திங்கள், மே 31, 2021

வெற்றி என்னும் மாயமான்- கவிதை

ஏப்ரல் மாத வல்லின சிறகுகள் இதழில் இடம் பெற்ற என்னுடைய கவிதை. இந்த முழு இதழையும் படிக்க இங்கே சொடுக்கவும். திரு.லோகராஜ் அவர்களின் சிறந்த வடிவமைப்பில் இந்த இதழ் வெளிவந்துள்ளது. சாதனை பெண்களின் பேட்டிகள், நூல் திறனாய்வு, மொழிபெயர்ப்பு கவிதைகள் என்று பலவும் இடம் பெற்றுள்ளது.

 https://tinyurl.com/y4shn8fv

 


 

 வெற்றி என்னும் மாயமான் 

முயற்சியெனும் நீர் ஊற்றி
உழைப்பெனும் உரம் இட்டு
தன்னம்பிக்கை ஒளி பாய்ச்சி
வெற்றியெனும் கனி பறிக்க
எத்தனை பிரயத்தனங்கள்

தோல்வியில் தோய்ந்து
அவமானங்கள் பல கடந்து
துரோகத்தின் கசப்புணர்ந்து
கண்ணீரும் பெருவலியும் பழகி
அனுபவமெனும் ஆலகாலம் விழுங்கி
எண்ணற்ற விழுப்புண்கள் சுமந்து
மனிதருள் சிறந்தவராய் அறியப்பட
நில்லாத மனித ஓட்டம்

தோற்றவர் காரணம் அறியார்
வென்றவர் காரணம் விரும்பார்
தோல்வி சமத்துவத்தில் படி நிலை
வெற்றி தனித்துவத்தில் உயர் நிலை

இங்கே தோற்பதும் மரணிப்பதும் ஒன்றே
இரண்டாவது வருவோரை
நினைவில் கொள்வதில்லை உலகம்
சதுரங்க ஆட்டத்தின் முடிவில்
சிப்பாயும் அரசனும் ஒரே பெட்டியில்
இறப்பொக்கும் வாழும் உயிர்கள் எனில்
இங்கே வென்றவர் யார் தோற்றவர் யார்

அது மட்டும் அல்லாமல், மருத்துவர் அம்பிகாதேவி நினைவு கவிதை நூல் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றது மன மகிழ்வை அளித்தது.

 


என் நாடு - கவிதை



 
மே2021 வல்லின சிறகுகள் இதழில் என்னுடைய கவிதை. முழுக் கவிதை கீழே.

வல்லின சிறகுகள் மே மாத இதழை வாசிக்க கீழே சொடுக்கவும்.
 
 
என் நாடு 
 
மகளுக்கு மணம் முடிக்கவென்று
பல வருடமாய் மண் பானைக்குள் சேர்த்த
சிறுவாட்டு காசு செல்லாதென்றே
கனவு கலைத்தது என் நாடு

ஆசையாய் வளர்ந்த பெண்ணே
ஆறு மணிக்கு மேலெங்கும் போகாதே கண்ணே
வீட்டுச் சிறையில்  கால் விலங்கிட்டு
பெண்ணுரிமை பேணுது என் நாடு

ஊரையே கொள்ளை அடித்து
பணத்தால் நீதியை வெள்ளை அடித்து
வெள்ளை உடையும் கறுத்த மனமும் கொண்டோரை
தலைவாவென்றது என் நாடு

கனிம வளம் கார்ப்பரேட்டுக்கு
நீர்வளம் குளிர்பான நிறுவனத்துக்கு
நாசகர திட்டத்தை எதிர்க்கும் அப்பாவிக்கு
தோட்டாக்களை பரிசளிக்கிது என் நாடு

நிறத்தால் ஒருவனை உயரே வைத்து
குலத்தால் பலரை அடிமை செய்து
சாதி மதம் என்று பிரித்து வைத்து
வேற்றுமையில் ஒற்றுமையென்று 
முழங்கியது என் நாடு

எத்தனை எத்தனை உயிர் பலிகள்
பெற்ற சுதந்திரம் பாழ் செய்து
பொருளீட்ட தீயறம் செய்து
பாருக்குள்ளே நல்ல நாடென்று 
பழம்பெருமை கொள்ளுது என் நாடு

உலகின் பெரு ஜனநாயகமாம்
வோட்டும் இங்கே விலை போகுமாம்
வோட்டளி, உரிமை பேசாதே
உயிருடன் இரு, நீதி கேட்காதே
போதை கொள், சிந்திக்காதே
சொல்வதைப்படி, வேலை கேட்காதே
ஆடை தரி, மரியாதையை எதிர்பாராதே
கையைத் தட்டு, காரணம் கேட்காதே
கடமையை செய், பலனை எதிர்பாராதே
கீதையின் சாரமாய் வாழுது என் நாடு 


 
 
 
 

செவ்வாய், மே 18, 2021

முள்ளிவாய்க்கால் நினைவு தின கவிதை


மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு எழுதிய கவிதை. ஈழ சொந்தங்களுக்கு நீதியும் , நன்மையையும் தேடி வரட்டும் என்ற பிரார்த்தனையுடன் பதிவிடுகிறேன்.


புவி துளைத்த எரிகல்லாய்

கொடும் காலனின் கொலைக் களனாய்
பொழியும் அமில மழையாய்
பகலவனை விழுங்கும் கருந்துளையாய்
கொத்துக் குண்டுகள் அடைமழையாய்
குருதி குடித்தனவோர் மேதின நாள்

கண்ணீரில் நிலம் நனைந்து
முள்வேலிக்குப் பின் நம்மினம் அடைந்து
முள்ளிவாய்க்காலில் மனிதம் வீழ்ந்து
முடிந்தது ஆண்டு பன்னிரண்டு

துப்பாக்கி குண்டுகள் கோலேச்சின
தவறாமல் உயிர்மாய்க்கும் கூர்வாளாயின
மனிதம் மதம் தனிந்த பின்
பசித்த பாலகன்
துள்ளித் திரிந்த கோமகள்
 பாடித் திரிந்த புள்ளினங்கள்
கூடித் திரிந்த வண்டினங்கள்
இசைப்பதை முழுதாய் நிறுத்தியது
தரணியாண்ட தமிழினம்
ஆள்வோர் கசக்கியெறிந்த காகிதம்
உணர்வால் இணைந்த நம்சொந்தம்
உயிர்மாய்ந்த செய்தி பெருந்துன்பம்
கண் மதகுடைத்த கண்ணீர் 

புதுக்கடலானது செம்புனலானது

துயரம் வற்றா நெஞ்சுடன்
கசியும் ஈர விழியுடன்
இறந்தோர் நினைவைப் போற்றுவோம்
தமிழர் தியாகம்
பறைசாற்றுவோம்
நீதி வெல்லும் ஓர் தினம்
தமிழர் வெற்றி சொல்லும் சரித்திரம்

 

அன்னை -கவிதை


உன்னிதயத்திற்கு உயிர்கொடுத்து
உலகத்தில் உலவவிட்டதுண்டா
உதிரத்தில் விளைந்ததை
மண்காக்க உதிரச் சொன்னதுண்டா
பன்னிருதிங்கள் உடல்நொந்து
இன்னொரு உயிர் தந்ததுண்டா
பெருவலி மறந்து
மீண்டுமொரு மகவை பெற்றதுண்டா

உதிரத்தை அமுதம் ஆக்கி
உற்றவரின் பசியை நீக்கி
கூட்டு பறவைக்கும்
வீட்டு அணிலுக்கும்
கரையும் காகத்திற்கும்
கதறும் பசுவிற்கும்
அன்பாய் உணவளித்து
தக்கோரை அரவணைத்து
பிரதிபலன் கருதா மாதவமே
தியாகத்தின் மௌன உருவமமே
அன்பின் எல்லையானாய்  
அனைத்தும் இயக்கும் சக்தியானாய்

சம்பந்தருக்கு ஞானப்பால்
அம்பிகை அருளது
ராமனோ மிதிலைக்கு அப்பால்
கைகேயி வரமது
கண்டிப்பான யசோதா தன்பால்
வசுதேவர் அளித்தது
உடுமண்டலத்தை வாயில் கண்டாள்
கண்ணன் விளையாட்டது
காந்தாரியின் மக்கள் பாசம்
குந்தியின் மாறா உள்ளம்
சபரியின் ராம நேசம்
கண்டதால் உய்வுற்றது தேசம்

மகனை சுமந்து
மாற்றானை எதிர்ப்பாள்
ராணி ஜான்சியாக
சேவையில் திளைத்து
வரலாற்றை திருத்துவாள்
அன்னை தெரசாவாக
நெஞ்சுரம் கொண்டு
நாட்டை வழிநடத்துவாள்
இந்திரா காந்தியாக
மனிதம் மலர
கவிதை புனைவாள்
கவிக்குயில் சரோஜினியாக
தாங்கும் தாயானாள்
தாக்கும் இடியானாள்
மேரி கோமாக
பக்த மீராவானாள்
பாட்டின் குரலானாள்
சுப்பு லட்சுமியாக

அடுக்களையில் உழன்று
அலுவலும் பயின்று
சிறு குழந்தை பேணும்
சிறகில்லாத தேனீ
அக்கருணையின் கரம்பற்றி
இன்ப வானில் துயரமின்றி
பறப்போம் கானம் பாடி
மறவோம் நம் அன்னை மடி

ஆதி சங்கரர் பட்டினத்தார்
ஆண்டி முதல் அரசாண்டோர்
உதறாத சொந்தம் ஒன்றுண்டு
உயிரை கருவாக்கிய பூஞ்செண்டு
நாட்டை தாய்நாடு என்போம்
மொழியை தாய்மொழி என்போம்
நதிகளிடமும் தாய்மை கண்டோம்
தாங்கும் புவியிடமும் அன்னைக் கண்டோம்

வலித்தாலும் அம்மா என்போம்
வென்றாலும் அம்மா என்போம்
பசித்தாலும் அம்மா என்போம்
நிலை தாழ்ந்தாலும் அம்மா என்போம்
உலகத்தின் அத்தனை செல்வம்
அவள் தியாகத்தின் முன் அற்பம்
உணராத வாழ்வும் துன்பம்
அவள் காலடி நிழலே இன்பம்  

இத்தனை தாயும் சொன்னேன்
எந்தாய் மறந்தா போவேன்
என்னுலகினை மாற்றிய அன்னை
உன்போல் எவர்க்குண்டு ஆண்மை
அதிகாலை கண்விழிப்பாய்
பகல் முழுதும் உழைப்பாய்
அறுசுவை உண்டி தருவாய்
ஆசிரியராய் போதிப்பாய்
உடல்நலிந்தால் மருந்தாவாய்
கடிந்து திருத்துவாய்
என் கண்ணீரில் மனமுடைவாய்
ஆண்டு பலவாய் பணிசெய்தாய்
அன்புளியால் செதுக்கி நிறைசெய்தாய்
தன்னலம் பேணா பெருந்தவமாய்
பாங்காய் என்னை வளர்த்திட்டாய்

உன்னைப் போல வாழ்ந்திட்டால்  
வையம் போற்றும் சீராட்டும்
அரியணையில் ஏற்றி பாராட்டும்
உன் பிள்ளை நல்லவனாவானா
பேரை புகழை அடைவானா
மங்காத கீர்த்தி கொள்வானா
கருப்பா சிவப்பா மாநிறமா
தெளியும் முன்னே கொண்டாடினாய்
அபயம் தந்தே ஆளாக்கினாய்
உன்போல் அன்பை கருணையினை
தொல்லுலகில் ஒருவரும் தந்ததில்லை
கோவிலுக்கு உன்னை  கூட்டிச்சென்று
சிலைகளுக்கு சொல்வேன்
இதோ கடவுள் என்று
இனியொரு பிறவி வேண்டாமே
நீயே அன்னையென்றால் சம்மதமே

ஞாயிறு, மே 09, 2021

மனிதம் - கவிதை


                                        
 


மகாத்மா............

மனிதரில் தலைசிறந்தவர் அல்ல 

எளியோர்களுள் மிக எளியவர் 

விண்ணுலகம் ஏகிய பின்னும்   

தான் வாழ்ந்த மண்ணை தீண்ட

தந்தையாய் தம் மக்களை காண

ஓர் நாள் நண்பகலில் வந்தார் 

 

அவசரமாய் விரைந்த உலகம்

அவரவர் கைபேசியில் இணையம்

பலரும் காணாமல் கடக்க

வேகமாய் மனமுடைந்தார்

வீசிய குப்பையாய் தனை உணர்ந்தார்

 

மனம்வாடி

உதிர்த்த கண்ணீர்ப் பூவை

சேர்க்கவொரு

குப்பைத் தொட்டி தேடி

அதை வீசும் வேளையில்

வீறிட்டழுதது அதிலே

யாரோ போட்டுச் சென்ற

கண்திறவா சிசு ஒன்று     

 

வீதியில் சலனமில்லை 

விரையும் மனிதருள் ஈரம் இல்லை

சிசுவை பதைபதைத்து கையில் ஏந்தி

தேசத்தந்தை அவசர அன்னையானார்

 

ஆதரவற்றோர் இல்லம் கண்டு

ஆங்கே இடமிருக்கும் என்றேயெண்ணி

உப்பு சத்தியாகிரகம் கண்ட நம்பி

உட்புகுந்தார் மகவை ஏந்தி

 

பெரியவரே உமக்கேன் வேண்டாத வேலை?

கணவனால் கைவிடப்பட்டோர்

இயற்கை சீற்றத்தினால் அனாதையானோர்

தொற்று நோயால் சுற்றம் இழந்தோர்

பெற்றோரும் வேண்டாத உடல் ஊனமுற்றோர்   

பெற்றோரை வேண்டாமெனும் மன ஊனமுற்றோர்

இவர்களுக்கு பின்னே இடமிருந்தால்

கைபேசியில் செய்தி வரும்

உயிர்பிழைந்திருந்தால் வந்து சேரும்

விழுந்த சொல்லில் கருணையில்லை

சத்திய சோதனை புனைந்தவற்கே

சொற்கள் தொலைந்த மோனநிலை

தாத்தா!! அடுக்காதிது உமக்கே

எச்சரித்தாள் இளம்பெண் ஒருத்தி

இங்கு வேலிகளே பயிரை மேயும்

பகல் நேரம்கூட பகையாய் மாறும் 

எனக்கே பாதுகாப்பில்லை

இளந்தளிரை காப்பதற்கில்லை

நங்கை நஞ்சாய் உதிர்த்த  சொல்

மகாத்மாவின் நெஞ்சம் தொட்டது

அங்கமெங்கும் தீயாய்ச் சுட்டது

அரசு அன்பின்றி ஊமை ஆனது 

அதிகார வர்க்கம் கையூட்டு கேட்டது

காக்கி எட்டி உதைத்துக் கடந்தது

நீதி கண்ணை கட்டி விரைந்தது 

ஊடகம் காதைப் பொத்தி நகர்ந்தது

 

பசியால் கதறிய பிள்ளை

உடல் துவண்டு உறங்கும் முன்னே

மொழிந்தது இங்கனம்

ஐயா இங்கே  

ஆலயம் உண்டு அன்பு இல்லை 

ஆடை உண்டு மானம் இல்லை

இதயம் உண்டு இரக்கம்  இல்லை 

மதம் உண்டு மனிதம் இல்லை

கடவுள் உண்டு கருணை இல்லை

கண்கள் உண்டு கனவுகள் இல்லை

சட்டம் உண்டு சமநீதி இல்லை

சோலை உண்டு பாடும் குயில்களில்லை

பாடல் உண்டு அதில் பொருளே இல்லை

பூக்கள் உண்டு புன்னகை இல்லை

போர் உண்டு சமாதான புறாக்களில்லை

வானவில் உண்டு வண்ணங்கள் இல்லை

விஞ்ஞானம் உண்டு மெய்ஞ்ஞானம் இல்லை

வேகம் உண்டு விவேகம் இல்லை

நூல்கள் உண்டு சிறகுகள் இல்லை

இனியும் பிழைத்திருக்க விருப்பம் இல்லை

கண்மூடிய பிள்ளை பின் கண் திறக்கவேயில்லை

 

ஆறா மனமும் வற்றா விழியும்

துடிக்கும் மனமும்

ஆறும் வரை அழுதுமுடித்தார்

அழகான சிறுநிலவு அதை  

ஆற்றின் ஓர கல்லறையிலிட்டு

ஆற்றாமையினால் ஆவி துடித்தார்

துக்கத்தில் தொண்டை அடைக்க

ஆங்கே ஊற்றில் ஒருவாய்

அள்ளிக் குடித்து

இதயம் உடைந்து  

நொந்துக்  கிடந்தார்

 

ஐயோ!! அனலாய் எரிகிறதே

உடலும் உலைகலனாய் தகிக்கிறதே

மகாத்மா அலறித் துடித்த

கூக்குரல் கேட்டு

முதலில் ஒருவரும் வரவில்லை

ரூபாய் நோட்டில் உள்ளவர் போல்

அச்சு அசலாய் இருக்கின்றார்

யாரோ ஒருவரின் குரல் கேட்டு

கொஞ்சம் கூட்டம் கூடியது

 

ஆற்று நீரில் ஆலைக் கழிவு

சாயப் பட்டறை நஞ்சு பொழிவு

கலப்பது கூடத் தெரியாமல் 

களைப்புத் தீரக் குடித்தீரா

இன்னும் சற்று நேரத்தில்

இறப்பது சர்வ நிச்சயமே

எனினும் உம்முடன் படமெடுத்து

முகநூலில் இட்டால் சிறப்பாகும்

கூட்டத்தில் நிறைய உற்சாகம்

துடிக்கும் தலைவனை பாராது       

உயிர் போகும் கணம்வரை விடாது

செல்பேசியில் புகைப்படம் எடுத்தனரே

ஆங்கிலேயர் நெஞ்சமெல்லாம்

நடுக்கம் கொள்ள செய்தவரை

துளியும் கூட கருணையன்றி

மீண்டும் கொன்று புதைத்தனரே

 

மீண்டும் சொர்க்கம் ஏறியவர்

நொந்துச் சொன்னார் இவ்வாறு

காந்தி நோட்டிற்கு தன்னை விற்கும்

மாக்கள் நிறைந்த இவ்வுலகில்

தண்டிக்கும் காந்தி கைத்தடிகள்

நிறைய நிறைய இனி வேண்டும்

அகிம்சை போதித்த ஆசான் யான்

ஆயுதம் எடுக்கும் நிலை கொடிதே

மனிதம் தொலைத்த மிருகங்கள்

ஆட்சிக் கட்டிலில் அரியணையில்

நல்லோர் அஞ்சி வாழ்கின்றார்

தீயோர் பயமின்றி ஆள்கின்றார்

மாமனிதன் நெஞ்சக் குமுறலையே 

கவிதையில் வடித்திட முடியலையே

தமிழ்சொற்கள் எந்தன் வசமில்லையே

 

மனிதா கொஞ்சம் கேட்பாயே 

பல்லுயிர் அனைத்தும் காப்பாயே

உன்னை தாண்டிய எல்லாமும்

நீயே இதைநீ உணர்வாயே

அன்பின் உயர்ந்த மதமில்லையே

அகிம்சை தாண்டிய அறமில்லையே

உண்மையின் சிறந்த மொழியில்லையே

சமத்துவம் தாண்டிய தவமில்லையே

மனிதம் நிறைந்த மனிதனையே

கடவுள் என்பர் உலகினிலே

இதை உணர்த்திடு இன்பம் தழைத்திடவே   

நாளை மலர்ந்திடும் உலகம் அழகுறவே


 


 

குரு


 வட அமெரிக்காவில் ஒரு அமைப்பு கவிதை போட்டி, கதை, கட்டுரை, பாடல், ஆடல், குறும்படம், ஓவியம்  என்று பல்வேறு போட்டிகளை அறிவித்து நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான பயிற்சி பட்டறைகளை அந்த அந்த துறையில் உள்ள வல்லுநர்களை வைத்து நடத்தியது. பயிற்சிப் பட்டறை முடிவுற்று இப்போது போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி பட்டறைகளில் பலவற்றில் கலந்து கொண்ட ஒரு அடிப்படையில் சொல்கிறேன். பெரும்பாலும் எல்லா பயிற்சி பட்டறைகள் அடிநாதமாக எல்லாரும் சொன்னது - போட்டிக்கு நிறைய பயிற்சி செய்ய வேண்டும், அப்படியே பயிற்சி செய்தாலும் உங்களுக்கு என்று அந்தக் கலை பிரத்யேகமாக வாய்த்திருக்க வேண்டும். உதாரணமாக சங்கீதத்தை எடுத்துக் கொள்ளலாம். இனிமையான குரல் வளம், பெண்கள் என்றால் ஒரு மெல்லிய மேல் சுருதியில் சர்வ சாதாரணமாக பாடுவது. அப்படியே அந்தக் கலை உங்களுக்கு  வாய்த்தாலும் அது ஏற்கனவே வரை முறை செய்யப்பட்ட ஒரு வரையறைக்குள் நீங்கள் திறமையாக வெளிப்படுத்த வேண்டும். உதாரணமாக கர்நாடக சங்கீதம் என்ற வரைமுறையில் அல்லது  மெல்லிசை பாடல் என்ற வரைமுறை. இந்த மாதிரி பாடும் போது பெண்கள் பொதுவாக ஹை பிட்சில் பாடுவது சிறந்த முறையில் பாடுவது என்பதாக பாராட்டுப் பெறுகிறது. 

"Why fit when you are born to stand out"

என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. எஸ்.ஜானகி, சித்ரா போன்ற பாடகிகளின் குரல் ஒரு மரத்தை சுற்றி பாடி ஆடும் கதாநாயகியின் குரலாக மிகச் சரியாக பொருந்திப் போகிறது. இந்த குரல்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக எப்போதும் கேட்கிறது, அதாவது வலிமையற்ற பெண் குரல்கள், ஆணை சார்ந்து இருக்கும் பெண், பெண் என்றால் இப்படித்தான்  இருக்க வேண்டும் என்ற வரையறையில் வைக்கப்பட்ட பெண்களின் குரலாகவே நான் பார்க்கிறேன். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஆனால் அந்தக் குரலை எளிதாக இன்னொரு பாடகியால் வெளிப்படுத்திவிட முடியும் என்ற அளவில் தான் இருக்கிறது.இன்றைய சங்கீத ஆசிரியர்கள் கூட குரலின் தனித்தன்மையை வெளிப்படுத்த முயலாமல் நீங்களும் இப்படியே ஹை பிட்சில் பாடுங்கள் என்று ஆதரிக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட ஒன்று. இதில் கூட ஆண்களின் குரல்கள் தனித்து ஒலிக்கிறது. உங்களால் எஸ்.பி.பி, ஜேசுதாஸ் முதல் சித் ஸ்ரீராம் வரை யார் குரல் என்பதை எளிதாக அடையாளம் சொல்ல முடிகிறது. தனித்துவம் தானே மனித அடையாளம். மனித குலத்தின் முன்னேற்றமும் கோட்பாடுகளை தகர்த்தெறிந்து, பழைய சிந்தனைகள் களைந்து முன்னேறி செல்வதில் இருந்து தானே பிறக்கிறது.  திரைப்படங்களும் வலியுறுத்தும் இந்த பெண் குரல் மேல் உள்ள கட்டுப்பாடுகள் வலிமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இது எளிதாக உடைத்துச் செல்லக்கூடிய ஒன்று அல்ல. பெண் குரல்கள் முகமற்று போவதும், சங்கீதம் என்பது வரையறுக்கப்பட்ட மரபாக,  அது திறமையாக பிரதி எடுக்கப்பட்டே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதும் மறுக்க இயலாத உண்மை. இது தான் ஒரு சிலருக்கு சங்கீதம் என்பது அவர்களுக்கே உரித்தான சொத்தாக காலங்காலமாக பாதுகாக்க ஏதுவாகவும் இருக்கிறது.

வட அமெரிக்காவில் நிறைய பெண் குழந்தைகள் பரதம்  பயின்று இங்கேயே  அரங்கேற்றம் செய்கிறார்கள். இதையும் கட்டுப்படுத்துவது அந்தந்த ஊரில் இருக்கும் அந்த குழந்தைகளை பயிற்றுவிக்கும் பரத ஆசிரியர்களே.குழந்தைகளுக்கு அரங்கேற்றம் என்றால் 7 லட்சத்தில் தொடங்கி 30 லட்சத்திற்கு மேல் ஆகும். அதாவது ஒரு கல்யாணம் அல்லது ஒரு குழந்தை நான்கு வருட காலேஜ் படிப்பிற்கு ஆகும் அளவு செலவு ஆகின்றது என்றால் இது எவ்வளவு ஒரு பெரிய தொகை என்பதை அறியலாம். நடன ஆசிரியர் கை காட்டும் போட்டோகிராபர், வீடியோகிராபர், பிளக்ஸ் போர்டு செய்பவர், பேனர் கம்பெனி, விழா தலைமை, மேக்கப் வுமன் என்று அவர்கள் கூறும் ஆட்களை மட்டுமே நீங்கள் அழைக்க முடியும். அவர்கள் கை காட்டும் எல்லா ஆட்களும் நிறைய இது போன்ற நிகழ்வுகளை செய்து தருவதால் அரங்கேற்றம் முடிந்து ஆறு மாத காலம் வரை ஆகிறது விழா நிகழ்விற்கான போட்டோ அல்லது வீடியோ வருவதற்கு.  சில ஆயிரம் வெள்ளிகள் தந்தாலும் உங்கள் குழந்தையின் புகைப்பட ஆல்பம் கையில் வர இத்தனை கால தாமதம் எதற்கு என்று கேட்க முடியாது. போட்டோகிராபரை புக் செய்யும் போதே 6 மாத காலம் காத்திருக்க வேண்டும் என்பதையும் ஒத்துக்கொண்டே புக் செய்ய வேண்டும். நாமாக நமக்கு தெரிந்த ஆளை புக் செய்கிறேன் என்றால் அதற்கும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தில்லானா ஆடும் போது அடுத்து என்ன போஸ் வரும் என்பது எங்கள் போட்டோகிராபருக்கு தெரியும். அதனால் அவரால் மட்டுமே சிறப்பாக எடுக்க முடியும் என்று பதில் வரும். எங்களுக்கு எதுவாயினும் அது பரவாயில்லை  என்று சொன்னாலும் போதாது.  அது மட்டும் அல்லாமல் விழா அழைப்பாளர்களுக்கு என்ன பரிசுப் பொருள் தருவது என்பது முதல் நடன ஆசிரியருக்கு தரும் பரிசுப் பொருள் வரை பர்ஸை பதம் பார்த்து விடுகிறார்கள். பட்டுப் புடவை தங்க நகை வரை ஒவ்வொரு வருடமும் இந்த ஆசிரியர்கள் பெரும் பரிசுத் தொகையும் பெரிது. இது மட்டும் அல்லாமல் அரங்கேற்றம் வரை நடக்கும் ஸ்பெஷல் கோச்சிங்குக்கு என்றும் ஆசிரியர்கள்  நிறைய பணம் கறந்து விடுகிறார்கள். எனவே ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறையை கட்டுப்படுத்தும் பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காததைப் போல இவர்கள் சொன்னதைச் செய்யவில்லை என்றால் நீங்கள் இந்த கலையை கற்றுக் கொள்ளும் தகுதியை இழக்கிறீர்கள்.

இதே போல கவிதைகளுக்கென நடந்த முதற்கட்ட போட்டியில் வந்திருந்த நடுவர்கள் இருவரும் பின் நவீனத்துவ கவிஞர்கள்/பெண்ணியக் கவிஞர்கள். அதிலும் அவர்களுக்கு வைரமுத்து கவிதைகள் மேல் என்ன கோபமோ. வைரமுத்து பாணி கவிதைகளை அவர்கள் சற்று குறைத்தே கூறினார்கள். பின் நவீனத்துவக் கவிதைகளை பற்றிய இந்த பதிவு சிரிக்க வைப்பதாக இருந்தாலும் சிந்திக்கவும் வைக்கிறது. 

http://www.nisaptham.com/2008/03/blog-post_19.html?m=1

கவிதைகள் என்பது அவரவர் அனுபவத்தின் வழியில் வெளிப்படும் உணர்ச்சிக் குவியல். கவிதைகளில் சிறந்த ஒரு கருத்து இருப்பின் அது காலத்தை கடந்து நிற்கும். ஒரு கவிதைக்கான இடத்தை காலமே தீர்மானிக்கிறது. கவிதைகள் மரபுக் கவிதைகள் போன்ற ஒரு வரைமுறைக்குள் வைத்து எழுதுவது சிலருக்கு இயல்பாக வாய்க்கிறது. சிலர் நீண்ட வசனங்களை உடைத்து புதுக் கவிதையாக வடிக்கிறார்கள். ஆனால் சொல்வது எவ்வாறாகினும் சொல்லப்படும் கருத்துக்கள் தான் இங்கே சிறப்பு பெறுகிறது. வடிவத்தைவிட எண்ணத்தின் மேன்மை, சொல்லிய கருத்தின் தாக்கம் என்பதே மேலோங்கி நிற்கிறது என்பேன். எளிமை என்பது கவிதையின் உயிர்நாடி என்பேன். 

"குளத்தில் முகம் பார்க்கும் நிலா 

குளிக்காமலேயே திரும்பினேன்"

இந்தக்  கவிதை ஏற்படுத்தும் தாக்கத்தை விடவா ஒரு சிறந்த அழகியலை, கவிஞனின் மென்மையான மனதை அதாவது நிலவுக்கு கூட இரங்கும் ஒரு மனிதனின் மனநிலையை படிப்பவருக்கு எளிதாக கடத்திவிட முடியும்? 

"பறவைகள் பறந்த பின்னும்

 கிளை தொடங்கிய நடனம் முடியவில்லை "

என்ற நா.முத்துக்குமார் கவிதை வரிகளை நீங்கள் ரசிக்காமல் போக முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு  பாணி. இதில் பங்குபெற்ற நடுவர்களின் கருத்து பெரும்பாலும் வட அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் சங்க இலக்கியத்தில் வைத்துள்ள ஒரு புரிதலை, தேடலை, பின் நவீனத்துவ, பெண்ணியம் சார்ந்த நூல்களை படிப்பதில்லை என்றும் அது சார்ந்த எழுத்து  நடை, சொற்கள் போன்றவற்றை பயன்படுத்துவது இல்லை என்பது போன்ற விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். பெரும்பாலும் இன்று வட அமெரிக்காவில் கவிஞர்களாக விளங்குபவர்கள் பத்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்கள். மரபுக் கவிதைகள், கம்பர், பாரதியார், பாரதிதாசன் என்று வளர்ந்தவர்கள். இவர்களுக்கு பின் நவீனத்துவ கவிதைகளில் ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம், அல்லது இந்தக் கவிதைகள் பற்றி அறிந்திருந்தாலும் அந்த புத்தகங்களை இங்கு வாங்கி வந்து படிக்க முடியாத ஒரு நிலையில் இருப்பவர்களாக இருக்கலாம். தமிழ் புத்தகங்களை வட அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடிய நூலக வசதியோ, அப்படியே வாங்கினாலும் அதை எளிதில் கொண்டு வர முடியாத எடைக் கட்டுப்பாடுகள், புத்தகம் வாங்குவதை விட அதை வட அமெரிக்கா வரை கொண்டு வர ஆகும் செலவு என்று பல்வேறு விஷயங்கள் உள்ளது. எனவே பெண்ணியம், பின் நவீனத்துவம், தலித் கவிதைகள் என்று வேறு தளங்களில் இயங்கும் ஆளுமைகளுக்கு பெரும்பாலும் இலக்கியம் சாராத துறைகளில் (ஐடி பணியாளர், குடும்பத்தலைவி) உள்ள மனிதர்களின் கவிதையை கேட்டு அவர்கள் கவிதைகளை எடை போடும் ஒரு ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்றே  தோன்றுகிறது. இது இந்த நடுவர்களை கூட்டி வந்த  அமைப்பின் குற்றமே என்றாலும் நடு நிலைமை என்பதே நிலையான தன்மையில் இருந்து மதிப்பீடு செய்வது. நம் தளத்திற்கு வரமுடியாதவர்களை அவரவர் தளங்களுக்கு சென்று மதிப்பீடு வழங்குவது. என்பதே முறை. அதைக் கூட வந்த நடுவர்கள் சிறப்பாக செய்ததாக தோன்றவில்லை.  கொடுத்திருந்த  தலைப்புகளிலும் அப்படி ஒரு கற்பனை வறட்சி. நடுவர்களை கொண்டு வரும் போதும், தலைப்புகளை தேர்ந்தெடுக்கும் போதும் கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும் இந்த அமைப்புகள்.

நடுவர்களும் பெரும்பாலும் மரபுக் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இது மரபுக் கவிதைகள் எழுதியவர்களுக்கு மிகவும் புதியதாகவும் சற்றே அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. எனினும் நடுவர்களின்  கருத்து - உதாரணமாக கவிஞர்களின் சொல்லாடல், கவிதை முறைமை பற்றிய அனைத்தும் வட அமெரிக்க கவிஞர்களை மிகவும் குறைவாக மதிப்பிட்டதாகவே இருந்தது. அது மட்டும் அல்லாமல் சமூக பிரச்சனைகளை இன்னும் ஆழமாக சொல்ல வேண்டும் எனினும் அது நடப்பு செய்திகளை சார்ந்து இருப்பதாக இருக்கக் கூடாது என்ற நடுவர்களின் கருத்துக்களையும் ஏற்க முடியவில்லை. இது அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு இயலாத ஒன்று. கவிதைகள் அவரவர் வாழ்க்கை முறையில், அவரவர் அனுபவங்களின் வழி பிறக்கிறது. இதில் ஒருவர் அனுபவத்தை விட இன்னொருவரின் அனுபவங்கள் எந்த விதத்தில் குறைவானவை. தீட்டுத் துணியும், பெண்ணின்/ஆணின் அங்கங்கள் பற்றிய வர்ணனைகள் கொண்டது சிறந்த பின் நவீனத்துவ இலக்கியம்/கவிதை என்ற நடுவர்களின் கருத்தை  ஏற்றுக் கொள்ளும் போது  வட அமெரிக்க தமிழ் வாழ் மக்களின் அனுபவம் வழி விளைந்த கவிதைகளும் இலக்கியம் தானே. இதில் வேறு நடுவர்கள் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி சொன்னார்கள். நிறைய புத்தகம் படித்தவன் வாசகனாக தங்கி விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லை நிறைய படிப்பவன் தான் படித்த விஷயங்களையே பிரதிபலிக்கும் வாய்ப்பும் உண்டு . காப்பி அடிச்சிட்டான் என்று இதற்கு வேறு எதிர்மறை விமர்சனம் வரும். காமராசர் போல நிறைய படிக்காதவர்கள், படித்தவர்களுக்கும் சேர்ந்த நல்ல திட்டங்களை வகுத்த கதைகளும் உண்டு. எல்லாவற்றையும் சமமாக பார்த்தது தானே தமிழ் மண். வந்தவர்களை மதிப்பீடு செய்து யாரையோ சிலரை வெற்றியாளர்களாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் உண்டு என்பது ஒரு புறம் இருந்தாலும் பூக்களின் மாநாட்டிற்கு வாட்களை கொண்டு வந்த ஒரு அனுபவமாகவே அமைந்தது இந்த நிகழ்வு. 

பெரும்பாலும் எந்த துறையில் ஒருவர் சிறந்தவர் என்று கொண்டாடப் பட்டாலும் அவர் அந்தத் துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுவர். சங்கீதம் என்பது ஒரு தட்டு மக்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போல வெவ்வேறு துறைகளிலும் கோலோச்சும் சிலரும் அவர்களுக்கென்று ஒரு குழுவும் அதன் மூலம் தங்களை பலப்படுத்தும் பிரயத்தனங்களை செய்து கொண்டே இருக்கிறார்கள். இதில் ஒரு வகைமை என்பது அடுத்தவருக்கு இடம் கொடாமல் இருப்பது அல்லது பழிப்பது.  சமூகமே சாதி என்கிற ஒரு கோட்பாட்டின் படி வடிவமைக்கப்பட்ட ஒன்று என்று எழுத்தாளர் இமையம் அவர்கள் நேற்று பேரவை இலக்கிய குழு நடத்திய நிகழ்வில் கருத்து தெரிவித்திருந்தார். (நிகழ்வின் இணைப்பு கீழே)

இலக்கிய கூட்டம்: 


அது எத்தனை உண்மை.  பொதுவுடைமை பேசுபவர்களும் தங்களுக்கு என்று வந்தால் அந்தக் கருத்தில் இருந்து பிறழ்வார்கள் என்பது மட்டுமே நிதர்சனம். உங்களுக்கு நீங்களே ஆசான்.  உங்கள் எழுத்துக்களுக்கான உரைகல் நீங்கள் மட்டுமே. உங்களை வழிநடத்தும் சக்தி உங்கள் அறிவிற்கும், உங்கள் கண்களுக்கும் உங்கள் கால்களுக்கும் மட்டுமே உண்டு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதல்ல கணியனின் சிறப்பான வரிகள். "பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தலும் இலமே" என்பதே அவர் கூறியதிலேயே மிகவும் சிறந்த கருத்து. சிறந்த இலக்கியங்களை படைப்பதில் உங்களுக்கு நீங்கள் மட்டுமே குரு. உங்கள் எழுத்துக்கள் என்றாவது இந்த சமூகத்தின் கண்களில் படும். நீங்கள் வாழும் காலத்திலேயே அது ஏற்பட்டால்  அது நீங்கள் செய்த புண்ணியம். இல்லாவிட்டால் உங்களுக்கு பிறகாவது இது கொண்டாடப்படும் என்று நம்ப வேண்டும். அதுவும் இல்லை என்றால் இப்படிப் பாருங்கள். கோவில் என்பது வெறும் கண்களுக்கு தெரியும் கட்டிடம்  மட்டும் அல்ல, கோவில் என்பது கண்ணுக்கு தெரியாத அதன் கீழிருக்கும் அஸ்திவாரமும் கூடத்தான். தமிழின் அஸ்திவாரமாக உங்கள் எழுத்துக்கள் என்றும் இம்மொழியை தாங்கி நிற்கும் என்று தெளிக.

இந்த வாரம் நடந்த சார்லட் தமிழ் சங்க சித்திரைத் திருநாள் நிகழ்வினை கண்டு களிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள். முனைவர். கோ.ப. நல்லசிவம் அவர்கள் பண்ணிசையே பழந்தமிழர் இசை என்ற தலைப்பில் சிறப்பாக பேருரை ஆற்றினார். இதைத் தவிர பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 



சனி, மே 01, 2021

கவிதை கேளுங்கள்

உலக பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா, ஒரு துளி கவிதை அமைப்பு, புதுச்சேரி, வல்லின சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா, ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகள்  இணைந்து பெண் கவிஞர்களுக்கு என்று www.worldpoetess.com என்ற புதிய இணைய தளத்தை உருவாக்கி உள்ளார்கள். உலகெங்கும் உள்ள பெண் கவிஞர்களுக்கு ஒரு சிறப்பான இணைப்புப் பாலமாக  செயல்படுவது மட்டுமன்றி பல பெண் கவிஞர்களின் படைப்புகளை உலகெங்கும் உள்ளோரின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் ஒரு தளமாகவும், கவிதைகளை சேகரித்து ஆவணப்படுத்தும் முகமாகவும் அமைந்துள்ளது இந்த இணையதளம். திரு.லோகராஜ் அவர்களின் கைவண்ணத்தில் பெங்களூரை சார்ந்த திரு.வில்பிரட் அவர்களின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரு. லோகராஜ் அவர்கள் ஒரு பேனா ஒன்றை   ஒரு பெண்ணின் உருவத்துடன் இணைத்து இந்த இணைய தளத்தின் இலச்சினை வடிவமைத்திருந்தார். ஆங்கிலத்தில் Pen என்று எழுதுகோலையும் அதன் மேல் ஒரு பெண் உருவமும் கொண்டு வடிவமைத்திருந்தது சிறப்பு. இந்த இணைய தளத்தை இன்று துவக்கி வைத்து பேசியவர் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை தலைவர் திரு. கால்டுவெல் வேள்நம்பி  அவர்கள். கவிஞர். உமை பற்குணரஞ்சன் அவர்கள் அறிமுகவுரையையும்,  கவிஞர் திரு. அமிர்தகணேசன் அவர்கள் நோக்கவுரையும், கவிஞர் திருமதி. ராஜி ராமசந்திரன் அவர்கள் நன்றியுரையையும் , கவிஞர் அன்புடன் ஆனந்தி அவர்கள் நிகழ்வினை தொகுத்தும்  அளித்தார்கள். தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி இந்த நிகழ்வினை நேரலையில் ஒளிபரப்பு செய்தது. பெண் கவிஞர்களை வளர்த்தெடுக்கும் நல்லதொரு சிறப்பான முயற்சி. இந்த நிகழ்வினை கீழே உள்ள  வலையொளி தளத்தில் காணலாம். உங்களுக்கு அறிமுகமான பெண் கவிஞர்கள் இருப்பின் www.worldpoetess.com என்ற தளத்தில் அவர்களைப் பதிவு செய்யச் சொல்லுங்கள். அவர்கள் தங்கள் படைப்புகளை (கதை,கவிதை, கட்டுரை, ஓவியம்) இந்த இணைய தளம் வாயிலாக வெளியிடலாம். 

இணையதள இணைப்பு கீழே 

அருநெல்லி 

இந்த நிகழ்வின் ஒளிபரப்பைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.