புதன், மே 30, 2018

ஒரு துரோகத்தின் வரலாறு


இந்தியா சுதந்திரம் வாங்கி 75 வருடம் கூட நிறைவடையவில்லை. அஹிம்சை வழி போராட்டம் செய்த போது திருப்பூர் குமரனை ஆங்கிலேய காவல்துறையினர் லத்தியால் அடித்தே கொன்றனர் என்பதை கேட்டிருப்போம். ஜாலியான்வாலாபாக்  சம்பவத்தில் கூட்டத்தினரிடம் துப்பாக்கி சூடு என்ற எச்சரிக்கை கொடுக்காமலேயே அவர்களை ஆங்கிலேயர்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்பதையும் படித்திருப்போம். ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற பெயரில் நம்முடன் வர்த்தக தொடர்பு கொள்ள வந்த ஆங்கிலேயர் நம்மை ஆண்டவர்களை கொண்டே நம்மை அடிமைப்படுத்தினர் என்பதையும் நாம் நன்கறிவோம். மேலே சொன்ன எந்த விஷயத்தையாவது நீங்கள் மறந்துள்ளீர்களா? அல்லது இந்த சம்பவம் நடந்த போது நான் பிறக்கவே இல்லை என்கிறீர்களா? அப்படியானால் May  22, 2018 அன்று  நடந்த தூத்துக்குடி சம்பவத்தை நினைவு கூர்ந்தால் உங்கள் மறதி தொலைந்து போகும் அல்லது உங்கள் ஞாபகம் கூர் தீட்டப்படும்.

வேதாந்தா என்பது லண்டனை தலைமையிடமாய் கொண்டு செயல்படும் ஒரு வெளிநாட்டு கம்பெனி. அப்படிப்பட்ட வெளி நாட்டு முதலாளிக்காக நம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்தி, மக்களை அடித்து துன்புறுத்தி அவர்தம் உரிமையை நசுக்கி அரச பயங்கரவாதத்தை சென்ற ஒரு வாரமாக நிகழ்த்தி காட்டினர்.எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஸ்டெரிலைட் ஆலையை எதிர்த்தவர்களை கொன்று குவித்து அதனால் எந்த விதமான குற்ற நடவடிக்கைகளுக்கும் இலக்காமல் இருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் அவர்தம் ஏவல்படி செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும்.

நம்முடைய நீதித்துறை இந்த ஆலையை எவ்வாறு பார்க்கிறது? சம்பவம் நடப்பதற்கு முன் தினம் 144 தடை உத்தரவை போடுமாறு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கேட்கிறது . மதுரை நீதி மன்றமும் அப்படியே அனுமதி அளிக்கிறது. அதாவது இன்னொரு நாட்டின் நீதித்துறையிடம் ஒரு அயல் நாட்டு ஆலை கட்டுப்பாடு மிகுந்த கிட்டத்தட்ட எமெர்ஜென்சி போன்ற ஒரு அவசர நிலையை பிரகடனப் படுத்த சொல்கிறது என்றால் நாம் இன்னமும் சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இந்த கேள்விக்கான பதிலும் இந்த வாரம் உங்களுக்கு கிடைத்திருக்கும். நீங்கள் சுதந்திரம் அடைந்த நாட்டில் வாழவில்லை.

பிரிட்டிசாரின்  ஈஸ்ட் இந்தியா கம்பெனி போல வேதாந்தா என்ற வேறொரு கம்பெனி இங்கு சட்டம் போடுகிறது. காலம் வேறாகியிருக்கலாம் காரணம் வேறாகியிருக்கலாம் ஆனால் நம்முடைய எதிரிகள் அன்றும் இன்றும் ஒன்று தான். நம்முடைய அதிகாரிகள், அரசியல்(வியா)வாதிகள் என்று அனைவரும் வழக்கம் போல கையூட்டு, தேர்தல் நிதி பெற்று அப்பாவிகளின் பிணங்களின் மேல் தங்கள் அதிகாரத்தையும் பண பலத்தையும்  நிலைநாட்டி வருகிறார்கள். இப்போது புதிதாக போராட்டத்தை நீர்த்து போக செய்ய ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்துள்ளார்கள். இப்படி சீல் வைப்பது இது நாலாவது முறை.

துப்பாக்கி சூட்டில் எத்தனை பேர் இறந்தார்கள், யார் இந்த துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது, 22 வருடம் 100 நாட்கள் ஒரு தொடர் போராட்டமாக அஹிம்சை வழியில் நின்ற மக்களை ஒருங்கிணைத்தவர்களை இப்படி அநியாயமாக மிக அருகில் இருந்தே சுட்டு வன்மம் தீர்த்த அதிகாரிகள் யார், ஒரு 17 வயது மாணவியை வாயிலேயே  சுட்டு அவளை அநியாயமாக சாகடித்த கொலை வெறியர்கள் யார், சுதந்திர போராட்டத்திற்கு பின் இத்தனை பெண்களை துப்பாக்கி மூலம் கூட்டுக்கொலை செய்த கொடூரர்கள் யார், மக்களை நடு இரவில் வீடு புகுந்து தாக்கிய மிருகங்கள் யார், நாலு வயது குழந்தையை கூட விட்டு வைக்காமல் லத்தியால் அடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தவர் யார், முன்விரோதம் காரணமாக ஒருவரை இந்த போராட்டத்தில் சுட்டு கொன்று விட்டு , இறந்தவரை காலால் உதைத்து எழுந்திரிடா நடிக்காதே என்று நையாண்டி பேசிய காக்கி சட்டைகள் யார், எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் இன்னும் மிக மோசமான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள், எத்தனை பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், இத்தனை சுற்று சூழல் கேட்டினை விளைவித்த வேதாந்தா என்ன விதமான நஷ்ட ஈடு இந்த மக்களுக்கு தரும், ஆலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்திய நிலங்கள் உரியவர்களுக்கு எவ்வாறு மீட்டு தரப்படும், ஆலையின் மூடு விழாவிற்காகவா இத்தனை உயிர்களை பலி ஆக்கியது அரசு அல்லது இந்த தாக்குதல் வேறு எதேனும் காரணங்களுக்காக நடத்தப்பட்டதா என்பதை போன்ற பல விதமான கேள்விகளுக்கு வழக்கம் போல மௌனத்தையே பதிலாக்கி விடும் இந்த அரசு. ஏற்கனவே மக்கள் காலா டிரைலர் பார்த்து தூத்துக்குடி விவகாரத்தை மறந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த வாரம் இந்த பிரச்சனையின் சுவடு கூட இல்லாமல் செய்திருப்பார்கள். ஏற்கனவே ஊடகங்கள் மீது அடக்குமுறை, மின்சார துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, இருட்டில்  போலீசார் நடத்திய அதிகார வெறியாட்டம் என்ற பல நிகழ்வுகளுக்கு முன் இது எம்மாத்திரம்.

அன்றும் இன்றும் நமக்கான எதிரிகள் ஒன்று தான். உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் அதிகார வர்க்கம் இன்றும் பல பெயர்களில் உலாவி வருகிறார்கள். என்ன சொல்கிறீர்கள்- பொருளாதார முன்னேற்றம் வேண்டாமா, வேலை வாய்ப்பு வேண்டாமா என்றால் ஆரோக்கியத்தை இழந்து பெறும் முன்னேற்றம் வேண்டாம். சுற்றுசூழலை இழந்து பெறும் முன்னேற்றம் வேண்டாம். சுத்தமான காற்று, நீர், நிலம் இவற்றை இழந்து பெறும் எந்த முன்னேற்றமும் நீடித்து நிற்காது. ஸ்டெரிலைட் போல எத்தனை கம்பெனிகள் இயற்கை சூழலை மாசு படுத்துகிறதே அவற்றை எல்லாம் மூடத்தான் வேண்டுமா என்றால் மக்கள் அனைவரின் விருப்பம் அது தான் என்றால் அவற்றை மூடுவது என்பது அரசாங்கத்தின் கடமையாகும். எண்ணூரில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெயை அள்ள வெறும் பக்கெட்டுகளை பயன்படுத்திய இந்த அரசாங்கம், இத்தனை ஆண்டுகள் தூத்துக்குடி பகுதியில் சுற்றுசூழல் மாசு உண்டாக காரணமான ஸ்டெர்லைட்டை ஒரு கேள்வி கூட கேட்காத இந்த அரசாங்கம், கூடங்குள அணு உலை திட்டத்தை அப்பகுதி வாழ் மக்களின் விருப்பத்தை மீறி நடத்தி வரும் இந்த அரசாங்கம், காவிரி நீரை பற்றிய சிந்தனை இல்லாமல் மணல் கொள்ளையை வெற்றிகரமாக நடத்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட இந்த அரசாங்கம், அடுத்து மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம், சாகர்மாலா திட்டம் என்று பல திட்டங்களை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும், அப்பகுதி வாழ் மக்களின் விருப்பத்திற்கும் ஏற்ப தான் நடத்தும் என்பதை  எவ்வாறு நம்ப முடியும்.

இந்தியா(தமிழ்நாடு) ஒரு சிறந்த விவசாய நாடாக உலக அரங்கில் கோலோச்ச வேண்டியது . எங்கோ உலகில் ஒரு மூலையில் சொகுசு வாழ்க்கை நடத்தி வரும் பன்னாட்டு முதலாளிகளுக்காக நம் நாட்டு வளங்களை கொள்ளை அடித்து, அதற்கு பிரதிபலனாக அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கொஞ்சம் காசை வீசி எறிந்து, மக்களை கொன்று அவர்தம் உரிமையை நசுக்கி வரும் முன்னேற்றம் தான் முன்னேற்றம் என்றால் அப்படியான முன்னேற்றம் எங்களுக்கு வேண்டாம் என்று தூத்துக்குடி மக்கள் பொட்டில் அறைந்தார் போல பதில் சொல்லி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு பாடம். நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாம் கேள்வி கேட்க தொடங்க வேண்டும். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு வந்தால் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் நியாயம் பிறக்கும். கண்மூடி, வாய்மூடி, காதை மூடி எது நடந்தால் எனக்கென்ன என்று வாழ்ந்தால் நம் மூச்சு காற்று கூட வேறொருவனுக்கு விற்கப்பட்டு விடும் எனபதே நிஜம்.

கடந்த வார சம்பவங்கள் பற்றிய செய்திகளை படிக்க கீழே சொடுக்கவும்.