அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 28, 2011

அணை ஆயுதம் அல்ல



இதிகாசம் மற்றும் புராணங்களில் பல வகையான அஸ்திரங்களை பற்றிய குறிப்புகள்  உண்டு. பாசுபதாஸ்திரம், நாகபாணம் என்று பல பெயர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அந்தந்த மாநில அரசியல்வாதிகளுக்கு பாசுபதாஸ்திரம், நாகபாணம் போல தமிழ்நாட்டு மக்களின் குடி நீர் மற்றும் ஜீவாதாரம் சம்பந்தப்பட்ட அணைகளோ அல்லது நதி நீர் பங்கீடோ ஆகிவிடுகிறது. கர்நாடக மாநிலத்தில் சென்ற முறை தேர்தல் நடந்தபோது எடியூரப்பா ஒகேனக்கல் பிரச்னையை கிளப்பி எப்படி வெற்றி வாகை சூடினாரோ அதே பாணியில் இந்த இடைத் தேர்தலை மனதில் வைத்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி முல்லை பெரியாறு அணை பிரச்னையை கையில் எடுத்துள்ளார். தமிழ் நாட்டில் முல்லை பெரியாறு அணை பாசனத்தால் விளையும் உணவுப் பொருட்கள் கேரள மக்களுக்கும் போய் சேருகிறது. இடுக்கி அணையில் போதிய அளவு நீர்மின் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததாலும், அந்த பகுதியில் உள்ள கேரளாவை சார்ந்த தொழில்கள் மின் உற்பத்தி இன்றி பாதிக்கப் படுவதாலும், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம்  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 155 அடியாக உயர்த்தப்பட்டால் முறையன்றி அணை பகுதியில் கட்டப்பட்ட கேரளாவை சார்ந்த சுற்றுலா விடுதிகள், ரிசார்ட்டுகள் போன்றவை காணாமல் போகும் என்ற அச்சத்தாலும் அணை பலவீனமாக இருப்பதாக கபட நாடகம் ஆடி வருகிறது கேரள அரசு.

Mullaperiyar Dam
முல்லை பெரியாறு அணை
 அணை நிலநடுக்கம் பாதிக்கும் பகுதியில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் ஒரு வேளை அணை உடைந்தால் முல்லை பெரியாரில் இருந்து வெளியேறும் நீரை அதை விட ஏழு மடங்கு பெரிதான இடுக்கி அணையில் தேக்க முடியும். முல்லை பெரியாறு மற்றும் இடுக்கி அணைகளுக்கு இடையே உள்ள குமுளி, ஏலப்பாறா பகுதிகள் முல்லை பெரியாறு அணை மட்டத்தில் இருந்து பல நூறு அடிகள் மேலே இருக்கின்றன. எனவே நீரால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. வெறும் 3 உறுப்பினர் பெரும்பான்மையில் பதவியில் இருக்கும் காங்கிரஸ் அரசு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி இழக்க நேரிடும். பதவி ஆசை காரணமாகவே மடுவை மலையாக்கி இன உணர்வு என்னும் நெருப்புக்கு நெய்விட்டு குளிர் காய்கிறது கேரள அரசு. ரோம் நகரம் எரிந்த போதும் பிடில் வாசித்த நீரோ போல எந்த பிரச்சனை நடந்தாலும் கருத்து சொல்லாத பிரதமர் மன்மோகன் சிங் இந்த பிரச்னையில் தலையிட்டு எந்த சமரச முயற்சியும் எடுக்கப் போவதில்லை. முதலில் பொம்மை பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால் பரவாயில்லை !!!

அணை உடைந்துவிடும் என்று முன்பு கேரள அரசு எழுப்பிய சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு 1980 முதல் 1994 வரை நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழகம் பல கோடி ரூபாய் செலவில் அணையை முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு பலப்படுத்தியது. இந்த உறுதித் தன்மை பல முறை நிபுணர்களின் ஆய்வின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டது. 2 லட்சம் ஏக்கர் பாசனம் மற்றும் 60 லட்சம் தமிழ் மக்களின் குடி நீர் ஜீவதாரத்திற்கு ஆணிவேராக விளங்கும் முல்லை பெரியாறு அணையை வெறும் 5
வருடம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொள்ளை அடிக்க நினைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் இந்த மண்ணில் தோன்றியவர்களா என்ன என்று சந்தேகிக்க மட்டுமே முடிகிறது. சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமையை பெற்றுத் தந்த கல்லணையை கட்டிய கரிகாலன் எங்கே, எந்த தொலை நோக்கும் இல்லாமல் கேவலம் ஆட்சிக்காக பல லட்சம் மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அணையை இடிக்கப் போராடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே.

கேரளா மற்றும் கர்நாடக அரசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கற்று கொள்ள வேண்டியது ஒன்று - தவறே ஆனாலும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பது. அரசியல்வாதிகள் மட்டும் அல்ல அணை பிரச்சனை ஆரம்பித்த பின்பு கேரள திரை உலகை சார்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேரள அரசியல் நிலைப்பாட்டிற்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டார்கள். ஆனால்
அரசியல்வாதியாக தன்னைக் காட்டி கொள்ளும் இளைய தளபதி நடிகர் மருந்துக்கு கூட தமிழ் நாட்டு மக்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்படிப் பட்டவரை தமிழ் நாட்டை காக்க வந்த இந்திரன் சந்திரன் என்று சிலாகிக்கும் கடைக் கோடி ரசிகனுக்கு இது புரிந்தால் சரி.தமிழ்நாட்டில் உள்ள  அரசியல் கட்சிகளும் தனி தனியாக கண்டன அறிக்கை/கூட்டம் என்று நடத்தியதுடன் சரி. ஒன்றிணைந்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த தமிழக அரசியல்வாதிகள் தவறி விட்டனர். 

Unity in Diversity

எடியூரப்பா பாசுபதாஸ்திரம் என்று எண்ணி எய்த ஒகேனக்கல் அம்பு பதவி அளித்தாலும் பதவியை அளித்த சில நாட்களிலே பதவியை பறித்து ஜெயிலுக்கே அனுப்பி வைத்தது. இன்று எடியூரப்பா அரசியலில் இருக்கும் இடமே தெரியவில்லை. கேரளா முதல்வர் உம்மன் சாண்டியும் பிரம்மாஸ்திரம் என்று எண்ணி முல்லை பெரியாறு அணை பிரச்னையை எடுத்துள்ளார். பிரம்மாஸ்திரத்தை எய்து அதை திரும்பப் பெறும் வழி அறியாமல் தண்டிக்கப் பட்ட அஸ்வத்தாமன் கதையை உம்மன் சாண்டி படித்திருக்கவில்லை போலிருக்கிறது.எனினும் கேரள மக்கள் இந்த உண்மையை உணர்ந்து காங்கிரஸ் அரசை வரும் தேர்தலில் தோல்வி அடையச்  செய்து பிரிவினை அரசியல் வளர்ச்சி ஆயுதம் அல்ல அது வீழ்ச்சி ஆயுதம் என்றும் கேரள மக்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு துணை நிற்பவர்கள் எதிரானவர்கள் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டுகிறேன்.

திங்கள், ஜூன் 20, 2011

மாற்றமா ஏமாற்றமா

சிதம்பரம் ஆட்சி போய் மதுரை ஆட்சி வந்தாச்சி. அதாங்க கலைஞர் அய்யா போய் ஜெயலலிதா அம்மா வந்தாச்சே அதை சொல்றேன். வெற்றி திருமகள் கோபாலபுரத்தை விட்டு போயஸ் கார்டன் பக்கம் இடம் பெயர்ந்தாகி விட்டது. மாற்றம் என்ற ஒன்றே நிலையானது என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி அல்ல இது. அய்யா ஆட்சி என்கிற குடும்ப ஆட்சி சகிக்க முடியாமல் சரி அம்மாவாவது ஏதாவது நல்லது செய்ய மாட்டார்களா என்ற மக்களுடைய ஏக்கத்தின் வெளிப்பாடு தான் இந்த மாற்றம்.

சினிமா,டிவி, அரசியல் என்று எந்த துறையையும் விட்டு வைக்காமல் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் வேர் விட்டு படர்ந்திருந்த கருணாநிதி குடும்ப கம்பெனிக்கு "நீங்கள் மக்கள் சேவை ஆற்றியது போதும். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு நீங்கள் பல்லக்கு தூக்கிகளாய் வேலை செய்ததும்  போதும். எல்லா  துறைகளிலும்  ஊழல் செய்து களைத்து இருக்கிறீர்கள்.  ஒய்வு எடுங்கள்" என்று மக்கள் அடித்து சொல்லி இருகிறார்கள். ஏன்னென்றால் அன்பாக சொல்லி இருந்தால்
தி.மு.க- விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைத்து இருக்கும்.

இலங்கை தமிழர் படுகொலையை  பதவிக்காக  கண்டிக்காதது, சினிமா,டிவி,ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் மற்றும் அடக்குமுறை, மின்சார பற்றாக்குறையால்  உற்பத்தி குறைவு மற்றும் வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு,  மணல் கொள்ளை, வட்ட செயலாளர் முதல் மந்திரிகள் வரை ஊழலில் திளைத்தது, கட்டை பஞ்சாயத்து, அடிதடி அரசியல் என்று எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற மாபெரும் அலை இன்று தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி அடித்து விட்டது. தி.மு.க என்பது திரு.மு. கருணாநிதி குடும்ப முன்னேற்ற கழகம் என்று சொல்லும் அளவிற்கு கருணாநிதி குடும்பத்தினர்  யாருமே நினைத்துப் பார்க்க இயலாத வகையில் பல லட்சம் கோடி ஊழல் செய்து பணத்தில் திளைத்ததோடு அல்லாமல் நாட்டின் பாதுகாப்பிற்கே ஊறு விளைவிக்கும் சில தனியார் கம்பனிகளுக்கு 2- ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து நாட்டை அந்நிய சக்திகளுக்கு காட்டிக் கொடுக்கும் வேலையையும் செவ்வனே செய்து முடித்துள்ளனர்  .


சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி - கண்ணகி பாண்டிய சபையில் தன் கால் சிலம்பை உடைத்து மாணிக்கப் பரல்களை காட்டியதும் பாண்டிய மன்னன் தன் தவறை உணர்ந்து - யானே அரசன் யானோ கள்வன் என்று கூறி தன் உயிரை விடுவான். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பின் கருணாநிதி "மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து விட்டார்கள்" என்று மழுப்பல் அறிக்கை ஒன்றை வாசித்ததோடு தனது கடமை முடிந்தது என்று தில்லி சென்று ஊழல் வழக்கில் சிறைப்பட்ட மகளை மீட்க முயற்சி எடுத்து வருகிறார். இலவச திட்டங்கள், பணம் கொடுத்து ஓட்டு வாங்குதல், தேர்தல் பிரசாரத்தில் குஷ்பூ, வடிவேலு போன்ற நட்சத்திர அணிவகுப்பு ஆகியவற்றின் மூலம் மக்களின் கண்களை கட்டி விடலாம் என்ற தி.மு.கா-வின் கனவிற்கு மக்கள்  கை கொடுக்கவில்லை.

எந்த தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்பது வழக்கு. இந்தியா முழுவதும் நடக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அதன் எதிரொலியான லோக்பால் மசோதா பற்றிய விவாதம் ஆகியவற்றின் மூலம் இந்த கூற்றில் சிறிதளவேனும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. மக்கள் தங்கள் தேவைகளை பற்றி தெளிவாக இருக்கிறார்கள் என்பது ஆறுதலான மாறுதல். மின்சாரம், குடி நீர், கல்வி, மருத்துவம், சாலை வசதி போன்ற அடிப்படை பணிகளில் கவனம் செலுத்தாத அரசாங்கத்தை மக்கள் தண்டிக்க தயங்க மாட்டார்கள் என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். சாதி கட்சிகளை புறக்கணித்ததன் மூலம் மக்கள் மன்றத்தில் சாதி அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மதிப்பு என்ன என்பதையும் உணர்த்திவிட்டார்கள்.

புதிய அரசாங்கத்திடம் மக்களின் எதிர்பார்ப்பு இவ்வளவு தான்  - ஊழலற்ற நிர்வாகம் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தல் , அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்படும் சுதந்திரம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியன . ஜெயலலிதா பதவி ஏற்ற நாள் முதல் நடக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது. சட்டசபை வளாக மாற்றம்,  சமச்சீர் கல்வி முறையை கிடப்பில் போட்டது , இலங்கை தமிழர் பிரச்சனையில் ஆக்கப்  பூர்வமான நடவடிக்கையின்மை, மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுடன் இணக்கம் ஆகிய அரசியல் கோமாளி கூத்துகள் ஆரம்பமாகிவிட்டன. எனினும் முதல்வருக்காக போக்குவரத்தை நிறுத்துதல், காலில் விழும் கலாச்சாரம், கட் அவுட், பேனர் போன்ற  ஆடம்பரம் இல்லாதது,  புதிய அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை போன்ற நம்பிக்கை அளிக்கும் விஷயங்களும்  இருப்பது ஆறுதல். எனினும் இது உண்மையான மாற்றமா இல்லை அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில்  அதிக இடங்களை கைப்பற்றும் பொருட்டு மக்களை ஏமாற்ற நடக்கும் கண் கட்டு வித்தையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்றதற்கும் இந்த தேர்தலில் கருணாநிதி தோற்றதற்குமான காரணங்களில் பெரிய வித்தியாசம் இல்லை. வளர்ப்பு மகன் திருமணத்தில் ஆடம்பரம், சசிகலா குடும்ப ஆதிக்கம், டான்சி நில பேர ஊழல் தொடங்கி பல்வேறு இடங்களில் அரசு நிலங்களை தனியாருக்கு குறைந்த விலையில் தாரை வார்த்தது என்று மக்கள் பணத்தை ஜெயலலிதாவும் அவரை சேர்ந்தவர்களும் கொள்ளை அடித்தது தி.மு.க - வினரின் சாதனைகளுக்கு(??) சற்றும் குறைந்தது அல்ல. நெருப்புக்கு பயந்து அடுப்பில் குதித்துள்ளனர் நமது தமிழக வாக்காளர்கள்.

வலுவான மூன்றாம் அணி ஒன்று இல்லாததாலேயே தி.மு.க - வுக்கு 5 வருடம் அ.தி.மு.க - வுக்கு 5 வருடம் என்று பரமபத விளையாட்டை தமிழக வாக்காளர்கள் ஆட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். இந்த வெற்றி   அ.தி.மு.க - வுக்கான ஆதரவு அலை என்று கொள்ளாமல் தி.மு.க - வுக்கான எதிர்ப்பு அலை என்று கொள்வது பொருந்தும். தமிழகம் தன்னை நம்பி வந்தாரை வாழ வைக்கும் மாநிலம். ஒருவரை பிடித்திருந்தால் வேற்று மாநிலத்தவர் என்று உதாசீனம் செய்யாமல் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்பது நமது மக்களின் குணம். அதே போல மறப்போம் மன்னிப்போம் என்று கடந்த கால தவறுகளை மன்னிக்கும் மனோபாவம் உள்ளவர்கள் அதிகம் வாழும் மாநிலம். அதன் எதிரொலியே இன்று ஆட்சி பீடத்தில் அ.தி.மு.க வுக்கான இடம்.

வரலாற்றின் பக்கங்களில் சிறந்த அரசியல் தலைவரை பதிவு செய்ய மக்கள் காத்திருக்கின்றனர். சிறந்த தலைவராக மிளிரும் பொன்னான சந்தர்ப்பம் அ.தி.மு.க தலைமைக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஜெயலலிதா எவ்வாறு கையாள்கிறார் என்பதை பொறுத்தே இந்த மாற்றத்தின் வெற்றியை கணக்கிட முடியும். மக்களையும் வரலாற்றையும்  ஏமாற்றி விடாதீர்கள் ஆட்சியாளரே  !!!