புதன், டிசம்பர் 28, 2011

அணை ஆயுதம் அல்ல



இதிகாசம் மற்றும் புராணங்களில் பல வகையான அஸ்திரங்களை பற்றிய குறிப்புகள்  உண்டு. பாசுபதாஸ்திரம், நாகபாணம் என்று பல பெயர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அந்தந்த மாநில அரசியல்வாதிகளுக்கு பாசுபதாஸ்திரம், நாகபாணம் போல தமிழ்நாட்டு மக்களின் குடி நீர் மற்றும் ஜீவாதாரம் சம்பந்தப்பட்ட அணைகளோ அல்லது நதி நீர் பங்கீடோ ஆகிவிடுகிறது. கர்நாடக மாநிலத்தில் சென்ற முறை தேர்தல் நடந்தபோது எடியூரப்பா ஒகேனக்கல் பிரச்னையை கிளப்பி எப்படி வெற்றி வாகை சூடினாரோ அதே பாணியில் இந்த இடைத் தேர்தலை மனதில் வைத்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி முல்லை பெரியாறு அணை பிரச்னையை கையில் எடுத்துள்ளார். தமிழ் நாட்டில் முல்லை பெரியாறு அணை பாசனத்தால் விளையும் உணவுப் பொருட்கள் கேரள மக்களுக்கும் போய் சேருகிறது. இடுக்கி அணையில் போதிய அளவு நீர்மின் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததாலும், அந்த பகுதியில் உள்ள கேரளாவை சார்ந்த தொழில்கள் மின் உற்பத்தி இன்றி பாதிக்கப் படுவதாலும், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம்  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 155 அடியாக உயர்த்தப்பட்டால் முறையன்றி அணை பகுதியில் கட்டப்பட்ட கேரளாவை சார்ந்த சுற்றுலா விடுதிகள், ரிசார்ட்டுகள் போன்றவை காணாமல் போகும் என்ற அச்சத்தாலும் அணை பலவீனமாக இருப்பதாக கபட நாடகம் ஆடி வருகிறது கேரள அரசு.

Mullaperiyar Dam
முல்லை பெரியாறு அணை
 அணை நிலநடுக்கம் பாதிக்கும் பகுதியில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் ஒரு வேளை அணை உடைந்தால் முல்லை பெரியாரில் இருந்து வெளியேறும் நீரை அதை விட ஏழு மடங்கு பெரிதான இடுக்கி அணையில் தேக்க முடியும். முல்லை பெரியாறு மற்றும் இடுக்கி அணைகளுக்கு இடையே உள்ள குமுளி, ஏலப்பாறா பகுதிகள் முல்லை பெரியாறு அணை மட்டத்தில் இருந்து பல நூறு அடிகள் மேலே இருக்கின்றன. எனவே நீரால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. வெறும் 3 உறுப்பினர் பெரும்பான்மையில் பதவியில் இருக்கும் காங்கிரஸ் அரசு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி இழக்க நேரிடும். பதவி ஆசை காரணமாகவே மடுவை மலையாக்கி இன உணர்வு என்னும் நெருப்புக்கு நெய்விட்டு குளிர் காய்கிறது கேரள அரசு. ரோம் நகரம் எரிந்த போதும் பிடில் வாசித்த நீரோ போல எந்த பிரச்சனை நடந்தாலும் கருத்து சொல்லாத பிரதமர் மன்மோகன் சிங் இந்த பிரச்னையில் தலையிட்டு எந்த சமரச முயற்சியும் எடுக்கப் போவதில்லை. முதலில் பொம்மை பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால் பரவாயில்லை !!!

அணை உடைந்துவிடும் என்று முன்பு கேரள அரசு எழுப்பிய சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு 1980 முதல் 1994 வரை நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழகம் பல கோடி ரூபாய் செலவில் அணையை முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு பலப்படுத்தியது. இந்த உறுதித் தன்மை பல முறை நிபுணர்களின் ஆய்வின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டது. 2 லட்சம் ஏக்கர் பாசனம் மற்றும் 60 லட்சம் தமிழ் மக்களின் குடி நீர் ஜீவதாரத்திற்கு ஆணிவேராக விளங்கும் முல்லை பெரியாறு அணையை வெறும் 5
வருடம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொள்ளை அடிக்க நினைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் இந்த மண்ணில் தோன்றியவர்களா என்ன என்று சந்தேகிக்க மட்டுமே முடிகிறது. சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமையை பெற்றுத் தந்த கல்லணையை கட்டிய கரிகாலன் எங்கே, எந்த தொலை நோக்கும் இல்லாமல் கேவலம் ஆட்சிக்காக பல லட்சம் மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அணையை இடிக்கப் போராடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே.

கேரளா மற்றும் கர்நாடக அரசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கற்று கொள்ள வேண்டியது ஒன்று - தவறே ஆனாலும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பது. அரசியல்வாதிகள் மட்டும் அல்ல அணை பிரச்சனை ஆரம்பித்த பின்பு கேரள திரை உலகை சார்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேரள அரசியல் நிலைப்பாட்டிற்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டார்கள். ஆனால்
அரசியல்வாதியாக தன்னைக் காட்டி கொள்ளும் இளைய தளபதி நடிகர் மருந்துக்கு கூட தமிழ் நாட்டு மக்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்படிப் பட்டவரை தமிழ் நாட்டை காக்க வந்த இந்திரன் சந்திரன் என்று சிலாகிக்கும் கடைக் கோடி ரசிகனுக்கு இது புரிந்தால் சரி.தமிழ்நாட்டில் உள்ள  அரசியல் கட்சிகளும் தனி தனியாக கண்டன அறிக்கை/கூட்டம் என்று நடத்தியதுடன் சரி. ஒன்றிணைந்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த தமிழக அரசியல்வாதிகள் தவறி விட்டனர். 

Unity in Diversity

எடியூரப்பா பாசுபதாஸ்திரம் என்று எண்ணி எய்த ஒகேனக்கல் அம்பு பதவி அளித்தாலும் பதவியை அளித்த சில நாட்களிலே பதவியை பறித்து ஜெயிலுக்கே அனுப்பி வைத்தது. இன்று எடியூரப்பா அரசியலில் இருக்கும் இடமே தெரியவில்லை. கேரளா முதல்வர் உம்மன் சாண்டியும் பிரம்மாஸ்திரம் என்று எண்ணி முல்லை பெரியாறு அணை பிரச்னையை எடுத்துள்ளார். பிரம்மாஸ்திரத்தை எய்து அதை திரும்பப் பெறும் வழி அறியாமல் தண்டிக்கப் பட்ட அஸ்வத்தாமன் கதையை உம்மன் சாண்டி படித்திருக்கவில்லை போலிருக்கிறது.எனினும் கேரள மக்கள் இந்த உண்மையை உணர்ந்து காங்கிரஸ் அரசை வரும் தேர்தலில் தோல்வி அடையச்  செய்து பிரிவினை அரசியல் வளர்ச்சி ஆயுதம் அல்ல அது வீழ்ச்சி ஆயுதம் என்றும் கேரள மக்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு துணை நிற்பவர்கள் எதிரானவர்கள் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டுகிறேன்.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

நீ மொழிகள் என்றால் நான் தமிழா? ஓசைகளா?

Kolaveri Di Song
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் இசையோடு இணைப்பது தமிழர் வழக்கம். சந்தோஷம், துக்கம், வெறுமை, காதல், உறவு, பிரிவு என்று எல்லா வித உணர்வுகளையும் நாட்டுப்புற பாட்டு, கவிதை, கானா என்று பல வழியாக வெளிப்படுத்தியது ஒரு காலம் என்றால் இன்றோ திரை இசை அந்த இடத்தை  பிடித்து உள்ளது.

சமீபத்தில் வெளியான "மூன்று" படத்தின் பாடலே இந்த கட்டுரை எழுத என்னைத் தூண்டியது. "ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி" என்று தொடங்கும் அந்த பாடல் மெட்டு நன்றாக இருந்தாலும் தமிழ் பாடலா இது என்று எண்ணும் அளவுக்கு ஆங்கில வார்த்தைகள் மட்டுமே பெரும்பான்மையாக கொண்டுள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால் மொழி எல்லைகளை கடந்து பிபிசி லண்டன் வானொலி வரை ஒலித்த முதல் தமிழ்(ஆங்கில??) பாடல் என்பது பெருமை தரும் விஷயம். ஒரு புறம் இந்திய இசை அமைப்பாளர்களின்  இசைத்திறன்  உலகெங்கும் பரவி இந்தியா என்றாலே ஐ .டி. கம்பெனிகள் மட்டும் தான் என்ற மாயையை உடைத்து இந்தியர்களின் பன்முகத் தன்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் விதமாக இந்த பாடல் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளித்தாலும், மயில் இறகு போல் மனதை வருடும் அர்த்தம் பொதிந்த பாடலுக்கே மனசு ஏங்குகிறது.

ரம்மியமான ஒரு மாலை நேர மழை நாளில் குளிருக்கு இதமாக தேநீர் பருகியபடியே வீதியில் வெள்ளமாக சுழித்து ஓடும் மழை நீரை காணும் மகிழ்ச்சி வருகிறது கீழ்வரும் இந்த பாடல் வரிகளை கேட்கும் போதெல்லாம்.

தூரத்தில் வந்தாலே என் மனதில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தாங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணப் போகிறேன்
(திரைப்படம்: காக்க காக்க பாடல்: ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடலாசிரியர்: தாமரை )

காதலன் தன்னுடைய காதலியை பற்றி "மின்னலை பிடித்து, மேகத்தை துடைத்து, பெண் என்று படைத்து வீதியில் விட்டு விட்டான்" என்று அழகுற வர்ணிக்கும் போது  உண்மையிலேயே கேட்பவருக்கும் அத்தகைய அழகான பெண்ணை பற்றிய கற்பனையை கடத்துகிறான்.

காற்றிலே அவளது வாசனை, அவளிடம் யோசனை கேட்டுதான் பூக்களும் பூக்குமா
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும் போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
.....
சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்களில் சாயுவேன்.
பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடி போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
(திரைப்படம்: பையா பாடல்: துளி துளி துளி மழையாய் பாடலாசிரியர்: ந. முத்துகுமார்)

கோமாளியின் முகமூடி அணிந்து கமலஹாசன் "அபூர்வ சகோதரர்கள்" திரைப்  படத்தில் உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் என்று பாடிக்  கலங்கும் போது
 ஈரம் பூக்காத கண்களே இருக்க முடியாது. மெட்டை வார்த்தைகள் ஜெயித்த ஜாலம் அது.

வானம் அழுதாக்கா இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்...
கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
(திரைப்படம்: அபூர்வ சகோதரர்கள் பாடல்: உன்ன நெனச்சேன் பாடலாசிரியர்: ந. முத்துகுமார் )

சமீபத்தில் வெளியான  7 ஆம் அறிவு திரைப் படத்தில் வந்த பாடலின் சோக வரிகள் இங்கே. நாயகனின் மனக் காயம் ஆற்றும் ஆறுதல் வார்த்தைகளை கேட்போர் அனைவரும் தேடி தோற்பர்.

வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு 
நம்பி நொந்து போனனேன் பாரு அவ பூவு இல்லை நாறு
(திரைப்படம்: 7 ஆம் அறிவு  பாடல்: யம்மா யம்மா காதல் பாடலாசிரியர்: கபிலன்)

பாரதியாரின் கருத்தாழம் மிக்க பாடல் வரிகள் கண்ணனையும் கண்ணம்மாவையும் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமரவைக்கும் நேர்த்திக்கு ஈடு இணையில்லை.

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
(திரைப்படம்: ஏழாவது மனிதன் பாடல்: காக்கை சிறகினிலே பாடலாசிரியர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் )

சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்ட கரிய விழி கண்ணம்மா
வானக் கருமை கொள்ளோ
பட்டுக் கருநீல புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு  நிசியில்
தெரியும் நட்சத்திரங்களடி
(திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல்: சுட்டும் விழி பாடலாசிரியர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்)

சுதந்திர போராட்ட காலத்தில் தெருக்கூத்து, நாடகங்கள் வாயிலாக மக்களுக்கு ஊட்டப்பட்ட நாட்டுப்பற்று இன்று வைரமுத்துவின் வைர வரிகளாய் மக்களை சென்று அடைகிறது.

மொழி மாறலாம் பொருள் ஒன்றுதான்
கழி மாறலாம் கொடி ஒன்றுதான்
திசை மாறலாம் நிலம் ஒன்றுதான்
இசை மாறலாம் மொழி ஒன்றுதான்
நம் இந்திய மொத்தம் ஒன்றுதான் வா
(திரைப்படம்: ரோஜா பாடல்: தமிழா தமிழா பாடலாசிரியர்: வைரமுத்து)



தன் செய்கையால் மனக் காயமுற்ற வாய் பேச இயலாத காதலியை எவ்வளவு அழகாக தேற்றுகின்றன இவ்வரிகள். இவ்வளவு  அழகாக கவிதை புனையும் திறன் வாய்ந்த காதலனை ஒரு முறை என்ன ஆயிரம் முறை மன்னிக்கலாம் என்று தோன்றுகிறது.

பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே மீசை வரைய மாட்டேன்
மௌனம் பேசும் போது சத்தம் கேட்க மாட்டேன்
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவை தேட மாட்டேன்
வாழ்வோ துவற்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
(திரைப்படம்: மொழி பாடல்: கண்ணால் பேசும் பெண்ணே பாடலாசிரியர்: வைரமுத்து)

துவண்டு கிடப்பவனுக்கு 100 பாட்டில் க்ளுகோஸ் ஏற்றினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு உந்துதலை தோற்றுவிக்கிறது சமீபத்தில் வந்த இந்த பாடல்.

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
 நம்ப முடியாதா நம்மால் முடியாதா நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும்  வலியோடு பிறந்திடுமே
( திரைப்படம்: 7 -ஆம் அறிவு பாடல்: இன்னும் என்ன தோழா  பாடலாசிரியர்: ப.விஜய்)

கண்ணதாசன், சந்திரபாபு ஆகியோர் எழுதிய பாடல்களை பற்றி சொல்லவே வேண்டாம். சாகாவரம் பெற்ற பாடல்கள் என்றால் அவர்கள் எழுதிய பாடல்கள் மட்டுமே. அர்த்தம் பொதிந்த வரிகள், கருத்தாழம் மிக்க சொற்கள், அன்றைக்கு மட்டுமன்றி என்றைக்கும் மாறாத உண்மைகளை எளிமையாக எடுத்து சொன்ன பாங்கு என்று அப்பாடல்களை பற்றி பெருமையாக அடுக்கிக்  கொண்டே செல்லலாம்.

பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்
( திரைப்படம்: அன்னை  பாடல்: புத்தியுள்ள மனிதர் எல்லாம் பாடலாசிரியர்: ஜே.பி. சந்திரபாபு)

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானம் உள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
(திரைப்படம்: சூரியகாந்தி  பாடல்: பரமசிவன் கழுத்தில் பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்)

வரிகளில் மட்டுமே பாடல்களின் ஜீவன் உள்ளது. நல்ல இசை அந்த பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மட்டுமே செய்கிறது. நாக்க முக்க, எவண்டி உன்னை பெத்தான், மன்மதராசா  போன்ற வகை பாடல்கள் மெட்டுக்காக ஹிட் அடித்தாலும் நல்ல அர்த்தம் கொண்ட வரிகள் உள்ள பாடல்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்.   

திரைக் கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒய் திஸ் கொலைவெறி டி பாடலின் வெற்றிக்கு பிறகு நீங்களும் "இப்போ இதான் ட்ரெண்டு", டைரக்டர் கேட்டாரு அதான், தமிழ்ல யோசிக்கவே வர மாட்டேங்குது" என்று சப்பை காரணங்களை சொல்லி ஆங்கில/தமிழ் கலவை அல்லது மிகுதியான ஆங்கில வார்த்தைகளை கொண்ட பாடல் எழுதக் கிளம்பாமல் காலம் முழுதும் நினைவில் நிற்கும் தேன் தமிழ் பாடல்கள் மட்டுமே எழுதி எங்களை மகிழ்வியுங்கள் என்பது தான். உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத  பெருமை தமிழுக்கு உண்டு - அது என்னவென்றால் தமிழ் என்ற மொழியின் பெயரையே ஒருவருக்கு பெயராக சூட்டி மகிழலாம். உலகில் உள்ள எந்த மொழிக்கு இந்த பெருமை உண்டு? ஆங்கிலம் என்ற இனிப்பை சிறிதளவு உண்டால் ஒன்றும் பாதிப்பு இல்லை. ஆனால் இனிப்பையே உணவாக உண்ண முடியாது. எனவே தெள்ளு தமிழில் மட்டுமே உங்கள் கவிதைகளை/பாடல்களை  படைத்து எங்களை மட்டுமன்றி தமிழ் தாயையும் மகிழ்வியுங்கள். பாரதியாரின் கீழ்கண்ட வாக்கை மெய்ப்பியுங்கள்.  

தேமதுர தமிழோசை உலகெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்