வியாழன், டிசம்பர் 05, 2019

அமெரிக்க மண்ணில் தமிழ்

அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின் (அ.த.க.) முதலாம் ஆண்டு  விழா அரசி நகரமாம் சார்லட் வட கரோலினாவில், நவம்பர்  23,2019 அன்று, கோலாகலமாக நடைபெற்றது. கிட்ட தட்ட 122 வட  அமெரிக்க பள்ளிகள், 10000-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே குடையின் கீழ் இணைக்கும் பெரும் பணியையும், தமிழ் வழிக்  கல்வி அயல் மண்ணில் தழைக்கும் பொருட்டு தமிழில் பாடபுத்தங்கள், தமிழ் பள்ளியை திறம்பட நடத்தவும், நிர்வகிக்கவும் மென்பொருள், ஆசிரியர் பயிற்சி மற்றும் நீண்ட நாள் தான்னார்வல பணி ஆற்றும் ஆசிரியருக்கு விருதுகள் என்று பல்வேறு பணிகளையும் சிறப்பாக செய்து வரும் தன்னார்வலர் அமைப்பே அ.த.க.

அடை மழை விடாது பெய்த போதிலும் தெற்கு கரோலினா, வாஷிங்டன் டி.சி. ஜாக்சன்வில் புளோரிடா, ஆஸ்டின், டெக்சாஸ், பிலெடெல்பியா, பென்சில்வேனியா என்று பல பகுதிகளில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும், சிறப்பு விருந்தினர்களும் வந்து விழா அரங்கத்தில் குழுமி இருந்தனர். முதலில் அ.த.க பள்ளி மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடினர் .அ.த.க. தலைவர் மணிமேகலை மற்றும் அகரம் தமிழ் பள்ளி ஆசிரியர்கள் திருமதி. விஜி சுரேஷ், திருமதி.ஜெயஸ்ரீ சேகர், கிரீன்ஸ்பரோ ட்ரியாட் பள்ளி ஆசிரியர்   திருமதி.பிரேமா அருள், கொலம்பியா தமிழ் குடில் பள்ளி ஆசிரியர் திருமதி.சிமிலதா ஆகியோர் குத்துவிளக்கினை ஏற்றி விழாவினை  துவக்க, பேராசிரியர் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். ட்ரியாட் தமிழ் பள்ளி மாணவர்கள் வழங்கிய "கற்றதும் கேட்டதும்" என்ற பல்சுவை நிகழ்ச்சியனை தொடர்ந்து, அ.த.க-வின் நிர்வாக குழு மற்றும்  எதிர்கால திட்டம் பற்றிய உரையை  அ .த .க. தலைவர் திருமதி. மேகலை எழிலரசன் வழங்கினார். பாட நூற்களை வடிவமைத்தல் - சிக்கல்களும் , சவால்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர். வாசு அரங்கநாதன் அவர்களும், இருமொழி முத்திரையின்வழி அமெரிக்காவில் தமிழ்க்கல்விக்கு ஊக்கம் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர். அனந்தகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் அவர்களும் தமது நெடிய தமிழ் பயணத்தில்  தாம் பெற்ற அனுபவங்களை, கேட்போர் பயன் பெறும் விதமாக எடுத்துரைத்தனர். அ.த.க பள்ளிகளை சார்ந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நெடு நாள் ஆசிரியர், செந்தமிழ் செல்வி, செந்தமிழ் செல்வன் விருதுகள் வழங்கப்பட்டன. அகரம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தனபாலன் சௌந்தரராஜன்(நிலை 4), தர்ஷன் சித்ராவினோதினி நிர்மல் (நிலை  2) ஆகியோர் செந்தமிழ் செல்வன் விருதும், யாழினி முருகன் (நிலை 6), தர்ஷினி ஷங்கர்(நிலை 4) மற்றும் ஸ்ருதிகா பிரதாப்குமார்(நிலை  1) ஆகியோர் செந்தமிழ் செல்வி விருதும், ஆசிரியர் திரு.சுதாகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியை திருமதி. திவ்யா தமிழரசு ஆகியோர் நெடுநாள் ஆசிரியர் விருதும் பெற்றனர்.  காலை நிகழ்ச்சிகளை அனைவரும் ரசிக்கும் விதமாக தொகுத்து அளித்தவர்கள் அகரம் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் திருமதி. உமா ரகுநாத் மற்றும் திருமதி. ரம்யா ரவீந்திரன் ஆவர்.

உணவு இடைவேளைக்கு பின்னர், முதல் நிகழ்ச்சியாக, முன் மழலை நிலை முதல் மூன்றாம் நிலை வரை இந்த வருடம் புதிதாக  தயாரிக்கப்பட்ட  பாட புத்தகங்களை முனைவர் திரு அரசு.செல்லையா அவர்கள் வெளியிட அ.த.க. ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டார்கள். அ.த.க.விழா மலரை ட்ரியாட் தமிழ் குடில் பள்ளியை  சார்ந்த ஆசிரியர். ரிஷி ரவீந்திரன், அகரம் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் திருமதி.ரம்யா ரவீந்திரன் மற்றும் ஆசிரியர் திருமதி. கம்சலா ஆகியோர் வெளியிட முனைவர். அரசு செல்லையா அவர்கள் பெற்றுக் கொண்டார். அகரம் தமிழ் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர் தர்ஷன் சித்ரவினோதினி நிர்மல் 50 திருக்குறள்களை தங்குதடையின்றி அனைவரின் முன் சொல்லி அசத்தினார். ட்ரியாட் தமிழ் பள்ளி மாணவர்களின் "நாங்க தமிழ் பசங்க" நாடகமும், திருக்குறள் நாடகமும் அனைவரின் பாராட்டை பெற்றது. அப்பள்ளி மாணவர்களின்  பழமை, புதுமை, இளமை/இனிமை  என்ற பாடல் நிகழ்ச்சியும் கேட்டோரை  மெய்மறக்க செய்தது என்றால் மிகையில்லை.

பின்னர் அகரம் தமிழ் பள்ளி மாணவர்கள் வழங்கிய தங்க தமிழ்நாடு நடன நிகழ்ச்சி அரங்கேறியது. நடனம், காணொளி, பாடல் என்று முத்தமிழாய் இனித்தது இந்த நடன நிகழ்ச்சி என்று சொன்னால் மிகையாகாது. பின்னர் பள்ளி பிரதிநிதிகள் அறிமுகம் மற்றும் உரை வழங்கும் நிகழ்ச்சி  நடந்தது. அகரம் தமிழ்ப் பள்ளி சார்பாக ஆசிரியர் திரு.சுதாகர் கிருஷ்ணமூர்த்தி, கொலம்பியா தமிழ் குடில் சார்பாக ஆசிரியர் திரு. சிவகுமார் ஷண்முகம், ஜாக்கிசான்வில் தமிழ்ப்  பள்ளி சார்பாக ஆசிரியர் திரு. கதிரவன் பெரியசாமி, பிரெட்ரிக் தமிழ்ப் பள்ளி, மேரிலாந்து தமிழ் அகாடமி சார்பாக  ஆசிரியர் திரு.பாலா குப்புசாமி, ட்ரியாட் தமிழ்க் கல்வி - கிரீன்ஸ்போரோ சார்பாக ஆசிரியர் திரு.முத்தையா சின்னசாமி மற்றும் சௌந்தர் கனகராஜன்,  ட்ரியாட் தமிழ்க் கல்வி வின்ஸ்டன்-சேலம்  சார்பாக ஆசிரியர் திரு.அருள் கார்த்திகேயன் மற்றும் ரிச்மண்ட் தமிழ்ப் பள்ளி சார்பாக ஆசிரியர் திரு.கணேஷ் குமார் அவர்களும் பேசினார்கள்.

தேநீர் இடைவேளைக்கு பின்  கவனகர். கலைச்செழியன் அவர்களின் கவனகம் நிகழ்ச்சி நடந்தது. எண் கவனகம், வண்ண கவனகம், திருக்குறள், மாய கட்டம், பிறந்த தேதி கேட்டு அந்த நாளுக்குரிய கிழமையை சொல்லுதல் ஆகிய அனைத்தையுமே சதுரங்கம் விளையாடி கொண்டே அவர் லாவகமாய் எடுத்துரைத்த விதம் பார்வையாளர்களை மிகுந்த  வியப்பில் ஆழ்த்தியது. குழந்தைகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் மகிழ்வுடன் பங்கேற்று கவனகத்தை எவ்வாறு செய்வது என்று செயல்வழியில்  கற்று பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டல் பெற்றனர். மதிய நிகழ்ச்சிகளை இனிமையாக தொகுத்து வழங்கியவர் அகரம் தமிழ் பள்ளி ஆசிரியர் திருமதி. ஜோதி வெங்கடேஷ் ஆவார். இறுதியாக அ.த.க. துணைத் தலைவர் கரு.மாணிக்கவாசகம் அவர்கள் நன்றியுரை நல்கி விழாவினை முடித்து வைத்தார். விழா மேடை அலங்காரம், புகைப்பட சாவடி(Photo  Booth) குழந்தைகளை கவரும் Face Painting, உணவு ஏற்பாடு, விருந்தினர் உபசாரம் என்று பல தன்னார்வலர்கள் கட்டி இழுத்த தேர் இந்த விழா என்று சொன்னால் மிகை ஆகாது. அடுத்த நாளும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கான்கார்ட் ஹில்டன் ஹோட்டலில் நடந்தது. அமெரிக்க மண்ணில் தமிழ் கல்வி தழைக்க பெற்றோரின் பங்களிப்பு, ஆசிரியரின் பங்களிப்பு, தமிழ் கல்விக்கு அ.த.க.-வின்  பங்களிப்பு என்ற தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலை முனைவர் திரு. வாசு அரங்கநாதன், அ.த.க. இயக்குனர் முனைவர்  திரு. சிவகுமார் ராமச்சந்திரன், திரு. தினகர் கருப்புசாமி மற்றும் அ.த.க. முன்னாள் தலைவர் முனைவர் திரு. அரசு செல்லையா, அ.த.க. துணை தலைவர் திரு. கரு. மாணிக்கவாசகம் அவர்களும் வழிநடத்தினர்.

இந்த விழா நிகழ்வினை கீழ் காணும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் கண்டு மகிழுங்கள்.

காணொளி:

புகைப்படத் தொகுப்பு: