சனி, ஏப்ரல் 18, 2020

கண்ணீர் கவிதை


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை

ஆலையை மூடு, அமிலக் காற்றை சற்றே அணை

போபால் போல வேண்டாம், மீண்டும் ஒரு  வரலாற்று பிழை 

இருபது ஆண்டாய் வேண்டிக்கேட்டோம் நிலம், நீர், மாசற்ற வளி

ஆலகால நஞ்சை கக்கும் விட அரவிற்க்கோர் முற்றுப்புள்ளி      



வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு

தூத்துக்குடி மக்களுக்கு இஃதொரு இடுகாடு

பூக்களின் பேரணியை ஒடுக்க - கொணர்ந்தனர்

குலவேரறுக்கும் கோடரி ஒன்று 



முதலாளிவர்க்கம் மகிழ, தேர்தல் நிதி எனும் கடன்சுமை தீர்க்க

அஞ்சா பாதகம் செய்தனர் ஆட்சியை தக்க வைக்க 

துப்பாக்கியால் சுட்டு தாக்கு,  மரண பயம் உண்டாக்கு

லத்தியை சுழற்றி தாக்கு, பிஞ்ஜென்றாலும் பொடிப்பொடி யாக்கு  



ஆட்சியாளர் ஏவல் செய்ய காக்கிச்சட்டை போட்ட படை  

நம் நண்பனல்ல துரோகி என்றே இதயமின்றி செய்த கொலை  

காவலன் அல்ல காலன் என்றே ஊர்திதனின் மேலமர்ந்து

கொத்துக் கொத்தாய்  சுட்டுக்குவித்தனர் காக்கும் கடமைதனை மறந்து



பேச்சிலே சிறந்த மங்கை வெனிஸ்டா என்றொரு நங்கை

வக்கீலாகி நீதி வெல்ல காலனிடம் காலம் கேட்டாள்

சொகுசான வாழ்க்கை அல்ல வாழ்வாதாரம் தானே கேட்டாள்

கொடும் நஞ்சை அவள்வாயிலூட்ட விண்ணுலகம் பறந்தே போனாள்



புதுமண மாலை கூட காய்ந்து சருகாகவில்லை

மணிராஜ் என்றொரு மன்னன் வீடுபோய் சேரவில்லை

நல்லதொரு குலவிளக்கு வினோத் என்னும் மணி விளக்கு

ராணுவத்தில் ஒளிர்ந்திருப்பான் அவன்உயிர் குடித்தது ஏன் விளக்கு   



திருப்பூர் குமரன் அல்ல இவர் தூத்துக்குடி செல்வசேகர்

தடியடிக்கு உயிரை ஈந்தார் தமிழ் மகனே உன்போல் யாவர் 

வாவூசி பிறந்த மண்ணில் வீரத்திற்கு ஏது எல்லை

தமிழரசரின் மரணம் கேட்டு கலங்காத தமிழ்நெஞ்சம் இல்லை  



காசநோய் கான்சர் வேண்டாம் கரியமில காற்றும் வேண்டாம் 

கருணை மட்டும் வேண்டும் என்ற காளியப்பன் ஏன் இறந்தான்    

நடிக்காதே எழுந்திரு என்றே கேலி செய்த கயவர் கூட்டம்

சிறைபுகும் நாளும் பக்கம் வெல்லட்டும் நீதி என்றும்    



இரு சிறார்களின் ஆசைதந்தை கிளாட்ஸ்டன் இன்று இல்லை

தன் சந்ததிக்கு போராடியவன் சமூக விரோதி இல்லை  

தப்பான முகவரி என்றால் தபால் கூட வருவதில்லை

கண்மூடி தோட்டா எய்தவன் தமிழனில்லை மனிதனில்லை 



கார்த்தி, அந்தோணி ஜான்ஸி மற்றும் ஜெயராமன்

இவர்தம் உயிர் குடித்த பேர்களுக்கு காலமே தான் காலன்

கையூட்டு பணத்திற்கென்று கொலை செய்ய துணிந்திட்டீர் 

தன் இனத்தை கொன்ற பாவம் எங்கு தொலைப்பீர் சிந்திப்பீர்  



மக்களுக்காவே நான் என்றே நீலிக் கண்ணீர் வடித்தீரே 

உரிமைக்குரல் கொடுத்தோர் துடிதுடிக்க வேடிக்கை பார்த்தீரே     

இளம்பிஞ்சை சிதைக்கும் சிலர் பயமின்றி தான் வாழ  

உனக்காகவும் குரல் கொடுத்த மாமனிதர் வீணே சாக      



ஆட்சியும் அதிகாரமும் இம்மக்கள் இட்ட பிச்சை

சிறிதாவது உணவில் சேர்ப்பீர் தூத்துக்குடி தந்த உப்பை 

காசுகளை எறிந்து எந்தன் உயிரினை விலை பேசாதே

தமிழர் கர்ணப் பரம்பரை இதை எப்போதும்நீ மறவாதே 



இணையத்தை துண்டித்தாய், மின்சாரத்தை சிறைபிடித்தாய்

பத்திரிக்கை,முகநூல், ட்விட்டர் எல்லாம் பாங்கை சாற்றினாய் 

கொதிக்கின்ற எரிமலையை குளீர்நீர் என்றே எண்ணினாய்    

உலகெங்கும் ஒலிக்கும் தமிழ்குரல் எங்கனம் நீ மாற்றுவாய் 



அரசே,ஆலையை இடி

அயல்நாட்டு முதலாளியை சிறைபிடி

மக்களின் நண்பன் என்று பசப்பும் நரிகளை சுடு

முடியாவிட்டால் வெஞ்சிறைதனில் இடு 

பகைமை கொண்டு வஞ்சம் தீர்த்த

அதிகார வர்க்கம் நீக்கு       

கறைபடிந்த வரலாற்றை கொஞ்சம்

இப்போதேனும் திருத்தி மாற்று

இயற்கையை காத்து வாழ்ந்தால் 

மானுடம் பிழைத்துப் போகும்

இப்பூமிக்கு மாற்று இல்லை

உணர்ந்தால் உன்வம்சம் வாழும்    



இன்னொரு இரங்கற்பா இயற்ற என்னிடம் வார்த்தையில்லை

இதயத்தில் பட்ட  ரணம் மாறவில்லை ஆறவில்லை

இறந்தவர்கள் எவரோ இல்லை எமதன்பு  தங்கை தனயன் 

இவர் போல யாருமில்லை தலைவணங்கும் சார்லட் தமிழன் 
****************************************************

வாழ்க தமிழ் வெல்க தமிழர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக