சனி, ஏப்ரல் 18, 2020

மாற்றம் ஒன்றே மாறாதது - கொரோனா ஒரு பார்வை

தடைபடா  மனித ஓட்டம் நின்றாகிவிட்டது. தூங்கா நகரம் தூங்கி விட்டது. விண்வெளியில் இருந்தும் தெரியும் பெருஞ்சுவர்கள் கண்ணுக்கு  புலப்படாத  கிருமிகளை தடுக்கும் சக்தியற்றதாகிவிட்டது. மனிதனின் ஆணவம் அடித்து நொறுக்கப்பட்டது. எத்தனை பணம் இருந்தாலும் உனது நேரம் குறிக்கப்பட்ட பிறகு உலகில் உள்ள எதை கொடுத்தாலும் ஒரு வினாடி கூட அதிகம் பெறப்  முடியாது என்பது மீண்டும் நிறுவப்பட்டது. உண்ண உணவு, உடுக்க சில உடைகள், குடிக்க நீர், பேச தன் குடும்பம் மட்டுமே என்ற அளவில் தேவைகள் சுருங்கிவிட்டன. கேளிக்கை, கும்மாளம், யாரை பற்றியும் எதற்கும் கவலைபடாமல் புற இன்பத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பலவும் இன்று தேவையற்றதாய் போய்விட்டது. ஆணவத்துடன் உணவு சங்கிலியில் மனிதனை எல்லா உயிரினங்களுக்கும் மேல் நிறுத்திய செய்கையை கண்டு எல்லா உயிரினங்களும் மனிதனை ஏளனத்துடன் பார்க்கின்றன.

நிலைமை சரியானவுடன் மனிதன் தடை செய்யப்பட்ட விலங்குகள் விற்கும் சந்தையில் பாம்பையும், வௌவாலையும், பூச்சிகளையும் அடைத்து விற்பனை செய்வதை நிறுத்தி விடுவானா, இல்லை. சீனா திடீரன்று உலக மக்கள் மேல் அக்கறையும் கரிசனம் கொள்ளுமா,  அமெரிக்கா பொருளாதாரத்தை காரணம் காட்டி மனித சமுதாயத்தை அச்சுறுத்தும் புவி வெப்பமயமாக்கல், இயற்கை  பேரழிவு போன்றவற்றை தடுத்து நிறுத்துமா,  சுதந்திரம் இல்லாமல் வாழ்வது என்றால் என்ன என்று உணர்ந்து மனிதன், மிருகக் காட்சிசாலைகளையும், விலங்குகளை கேளிக்கைக்காக சிறைப்படுத்துவதையும் கைவிட்டு விடுவானா அல்லது  தன்னுடைய தேவைகளுக்காக மனிதன் அழிக்கும் காடுகளையும், அதனால் சீர்கெடும் விலங்குகளின் வாழ்வாதாரத்தை மீட்டு  தருவானா என்றால் இது எதுவும் நடக்க போவது இல்லை.

ஏனென்றால் நிலைமை சீரானவுடன், தனி மனிதன் திரையில் காணும் நட்சத்திரங்களை உண்மை என எண்ணி கை தட்டுவதை  தொடங்கி விடுவான். ஊரை தூய்மையாக வைக்க பாடுபட்ட துப்புரவு பணியாளர்களையும், உயிர் காக்க பாடுபட்ட மருத்துவ சமுதாயத்தையும் மறந்து விடுவான்.  ஊரை  காக்க வெயிலிலும், இரவிலும் அரும்பாட்டு பட்ட காவலர்களை விட ஊரில் உள்ள பெரிய பணக்காரனிடம் சென்று உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேள்விக் கணை வீசி புளகாங்கிதம் அடைவான். கடவுள் தனக்குள்ளே என்பதை மறந்து வெளியில் சென்று போலி சாமியார்கள் இடையே தேடி அலைவான். நிலையாமையை மறந்து அடுத்தவனை ஏய்த்து சில பல கோடிகள் சேர்த்து சாமர்த்தியசாலி என்றும் வெற்றியாளன் என்றும் பெயரை சேர்த்து சமுதாயத்தில் தலை நிமிர்த்தி வலம் வருவான். பணம் சேர்க்க வேண்டும் என்று தன்னுடைய உடலை வருத்தி பணம் சேர்த்து பின் மருத்துவரிடம் சென்று அதை பாங்காய் செலவழிப்பான். போதை, மது என்ற எல்லாவற்றிடம் நிம்மதி தேடி அடுத்தவருக்கு உதவி செய்வதில் உள்ள மனநிறைவை அறியமாலேயே வாழ்ந்து மடிவான். வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் இருக்க வேண்டும் என்பதை மறந்து  பெரிய விளம்பர பலகைகளிலும், சுவரொட்டிகளிலும்  ஆடம்பரமாய் விளம்பரம் செய்து சுயபெருமை சொல்லித் திரிவான். எல்லா விலங்குகளும் உணவு என்ற எண்ணத்தில் மட்டுமே பார்த்து மேலும் பல புதுப்புது வியாதிகளை உருவாக்கி தன இனம் அழிவதை கண்டு மருளாமல் உலகப் பொருளாதாரம் சரிந்ததால் பங்குகள் மலிவான விலையில்  கிடைக்கிறது என்று எண்ணி பூரிப்பான்.

சரி, அப்பொழுது கொரோனவால் ஒரு மாற்றமும் வரவில்லையா என்று கேட்போருக்கு:

1. வீட்டில் அமர்ந்தே இருந்து வேலை செய்ததால்  ஐ.டி. ஊழியர்களுக்கு உடை அளவு மாறிவிட்டது.
2. வேலை இல்லாமல் அடுத்த வேளை கஞ்சிக்கே வழி இன்றி வீடு திரும்ப முடியாமல் தவித்த ஏழைகளின் உடை அளவும் மாறி விட்டது.
3. வாரம் ஒரு சினிமா, ஹோட்டலில் சாப்பாடு, வாரம் இரண்டு பார்ட்டி என்ற  அனாவசிய செலவுகளை குறைத்ததால் இப்போது கொஞ்சம் பாங்க் அக்கௌண்டில்  பணம் இருக்கிறது. அதையும் நிலைமை சரியானவுடன் உடலை சீரழிக்கும் எல்லாவற்றையும் ஒன்றிற்கு இரண்டு மடங்காக சாப்பிட்டு எப்படியும் டாக்டர் வீட்டிற்கு சென்று பணத்தை செலவழித்து சுகம் பெறுவோம் என்பதை உறுதியாக நம்பலாம்.
4. டாக்டர் வீட்டில் கூட்டம் குறைந்துள்ளது. அத்தியாவசியம் அன்றி வேறு சிலவற்றுக்கு காலமும், நல்ல உணவும், ஓய்வும் மட்டுமே மருந்து என்பது தெரிந்துள்ளது.
5. காற்றின் மாசு அளவு குறைந்துள்ளதால் நல்ல சுத்தமான காற்று இப்பொழுது எல்லாருக்கும் கிடைக்கிறது. ஓசோன் படலம் தன்னை மறுசீரமைத்துக்கொள்ள கொஞ்சம் அவகாசம் கிடைத்துள்ளது. பஞ்சாபில் இருந்து 200  கி.மீ தொலைவிலுள்ள இமயமலை இப்பொழுது தெரிகிறதாம். 
6.  உலகம் முழுவதும் போர் நிறுத்தம் ஏற்பட்டு குறைந்து அமைதி திரும்பியுள்ளது. நான் பெரியானவனா, நீ பெரியவனா என்ற பலம் காட்டும் பரிட்சையில் போட்டியிட்ட நாடுகள் பலவும் உள்ளூரில் உள்ள மக்கள் தேவைகளை பற்றி சிந்திக்க தொடங்க ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட பல இடங்களில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
7.  பல்வேறு மிருகங்கள் தாங்கள் வாழும், இடம், சூழல் போன்றவற்றை மீட்டெடுத்துள்ளன. இத்தாலியில் கரையோரம் தென்படும் டால்பின்கள் ஆகட்டும், மும்பையில் கடற்கரையில் தற்போது படையெடுக்கும் டால்பின்கள் ஆகட்டும் உலகெங்கும் விலங்குகள் தங்கள் வசிப்பிடங்கள் எவை எவை என்பதை மறுபடியும் நிறுவுகின்றன.
8. பெட்ரோல், டீசல் விலை அதலபாதாளத்தை தொட்டிருக்கிறது. ஒரு பொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் போனால் அந்த பொருளின் விலை எவ்வாறு கட்டுப்படுகிறது அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் அமைகிறது என்பதை இது காட்டுகிறது. அக்ஷய திருத்திகை என்று தங்கத்தை வாங்கி குவிக்கும் அம்மணிகள் கவனிக்க.
9. ஆணவத்தின் உச்சியில் நின்று, மனிதனை உணவு சங்கிலியின் உச்சத்தில் நிறுத்திய அசட்டுத்தனத்தை பார்த்து கரடியும் காரி துப்பியது.அப்படி துப்பிய எச்சிலை துடைக்க பெரிய பேப்பரை மனித குலம் வெட்கிக்  கொண்டே தேடிக் கொண்டிருக்கிறது அதோடு  கரடிகளும்,புலி, சிங்கத்தையும் விலங்கு காட்சி சாலைகளிலும், சர்க்கஸ் போன்ற இடத்தில் அடிமைப்படுத்தி வைக்கும் போது அவ்விலங்குகளுக்கு உண்டாகும் மனா அழுத்தத்தையும், சுதந்திரத்தை பறிக்கும் செயலையும் மனித குலம் கைவிடாவிட்டால் இதை விட பலமாக இயற்க்கை திருப்பி அடிக்கும் என்பதை மனிதர்கள் மறக்காமல் காலத்தின் பக்கத்தில் குறித்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
10. கிரேட்டா தார்ன்பர்க் உள்ளிட்ட சுற்றுசூழல் காப்பாளர்கள் இத்தனை காலம் உலக வெப்பமயமாதலால் உண்டாகும்  அழிவுகளை பற்றி கரடியை கத்தியும் கரடி பாஷை தெரியாது என்று கேளாமல் இருந்த உலக மாந்தர் இப்போது விழித்து கொண்டது போல தோன்றுகிறது. அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகளுக்கு அடியே மனித குலத்துக்கு எமனாய் பலவிதமான உயிர் கொல்லி வைரஸ்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். இந்த அபாய சங்கு ஊதுவதை கேளாமல்  செவிடு போல் நடிக்கும் மனப்பான்மையை கைவிட்டு உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது.
https://www.express.co.uk/news/world/1269334/arctic-news-coronavirus-outbreak-deadly-disease-ancient-virus-climate-change-ice-caps
11. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு செயற்கை கட்டமைப்பு. இந்த கட்டமைப்பு இயற்கை என்ற ஆதி கட்டமைப்புக்கு கீழானது என்பதை மனிதர்கள் உணரவேண்டிய தருணம் வந்து விட்டது. இல்லையென்றால் இத்தகைய உயிர் கொல்லி நோய்களை அடுத்தடுத்து பார்க்க வேண்டி வரும் என்பது மட்டும் திண்ணம்.
12. உலகின் முன்னணி நாடு என்று கருதப்படும் அமெரிக்காவில் இத்தனை உயிர் இழப்புகள் ஆன பின் நல்ல தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை இப்போது உணர்ந்திருப்பார்கள். நல்ல தலைமை தனக்கு வரும் பல்வேறு தகவல்களை சீர் தூக்கி பார்த்து ஆபத்து வருவதற்கு முன் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை  முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். 2005-ல் ஜார்ஜ் புஷ் மற்றும் சில வருடங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கொள்ளை நோய்கள் பற்றி ஆற்றிய உரையினை குறிப்பிட வேண்டும். வெறும் ஓட்டிற்காக மட்டும் அல்லாமல் மக்களை ஒருங்கிணைக்கும் தலைவர்களை தேர்ந்தெடுப்பது நமது கடமை மட்டும் அல்ல நம்மை காக்கும் கருவியாகும்.
https://www.youtube.com/watch?v=uSDC5L7qYUc
https://www.youtube.com/watch?v=6Af6b_wyiwI
https://www.sciencemag.org/news/2020/02/trump-s-new-budget-cuts-all-favored-few-science-programs
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
என்று வள்ளுவர் பெருந்தகை கூறியதை இந்நாளில் சீர் தூக்கி பார்க்க வேண்டிய நேரம் இது.
13. இந்தியா ஒரு வல்லரசாக இந்த ஆண்டு மாறும். சீனாவை விட ஒரு பெரிய சக்தியாக வலம் வரும் என்று கம்பு சுழற்றிக் கொண்டிருப்போர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. சீனா போன்ற உற்பத்தி முனைவோராக இந்தியா இருக்க வேண்டிய நேரம் இது என்று பிதற்றி கொண்டிருப்போர் உணவுக்காக அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு 6 அடி  இடைவெளியில் நின்று கொண்டு காய்கறி வாங்கி கொண்டிருக்கும் போது தற்சார்பு பொருளாதாரத்தை பற்றி சற்றே சிந்திக்க வேண்டும். இந்தியாவின் மக்கள் தொகைக்கு தேவையான மருத்துவம், குடிநீர், உணவு, சுற்றுசூழல் போன்றவற்றில் முதலில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். சந்தை சார்ந்த பொருளாதாரம் என்பது எவ்வளவு அதல பாதாளத்தை நோக்கிய ஒரு பயணம் என்பது இப்போது சந்தையில் பெட்ரோல் டீசலை விற்க முடியாமல் அல்லாடும் ரஷியா, சவுதி போன்ற நாடுகளை கேளுங்கள். விவசாயத்தில் தன்னிறைவு பெற்று ஒரு விவசாய நாடாக மாற வேண்டிய கடமை மட்டுமே இந்தியாவிற்கு உண்டு.
கரோனா மனிதர்களை பெரிய அளவில் மாற்றிவிட்டதா அல்லது மாற்றவில்லையா என்பதை காலம் தன் வரலாற்று பக்கங்களில் பதிவு செய்யா காத்திருக்கிறது. மனிதா உனது அடுத்த நடவடிக்கை என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக