திங்கள், மே 31, 2021

என் நாடு - கவிதை



 
மே2021 வல்லின சிறகுகள் இதழில் என்னுடைய கவிதை. முழுக் கவிதை கீழே.

வல்லின சிறகுகள் மே மாத இதழை வாசிக்க கீழே சொடுக்கவும்.
 
 
என் நாடு 
 
மகளுக்கு மணம் முடிக்கவென்று
பல வருடமாய் மண் பானைக்குள் சேர்த்த
சிறுவாட்டு காசு செல்லாதென்றே
கனவு கலைத்தது என் நாடு

ஆசையாய் வளர்ந்த பெண்ணே
ஆறு மணிக்கு மேலெங்கும் போகாதே கண்ணே
வீட்டுச் சிறையில்  கால் விலங்கிட்டு
பெண்ணுரிமை பேணுது என் நாடு

ஊரையே கொள்ளை அடித்து
பணத்தால் நீதியை வெள்ளை அடித்து
வெள்ளை உடையும் கறுத்த மனமும் கொண்டோரை
தலைவாவென்றது என் நாடு

கனிம வளம் கார்ப்பரேட்டுக்கு
நீர்வளம் குளிர்பான நிறுவனத்துக்கு
நாசகர திட்டத்தை எதிர்க்கும் அப்பாவிக்கு
தோட்டாக்களை பரிசளிக்கிது என் நாடு

நிறத்தால் ஒருவனை உயரே வைத்து
குலத்தால் பலரை அடிமை செய்து
சாதி மதம் என்று பிரித்து வைத்து
வேற்றுமையில் ஒற்றுமையென்று 
முழங்கியது என் நாடு

எத்தனை எத்தனை உயிர் பலிகள்
பெற்ற சுதந்திரம் பாழ் செய்து
பொருளீட்ட தீயறம் செய்து
பாருக்குள்ளே நல்ல நாடென்று 
பழம்பெருமை கொள்ளுது என் நாடு

உலகின் பெரு ஜனநாயகமாம்
வோட்டும் இங்கே விலை போகுமாம்
வோட்டளி, உரிமை பேசாதே
உயிருடன் இரு, நீதி கேட்காதே
போதை கொள், சிந்திக்காதே
சொல்வதைப்படி, வேலை கேட்காதே
ஆடை தரி, மரியாதையை எதிர்பாராதே
கையைத் தட்டு, காரணம் கேட்காதே
கடமையை செய், பலனை எதிர்பாராதே
கீதையின் சாரமாய் வாழுது என் நாடு 


 
 
 
 

2 கருத்துகள்:

  1. அருமை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்! பாராட்டுகள்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பாராட்டுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு