புதன், ஜூலை 19, 2023

கதை கேட்கலாம் கதை பேசலாம்

 


சென்ற வார இறுதியில் எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி திரு பவா செல்லதுரை மற்றும் திருமிகு கே.வி. ஷைலஜா பங்குபெற்ற இலக்கிய நிகழ்வு நடைபெற்றது. சார்லட் தமிழ்ச் சங்கம் மற்றும் அதில் ஒரு அங்கமாகிய சார்லட் இலக்கிய வட்டம் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் இருவரும் பங்கேற்று சிறப்பித்தனர். அவர்கள் இருவரின் உரைகளும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களை கட்டிப் போட்டிருந்தது. பவா அவர்களின் எதிர் வரும் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினோம். நிகழ்ச்சியில் இருந்து சில புகைப்படங்கள் கீழே. வலையொளியில் நேரலையில் வந்த இணைப்பும் இங்கே உள்ளது.





இலக்கிய வாசிப்பு/புத்தக வாசிப்பு என்பது நுட்பமான ஒரு இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட காலப்(Gallup) ஆய்வின் படி அமெரிக்கர்கள் ஆண்டுக்கு சராசரியாக 12.6 புத்தகங்களை வாசிக்கிறார்கள். இது 2001 முதல் 2016 வரை இருந்ததை விட 2 முதல் 3 புத்தகங்கள் வரை குறைவான எண்ணிக்கை ஆகும்.




கதைகள் கேட்டு வளர்ந்த குழந்தைகள் கூட இன்று சமூக ஊடங்களில் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தேடிக் கேட்க/பார்க்க முடியும் என்ற நிலையில், வாசிப்பு என்பது தேய்ந்து "செல்வத்தில் செல்வம் செவிச் செல்வம்" என்ற அளவிலேயே நின்று விட்டதோ என்று தோன்றுகிறது. கதை சொல்லிகள் இலக்கிய உலகின் துரித உணவு பரிமாறுபவர்கள் எனலாம். கதைகளைப் படித்து அவர்கள் விரும்பும் பாத்திரங்களை அவர்களுக்கு எட்டிய கருத்துக்களை நமக்கு அறியத் தருகிறார்கள். அறியாத எழுத்தாளர்களை நமக்கு அறிமுகம் செய்கிறார்கள், புதிய கோணத்தில் ஒன்றை நமக்கு அறியத் தருகிறார்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனோடு கூடவே நடந்து ரகசிய நிலவறைக்கு செல்லும் தருணத்தை நீங்கள் மட்டுமே வாசித்து உணர முடியும், வேள்பாரியில் நீலன் கூடவே பறம்பு மலையில் நடக்கும் சுகத்தை நீங்கள் மட்டுமே கற்பனை செய்ய முடியும். வாசிப்பு அனுபவத்தை பகிரலாம், ஆனால் வாசிப்பையே பிறரிடம் விட்டுவிட்டு சென்று கொண்டிருக்கிறோமோ என்ற கேள்வி எழுகிறது. மதுரையில் புதிய நூலகம் திறக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சி. ஆனால் நூலகம் என்பது இருட்டிய பின் யாருமே செல்லாத இடமாக மாறக் கூடாது. வாசிப்பை சுவாசிப்போம் என்பதை விட வாசிப்பைக் காப்போம் என்பதே இன்றைய தேவையாகி இருக்கிறது.