புதன், செப்டம்பர் 21, 2022

காலநதிக்கு அப்பால் - கவிதை



சென்ற ஆகஸ்ட் மாத வல்லினச் சிறகுகள் இதழில் வெளிவந்த எனது கவிதை கீழே.  திருமிகு விமலா அருணாச்சலம்,நியூஜெர்சி அவர்களின் கண்கவர் ஓவியம் முகப்புப் படமாக வந்துள்ளது.

https://drive.google.com/file/d/1XOd0eW6HYqAvt4_3BE5zp4BN4GdnRf5v/view?usp=sharing


தலைப்பு: காலநதிக்கு அப்பால் 

இரண்டு கோணல் கோடுகளை

வரைந்து காக்கா என்கிறது

கரிய சரளைக்கற்களை திரட்டி 

புதையலென அன்பாய்த் தருகிறது

உடைந்த வளையலை கண்டெடுத்து

மறக்காமல் மீண்டும் தொலைத்து விடுகிறது 

கடற்கரையின் ஞாபகமாக

கொஞ்சம் மணலை

வாயில் கொண்டு வருகிறது 

எப்போதும் நீரூற்றாய் வழியும்

எச்சிலுடன் ஆசை முத்தம் அளிக்கிறது 

தூரிகையால் யானைக்கு

இறக்கையும்

புலிக்கு பச்சை வண்ணமும் 

அளித்து மகிழ்கிறது 

இயல்பாய் புன்னகைத்து 

அறியாதவர்களுடனும் ஒரு உறவுப் பாலம் அமைக்கிறது

எப்போதோ இறந்த தாத்தாவின்

சாயலில் இருக்கிறதென

பாட்டியை கடந்த நினைவுகளிலும் 

அத்தையிடம் மட்டும் அழாமல் 

ஒட்டிக் கொண்டு

ஆசை மருமகள் என்று பெயரெடுக்கும் போது 

எதிர்காலத்திலும் பயணித்து 

காலநதியின் இருவேறு எல்லைகளை 

முயற்சியின்றி இணைக்கிறது 

நீங்கள் அதைக் குழந்தை என்கிறீர்கள் 

நான் கடவுளுக்கும் மேல் என்கிறேன்

கருணையின் எல்லை என்கிறேன்

உயிரற்ற பொம்மைகளுக்கும்

உயிர் இருப்பதாய் எண்ணி 

சாலப் பரிந்தூட்டும் அன்பை

வேறு எப்படி அழைப்பது?


வெள்ளி, ஜூன் 17, 2022

உரைகல்

இந்த மாத வல்லினச் சிறகுகள் இதழ் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. நான் வரைந்த ஓவியம் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றதும் ஒரு காரணம். இந்த மாத இதழை கீழே உள்ள இணைப்பில் படிக்கலாம்.

https://tinyurl.com/mutujp95

இந்த மாதம் நான் பெரிய சாதனையாளர்கள் அளித்த உரைகளைப் பற்றி ஓர் கட்டுரையை அளித்திருக்கிறேன். அதைக்  கீழே வாசிக்கலாம்.


"உங்களின் உரை, உங்களின் மௌனத்தை விடச் சிறப்பாக அமையப் பாடுபடுங்கள். ஒரு வேளை அது முடியாதென்றால் மெளனமாக இருந்து விடுவதே மேலானது' என்பார் டயநீசியஸ் என்ற கிரேக்க வரலாற்று அறிஞர். 

உரைகள் அறிவுக் கடத்திகள். அவை வெறும் பரப்புரைகள் மட்டும் அல்ல. மனிதர்களை நெறிப்படுத்த கூடிய அல்லது வழி மாற்றக் கூடிய விசையாக மாறும் வல்லமை உடையது.  நெருப்பை வைத்து தீபமும் ஏற்ற முடியும், காட்டையும் அழிக்க முடியும் என்பது போல, உரைகள் பல மனித வாழ்வினை நல்ல வழியிலும் சில நேரங்களில் அல்ல வழியிலும் செலுத்தி இருக்கின்றன.

உலகை மாற்றிய உரைகள் என்றவுடன் "எனக்கு ஒரு கனவு இருக்கிறது" என்ற மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் உரையும், மகாத்மா காந்தி அவர்களின் வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான உரைகளும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அவர்களின் "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீ உன் நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்" என்ற அவரின் பதவியேற்பு உரையும் நமக்கு உடனேயே நினைவிற்கு வரும். சமூக ஊடகங்களின் பெருக்கத்திற்கு பிறகு அரசுப் பதவிகளில் இருப்பவர்களைத் தாண்டிச் சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மனிதர்களின் உரைகளை வலையொளியிலும்  பல்வேறு வலைத்தளங்களிலும் தற்போது பரவலாகப் பார்க்க முடிகிறது.

"மனிதர்கள், நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மறக்கலாம். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மறக்கலாம், ஆனால் அவர்கள் எப்போதும் உங்கள் வார்த்தைகள் அவர்களின் மனதில் எப்படிப்பட்ட உணர்வுகளை விதைத்தது  என்பதை நினைவில்  வைத்திருப்பார்கள்" என்பார் மாயா ஆஞ்சலோ என்ற அமெரிக்க கவிஞர்.

அதை மெய்ப்பிப்பது போல, அமெரிக்கக் கல்லூரிகள், வருடந்தோறும் நடத்தும் பட்டமளிப்பு  விழாவில்தங்கள் கல்லூரியில் பயின்று, தற்சமயம் பெரும் சாதனைகளுக்கு  சொந்தக்காரராய்ச் சமூகத்தில் வலம் வரும்   சாதனையாளர்களுள்  ஒருவரை அழைத்துஅந்த பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தச் சொல்லும். இதே போல வழங்கப்பட்ட பட்டமளிப்பு விழாப் பேருரைகள் ஒவ்வொன்றும் முத்துக்கள். சோர்ந்த நேரத்தில் ஒருவரைத் தூக்கி நிறுத்தும் உற்சாக ஊற்றுகள். அந்த உரைகள் வெறும் வார்த்தைக் குவியல்கள் அல்ல. அவை அந்தச் சாதனை மனிதர்களின் வாழ்வின் சாரம். தன்னுடைய சக மனிதருக்கு அவர்கள் காட்டும் சீரிய பாதை. வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு என்றும் ஒரு கலங்கரை விளக்கமாய் நின்று ஒளித் தருபவை. 

ஆப்பிள் மற்றும் பிக்சார் அனிமேஷன் நிறுவனங்களை அறியாதவர்களே  இல்லை . இந்த இரு நிறுவனங்களின் தலைவராய், ஆப்பிள் மாக்கின்டாஷ் வகை கணினி, ஐபாட், ஐபோன் என்று பல்வேறு புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி பல்வேறு சாதனைகளை  நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனர் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு சிறப்பான உரையை வழங்கினார். "உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நீங்கள் கடைசி நாளாகவே எண்ணுங்கள். ஒரு நாள் நீங்கள் எண்ணுவது உண்மை ஆகும்." என்ற பழமொழித் தன்னை மிகவும் பாதித்ததாக சொல்லும் ஸ்டீவ், ஒவ்வொரு நாளும்  தன்னை அந்தப் பழமொழியே வழி நடத்தியதாக கூறுகிறார். இது என்னுடைய கடைசி நாள் என்பது உண்மையாக இருக்குமானால், நான் செய்யும் இந்தப் பணி எனக்கு எந்த மனநிறைவும் தரவில்லை என்றால், நான் என்னுடைய பாதையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது எனக் கொள்கிறேன். இறப்பு என்பது நாம் அனைவரும் சந்திக்க வேண்டிய ஒன்று என்பதே, என்னை பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் விமர்சனங்களைப் புறம் தள்ளி, சரியான முடிவுகளை எடுக்க வைத்தது. இறப்பின் முன் கோபம், கர்வம், பிறரின் எதிர்பார்ப்பு, பயம் என்ற எல்லாமும்  மறைந்து எது முக்கியமானதோ அது மட்டுமே எஞ்சியிருக்கும்.

நான் கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட போது டாக்டர்கள் எனக்கு உயிர் வாழ மூன்று முதல் ஆறு மாதங்கள் மட்டுமே அளித்திருந்தனர். ஆனால் புற்று நோய்க்கான பரிசோதனையின் போது எனக்கு வந்துள்ளது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த கூடிய ஒரு வகைப் புற்றுநோய் என்று தெரியவந்தது. அறுவை  சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இன்று நான் உங்களின் முன் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். மரணத்திற்கு வெகு அருகில் சென்று மீண்டவன் என்ற முறையில் சொல்கிறேன், உலகில் உங்களுக்கான காலம் மிகவும் குறைவு. எனவே வேறு ஒருவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையை வாழாதீர்கள். மற்றவரின் எதிர்பார்ப்போ அல்லது அவர்களின் ஒப்புதலோ உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று.

நான் தலைமை அதிகாரியாக பணிபுரிந்த ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே ஒரு கட்டத்தில் வெளியேற்றப்பட்டேன். என்னுடைய வாழ்க்கையில் அடுத்தது என்ன ஒரு தெரியாதபுதிரான இடத்தில என்னை வாழ்க்கை நிறுத்தி இருந்தது.  ஆனால் அந்த இடத்திலேயே நான் என்னைத் தேங்கவிடவில்லை. பிக்சார் என்ற அனிமேஷன் படம் எடுக்கும் ஒரு நிறுவனத்தை தொடங்கினேன். இந்த புதிய தொடக்கம், அழுத்தம் நிறைந்த பெரும் பொறுப்புகளை  ஏற்றிருந்த சூழலில் இருந்து என்னை விடுவித்துஓர் ஆரம்ப நிலைத்  தொழில் முனைவராக ஒரு புதிய தொடக்கத்தை அளித்தது. பல புதிய விஷயங்களை தோல்வி பற்றிய எந்த தயக்கமும் இல்லாமல் அறிய முடிந்தது. நான் ஏற்றுக் கொண்ட பணியை மிகவும் நேசித்ததாலேயே இந்த மாற்றம் சாத்தியமானது. நீங்கள் பார்க்கும் வேலைக்காக உங்களின் வாழ்வில் ஒரு பெரிய பகுதியை செல்வழிக்கிறீர்கள். எனவே நீங்கள் பார்க்கும் வேலையை உங்களுக்கு கட்டாயம் பிடித்த ஒன்றாக அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ரசித்து,அனுபவித்து செய்யும் வேலைக் கிடைக்கும் வரை தேடிக் கொண்டே இருங்கள். எக்காரணம் கொண்டும் நீங்கள் பிடிக்காத ஒரு வேலையைச் செய்து உங்கள் கனவுகளை இழக்காதீர்கள்.

 


வாழ்க்கையை முன்னோக்கி மட்டுமே வாழ முடியும். ஆனால், வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எனவே நீங்கள் செல்லும் பாதையில் எதிர்ப்படும் தோல்விகள், புறக்கணிப்புகள், அவமானங்கள் அனைத்தும் உங்களின் குறிக்கோளை நோக்கி உங்களை செலுத்தும் ஓர் உந்து சக்தியாகவே எண்ணிக் கொள்ளுங்கள். எதையும் அறிந்து கொள்ளக் கூடிய தணியாத அறிவு தாகத்தையும், புதிய விஷயங்களைத் தயங்காமல் செய்து பார்க்கக் கூடிய ஒரு மனநிலையும் வளர்த்துக் கொண்டால் மாபெரும் வெற்றிகள் சாத்தியமாகும் என்று அவர் மாணவர்களுக்கு நிகழ்த்திய உரை, வாழ்வின் எல்லா காலகட்டத்திலும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வரிகள் என்றால் அது மிகை இல்லை.

ஜிம் கேரி மிகச் சிறந்த அமெரிக்க நடிகர்."மாஸ்க்", "ப்ரூஸ் ஆல்மைட்டி', 'லையர் லையர்', 'தி ட்ரூமன் ஷோ' போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தவர். காமெடி நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்து வாங்கும் அவர் ஒரு சிறந்த பேச்சாளரும் கூட. ஒரு நடிகரான என்னால் இத்தனை ஆழமாக, உங்களைக் கவரும் வகையில் பேச முடிகிறது என்பதே உங்களுக்கு புதிதான ஒன்றாக இருக்கும் என்று சுய பகடியுடன் தொடங்கும் உரையை, அவர், மகரிஷி சர்வதேசப் பல்கலைக்கழத்தில், மேலாண்மை பயின்று பட்டம் பெறும் மாணவர்களிடேயே, 2014 ஆம் ஆண்டு நிகழ்த்தினார். நான்  எல்லை இல்லாத ஆற்றல் உள்ளவன்.  ஜிம் கேரி என்பவர் இந்த உடல் மட்டும் அல்ல. இந்த உடலைத் தாண்டி இருக்கும் அனைத்தும் இறைவனின் வடிவம் என்பதால் நானும் எல்லையில்லாதவன் என்பதை என்னால் உறுதியாகக்  கூற முடியும்.

என்னுடைய தந்தை ஒரு காமெடி நடிகராக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். ஆனால் காமெடியனாக தான் வெற்றி பெறுவோம் என்று அவர் எண்ணவில்லை. அதனால் அவர் தன்னுடைய விருப்பத்தை பின் தள்ளி ஒரு கணக்கராக பணியில் சேர்ந்தார். ஒரு நாள் அவருடைய வேலை பறி போனது. அதனால் நானும் எனது குடும்பத்தாரும் மிகுந்த வறுமையான சூழலில்  இருக்க நேர்ந்தது.  என்னுடைய தந்தையின் வாழ்வில் இருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டேன், அதில் முக்கியமானது, உங்களுக்கு பிடிக்காத ஒரு பணியில் நீங்கள் தோல்வி அடைய முடியும் என்றால், நீங்கள் ஏன் உங்களுக்குப் மிகவும் பிடித்த பணியைத் தேர்ந்தெடுத்து அதைச் செய்யக் கூடாது என்பதாகும். என்னுடைய தந்தையின் அன்பும், நகைச்சுவை உணர்வும் எனக்கும், என் குடும்பத்தார்க்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்த ஒன்று. எனவே நானும் என்னைச் சுற்றி உள்ள மனிதர்களை மகிழ்விக்க  நகைச்சுவையைத் தேர்ந்தெடுத்தேன்.

 

என்னுடைய வீட்டிற்கு வரும் உறவினர்களைச் சிரிக்க வைக்க, அவர்கள் என் வீட்டிற்கு வரும் போது மாடிப்படியில் இருந்து உருண்டு வருவேன். அவர்கள் ஆச்சரியத்துடன்  என்ன நடந்தது என்று கேட்கும் போது, இப்போது நிகழ்ந்ததை நாம் மறுமுறைப் பார்க்கலாம் என்று கூறி, நான் மீண்டும் மேலிருந்து மிக மிக மெதுவாக உருண்டு வருவேன். என்னுடைய தந்தை என்னுடைய நகைச்சுவை உணர்வை தனக்கு கிடைத்த இரண்டாம் வாய்ப்பாகவே எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டார். பிறரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதே நான் இந்த உலகத்திற்கு செய்யக்கூடிய  சிறந்த பணியாக  இருக்க முடியும் என்று,  நான் அந்தப் பாதையையே  தேர்ந்தெடுத்தேன். நீங்கள் உங்களுடைய வாழ்வில் எந்த முறையில் இந்த உலகிற்கு சேவையாற்ற  விரும்புகிறீர்கள்? உங்களது எந்தத் திறமை உங்களால் இந்த உலகத்திற்கு பயன் தர முடியும் என்று  நீங்கள் கருதுகிறீர்கள்? இந்த உலகத்தில் மிகவும் விலைமதிக்க முடியாத ஒன்று, உங்களின் இருப்பின் மூலம், நீங்கள் அடுத்தவர் மேல் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதே.

நீங்கள் சம்பாதித்த, சேர்த்து வைத்த அனைத்தும் காலப் போக்கில் ஒரு நாள் உங்களை விட்டு நீங்கி விடலாம். உங்களின் எண்ணங்கள் மட்டுமே எப்போதும் உங்களின் கூட வரும். எனவே உயர்வான எண்ணங்களையே நீங்கள் சிந்தியுங்கள். சக மனிதர்களின் அங்கீகாரத்தை விரும்பினால் உங்களால்  உயர்ந்த இடங்களை அடைய முடியாது.  நீங்கள் ஒரு சூரியனைப் போல தனித்தன்மையுடன் ஒளிவீசப்  பிறந்தவர்கள். எனவே பிறரின் அங்கீகாரத்தை பெற உங்களின் தனித்தன்மையை ஒரு போதும் இழந்து விடாதீர்கள்.

 

புகழும், செல்வமும் பெற உழைக்கும் எவரும் அதை சீக்கிரம் அடைய வேண்டும் என்று நான் அடிக்கடிச் சொல்லுவேன். ஏன் என்றால் அதை பெற்ற பின்பே அவர்களால் நீடித்த அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் அத்தகைய செல்வத்தாலோ, புகழாலோ எந்த விதப் பயனும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். நீங்கள் எதை அடைந்தாலும், அதை விட ஒரு பெரிய வெற்றியை அடைபவர் எவரோ ஒருவர் இந்த உலகத்தில் இருக்கத்தான் போகிறார்கள். உங்களின் எண்ணங்கள் அடுத்ததாக இப்படிப்பட்ட வெற்றியை நோக்கி  உங்களைத் துரத்தும். ஆனால் உங்களை விடச் சிறந்தவர் ஒருவர், உங்களின் இருப்பை விட சிறந்த வெற்றி எதுவும் இந்த உலகத்தில் இல்லை. எனவே நீங்கள் விரும்பிய எதுவோ அதை நோக்கி உழைக்கத் தொடங்குங்கள். அந்த எண்ணம் எப்படி நிறைவேறும் என்பதைப்  பற்றி எல்லாம் கவலைப் படாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை என்பது உங்களுக்கு நடக்கும் ஒன்று அல்ல. உங்களுக்காகவே நடக்கும் ஒன்று . இரண்டு பாதைகள் இந்த உலகத்தில் உண்டு, ஒன்று அன்பினால் தேர்ந்தெடுக்கப்படுவது. இன்னொன்று பயத்தினால் தேர்ந்தெடுக்கப்படுவது. நீங்கள் பயத்தை விடுத்து, உங்களை நீடித்த மகிழ்ச்சியிலும், எல்லையற்ற அன்பிலும் ஆழ்த்தக் கூடிய பாதையையே தேர்ந்தெடுங்கள். இப்படிப்பட்ட வலிமையான நம்பிக்கை விதைகளை நமது மனதில் விதைக்கும், இந்த உரையை  வலையொளியில் பல லட்சம் பார்வையாளர்கள் கேட்டிருக்கிறார்கள் என்பதே இந்த உரையின் வெற்றிக்குச் சான்று. 

 

"உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கையை உங்களால் மாற்ற முடியாது. ஆனால் அதை எப்படி வாழ வேண்டும் என்பது நீங்கள் மாற்றக் கூடிய ஒன்றே" என்று தன்னுடைய உரையை ஆரம்பிக்கிறார் ராண்டி பாஷ் என்ற கல்லூரிப்  பேராசிரியர். கார்னகி மில்லன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் தாங்கள் இறக்கும் முன் ஒரு கடைசி உரையை வழங்கும் வழக்கம் உள்ளது. ராண்டி பாஷும் தான் இறக்கும் முன் வழங்கிய "கடைசி உரை" அவருடைய இறுதி நாட்களில், அவருக்கு ஒரு திருப்பு முனையை அளித்தது என்றே சொல்லலாம். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு, குறிப்பாக "தி ஓப்ரா வின்பிரி ஷோ', ஏபிசி தொலைக்காட்சியில் வரும் "டயான் சாயர்" நிகழ்ச்சி, பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் கால்பந்து அணியுடன் விளையாடும் வாய்ப்பு, மிகவும் புகழ் வாய்ந்த ஸ்டார் ட்ரெக் என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு, நியூயார்க் டைம்ஸ் வெளியிடும் அதிக விற்பனை ஆகும் புத்தக வரிசையில் கிட்டத்தட்ட 85 வாரங்கள் ராண்டி எழுதிய "கடைசி உரை" (The Last Lecture) என்னும் புத்தகம் இடம் பெற்றது, அமெரிக்கச் செனட் சபையில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக அவர் உரையாற்றியது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.


ஆனால் இந்தச் சாதனை அனைத்திற்கும் வித்திட்டது 2007 ஆம் ஆண்டு ராண்டி அவரது பல்கலைக்கழக மாணவர்களிடையே வழங்கிய உரை ஆகும்.  கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட வாழ்வதற்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டவரின் மன நிலை எவ்வாறு இருக்கும். சாமானிய நபர் என்றால் மிகவும் மனச்சோர்வுற்று அடைந்திருப்பர்.  ஆனால் தான் இறப்பதற்கு ஐந்து மாதங்கள் முன்பு ராண்டி மிகுந்த உற்சாகமாக வழங்கிய  உரை இது. நீங்கள் இந்த உலகத்தை விட்டுச் செல்லும் முன் இந்த உலகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்பும் கடைசி செய்தி என்ன? நாளை இந்த மண்ணில் நீங்கள் இல்லையென்றால் உங்களை இந்த உலகம் எதைக் கொண்டு நினைவில் கொள்ளும்? என்ற இரண்டு முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தி இந்த உரை வடிவமைக்கப்பட்டிருந்தது.

நீங்கள் அடைய விரும்பும் குறிக்கோளை எட்டும் முன் தடை என்ற பெரிய சுவர் உண்டாகும். அந்தச் சுவர் உங்களை அந்த லட்சியத்தையே அடைய முடியாமல் தடுக்க அல்ல. நீங்கள்  அந்த இலட்சியத்தை எவ்வளவு அதிகம் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டவே உண்டான ஒன்று. எனவே தோல்விகளைக் கண்டோ, தடைகளைக் கண்டோ துவண்டு விடாதீர்கள். தயங்காமல் முன்னேறிச் செல்லுங்கள் என்று உற்சாகம் ஊட்டுகிறார் ராண்டி.  அவர் தான் சிறு வயது முதல் அடைய விரும்பிய பல்வேறு கனவுகளைப் பட்டியலிடுகிறார்.  புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில் (Zero Gravity) இருத்தல்தேசிய கால்பந்து அணியில் விளையாடுதல்உலக கலைக்களஞ்சியம் என்னும் புத்தகத்தில் எழுதுதல், டிஸ்னி நிறுவனத்தில் ஒரு வடிவமைப்பாளராக சேருதல் என்று சிறியதும் பெரியதுமான கனவுகளை, தன்னுடைய முயற்சியாலும் கடின உழைப்பாலும் எப்படி  எட்டினார் என்பதையும் சுவாரசியத்துடனும், நகைச்சுவையுடனும் கூறுகிறார்.

உங்களைச் சுற்றி இருப்பவர்களைக் ஒருபோதும் குறைவாக எடை போடாதீர்கள். என்றாவது ஒரு நாள் அவர்கள் தன்னுடைய செய்கையின் மூலம் உங்களை கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்துவார்கள். இது நாள் வரை அவ்வாறு நடக்கவில்லை என்றால், நீங்கள் அவருக்கான நேரத்தை தரவில்லை என்பது மட்டுமே பொருள். புதிதாக ஏதோ ஒன்றைத்  தொடங்கும் போது எதிர்ப்புகளும், சிரமங்களும் வந்தே தீரும். ஆனால், அதை எதிர் பாருங்கள், எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய கனவுகள் மற்றும் ஆசைகள் நிறைவேறிய பிறகு நான் கற்றதை மற்றவரும் கற்பிக்கும் நோக்கில் தயாரித்த மென்பொருளைக் இன்று 10 சதவிகித அமெரிக்கப் கல்லூரிகளில் பயன்படுத்துகிறார்கள். என்னுடைய வாழ்நாள் சாதனைகளுள் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். உங்கள் குழந்தைகள், அவர்கள் செய்ய விரும்புவதைச் செய்ய அனுமதி கொடுங்கள். குழந்தைகளுக்கு விலையுயர்ந்த பொருட்களை அளிப்பதற்கு பதிலாக அவர்களுடன் உங்கள் விலைமதிப்பில்லாத நேரத்தைச் செலவு செய்யுங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்தால் இன்முகத்தோடு  ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பவர் உங்களின் மேல் அக்கறை கொண்டுள்ளதால் மட்டுமே அவற்றை கூறுகிறார் என்பதை நினைவில் நிறுத்துங்கள். எதைப் பற்றியும் குறைபட்டுக் கொள்வது  தேவையற்றது. அதற்கு பதிலாக முன்பை விட அதிகம் உழையுங்கள். ஜாக்கி ராபின்சன் என்ற புகழ்வாய்ந்த கறுப்பின அடிப்பந்தாட்ட விளையாட்டு வீரரின் விளையாட்டு ஒப்பந்தத்தில், அவர் மீது எவரேனும் காறி உமிழ்ந்தால் கூட, அவர் அதைப் பற்றி புகார் ஏதும் கூறக் கூடாது என்ற ஒரு விதி எழுதப்பட்டிருந்தது. அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக தன்னை நிலைநிறுத்த கடின உழைப்பும், விமர்சனங்களை புறம் தள்ளும் மன உறுதியும் அவருக்கு உதவியது என்றால் அது மிகை இல்லை. எந்த ஒரு துறையிலாவது நிபுணத்துவம் பெறுங்கள். அஃது உங்களை விலை மதிப்பில்லாதவராக மாற்றும். உழைப்பை நம்புங்கள். உழைப்பும், வாய்ப்பும் சந்திக்கும் புள்ளியே அதிர்ஷ்டம் என்பதாகும். அதிர்ஷ்ட தேவதையை அருகில் நிறுத்தும் கடின உழைப்பை ஒரு போதும் கைவிடாமல் இருங்கள். இந்த உரை நான் எப்படி வாழ்ந்தேன், என்னுடைய கனவுகளை எப்படி அடைந்தேன், மற்றவர்களின் கனவினை நிஜமாக்க நான் எங்கனம் உழைத்தேன் என்பதைப் பற்றியதல்ல, இந்த உரை என்னுடைய குழந்தைகளுக்கானது என்று தன்னுடைய மூன்று குழந்தைகளின் புகைப்படத்தோடு, ராண்டி அந்த உரையை முடிக்கும் போது கலங்காத கண்களே அந்த அரங்கத்தில் இல்லை. 

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஓப்ரா வின்பிரி, இலான் மஸ்க், சுந்தர் பிச்சை, நடிகர் டென்சல் வாஷிங்டன், ஷோண்டா ரைம்ஸ், காமெடி நடிகர் வீர் தாஸ் என்று அனைவரும் கேட்க வேண்டிய பல்வேறு அருமையான உரைகள் வலைத்தளத்தில் உள்ளன.     

அரங்கில் பேசப்படுபவை அனைத்தும் உயர்ந்த உரைகள் ஆகிவிட முடியாது. உதட்டில் இருந்து வரும் அழகான வார்த்தைகளை விட உள்ளத்தில் இருந்து வரும், அனுபவ வார்த்தைகள் பொதிந்த உரைகளே காலத்தைக்  கடந்தும் நிற்பவை. நல்ல உரைகள் கேட்பவருக்கு உத்வேகம் தருவதோடு மட்டும் அல்லாமல்   எல்லா மனிதர்களுக்கும் பயனுள்ள ஏதேனும் ஒரு செய்தியையாவது விட்டுச் செல்ல வேண்டும்.  ஒட்டுமொத்த மனித இனத்தின் முதிர்ச்சியை ,மேன்மையைக் காட்டும் காலக் கண்ணாடியாகவே உரைகள் அமைவதால், அவற்றை உரைகல் என்று கூறுவது கூட சாலப் பொருத்தமாக உள்ளது.


சனி, ஏப்ரல் 16, 2022

வெற்றிக்கு ஓர் எளிய வழி

 



மார்ச் 2022 வல்லினச் சிறகுகள் இதழில் நான் எழுதிய கட்டுரை. வல்லினச் சிறகுள் இதழை முழுமையாக படிக்கச் கீழே சொடுக்கவும்.

https://tinyurl.com/44sku8dc



"உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகத்தைப் பாருங்கள். யாராலும் அசைக்க முடியாத, வீழ்த்த முடியாத ஒரு இடமாகத் தென்படும். ஆனால் உலகம் உண்மையில் அப்படிப்பட்டதல்ல. சரியான இடத்தில் ஒரு சின்ன அழுத்தம் கொடுத்தால் இந்த உலகினை எளிதாக உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்க முடியும்" என்னும் மந்திர வார்த்தைகள் மூலம் நம்மைத் தன் வசப்படுத்துகிறார் மால்கம் க்ளாட்வெல் என்ற கனேடிய எழுத்தாளர். Blink(பிளிங்க்), அவுட்லையர்ஸ்(Outliers), டாக்கிங் டு ஸ்ட்ரெஞ்சர்ஸ் (Talking to Strangers) எனப் பல வெற்றிப் புத்தகங்கள் எழுதியுள்ள இவரின் பேச்சைக் கேட்க நாற்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் வரை தருவதற்குப் பல முன்னணித் தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இவரின் முதல் புத்தகமான "Tipping Point" (டிப்பிங் பாயிண்ட்) என்ற புத்தகம் 2000-மாவது ஆண்டு வெளியானது. ஒரு சின்னச் சிந்தனை எப்படிக் காட்டுத்தீ போலப் பரவ முடியும், அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பதற்கு என்ன விதமான காரணிகள் அல்லது மனிதர்கள் தேவை, அப்படிப் பரவக் கூடிய அந்த யோசனை என்ன தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பல உதாரணங்களுடன் பேசுகிறது இந்தப் புத்தகம். ஒரு புதிய சிந்தனை அல்லது ஒரு சித்தாந்தம் வெற்றிகரமாக மாறும் அந்தப் புள்ளியை இவ்வியக்கப் புள்ளி(Tipping Point) அல்லது மாறுநிலைப் பொருண்மை(critical mass) என்று சொல்கிறார் மால்கம். உதாரணமாகப் படவரியை (Instagram) எடுத்துக் கொள்ளுங்கள்.2012 ஆம் ஆண்டு வரை மிகவும் சீரான வளர்ச்சியைக் கொண்டிருந்த இந்த நிறுவனம், பிப்ரவரி 2012 ஆம் ஆண்டு திடீரென்று அதீத வளர்ச்சி அடைய ஆரம்பித்து இன்று கிட்டத்தட்ட 100 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஒரு பனிக்கட்டியை ஒரு அறையில் வைத்து விட்டு அந்த அறையின் வெப்ப நிலையை ஒவ்வொரு டிகிரி ஃபாரன்ஹீட்டாக அதிகப்படுத்துங்கள். இருபத்தி ஒன்பது டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப அளவில் பனிக்கட்டி அப்படியே தான் இருக்கும். முப்பது டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலும் பெரிய மாறுதல் இருக்காது. முப்பத்தி ஒன்று டிகிரி ஃபாரன்ஹீட்டிலும் எந்த ஒரு மாற்றமும் நேராது. ஆனால் வெப்ப நிலை முப்பத்தி இரண்டு பாரன்ஹீட்டைத் தொட்டவுடன் பனிக்கட்டி உருகி நீராக மாறி விடும். பனிக்கட்டி நீராக மாறும் இந்த மாற்றம் திடீரென்று முப்பத்தி இரண்டு ஃபாரன்ஹீட்டில் நிகழ்ந்த மாற்றம். இப்படியாக, ஏதோ ஒரு நிகழ்வு, சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவும். ஒரு விஷயம் மெல்ல மெல்லப் பரவி, திடீரென்று கட்டுக்கடங்காத வேகத்தில், எல்லார் எண்ணங்களிலும் பரிணமிக்கும் அந்தத் தருணமே, இவ்வியக்கப் புள்ளி ஆகும். 

  

1990-களில் ஹஷ் பப்பீஸ் என்ற ஒரு வகைக் காலணிகள் வருடத்திற்கு 3 லட்சம் காலணிகள் மட்டுமே விற்றன. காலணி விற்பனை பெரும்பாலும் சிறிய ஊர்களிலும், சின்னச் சின்ன வணிக வளாகங்களிலும் மட்டுமே நடந்தது. இந்தக் காலணிகளை உற்பத்தி செய்யும் உல்வரைன் (Wolverine) என்ற நிறுவனம், இந்தக் காலணியின் உற்பத்தியை நிறுத்தி விடலாமா என்று யோசித்து வந்தது. 1994 ஆம் ஆண்டு இறுதியில் நியூயார்க் நகர வீதிகளிலும், பேஷன் அரங்குகளிலும் மீண்டும் இந்த வகைக் காலணிகள் உலா வரத் தொடங்கின. உடை வடிவமைப்பாளர்களும், பதின்பருவ வயதினரும், பேஷன் மாடல்களும் இந்த வகைக் காலணியைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் 1995 ஆண்டு இறுதியில் 4 லட்சத்து முப்பதாயிரம் ஹஷ் பப்பீஸ் காலணிகள் விற்றுத் தீர்ந்தன. அதற்கு அடுத்த வருடம் இந்தக் காலணிகள் விற்பனை நான்கு மடங்கு ஆனது. 1996 ஆம் ஆண்டு லிங்கன் மையத்தில் நடைபெற்ற ஆடை வடிவமைப்பாளர்களுக்கான விருது நிகழ்ச்சியில் ஹஷ் பப்பீஸ் நிறுவனத்திற்குச் சிறந்த காலணிகளுக்கான பரிசு வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்ற, அந்த நிறுவனத்தின் தலைவரே, இந்த விருதுக்காகத் தனது நிறுவனம் எந்த வித பிரத்யேக முயற்சியும் எடுக்கவில்லை என்று பின்னர் உரைத்தார். ஈஸ்ட் வில்லேஜ் மற்றும் சோஹோ போன்ற நியூயார்க் பகுதிகளில் சில இளைஞர்களும் யுவதிகளும், யாரும் பயன்படுத்தாத காலணிகள் என்ற வகையில், ஹஷ் பப்பீஸ் காலணிகளை அணிய ஆரம்பித்த பின்னரே ஹஷ் பப்பீஸ் காலணிகளைப் பலரும் விரும்பி அணிய ஆரம்பித்தனர். இவ்வாறு புதிய ஒரு பேஷன் அல்லது ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவிக்கக் காரணமான மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழும். இவர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகிறார் மால்கம்.

முதல் வகை மனிதர்களை இணைப்பர்கள்(Connectors) என்றும், இரண்டாம் வகை மனிதர்களைத் துறைசார் நிபுணர்கள்(Mavens) என்றும் மூன்றாம் வகை மனிதர்களை விற்பனையாளர்கள் (Salesmen) என்றும் அழைக்கிறார் மால்கம். 1775 ஆம் ஆண்டுப் பிரிட்டனுக்கு எதிரான அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பால் ரிவீர் மற்றும் ஜோசப் வாரன் ஆகிய இரு நண்பர்களுக்கும், பிரித்தானியப்  படைகள் பாஸ்டன் நகருக்கு அருகில் உள்ள லெக்சிங்டன் என்ற நகரத்தை அடைந்து அங்கு உள்நாட்டுப் போரைத் தலைமையேற்று நடத்தி வரும் ஜான் ஹான்காக் மற்றும் சாமுவேல் ஆடம்ஸ் ஆகியோரைக் கைது செய்து பின்னர் அங்கிருந்து கான்கார்ட் என்னும் நகரத்தை அடைந்து, அங்கே உள்நாட்டுப் போருக்கான ஆயுதங்களைச் சேமித்து வைத்திருக்கும் ஆயுதக் கிடங்கை அழிக்கத் திட்டம் இருப்பதாக, ஓர் உறுதியான தகவல் தெரிய வந்தது. அந்த நண்பர்கள் இருவரும் உள்நாட்டுப் படைகளுக்கு இந்தத் தகவலை தெரிவிப்பதற்காக உறுதி பூண்டனர். பால் ரிவீர், பாஸ்டன் நகரில் இருந்து இரவு பத்து மணிக்கு கிளம்பி, வடமேற்குத் திசையில் ஒரு குதிரையின் மீது பயணித்தார். பால் ரிவீரின் நள்ளிரவுப் பயணம் என்று அமெரிக்க வரலாற்று ஏடுகளில் இடம் பெற்று அமெரிக்க உள்நாட்டுப் போர் துவங்கக் காரணியாக இருந்ததாக, இந்தப் பயணம் வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுகிறது. பால் ரிவீர் வழியில் இருந்த சார்ல்ஸ்டௌன், மெட்போர்ட், நார்த் கேம்பிரிட்ஜ், மெனோடோமி போன்ற பல்வேறு நகரங்களுக்குச் சென்று அங்குள்ள உள்ளூர்த் தலைவர்களுக்குப் பிரித்தானியப் படைகள் வரும் செய்தியைத் தெரியப்படுத்தினார். மக்களை ஆயத்தம் செய்யத் தேவாலய மணிகளும், போர் முரசுகளும் கொட்டப்பட்டன. அடுத்தடுத்த ஊர்களுக்குச் செய்தியை தெரிவிக்கும் பொருட்டு வீரர்கள் அனுப்பப்பட்டனர். இதனால் பாஸ்டனில் இருந்து நாற்பது மைல் தொலைவில் இருந்த ஆன்டோவர் நகருக்குப் பாலின் செய்தி, இரவு ஒரு மணிக்குத் தெரியவந்தது. காலை ஐந்து மணிக்குள் பாஸ்டனில் இருந்து அறுபது மைல் தொலைவில் இருந்த ஆஷ்பி நகருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது. அடுத்த நாள் காலை கான்கார்டு நகருக்குள் நுழைந்த பிரித்தானியப் படைகள் தோற்கடிக்கப்பட்டு, அமெரிக்கப் புரட்சிக்கான வித்து அங்கே விதைக்கப்பட்டது. எப்படி ஒரு நோய்த் தொற்று வேகமாகப் பரவுமா, அது போல ஒரு செய்தியைக் கொண்டு செல்லும் நபரைப் பொறுத்து, அந்தச் செய்தி, காட்டுத்தீ போலப் பரவக்கூடும். அதே இரவில், பாஸ்டனில் இருந்து கிழக்கில் அமைந்துள்ள ஊர்களுக்குப் பிரித்தானியப் படைகள் வரும் செய்தியைக் கொண்டு சென்ற வில்லியம் டாஸ் என்பவரின் செய்தி இந்த அளவு வேகமாகப் பரவவில்லை. செய்தியின் தன்மை ஒன்றாக இருந்தாலும் பால் ரிவீரின் செய்தி ஏற்படுத்திய அதிர்வலையை, வில்லியம் டாஸ்சின் செய்தி எதனால் ஏற்படுத்தவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு.

 

1960-களில் ஸ்டான்லி மில்கிராம் என்ற உளவியல் நிபுணர் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார். மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் எப்படி இணைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறியும் இந்த ஆராய்ச்சி வழி, ஒரு நபர் இன்னொரு நபருடன் அதிகபட்சம் ஐந்து முதல் ஆறு நபர்களால் இணைக்கப்படுகிறார் என்பதை நிறுவினார். உதாரணமாக, ஒரு பெரிய தொழிலதிபரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரை உங்களுக்கு நேரடியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் நண்பரின், நண்பருக்கு அல்லது உறவினருக்கு அவரைத் தெரிந்திருக்கும். இது போல உங்களுக்குத் தெரியாத யாருடனும் நீங்கள் அதிகப் பட்சம் ஆறு நபர்கள் மூலம் ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்த முடியும். இஃது ஆறு படிநிலைப் பிரிவு (Six Degrees of Separation) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆறு படிநிலைகளில் உள்ள அனைவரும் சமம் இல்லை. இதைச் சோதிக்க, மில்கிராம், நெப்ராஸ்கா, ஒமாஹாவில் உள்ள 160 பேர்களிடம், ஒவ்வொருவரிடமும் ஒரு பொருளைக் கொடுத்து, அந்தப் பொருளைக் கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறு மைல் தொலைவில் அமைந்துள்ள  பாஸ்டன், மசாசூசெட்ஸ்சில் உள்ள ஒரு நபரிடம் சேர்க்கச் சொன்ன போது, கிட்டத்தட்டப் பதினாறு ஆட்கள், ஒரே நபர் வழியாகப் பாஸ்டனில் உள்ள நபருக்கு அந்தப் பொருளை அனுப்பி இருந்தனர். பலருடன் தொடர்பில் உள்ள இந்த நபரே இணைப்பர் எனப்படும் Connector. இந்த இணைப்பர் எனப்படும் நபரே, பெரிதாக அறியப்படாத ஒரு நபரை, மற்ற எல்லாருடனும் இணைக்கும் மையப்புள்ளி ஆவார். இந்த இணைப்பர்கள் மனிதர்களை இன்னும் இறுக்கமாகப் பிணைக்கும் பாலங்கள் எனலாம். தபால் தலைச் சேகரிப்பவர்கள் எப்படித் தபால் தலைகளைத் தேடித் தேடிச் சேர்ப்பார்களா, அது போல இணைப்பர்கள் மனித உறவுகளைத் தேடித் தேடிச் சேகரிப்பவர்கள். இவர்கள் பல்வேறு படிநிலைகளில், கலாச்சாரம், பிரிவு, ஏற்றத் தாழ்வுகள், பாகுபாடுகள் ஆகியவற்றைத் தாண்டிப் பல தரப்பட்ட மனிதர்களுடன் உறவுகளைப் பேணுபவர்.

 



புரட்சிப் படைகளுக்கு நள்ளிரவில் செய்தியைக் கொண்டு சென்ற பால் ரிவீர் ஓர் இணைப்பர். பால் ரிவீர் அக்காலப் பாஸ்டனில் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். பாஸ்டன் துறைமுகத் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க மக்களிடம் தோன்றி இருந்த சுதந்திர வேட்கை, பல்வேறு புரட்சிக் குழுக்களை உருவாக்கி இருந்தது. இவ்வாறு தோன்றிய அனைத்துக் குழுக்களிலும் உறுப்பினராக இருந்த இருவரில், பால் ரிவீரும் ஒருவர். ஃபிலடெல்பியா, பாஸ்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் பரவி இருந்த இந்தக் குழுக்களுக்கு இடையே சென்று தகவல் பரிமாறுவதை வழக்கமாகச் செய்து வந்த பால் மிகவும் எளிதாக யாரையும் தோழமை கொள்ளும் ஓர் ஆளுமையைக் கொண்டிருந்தார். எனவே தான் பிரித்தானியப் படைகளின் வரவைப் பற்றித் தான் சென்ற ஒவ்வொரு ஊரிலும் யாரிடம் சொல்ல வேண்டும் என்பதை அவரால் சரியாகக் கணிக்க முடிந்தது. மாறாக, வில்லியம் டாஸ் ஒரு சாதாரண நபர். அவர் கொண்டு சென்ற செய்தி உண்மையாக இருந்தாலும், ஃது எத்தகைய பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

 

ஆனால் ஒரு செய்தி பரவுவதற்கு வெறும் இணைப்பர்கள் மட்டும் தேவைப்படுவதில்லை. இணைப்பர்களுக்குச் செய்தியைத் தெரிவிக்கக் கூடிய துறைசார் நிபுணர்கள் தேவை. இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள அல்லது தங்களுக்கு விருப்பமான துறையைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள். உதாரணத்திற்கு நீங்கள் புதிதாக ஒரு புகைப்படக் கருவி வாங்க வேண்டுமென்றாலோ அல்லது ஒரு கார் வாங்க வேண்டுமென்றாலோ உங்கள் நினைவுக்கு வரும் அந்த நபரே இந்தத் துறைசார் நிபுணர், ஆங்கிலத்தில் Maven என்று கூறப்படுபவர். Maven என்ற ஆங்கில வார்த்தைக்கு அறிவைச் சேகரிப்பவர் என்று பொருள் உண்டு. கார் என்று எடுத்துக் கொண்டால், வாகனத்திற்கு எந்த இடத்தில் குறைந்த செலவில் எரிபொருள் நிரப்ப முடியும், எந்த இயந்திர வல்லுனரிடம் காரைப் பழுது பார்க்கலாம், எந்த விற்பனை நிலையங்களில் நல்ல விலைக்குக் கார் கிடைக்கும் என்று கார் பற்றி அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துத் தகவல்களை அடுக்குபவரே இந்த நிபுணர்கள். ஒரு விஷயத்தை முழுவதுமாகப் படித்து, அதில் உள்ள சாதகப் பாதகங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அதன் பின்னர்த் தாங்கள் பெற்ற அறிவை எந்தத் தயக்கமும் இன்றி, பிறருக்கும் அளிக்கக் கூடிய இந்த உதவும் குணம் கொண்டவர்கள் சொல்லும் எந்த ஒரு செய்தியும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக மாறும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

 

நிபுணர்கள் தகவல் சேகரித்துப் பிறருக்கு அளிப்பவர்கள். இணைப்பர்கள் தகவலைத் தனக்கும் பிறருக்கும் உள்ள உறவின் அடிப்படையில் அந்தச் செய்தியை மற்றவருக்குக் கொண்டு சேர்ப்பவர்கள். இதில் தான் பெற்ற செய்தியை, தன்னுடைய நண்பர்கள் மற்றும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் மிக்கவரே விற்பனையாளர்(Salesmen) எனப்படுபவர். உதாரணமாக நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று உங்களுக்குப் பரிந்துரைத்து உங்களை அந்தப் புத்தகத்தை வாங்க வைப்பவர் ஒரு விற்பனையாளர். இவர்களுக்கு மற்றவரைத் தூண்டும் சக்தி அதிகம் இருக்கும். ஒரு செவிபேசி (Headphone) நிறுவனம் நிறைய மாணவர்களை வைத்து ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அந்த நிறுவனம், செவிபேசியின் திறன், தலையை இடம் வலமாகவோ அல்லது மேல் கீழாகவோ ஆட்டும் போது மாறுகிறதா என்பதைக் கண்காணிக்க இருப்பதாகச் சொன்னது. ஆனால் உண்மையில் அந்த ஆராய்ச்சியின் நோக்கம் உடல்மொழியை மாற்றுவதன் மூலம் ஒரு விஷயத்தைப் பற்றிய மாணவர்களின் எண்ண ஓட்டத்தினை மாற்ற முடியுமா என்பதை அறிவதற்காகவே நடந்தது. செவிபேசியில் சில பாடல்கள் ஒலித்த பின், மாணவர்களுக்குக் கல்லூரிக் கட்டணம் உயர்த்த வேண்டுமா என்பதைப் பற்றிய ஒரு விவாதத்தை ஒளிபரப்பினார்கள். முதல் பிரிவு மாணவர்கள் விவாதத்தைக் கேட்கும் போது தலையை மேல் கீழாக ஆட்டியபடிக் கேட்டார்கள். அடுத்தப் பிரிவில் வந்தோர்த் தலையை இடது வலமாக ஆட்டியபடி அந்த விவாதத்தைக் கேட்டார்கள். மூன்றாம் பிரிவினர் தலையை அசைக்காமல் அந்த விவாதத்தைக் கேட்டார்கள். இறுதியாகக் கல்லூரிக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டுமா என்ற கேள்வி ஆராய்ச்சியில் பங்கேற்ற மாணவர்களிடம் வழங்கப்பட்டது. இதில் தலையை அசைக்காமல் உரையாடலைக் கேட்டவர்கள் கல்லூரிக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டாம் என்று பதிலளித்தனர். தலையை மேல் கீழாக ஆட்டியபடிக் கேட்டவர்கள்,கட்டண உயர்வுத் தங்களைப் பாதிக்கும் என்பது தெரிந்தும் கல்லூரிக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று பதில் அளித்தனர். தலையை இடம் வலமாக ஆட்டியபடிக் கேட்டவர்கள் கல்லூரிக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பதில் அளித்தனர். அதாவது ஒன்றின் மேல் ஒருவருக்கு ஏற்படும் சார்பு, அவர் காதால் கேட்கும் விஷயத்தைத் தாண்டி உடல் மொழியால் கூடக் கடத்த முடியும் என்பது இந்த ஆராய்ச்சி மூலம் எளிதாக விளங்குகிறது. ஒரு சிறப்பான உரையையோ அல்லது ஓர் இனிய இசையையோ கேட்கும் போது பார்வையாளர்கள் பேசுபவரின் அசைவுகளுக்கு ஏற்ப தன்னைத் தகமைத்துக் கொள்ளும் ஒத்திசைவை, தன்னுடன் பேசுபவருக்குக் கடத்தும் தன்மையே விற்பனையாளர்களின் தனிச் சிறப்பு. கேட்பவரின் எண்ணத்தை உடல்மொழியின் மூலமும், குரல் ஏற்ற இறக்கம் மூலமும் அடுத்தவரைத் தன் வயமாக்கும் காந்த சக்தி மிக்கவர் விற்பனையாளர்.

 

 



 

அடுத்ததாக, ஒரு சிந்தனை பரவுவதற்கு, அந்தச் சிந்தனைக்கு ஓர்  ஒட்டும் தன்மை தேவைப்படுகிறது(Stickiness Factor). ஒட்டும் தன்மை என்பது ஒரு செய்தி அல்லது கருத்தின் தனித்தன்மையான தரம். இந்தத் தரத்தின் வழி அது வாடிக்கையாளரின் எண்ணத்தில் வேரூன்றி அவர்களின் நடத்தையில் அல்லது அவர்களின் இயல்பில் ஒரு மாற்றத்தை உண்டாக்கக் கூடிய தன்மை ஆகும். நாம் காணும் குழந்தைகளுக்கான சத்துப்பான விளம்பரம், பற்பசை விளம்பரம் , குளியல் சோப்பு விளம்பரம் அல்லது துணிகளுக்கான சோப்பு விளம்பரம் ஆகிய எல்லாமே, வாடிக்கையாளரின் எண்ணத்தில் ஓர் ஒட்டும் தன்மையை உண்டாக்க முயற்சிக்கும் உத்தி தான். கெவின் கேர் என்ற நிறுவனம் வெறும் பதினைந்தாயிரம் ருபாய் முதலீட்டில் துவக்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், இன்று கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு கோடிகளுக்கு மேல் வருமானம் ஈட்டுகிறது. முதன் முதலில் சாஷேக்களில் விற்பனை செய்யப்பட்ட சிக் ஷாம்பூ என்ற ஒரு நுகர்பொருள் வழி, கிராமங்கள், சிறு மளிகைக் கடைகள், சிற்றூர்கள் என்று எங்கெங்கும் பரவி, கோத்ரேஜ் போன்ற பெரிய தொழில் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் வெகு வேகமாக வளர்ந்துள்ளது. ஒரே ரூபாயில், எளிய மனிதர்களாலும் பயன்படுத்த கூடிய வகையில் ஷாம்பூவை சாஷேக்களில் அடைத்து, விற்பனை செய்த விதம், வாடிக்கையாளர் மனதில் ஓட்டும் தன்மையை உண்டாக்கியது. பெரிய பெரிய நிறுவனங்கள் ஷாம்பூவை பாட்டில்களில் அடைத்து நகர்புறத்தில் மட்டும் பெருமளவில் விற்பனைச் செய்து வந்த நிலையில் எளிய மக்களுக்குக் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நுகர்பொருள் வெற்றி பெற்றதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது. சில திரைப்படங்கள் திரைக்கு வந்த பல நாட்களுக்குப் பிறகு வெற்றிப்படமாக மிளிரத் தொடங்குவதும், ஒரு புத்தகம் வெளிவந்த பல நாட்களுக்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றி பெறுவதும் இதனால் தான்.

 

கடைசியாக, ஒரு சிந்தனை, வெகுஜன மக்களுக்கான ஒன்றாக மாற அதற்குச் சரியான புறச்சூழல்(Context) மிகவும் அவசியம். இந்தப் புறச்சூழல் எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிய 1920 ஆம் ஆண்டுப் பள்ளி மாணவர்களை வைத்து ஓர் ஆராய்ச்சி செய்யப்பட்டது. முதலில், மாணவர்களுக்கு ஒரு கடினமான தேர்வு வைக்கப்பட்டது, பாதி மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியரும், மீதி மாணவர்களின் விடைத்தாள்களை அந்தந்த மாணவர்களே திருத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. தாங்களே திருத்தும் விடைத்தாள்களில் அதிக அளவு மாணவர்கள் நேர்மையாகத் தங்கள் விடைத்தாள்களைத் திருத்த மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வு எந்தப் பாடத்தில் நடத்தப்பட்டது, தேர்வை மேற்பார்வை செய்ய எவரேனும் இருந்தார்களா, எத்தனை மாணவர்கள் அந்தத் தேர்வில், நேர்மையாக இல்லாமல், மற்றவரைப் பார்த்துத் தங்கள் தேர்வை எழுதினார்கள் அல்லது தேர்வு அறை எத்தனை பெரிதாக அல்லது சிறியதாக இருந்தது போன்ற புறசூழல் காரணிகளைப் பொறுத்து மாணவர்களின் நேர்மையும் மாறுபட்டது. அதாவது எந்த மாணவரும் எல்லா நேரங்களிலும் நேர்மையானவர்களாக இல்லை. ஒருவரைப் பற்றி நாம் பேசும் போது, "அவர் மிக நல்லவர்" அல்லது "அவர் உண்மையானவர், நேர்மையானவர்" என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால் ஒருவரின் குணநலன் என்பது எந்தக் காலத்திலும் மாறாமல் ஒரே நிலையில் இருக்கக் கூடிய இயல்பல்ல. நேர்மையான ஒருவரைக் கூடப் புறச்சூழல் காரணிகள் நேர்மையற்றவராக மாற்றும் வல்லமை உடையது.





 எந்த ஒரு சிந்தனையோ அல்லது சித்தாந்தமோ  வெற்றிகரமாக மாறத் துறைசார் நிபுணர், இணைப்பர், விற்பனையாளர் ஆகிய தன்மை கொண்ட மனிதர்களும், அந்தச் செய்திக்கு சரியான புறச்சூழலும், அந்தச் செய்திக்கு மக்கள் மனதில் தாக்கத்தை உண்டாக்கக் கூடிய ஒட்டும் தன்மை ஆகிய அனைத்தும் இணைந்தால், அது ஒரு மிகப் பெரிய வெற்றிச் செய்தியாக மாறும் என்று பல்வேறு ஆய்வுகள் வழியும், தரவுகள் வழியும் அழகாக இந்தப் புத்தகம் நிறுவுகிறது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை படைத்த, மால்கம் அவர்களின் இந்தப் புத்தகம், அமேசான் தளத்தில் கிடைக்கிறது. சில நேரங்களில் மட்டும் சில சிந்தனைகள் ஏன் வெற்றி பெறுகிறது, மாறி வரும் உலகில், ஒரு விஷயத்தை எப்படி அணுகினால் வெற்றி கிடைக்கும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது இந்நூல். உங்களுடைய எண்ணங்களும் மாபெரும் வெற்றி அடைய, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு அருமையான புத்தகம் இது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.