச்சி இந்த நடிகர்கள் யாராவது தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆனால் என்ன ஆகும் அப்படின்னு ஒரு கற்பனை:

முதல்ல நம்ம இளைய தளபதி விஜய்

முதலமைச்சர் கார் சட்டசபை வளாகத்துக்குள்ள நுழைஞ்சதும் எல்லா எம்.எல்.ஏ-  களும் முதலமைச்சரை வாழ்த்தி ஒரு குத்துபாட்டு பாடி ஆடனும்கறது  கட்டாயமாயிடும். கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன்ஸ் போன்ற ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு எதிர் கட்சி தலைவர் ஆகறதுக்கு பலமான வாய்ப்பு உண்டு. அப்பதானே அண்ணன் விஜய் சட்டமன்றத்தில குடுக்கிற பஞ்சுக்கு ஈடு கொடுக்க முடியும். எல்லாரும் முதலமைச்சரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே அப்படின்னு கூப்பிடாம மாண்புமிகு  அண்ணன் அல்லது ..ண்ணா விஜய் அவர்களே அப்படின்னு மரியாதையா கூப்பிடணும்னு
சட்டசபைல தீர்மானம் இயற்றுவாங்க.  போலீஸ்காரங்களுக்கு  துப்பாக்கிக்கு பதில் திருப்பாச்சி அரிவாளை  வீசி எப்படி திருடனை புடிக்கறதுன்னு பயிற்சி தருவாங்க. கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது கில்லி விருதுன்னு  பெயர்
மாற்றம் செய்யப்படும். டிவி-ல வாரம் ஐந்து நாட்கள்  விஜய் படங்கள் மட்டுமே ஒளிபரப்பாகணும்னு  சட்டம் கொண்டு வரப்படும். அதனால விஜய் படத்தை பார்க்காம அல்வா குடுத்த தல ரசிகர்கள் மற்றும் படத்தை வேணும்னே படத்தை பார்க்காத எல்லாரும் கண்டிப்பா படத்தை பாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். படம் பாத்து பித்து பிடிச்ச நிலையில் உள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பா இலவச மருத்துவ உதவி வழங்கப்படும். மேலும் டிவில வைக்கப்படும் போட்டிகளில் பங்கு பெற்று பரிசு வெல்லும் அதிர்ஷ்டசாலி நேயருக்கு   இலவச விஜய் பட DVD வழங்கப்படும். கில்லி, சுறா போன்ற விஜய் திரைப்படங்களில் பெயர்களை தங்கள் பெயர்களில் கொண்டுள்ள திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். உதரணமா சுறா-1 , சுறா - 2..சுறா- 100  என்று வரிசையா படங்கள் ரிலீஸ் ஆகி ஓடினா, ஒரிஜினலா  எந்த விஜய் படம் நல்லா இல்லை என்பதே மக்களுக்கு மறந்து போய்டும். இதன் மூலம் ஒரு வேளை அடுத்த தேர்தல்ல விஜய் தோத்துட்டாலும் அவர் தன்னோட சினிமா  வாழ்கையை புதுப்பிச்சுக்க முடியும். என்ன நான் சொல்றது !!!

அடுத்து உங்கள் ரஜினி:
 

நான் லேட்டா  வந்தாலும் வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன். நான் எப்ப வருவேன்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்திலே கரெக்டா வருவேன் அப்படின்னு எகிடு தகிடா பஞ்சு டயலாக் அடிச்சே மக்களை குழப்பிக்கிட்டு இருக்கற ரஜினி முதலமைச்சர் ஆனா கோனார் உரை மாதிரி ரஜினி தோராயமா என்ன சொல்ல வரார்ன்னு புரிஞ்சிக்க ஒரு டிக்ஷனரியை தமிழக அரசே அடிச்சி வெளியிடும். நான் ஒரு தடவ கையெழுத்து போட்டா நூறு  தடவை கையெழுத்து போட்டா மாதிரின்னு ரஜினி அடம் பிடிப்பதால் அரசாங்க கோப்புகள் பல நகராமல் தேங்கி இருக்கும். பொதுப்பணி துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர்னு எல்லா அமைச்சரவை பதவிகளையும் ரஜினியே வகிப்பார். எப்படின்னு ஆச்சரியப்படறவங்க மீண்டும் எந்திரன் படத்தை பார்ப்பது நல்லது. சிட்டி
மாதிரி நிறைய குளோனிங் ரஜினிக்களே   இந்த பதவிகளை வகிப்பாங்க கரெக்டா கணிக்கறவங்க கைய கொடுங்க. கலக்கிட்டீங்க. இதனால அமைச்சர் பதவி கிடைக்கும்னு ரஜினி கட்சியோட கூட்டணி வைக்கிற கட்சிகளுக்கு சொல்லறது என்னன்னா - உங்க கனவு பலிக்காது. டாட் !!!. ரஜினி படத்து பாட்டிலெல்லாம் கூட ஆடற டான்சர்ஸ்  போல சட்ட சபைக்கு போற ரஜினி கட்சி எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் கண்டிப்பா சீருடை அணியணும் என்பது கட்டாயமாக்கப்படும். சீருடை அணியாமல் போனா "நம்ம கூட்டத்துல ஒரு ப்ளாக் ஷீப் இருக்கு பே பே" என்று ரஜினி கொடுக்கற வாய்சில் முதல் நாள் ராகிங்ல தனியா மாட்டின ஜூனியர் போல நிலைமை ஏடாகூடமா ஆகிடும்.  ரஜினியோட ஜப்பானிய ரசிகர்களின் வேண்டிகோளுக்கு இணங்கி தமிழக சட்டசபை நிகழ்வுகள் ஜப்பானில் லைவ்வா ஒளிபரப்பபடும். இதனால் வேட்டி கிழிப்பு, மைக் எறிதல், செல்லமாக முதுகில் தட்டல் போன்ற தமிழ்நாட்டு சட்டசபை கலாசாரம் ஜப்பானிலும் வேகமாக பரவ வாய்ப்பு உண்டு.  ரஜினியோட ஸ்டைல் மற்றும் மானரிசம் ஆகியவற்றை ஆராய்ச்சி தலைப்பாக எடுத்து ஆராய்ச்சி செய்யும் பி.எச்.டி மாணவர்களுக்கு அரசு சார்பாக ஊக்கத் தொகை வழங்கப்படும்.குழந்தைகளுக்கு பேர் வைக்க சொல்லி குழந்தைகளை நீட்ற தாய்மார்கள் ஜாக்கிரதை - ஏன்னா குழந்தைக்கு CR -20 , CR - 21 அப்படின்னு ரோபோக்களோட  பேர் சூட்டப்படற அபாயம் இருக்கு.  அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா அப்படிங்கற பொன் மொழிக்கு ஏற்ப ரஜினி ஆட்சியில தமிழ் நாட்டுக்கு USA-நாடு அப்படின்னு  பேர் மாத்தினாலும் மாத்துவாங்க. ஏன்னா அவர் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்னா மாதிரி இல்லையா !!!

அடுத்து நம்ம கேப்டன் விஜயகாந்த்:
கேப்டன் கோட்டைக்கு போனாலும் இல்ல தொகுதிக்கு போனாலும் எப்பவுமே போலீஸ் உடையில தான் போவாரு. அப்பதான் தமிழ் மாநிலத்து காவல்காரன்னு நம்புவாங்க இல்லையா.காப்டனுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தைகள் என்ன என்ன அப்படிங்கறத லிஸ்ட் போட்டு எல்லாருக்கும் தருவாங்க. அநேகமா எந்த லிஸ்ட்ல  இடிப்பு அப்படிங்கற வார்த்தை முன்னிலைல இருக்கும்னு நம்பறேன். சட்டசபை நடுவுல ஒரு ஆலமரம் செட் போடப்பட்டு அங்கே தான் நம்ம தலைவர் முக்கிய முடிவுகளை எடுப்பாரு. எதிர் கட்சி தலைவர் தலை சுத்தற அளவுக்கு புள்ளிவிவரங்களை அடுக்குவது, எதிர் கட்சிக்காரர்களை பார்த்து அம்மா கிட்ட குடிச்ச பால கக்கிடுவ அப்படின்னு மெரட்டுறது,  அடிக்கடி கண் சிவந்து எதிர் கட்சிகாரங்களை பார்த்து துடிக்கிற நரம்பு இருந்தா, அந்த நரம்புல முறுக்கு இருந்தா, அந்த நரம்புல ஓடற ரத்தம் இருந்தா இன்னொரு தடவை அந்த குற்றச்சாட்டை சொல்லு பார்க்கலாம்னு சவால் விடறதுன்னு சட்டசபையை ரக்க ரக்க ரக்க-னு அலற வைப்பாரு நம்ம ஒன் மேன் ஆர்மி. 
தன்னோட படங்களில் பாக்கறவங்க அலுத்து போற அளவுக்கு தீவிரவாதிகளை வேட்டை ஆடியும், மீதி சமயம் கிராமத்து சப்ஜெக்டையும், அம்மா சென்டிமென்ட்டையும் வித விதமா பிரிச்சி மேஞ்சி  ரசிகர்களை பாடுபடுத்திய கேப்டன் வெள்ளி திரைக்கு சின்னதா லீவ் விட்டுடுவார். இதனால ரசிக மகா ஜனங்கள் குஷியாகி "வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே" அப்படின்னு பேஸ்புக்ல தங்கள் நன்றியை வெளிப்படுத்தோ படுத்துன்னு  வெளிபடுத்துவாங்க. தமிழ் சேவையே என் வேலை அப்படின்னு தமிழை  வாழ வைக்க கேப்டன் வருடந்தோறும் செம்மொழி மாநாட்டை நடத்துவார்.  இந்த மாநாட்ல சாலமன் பாப்பையா அல்லது பட்டிமன்ற ராஜா தலைமையில தமி(ள்)ழால    காப்டனுக்கு
சிறப்பா இல்ல கேப்டனால தமி(ள்)ழ்   சிறந்துச்சா அப்படின்னு மக்களை குழப்பி மண்டை காய வைக்கற பட்டிமன்றம் நடக்கும். எவ்ளோ நாலு தான் காப்டனாக இருக்கறது அப்படின்னு தனக்கு மேஜர், கர்னல் அப்படின்னு வருஷா வருஷம் பதவி உயர்வு கொடுக்கணும்னு தமிழ் திரை உலகத்திற்கு உத்தரவு போடுவார். அரசு ஊழியர்கள் பாரம்பரிய வேட்டி சட்டையில
பணிக்கு வரணும், மின்வெட்டு இருக்கும் போதும் மருத்துவர்கள் செல்போன் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்யணும்,
போலீஸ்காரங்க தோட்டாவை பிடிச்சி   மீண்டும் சுட்டவனை நோக்கியே திருப்பி
விடணும் அப்படின்னு அவர் போடற அதிரி புதிரி உத்தரவுகளால எல்லாரும் அரசு பணியிலிருந்து விலகி மீண்டும் மண்வெட்டிய தூக்கிகிட்டு விவசாயிகள் ஆனாலும் ஆகலாம்.                  

பின் குறிப்பு: ஜனநாயக ஆட்சியில் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். எனினும்
வெள்ளி திரையின் வெளிச்சத்தில் மதி மயங்கி நிழலை நிஜம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டு பொது ஜனத்தை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கவே இந்த கட்டுரை.


   

புதன், பிப்ரவரி 02, 2011

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவ்வாறு மனதை வாட்டமுற செய்த செய்தி ஒன்றை சமீபத்தில் CNN இணையதளத்தில் படித்தேன். ஆப்கானிஸ்தானில் பசியால் வாடும் பிஞ்சு குழந்தைகளுக்கு உணவு தர இயலாத தாய்மார்கள் அவர்களுக்கு ஒபியம் அளித்து
உறங்க செய்கின்றனர். இதனால் அங்கு பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் கூட போதைக்கு அடிமை ஆகி விடுகின்றனர் என்றும் தலை நகர் காபூலில் ஒபியதிற்கு அடிமையான  சில லட்சக்கணக்கான நோயாளிகள்  இருக்கின்றனர் என்பதும் அந்த அறிக்கையின் சாராம்சம். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உணவின்மையால் போதைக்கு அடிமை அடிமை ஆகும் கொடுமையை என்ன சொல்வது. ஆப்கானிஸ்தானை விடுங்கள், ஏன் இந்திய மண்ணிலேயே கிட்ட தட்ட 200 லட்சம் இந்தியர்கள் தினமும் பசியால் வாடுகிறார்கள் என்று UN அறிக்கை ஒன்று கூறுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க இந்தியாவோ, வளரும் நாடுகளில், உணவு பொருட்கள் ஏற்றுமதியில் முதலாம் இடத்தில் உள்ளது. இதைதான் கண்ணை விற்று சித்திரம் வாங்குவது என்று சொல்வார்கள்.

வளரும் மற்றும் மூன்றாம் தர நாடுகளில் உள்ள உணவு பற்றாகுறைக்கு பல காரணங்கள் உண்டு. எனினும் முக்கியமான சில என்று பார்த்தால் மக்கள் தொகை பெருக்கம், ஸ்திரமான அரசாங்கம் இல்லாமை, அரசாங்க கொள்கை, நில உரிமை இல்லாமை, சுற்று சூழல் பாதிப்பு மற்றும் பருவ மழை இல்லாமை, போதிய விவசாய நிலங்கள் இல்லாமை  ஆகியன.

மக்கள் தொகை பெருக்கம் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கொண்டு கணக்கிட்டால் மக்கள் தொகை ஒவ்வொரு 13 ஆண்டும் 100 கோடி என்ற அளவில் அதிகரிக்கும். அதாவது பதிமூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இந்தியா அளவு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் சேரும். எனினும் இவ்வளவு மக்களுக்கு தேவையான உணவு, உடை இருப்பிடம் ஆகியன இன்று இருக்கும் நீர், நில வள ஆதாரங்களை கொண்டே சந்திக்க வேண்டும். ஏற்கனவே மிகவும் தட்டுப்பாட்டுக்கு ஆளாகி உள்ள இந்த வளங்கள் இன்னும் சில ஆண்டுகளில் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எட்டா கனி ஆகிவிடும். இதனால் பசி, பட்டினி, உள்நாட்டு போர் போன்ற அழையா விருந்தாளிகளை உலக நாடுகள் ஒவ்வொன்றும் எதிர்கொள்ள நேரிடும். அதிக மக்கள் தொகை உள்ள இந்தியா, சீனா போன்ற நாடுகள் இந்த மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க தேவையான நில நீர் வளங்களை ஏற்படுத்தவோ அல்லது இப்போது இருக்கும் வளங்களை வீணாக்காமல் இன்னும் சிறப்பான  முறையில் பயன்படுத்த வேண்டிய வழி வகைகளை ஆராய வேண்டும். இது உடனடியாக செய்ய வேண்டிய ஒன்று. இல்லை என்றால் நில நீர் வளங்களுக்காக இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே போர் உண்டாகும் அபாயம் உண்டு. இது இந்த இரண்டு நாடுகளை மட்டுமன்றி ஆசிய பிராந்திய நாடுகளையும் அழிவு பாதையில் அழைத்து செல்லும்.

ஸ்திரமான அரசாங்கம் அல்லது  சர்வாதிகார ஆட்சி அமையப் பெற்ற நாடுகளில் உணவு பற்றாகுறை என்பது புதியது அன்று. உதாரணமாக பல நாடுகளை சொல்லலாம். ஜிம்பாப்வே ஒரு காலத்தில் உணவு தன்னிறைவு பெற்று  இருந்தது. ஆனால் ராபர்ட் முகாபே ஆட்சி காலத்தில் கறுப்பின மக்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக பயிர் செய்து வந்த வெள்ளையர்களிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு கறுப்பின மக்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் மழை பொய்த்தாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் அந்த நிலங்களில்  மகசூல் படி படியாக குறைந்து ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதி செய்யும் அளவு தன்னிறைவு பெற்ற ஜிம்பாப்வே இன்று உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது.  உணவு தட்டுப்பாடு, உயரும் பண வீக்க விகிதம், பசி பட்டினி மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள் என்று அந்நாட்டு மக்கள் பல்வகையிலும் அல்லலுற்று வருகின்றனர். நான் முதலில் குறிப்பிட்ட போதைக்கு அடிமையான ஆப்கான் நாட்டு  குழந்தைகள், மியான்மர், பங்களாதேஷ், ஹைதி ஆகிய  நாட்டில் நிகழும் பட்டினி சாவுகள், ஆப்ரிக்க  நாடுகளில் பரவலாக உள்ள உணவு தட்டுப்பாடு ஆகியன அந்நாடுகளில் ஸ்திரமான அரசாங்கம் இல்லாமையின் நேரடி எதிரொலியே.

அரசாங்க கொள்கை ஒரு நாட்டின் தலை எழுத்தையே மற்றும் வல்லமை கொண்டது. பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மானியம், இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி ஆகியன வழங்கி ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலாகட்டும்,  வெள்ளம், வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு தொகை வழங்கி அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலாகட்டும், உணவு மற்றும் கச்சா பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதிலாகட்டும்  அரசாங்கத்தின்
முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் உணவு உற்பத்தியில்  தன்னிறைவு அடைவது என்பது இயலாத ஒன்று. எனினும் அரசாங்கத்தின் கொள்கைகள் விவசாயிகளின் குறிக்கோள் ஆகியவை இரண்டும் இணைந்து நேர் கோட்டில் பயணம் செய்தால் தான் ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும்.

பூமியின் நுரையீரல்கள் எனப்படும் அமேசான் காடுகள் வேகமாக அழிந்து வரும் அவலம் ஒன்று போதும் அதிக மக்கள் தொகையும் அதனால் ஏற்படும் சுற்று சூழல் கேட்டிற்குமான தொடர்பை விளக்குவதற்கு. மேற்கத்திய வாழ்க்கை முறை இன்று எல்லா நாடுகளிலும் ஓரளவு கடைபிடிக்க படுகிறது. மெக்டோனல்ட்ஸ், பிட்சா ஹட்  போன்ற அமெரிக்க உணவகங்கள் மட்டுமன்றி மேலை நாடுகளில் உள்ள வாழ்க்கை முறையும் இன்று பரவலாக எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கபடுகின்றன.  உலகமயமாக்குதலின் காரணமாக இன்று நடுத்தர வர்க்க மக்களிடம் வாங்கும் சக்தி பெருகி உள்ளது. இத்தகைய மாற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும் நுகர்வோர் எண்ணிக்கை பெருகி வருவதால் நிறைய இயற்கை வளங்களை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக இழந்து வருகிறோம். உதாரணமாக இன்று இந்தியாவில் கார் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய கார் உற்பத்தி செய்ய தேவைப்படும் இரும்பு, அதை உருக்க தேவைப்படும் நிலக்கரி, உற்பத்தி செய்யப்பட பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், அந்த வாகனங்கள் செல்ல சாலைகள், பாலங்கள்  போன்ற கட்டமைப்பு வசதி என்று அந்த ஒரு பொருளை செய்வதற்கு தேவைப்படும் மண் சார்ந்த மூலபொருட்களின் எண்ணிக்கையோ மிகவும் நீளம்.  இது ஒரு உதாரணம் தான். இது போல எலெக்ட்ரானிக்  உபகரணங்கள், ஆடை தயாரிப்பு, உணவு பொருட்கள் உற்பத்தி போன்ற தேவைகளுக்காக நாம் வாழும் இந்த பூமியை வேகமாக சுரண்டி வருகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்திய பின்  மறு பயன்பாடு செய்ய இயலாமல் காற்று, நீர், நிலம் ஆகியவற்றை மாசு படுத்தி வருகிறோம். உதாரணமாக இன்று அனைவரும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை சொல்லலாம். பிளாஸ்டிக் குப்பை இல்லாத ஊரே இல்லை இந்தியாவில். முன்பெல்லாம் கடைகளில் துணி பைகளில் பொருட்களை விற்பனை செய்து வந்தனர். அப்போதெல்லாம் இவ்வளவு குப்பை இருந்திருக்காது என்று தோன்றுகிறது.

அண்டார்டிகாவில் பனி பாறைகள் உருகுவதாகவும் அதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து பல நிலப்பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக உலக விஞ்ஞானிகள் காட்டு கத்தல் போட்டும் எந்த நாடும் அதை காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் வாழ்க்கை முறையை தன் நாட்டு மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்யும் விஷயமாகவே இதை வளரும் நாடுகள் கருதுகின்றன. இதனால் சுற்று சூழல் பாதிப்பை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதிலேயே குறியாக உள்ளன. இத்தகைய மனப்போக்கு மிகவும் ஆபத்தானது.

எண்ணெய் வளங்களுக்காக நாடுகள் ஒன்றுடன் ஒன்று போர் தொடுப்பது இன்று நாம் கண்கூடாக காணும் நிகழ்வு. ஆழ் கடலில் துளையிட்டு எண்ணெய் எடுப்பதும் அதனால் நீர் வளங்களை மாசு படுத்துவதும் மெக்ஸிகோ வளைகுடாவில் நாம் கண்ணார கண்ட நிஜம்.  சர்வாதிகார  அரசுகளையும், தீவிரவாத அமைப்புகளின் பிடியில் உள்ள நாடுகளையும் எண்ணெய் வளங்களுக்காக ஆதரிப்பது போன்ற ஆபத்தான அணுகுமுறையை இன்றைய நாடுகள் கடைப்பிடிக்கின்றன. மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை கண்டுபிடிப்பதில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு ஆர்வமின்மையால் அது போன்ற முயற்சிகளுக்கு இந்த நாடுகள் முடிந்த அளவு தடை ஏற்படுத்துகின்றன. இதனால் நிலவுக்கு மனிதனை அனுப்ப முடிந்த நம்மால் எண்ணெய் அல்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனத்தை  இந்நாள் வரை கண்டுபிடிக்க இயலவில்லை.வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு வாயுவால் ஏற்பட்டுள்ள பூமியின் தட்ப வெட்ப மாற்றத்தின் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் அளவுக்கு அதிகமான பனிப்பொழிவோ அல்லது மழையோ அல்லது வறட்சியோ ஏற்படுகிறது. இது மண்ணை சார்ந்து வாழும் விவசாயிகளை மட்டுமன்றி அனைவரையும் பாதிக்கிறது.

பெருகி வரும் மக்கள் தொகையின் உணவு தேவைக்காக அண்டை நாடுகளிடம் விளைநிலங்களை குத்தகைக்கு எடுக்கும் கூத்தும் நடக்கிறது. சீனா 2.8 லட்சம் ஹெக்டர் நிலத்தை காங்கோ நாட்டிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளது. இதே போன்று தென் கொரியா சூடன், மடகாஸ்கர் போன்ற நாடுகளிடம் இருந்து லட்சக்கணக்கான ஹெக்டர்கள் குத்தகைக்கு எடுத்துள்ளது. லட்சக்கணக்கான ஏழை மக்கள் வசிக்கும் இத்தகைய நாடுகளிடம்
இருந்து பெற்றுள்ள நிலங்களை பயிர் செய்ய தேவையான தண்ணீரையும் அந்தந்த நாட்டிலிருந்தே பெற வேண்டும். இது ஏற்கனவே வறட்சியால் கஷ்டப்படும் அந்த நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். இது போன்ற உடன்பாடுகள் நீதிக்கு புறம்பானவை மட்டுமன்றி இதை போன்ற  ஒப்பந்தங்கள் காரணமாக உள்நாட்டு போர்/கலகம் ஆகியன  ஏற்படக்கூடும்.

அமெரிக்கா ரெட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தில் இருந்து ஒரு படிப்பினை என்று எடுத்தால் அது - உலகின் எந்த ஒரு மூலையில் நடக்கும் ஒரு நிகழ்வும் அந்த நாட்டை மட்டுமே பாதிக்கும் நிகழ்வு அல்ல. உலகமயமாக்குதலின் காரணமாக உலகம் மிகவும் சுருங்கிவிட்டது.ஒரு இடத்தில் உள்ள மேடு  இன்னோர் இடத்தில் உள்ள பள்ளத்தின் பிரதிபலிப்பே. எனவே ஆப்கானிஸ்தானில் உள்ள குழந்தைகளின் வறுமை மற்றும் அதை சார்ந்த போதை பழக்கம் அந்த ஒரு சமுதாயத்தை மட்டும் பாதிக்கும் ஒரு விஷயம் அல்ல. அது உலகம் அனைத்திற்கும் பொதுவான பிரச்சனை என்ற நோக்கில் அணுகப்பட வேண்டும். உலகில் எப்போதும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு மறைய போவதில்லை. ஆனால் ஏழைக்கு உணவு என்பதே கனவாக ஆனால் அது நல்லதல்ல. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகம் அழிந்திடும் என்பது இன்றைய உலக நியதி.

சரி இந்த பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன என்று அலசினால் எனக்கு தோன்றும் சில தீர்வுகள்.
முதலில் ஆப்கானிஸ்தானை எடுத்து கொள்வோம். அங்கு நிலவும் வறுமைக்கு காரணம் அங்கு பெண்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவதே. கல்வி, தொழில் ஆகிவற்றில் பெண்கள் மிகவும் பின் தங்கி இருப்பது மட்டுமன்றி ஆண்களை சார்ந்தே வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் ஆண்களின் துணை இன்றி குடும்பத்தை பேணுவது இயலாத ஒன்றாக இருக்கிறது. இத்தகைய நிலையில் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி  அளித்து அவர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பும் அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான வருமானம் கிடைத்திட உதவ வேண்டும். இதனால் படி படியாக அங்கு நிலவும் வறுமையை குறைக்க முடியும். மேலும் தற்போது போதைக்கு அடிமையான மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் அங்கு ஏற்படுத்த பட வேண்டும். இது மட்டுமன்றி போதையினால் உண்டாகும் தீய விளைவுகளை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மண்ணிற்கு கேடு விளைவிக்கும் உரம் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வளரும் காய், கனி மற்றும் தானிய வகைகளை விடுத்து இயற்கை முறையில் வளரும் உணவு பொருட்களை அனைவரும் வாங்க வேண்டும். இது  இயலாதோர் தங்கள் பகுதிகளில் உள்ள குறு விவசாயிகள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் விளைவிக்கும் உணவு வகைகளை வாங்க வேண்டும். இதனால் மண் சார்ந்த சுற்றுசூழல் பாதிப்பில் இருந்து சிறிதளவாவது  மீள முடியும்.

கார்பன் டை ஆக்சைடு  வாயு உமிழ்வினால் உண்டாகும் தீய விளைவுகளை நாளைய பிரச்சனையாக பார்க்காமல் இன்றைய பிரச்சனையாக அணுக வேண்டும். மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனத்தை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம். இது காற்று மண்டலம் மாசுபடுவதை பெருமளவு குறைக்கும்.

நாம் ஒவ்வொருவரும் எரிபொருள் சிக்கனம்,தண்ணீர் சிக்கனம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். நாம் வீணாக்கும் நீர் விவசாயத்திற்கோ அல்லது மின்சார உற்பத்திக்கோ பயன்படக்  கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போது புகையிலை பயிரிட் பயன்படுத்தப்படும் 5 லட்சம் ஹெக்டர் நிலத்தில் தானியம் பயிரிட முடிந்தால்  உலகின் உள்ள அனைவருக்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவை பெற முடியும். இதனால் பசி பட்டினி மற்றும் அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து பலரை காக்க முடியும்.

இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளின் உணவு தேவைக்காக ஒதுக்கப்படும் தானியத்தில் 10 சதவிகிதம்  குறைத்தால் கிட்ட தட்ட 64 லட்சம் டன்கள் தானியத்தை மிச்சம் பிடிக்க முடியும். இதன் மூலம் உலகில் உள்ள அனைவருக்கும் கிட்டத்தட்ட 26 மாதங்கள் உணவளிக்க முடியும். இதையே 20 சதவிகிதம் என்ற அளவு குறைத்தால் மேலும் 48 மாதங்களுக்கு உணவளிக்க முடியும். எனவே வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இறைச்சி உணவின் மீது வரி விகித்து இறைச்சி உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.


சொந்த சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி.

தாயை கொள்ளும் பஞ்சத்தை
தடுக்க முயற்சியுறார்
வாயை திறந்து சும்மா- கிளியே
வந்தே மாதரம் என்பார்.

முண்டாசு கவிஞன் பாரதி சொல்வது போல் வேறு யாரும் அழகாக சொல்ல முடியாது. பஞ்சம் பசி இன்றைய நிஜம். இது நாளைய நிஜமாகவும் வாழ்க்கை முறையாகவும் மாறாமல் காப்பது நம் அனைவரின் கையிலும் உள்ளது.