சனி, ஏப்ரல் 18, 2020

கவிதை பக்கம்

2018 - இல் அமெரிக்க தமிழகம் அமைப்பு நடத்திய கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற எனது கவிதைகள்.

======================================
#1 படத்திற்கான கவிதை
ஆயிரம் சூரியனின் கோபம் அவள் கண்களில்
ஆர்ப்பரிக்கும் அலையின் வேகம் அவள் சொற்களில்
என்ன இது? கோபத்தில் தோய்ந்த அவள் வார்த்தை
சுட்டது அவன் நெஞ்சம், மறந்தது தமிழும் கொஞ்சம்
மௌனம் படர்ந்தது, மொழி தொலைந்தது
கர்நாடக எல்லை தாண்டா காவிரி போல
சொல் துவண்டது, முகம் இருண்டது.
உன்னை பற்றி நான் எழுதிய கவிதை,
கன்னித் தமிழுக்கு, சங்கத் தமிழால் சூட்டிய மாலை
கவிதையை பற்றி கவி பாடும் முயற்சி என்றான்
கவிதை அல்ல இது வெறும் பகடி,
ஆண்கள் செய்யும் காதல் தெகிடி
இந்தா பிடி, இதை நீயே படி என்றாள்
கவிதையை படித்தான்...
அன்பே, ஆருயிரே
அழகு சூர்ப்பனகையே
சூரியனை பிரதிபலிக்கும் கண்ணாடியே
சிறகு முளைத்த கம்பளி பூச்சே
வெண்சங்கில் புகுந்த மணலே
அர்த்தம் சொல்கிறேன் கேள்
இராவணன் போன்ற பாசமான அண்ணனை கொண்டவளே
சூரியஒளியை பிரதிபலிக்கும் நிலவுக்கு ஒப்பானவளே
வண்ண சிறகு முளைத்த பட்டாம்பூச்சியை போன்றவளே
என்மனமாகிய வெண்சங்கில் ரகசியமாய் நுழைந்து முத்தானவளே
அவள் கண்களில் இருந்த கோபசிவப்பு
கன்னங்களுக்கு இடம் மாறியது
மெல்ல நகைத்தாள்
அவள் சிரிப்பொலி
வார்த்தையில்லா புதுக்கவிதை ஒன்றை
படைத்துக் கொண்டிருக்கிறது


#2 படத்திற்கான கவிதை
பார்த்த அக்கணமே
என்இதய சிம்மாசனத்தை கைப்பற்றியவள்
பளிங்கு முத்துப்பல் சிரிப்பால்
என்னை அடிமை ஆக்கியவள்
காந்த விழியால் என்னுள்ளத்தை
கண்ணாடி ஆக்கிய சின்ட்ரெல்லா வம்சத்தவள்
காற்றை கடிவாளமாக்கி, மேகத்தை புரவியாக்கி
சூரிய சந்திரனை சக்கரமாக்கி,
மிதிவண்டியில் வீதியுலா செல்லும் தெய்வ மகள்
சூரியனை பூமி சுற்றியது
என் உலகமோ அவளையே சுற்றியது
பூமிக்கு ஒற்றை நிலா
அவளுடன் சேர்த்து என் வானில் இருநிலாக்கள்
எல்லாமுமாய் இருந்தவள் ஒரு நாள் வேறாகிப் போனாள்
இன்று கணினியில் கடவுச் சொல்லாய் மட்டும் அவள்பெயர்


#3 படத்திற்கான கவிதை
ஆண் பிள்ளைகளோடு விளையாட்டென்ன
என்ற அம்மாவிற்காக நட்பை தொலைத்தவள்
மேல்படிப்பு படிச்சு ஆவதென்ன
என்ற அப்பாவிற்காக முதுகலை கனவை விற்றவள்
வெளிநாட்டு சம்பாத்தியம் வேண்டுமென்ற
கணவனின் விருப்பத்திற்காக சொந்த பந்தத்தை மறந்தவள்
ராக் கச்சேரி போகலாம் என்ற மகனின் சந்தோஷத்திற்காக
இரைச்சலை கூட இசையாய் ஏற்றவள்
குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றே
சுயசம்பாத்தியம் என்ற பொருளாதார சுதந்திரத்தை சுவாசிக்க மறந்தவள்
சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது டாமியும் ஜிம்மியும் மட்டுமல்ல
கடமை,கௌரவம்,பொறுப்பு என்ற கண்ணுக்கு புலப்படாத
சமுதாய சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் அவளும்தான்
சூரியன் மேற்கில் தோன்றலாம், இரவில் இரு வெள்ளி கூட முளைக்கலாம்
ஆனால் அத்தனை கடினம் இவ்வுலகில் அவள் அவளாய் வாழ்வதில்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக