புதன், டிசம்பர் 28, 2011

அணை ஆயுதம் அல்ல



இதிகாசம் மற்றும் புராணங்களில் பல வகையான அஸ்திரங்களை பற்றிய குறிப்புகள்  உண்டு. பாசுபதாஸ்திரம், நாகபாணம் என்று பல பெயர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அந்தந்த மாநில அரசியல்வாதிகளுக்கு பாசுபதாஸ்திரம், நாகபாணம் போல தமிழ்நாட்டு மக்களின் குடி நீர் மற்றும் ஜீவாதாரம் சம்பந்தப்பட்ட அணைகளோ அல்லது நதி நீர் பங்கீடோ ஆகிவிடுகிறது. கர்நாடக மாநிலத்தில் சென்ற முறை தேர்தல் நடந்தபோது எடியூரப்பா ஒகேனக்கல் பிரச்னையை கிளப்பி எப்படி வெற்றி வாகை சூடினாரோ அதே பாணியில் இந்த இடைத் தேர்தலை மனதில் வைத்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி முல்லை பெரியாறு அணை பிரச்னையை கையில் எடுத்துள்ளார். தமிழ் நாட்டில் முல்லை பெரியாறு அணை பாசனத்தால் விளையும் உணவுப் பொருட்கள் கேரள மக்களுக்கும் போய் சேருகிறது. இடுக்கி அணையில் போதிய அளவு நீர்மின் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததாலும், அந்த பகுதியில் உள்ள கேரளாவை சார்ந்த தொழில்கள் மின் உற்பத்தி இன்றி பாதிக்கப் படுவதாலும், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம்  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 155 அடியாக உயர்த்தப்பட்டால் முறையன்றி அணை பகுதியில் கட்டப்பட்ட கேரளாவை சார்ந்த சுற்றுலா விடுதிகள், ரிசார்ட்டுகள் போன்றவை காணாமல் போகும் என்ற அச்சத்தாலும் அணை பலவீனமாக இருப்பதாக கபட நாடகம் ஆடி வருகிறது கேரள அரசு.

Mullaperiyar Dam
முல்லை பெரியாறு அணை
 அணை நிலநடுக்கம் பாதிக்கும் பகுதியில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் ஒரு வேளை அணை உடைந்தால் முல்லை பெரியாரில் இருந்து வெளியேறும் நீரை அதை விட ஏழு மடங்கு பெரிதான இடுக்கி அணையில் தேக்க முடியும். முல்லை பெரியாறு மற்றும் இடுக்கி அணைகளுக்கு இடையே உள்ள குமுளி, ஏலப்பாறா பகுதிகள் முல்லை பெரியாறு அணை மட்டத்தில் இருந்து பல நூறு அடிகள் மேலே இருக்கின்றன. எனவே நீரால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. வெறும் 3 உறுப்பினர் பெரும்பான்மையில் பதவியில் இருக்கும் காங்கிரஸ் அரசு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி இழக்க நேரிடும். பதவி ஆசை காரணமாகவே மடுவை மலையாக்கி இன உணர்வு என்னும் நெருப்புக்கு நெய்விட்டு குளிர் காய்கிறது கேரள அரசு. ரோம் நகரம் எரிந்த போதும் பிடில் வாசித்த நீரோ போல எந்த பிரச்சனை நடந்தாலும் கருத்து சொல்லாத பிரதமர் மன்மோகன் சிங் இந்த பிரச்னையில் தலையிட்டு எந்த சமரச முயற்சியும் எடுக்கப் போவதில்லை. முதலில் பொம்மை பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால் பரவாயில்லை !!!

அணை உடைந்துவிடும் என்று முன்பு கேரள அரசு எழுப்பிய சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு 1980 முதல் 1994 வரை நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழகம் பல கோடி ரூபாய் செலவில் அணையை முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு பலப்படுத்தியது. இந்த உறுதித் தன்மை பல முறை நிபுணர்களின் ஆய்வின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டது. 2 லட்சம் ஏக்கர் பாசனம் மற்றும் 60 லட்சம் தமிழ் மக்களின் குடி நீர் ஜீவதாரத்திற்கு ஆணிவேராக விளங்கும் முல்லை பெரியாறு அணையை வெறும் 5
வருடம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொள்ளை அடிக்க நினைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் இந்த மண்ணில் தோன்றியவர்களா என்ன என்று சந்தேகிக்க மட்டுமே முடிகிறது. சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமையை பெற்றுத் தந்த கல்லணையை கட்டிய கரிகாலன் எங்கே, எந்த தொலை நோக்கும் இல்லாமல் கேவலம் ஆட்சிக்காக பல லட்சம் மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அணையை இடிக்கப் போராடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே.

கேரளா மற்றும் கர்நாடக அரசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கற்று கொள்ள வேண்டியது ஒன்று - தவறே ஆனாலும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பது. அரசியல்வாதிகள் மட்டும் அல்ல அணை பிரச்சனை ஆரம்பித்த பின்பு கேரள திரை உலகை சார்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேரள அரசியல் நிலைப்பாட்டிற்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டார்கள். ஆனால்
அரசியல்வாதியாக தன்னைக் காட்டி கொள்ளும் இளைய தளபதி நடிகர் மருந்துக்கு கூட தமிழ் நாட்டு மக்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்படிப் பட்டவரை தமிழ் நாட்டை காக்க வந்த இந்திரன் சந்திரன் என்று சிலாகிக்கும் கடைக் கோடி ரசிகனுக்கு இது புரிந்தால் சரி.தமிழ்நாட்டில் உள்ள  அரசியல் கட்சிகளும் தனி தனியாக கண்டன அறிக்கை/கூட்டம் என்று நடத்தியதுடன் சரி. ஒன்றிணைந்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த தமிழக அரசியல்வாதிகள் தவறி விட்டனர். 

Unity in Diversity

எடியூரப்பா பாசுபதாஸ்திரம் என்று எண்ணி எய்த ஒகேனக்கல் அம்பு பதவி அளித்தாலும் பதவியை அளித்த சில நாட்களிலே பதவியை பறித்து ஜெயிலுக்கே அனுப்பி வைத்தது. இன்று எடியூரப்பா அரசியலில் இருக்கும் இடமே தெரியவில்லை. கேரளா முதல்வர் உம்மன் சாண்டியும் பிரம்மாஸ்திரம் என்று எண்ணி முல்லை பெரியாறு அணை பிரச்னையை எடுத்துள்ளார். பிரம்மாஸ்திரத்தை எய்து அதை திரும்பப் பெறும் வழி அறியாமல் தண்டிக்கப் பட்ட அஸ்வத்தாமன் கதையை உம்மன் சாண்டி படித்திருக்கவில்லை போலிருக்கிறது.எனினும் கேரள மக்கள் இந்த உண்மையை உணர்ந்து காங்கிரஸ் அரசை வரும் தேர்தலில் தோல்வி அடையச்  செய்து பிரிவினை அரசியல் வளர்ச்சி ஆயுதம் அல்ல அது வீழ்ச்சி ஆயுதம் என்றும் கேரள மக்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு துணை நிற்பவர்கள் எதிரானவர்கள் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டுகிறேன்.

4 கருத்துகள்:

  1. பிரபலமான ஏனைய பதிவுகள்ல மூத்த பிரபல பதிவர் சீமாச்சு இல்லாததைக் கண்டித்து வெளிநடப்புச் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பச்சை மண்ணு1/03/2012 9:11 PM

    பழமைபேசி தங்கள் கருத்துரைக்கு நன்றி. பிரபலமான ஏனைய பதிவுகள் என்னுடைய வலைப்பதிவை சார்ந்தது. அதிக நபர்களால் படிக்கப்பட்ட இந்த வலைத்தளத்தை சார்ந்த கட்டுரைகள் அவை.

    பதிலளிநீக்கு
  3. ஆகா... அப்ப அது பொருட்பிழைங்க!!

    பதிவுகள் - blogs
    இடுகைகள் - posts

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சைமண்ணு1/23/2012 11:30 PM

      பழமைபேசி - சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. நீங்கள் கூறியபடி திருத்தம் செய்துள்ளேன்.

      நீக்கு