சனி, ஏப்ரல் 18, 2020

கனவுகளின் பலிபீடம்


மெலிதான மழை தூறிக் கொண்டு இருந்தது. விசாலினி மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த ஸ்டார்பக்ஸ் சிகாகோ நகரின் மையப் பகுதியில் இருந்தது. உள்ளே இருந்து பார்த்தால் பளிச்சென்ற சாலையும் அதை தாண்டி, ஓய்வின்றி உழைத்த கரங்களில் துருத்திக் கொண்டிருக்கும் ரத்த நாளங்களை போல குச்சி குச்சியாய் நின்ற மரங்களும் தெரிந்தது. விசாலினி அமெரிக்கா வந்து 5 வருடங்கள் ஆகியிருந்தது. யூனிவர்சிட்டி ஆப் சிகாகோவில் மாஸ்டர் ஆப் சயின்ஸ் படித்து, இந்தியர்களுக்கு என்றே நேர்ந்துவிடப்பட்ட ஒரு ஐ.டி வேலையில்  இருப்பவள். ஐந்தடி ஆறு அங்குல உயரம், வசீகரமான உருண்டை முகம், தீர்க்கமான நாசி, அகண்ட கண்கள், ஆரஞ்சு சுளை உதடுகளுக்கு சொந்தக்காரி. இரண்டு புருவங்களின் மேலும்  அழகான கருப்பு மச்சங்கள், கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி, கையில் வி என்ற எழுத்து பொறித்த மெல்லிய தங்க காப்பு அணிந்திருந்தாள்.

சே! எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? பச் என்றவாறே தன்னுடை கஃபே லாட்டேவில் ஒரு சிப் குடித்து கீழே வைத்தாள். தன்  செல்பேசியை தட்டி மணி பார்த்தவள் நேரம் சரியாக மாலை 6:20 என்றதை பார்த்து இருக்கலாமா? போகலாமா என்று எண்ணி கதவை பார்த்துக் கொண்டிருந்தாள். இத்தனை அழகான பெண்ணை வெயிட் செய்ய வைப்பது ஒரு அழகான ஆண் என்பது இன்னும் பிறக்காத குழந்தைக்கு கூடத் தெரியும்.

சரக்கென்று என்று பிரேக் அடித்து அந்த வளாகத்தில் வந்து நின்றது ஒரு அழகான கருப்பு மெர்சிடிஸ். ஆறடிக்கு சற்றே குறைவான உயரம், மாநிறம், பக்கவாட்டில் பார்த்தால் ஏதோ ஒரு பட ஹீரோவை நினைவு படுத்தும் முகமுமாய், குளிருக்கு இதமான ஆரஞ்சு ஸ்வெட்டர் அணிந்து கீழே இறங்கினான் திவாகர். கண்ணாடி தடுப்பு வழியே இவளை கண்டவன் முகத்தில் ஒரு அழகான குறும்பு புன்னகை மலர்ந்தது.

ஹே, பேபி என்று அருகில் வந்தவனை கண்டதும் அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து விசாலினியின் முகம் மலர்ந்தது. “இரு, ஒரு காபி வாங்கிட்டு வரேன்னு”  என்று சொன்ன திவாகர் அங்கிருந்த சிறிய வரிசையில் சென்று நின்றான். மொத்தம் 6 பேர் மட்டுமே இருந்த அந்த வரிசை வேகமாகவே நகர்ந்தது. அவன் எப்போது வருவான் என்று விசாலினி திரும்பி பார்த்த அந்த வினாடி சரேலென அவன் கண்ணடிக்கவே விசாலினியின் கண்கள் ஒரு கணம் மலர்ந்து பின்னர் இதழ்களும் சிரித்தன.

என்னடா, வர சொல்லிட்டு ஆளை காணோம்னு தானே தேடிட்டு இருக்கே?. காபி வாங்கி கொண்டு அருகில் வந்தான் திவாகர்.

பின்ன என்ன?, நான் வந்து ஒரு மணி நேரம் ஆகுது. எவ்ளோ நேரம் போனை பார்ப்பது? உனக்கு போன் போட்டாலும் வாய்ஸ் மெயில் போகுது. எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? என்று படபடவென பட்டாசு போல பொரிந்தாள் விசாலினி.

வினி, நீ பேசும் போது ஒண்ணு கவனிக்கிறேன்.

என்னது, திவா?

எறும்பு மாதிரி ஒரு பூச்சி உன் கன்னத்துல இருக்கு.

தட்டி விடாம என்ன பார்த்துட்டு இருக்கே, திவா?

இரு ஊதி விடுறேன் என்று பக்கத்தில் வந்தவன் கன்னத்தில் இச்சென்று ஒரு சந்தர்ப்ப முத்தத்தை இறக்கினான்.

விசாலினிக்கு ஒரு கணம் வெட்கப் புன்முறுவல் தோன்றியது. என்னை எப்படி எல்லாம் கவுக்கணும்னு உனக்கு தெரியும். இருந்தாலும் நான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணதால கோவமாய் தான் இருக்கேன் என்று சிரிப்பின் இடையே கூறினாள்.

உன்னோட அழகான சிரிப்பை க்ளோஸப்பில் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா?

மூணு நாள் தான் ஆகுது”, திவா என்றாள் விசாலினி.

ஆனா உன்னோட பர்ஃப்பியும் வாசனை இவ்ளோ க்ளோஸ்ஸா ஸ்மெல் பண்ணி சரியாய் 72 மணி நேரம்  45 நிமிடம் 20 வினாடி ஆகுது. வா ஒரு டிரைவ் போயிட்டே பேசலாம் என்றவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் ஒரு கையால் அவளுடைய ஜாக்கெட்டை எடுத்து அவளுக்கு போத்தி விட்டு மறுகையால் அவளுடைய கை விரல்களை மென்மையாக ஆனால் உறுதியாக பிடித்தான். கார் வரை கூட்டி சென்று அவளுக்கு கார் கதவை திறந்து விட்டு அவள் ஏறிய பின் கதவை சாத்தி விட்டு தானும் ஏறினான்.

திவாகரும் விசாலினியை போலவே அவளது கல்லூரியிலேயே மாஸ்டர்ஸ் படித்தவன். படிக்கும் போதே இருவருக்கும் இடையே ஈர்ப்பு இருந்தாலும் ஒரு நல்ல வேலை கிடைத்த பின்பே திவாகர் தன காதலை விசாலினிக்கு சொன்னான். விசாலினி அவளுடைய வீட்டில் மூத்த பெண். கூடப் பிறந்தது ஒரு தம்பி மட்டுமே.  முதலில் தயங்கியவள் பின்னர் எப்படியும் வீட்டில் சம்மதம் பெற்று விடலாம் என்ற நினைப்பில் சம்மதம் என்று சொல்லி விட்டாள். திவாகருக்கு ஒரு 3 மணி நேரம் தள்ளி பியோரியாவில்  வேலை.

பெரும்பாலும் வியாழன் இரவே திவாகர் சிகாகோ வந்து விடுவான். இருவரும் ஒன்றாக ஊர் சுத்துவது, சமைப்பது, வெளியே செல்வது என்று வார இறுதியை ஒன்றாக கழிப்பார்கள். பின்னர் மீண்டும் திங்கள் அன்று அதிகாலை கிளம்பி அவன்  பியோரியா சென்று விடுவான்.

கார் கிளம்பி இலக்கில்லாமல் ஏதோ ஒரு ஹைவேயில் விரைந்தது. சீரான வேகத்தில் காரை செலுத்த மெல்ல திவாகர் மேல் சாய்த்தாள் விசாலினி. என்ன இன்னைக்கு அய்யா நல்ல மூட்ல இருக்க மாதிரி தெரியுது என்றாள்.

ஆமா, நல்ல விஷயம் தான். இந்த வாரம் உன்னை பத்தி எங்க வீட்டில் சொல்லியாச்சு. அவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் அதிர்ச்சி. நான் தான் வீட்ல கடைசி பையன் அப்படிங்கிறதால என்னுடைய அக்காக்களுக்கு  எனக்கு பொண்ணு பாக்கணும்னு ஆசை. அம்மா அப்பாவிற்கும் தான். எல்லாரும் மும்முரமா பொண்ணு தேடறப்ப நானே பொண்ணை கண்டுபிடிச்சாச்சுன்னு சொன்ன உடனே எல்லாருக்கும் பயங்கர ஷாக். ஆனா ஒரு ரெண்டு நாள்லேயே எல்லாரும் சகஜம் ஆயாச்சு. உன்னோட போட்டோவும் அனுப்பியிருந்தேன்.அம்மாவுக்கு எல்லாம் ஓகே. அடுத்து என்னன்னு அம்மணி தான் சொல்லணும். கல்யாணமா தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா இல்ல ஓடி போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா? என்று சிரித்தவாறே பாடினான் திவாகர்.

என்ன திவா, இவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ கேசுவலா சொல்ற. வாவ், ஐ ஆம் சோ ஹாப்பி. எங்க வீட்டை விட உங்க வீட்டை நெனச்சி தான் பயங்கரமா பயந்திட்டு இருந்தேன், என்ன சொல்வாங்களோன்னு. சூப்பர், திவா. பேசியே சம்மதிக்க வெச்சிட்ட. உனக்கு என்ன வேணாலும் சொல்லு வாங்கி தரேன் என்றாள் விசாலினி.     

அப்படியா என்று அவள் காதருகில் திவா ஏதோ கிசுகிசுக்க அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் வெட்கச் சிவப்பு ஏறியது. வர வர நீ ரொம்ப சரியில்லை என்றாள் பொய் கோபத்துடன் அவனை பார்த்து சிரித்தவாறே.

ஹே, கோபத்துல கூட நீ ரொம்ப அழகா தெரியற என்று திவா ஆக்சிலரேட்டரை அழுத்தினான்.கார் வேகம் எடுத்து செல்லத் தொடங்கியது. நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் என்று ரஹ்மான் ஸ்பீக்கரில் இருந்து கசிய ஆரம்பித்தார்.

கேலி கிண்டல் காதலும் ஊடலுமாக இரண்டு மாதங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. திவாகரின் மேல் அவளுக்கு இருந்த காதல் பன்மடங்காக வளர்ந்திருந்தது. தனக்கானவன் என்ற உரிமை தந்த பற்றுதலால் தான் இவ்வளவு அன்யோன்யம் தோன்றியிருக்கிறது  என்று நினைத்தாள் விஷாலினி. அந்த நினைப்பு தந்த உணர்வு அவள் முகத்தில் புன்முறுவலாக  தோன்றியது. அந்த வியாழக்கிழமை மாலை விசாலினி கொஞ்சம் சீக்கிரமாகவே வேலை முடிந்து வந்திருந்தாள்.  உள்ளறைக்கு சென்று முகம் கழுவி  திவாகருக்கு பிடித்த வெள்ளை மேக்சி அணிந்து அழகான ஒப்பனை அணிந்திருந்தாள். இருவரும்  இரவு  ஒரு உணவு விடுதிக்கு செல்வதாக திட்டம். அவள் கிளம்பி வந்த போது திவாகர் குளியல் போட்டுக் கொண்டிருந்தான். குளியல் அறையின் உள்ளிருந்து  எஸ்பிபி போல அவன் பாட முயற்சிக்கும் ஓசை கேட்டு அவளுக்கு சிரிப்பு வந்தது. வெளியில வரட்டும் வெச்சிக்கிறேன் என்று நினைத்தவள்,  சமையலறைக்கு சென்று அவனுக்கு ஒன்று அவளுக்கு ஒன்று என்று இரண்டு கோப்பைகளில் தேனீர் தயாரித்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். அவள் ஹாலுக்கு வரவும் திவாகருடைய கம்ப்யூட்டர் திரையில் ஒரு ஈமெயில் வரவும் சரியாக இருந்தது. கம்ப்யூட்டர் லாக் செய்யாமல் இருந்தது. சும்மா காசுவலாக எட்டி பார்த்தவள் அவனுடைய தந்தையின் பெயரை பார்த்ததும் என்னவாக இருக்கும் என்று ஆவல் மேலிட்டு அந்த ஈமெயிலை படிக்க ஆரம்பித்தாள்.

திவாகர் குளித்து முடித்து வெளியில் வந்த போது வீடு நிசப்தமாக இருந்தது. ஒரு குளியல் ரோப் அணிந்து வெளியே வந்தவனிடம் இருந்து  மெல்லிய சோப்பு வாசம் அடித்துக் கொண்டிருந்தது. விசாலினி வந்திருக்க மாட்டாள் என்று எண்ணியவாறே வந்த அவன் அவளை ஹாலில்  கண்ட வினாடி முகம் மலர்ந்தான்.

என்ன பேபி என்று அருகில் நெருங்கியவன் அவள் முகத்தை பார்த்ததும் ஒரு வினாடி நின்றான்.

ஹே, ஏன் டல்லா இருக்க, வேலை அதிகமா என்று அவளை ஏறிட்டவன், அவள் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்து, என்னடா? என்ன ஆச்சு? என்றான் மெதுவாக.

அவள் பதில் சொல்லாமல் அந்த கணினியை அவனை நோக்கி திருப்பினாள். எந்த பொண்ணு போட்டோவை பார்த்து நீ ஓகே சொல்ல போற திவா என்றாள்.

ஒரு கணம் அவளை கூர்ந்து நோக்கியவன், “அடுத்தவங்க ஈமெயிலை படிச்சவங்களும், அடுத்தவங்க செல்போனை பார்த்தவர்களும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை என்று கூறி புன்னகைக்க முயன்றான்.

விசாலினி முகம் குன்றியது. நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன். நீ என்னவோ ஜோக் அடிக்கற?  ஏன் திவா என் கிட்ட பொய் சொன்ன. உங்க வீட்ல நம்ம விஷயம் தெரியுமா, இல்ல தெரியாதா?”

நம்ம விஷயம் தெரியும் பேபி. எனக்கு இங்க ஒரு பொண்ணு பிடிச்சிருக்கு அப்படின்னு சொன்ன உடனேவே அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்க. அப்பா,அக்கா எல்லாரும் ஆப் ஆயிட்டாங்க. அப்பறம், இல்ல சும்மா சொன்னேன் அப்படின்னு சொல்லி அவங்களை சமாதானப்படுத்தவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு..

"என்ன திவா சொல்ற? அப்போ இவ்ளோ நாளா நாம இங்க கிட்ட தட்ட புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்திருக்கோம். இதெல்லாம் வெறும் பொய்யா. ரெண்டு பேர் வீட்லயும் சம்மதம் இல்லாட்டியும் நான் உன்னை கல்யாணம் செய்ய ரெடி. அதே முடிவை உன்னால எடுக்க முடியுமா?” என்றாள் விசாலினி. அவள் குரல் உடைந்திருந்தது

வினி மா, என்னால அப்படி செய்ய முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் பேசி பார்க்கிறேன்.

இந்த ஈமெயிலை பார்க்கும் போது நீ பேசி ஒண்ணும் ஆகறா மாதிரி தெரியலையே. உண்மையை சொல்லு. ஏதாவது பாஸிட்டிவா நடக்க வாய்ப்பு இருக்கா இல்லையா திவா?

எனக்கு அப்படி எல்லாம் சொல்ல தெரியாது. எல்லார் மனசையும் கஷ்டப்படுத்தறத விட்டுட்டு நாம ரெண்டு பேரும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம் இல்லையா?  நான் உன் கூட இருந்த இந்த ரம்மியமான நாட்கள் இந்த நினைவுகள் எனக்கு போதும். இது இன்னும் பல காலம் தொடர்ந்தா சந்தோஷம். இல்லைனா எனக்கு கொடுத்து வெச்சது அவ்ளோ தான்னு நினைச்சுக்க வேண்டியது தான்.

இவ்ளோ யோசிச்சீங்களே. என்னை பத்தி யோசிச்சீங்களா? எனக்கு என்ன தேவை தேவையில்லைனு யோசிச்சீங்களா? உனக்கு வேணும்னா நான் லவ் பண்ணனும். நீ பிரியணும்னு நெனச்சா நான் பிரிஞ்சி போகணும். எனக்குன்னு ஒரு மனசு இருக்கு அதில் கனவு இருக்கு அப்படிங்கறது எல்லாம் உனக்கு தோணாதா திவா. எனக்கு நீ வேணும். என்னால காம்ப்ரமைஸ் எல்லாம் பண்ண முடியாது. உங்க வீட்ல சம்மதிச்சிட்டாங்கன்னு ஏன் பொய் சொன்னே. ஒய் திவா ஒய்?

சாரி டா. என்னை மன்னிச்சுடு, உன்னிடம் பொய் சொன்னதற்கு. நீயும் என்னை கொஞ்ச நாளா வீட்ல கல்யாணத்தை பத்தி பேசச் சொல்லி நச்சரிச்சிட்டே இருந்த. ஆனா அவங்க மனப்போக்கு தெரிஞ்ச பிறகு அவங்க முடிவை உடனே  சொல்லி உன்னோட மனசை காயப் படுத்த விரும்பல. அதான் பொய் சொன்னேன்.

காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ண முடியாத அளவு கோழை ஆகிட்ட தானே. நான் இதை உன்கிட்ட இருந்து கொஞ்சமும் இதை எதிர்பார்க்கலை திவா. என் கிட்ட இனி பேசாதே. என்னுடைய மூஞ்சில கூட முழிக்காதே.

விசாலினி அந்த அபார்ட்மெண்டில் இருந்து புயலென வெளியே வந்த போது வானம் தூற ஆரம்பித்தது. அதை விட அதிகப் படியான தண்ணீரை அவளுடைய கண்கள் பொழிய ஆரம்பித்திருந்தது. அவள் தன்னுடைய காரை நோக்கி விரைவாக ஓடினாள். விசாலினி கிளம்பிய உடன் கையில் கிடைத்த ஒரு உடையை அணிந்து அவளை சமாதனப்படுத்த வெளியில் வந்த திவா அவளை பார்க்கிங் லாட்டில் தேடும் போது விசாலினி அந்த பார்க்கிங் லாட்டிலிருந்தும் அவனுடைய வாழ்கையிலிருந்தும் வெகு தூரம் சென்றிருந்தாள்.

அந்த விமானம் ரன்வேயில் டாக்ஸி ஆகும் போது காலை மணி ஒன்பது  ஆகியிருந்தது. உள்ளே அமர்ந்து இருந்த திவாகருக்கு சிகாகோ வந்தாலே விசாலினியின் நினைவு வராமல் போகாது. இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய நினைவு என்றாலும் அன்றே நடந்தது போன்று அவ்வளவு தெளிவாக நினைவிருக்கிறது.

அவனுடைய மகள் ஹாசினி யூனிவர்சிட்டி ஆப் சிகாகோவில் இறுதி ஆண்டு படிக்கிறாள். விசாலினியுடனான பிரிவிற்கு பிறகு அவன் வீட்டில் பெற்றோர் பார்த்த ஆஷாவை கரம் பிடித்தான். ஒரு மகன் மகள் என்று அளவான குடும்பம். மகள் கல்லூரியில் படிக்க மகன் உயர் நிலைப்பள்ளியில் இறுதி வருடம் படிக்கிறான். அலுவலகம் சம்பந்தமான ஒரு கான்ஃபரென்ஸ்சிற்கு சிகாகோ வந்திருந்தான். இரவு மகளுடன் சேர்ந்து உணவு அருந்துவதாக திட்டம்.  

இரவு சரியாக 7 மணிக்கு இந்தியன் கிளே பாட் என்ற அந்த உணவகம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பார்க்கிங் கிடைக்காததால் சற்று தூரத்தில் பார்க் செய்து திவாகர் அந்த ரெஸ்டாரண்ட் உள்ளே நுழைகையில் ஹாசினி ஏற்கனவே இடம் பிடித்து அமர்ந்திருந்தாள். அவனை கண்டதும் வேகமாக கையை ஆட்டியவள் அன்று அழகான பிங்க்  உடை அணிந்து தேவதை போல அழகாக இருந்தாள்.

ஹாய் டாட்,  ஹௌ  ஆர் யூ? என்று அழகான நுனி நாக்கு ஆங்கிலம் பேசினாள்.

அவளை கூர்மையாக பார்த்தவாறே நல்லா, தமிழ்ல கேட்கலாமே இதை என்றான்.

நான் நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா என்றான் சிரித்தவாறே.

யூ லுக் வெரி ஷார்ப்  ஹாஸு. என்ன ஸ்பெஷல்? என்றான் திவாகர்.

சும்மா கிண்டல் செய்யாதீங்க டாட். நான் இப்படித்தான் எப்பவுமே இருப்பேன் இல்லையா என்றாள் ஹாசினி தந்தையை பார்த்து கண்ணடித்தவாறே.

ஹ்ம்ம், ஏதோ ஸ்பெஷல் இருக்கு. சரி, நீ சொல்லு என்ன சாப்பிடற?

அவர்கள் இருவரும் மெனுவை பார்த்து ஆர்டர் செய்தார்கள். ஆர்டர் செய்த உணவும் அதிசயமாக சீக்கிரமே வரவும் படிப்பு, அலுவலக வேலை என்று பலதும் பேசி உணவை சாப்பிட்டு முடித்தார்கள்.

என்ன ஹாஸு, ஏதோ சொல்லணும் அப்படின்னு நினைத்து சொல்லாத மாதிரி தெரியுது என்றான் திவாகர் சாக்லேட் ஐஸ்கிரீமை சுவைத்தவாறே.

இல்லப்பா. எனக்கு பெர்லின்ல ஒரு இன்டர்நேஷனல் அசைன்மென்ட் கிடைச்சிருக்கு. இந்த வருட இறுதி தேர்வு முடிஞ்ச உடனே போகணும். அம்மா கிட்ட சொன்னேன். ஒரு அளவுக்கு ஓகே. நானே அப்பாகிட்ட சொல்வேன்னு அவங்களை உங்களிடம் சொல்ல விடலை. அசைன்மென்ட் நல்லபடியா   முடிஞ்சா அங்கேயே வைஸ் ப்ரெசிடெண்ட் மாதிரி கேடர்ல போஸ்டிங் கிடைக்கலாம். சோ, கொஞ்ச வருடங்கள் அங்கே இருக்கற மாதிரி இருக்கும்.

திவாகர் மனம் கொஞ்சம் பாரமானது. குழந்தைகள் படிப்பு என்று வெளியில் சென்றாலே பின்னர் வேலை குடும்பம் என்று வீடு திரும்புவதே இல்லை. இருந்தும் அதை வெளி காட்டாமலேயே புன்னகைத்து "அப்பா ரொம்ப ஹாப்பி ஹாசினி. செமத்தியான நியூஸ். ஜெர்மனி தானே. ஒன் பிளைட் அவே. நானும் அம்மாவும் நினைச்சா பாக்க வந்திடுவோம். காங்கிராட்ஸ்" என்று அவனுடைய உண்மையான மனநிலையை வெளிக்காட்டி கொள்ளாமல் சிரிப்புடன் அவள் கையை பற்றி குலுக்கினான்.

அப்பறம் அப்பா, என்று சொல்லி நிறுத்தினாள் ஹாசினி.

என்னம்மா?  

நான் ஜெர்மனி போக போறது என்னோட பியான்ஸ்  கூட என்று சொல்லி நிறுத்தினாள்ஹாசினி. அப்பொழுது தான் அவளுடைய கைகளை கவனித்தான்.ஒரு ஒற்றை வைர ரிங் அவனை பார்த்து சிரித்தது.

என்னம்மா சொல்ற? என்று திவாகர் மெல்ல அதிர்ந்தவாறே.

ஆமாம் பா. என்னுடைய பியான்ஸ் இந்த வாரம் தான் ப்ரொபோஸ் பண்ணா. நானும் ஓகே சொல்லிட்டேன். ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்து தான் ஜெர்மனி போறோம். அவளையும் வர சொல்லிருக்கேன், உங்களை பார்க்கறதுக்கு என்ற போதே வெள்ளை உடையில் ஹாசினியின் ஒத்த வயதுடைய ஒரு அழகான இளம் பெண் அவர்கள் டேபிளை நோக்கி வரவும் சரியாக இருந்தது.

அப்பா, மீட் விசாலினி கணேஷ். மை பியான்ஸ் என்று ஹாசினி சொன்னது திவாகருக்கு மங்கலாக கேட்டது. அவனுடைய கனவுகள் உடைபடும் சத்தம் மட்டும் அங்கிருந்த எல்லோருக்கும் கேட்டிருந்தால் ஒரு ஆழி பேரலையின் இரைச்சலை தங்கள் காதுகளுக்கு வெகு அருகிலேயே கேட்டிருப்பார்கள். திவாகர் மயங்குவதற்கு முன் கடைசியாக அந்த வெள்ளை உடை பெண்ணை பார்த்த போது அவனுக்கு அவளுடைய முகத்திற்கு பதில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பார்த்த விசாலினியின் முகமே தெரிந்தது.

அப்பா, அப்பா என்று ஹாசினி மயங்கி சரிந்த அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

காலம் ஒரு சரியான தீர்ப்பு வழங்கியதாய் தன்னுடைய பக்கங்களில் குறித்திருக்க கூடும்.

1 கருத்து:

  1. மிகவும் அழகான எளிதான நடையில் இருந்த கதை. "வாட் அபௌட் அஸ்"! என்னை பொறுத்தவரை இந்த மூன்று வார்த்தைகள் ஒரு மனதை இறுதி வரை உறுதி கொண்டே இருக்கும்.
    Anyways, நீங்கள் "சரியான தீர்ப்பு" என்பது சரியா என்ற கேள்வியுடன்!

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு