செவ்வாய், மே 17, 2011

கவித கவித

அழகான தமிழ் கவிதை ஒன்றை படைத்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சமர்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சரி எழுதலாம் என்று வெள்ளை தாளை எடுத்து வைத்து கொண்டு குப்புற படுத்து யோசித்ததில் தூக்கம் மட்டுமே வந்தது. கவித கவித என்று கமல் போல பினாத்தியதில் குடும்பத்தினர் அனைவரும் ஒரு விதமாக என்னை பார்க்க ஆரம்பித்து விட்டதால் கவிதை எண்ணத்தை தற்காலிகமாக ஒத்திப்போட்டு  என்னை கவர்ந்த சில கவிதைகள் இதோ உங்கள்  பார்வைக்கு வைக்கிறேன்:

கேள்வி
குளிர்ந்த நீர் தானே ஏன்
வேர்கிறது பாட்டிலுக்கு

இந்த ஹைகூவை எழுதியது  யார் என்று அதிகம் யோசிக்க வேண்டாம். இதை எழுதியது என் தங்கை. வேடிக்கை என்ன வென்றால் இந்த ஹைகூவை எழுதிய பின் என் தங்கை அதை படிப்பதற்காக  எனது தந்தையாரிடம் நீட்டினாள். அவரும் ஒ யாரோ டிலுக்கு என்பவர் எழுதிய கவிதையா இது என்றது  பெரிய காமெடி. ஏனென்றால் இடப்பற்றாக்குறை 
காரணமாக அவள் பாட்டிலுக்கு என்ற வார்த்தையில்  பாட் என்பதை 
மேல் வரியிலும்  டிலுக்கு என்பதை கீழ் வரியிலும் எழுதி இருந்தாள். 
டிலுக்கு என்பதை கவிஞர்/கவிதாயினியின் பெயர் என்று என் தந்தை நினைத்தால் வந்த குழப்பம் அது.  அன்று முதல் அவளை நாங்கள்
செல்லமாக டிலுக்கு என்றுஅழைக்க ஆரம்பித்தோம்.
அவள் எழுதிய வேறு சில கவிதைகள்.
மூன்றாம் விதி 
தூண்டில் உணவை 
தேடும் மீன் அறியுமா 
நியூட்டனின்  மூன்றாம் விதி

போதனை
பாரதி - ரௌத்திரம் பழகு
அன்னை தெரசா - அன்பே சிவம்
புத்தர் - ஆசையை  துற
மகாத்மா - வாய்மையே வெல்லும்
யார் போதிப்பார் - அரசியலில் நேர்மை ?





சில நாட்களாக மனசுக்கு பிடிபடாத கற்பனை குதிரைகள் நேற்று திடீரென்று எனது தேர் குதிரைகளாக மாறிய  மதிய பொழுதில் எழுதிய சில கன்னி கவிதைகள்.

முதிர்கன்னி
காற்றில் கற்பூரம் போல்
தேயும் அழகும் இளமையும்
காட்டில் நிலவொளி

பாரபட்சம்
மழையை கண்டு ஆடிய மயிலை
கொண்டாடிய கவிஞனின் கண்ணில் படவில்லை
ஆர்ப்பாட்டமின்றி ரசிக்கும் அழகற்ற மண்புழுக்கள்

சுமை
வாழ்க்கை தந்த வலி மிகுந்த பாடங்களை
மறக்காமல் சுமந்து செல்கிறேன் தினமும்
என்றாவது ஒருநாள் உதவுமோ என்று











    

        











                            
  

வெள்ளி, மே 06, 2011

கதம்ப மாலை - 1

பிரிவு

இந்திய பயணம் எப்போதும் மகிழ்ச்சியை தருவது. ஆனால் இந்த முறை நெருங்கிய உறவினரின் ஒருவரின் மறைவினால் மேற்கொள்ள நேர்ந்தது
மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஒவ்வொரு மரணமும் நம்மை ஒவ்வொரு
விதத்தில் பாதிக்கிறது.  நான் பள்ளி பிராயத்தில் இருந்த போது எனது தாத்தாவின் மரணம் உறவின் அருமையை புரிய வைத்து. எனது தாத்தா குழந்தைகளுக்கு இணையாக தானும் விளையாடுவார். அவருடன் சீட்டு விளையாடுவதற்காக பேரப்பிள்ளைகள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்போம்.சரியான "வாச்சான்குலி" ஆட்டம் ஆடுறீங்க மேடம்
என்று  பேத்திகளை அவர் செல்லமாக கேலி செய்வதும், "வாச்சான்குலி" பாய் என்று பேரன்களை செல்லமாக கலாட்டா செய்வதும் என்று கேலியும் கிண்டலுமாக பொழுது கழியும். ஒரு நாள் கூட எனக்கு உடம்பு சரியாக  இல்லை அதனால் விளையாட வர இயலாது  என்று
சொன்னதாக நினைவு இல்லை.

குழந்தைகளின் உலகத்தில் தன்னையும் ஒருவறாக கருதி,
பேரன் பேத்திகளை உற்சாகப்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு, குடும்பத்தின் ஆணி வேறாக இருந்து எல்லாரையும் அன்புடன்
அரவணைத்து  சென்றது என்று தாத்தாவை பற்றி சொல்லி கொண்டே போகலாம். இதில் குறிப்பிடப்பட  வேண்டியது என்னவென்றால் தாத்தா போஸ்டல் யூனியனில் ப்ரெசிடென்ட் ஆக இருந்து கொண்டே எங்கள் அனைவருக்கும் நேரம் ஒதுக்கியது தான். அடிக்கடி வெளியூர் சென்று யூனியன் மாநாடு, மினிஸ்டரை பார்த்து பேசுதல், அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை போன்ற வேலைகளுக்கு இடையேயும் எங்கு சென்றாலும் பாஷை தெரியாத இடம் என்றாலும் எங்களுக்கு என்று ஏதாவது ஸ்பெஷலாக  வாங்கி வருவதில் தவறியது கிடையாது. ஒருவர் நன்றாக வாழ்ந்தாரா என்பதற்கு அவருடைய சாவிற்கு வரும் கூட்டத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். அவர் இறப்பிற்கு வந்த கூட்டம் பெரியது, அதை விட பெரியது வந்தவர்கள் அவரை பற்றி  சொன்னது . எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்தார்கள், எவ்வளவு பேருக்கு  பொருள் உதவி செய்தார்கள் என்பதெல்லாம் கேட்க கேட்க பெருமையாகவும் அதே நேரம் துயரம் தருவதாகவும் இருந்தது.   

தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா  போன்ற சொந்தங்களை பார்க்காமல் பழகாமல் அயல் நாட்டில் வளரும் நம் குழந்தைகள் எவ்வளவு இழக்கிறார்கள் என்று யோசித்தால் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.  உறவின் அருமை பிரிவில் தெரியும் என்பார்கள். ஒரு சிலருக்கு இந்த அயல் நாட்டு வாழ்க்கை முறை பிடித்திருப்பதாக வைத்து கொண்டாலும் உற்றார் உறவினரை பிரிந்து பாசம், நேசம் போன்ற பலவற்றை இழந்து தான் பலர் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டு  இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.    

வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் வசிக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான வழிமுறைகள்- அடுத்த முறை ஊருக்கு போன் செய்யும் போது டிவி மற்றும் கணினி ஆகியவற்றை பார்த்துக் கொண்டோ அல்லது சாப்பிட்டுக் கொண்டோ  பேசாமல்  உங்கள் முழு கவனத்தையும்
அளித்து பேசுங்கள். தவறாமல் உறவினர் எல்லோருக்கும் மாதத்துக்கு ஒரு முறையேனும் போன் செய்து பேசுங்கள். அடுத்த வாரம் பேசலாம், இன்னும் இரண்டு நாள் கழித்து பேசலாம் என்று தள்ளிப்  போடாதீர்கள். பண்டிகை, 
திருமண நாள், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களில் உறவினர்களுக்கு வாழ்த்து கூற மறக்க வேண்டாம். இந்தியா செல்லும் போது உறவினர்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். அவ்வாறு அறிமுகம் செய்யும் உறவினருடன் புகைப்படம் எடுக்க முடிந்தால் மிகவும் நன்று.நமக்கு தாய் தந்தையர் ஏற்படுத்தி கொடுத்த சொந்த பந்தங்களை  நமது குழந்தைகள் தலை முறைக்கும் நாம் ஏற்படுத்தி கொடுப்பது நமது கடமை.  குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது மட்டும் நமது கடமை அன்று. நல்ல மனிதர்களை சேர்த்து வைப்பதும் நமது கடமை என்பதை மறக்க வேண்டாம்.

அம்மா
தாயின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் போனால் இந்த பூமி சுழல்வது கூட நின்று விடும் என்று சொன்னால் அது மிகையாகாது.   பிறந்து சில நாட்களே ஆன ஆட்டுகுட்டியை எங்கள் வீட்டு வாண்டுகளுக்கு காண்பிப்பதற்காக எடுத்து வந்திருந்தாள் எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண். குட்டியின் வாசமோ அல்லது அதன் அழைப்பின் ஒலியோ எதுவென்று தெரியவில்லை. குட்டி இருக்கும் இடத்தை எப்படியோ அடையாளம் கண்டு எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டது தாய் ஆடு. குட்டியும் தாய் ஆடும்  ஒன்றை ஒன்று உச்சி முகர்ந்து அன்பு பாராட்டியது மனதிலேயே நிற்கிறது. தாய்மை அனைத்து உயிரினங்களுக்கும் பொது என்பதை உணர்த்திய அருமையான நிகழ்ச்சி.



சமீபத்தில் கணவனை இழந்த ஒரு பெண்மணி அந்த துக்கத்தின் சுமையிலும் தன்னுடைய மகன்கள் சாப்பிட்டார்களா அவர்களுக்கு பிடித்த உணவை   கொஞ்சம் எடுத்து வையுங்கள், குழந்தைகள் பிறகு சாப்பிடுவார்கள் என்று கூறியது நெகிழ்ச்சி. தன் கஷ்டத்தை பின்னுக்கு தள்ளி தன் குழந்தைகளின் நலனை முன்னிறுத்தும் மனம் தாயை தவிர யாருக்கு வரும். தாயின் சிறந்த கோயிலும் இல்லை என்பது தான் எத்தனை உண்மை.

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளி சிறுமியின் தாயை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சிறுமியை அடுத்து பிறந்த பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை ஆகிய இருவருக்குமே அதே குறைப்பாடு. என் குழந்தைகளில் யாருமே என்னை "அம்மா" என்று அழைத்து கேட்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அக்கம் பக்கத்திலும் ஊமை பிள்ளையை பெத்தவ  என்று ஏளனமாக பேசுகிறார்கள் என்று அந்த தாய் அழுத போது ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலை சொல் கேளாதார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அற்புதமான மழலை செல்வங்கள் வாய்த்தும் அம்மா என்று அந்த குழந்தைகள் அழைக்க முடியாதது சோகம். அதை விட பெரிய சோகம் அந்த தாயை மற்றவர்கள் குழந்தைகளின் ஊனத்தை குறிப்பிட்டு திட்டுவது.  எந்த தாயையும் காயப்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களையும் என்னையும் காப்பதற்காக வந்த இறைவனின் தூதுவர்கள்.

அனைவருக்கும் மதர்ஸ் டே வாழ்த்துக்கள். உங்கள் வீட்டில் இருக்கும் நடமாடும் தெய்வங்களாகிய உங்கள் தாய் மற்றும் சகோதரிகளுக்கும் மற்றும் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் உயிராக நேசிக்கும் உங்கள் மனைவிக்கும் இந்த நாளில் மறக்காமல் வாழ்த்து கூறி அவர்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் பாராட்ட மறக்காதீர்கள்.

தேர்தல்
இந்த முறை தேர்தல் வந்த சுவடே இல்லாமல் மிகவும் அழகாக நடந்தது. ஒலி பெருக்கி சத்தம் இல்லாமல், அழகான  சுவர்கள் தேர்தல் விளம்பரங்களால்  பாழ் ஆகாமல் தேர்தல் நடக்குதா என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பும் அளவுக்கு அற்புதமாக நடந்தது.  தேர்தல் கமிஷனுக்கு ஒரு ஜே. ஆனால் பொருளாதாரமாவது வெங்காயமாவது என்று நாட்டின் நிதி நிலைமையை பற்றி கவலைப்படாமல்  இலவசங்களை அள்ளி வீசும் கட்சிகளுக்கு தம்ப்ஸ் டௌன். இவர்களுக்கு மக்களை பற்றிய  அக்கறை இல்லை. ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்து மக்களுக்கு பட்டை நாமம் சாத்தலாம் என்பது ஒன்றே குறிக்கோள். பின்னே மு.க. குடும்பம் கொள்ளை அடித்தது போல நாங்கள் சம்பாதிக்கவில்லையே  என்று மற்ற கட்சிகளும் முணுமுணுப்பது நன்றாகவே கேட்கிறது. இலவச டிவி, பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், இலவச வீட்டு மனை, 2 ரூபாய் அரிசி என்று மக்கள் பக்கம் சில சில்லறை இலவசங்களை அள்ளி வீசிவிட்டு பெரிய அளவில் ஊழல் செய்து தனது தலைமுறைக்கு மட்டும் அன்றி தனக்கு பின் வரும் நூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைப்பது என்பது இன்று எல்லா கட்சிகளுக்குமான பொது குறிக்கோள். மின் பற்றாக்குறை காரணமாக இலவசமாக கிடைக்கும் டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதன பொருட்கள் இயங்காது என்பதை பற்றிய கவலை யாருக்கும் இல்லை. மணல் கொள்ளை தடுப்பு, தார் சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை மாநிலம் எங்கும் ஏற்படுத்துதல், நீர் நிலைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் ஆறு குளங்களை தூர் வாருதல், வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி போன்ற பலவற்றில்  ஏதேனும் ஒன்றோ, ரெண்டோ ஊழல் மற்றும் முறைகேடு  இல்லாமல் பூர்த்தி செய்வோம் என்று எந்த கட்சி  சொல்கிறதோ அந்த கட்சிக்கே ஒட்டு என்று மக்கள் ஒன்றுபடுவார்களோ அன்றே தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் வரும். அந்த பொன்னாள் எந்த நாளோ?

சுதந்திரம்
கூண்டு கிளிகள், விலங்குகளை பார்த்து  பரிதாபப்படாதவர் இருக்க முடியாது. சுதந்திரம் என்பது  ஒவ்வொரு உயிரினத்துக்கும் மூச்சு காத்து போன்றது. போர் முடிந்து  இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முள்வேலி முகாமில் அடைந்து கிடக்கும் இலங்கை தமிழர்கள் மிகுந்த பரிதாபத்துக்கு உரியவர்கள் -ஏன்  என்றால் அவர்கள் சுதந்திரத்தை மறந்து, ஒரு வேளை உணவு கிடைத்தால் கூட போதும் என்ற விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பது தான். அடக்கு முறை, உயிர் பயம்,  பாலியல் வன்முறை, முகாம்களில் உள்ள சுகாதாரமற்ற வாழ்கை சூழல், நோய், உணவின்மை, உற்றார் உறவினர்களை  மற்றும் சொந்தங்களை இழந்து நடை பிணங்களாக வாழும் அவலம் என்று இன்னும் விவரிக்க முடியாத துன்ப சூழ்நிலையில் தங்கள் வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். நவீன கண்ணகி சோனியா, கடித  புலி  மு.க. மற்றும் கலி கால ராவணன் ராஜபக்ஷே  என்ற மும்முனை தாக்குதலில் சாவு கூட பரவாயில்லை முள்ளி வாய்க்காலில் நாங்களும் மடிந்திருக்கலாம் என்ற மன நிலைக்கு இன்று மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். தனி மனிதன் ஆயுதம் எடுத்தால் தீவிரவாதி என்று அடையாளம் கொள்ளப்படுகிறார்கள்.சட்டத்தின் வாயிலாக தண்டிக்கபடுகிறார்கள். ஒரு அரசாங்கம் ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொல்வதை உலக நாடுகள் அனைத்தும் மெளனமாக வேடிக்கை பார்க்கின்றன. இன்று வரை போர் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் இல்லை. காலம் தாழ்ந்த நீதி கூட மறுக்கப்பட்ட நீதியே. சரி போனது போகட்டும் - அகதிகளாக வாழும் மக்களை அவர்கள் வாழ்ந்த நிலங்களில் மறு குடியமர்த்துதல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அனைவருக்கும் சம உரிமை வழங்குதல், மக்கள் பிரச்சினைகளை அலசி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதே உண்மையான அமைதிக்கு வழி. அதை விடுத்து தமிழர்களை அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற வழுக்கு பாதையில் பயணிப்பது ஆபத்தானது. ஏனெனில் போராளிகள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். வரலாறு நமக்கு காண்பிக்கும் உண்மை இது. அதிகாரவர்கத்திற்கு இந்த உண்மை எட்டுமா?


கல்யாணமாம் கல்யாணம்
நடிகர் கார்த்திக்கு ஜூலை மாதம் திருமணமாம். வாழ்த்துக்கள். வெளிநாட்டில் படித்து இன்று சினிமா துறையில் சிறந்த இடத்தை பிடித்துள்ள திறமையான இளம் நடிகர். அப்பா அம்மா பார்த்து தேர்வு செய்த பெண்ணை கரம் பிடிக்க போகிறார். நல்லது.  யாரை வேண்டும் என்றாலும் திருமணம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. இருந்தாலும் சில கேள்விகள் எனக்கு எழாமல் இல்லை. முதலில் திருமணம் செய்யும் பெண்ணிற்கு. நல்ல வசதியான, புகழ் வாய்ந்த மற்றும் அழகான படித்த மாப்பிள்ளை. சரி. ஆனால் நடிகர்கள் பல பெண்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டியிருக்கும். கிசு கிசு, யூகங்கள் என்று நடிகர்களை மற்ற நடிகைகளுடன் இணைத்து வரும் செய்திகளை  எதிர்கொள்ள கூடிய துணிச்சல் உள்ளவரா நீங்கள்? ஏனென்றால் இது ஒரு வருடமோ  இரண்டு வருடமோ மட்டும் நடக்கும் விஷயம் அன்று. நடிகர்கள் சினிமா துறையில் இருக்கும் காலம் முழுவதும் இப்படிப்பட்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கும். அது மட்டும் இல்லாமல் இவருக்கு நான் பொருத்தமா, நான் இன்னும் ஒல்லியாக அழகாக இருக்க வேண்டுமா , இந்த நடிகையுடன் chemistry ரொம்ப நல்லா இருக்கே, இவருக்கு என்னை விட இந்த பெண்ணை பிடிக்குமோ என்று பல விதமான சிக்கல்கள் நிறைந்த டென்ஷன் மிகுந்த வாழ்கையை  தேர்வு செய்திருப்பதால் கேட்கிறேன். நடிகர்களின் மனைவிகள் தங்க கூண்டு கிளிகள் தாம். அதில் சந்தேகம் வேண்டாம். கமலஹாசன், பிரஷாந்த்,  சரத்குமார், பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ராமராஜன் என்று திரைத்துறையில் வெற்றி பெற்ற பலருக்கும்  திருமண வாழ்க்கை கை கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட  ட்ராக்   ரெக்கார்ட் உள்ள திரைத்துரையை நம்பி வாழ்கையை பணயம் வைக்கிறாயே அதனால் கேட்கிறேன்.    
கார்த்தி - நீங்கள் வெளி நாட்டில் படித்திருக்கிறீர்கள். உங்களை போன்று திரை துறையில் உள்ளவரை தேர்வு செய்து இருக்கலாம் அல்லது  வெளிநாட்டில் படித்து இந்தியாவில் வாழ்பவரை அல்லது வெளிநாட்டில் வாழ்பவரை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதை விடுத்து உங்கள் தந்தை காட்டும் பெண்ணை மணப்பதன் காரணம் என்ன? இந்தியாவில் உள்ள பெண்களை நான் மட்டம் தட்டுவதாக எண்ண வேண்டாம்.  "ப்ரீ திங்கிங் வுமன்" வேண்டாம்.  உங்களை போன்று திரை துறையில் இருப்பவர் வேண்டாம். குழந்தைகளை வளர்க்கவும், சமைத்து போடவும், நான் சொன்னதை கேட்கவும் கூடிய பெண் வேண்டும் என்று சராசரி ஆண்கள் போல நடப்பதால் இந்த கேள்வி எனக்கு எழுகிறது.

இன்று திருமணங்கள் ஒரே அலைவரிசையில்  உள்ள ஆணும் பெண்ணும் இணையும் பந்தமாக இல்லாமல் - பெற்றோர் விருப்பத்திற்காகவும், பணம், புகழ், அந்தஸ்து என்று ஆடம்பரத்திற்காகவும் செய்யும் சடங்காக மாறிவிட்டது. வாழ்கையில் ஒரு பாதி கடவுள் அமைத்தது. அதாவது நம் பெற்றோரை நாம் தேர்வு செய்வது இல்லை.எது விதித்திருக்கிறதோ அது நமக்கு கிடைக்கும். ஆனால் வாழ்கையின் மறு பாதி நம் கையில். அந்த தேர்வு சரியில்லாமல் போனால் வாழ்க்கை இனிக்காது. நீங்கள் இருவருமே உங்கள் தேர்வு சரியா, இப்பப்பட்ட பெண்ணோடு/ஆணோடு வாழ விருப்பமா/ முடியுமா என்பதை சீர் தூக்கி பார்ப்பது நல்லது. வாழ்க்கை வாழ்வதற்கே. உங்கள் வாழ்க்கையும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.