ஞாயிறு, ஜனவரி 30, 2022

மொழிப்போர் - நேற்று இன்று நாளை


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21 அன்று உலக தாய்மொழி தினத்தைக்  கொண்டாடுகிறோம். தமிழ்ச் சமூகம் ஒரு நூறு வருடங்களாக தமிழ் மொழியை, தமிழ் தேசியத்தை கட்டிக் காக்கும் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்றும் கூட நீட் முதல், தமிழகத்தில் உள்ள மத்திய அரசாங்கப் பணிகளில் வட மாநிலத்தவர் ஆதிக்கம், நவோதயா பள்ளிகள் துவக்குவது, மும்மொழிக் கொள்கை  போன்ற பல்வேறு விதங்களில் ஹிந்தி ஆதிக்கம் செலுத்த முனைவதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.இன்னும் ஐம்பது முதல் நூறு ஆண்டுகளில் தமிழ் மொழி சந்திக்கப் போகும் பல இடர்பாடுகளுக்கான முன்னோட்டமாக இதைச் சொல்ல முடியும்.

பேரவை இலக்கியக் குழுவின் இன்றைய  கூட்டம் "மொழிப்போர் -நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் நடந்தேறியது. புலவர் செந்தலை ந கௌதமன், திருமதி இறை. பொற்கொடி, திரு ஆழி செந்தில் நாதன் மற்றும்  திரு தொல். திருமாவளவன் ஆகியோர் மொழிப்போரின் பல்வேறு பரிமாணத்தை பற்றி எடுத்துரைத்தார்கள். இது ஒரு முக்கியமான உரை. அனைவரும் அறிந்து, மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூர்வது மட்டுமல்லாமல், தமிழ் என்ற பெரிய குடையின் கீழ் இணைந்து இருக்க வேண்டிய அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவை அனைவரும் கேட்பது மட்டுமன்றி உங்கள் குழந்தைகளுக்கும் இதைப் பற்றி சொல்லுங்கள். வலையொளி இணைப்பு கீழே.

தமிழால் ஒன்றிணைவோம்.



வியாழன், ஜனவரி 20, 2022

ஐஸ் ஐஸ் ஐஸ்லாந்து - ஒரு இன்பச் சுற்றுலா - பாகம் 6


ஐஸ்லாந்தை தலைநகர் Reykjavik-இல் இருந்து கிளம்பி, கடிகார ஓட்டம் போல மேற்கு ஐஸ்லாந்து (Snaefellsnes தீபகற்பம்), வடக்கு ஐஸ்லாந்து(Akureyri மற்றும் Myvatn ஏரி), கிழக்கு ஐஸ்லாந்து (Egilsstadir மற்றும் Vestrahorn ) ஆகிய இடங்களை பார்த்து விட்டு, மீண்டும்  தலைநகர் Reykjavik நோக்கிய பயணத்தில் இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே இருந்தது. ரிங் ரோடு எனப்படும் Route -1 லேயே இனி பயணம் செய்வோம். ரிங் ரோட்டில் சென்றாலே பார்க்கக் கூடிய அருவிகள் மற்றும் இயற்கை அதிசயங்களை கோல்டன் சர்க்கிள் என்று அழைக்கிறார்கள். இனிமேல் பார்க்கப் போகும் இடங்கள் கோல்டன் சர்க்கிளை சார்ந்த இடங்களாகும்.  சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவியும் இடங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் சென்ற இடங்களுக்கு  வந்திருந்த  கூட்டத்தை வைத்தே உணர முடிந்தது. எனினும் வட அமெரிக்காவில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றால் நீங்கள் பார்க்கும் அளவு பெரிய கூட்டம் எல்லாம் இல்லை. ஐஸ்லாந்தில் நாங்கள் இது வரை பார்த்த இடங்களில் இருந்த கூட்டத்தை விட சற்று அதிகம் அவ்வளவே. பெரும்பாலும் ஐஸ்லாந்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்க முடியும் என்பவர்கள் Reykjavik மற்றும் கோல்டன் சர்க்கிள் மட்டுமே சென்று திரும்புவார்கள்.  ஆனால் கோல்டன் சர்க்கிள் மட்டுமே சென்று வராமல் ஐஸ்லாந்தின் எல்லா இடங்களையும் கண்டு களியுங்கள். பயணங்கள் இந்த இடத்தை பார்த்து விட்டோம் என்ற கணக்கிற்கானது மட்டும் அல்ல. அது ஒரு அனுபவம். எனவே முழு ஐஸ்லாந்தையும் பார்ப்பதே உங்கள் பயணத்தை மனதில் நிற்கும் ஒரு சம்பவமாக மாற்றும் என்பதே என்னுடைய கருத்தாகும்.

சரி, Jokulsarlon என்ற பனிக்கட்டிகள் நிரம்பிய ஏரியைப் பார்த்தோம் என்றேன் நினைவிருக்கிறதா, அங்கிருந்து நமது பயணத்தை தொடங்குவோம். அதன் பிறகு நாங்கள் மதிய உணவு அருந்துவதற்கு சென்றோம். மதிய உணவிற்கென Jokulsarlon அருகே இருந்த Fjallsarlon Glacier Lagoon என்ற மற்றொரு பனிசூழ் ஏரிக்கரையில் அமைந்திருந்த உணவு விடுதியில் கொஞ்சம் சூப் மற்றும் சாலட் சாப்பிட்டோம்  Vatnajokull பனிப்பாறை என்பது மிகவும் பெரியது. அதன் ஒவ்வொரு பகுதியையும், அதாவது "tongue" என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள், வெவ்வேறு இடத்தில் இருந்து பார்க்க முடியும். இந்த இடமும் Vatnajokull பனிப்பாறையை பார்க்க ஒரு அருமையான இடமாகும். 







ஐஸ்லாந்தை பொறுத்தவரை நீர் மற்றும் எரிமலைக் குழம்பு அதன் பல்வேறு பகுதிகளை எவ்வாறு செதுக்கி உள்ளதோ அதே அளவு பனிப்பாறைகளும் அந்த பூமியை செதுக்கி உள்ளது. பனிப்பாறைகளின் சக்தியை விளக்கும் வண்ணம் Skeidara பாலம் என்ற ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கி இருக்கிறார்கள். Route-1 அல்லது ரிங் ரோடு என்று அழைக்கப்படும் சாலையில் இருந்த Skeidara  என்ற பாலம் எரிமலை வெடிப்பினால் நகர்ந்த பனிப்பாறைகள் நொறுக்கியதால் உருக்குலைந்து வெறும் வளைந்த இரும்பு தூண்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. இதை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். இயற்கை என்னும் சக்தி முன் மனிதன் எம்மாத்திரம் என்று நமக்கு இதை விட சிறப்பாக விளக்க இயலாது.





அடுத்தது நாங்கள் சென்றது Svartifoss என்ற அருவிக்கு. எரிமலை குழம்பு பெரிய செவ்வகம் போல உறைந்து செதுக்கப்பட்ட பாறைகளுக்கு நடுவே கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி அழகோ அழகு. கார் பார்க்கிங் செய்யும் இடத்தில இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது இந்த அருவி. கொஞ்சம் செங்குத்தாக மேலே ஏற வேண்டும் என்பதால் இந்த அருவியை அடைவதற்கு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடக்க வேண்டும். திரும்பி வருவதற்கு 30 நிமிடங்கள் வரை ஆகும். எனவே அருவியை பார்த்து திரும்புவதற்கு 2 மணி நேரம் தேவைப்படும். கால் வலிப்பதாக கூறி என்னுடைய குடும்பத்தினர் யாரும் வராததால் நான் மட்டும் இந்த அருவி வரை நடந்து சென்று சில புகைப்படங்கள் எடுத்துத் திரும்பினேன்.போகும் போது கொஞ்சம் தண்ணீரே கொண்டு சென்றதால் தாகம் வேறு. எனினும் சிறிது தூரம் நடந்து சென்று விட்டதால் திரும்புதல் என்பது இயலாமல் போனது. தாகத்துடனே நடந்து சென்று திரும்பினேன். நீங்கள் எப்பொழுதும் உங்கள் கையில் தண்ணீர் மற்றும் ஏதேனும் சிற்றுண்டி (பருப்பு பாதம் வகை எனர்ஜி பார், பழம் ஆகியன) இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஐஸ்லாந்தில் நிறைய நடந்து செல்ல வேண்டி இருக்கும் என்பதை முன்பே சொல்லி இருந்தேன். நல்ல குளிர் தாங்கும் காலணி மற்றும் குளிர் தாங்கும் காலுறை, கையுறை, கழுத்தை மூடும் கம்பளி உடைகள், மழையில் இருந்தும் பாதுகாப்பு தரும் மேல் சட்டை அல்லது ரெயின் கோட் ஆகியன நிச்சயம் தேவை. நிறைய வலைத்தளங்களில் உடைகள் என்ன மாதிரி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன. எனவே அதையும் நீங்கள் நன்கு ஆராய்ந்து அதன் படி உடைகளை எடுத்துச் செல்வது நலம். கீழே Svartifoss-இன் அழகுத் தோற்றம்.





அருவியை பார்த்து முடித்தவுடன் அன்றிரவு தங்குவதற்காக மீண்டும் நாங்கள் Hofn திரும்பினோம். அடுத்து பார்க்க வேண்டிய இடங்கள் Svartifoss-ஐ தாண்டி இருந்தது. Hofn என்பது Svartifoss-க்கு முன்பே இருந்தது. மீண்டும் மீண்டும் Hofn க்கு செல்ல வேண்டிய தேவை இல்லாமல் வேறு இடத்தில் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்று தோன்றியது. ஐஸ்லாந்து பயணத்தில் இந்த ஒரு இடத்தில்  மட்டுமே நாங்கள் தங்குவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யவில்லை என்று தோன்றியது. எனினும் மீண்டும் Hofn வரை சென்ற கார் பயணத்தில, காலையில் இருந்து ரசித்த இடங்களை மீண்டும் ஒரு முறை பார்க்கவும், அசை போடவும்  செய்தோம். அன்றிரவு அறைக்கு வந்து உணவு உண்டு அது வரை பார்த்த இடங்களைப் பற்றிய ஒரு வினாடி வினா நடத்தினோம்.  அப்போதும் ஊர்ப் பெயர்கள் நினைவில் நிற்கவில்லை. குழந்தைகள் கேட்ட கேள்வி பதில் நிகழ்வில் தப்பும் தவறுமாகவே பதில் சொல்லி சமாளித்தோம். 

அடுத்த நாள் காலை எங்கள் பயண திட்டத்தில் இல்லாத fjadrargljufur canyon என்ற பள்ளத்தாக்கிற்கு சென்றோம். சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத ஒரு புதிய பாதையில் சென்றால் நமக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். இந்த பள்ளத்தாக்கிற்கு சென்றதும் எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தந்தது. எனக்கு ஐஸ்லாந்தில் மிகவும் பிடித்த இடம் என்றால் அது இந்த இடம் என்று சொல்வேன். தலைநகர் ReykJavik-இல் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. Route -1 இல் பயணம் செய்து Holtsvegur என்ற இடத்தில் அமைந்துள்ள F206 என்ற ரோட்டில், 3 கிலோமீட்டர் பயணம் செய்தால் இந்த இடத்தை அடையலாம். கூட்டம் அதிகம் இருப்பதால் பார்க்கிங் கொஞ்சம் கடினம். எனினும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம். பாடகர் ஜஸ்டின் பீபர் இந்த பள்ளத்தாக்கிற்கு சென்று அவருடைய பாடல் ஒன்றை இங்கே படமாக்கி இருக்கிறார். காணொளி கீழே.


(ஜஸ்டின் பீபரின் பாடலில் இடம் பெறும் இடங்கள் - Fjaðrárgljúfur பள்ளத்தாக்கு, Seljalandsfoss அருவி, Dyrhólaey, Skógafoss அருவி, Sólheimasandur கடற்கரை மற்றும் சிதைந்த விமானம், Jökulsárlón பனிப்பாறை ஏரி மற்றும் Diamond கடற்கரை ஆகியன)

பாசி படர்ந்த பள்ளத்தாக்கு அதில் ஓடும் சிற்றோடைகள், அருவிகள் என்று இந்த இடத்தை மட்டும் இயற்கை மிகவும் வனப்புடன் படைத்திருப்பதாக தோன்றியது.  fjadrargljufur பள்ளத்தாக்கில் இருந்து உங்களால் Eldhraun Lava fields எனப்படும் பாசி படர்ந்த பாறைகளை காண முடியும்.இந்த பாசி படர்ந்த எரிமலை பாறைகள் கிட்டத்தட்ட 565 கிலோமீட்டர் தூரம் பரவி உள்ளது. கீழே  fjadrargljufur பள்ளத்தாக்கின் அழகுத் தோற்றம்.







fjadrargljufur பள்ளத்தாக்கில் விழும் அருவிக்கு Mogarfoss என்று பெயர். இது மட்டும் அல்லாமல் இங்கே Fjadrarfoss என்ற அருவியும் இருக்கிறது. எனினும் இந்த அருவிக்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. இந்த இடம் சுற்றுலா பயணிகள் இடையே மிகவும் பிரசித்தி பெற்ற இடம் என்பதால், இங்கே இருக்கும் பாசி அடர்ந்த மலையையும், அழகான இயற்கையையும் பாதுகாக்கும் பொருட்டு இந்தப் பள்ளத்தாக்கு  மார்ச் முதல் மே மாதம் வரை மூடப்படுகிறது, எனினும் இதையும் மீறி இந்த இடத்தை பார்வையிட நிறைய பேர் வந்து செல்கின்றனர் என்றால் இந்த இடத்தின் சிறப்பினை நீங்கள் அறியலாம். ஐஸ்லாந்து சென்று வந்தால் கண்டிப்பாக இந்த இடத்தினை பார்த்து வாருங்கள்.இந்த பள்ளத்தாக்கின் அழகினை drone வழியாக காட்சிப் படுத்தி இருக்கிறார்கள் பாருங்கள்.


fjadrargljufur பள்ளத்தாக்கில் இருந்து கிளம்பி அருகில் இருந்த Eldhraun என்ற பாசி அடர்ந்த பனிப் பாறைகளை நாங்கள் பார்த்தோம். இந்த இடத்தில் பார்வையாளர்கள் நடந்து செல்வதெற்கென்று பாதைகள் அமைத்து இருக்கிறார்கள். அதில் நடந்து சென்று நீங்கள் அழகான இந்த இடத்தை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். Eldhraun Lava Fields இன் அழகுத் தோற்றம் கீழே. ஏதோ ஒரு வேற்று கிரகத்திற்கு வந்தது போல இருந்தது இந்த இடம். எரிமலைக்  கற்கள் மேல் இந்த வகை புற்கள் வளர 70 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள். 







அதன் பிறகு நாங்கள் சென்றது Reynisfjara எனப்படும் கறுப்பு எரிமலை மண் மற்றும் பெரிய எரிமலை பாறைகள் நிறைந்த கடற்கரைக்கு. ஐஸ்லாந்து பயண அனுபவம் பகுதி ஒன்றில் இருந்த பாடல் காணொளியில் வரும் கடற்கரை இது. மிகவும் புகழ்பெற்ற இந்த கடற்கரை ஆபத்தான அலைகளும் நிறைந்தது. Freak wave எனப்படும் திடீர் அலைகள் இங்கே அதிகம். கிரீன்லாந்து முதல் ஐஸ்லாந்து வரை அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தக் கூடிய நில அமைப்பு எதுவும் இல்லாததால் இங்கு வரும் அலைகள் மிகவும் வேகமாக வருபவை. அது மட்டும் அல்லாமல் இங்கு இருக்கும் நீரும் மிகவும் குளிர்ச்சித் தன்மை உடையது.சிலீரிடும் தண்ணீரில் சில நிமிடங்கள் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது என்பதால் இந்த கடற்கரையை பொருத்த வரை நீங்கள் தண்ணீருக்கு அருகில் செல்லாமல் கரைகளில் இருக்கும் basalt பாறைகளில் இருந்தே இந்த இடத்தை ரசியுங்கள். அந்த கடற்கரைகளில் இருந்த இந்த எரிமலைப் பாறைகள் இயற்கை என்னும் சிற்பி தானே செதுக்கியது போல அவ்வளவு நேர்த்தி. அடுக்கடுக்காக அமைந்த அந்த பாறைகள் பல வடிவங்களிலும் அமைந்து இருந்தது கண்கொள்ளாக் காட்சி. உங்கள் பார்வைக்கு காணொளி மற்றும் புகைப்படங்கள்.











Reynisfjara கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் Vik என்ற இடத்திற்கு முன்பே Dyrholaey என்ற இடத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து Reynisfjara கடற்கரையின் மற்றொரு தோற்றத்தைக் காண முடியும். அது மட்டும் அல்லாமல் கடலின் நடுவே கம்பீரமாக நிற்கும் இந்தப் பாறை Eagle Rock என்று அங்கு தங்கி குஞ்சு பொரிக்கும் பறவைகளின் பெயரால் அழைக்கப்படுகிறது. (படம் கீழே)


Dyrholaey இன் மற்றொரு சிறப்பு அங்கிருந்து தெரியும் எரிமலைக் குழம்பினால் உண்டான கடலிலுக்குள் காணப்படும் ஒரு பாறை வளைவு. கீழே உள்ள புகைப்படத்தில் நீர் மட்டத்திற்கு மேலே தெரியும் ஒரு அரை வட்ட வளைவினை நீங்கள் பார்த்தீர்கள் என்றால்அதுவே எரிமலை குழம்பினால் உண்டான இயற்கையாக  அமைந்த வளைவு ஆகும்.




Mýrdalsjökull glacier என்ற பனிப் பாறையையும் இங்கேயிருந்து உங்களால் பனிமூட்டம் இல்லாத நேரங்களில் காண முடியும். 

இதன் பிறகு நாங்கள் சென்றது Skogafoss என்று மிகவும் புகழ் வாய்ந்த அருவிக்கு. Route -1 இல் ரிங் ரோடில் இருந்தே இந்த அருவிக்கு செல்ல முடியும் 60 மீட்டர் உயரம் 25 மீட்டர் அகலம் என்று பிரமாண்டம் காட்டும் இந்த அருவியை மேலிருந்தும் பார்க்கலாம். 527 படிகளில் ஏறி இறங்க வேண்டி இருக்கும். நாங்கள் கீழே இருந்தே இந்த அருவியை பார்த்தோம். அத்தனை படிகளில் ஆர்வமாக நிறைய பேர் ஏறி இறங்கி அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் கண்டிப்பாக அருவியை பார்க்க மேலே ஏறிச் செல்ல தயங்காதீர்கள்.

இந்த அருவியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.






என்ன அருமையான ஒரு அருவி என்பதை எண்ணிக் கொண்டே அன்று இரவு உண்பதற்கு Reynisfjara கடற்கரை இருந்த பகுதியில் இருந்த ஒரு உணவகத்திற்கு சென்றோம். நிறைய சுற்றுலா பயணிகள் வரும் இடம் என்பதால் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின்பே எங்களுக்கு அங்கே இடம் கிடைத்தது. அதன் பிறகு உணவினை உண்டு விட்டு அறைக்கு திரும்பினோம். அதிக அளவு கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்லும் போது முடிந்த வரை கையில் உணவுப் பொருட்களை கொண்டு சென்று நாமே சமைத்துக் கொள்வது நலம். எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே உண்ண நேர்ந்தால் காத்திருக்க வேண்டி இருக்கும் என்பதால் கொஞ்சம் சிற்றுண்டி கையில் வைத்திருப்பது நலம்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் Skogafoss-ஐ பார்த்தோம். பகல் நேரம் என்பதால் நல்ல பல புகைப்படங்கள் எடுத்தோம். மேலே காலை நேரத்தில் எடுத்த அந்த புகைப்படங்களைப் பார்க்கலாம். அடுத்ததாக Seljalandsfoss எனப்படும் அருவியைப் பார்த்தோம். இந்த அருவியின் சிறப்பு என்னவென்றால் curtain falls என்பது போல அருவியின் பின்னால் சென்று பார்க்க முடியும். ஒரு நீர்த் திரை போன்று நம் முன்னால் நீர் விழும் அழகினையும், குளிர்ந்த நீர், ஆவி போன்று கிளம்பும் அழகினையும், நீர்த் திவலைகள் நம் மேல் விழும் போது உண்டாகும் சிலிர்ப்பையும் வார்த்தைகளால் கூற இயலாது. இதை அனுபவித்தே அறிய முடியும். Seljalandsfoss-இன் புகைப்படங்கள் கீழே:




  

இந்த அருவி இருப்பது தனியார் வசம் என்பதால் இங்கே கார் பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கிறார்கள். 

அடுத்தது route -1 னில் நாங்கள் பார்த்தது uridafoss எனப்படும் ஒரு அருவி.Pjorsa  எனப்படும் நதியின் மேல் அமைந்திருக்கும் இந்த அருவி பார்ப்பதற்கு அழகாவே இருந்தாலும் மற்ற அருவிகள் போன்ற பிரமாண்டம் என்று சொல்வதற்கில்லை. Pjorsa என்பது ஐஸ்லாந்தின் மிகவும் நீண்ட நதி. இந்த நதியின் மேல் அமைந்துள்ளது இந்த அருவி என்பதால் ஒரு நொடிக்கு 360 கியூபிக் மீட்டர் என்ற அளவில் அதிக அளவு தண்ணீர் விழும் ஒரு அருவியாக இருக்கிறது. 




Route-1 இல்  செல்லும் வழியில் Kerid என்ற பெயருடைய எரிமலை ஏரி ஒன்றைப் பார்த்தோம். எரிமலை வெடிப்பினால் உண்டான பள்ளத்தில் மழை நீர் சேர்ந்து உருவாகிய இந்த ஏரியைச் சுற்றி சிவப்பு நிற பாறைகள் காணப் படுகின்றன. இந்த எரிமலை வெடிப்பு கிட்ட தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த எரிமலை வெடிப்பு 55 மீட்டர் ஆழம், 170 மீட்டர் அகலம் மற்றும் 270 மீட்டர் விட்டமும் உடையது. இதன் அடியில் இருக்கும்  ஏரியைக் காண்பதற்கு பாதை இருக்கிறது. செங்குத்தாக இறங்கும் இந்தப் பாதையில் சென்று இறங்கினால் நீல வண்ண நீரமைந்த ஏரியைக் காணலாம். ஏரியில் உள்ள தண்ணீர் கிட்டத்தட்ட 7 முதல் 14 மீட்டர் வரை ஆழம் இருக்கும். ஏரிக் கரையில் அமர்ந்து அழகான அந்த இடத்தை ரசித்தோம்.





அதன் பிறகு Gulfoss என்ற பெயருடைய அருவியைக் காணச் சென்றோம். இந்த அருவிக்கு Golden falls என்ற பெயரும் உண்டு. தலைநகர் ReykJavik -இல் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணத்தில் அமைந்துள்ள இந்த  அருவி Hvitar என்ற நதியில் அமைந்துள்ளது. Langjokull என்ற பெயருடைய பனிப்பாறையில் இருந்து உருகி வழியும் நீர் Hvitar நதியாக உருவெடுத்து, பின்னர் நீண்ட தூரம் ஓடி, 11 மீட்டர் உயரத்தில் இருந்து ஒரு அருவியாகவும், 21 மீட்டர் உயரத்தில் இருந்து இன்னொரு அருவியாகவும் Gullfossgjúfur பள்ளத்தாக்கில் விழுகிறது. இந்த அருவியை தனியார் வசம் செல்லவிடாமல் தடுத்த Sigridur என்ற பெண்ணைப் போற்றும் வகையில் இங்கே அவருடைய பெயரைத் தாங்கும் ஒரு நினைவுக் கல்வெட்டை நிறுவி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணிற்கு உதவி புரிந்த வழக்கறிஞர் Sigríður Sveinn Björnsson என்பவரும் ஐஸ்லாந்தின் முதல் ஜனாதிபதியாக 1944 ஆம் வருடம் பதவி ஏற்றார் என்பதும் கூடுதல் சிறப்பு.  



Gulfoss இல் நிறைய கூட்டம் கண்டிப்பாக இருக்கும். எனவே இந்த அருவியைப் பார்க்க கொஞ்சம் நேரம் எடுக்கும். 



அடுத்தது நாங்கள் சென்றது Geysir எனப்படும் வெந்நீர் ஊற்றை காண. அமெரிக்காவில் Yellowstone தேசியப் பூங்காவில் உள்ள வெந்நீர் ஊற்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நீரை சில அடிகள் பீச்சி அடிக்கும். ஆனால் சில நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீரை பீச்சி அடிக்கும் இந்த வெந்நீர் ஊற்று மிகவும் அருமை.


  


சின்ன சின்ன வெந்நீர் ஊற்றுகளில் கொதிக்கும் நீரும், அதில் இருந்து வெளிவரும் புகை என்று எந்த இடமே தேவலோகம் போல புகை மூட்டத்துடன் காட்சி அளித்தது. Geysir ஐ பார்த்த பிறகுReykjavik நோக்கி புறப்பட்டோம்.

கிட்ட தட்ட இரண்டு மணி நேர கார் பயணத்தில் இருந்தது Reykjavik. Pingvellir தேசியப் பூங்கா வழியாக நாங்கள் மீண்டும் Reykjavik ஐ வந்து சேர்ந்தோம். கீழே இந்த தேசியப் பூங்காவில் எடுத்த சில புகைப்படங்கள்.






அன்றிரவு நாங்கள் Reykjavik-இல் தங்குவதற்கு ஒரு அறையை பதிவு  செய்திருந்தோம். நகருக்குள் இருந்த இடம் என்பதால் பார்க்கிங் வசதி இல்லை எனவே கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு இடத்தில் பார்க் செய்துவிட்டு அறைக்கு வந்து இளைப்பாறினோம். இது போல அல்லாமல் விமான நிலையத்திற்கு அருகில், பார்க்கிங் உடன் கூடிய தங்குமிடத்தை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

அடுத்த நாள் நாங்கள் அமெரிக்கா திரும்ப வேண்டிய நாள். வெகு சீக்கிரமாக எங்கள் அறையில் இருந்து கிளம்பி, வாடகைக் காரைத் திரும்பவும் எடுத்த இடத்திலேயே விட்டு விட்டு அங்கிருந்து சிறிது தூரத்தில் இருந்த விமான நிலையத்திற்கு பெட்டிகளை தள்ளியவாறு நடந்து சென்றோம். வாடகை கார் நிறுத்துமிடத்தில் இருந்து பஸ் வசதி உண்டு. எனினும் பஸ் குறித்த நேரத்தில் வரவில்லை என்பதால் நாங்களே நடந்து சென்று விட்டோம். பெட்டிகளை கட்டும் போது அதிகமான அளவு சுமை ஏற்றாமல், சரியான அளவில் பேக் செய்தால் இந்த மாதிரி எந்த சூழ்நிலை வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். பல பயணங்களின் வழியே கற்ற பாடம் இது என்பதாலும் ,உங்களுக்கும் உதவியாக இருக்கும் என்றெண்ணி இதைக் குறிப்பிடுகிறேன். விமான நிலையத்தின் உள்ளே நிரம்ப கூட்டம். கோடை காலம் என்பது அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நேரம் என்பதால் முன் கூட்டியே விமான நிலையத்திற்கு சென்று விடுவது நல்லது. பிறகு ஒரு வழியாக விமானத்தை பிடித்து வாஷிங்டன், DC வந்து சேர்ந்தோம். அன்று மாலையே அங்கிருந்து கிளம்பி, எங்கள் ஊருக்கு பத்திரமாக வந்து சேர்ந்தோம்.

பயணம் சிறப்பு.அதை விட செல்லும் இடமும் சிறப்பாக இருந்தால் அது பயணத்திற்கு மேலும் அழகு சேர்க்கும். ஐஸ்லாந்து பயணம் அப்படியானதே. பயணம் ஒரு புதிர். அது செல்பவர்க்கும் மகிழ்வைத் தரும். கேட்பவருக்கும் மகிழ்வினைத் அளிக்கும். பயணம், பயணிப்பவர்களுக்கு நிறைய உத்வேகமும், உலகினை புதிய கண்களுடன் பார்க்கக் கூடிய பார்வையையும் அளிக்கும்.  பயணியுங்கள், வாழ்க்கை சுவையாகும். வாழ்க்கைப் பயணம் எளிதாகும்.

ஐஸ்லாந்து பயண அனுபவம் இத்துடன் முடிவடைகிறது.






செவ்வாய், ஜனவரி 18, 2022

பொங்கலோ பொங்கல் - கவிதை

என்னுடைய இந்த வருட பொங்கல் வாழ்த்துக் கவிதை கீழே.



பார் விளங்க பாங்காய் வாழ

பயிர் விளைத்திடும் கரங்கள் ஓங்க

உழவும் தொழிலும் ஏற்றம் பெற்றிட

தைமகள் தோன்றினாள் நானிலம் போற்றிட


போகியன்று புதுமைகள் புகுத்துவோம்

மாந்தரைப் பற்றியெரிக்கும் மடமைகள் பொசுக்குவோம்

போகியை 'போக்கி' என்பதாய் அல்லாமல்

காடு செழிக்க கழனி கொழிக்க

விண் எழுதும் நீர் மடல்

மும்மாரியும் மண் சேர

பொய்க்காமல் பொழியும் வான் அமுதத்திற்கு

உவகையுடன் நன்றி செலுத்தும்

நாளாகச் செய்வோம்


பொங்கல் அன்று பட்டாடைகள் பூணுவோம்

உலகம் வாழ

சேற்றில் பிழைக்கும் உழவர்தம்

செந்தாமரைக் கழல்கள் போற்றுவோம்

உறுபசி நீக்கி உலகினை காக்கும்

அவர்தம் வாழ்வுயர வாழ்த்துவோம்

செங்கதிரோன் பொலிகவென்றே

ஆனந்தக் கூத்தாடுவோம்


உழவிற்குத் தோள் கொடுக்கும்

பிற உயிரைப் போற்றுவோம்

மாட்டுப் பொங்கல் அல்ல

யாவர்க்குமான மகிழ்ச்சிப் பொங்கலென்றே

தீந்தமிழ்ப் பள்ளு பாடுவோம்

காணும் பொங்கல் அன்று

உணர்வுக்கு உரம் சேர்க்கும்

உறவுகளை மகிழ்விப்போம்

வாழ்விற்கு அர்த்தம் சொல்லும்

வரமவர்கள் நினைவில் வைப்போம்


ஈரடியில் வாழ்வளந்த செந்நாப்போதார்

தமிழுக்கு புகழ் சேர்த்த மகோன்னதர்

குறளுக்கு குரல் கொடுத்து

நீள் புகழ் கொள்வோம்

வள்ளுவமே வாழும் வழியென

தெளிந்து வாழ்வோம்

இயற்கையும் உழவனும் உயர்ந்தால் வளர்ந்தால்

வையமும் சேமமுற வளமாய் வாழும்


தேன் கரும்பு

தித்திக்கும் வெல்லம்

தெவிட்டாத பால்

நெய் கமழும் முந்திரி

முத்தான புத்தரிசியும் சேர்த்து

பொன் மஞ்சள் கட்டி வைத்த

மண் பானையில் பொங்கலிட்டு

பொங்கலோ பொங்கல் என்று

குலவையிட்டு பாடிடுவோம்

அனைத்துயிரும் அன்பாலே

தமிழ் போல வாழ்கவென்றே

மனதார வாழ்த்துகிறேன்.

பொங்கலோ பொங்கல்!!!.



வியாழன், ஜனவரி 13, 2022

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்



டிசம்பர் 2021/ஜனவரி 2022 மாத வல்லினச் சிறகுகள் இதழ் பொங்கல்  சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இதில் உணவு விரயத்தை பற்றி நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். பொங்கல் கொண்டாட்டம் நடக்கும் இந்நாளில், உணவினை சரியாகப் பயன்படுத்தி, உழவுக்கும் அந்த தொழிலினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் வந்தனை செய்வோம். இதழை வாசிக்க இங்கே சொடுக்குங்கள். இந்த இதழில் இடம் பெற்ற தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் என்ற தலைப்பில் அமைந்த என்னுடைய கட்டுரை கீழே

மனிதன் ஒரு விசித்திரமான உயிரினம். கண்ணால் பார்க்கக் கூடிய இயற்கை என்னும் கடவுளை அழித்து விட்டு கண்ணால் பார்க்க முடியாத கடவுளைத் தேடி அலைபவன். அவன் அழித்த அந்த இயற்கையே கடவுள் என்பதை உணராதவன்" என்பார் ஹூபேர்ட் ரீவ்ஸ் என்ற அறிஞர். பாரதியார் எழுதிய  "தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனின் இந்த சகத்தினை அழித்திடுவோம்" என்ற வரிகளை நாம் படித்திருப்போம்.  உணவு என்பது இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாதது. பருவ நிலை மாற்றங்களை விடுத்து பார்த்தோமேயானால் உலக வரலாற்றில் இதுவரை பசி, பட்டினி ஆகியன மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று. விலங்குகளும், பறவைகளும், கடல்வாழ் உயிரினங்களும் உணவுக்கான பெரிய முன்னேற்பாடுகள் ஏதும் இன்றி பன்னெடுங்காலமாக சிறப்பாக  வாழ்ந்து வருகின்றன. நாளைய தேவையை இன்றே அறிந்து, அதைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்  கூடிய ஆற்றலைப் பெற்ற மனிதன் மட்டும் உணவுத் தேவையில் ஏன் இன்றும் தன்னிறைவை அடையவில்லை என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி அல்லது வெள்ளம், பூச்சிகளால் பயிர்களுக்கு ஏற்படும் பயிர் பாதிப்பு என்பது போன்ற புற சூழல் காரணிகள் சில  இருந்தாலும் அவை அனைத்தும் பன்னெடுங்காலமாக இருப்பவையே.

உலக உணவு உற்பத்தித் திறன் 2000 ஆண்டை விட 2019 ஆண்டில் 73 சதவிகிதம் வரை அதிகரித்து உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உணவுப்  பற்றாக்குறை என்பது போதிய உணவு இல்லை என்பதால் ஏற்படுவதில்லை, அது உணவை சரியான முறையில் பயன்படுத்தாமல் உணவை விரயம் செய்வதால் ஏற்படுகிறது என்பது நம் அனைவருக்குமே ஒரு புதிய செய்தி. உணவு ஏன் வீணடிக்கப்படுகிறது? வயலில் இருந்து நம் மேசை வரை வரும் உணவுச் சங்கலியில் எந்த இடத்தில் இது நேருகிறது? இதைத் தவிர்க்க நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன? இதில் அரசாங்கம் மற்றும் உணவு உற்பத்தி செய்யும்  நிறுவனங்களின் பங்கு யாது? என்று பல்வேறு படிநிலைகளில் அலச வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனை இது .

உலக மக்கள் தொகை 700 கோடி. இதில் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் உணவு இல்லாமல் வாடுகிறார்கள். அதாவது ஏழு பேரில் ஒருவர் பசியால் துன்பம் அடைகின்றார்.பசிக் கொடுமை என்பது நோய்க்கு காரணமாகவும் அதனால் ஏற்படும் மருத்துவ, சுகாதார செலவினங்கள் தடுக்கக் கூடிய ஒன்று என்பதால், இதை நீக்க, தனி மனிதன் முதல் அரசாங்கங்கள் வரை அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.



(உலக அளவில் அதிக அளவில் உணவினை வீணடிக்கும் நாடுகள் பற்றிய புள்ளிவிவரம் -நன்றி:போர்ப்ஸ்.காம்)

மக்கள் பசி பட்டினியால் துயருறும் அதே நேரம், ஒவ்வொரு வருடமும் 130 கோடி டன்கள் அளவு உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இந்த உணவினை கொண்டு கிட்டத்தட்ட 200 கோடி மக்களுக்கு உணவு அளிக்கலாம். வீணாக்கப்படும் இந்த உணவு மக்கிய பின் அதில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு அளவைக் கணக்கிட்டால், அது உலகிலேயே அதிகமாக பைங்குடில் வாயுவை(Greenhouse Gas) வெளியேற்றும் சீனா, மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து மூன்றாவது நாடாக இடம் பிடிக்கும். வளர்ந்த நாடுகளில் வீணடிக்கப்படும் உணவின் மதிப்பு கிட்டத்தட்ட 68000 கோடி அமெரிக்க டாலர்கள் மற்றும் வளரும் நாடுகளில் வீணடிப்படும் உணவின் மதிப்பு 63000 கோடி அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வாறு வீணடிக்கப்படும் உணவுகளில் முதன்மையானது பழங்கள், காய்கறிகள் மற்றும் பூமிக்கு கீழே விளையும் கிழங்கு வகைகள் ஆகியன. அவை கிட்டத்தட்ட 40-50 சதவீதம் வரை வீணடிக்கப்படுகிறது.அதற்கு அடுத்ததாக மீன் வகைகள் 35 சதவீதமும்தானிய வகைகள் 30 சதவீதமும் , இறைச்சி மற்றும் பால் பொருட்கள் 20 சதவீத அளவும் வீணடிக்கப்படுகிறது.  இவ்வாறு தூக்கி எறியப்படும் உணவினை தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மற்றும் அந்த உணவினை உற்பத்தி செய்யத் தேவையான விளை நிலங்கள், உணவினை சந்தைப்படுத்த தேவைப்படும் மின்சாரம், எரிபொருட்கள், இந்த உணவினை உற்பத்தி செய்ய அழிக்கப்பட்ட காடுகள் ஆகியன மட்டுமன்றி அந்த உணவுப் பொருள் மக்கிய பின் வெளிவரும் மீத்தேன் வாயு என பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சனைகள் இதனால் ஏற்படுகிறது.   உணவு இழப்பு(Food Loss) அல்லது உணவு விரயம்(Food Waste) என்ற இரு வழிகளில் உணவு வீணடிக்கப்படுகிறது. முறையற்ற உணவு சேமிப்பு முறை, சரியான பதப்படுத்தும் முறைகளை கையாளாமல் இருத்தல், சரியான நேரத்தில் பொருட்களை சந்தைப்படுத்தாமல் விடுதல் போன்ற காரணங்களால் உணவு இழப்பு ஏற்படுகிறது. இது பெரும்பாலும் வளரும் நாடுகளில் மட்டும்  ஏற்படக் கூடிய சிக்கல். முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் இந்தப் பிரச்னையை அடியோடு ஒழிக்க முடியும்.

ஆனால் உணவு விரயம் எதனால் உண்டாகிறது என்பதற்கான காரணங்கள் மிகவும் வியப்பானவை. விசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் ஆதரவாக சமூக  வலைத்தளங்களில் மீம் போடும் சென்ற தலைமுறையும், காய்கறிகள், அரிசி மற்றும் தானிய  வகைகள் அனைத்தும் பேரங்காடிகளில் விளைந்தவை என்ற அளவிற்கு மட்டுமே அறிந்த இந்தத் தலைமுறையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை. பாம்புச்  சட்டை என்ற குறும்படம். கீழே ஒரு பருக்கை உணவை குழந்தை சிந்தி இருக்கும். ஒரே ஒரு பருக்கை தானே வீணாகி இருக்கிறது என்ற அந்தக்  குழந்தையின் கேள்விக்கு அந்தக் குழந்தையின்  அப்பா இவ்வாறு சொல்லுவார்- " இந்த ஒரு பருக்கை ஏதோ ஒரு ஊர்ல, யாரோ ஒரு விவசாயி வயலில் நெல்லாக இருந்திருக்கும். அது அறுவடை செய்யும் போது வயலிலேயே தங்காமல், அடிக்கும் போது களத்தில் சிதறாமல் சேகரிக்கப்பட்டு ஒரு அரவை மையத்திற்கு சென்றிருக்கும். அங்கே அந்த சிறு நெல் மணி அரைக்கப்பட்டு, புடைக்கப்பட்டு, சலிக்கப்பட்டு அதில் தொலையாமல், பின் ஒரு மூட்டைக்குள் அரிசியாய்  மாற்றம் செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும். அந்த மூட்டை அரிசியை கடையில் இருந்து வாங்கி வந்து,  உனது தாய் அதை எடுத்து சமைக்கும் போது அந்த ஒற்றை அரிசியை தவறவிடாமல் உனது தட்டு வரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அப்படிப்பட்ட இந்த ஒற்றைப் பருக்கையை நீ வீணாக்கலாமா" என்று கேட்பார்.

அமெரிக்காவில் மட்டும் 16,100 கோடி டாலர்கள் அளவு ஒவ்வொரு ஆண்டும் உணவு வீணாக்கப்படுகிறது. இந்தப் பணம் அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்காக்கள், நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள், எப்.பி.ஐ(FBI) எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை, போர்வீரர்கள் மருத்துவக் காப்பீடு, மத்திய உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை(Food and Drug Administration) ஆகிய அமைப்புகளுக்கு வழங்கப்படும் வருடாந்தர வரவு செலவிற்கான தொகையை விட அதிகம். நல்ல நிலையில் உள்ள, பாதுகாப்பான, அனைவரும் உண்ணக் கூடிய உணவை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். மழைநீர்க் காடுகள், பல்லுயிர் வசிக்கும் இடங்களை அழித்து அங்கு தானியமும் ஏனைய உணவுப் பொருட்களும் பயிரிடும் போக்கினால் ஏற்படும் இயற்கை அழிவிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகிறது என்கிறார் ராபர்ட் க்ரீன்பீல்டு என்ற சமூக ஆர்வலர். இவர் அமெரிக்கா முழுவதும் பல்வேறு உள்ள ஊர்களுக்கு சென்று அங்குள்ள மளிகைக் கடைகளில் தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களை சேமித்து, அதை அந்தந்த ஊர்ப் பூங்காக்களில் கண்காட்சியில் வைத்து மக்களிடம் உணவு விரயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

 




(ராப் க்ரீன்பீல்ட் மளிகைக் கடைகளால் தூக்கி எறியப்பட்ட நல்ல நிலையில் உள்ள உணவுடன். முதல் படம் சான் டியாகோ, கலிஃபோர்னியாவில் எடுக்கப்பட்டது. பின்னது லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் எடுக்கப்பட்டது. நன்றி- robgreenfield.org)

உணவு நிறுவனங்கள் வகுத்துள்ள அழகு மற்றும் அளவு குறித்ததான தரக் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப பழங்களும், காய்கறிகளும் அவை விளையும் இடத்திலேயே பெரும்பாலும் கழிக்கப்படுகின்றன. கொஞ்சம் சிறியதாக இருக்கிறது அல்லது சரியான நிறத்தில் இல்லை இல்லை என்பதைப் போன்ற அற்ப காரணங்களால் இவ்வாறு உணவு பொருட்கள் வீணாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அமெரிக்காவை பொறுத்தவரை உணவுப் பொருள்களின் மேல் அச்சிடப்படும் தேதிகள் பெரும்பாலும் அந்தப் பொருள் அதிகபட்சமாக எவ்வளவு நாள் வரை புதியதாக இருக்கிறது என்பதற்கான அளவுகோலே அன்றி, அந்தப்  பொருள் அந்தத் தேதிக்கு பின் கெட்டு விட்டது என்ற அர்த்தத்தில் அச்சிடப்பட்டது அல்ல. இந்தப் புரிதல் பலருக்கு இல்லை என்பதால் வாடிக்கையாளர்கள் வாங்காத இவை வெறுமனே கழிவாக குப்பைத் தொட்டிகளில் கொட்டப்பட்டு பின்பு குப்பைக்கூடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே வீணாகத் தூக்கியெறிப்படுகிறது.




(எக்விடோர் நாட்டில் சரியான அளவில் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்ட வாழைப்பழங்கள்)

த்ரிஷ்டிரம் ஸ்டுவர்ட் என்ற இங்கிலாந்தை சார்ந்த எழுத்தாளர் எழுதிய புத்தகம் "வேஸ்ட்: அன்கவரிங் தி குளோபல் புட் ஸ்கேண்டல்"(Waste: Uncovering the Global Food Scandal) என்பதாகும். இந்தப் புத்தகத்தில் உணவு எவ்வாறு வீணாகிறது என்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய அளவு ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார். நீங்கள் ஒரு மாம்பழம் பயிரிடுபவர் என்று வைத்துக் கொள்ளலாம். உங்கள் முயற்சியில் 9 மாம்பழங்கள் வளர்ந்துள்ளது. இதில் சரியான முறையில் சேமிக்காததால் 1 மாம்பழத்தை அது விளைந்த இடத்திலேயே தூக்கிப் போடுங்கள். 2 மாம்பழங்களை அழகில்லை அல்லது சரியான அளவில் இல்லை என்று நீக்குங்கள். 2 மாம்பழங்களை வாங்கி வைத்து உண்ணாமல் அது வீணான பின் தூக்கி எறியுங்கள். மீதம் உள்ள 4 மாம்பழங்களை மட்டும் உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி  விளைவித்ததில் பாதிக்கு மேல் உண்ணப்படாமல் வீணாகும் பரிதாப நிலையே இங்கு நிலவுகிறது என்று கூறுகிறார். உணவுப் பொருட்களில் நூறு சதவிகித பயன்பாடு என்பது நல்ல இலக்கு என்றாலும் அது நிறைவேறுவதற்கு சாத்திய கூறுகள் இன்று இல்லை. ஆயினும் கிட்ட தட்ட 55 சதவிகித உணவு பயன்படுத்தப்படுவதில்லை என்பது இந்த பூமிக்கும், சுற்றுச் சூழலுக்கும் கவலை தரும் செய்தி.

இதைச் சரி செய்வதற்கான மந்திரச் சாவி வாடிக்கையாளரான நம் அனைவரின் கைகளிலேயே இருக்கிறது. ஒரு குடும்பத்தின் உணவுத் தேவை என்ன என்பதை சரியாக கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல முதலில் தேவையான அளவு மட்டுமே தானியங்கள், காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். சரியான அளவோ, அல்லது தோல் நிறமோ இல்லாத  காய்கறிகளும் பழங்களும் உடலுக்கு தரும் ஊட்டமும் சரியான அளவுள்ள, பார்ப்பதற்கு நன்றாக உள்ள காய்கறிகள் தரும் ஊட்டமும் ஒன்றே என்ற புரிதல் வேண்டும்.மிஸ்பிட்ஸ் மார்கெட்ஸ்(Misfits Markets),புல் ப்ரொடியூஸ்  (Full Produce), இம்பர்பெக்ட் புட்ஸ்(Imperfect Foods) , ஹங்கிரி ஹார்வெஸ்ட்(Hungry Harvest) போன்ற அமெரிக்க நிறுவனங்கள், உணவுப் பெருநிறுவனங்கள் வைத்துள்ள வரைமுறைகளுக்கு பொருந்தாது என நிராகரிக்கும் காய்கறிகளையும் பழங்களையும் வாங்கி அவற்றை மலிவு விலையில் வாடிக்கையாளர் வீடுகளுக்கு, உணவு விடுதிகளுக்கு விற்கின்றன. இது போன்ற முயற்சிகள் இன்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றாலும் இவை இன்னும் பரவலாக்கப்பட வேண்டும்.




(மங்களூரில் ஒரு மார்க்கெட்டில் கொட்டப்பட்டுள்ள காய்கறிகள்)

மேலை நாடுகளில் உணவுப் பொருட்கள் மேல் அச்சிடப்படும் தேதிகள் எல்லாம் உணவுப்  பாதுகாப்பு குறித்தது அன்று, என்பது மட்டுமன்றி இவை எந்த அரசாங்க நிறுவனங்களாலும் அல்லது தனியார் நிறுவனங்களாலும் முறைப்படுத்தாத ஒன்று என்ற விழிப்புணர்வு மிகவும் தேவை. இதனால் உணவுப் பொருள் மேல் குறித்துள்ள தேதிக்குப்  பின் உணவுப் பொருள் வீணாகி விட்டது என்ற எண்ணத்தில் அந்தப் பொருளை வாடிக்கையாளர்கள் ஒதுக்கும் நிலைமையும், அதனால் விற்காத இந்தப் பொருட்கள் வீணாகக் குப்பையில் சேரும் அவல நிலையும் மாறும். பொருட்கள் மேல் அச்சிடப்படும் தேதி கடந்தவுடன்  ஒதுக்கப்படும் பொருட்களை, அவை பாதுகாப்பானவை என்னும் பட்சத்தில், விலை குறைப்பு செய்தாவது விற்பனைச் செய்ய உணவு நிறுவனங்கள் முன்வர வேண்டும். அவ்வாறு விற்பனை செய்த பின் எஞ்சியுள்ளவற்றை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினால் அது நிறைய பேருக்கு உணவாக மாறிப் பயன் அளிக்கும். உணவு நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு இந்தப் பொருட்களை அளிப்பதற்கு ஆகும் செலவினை  குறைக்கும் விதமாக , அரசாங்கம் வரிச் சலுகை அளித்து ஊக்கப்படுத்தினால் மேலும் நிறைய உணவு நிறுவனங்கள் இந்த நோக்கத்தில் பங்கேற்க முடியும். லாபத்தை மட்டுமே குறி வைத்து இயங்கும் உணவு நிறுவனங்களை லாபம் மட்டுமன்றி, ஆரோக்கியமான மனிதர்கள் மற்றும் ஆரோக்கியமான பூமி என்று மும்முனை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தத் திட்டத்தில் இணைத்தால் அதை விட சிறப்பானதொன்று கிடையாது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை பில் எமர்சன் குட் சமாரிட்டன் புட் டொனேஷன் ஆக்ட் 1996 (Bill Emerson Good Samaritan Food Donation Act 1996) என்ற சட்ட விதிப்படி உணவு நிறுவனங்கள் நல்லெண்ண அடிப்படையில் கொடையாக வழங்கும் உணவில் எந்தக் குறை இருந்தாலும், அதைக் காரணம் காட்டி அந்த நிறுவனங்கள் மேல் வழக்குத் தொடுக்க இயலாது என்ற சட்டமும் உள்ளது. அது மட்டுமன்றி உணவு நிறுவனங்கள் மேல் அமெரிக்காவில் இது வரை ஒரு வழக்குக் கூட பதிவானதில்லை என்பதை யூனிவர்சிட்டி ஆப் அரிசோனா நடத்திய ஒரு ஆய்வு முடிவில் இருந்து நாம் அறிய முடிகிறது. எனவே இந்தத் திட்டத்தில் உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பங்கேற்க சட்ட ரீதியான பாதுகாப்பு ஏற்கனவே இருக்கிறது. இதைத் தாண்டி எஞ்சும் உணவினை கால்நடைகளுக்கு தீவனமாகவோ அல்லது எருவாகவோ பயன்படுத்தலாம். மழைக் காலத்தில் தக்காளி விலை ஏறி விட்டால் மீம் போடும் இந்தத் தலைமுறை தன்  குடும்பத்திற்கு தேவையான  தேவையான காய்கறி பழங்களை தன் வீட்டுத் தோட்டத்திலும் வளர்த்தால் கூட உணவுச் சங்கிலியில் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.



(கிட்டத்தட்ட 15 முதல் 25 சதவிகித உணவு விரயம் நம் வீட்டு சமையல் அறைகளில் ஏற்படுகிறது. நான்கு பையளவு மார்க்கெட்டில் வாங்கும் மளிகைப் பொருளில் ஒரு பையைக் குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு இது சமம்) 



(உணவு விரயம் எங்கெங்கு எத்தனை சதவீதம் ஏற்படுகிறது என்பதைக் காட்டும் ஒரு படம்)

உணவின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவர். கல்வி, கலை, அறிவியல் என்று மனித குல வளர்ச்சிக்கு வித்திடும் பல்வேறு முயற்சிகளும், அடிப்படை வசதிகளில் தன்னிறைவு அடைந்த சமூகத்திடம் இருந்தே பிறக்கிறது. பல துறைகளில் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சி சிறப்பானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒட்டுமொத்த மனித சமூகமும் அதே அளவு உத்வேகத்துடன் இணைந்து பணியாற்றினால் இன்னும் எத்துணை பெரிய உயரங்கள் வசப்படும் என்று எண்ணிப் பார்த்தால் உணவுச் சங்கிலி சீராக நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகள் எவையென நமக்குத் தெளிவாக விளங்கும். உணவைச் சரியாக பயன்படுத்துவதற்கான ஆயத்தங்களை நாம் ஒவ்வொருவரும் நமது வீடுகளில், அலுவலகங்களில், பள்ளிகளில் இருந்து தொடங்குவோம்.உணவை வீணாக்கக் கூடாது என்பதை நமது எதிர்கால சந்ததியினருக்கு சொல்லி வளர்ப்போம். ஆரோக்கியமான பூமியை முந்தைய தலைமுறையினர் நமக்கு பரிசளித்து சென்றுள்ளனர். இந்த அழகான பூமியில், எளிதாக தவிர்க்கக் கூடிய கழிவுகளை கொட்டி அழிக்காமல், பூமியை நமக்குக் கிடைத்த அளவிலாவது அடுத்த தலைமுறைக்கு சேர்ப்பிப்பது நமது தலையாய கடமை. இன்று பாரதியார் இருந்திருந்தால் "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் அனைவரும் இணைந்து இந்த சகத்தினை திருத்திடுவோம்" என்று பாடி இருப்பார். உணவு விரயத்தைத் தவிர்த்து, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்.