திங்கள், ஜூன் 18, 2012

கதம்ப மாலை - 4


ஒரு கல் ஒரு கண்ணாடி 

ஒரு தமிழ் திரைப்படம் பார்த்து வாய்விட்டு சிரித்து தான் எவ்வளவு நாள் ஆகிவிட்டது. அதுவும் இரட்டை அர்த்தம் இல்லாத நகைச்சுவை என்பது தமிழ் சினிமாவில் ரொம்பவே கம்மி. ஆனால் சமீபத்தில் பார்த்த "ஒரு கல் ஒரு கண்ணாடி" ரசிக்க வைக்கும் நகைச்சுவை தோரணம். நகைச்சுவை படத்திற்கு கதை என்று ஒன்று தேவை இல்லை என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி. இந்த படமும் அந்த விதியை மீறாமல் இருந்தாலும் அருமையான துணை நடிகர்கள் சரண்யா, சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக வரும் அழகம் பெருமாள் தரும் அசத்தலான நடிப்பு, ஹாரிஸின் மனதை வருடும் இன்னிசை, டைரக்டரின் அசத்தலான காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை ஆகிய பிளஸ்களால் ரசிகர்கள் மனக்கண்ணாடியில் அழகான பிம்பமாய் பதிகிறது. ராஜேஷ் படம் என்றாலே டாஸ்மாக் காட்சிகளோ அல்லது தண்ணி அடிக்கிற சீனோ இல்லாமல் இருக்காது. இந்த படத்திலும் அது உண்டு. கலகலப்பாக படம் நகருவதால் அந்த காட்சிகள் மனதை உறுத்தாவிட்டாலும் ஹீரோ மற்றும் சந்தானம் மது அருந்தும் காட்சியை டைரக்டர் கொஞ்சம் ஓரம் கட்டி இருக்கலாம். உதயநிதி தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை தேர்ந்து எடுத்திருக்கிறார்.நன்றாக நடிக்க மட்டும் அல்லாது டயலாக் டெலிவரியும் அழகாக செய்கிறார். நடனப் பயிற்சியும் எடுத்தால் தமிழ் சினிமாவிற்கு ஒரு ஹீரோ ரெடி. ஹன்சிகா "சின்ன குஷ்பூ" என்ற பட்டத்திற்கு ஏற்ப தமிழர்களுக்கு பிடித்த மாதிரி கொழுக்கு மொழுக்கு ஹீரோயின். ஸ்டைலாக கோபப்படவும், சில நேரங்களில் அழகாக நடிக்கவும் செய்கிறார். சந்தானத்திற்கு "ஓய்ட் காலர்" காமெடி என்பது அல்வா சாப்பிடற மாதிரி. உடல்மொழி, முகபாவம் என அனைத்தும் காமெடி பேசுகிறது. தனது கலகலப்பான காமெடியால் படத்தை தொய்வில்லாமல் தூக்கி நிறுத்துகிறார்."அழகே அழகே" பாடலும், "வேணாம் மச்சான்" பாடலும் முணுமுணுக்க வைக்கும் ரகம். கிளைமாக்ஸ் கொஞ்சம் இழுவை. படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் சிரிப்புக்கு முழு கேரன்டியுடன் படம் ஒஹோ ஒஹோ.


உதயநிதி ஸ்டாலின் - ஹன்சிகா 
மதுரை ஆதினத்தின் இளைய ஆதினம் 

சினிமாவிற்கு கொஞ்சமும் குறையாத விறுவிறுப்பும் பரபரப்புமாய் உள்ளது நித்யானந்தா மற்றும் மதுரை பெரிய ஆதினம் பற்றி வரும் செய்திகள். மதுரை ஆதினத்தில் இளைய ஆதினமாக நித்யானந்தா தேர்வு செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பாலியல் புகார் பற்றி கேள்வி எழுப்பிய கன்னட நிருபரை நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதால் நித்யானந்தா கைது செய்யப்பட்டு நான் இந்த இடுகையை எழுதும் இந்த நேரத்தில் ஜாமீனிலும் வெளியே வந்துவிட்டார். அரசியலுக்கு எவ்வாறு மன சுத்தம் உள்ளவர்கள் வந்தால் சிறப்பாக இருக்குமோ அதே பாணியில் ஆன்மிகத்திற்கும் நல்ல மனிதர்கள் தேவை. ஆனால் அரசியல் அளவிற்கு மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயம் அல்ல ஆன்மிகம் என்பதாலும் மக்கள் தங்களுக்கு பிடித்த ஆன்மீகவாதிகளை பின்பற்றலாம் அல்லது வேறு வழியில் இறைவனை தேடலாம் என்பதாலும் நித்யானந்தாவின் செயல்பாடுகளை அதிர்ச்சிகரமான கண் கொண்டு பார்க்கவில்லை. ஆனாலும் சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் இருண்ட முகங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சிய விதத்தில் நித்யானந்தாவின் செய்கைகள் பகீர் ரகம். பணம், செல்வாக்கு, ஆடம்பரம், ஆசிரமத்திற்கு ஆறுதல் தேடி வரும் பெண்களிடம் முறைகேடான நட்பு, ஒரு வேளை மாட்டிக் கொண்டால் அந்த பெண் யார் என்றே தெரியாது என்று சாதிப்பது என்று காவி அணிந்த கபடதாரிகளின் இன்னொரு முகத்தை உரித்து காட்டி, சமுதாயத்தின் இன்னொரு வேரான ஆன்மிகமும் எவ்வாறு புரையோடிப் போய் இருக்கிறது என்று புரிய வைத்ததற்காக நித்யானந்தாவிற்கு நன்றி நவிலலாம். 


ஆதி சங்கரர் 
இவ்வளவு கூத்துக்கு பிறகும் அவரே இளைய ஆதினமாக நீடிப்பார் என்று பெரிய ஆதினகர்த்தர் சொல்வதை பார்த்தல் அவருக்கு என்ன நிர்பந்தமோ என்று மட்டுமே தோன்றுகிறது.மடங்கள் நிர்வகிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள், வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடை பணம், அப்படி வரும் பணம் மக்களுக்கென பயன்படுத்தப்படும் விதம் என்பதை பற்றி எந்த விதமான ஒளிவுத்தன்மை இல்லாமல் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை இத்தகைய ஆன்மிகவாதிகளே ஏற்படுத்தி விடுவர் போலிருக்கிறது. அதுவும் நன்மைக்கு தான்.இந்தியாவிலேயே எந்த நெறிமுறைக்கும் உட்படாத முழு வரி விலக்கு உள்ள தொழில் என்றால் அது ஆன்மிகம் தான். அதனால் இத்தொழிலுக்கும் கட்டுப்பாடுகள் அவசியமாகிறது. உங்களில் யார் ஒருவர் நல்லவரோ அவர் முதலில் கல் எறியுங்கள் என்கிறது பைபிள். எனவே நித்யானந்தா நல்லவரா கெட்டவரா என்பதை தீர்மானிக்கும் உரிமை நம்முடையது அல்ல.அதை காலம் தீர்மானிக்கும்.ஆயினும் இத்தகைய நிகழ்வுகள் ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர் போன்ற மகான்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லையே என்ற ஏக்கத்தை மட்டும் விட்டு செல்கிறது.

ஜனாதிபதி தேர்தல்


ஒரு ரப்பர் ஸ்டாம்பை உருவாக்கத்தான் எத்தனை பிரயத்தனங்கள். மம்தா கலாமையும், ஜெயலலிதா சங்கமாவையும், காங்கிரசு கட்சி தன்னுடைய வேட்பாளராக பிரணாபையும் அறிவித்து உள்ளன. பிஜேபி இன்னமும் தன்னுடைய வேட்பாளரை அறிவிக்கவில்லை. நாட்டின் முதல் குடிமகன் எனப்படும் ஜனாதிபதி பதவி ஒரு பொம்மை பதவி என்பது அனைவரும் அறிந்தது. இன்றைய அரசியலில் யார் வலிமையானவர் என்று அவரவர் மேலாண்மையை காட்டும் ஒரு நிகழ்வாகவே இன்றைய ஜனாதிபதி தேர்தல் உள்ளது. தற்பொழுது ஜனாதிபதியாக உள்ள பிரதிபா பாடீல் பல நாடுகளுக்கு அரசு செலவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரசு பணத்தை கரைத்ததோடு மட்டும் அல்லாமல் தன்னுடைய சம்பளத்தை 200 மடங்கு உயர்த்தி உத்தரவு போட்டதோடு மட்டும் தனது கடமையை முடித்து கொண்டார். இப்படிப்பட்ட ஜனாதிபதி ஒருவர் தேவை தானா? இதற்கு பதில் ஜனாதிபதி பதவி என்பதை நீக்கி விட்டால் மக்களின் வரிப் பணமாவது மிஞ்சும். இந்திய அரசியலமைப்பில் ஜனாதிபதி பதவி என்பது பல்வேறு அதிகாரங்களை உள்ளடக்கியது. எனவே இந்த பதவியை நீக்கிவிடுவது என்று பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை முன் வைப்பது அதிகப் பிரசங்கித்தனமாக தோன்றலாம்.ஆனால் பெரும்பாலும் ஆளுங்கட்சி சார்புடையோர் இந்த பதவியில் அமர்வது வாடிக்கை என்பதால் கிட்டத்தட்ட ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுவது மட்டுமே இன்றைய ஜனாதிபதியின் வேலை. வட நாட்டு தலைவரான மம்தா தமிழரான கலாமை ஆதரிக்கும் போது தமிழர் நலன் காக்க மட்டுமே பிறவி எடுத்ததாக காட்டிக் கொள்ளும் ஜெயலலிதா சங்மாவையும், கருணாநிதி தனது கூட்டணி கட்சியான காங்கிரசு அரசு வேட்பாளரான பிரணாபையும் ஆதரிப்பது வேடிக்கை. இத்தனைக்கும் பிரணாப் இலங்கையில் போர் நடந்த போது இந்திய அரசின் தூதுவராக சென்றும் அங்கு அப்பாவி தமிழர்கள் மேல் இலங்கை அரசு நடத்திய தாக்குதல்களை கண்டிக்கவில்லை. அத்தகைய ஜனாதிபதி வேட்பாளரை வரவேற்க தடபுடலாக விருந்து உபசாரத்திற்கு ஏற்பாடு செய்கிறார் கருணாநிதி. இதை விட தமிழர்களுக்கு செய்ய கூடிய துரோகம் என்னவாக இருக்க முடியும்? சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் போன்றோர் அலங்கரித்த ஜனாதிபதி பதவி இன்று வெறும் அலங்கார பதவியாக இருப்பது ஜீரணிக்க கூடியதல்ல. இன்னும் என்னென்ன வேடிக்கைகளை ஜனநாயகம் என்ற பெயரால் சகித்துக்கொண்டிருக்க வேண்டுமோ தெரியவில்லை. இன்றைய நிலையில் பதவிக்கு வருவது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். மக்களுக்கு சிறிதளவாவது நல்லது செய்வோம் என்ற எண்ணம் உடையவர் யாரேனும் வந்தால் நாடும் மக்களும் பிழைத்துப் போவார்கள் என்பதை தவிர வேறு சொல்வதற்கு இல்லை !!!

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா திருமணத்தில் தமன்னா
சிறப்பு பாராட்டு: இந்தோனேசியா ஓபன் பாட்மிட்டன் பட்டம் வென்ற சாய்னா நெய்வாலுக்கு பாராட்டுக்கள் மற்றும் ஒலிம்பிக்கிலும் உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள் !!   



சாய்னா நெய்வால்