ஞாயிறு, மே 24, 2020

ஐஸ் ஐஸ் ஐஸ்லாந்து - ஒரு இன்பச் சுற்றுலா - பாகம் 2



அடுத்த நாள் அசதி காரணமாக சற்று தாமதமாகவே எழுந்தோம். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் Keflavik-கில்  சுற்றுப்புறம் Reykjanes-சில் நிறைய இடங்கள் பார்க்க அழகாக இருக்கும் என்றும் மறக்காமல் அவற்றை பார்த்த பின் செல்லலாம் என்று கூறினார். இது எங்கள் பயண அட்டவணையில் இல்லாமல் இருந்தாலும்,  திரும்பி வரும் போது பார்க்க நேரம் இல்லாமல் போகலாம் என்று அவற்றை பார்த்த பின்பே போகலாம் என்று முடிவு செய்தோம். எனினும் அனைவரும் கிளம்ப கிட்டதட்ட மதியம் ஆகி விட்டது. 

பிரிட்ஜ் பிட்வீன் காட்டினன்ட்ஸ் 

முதலில் சென்றது "Bridge between Continents" என்ற ஒரு பாலத்தை காண. இந்த சிறிய பாலத்தின் ஒரு புறம் ஐரோப்பா. மறுபுறம் வட அமெரிக்கா. யூரேசியா மற்றும் வட அமெரிக்க தகடுகளை இணைக்கிறது இந்த சிறு பாலம். புவியியலாளருக்கு ஐஸ்லாந்து ஒரு கனவு தேசம். பார்க்கவும், படிக்கவும், தெரிந்து கொள்ளவும் அத்தனை இடங்கள்.  அதற்கு பின் Reykjanes கலங்கரைவிளக்கம் மற்றும் எரிமலை வெடிப்பில்  உண்டான Valahnukur மலை ஆகிவற்றை பார்த்தோம். Valahnukur மலையில் அழிந்து போன பறவை இனமான ஆக் என்ற பறவைக்கு ஒரு சிலையை வைத்து இருந்தார்கள்.


மிட் அட்லாண்டிக் ரிட்ஜ் எனப்படும் அட்லாண்டிக் வெடிப்பு 

Valahnukur மலை 


அதிக அளவில் வேட்டையாடப்பட்ட ஆக் பறவை 1852 வாக்கில் அழிந்து விட்டது.  மனிதன் என்ற ஒற்றை விலங்கு தான் வாழ இன்னும் எத்தனை இயற்கை விலங்குகளை அழிக்கிமோ என்ற கேள்வி எழாமல் இல்லை.



ஆக் பறவை 

ஹூபேர்ட் ரீவ்ஸ் என்ற கனடா நாட்டு அறிஞர் சொன்னதை ஆங்கிலத்திலேயே  தருகிறேன்.
 
"Man is the most insane species. He worships an invisible god and destroys a visible nature. Unaware that this nature he's destroying is this God that he's worshipping" (Hubert Reeves, Canadian-French Astrophysicist)

மனிதன் கண்டிப்பாக அவர் கூறுவதை போன்ற பைத்தியக்காரன் தான். தான் வாழ தன்னை சுற்றி உள்ள எதையும் அழிக்க ஒரு நொடி கூட யோசிக்காதவன். இன்று கொரோனா என்னும் உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவும் இவ்வேளையில் நாம் ஏனைய உயிர்களை வருத்தி பெறும் எந்த ஒரு சௌகர்யமும் நமக்கு நிலைக்காது என்பதை உணர வேண்டும்.

கொரோனா பற்றிய என்னுடைய சிந்தனைகளை இங்கே பதிவு செய்திருக்கிறேன் http://pachaimannu.blogspot.com/2020/04/blog-post.html 

Valahnukur மலை அருகிலேயே இருந்த Gunnuhver என்ற வெந்நீர் ஊற்றில் இருந்து புகை குபுகுபு என வெண்ணிறமாக வந்த வண்ணம் இருந்தது. அத்துடன் சல்பர் எனப்படும் கந்தக வாயுவும் வெளியேறுவதால் கொஞ்சம் அழுகிய முட்டையின் வாடையும் வந்தது. நம்ம ஊரில்  கொள்ளிவாய் பிசாசு என்பது போல அந்த ஊரிலும் Gunna என்ற பிசாசு அந்த வெந்நீர் ஊற்றின் அடியில் சிக்கி இருப்பதாக நம்புகிறார்கள். கற்பனை என்றாலும் ஊருக்கு ஊர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நம்பிக்கைகள் தான் இருக்கின்றன.







அடுத்து நாங்கள் பார்த்தது Brimmkettil என்ற எரிமலை கற்களால் இயற்கையாய் உருவாக்கப்பட்டு வட்ட வடிவத்தில் ஒரு நீச்சல் குளம் போன்ற இந்த இயற்கை அமைப்பு. இது Reykjanes தீபகற்பத்தில் ,தென்மேற்கு ஐஸ்லாந்தில் கடற்கரையின் அருகிலேயே  உள்ளது. அலைகள் இதை நீரால் நிறைத்து பின் அந்த நீரே இந்த குளத்திலிருந்து வெளியேறி செல்வது பார்க்க அழகாய் இருந்தது. அழகு என்றால் ஆபத்து என்பது போல அழகாய் நிறையும் நீரே சுழித்து வெளியேறும் காட்சி பார்க்க சிறிது பயமாகவே இருந்தது.

அதற்குள் மதியம் 3 மணியை கடந்து விட்டிருந்தது. சரி, எப்படியும் Reykjavik-கை கடந்தே நாங்கள் stykkisholmur செல்ல வேண்டியது இருந்ததால் அங்கே இருக்கும் ஒரு புகழ்பெற்ற சர்ச் மற்றும் வைகிங் போர் கப்பல் சிற்பத்தையும் பார்த்து விட்டு பின்பு பயணப்படுவது என்று முடிவு செய்தோம்.

Hallgrimskirkja என்ற அந்த சர்ச் Reykjavik நகரின் மைய பகுதியில்(downtown) உள்ளது. ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சிக்காக பார்வையாளர்களுக்கு திறக்கப்படவில்லை. எனவே வெளியில் இருந்த சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு திரும்பினோம். Leif  Erikson என்ற ஐஸ்லாந்து நாட்டை சார்ந்தவரே கிறிஸ்டோபர் கொலம்பஸ்சிற்கு முன்பாக வட அமெரிக்காவில் கால் பதித்தவர் என்று அறியப்படுகிறார். இவரது நினைவாக அவருக்கு இந்த சர்ச்சின் முன்பாக ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். இந்த சிலையை அமெரிக்கா ஐஸ்லாந்திற்கு நினைவு பரிசாக அளித்துள்ளது. இப்படிப்பட்ட புதிய தகவல்களை அறிந்து மகிழ்ந்தோம். இந்த சர்ச்சை பற்றிய சுவையான தகவல்களை விக்கிப்பீடியாவில் பாருங்கள். ( https://en.wikipedia.org/wiki/Hallgrímskirkja)

         

 
  
தவன் படத்தில் "ஏனோ ஏனோ பனி துளி பாடலில்" வருமே ஒரு கப்பல், அந்த நினைவு சின்னம் sun voyager என்று அறியப்படுகிறது. வைக்கிங் என்றழைக்கப்டும் ஸ்கேந்திநேவியா போர் வீரர்கள் பயன்படுத்திய கப்பலை நினைவுபடுத்தினாலும் இது சூரியனை போற்றும் விதமாகவும், கனவு, நம்பிக்கை மற்றும் புதிய உலகிற்கான தேடலை நினைவு கொள்ளும் முகமாகவும் Jon Gunnar Aranson என்பவரால் வடிவமைக்கப்பட்டு ஒயிலாய் காட்சி அளிக்கிறது.






Reykjavik -விலேயே கிட்ட தட்ட சாயங்காலம் 5:30 மணி ஆகிவிட்டது. எனினும் அன்றிரவு தங்குவதற்காக Sykkisholmur என்று 2 மணி நேர பயணத்தில் உள்ள ஒரு இடத்தில் முன்பதிவு செய்து இருந்ததால் நாங்கள் கண்டிப்பாக பயணம் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் இரவு தங்க வேண்டிய  வேண்டிய இடத்திற்கு அட்ரஸ் எல்லாம் இல்லை. வெறும் இவ்வாறு GPS எண்கள் மட்டுமே. (N64059.2705 W 22054.1383). நாங்கள் கார் வாடகைக்கு எடுக்குமிடத்தில் ஒரு GPS கருவியையும் வாடகைக்கு எடுத்து இருந்தோம். எனினும்  அது பாதி நேரம் வேலை செய்யவில்லை. எனவே போனில் இருந்த கூகுள் மாப்ஸ் என்ற செயலியையே அதிகம் பயன்படுத்தினோம். ஆனாலும் நாங்கள் செல்ல போகும் பகுதியான மேற்கு ஐஸ்லாந்தில் போன் சிக்னல் அதிகம் இல்லாத பகுதி. எனவே GPS கருவி வேலை செய்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். இல்லை என்ற பட்சத்தில் பாதகம் இல்லை. கிட்ட தட்ட ஒரே சாலை தான்.எனவே தொலைந்து போக வாய்ப்பு மிகவும் குறைவு. Snaefellsnes என்ற மேற்கு தீபகற்ப பகுதி ஐஸ்லாந்தில் உள்ள பல்வேறு இயற்கை அழகினை ஒருங்கிணைத்த ஒரு அழகு பெட்டகம். எரிமலை வேண்டுமா, அந்த எரிமலை குழம்புகள் பூமிக்குள் குடைந்த குகைகள் வேண்டுமா, பனி உறைந்த மலைமுகடுகள் வேண்டுமா, அந்த மலை முகடுகளில் பெருக்கெடுக்கும் அருவிகள் வேண்டுமா, அந்த அருவி நீர் குடைந்த மலைகளில் வாழும் பறவை இனம் வேண்டுமா, இன்னும் எத்தனை அழகுகள் ஐஸ்லாந்து முழுவதும் சிதறிக்  கிடக்கிறதோ அத்தனை அழகையும் ஒருங்கே இணைத்த பகுதி தான் Snaefellsnes  என்ற மேற்கு ஐஸ்லாந்து. அதனால் மேற்கு ஐஸ்லாந்தை ஆங்கிலத்தில் "Iceland  in  a Nutshell" என்பார்கள்.

சரி போகும் வழியில் பார்க்கலாம் என்று பெரிய லிஸ்ட்டே வைத்திருந்தேன். ஏனெனில் திரும்பி வரும் போது இதே வழியே  வர இயலாது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். மேற்கு பகுதிகளை பார்த்த பிறகு ரிங் ரோடு வழியாக வடக்கு மற்றும் கிழக்கு ஐஸ்லாந்தை பார்த்து பின் Reykjavik வந்து விமானம் ஏறுவதாக திட்டம். எனினும் போகும் வழியில் பார்க்க முடிந்தது Gerduberg Basalt  Cliffs எனப்படும் ஒரே ஒரு இடத்தை மட்டும் தான். எரிமலை குழம்பு வெகு வேகமாக குளிர்விக்கப்படும் போதும் உண்டாகும் நீண்ட நெடும் பாறைகள் தான் இந்த basalt cliffs.. வரிசையாக யாரோ செதுக்கி வைத்தார் போல் நீண்ட நெடும்பாறைகள் பார்க்க மிகவும் அழகாக இருந்தது. 



கிட்ட தட்ட இரவு எட்டு 7 மணிக்கு மேலாகி விட்டாலும் நாங்கள் சென்ற வழியில்  பெரும்பாலும் வாகனம் எதையும் காணவில்லை. ஆளில்லா சாலைகளில் பயணம் செய்வது சற்று புதியது இல்லை என்றாலும்  பல மணி நேர பிரயாணத்தில் ஒரு கார் கூட நம்மை கடக்கவில்லை என்பது மிகவும் புதிதான அனுபவம். வெளிச்சம் இருந்ததால் நாங்கள் தங்க வேண்டிய இடத்தை அடைந்தோம். Helgafellsveit என்று stykkisholmur-இல் இருந்து ஒரு 15 நிமிட நேர பயணத்தில் ஒரு ஆட்டு பண்ணைக்கு மத்தியில் இருந்த கெஸ்ட் ஹவுஸ் நாங்கள் தங்குவதற்காக புக் செய்திருந்தோம். அந்த இடத்தின் இயற்கை அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. மலைகள், எரிமலை பாறைகள், தண்ணீர் சூழ்ந்த இந்த இடம் அடடா அழகு. கீழே இந்த இடத்திற்கான இணைப்பை தந்துள்ளேன். 
https://www.airbnb.com/rooms/13123308?source_impression_id=p3_1590028468_vU4ey1Fis8AlQBKy&guests=1&adults=1

அந்த அழகான தங்கும் இடத்தில எடுத்த படங்கள் கீழே. நாங்கள் ஐஸ்லாந்தில் தங்கிய இடங்களில் மிகவும் பிடித்த இடமாக ஆனது இது. காலை எழுந்தவுடன் இந்த அழகான இயற்கை காட்சியை கண்டு விழிப்பது என்பது வரம்.






 
ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது தமிழ்நாட்டு உணவை உண்பது என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தோம். முன்பே கூறியது போல நிறைய இடங்கள் பார்த்த பின்பு சாப்பிட உணவகம் எங்கே என்று தேடுதல் இயலாத ஒன்று. அது மட்டும் அல்லாமல் வெறும் GPS எண்கள் கொண்ட முகவரிகளுக்கு பக்கத்தில் எந்த விதமான உணவகமும்  இருக்காது என்பதும் காரணம். சமைக்க தேவையான அரிசி, புளி, பருப்பு, பொடி வகைகள் சில, ஊறுகாய், மசாலா ஆகியவற்றை கையோடு கொண்டு சென்றிருந்தோம். அது மட்டும் அல்லாமல் நூடில்ஸ், பாஸ்தா, சீரியல், ஜாம் போன்றவையையும் கையோடு எடுத்து செல்வது நல்லது. நாங்கள் தங்கிய இடங்கள் ஒரு சிலவற்றை தவிர கிச்சன் வசதி இருக்கிறதா என்று பார்த்தே புக் செய்திருந்தோம். அதனால் இரவில் சமைக்கும் வேலை ஒன்று இருந்தது. எனினும் அடுத்த நாள் மதியத்திற்கும் சேர்த்து சமைத்து எங்கு செல்கிறோமோ அங்க சுற்றி பார்த்து விட்டு நடுவிலேயே ஒரு பிக்னிக் போன்று மதிய உணவு அருந்துவது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் வெளியில் சாப்பிடுவது  என்பது கொஞ்சம் அதிக செலவு பிடிக்க கூடிய விஷயம் என்பதுவும் ஒரு காரணம். தங்குவதற்கு என்று இருக்கும் இடங்கள் பெரும்பாலும் விலை அதிகமாகவே இருந்தது. எனவே சிக்கனம் கருதி நாமே சமைத்து உண்பது என்பது நல்லது. ஒரு வேளை உணவு சமைத்து சாப்பிட இயலாது என்பவர்களுக்கு பெரிய ஊர்கள் மட்டும் அல்லாது சிறிய ஊர்களிலும் பீட்ஸா, பர்கர், சாலட் போன்ற உணவு வகைகள் கிடைக்கிறது. இது மட்டும் அல்லாமல் பெரிய ஊர்களில் தாய், சைனீஸ், இத்தாலிய உணவகங்கள் இருக்கிறது. பெரும்பாலான ஊர்களில் மளிகை கடைகளில் சாலட், பர்கர், காபி போன்றவையும் கிடைக்கிறது. 

அடுத்த நாள் வழக்கம் போல மெதுவாகவே எழுந்து கிட்ட தட்ட கிளம்பும் போது மதியம் 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அன்று Snafellsnes தீபகற்பத்தை சுற்றி வருவதாக திட்டம். முதலில் சென்றது Snaefellsnes உள்ள Kirkjufell என்ற பெயரை கொண்ட ஐஸ்லாந்தில் மிகவும் புகைப்படம் எடுக்கப்பட்ட மலையாகும். அந்த மலையில் இருந்து வழியும் அருவிக்கு பெயர் Kirkufjellfoss என்பதாகும். Grundafjordur என்ற ஊரின் அருகாமையில் உள்ளது இந்த மலை. 





இதன் பின்பு நாங்கள் Svodufoss என்ற நீர்வீழ்ச்சியை கண்டு களித்தோம். இந்த அருவி Rif  என்ற ஒரு ஊருக்கு அருகாமையில் இருந்தது. நிறைய பண்ணைகளுக்கு மத்தியில் இருந்ததால் இதை எப்படி அடைவது என்பதே  குழப்பமாக இருந்தது. சில மைல்கள் சிறிய ஓடைகளையும், புல் வெளிகளையும்  நடந்து கடந்தும்  இதன் அருகில் செல்ல முடியவில்லை. எனவே சற்று தொலைவில் இருந்தே புகைப்படம் எடுத்து திரும்பினோம்.  ஐஸ்லாந்தில் உள்ள அருவிகளில் பெரும்பாலும் பசால்ட் பாறைகள் எனப்படும் சதுரமான  கற்துண்டுகள் யாரோ ஒரு சிற்பி செதுக்கினார் போல் இயற்கையாகவே அமைந்துள்ளது. Svodufoss அருவியும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இயற்கை தான் எவ்வளவு வலிமை வாய்த்தது எத்தனை அழகியலுடன் தன்னைத் தானே செதுக்கி உள்ளது என்று வியந்தவாறே திரும்பினோம்.




அடுத்து சென்றது Djúpalónssandur மற்றும் Dritivk என்ற கருப்பு நிற மண்ணும் அந்த மண்ணின் மேல் சிறிய கருநிலவாய் கருப்பு கூழாங்கற்கள் கொண்ட ஒரு கடற்கரைக்கு. கடற்கரை என்றால் தண்ணீரில் இறங்கவும் முடியாது. இறங்கவும் கூடாது. கிரீன்லாந்து தொடங்கி ஐஸ்லாந்து முடியும் வரை ஆர்டிக் சமுத்திரத்தில் எழும் அலைகளை தடுப்பதற்கு எந்த விதமான நிலப்பரப்பும் இல்லை என்பதால் கடலில் எழும் அலைகள் மிகுந்த வேகத்துடன் இருக்கும். எனவே பெரும்பாலும் கடற்கரைகளில் எச்சரிக்கை பலகைகள் தென்படுகின்றன. இதனை மீறி யாரும் பெரும்பாலும் கடலில் இறங்குவதில்லை. நம்ம ஊரு இளவட்ட கல் போல பெரிய கற்களும் சிறிய கற்களுமாய் அந்த கடற்கரையில் கூழாங்கற்கள் அழகாய் காட்சியளித்தன. அந்த இளவட்ட கற்களை அந்த ஊர் மீனவர்கள் தங்கள் வலிமையை காட்டுவதற்காக தூக்குவார்களாம். அவர்களை போலவே நீங்களும் தூக்கி மகிழலாம். 










அடுத்து நாங்கள் சென்றது Vatnshellir என்ற குகைக்கு. இந்த குகையை  சுற்றி பார்ப்பதற்கு என்று நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம். Hellnar  என்ற ஊரிலிருந்து கிட்ட தட்ட 10 நிமிட கார் பயணத்தில் இருந்த  இந்த குகை எரிமலை குழம்பு வெளியேறி ஓடும் போது பூமிக்கு அடியில் குடைந்த பாதைகள் மற்றும் அந்த எரிமலை குழம்பு உண்டாக்கிய பாறைகள் ஆகியவற்றை காணும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. கிட்டத்தட்ட 35 மீட்டர் ஆழத்திற்கு பூமி மட்டத்தில் இருந்து கீழே வளைவுகள்  கொண்ட ஒரு படிக்கட்டின் வழி இறங்கி இந்த குகையை பார்த்தோம். 35 மீட்டர் என்பது கிட்ட தட்ட 3 மாடிகள் என்று கொள்ளலாம். 200 மீட்டர் அளவு அகலம் கொண்ட அறைகள், amphitheater என்று சொல்லும் வட்ட வடிவான அறைகள் என்று காலுக்கு கீழேயும் உண்டான அற்புதங்களை வடிக்க வார்த்தைகள் இல்லை. ஆள் ஆளுக்கு கையில் ஒரு டார்ச் லைட் கொடுத்திருந்தார்கள். அனைவரின் கை விளக்கையும் ஒரு இடத்தில் அணைக்க சொன்னார்கள். அணைத்த பின் காரிருள் (Pitch Black) என்பதை என்ன என உணர்ந்தோம். போதிய வெளிச்சம் இல்லாமையால் அதிகமாக புகைப்படம் எடுக்கவில்லை. எனினும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான இடம். குகைக்குள் எடுத்த ஒரு காணொளியை இங்கே இணைத்துள்ளேன்.






நாங்கள் பயணித்த சாலையில் இரு மருங்கிலும் இருந்த அழகிய காட்சிகளை காட்டும் பொருட்டு மேலே ஒரு காணொளியை இணைத்துள்ளேன். இப்படிப்பட்ட இயற்கை காட்சிகளின் ஊடே தான் அதனினும் சிறந்த இயற்கை அதிசயங்கள் அமைந்துள்ளது.

அடுத்து பார்த்தது Londrangar Basalt Cliffs எனப்படும் கடல் பாறைகளை. இந்த பாறைகள் ஐரோப்பிய பறவைகள் வந்து தங்கும் இடமாகும். பறவைகள் கடலின் மேலே செங்குத்தாக ஓங்கி காட்சிதரும் அந்த பாறைகளில் தங்கி கூடுகள் அமைத்து தங்கள் குஞ்சுகளை வளர்க்கும் காட்சிகளை இங்கே காணலாம். பல்வேறு விதமான பறவைகளை காணும் ஆர்வம் கொண்டவர்களுக்கு (Bird Watchers) இது ஒரு சிறந்த இடம்.






கிட்ட தட்ட இரவு 8 மணியை கடந்து  விட்டிருந்தது இப்பொழுது. எனினும் சீல் எனப்படும் நீர் நாய்கள் நிறைய இருக்கும் Ytri Tunga Seal  Beach எனப்படும் கடற்கரையை பார்த்து விட்டு அன்றைய தினத்தை முடித்து கொள்ளலாம் என்று கடைசியாக அங்கே சென்றோம். அனைவருமே மிகவும் சோர்வாக இருந்ததால் நான் மட்டும் சென்று சில புகைப்படங்களை எடுத்து வந்தேன். Ytri  Tunga  Seal  Beach  என்பது ஐஸ்லாந்தை பொறுத்த வரை மிகவும் சிறப்பானது. ஐஸ்லாந்தில் மிக சில கடற்கரைகளில் மட்டுமே மண் பொன்னிறமாக இருக்கும். பெரும்பாலும் எரிமலைகள் நிறைந்த ஐஸ்லாந்தில் கருப்பு நிற மண் என்பதே  பெரும்பாலான கடற்கரைகளில் காணக் கிடைக்கும். இங்கே பொன்னிற மண் அமைந்த பாறைகள் நிறைந்த இந்த கடற்கரையில் நிறைய நீர்நாய்களை காண முடிந்தது.






அடுத்த நாள் நாங்கள் தங்கியிருந்த அழகிய பண்ணை வீட்டில் இருந்து கிளம்பி Stykkisholumur சென்று அங்கிருந்து ஒரு படகில் செல்வதற்காக திட்டம். படகு எந்த ஊருக்கு செல்கிறது என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

வளரும்...
 
ஐஸ்லாந்து பயண அனுபவம் - பாகம் 3 இங்கே 

வியாழன், மே 14, 2020

ஐஸ் ஐஸ் ஐஸ்லாந்து - ஒரு இன்பச் சுற்றுலா - பாகம் 1

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி என்றாலே பொதுவாகவே படத்தின் பிரோடியூசருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும். ஆனால் வெளிநாட்டில் ஷூட் செய்யப்பட்ட பாடல் என்றாலே அடுத்த  சுற்றுலாவிற்கான இடமாக இருக்குமோ என்று என் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். அப்படி இந்த முறை மனதில் ஒட்டிக் கொண்ட இடம்  ஒரு ஹிந்தி பட பாடல் காட்சியில் இடம் பெற்றது. ஷாருக்கான் மற்றும் கஜோல் ஜோடி மீண்டும் இணையும் "தில்வாலே" திரைப்படத்தில் இடம் பெற்ற "கேருவா" என்ற பாடல். ரொம்பவும் பிரசித்தி  பெற்ற ஜோடி என்பதோடு இத்தனை வருடங்கள் கழித்தும் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" என்ற திரைப்படத்தில்  தோன்றிய ஜோடிகள் போலவே அவ்வளவு அழகாக இருந்தார்கள். இந்த பாடலில் அவர்கள் இடம் பெற்ற பாடல் காட்சியில் வந்த ஐஸ்லாந்தே நாங்கள் சென்ற வருடம், 2019 ஜூன்-ஜூலை மாதத்தில் சென்று வந்த இன்பச் சுற்றுலா. 

  

உன்னில் தொடங்கி உன்னிலேயே முடியும் 
இந்த காதல் ஒரு பக்தனுக்கும் கடவுளுக்குமான  பந்தத்தை போன்றது 
நானே யாத்திரீகன் நீயே இலக்கு 
எல்லா பாதைகளும் உன்னிடமே முடிவடையும் 

என்று கவித்துவமான வரிகள் கொண்ட பாடல். புரியவில்லை என்றாலும் மெட்டுக்காக கேட்கலாம். அந்த பாடல் படமாக்கப் பட்ட அழகான இடங்களுக்காக மீண்டும் மீண்டும் அந்த பாடல் காட்சியை பார்க்கலாம். சரி, நாம் மறுபடியும் ஐஸ்லாந்து பயணத்திற்கு வருவோம். ஐஸ்லாந்து வடக்கு அட்லாண்டிக்கில் க்ரீன்லாந்தில் இருந்து வெறும் 1200 கீ.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளது. ஆர்டிக்கிற்கு வெகு அருகிலேயே இருப்பதால் தெற்கு ஐஸ்லாந்து கொஞ்சம் சூடான சீதோஷ்ண நிலையிலும், வடக்கு ஐஸ்லாந்து மிகவும் குளிரான சீதோஷணையும் கொண்டுள்ளது. வெறும் 103,000 சதுர கீ.மீ. பரப்பளவு கொண்ட இந்த நாடு வெறும் 3 லட்சம் மக்கள் தொகையை கொண்டு ஐரோப்பாவிலேயே மிகவும் குறைந்த மக்கள் தொகையை கொண்ட நாடு என்று அறியப்படுகிறது.



இந்த பயணம் பல மாத திட்டமிடல்களுக்கு பின்பே நிகழ்ந்தது. முதலில் ஐஸ்லாந்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் வாயிலும் மனதிலும் நுழையவில்லை. ஐஸ்லாந்திக் என்று அந்த மக்கள் பேசும் மொழி பேசுவதற்கும் மிகவும் கடினமான மொழி. ஊரின் பெயர்கள் ஐஸ்லாந்திக்கில் இருந்ததால் பெயர்களை நினைவில் வைத்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. எனவே திட்டமிடும் போது எத்தனை முறை பார்த்தாலும் முன்பே பார்த்த ஊர் தானா இல்லை வேறு புதிய இடமா என்பதில் மிகுந்த சந்தேகம் இருந்தது. எனினும் ஒரு வசதி என்னவென்றால் ஐஸ்லாந்தில் ரிங் ரோடு என்ற ஒரே சாலை கிட்ட தட்ட ஒரு வட்டம் போல ஐஸ்லாந்தில் உள்ள எல்லா பகுதிகளையும் இணைக்கிறது. கிட்ட தட்ட 16 மணி நேரத்தில் ரிங் ரோடு மூலம்  மொத்த ஐஸ்லாந்தையும் சுற்றி விடலாம். ரிங் ரோடு தவிர ஏனைய சாலைகள் பெரும்பாலும் சரளை கற்கள் இடப்பட்ட சாலைகள், மழை பெய்திருந்தால் கொஞ்சம் சேறாக மாறிவிடும். எனவே மிகவும் மெதுவாகவே தான் வாகனத்தை ஓட்ட முடியும். இது தவிர  F என்ற எழுத்தில் தொடங்கும் சாலைகள் அதற்கான அனுமதிக்கப்பட்ட சிறப்பு வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும். இந்த பாதைகள் செங்குத்தான மலை மேலோ அல்லது ஆறுகள் குறுக்கிடும் வழியாகவோ இருக்கும். எனவே வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. நாங்கள் சென்றது கோடைகாலம் என்பதால் சூரிய ஒளி எப்போதும் இருந்தது. இதனால் எந்த நேரத்திலும் வாகனம் ஓட்ட முடியும் என்ற வசதி இருந்தது. சூரிய அஸ்தமனம் என்பதே கோடைகாலத்தில் நிகழ்வதில்லை. வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் சமுத்திரங்களுக்குக் இடையிலும், யுரேசியா மற்றும் வட அமெரிக்க டெக்டானிக் தகடுகளும் ஐஸ்லாந்தில் சந்திப்பதால் நிறைய எரிமலைகளும், இயற்கையாகவே வெந்நீர் ஊற்றுகளும், பனிப்பாறைகளும் அமைந்திருக்கின்றன. இதனால் Land of Ice and Fire என்று அழைக்கப்படுகிறது. இயற்கை அன்னை தனி சிரத்தையுடன் ஒவ்வொரு அங்குலமாக இழைத்திருக்கிறாள் ஐஸ்லாந்தை. அத்தனை அருவிகள், தகிக்கும் எரிமலை குழம்புகள், வெண் பட்டை விரித்தார் போன்ற பனிப் பாறைகள், குளிர் வீசும் இடங்களிலும் இதமான வெந்நீர் ஊற்றுகள் என்று இயற்கை அன்னை காட்டும் அற்புதங்கள்  அடடே ரகம். தமிழில் குறிப்பதை விட ஊர் பெயர்களை ஆங்கிலத்திலேயே குறித்தால் கூகுளை பயன்படுத்தும் போது தேடுதல் எளிதாக இருக்கும் என்பதால் கூடிய வரை ஊர் பெயர்களை ஆங்கிலத்திலேயே குறித்திருக்கிறேன். 

கிட்ட தட்ட மொத்தம் 16 நாட்கள் நீடித்தது  இந்த பயணம். ஐஸ்லாந்துக்கு எந்த மாதம் சென்றாலும் பெயருக்கு ஏற்றார் குளிரோ குளிர். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கோடை காலம் என்றாலுமே நிச்சயம் குளிரும். அது மட்டும் அல்லாமல் திடீரென்று மழையும் உண்டு. ஆர்டிக் பிரதேசத்தில் இருப்பதால்  காற்றும் பிச்சு உதறும். எனவே மழையையும் குளிரையும் தாங்கும் ரெயின்கோட் போன்ற ஜாக்கெட் மற்றும் காதுகளையும், கரங்களையும் பாதுகாக்கும் குளிர் தாங்கும் குல்லாய், கையுறை, வழுக்கும் பாதைகளிலும், செங்குத்தான சரளை பாதையில் நடக்க நல்ல பிடிப்பு உள்ள ஷூக்கள் கண்டிப்பாக தேவை.

எங்கள் பயணம் ஒரு சனிக்கிழமை அன்று வாஷிங்டனில் இருந்து ஐஸ்லாந்து ஏர் என்ற விமான சேவை மூலம் தொடங்கியது. கிட்ட தட்ட 6 மணி நேர பயணம் மட்டுமே. முதல் நாள் இரவு  பிளைட் பிடித்தால் அடுத்த நாள் காலையில் Reykjavik சென்றடையலாம் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வந்த பிளைட்டிலேயே எங்கள் பெட்டிகள் வந்து சேரவில்லை. நாங்கள் தங்குவதற்கு என்று அறைகளை என்று சொல்வதை விட வீடுகளை AirBnb  என்ற தளத்தில்  பதிவு செய்திருந்தோம். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு முன்னரே தங்குமிடத்தை முன்பதிவு செய்தல் மிகவும் அவசியம். ஏனென்றால் விமான டிக்கெட்டை விட தங்குவதற்கு என்று அதிகமாக செலவாகும். பயணிகள் தங்குவதற்கு என்று இருக்கும் இடங்கள் மிகவும் குறைவாக உள்ளதாலும், நிறைய சுற்றுலா பயணிகள் கோடைகாலங்களில் வருவதாலும் பெரும்பாலும் தங்குவதற்கு என்று உள்ள இடங்கள் வெகுவிரைவாக புக் செய்யப்பட்டு விடும்.  

                                                        (ரிங் ரோடு, ஐஸ்லாந்து)

கிட்ட தட்ட எல்லா தங்குமிடத்தில் மதியம் 3 மணி அளவிற்கே செக்-இன் செய்ய முடியும். காலை 6:30 மணிக்கே நாங்கள் Reykjavik-கை அடைந்ததால்,  சரி விமான நிலையம் அருகிலேயே  உள்ள வாடகை கார் எடுக்குமிடத்திற்கு சென்று காரை எடுத்துக் கொண்டு மீண்டும் விமான நிலையத்திற்கு வந்துவிடுவோம் என்ற எண்ணத்தில் அங்கு சென்றோம். கிட்ட தட்ட மூன்று மணி நேர காத்திருத்தலுக்கு பிறகே வாடகை காரை எடுக்க முடிந்தது. வெகு நேரம் காத்திருந்ததால் குழந்தைகளும், நாங்களும் பசியால் வாடி போய்விட்டோம். ஏனெனில் அத்தனை கூட்டம். கார் எடுக்கும் இடத்தில் இன்சூரன்ஸ் அது இது என்று பர்ஸை பதம் பார்த்துவிடுவார்கள். எனவே கவனமாக இருத்தல் நல்லது. அவர்கள் சொல்லும் பாதி இன்சூரன்ஸை எடுக்காமல் இருந்தால் தப்பித்து கொள்ளலாம். நாங்கள் இன்சூரன்ஸ் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாததால் நாங்கள் எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அளவில் இங்கு பணம் செலவழித்து விட நேர்ந்தது. எனவே இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை. ஐஸ்லாந்தில் ரிங் ரோடு தவிர வேறு பகுதிகளில் அதிக அளவு பெட்ரோல் பங்குகள் இல்லாததால் எப்பொழுது பெட்ரோல் பங்கை பார்த்தாலும் டாங்கை நிரப்பிக் கொள்வது நல்லது. 

திரும்பவும் விமான நிலையம் வந்து அடுத்த பிளைட்டில் வந்த பெட்டிகளை எடுத்துக் கொண்டு, வாய்ஸ் மற்றும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய சிம் கார்டு  வாங்கிக் கொண்டும், இரவு உணவிற்கு தேவையான பால், பிரட், சிறிதளவு காய்கள் (எந்த காயும் ஐஸ்லாந்தில் விளைவதில்லை. எனவே இவை விலை மிகவும் அதிகம்) வாங்கிக் கொண்டு நாங்கள் அன்று இரவு தங்குவதற்காக Keflavik என்ற இடத்தில புக் செய்திருந்த வீட்டிற்கு வந்தோம். பெட்டிகளை அங்கே வைத்து விட்டு மாற்றுவதற்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு நாங்கள் சென்ற இடம் "ப்ளூ லகூன்" என்ற செயற்கையாக உருவாக்கப் பட்ட நீச்சல் குளம். பூமியில் இருந்து கிளம்பும் வெந்நீர் ஊற்று பூமியின் மேற்புறத்திற்கு வரும் போது  குளிப்பதற்கு ஏற்ற நீராக சரியான சூட்டில் தேக்கி வைக்கப் படும் ஒரு செயற்கை நீச்சல் குளமே  இந்த ப்ளூ லகூன். இதற்கும் முன் பதிவு செய்வது அவசியம்.



ப்ளூ லகூன் வெளிப்புறம் (எரிமலை கற்களை பாதையின் இரண்டு புறமும் காணலாம்)
 



ப்ளூ லகூன் (சுற்றிலும் மலைகள் சூழ்ந்து சற்றே குளிராகவும் நீருக்குள்ளே இதமான சூட்டிலும் இருந்தது). 

மலைகள் பல சூழ்ந்து, நீல நீரில் இருந்து நீராவி வெளியேறும் போது ஏதோ தேவலோகத்து காட்சியை நினைவு படுத்தியது போல் இருந்தது இந்த ப்ளூ லகூன்.



ப்ளூ லகூனை பார்க்க விரும்புபவர்கள் ஆதவன் படத்தில் வரும் "ஏனோ ஏனோ பனி துளி" பாடலை பாருங்கள். 2:30 மணி துளியில் இருந்து 2:40 மணி துளி வரை வருவது ப்ளூ லகூன். முழுவதும் ஐஸ்லாந்தில் படமாகப்பட்டது இந்த பாடல்.

 ப்ளூ லகூன் முடிந்து மறுபடியும் தங்கும் இடத்திற்கு வந்து இரவு உணவை முடித்து விட்டு அடுத்த நாள் Keflavik கை பார்த்து விட்டு அங்கிருந்து Stykkisholmur என்ற இடத்திற்கு செல்வதாக திட்டம்.

வளரும்..............


ஐஸ்லாந்து பயண அனுபவம் - பாகம் 2 இங்கே 

ஞாயிறு, மே 10, 2020

ஓங்கு பறை

காலத்தை கொரோனாவிற்கு முன் கொரோனாவிற்கு பின் என்றே இப்பொழுது பகுக்க வேண்டும். கொரோனாவிற்கு முற்பட்ட சென்ற ஆண்டில், அதாவது 2019-இல் சில தன்னார்வலர்கள், தமிழர் மரபு கலையான பறையை அனைவரிடமும் கொண்டு செல்லும் முகமாக வட கரோலினாவில் சார்லட் மாநகரில் பறை பயிற்சி பட்டறை நடத்தினார்கள். அந்த பறை பட்டறையில் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து  பயிற்சி பெற்றனர். 2 நாட்கள் நடந்த பறை பட்டறை அட்லாண்டா மாநகரில் இருந்து வந்த முழங்கு பறை அமைப்பினரின் வழிகாட்டுதலின் பேரில் இனிதே நடைபெற்றது. இத்தனை பேருக்கும் தேவையான பறை, சலங்கை என்று பலவற்றை இந்தியாவில் இருந்து தருவித்து  குறித்த நேரத்தில் தருவது என்பது எத்தனை கடினமான விஷயம். ஆனாலும் தன்னார்வலர்கள் இதை ஒரு சேவையாகவே செய்தனர் என்றால் மிகை இல்லை.
கற்று கொண்ட பலரில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ச்சியாக நடந்த பயிற்சி வகுப்புகளுக்கு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஜோசப் வில்பிரெட் ஆல்வின் மற்றும் கிருத்திகா தம்பதியினர் ஆசான்களாய் வழிகாட்ட ஒரு அருமையான பறையாட்ட நிகழ்ச்சியை இந்த ஆண்டு 2020 பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று சார்லட் மாநகர் பொங்கல் விழாவின் போது நிகழ்த்தினார். ஓங்கு பறை என்ற பெயரை கொண்ட அந்த குழுவில் நானும் ஒரு அங்கம் என்பதை எண்ணி உவகை கொள்கிறேன். எங்கள் குழுவினரின் முதல் பறை நிகழ்ச்சியை மேலே உள்ள இணைப்பில் கண்டு களியுங்கள்.


பாரதிதாசனின் புரட்சி கருத்துக்கள்


சென்ற மாதம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், டெலவர், அமெரிக்கா என்ற அமைப்பினர் புரட்சி கவி பாரதிதாசனின் 130-வது பிறந்த நாளையொட்டி  "புரட்சிக் கவிஞரின் புரட்சிக்கு கருத்துக்கள் என்ற தலைப்பில்" நடத்திய கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற என்னுடைய கட்டுரை. விதிகளுக்கு ஏற்ப ஒரு சில பகுதிகளை நீக்கியும், சுருக்கியும் மாற்றியும் எழுதி அனுப்பி இருந்தேன். முழுமையான கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு. 

பாரதிதாசனின் புரட்சி கருத்துக்கள்

கனல் வீசும் கண்களும், மிடுக்கான துடிப்பான மீசையும், தலையில் முண்டாசுமாய் ஒரு அக்னி துண்டாய் தோன்றி தமிழ் புலவர் என்றொரு  இனமுண்டு, தனியே அவர்க்கு  ஒரு குணமுண்டு என்று நிறுவியவர் மகாகவி பாரதி. அந்த வீரிய விருக்ஷத்தின் அடியில் முளைத்த அடி வாழையாய்  நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர் புரட்சி கவிஞர் பாரதிதாசன். தமிழ் உள்ள மட்டும் அவரின் பெயரையும், உலகில் கடைசி தமிழர் உள்ள மட்டும் அவரின் புகழையும் அழிக்க இயலாது. அவரின் கவிதையில் தமிழ் துள்ளும், புரட்சி கருத்துக்கள் அள்ளும்.பாரதிதாசன் அவர்கள்  இசையில் தேர்ந்த கவிஞர்; சிறந்த நாடக ஆசிரியர்; பத்திரிக்கையாளர் மற்றும்  எழுத்தாளர்; சுதந்திர போராட்ட வீரர்; திரைக்கதை ஆசிரியர்; பன்முக வித்தகர்."பாரதி  வழங்கிய ஞான ரதம், அவர்தந்த கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை விட உயர்வானது அவர் உருவாக்கி கொடுத்த கனக. சுப்புரத்தினமே" என்ற  புதுமை பித்தனின் வாக்கினில் பாவேந்தர் பாரதிதாசனின் உயர்வினை அறியலாம்.

விஞன் என்பவன் மொழியை லாவகமாக கையாளும் திறமை பெற்றவன் மட்டுமல்ல.அக்கவிஞன் சிந்தனையில் தோன்றிய கருத்துக்கள் சமூகத்தில் விதைத்த மாற்றம் என்ன என்ற அளவுகோல் கொண்டே அளக்க வேண்டும். தொலைநோக்கு கொண்ட புரட்சி கருத்துக்களை சொன்னதால் மட்டுமே பாரதிதாசனை நாம் கொண்டாடவில்லை. அந்த கருத்துக்கள் இக்காலத்திற்கும் எதிர்வரும் எல்லா காலத்திற்கும் பொருத்தமாக இருப்பதாலேயே அவர் கவிதைகளும், உயர் சிந்தனைகளும் இன்றும் போற்றப்படுகிறது.

நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா

காடு கமழும் கற்பூரச் சொற்கோ!

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன் புதிய

அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

தமிழால், பாரதி தகுதி பெற்றதும்

தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்

எவ்வாறென்பதை எடுத்துரைக் கின்றேன்.

என்று பாரதியை தன்னுடைய பெயரில் மட்டும் அல்ல, தன்னுடைய தமிழாலும் போற்றியவர். கனக. சுப்புரத்தினம் என்ற தன் இயற்பெயரை துறந்து பாரதியின் மீது கொண்ட நட்பின் ஆழத்தால் பாரதிக்கு தாசன் அதாவது "பாரதியின் அடிமை" என்ற பெயரை விரும்பி ஏற்றவர். வள்ளுவன் காட்டும் "நெஞ்சத்து அகநக  நட்பதே  நட்பு" என்ற தூய நட்பின் இலக்கணத்தின் வழி ஒழுகியவர் என்றால் அது மிகையாகாது.

பைந்தமிழ் தேர்ப்பாகன், நீடுதுயல் நீக்க பாடி வந்த நிலா, காடு கமழும் கற்பூர செங்கோ என்று தமிழ் சமூகத்திற்கு பாரதியை அறிமுகம் செய்யும் தகுதி வாய்ந்த ஒரே கவிஞன் பாவேந்தர் மட்டுமே. மேற்கத்திய உலகில் ஷெல்லியும் கீட்சும் எவ்வாறு இரட்டை கவிஞர்கள் என்று அறியப்பட்டனரோ அது போலவே சம காலத்தில் வாழ்ந்த பாரதியும், பாரதிதாசனும் தமிழ் தாய் ஈந்த இரட்டை குழந்தைகள் என்றே சொல்லலாம்.

கவிஞருக்கே வாய்த்த உள்ளம் பிறர் நலம் பேணுவது. தன் சமூகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் கருத்துக்களை பாமரரும் அறியும் வண்ணம் தெளிவாய் உரைப்பது.

அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்   

அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்    

இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?    

என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை.

என்று குடும்பவிளக்கில் பாரதிதாசன் கூறுவது இக்கணமே நாம் வாழும் இச்சமூகத்திற்கு நற்தொண்டுகள் புரிய வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொருவருக்கும் நிச்சயம் விதைக்கும். நிகழும் ஓவ்வொரு மரணமும் நாம் நல்லது செய்வதற்காக உள்ள குறைவான கால அளவையே காட்டுகிறது என்பதையே "உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா" என்று அறை கூவல் மூலம் அறிவிக்கிறார்."தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன்" என்று சமுதாய சிந்தனை யற்று உள்ளோரை பழிக்கிறான். "வேடிக்கை மனிதரை போல வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று பாரதி சுழற்றிய சொல் சட்டைக்கு சிறிதும் குறைவானதில்லை இவ்வரிகள்.

அவரது கவிதைகளில் மனிதர்கள் அனைவரும் ஒரே குலம், ஒரே இனம்  என்ற பொது நலம் எப்பொழுதும் மேலோங்கியே இருக்கும். செந்தாமரையை காணும் போதும் , கூட்டமான வெண்புறாக்களை காணும் போதும் சாமானிய கவிஞர் போல் அழகிய காட்சிகளை மட்டும் வர்ணனை செய்யாமல் மேலோர் கீழோர் என்று பிரிந்து கிடைக்கும் தமிழ் இனம் ஒன்று படவேண்டும் என்னும் உயர் சிந்தனையை அக்கவிதையை  படிப்பவருக்கும் கடத்துவார்.

இட்டதோர் தாமரைப்பூ

இதழ் விரித்திருத்தல் போலே

வட்டமாய் புறாக்கள் கூடி

இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்

வெட்டில்லை; குத்துமில்லை;

வேறுவேறு இருந்து அருந்தும்

கட்டில்லை; கீழ்மேல் என்னும்

கண்மூடி வழக்கம் இல்லை!

இயற்கை அழகில் தன்னை மறப்பது கவிஞர்களின் இயல்பு. ஆனால், பாரதிதாசன் பசுமையான சோலையைப் பார்க்கும் பொழுது கூட அதனை உருவாக்கப் பாடுபட்ட தொழிலாளர்களின் நிலையை, துயரத்தை எண்ணிப் பார்க்கின்றார்.

சித்திரச் சோலைகளே உமைநன்கு

திருத்த இப்பாரினிலே - முன்னர்

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே 

என்று தொழிலாளர் படுத்துயரை எண்ணி துயரம் கொள்கிறார்.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நூலில் அவர் அந்த மலையின் இயற்கை காட்சியை கீழ் கண்டவாறு வர்ணிக்கிறார்.

குயில் கூவிக் கொண்டிருக்கும். அழகு மிக்க மயில் ஆடிக் கொண்டிருக்கும். மணமிக்க காற்று குளிர்ச்சியாக வீசும். கண்ணாடி போன்ற தெளிந்த நீர் ஊற்றுகள் இருக்கும். பழ மரங்கள் நிறைய உண்டு. பூக்களிலே தேனீக்கள் இருந்து இசைபாடிக் கொண்டிருக்கும்.

அத்தகைய சஞ்சீவி மலை சாரலில் வஞ்சியும்,குப்பனும் காட்டு மூலிகையை  உண்டு உலகின் வாழும் மாந்தரின் பேச்சினை கேட்கும் திறம் பெறும் போது, ஆங்கிலேயேர்  ஒருவர்  சொல்வது போல் அமைந்த இந்த பாடலில் சாதி சமய வேறுபாடுகளையும் அவற்றை பின்பற்றும் சமூகத்தை சாடுகின்றார். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையும், தீண்டாமையும் புரையோடிய இச்சமூகத்தில் புராணங்களையும், இதிகாசங்களையும் எள்ளி நகையாடும் நெஞ்சுரமும், கொண்ட கொள்கை மாறாமல் நிற்கும் தனித்திறனும் , சொல்வன்மையும், ஆழ்ந்த கருத்துக்களை பாமரரும் விளங்கும் வண்ணம் எளிய நடையில் சொல்லும் திறனும் பாவேந்தர் அவருக்கே உரியது.

நாவலந்தீவு நமைவிட்டுப் போகாது

வாழ்கின்றார் முப்பது முக்கோடி மக்களென்றால்

சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்

ஆகையால் எல்லோரும் அங்கே தனித்தனிதான்

ஏக மனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?

பேதம் வளர்க்க பெரும் பெரும் புராணங்கள்

சாதிச் சண்டை வளர்க்க தக்க இதிகாசங்கள்!

கட்டிச் சமூகத்தின் கண்ணவித்து தாமுண்ணக்

கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்

தேன்சுரக்கப் பேசிஇந்து தேசத்தைத் தின்னுதற்கு

வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்;

கவிஞர் கண்ணதாசனும் அவர் பின் வந்த கவிஞர்களும் பாரதிதாசனிடம் இருந்து தமிழ் சொற்களையும், அவர்தம் உயரிய கருத்துக்களையும் கடன் பெற்றே தமிழ் சமூகத்திற்கு அளித்தனர் என்பதே உண்மை. பாரதிதாசன் என்ற தமிழ் அன்பனுக்கு தானும் அன்பன் என்று உரைத்து கவிஞர் தி.ராஜகோபாலன் தன் பெயரை "கனக சுப்பு ரத்தின தாசன்" என்று பொருள் வருமாறு "சுரதா" என்று பெயர் சூட்டிக் கொண்டார். பாரதிதாசனின் கவித்திறனே இத்தகைய ஒரு தாக்கத்தை உண்டு செய்திருக்க முடியும் என்பதில் இருவேறு கருத்துக்கள் எழுவதற்கு வாய்ப்பேயில்லை.

கடவுள் பெயராலும் விதியின் பெயராலும் பாட்டாளிகளை ஏமாற்றும் கயவர்களைக் கடிந்து கொள்ளும் பாவேந்தர், அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையையும் விடுக்கின்றார். அதில், ஏழைகளின் இரத்தம் கொதிப்பேறும் முன் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களைத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்.

செப்புதல் கேட்பீர் - இந்தச்

செனத் தொழிலாளர் மிகப் பலர் ஆதலின்

கப்பல்களாக - இனித்

தொழும்பர்களாக மதித்திட வேண்டாம்

இப்பொழுதே நீர் - பெறு

இன்பம் விளைத்திட உங்களின் சொத்தை

ஒப்படைப்பீரே - எங்கள்

உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே

காட்டை நாடாக்கினோமே! கழனி திருத்தி உழவு செய்தோமே! நாடுகளைப் படைத்தோமே! அங்கு நான்கு திசைகளிலும் வீதிகள் வகுத்தோமே! வீடுகள் கட்டினோமே! மலையைப் பிளந்தோமே! கடலைத் தூர்த்தோமே! கப்பல்கள் செலுத்தினோமே! தொழிலாளராகிய நாங்கள் படைத்ததல்லவா இந்த உலகம் என்று கேட்கின்றனர் புரட்சிக்கவிஞர் கண்ட தொழிலாளர்கள். இந்த வரிகள் பாரதிதாசன் எழுதிய "தொழிலாளர் விண்ணப்பம்" என்ற கவிதைகள் காணப் பெறுகிறது. "வலியோர் சிலர் எளியோர் தம்மை வதையே புரிகுவதா" என்று திராவக சொல்லெடுத்து இச்சமுதாய நிலையை சுட்டினார்.

புதுவினை செய்க அஃது

பொதுநலம் ஆதல் வேண்டும்

இதுசெய்க போர்கள் இல்லை

இன்ப நல்லுலகைக் காண்பாய்

புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சீரிய  கருத்தைச் சொன்னார் பாரதிதாசன்.

ரதிதாசன் பெரியார், பாரதி என்று இருவேறு பெரிய ஆளுமைகளுடன் நட்புறவு கொண்டிருந்தார். முன்னவர் பெண் விடுதலை, விதவை திருமணம், சுயமரியாதை கருத்துக்களுக்கு வித்திட்டவர். பின்னவர் அவருக்கு தமிழ் பற்றை ஊட்டியவர்.

"பெண்ணுக்கு பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை"

"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீந்துவரல் முயற்கொம்பே

என்று பெண்விடுதலையை பாடியவர். விதவையின் நிலையை இவ்வாறு உரைத்தார்.

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே  இங்கு

வேரிற் பழுத்த  பலா-மிகக்

கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்

வடிகின்ற வட்ட நிலா!

கவிஞர் பாடு பொருளின் உணர்வை வாங்கி கவி புனைவது என்பது பாரதிதாசனின் தனி திறன். கைம்மை பெண்டிர் படும் துயரை தன் துயராய் எண்ணும் உள்ளம், அன்னை மனம் வாய்த்தவருக்கே அது சாத்தியம். 

பொதுவுடைமை என்பது எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். ஆண்டான் - அடிமைச் சிந்தனை மாறவேண்டும். ஏழை - பணக்காரன் நிலை மாற்றம் பெறவேண்டும். ஏழை என்றும் பணக்காரன் என்றும் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதை,

ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்

உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ

என்ற பாடலின் மூலம் ஒத்த நிலை ஏற்பட வேண்டும் என்று கூறுகின்றார்.

பாரதிதாசன் காற்றினை சுவாசித்தவன் அல்ல, தமிழினை சுவாசித்தவன், தமிழ் இயக்கம் என்ற நூலில்

கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு

காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு

தனித்தியங் கும்தன்மை  தமிழினுக் குண்டு

தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு

என்றே உணர்ச்சி ததும்ப உரைக்கும் போது தமிழர் என்ற பெருமித உணர்வு நமக்குள்ளும் கொப்பளிக்கும்.

புரட்சி கவி என்னும் இலக்கியத்தில் சூரியனை இருள் அழியாக்க முடியதை போல, சேறு செந்தாமரை வாசத்தை மறைக்காதது போல தமிழ் வாழ்வாங்கு இவ்வையகத்துள் வாழும் என்று முழங்கினார். 

காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ?

  கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?

பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?

   பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ?

தாய்மொழியின் வீழ்ச்சி என்பது இனவியல், வாழ்வியல், பொருளாதாரம், நிலவியல், பண்பாட்டியல் என்று அனைத்து வீழ்ச்சிகளுக்கும் முதல் படி என்பதை பாவேந்தர் நன்கு உணர்ந்திருந்தார். அந்த தெளிவை, அணையா தீயான தமிழ் உணர்வை தமிழ் சமூகத்திற்கும் கடத்தியவர் அவர். 

தமிழறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான்

   தமிழ்க்கவியென் றெனைஅவளும் காத லித்தாள்!

அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்என் னாவி

   அழிவதற்குக் காரணமா யிருந்த தென்று

சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்

   தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ?

உமைஒன்று வேண்டுகின்றேன் மாசில் லாத

   உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!


காற்செருப்பை பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பொறாத உள்ளம் 

மேற்படுத்தும் எவற்றினுக்கும் பெறப்பட்ட தன மொழியை தமிழை தீயோர் 

போற்றுதற்குரிய பொதுவினின்று நீக்கி வைத்தால் பொறுப்பதுண்டோ

என்ற பாவேந்தரின் வினாவிற்கு எந்த மொழியிலும் மறுப்பளிக்க இயலாது. 

பாரதிதாசன் புதியதோர் உலகை தோற்றுவிக்க தோன்றிய போராளி. கவிதை தமிழில் இருந்த இருள் காட்டை  அழித்த நிலா. குடும்ப விளக்கெனும் வெளிச்சத்தை ஏற்றி உறவுக்கு ஒளி கொடுத்தவர். மக்களுக்கு என்று எளிய நடையில் தமிழில் கவி  சிற்பம் வடித்த "சொல்" வேந்தர். தமிழினத்தை பிடித்திருந்த சாதியெனும் பேயையும், மூட நம்பிக்கை என்ற பேதமையையும், மதம் என்ற மதிமயக்கத்தையும் உடைத்தெறியும் அருமருந்தாய் தோன்றியவர்.பெண்ணடிமை என்னும் பெரும் நஞ்சையும், கைம்மை பெண்டிர் படும் பெரும்துயரையும் பொசுக்கிய தீப்பொறி. அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லையென்றாலும் அவர் எழுதிய அர்த்தம் தோய்ந்த கவிதைகளையும், புதினங்களையும் வாசித்து நற்றமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாய்  இருக்க முடியும். பாரதிதாசனின் தமிழில் திளைப்போம், அவர் நினைவினை போற்றுவோம்.

முகநூலில் பாரதிதாசன் தமிழ் மன்ற பக்கத்தில் இணைத்து கொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.facebook.com/groups/PuratchikkavignarBharathidasanTamilMandram/?multi_permalinks=1318874164977106%2C1317434275121095%2C1316104361920753%2C1315632031967986%2C1315225585341964&notif_id=1588273203878518&notif_t=group_activity