ஞாயிறு, மார்ச் 01, 2015

பல நேரங்களில் பல மனிதர்கள்

சமீபத்தில் இந்தியா சென்று வந்தேன். வயதில் சிறிய குழந்தைகளை அழைத்துச் சென்று எப்படித்தான் திரும்ப போகிறோமோ என்று பயந்தது போல குழந்தைகள்  விமான பயணத்தில் பயங்கரமாக படுத்தி எடுத்து விட்டார்கள். பசி அறியாமல் அழுதது, சிறிய இடத்தில நீண்ட நேர அமர்ந்து பிரயாணம் செய்ததில் ஏற்பட்ட சோர்வு கோபம், விமான நிலையத்தில் புரண்டு அழுதது, பயணம் செய்கையில் உயர் வகுப்பிற்கு என்று ஏற்படுத்திய  தடுப்பை மீறி அங்கு ஓடி அங்கிருந்த பயணிகளை எழுப்பியது, விமான நிலையத்தில் கீழே விழுந்த உணவு பதார்த்தங்களை பொறுக்கி உண்டது என்று பண்ணாத சேட்டைகளே  இல்லை. இன்னும் 10 வருடங்கள் கழித்து குழந்தைகள் வளர்ந்த பின் தான் இந்திய பயணம் மேற்கொள்வேன் என்று என்னை சபதம் ஏற்கும் நிலைக்கு தள்ளி விட்டார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

பயணம் பயணம் பயணம் என்றே தான் கழிந்தது இந்தியாவில் இருந்த நாட்களும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இந்தியா சென்றால் நிலவும் அழகான குளிர் காலம், எப்பொழுதுமே கோடை காலங்களில் சென்று அந்த வெயிலிலும் வியர்வையிலும் வேகும் எனக்கு ஆனந்த மாறுதல் என்றே சொல்லலாம். ரம்யமான அந்த பருவத்திற்கேனும் முடிந்தால் இந்த மாதங்களில் செல்வது நல்லது. ஆனால் இந்த மாதங்களில் கொசு கொஞ்சம் அதிகம் தான். கொசு விரட்டி மற்றும் கொசுவிலிருந்து பாதுகாக்கும் களிம்புகளை கைவசம் வைத்திருப்பது நல்லது.

விமான நிலையத்தில் இருந்து எங்களை அழைத்து சென்ற கார் டிரைவர் நன்கு தெரிந்தவர் தான். சென்ற முறை நாங்கள் சென்ற பொழுது பல கோயில்களுக்கு அவருடைய வாடகை காரில் சென்றோம். அப்பொழுது எல்லாம் தனக்கு திருமணத்திற்காக பெண் தேடி கொண்டிருந்தார். எந்த கெட்ட பழக்கமும் இல்லை, சொந்தமாக சில வண்டிகள் வைத்து காரோட்டி வருகிறேன் ஆனாலும் அரசாங்க வேலையில் இல்லை என்ற காரணத்தால் திருமணம் தட்டி போகிறது என்று சொல்வார். நாங்கள் சென்ற எல்லா கோவிலுக்கும் வந்து அவரும் பிரார்த்தனை செய்வார். முதிர் கன்னிகள் பற்றி இந்த சமூகம் நிறைய கரிசனப்படுகிறது. ஆனால் முதிர் இளைஞர்கள் படும் துயரம் அதற்கு குறைந்தது அல்ல என்பது புரிந்தது. இந்த முறை விசாரித்த பொழுது அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாம். தன்னை விட பத்திற்கும் மேற்பட்ட வயது குறைந்த அவ்வளவு வசதி இல்லாத பெண்ணை திருமணம் செய்திருந்தார். வயது அதிகமில்லை என்று சொல்லி மறைத்தே திருமணம் செய்ய வேண்டியதாயிற்று என்று சொன்னார்.

ஆயிரம் பொய் சொல்லி  கல்யாணம் செய் என்பது பெண்கள் ஆண்கள் என்ற இரு பாலருக்கும் பொருந்தி போகிறது என்று தோன்றியது .இந்த விஷயத்தில் ஆண்கள் நிலை கொஞ்சம் பரவாயில்லை. அதிக பொருள் வசதியில்லாத இடத்திலிருந்து நல்ல பெண் கிடைத்து விடுகிறது. பெண்கள் நிலைமை தான் பரிதாபம். சில நேரங்களில் தன்னை விட மிகவும் அதிக வயது கொண்ட நபரை பொருளாதார நிர்பந்தத்தினால் திருமணம் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். திருமணத்தில் மனப் பொருத்தத்தை விட பண பொருத்தமே கை ஓங்கி நிற்கிறது என்பது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு என்ன இருபத்தி ஒன்றாயிரம் நூற்றாண்டில் கூட மாறப் போவதில்லை. வயதானவன் ஆனாலும் கணவன் பணக்காரன் என்பதால் அவன் புருஷன் என்ற புது மொழி என்று மாறுமோ தெரியவில்லை .

சென்னை மற்றும் அதன் அருகில் வசிக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் பார்க்க வேண்டும் என்பதால் பரிசு பொருள்கள் நிறைய வாங்கி சென்றிருந்தோம். ஆனாலும் நிறைய பேரை பார்க்க முடியவில்லை. ஏதேதோ காரணங்கள், வேலைகள் என்று பலர் காரணம் காட்ட வெகு சிலரை மட்டுமே சந்திக்க முடிந்தது. இதற்கும் நாங்கள் வேலை நாளை தவிர்த்து விடுமுறை தினம் அன்றே சென்றோம். பொதுவாகவே பெண் தோழிகளை திருமணம் முடிந்த பிறகு சந்திக்கவே இல்லை. முன்பெல்லாம் அப்பாவிடம் அனுமதி வாங்குவது கடினம், இப்பொழுது அப்பா இடத்தில் கணவன். அனுமதி என்பதெல்லாம்  பகல் கனவு என்னும் தோழிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அமெரிக்கா மட்டும் அல்ல இந்தியாவில் வசிக்கும் ஆண்கள் பலர் இன்றும் தங்கள் பள்ளி கல்லூரி நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். தங்கள் குடும்பத்தினருடன் சென்று தன் நண்பனின் வீட்டில் தங்குவது போன்றதெல்லாம் சகஜமாக நடப்பது. ஆனால் எத்தனை ஆண்கள் தங்கள் மனைவியின் தோழி வீட்டிற்கு மனைவியை அழைத்து செல்வார்கள் என்றால் அந்த எண்ணிக்கை வெகு சொற்பமே. அப்படியே அனுமதி தந்தாலும் போயிட்டு 6 மணிக்குள் வந்துவிடு, வந்து சமைக்கணும், இல்லை வந்து  குழந்தையை கவனிக்கணும் என்பது போன்ற விதிகளுக்கு உட்பட்டே  அனுப்படுகின்றனர்.

 உன் தோழி வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறாளா, சரி நான் குழந்தையை பார்த்து கொள்கிறேன், நீ சென்று வா, இல்லை நேரம் ஆகும் என்றால் நானும் துணைக்கு வருகிறேன் எல்லாரும் சென்று சந்திப்போம் என்ற எண்ணம் இன்றைய ஆண்களுக்கு இல்லாதது பெரும் குறையே. ஆண்களே இன்று உங்கள் மனைவி பத்தரை மாற்று தங்கமாக இருக்கிறாள் என்றால் அது வெவ்வேறு பருவத்தில்  அவளுடன் இருந்த ஒரு நல்ல தோழியால் நேர்ந்தது. அவர்களில் எல்லோரையும் சென்று உங்கள் மனைவியை சந்திக்க நீங்கள் அனுமதி தராவிட்டாலும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வசித்து சில வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்தியா வரும் தோழியையாவது/தோழனையாவது  சந்திக்க அனுமதியுங்கள். வாட்ஸ்அப்பில் ஹலோ சொல்வது, பேஸ்புக்கில் லைக் செய்வது மட்டும் நல்ல நட்புக்கு அடையாளம் அல்ல. வேலை இருந்தாலும் உன்னை மறுபடி சந்திக்க எத்தனை நாள் ஆகுமோ,  நீ வா நாளை பார்த்து கொள்கிறேன் அந்த வேலையை என்ற நண்பன் தோழி மற்றும் உறவினர் மட்டுமே மனதில் நின்றார்கள். மற்றவர்களிடம் இருந்து உடலால் மட்டும் அல்ல உள்ளத்தாலும் வெகு தொலைவில் இருக்கிறேன் என்பதை  புரிந்து கொண்டேன் .  வாட்ஸ்அப் வரை நட்பு, ஈமெயில் வரை உறவு, ஸ்கைப் வரை சொந்தம், கடைசி வரை யாரோ என்று இந்த காலத்தில் எல்லாரும் தனித் தனி தீவுகளாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை. நண்பர்களுக்கு என்று வாங்கி சென்ற இனிப்பு சாக்லேட் வகைகளை அருகில் உள்ள அனாதை இல்லங்களுக்கு வழங்கினோம் என்ற ஆத்ம திருப்தி ஒன்று தான் .

உறவினர் வீட்டு விசேஷம் என்பதால் வெளியூர் பிரயாணம் இந்த முறை தவிர்க்க முடியவில்லை. என்னை பொறுத்த வரை குழந்தைகளை அத்தனை இடங்களுக்கும் பத்திரமாக அழைத்து சென்று வந்ததே பெரிய சாதனை. நாங்கள் வாங்கி சென்ற பரிசு பொருட்கள் தான் நண்பர்களுக்கு பயன்படவில்லை என்றால் மற்றவர் எங்களுக்கு என்று வாங்கிய பொருட்களும் சரியாக வந்து சேரவில்லை. அதுவும் விலை அதிகமான இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த கூடிய பொருட்கள் உரிய நேரத்தில் வராமல் காலம் கடந்து கிடைத்த பொழுது பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாமலும் அதே நேரத்தில் உறவினர் மனம் கோணாமல் வேண்டாம் என்று சொல்ல இயலாமலும் "மோப்பக் குழையும் அனிச்சம்' என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப விருந்தினராக சென்ற நான் வாடி நின்றது தனிக் கதை. இக்காலத்தில் அனைவரும் பொருள் படைத்தவரே. எனவே பரிசு போன்றவைகளை உரிய நேரத்தில் தருவது என்பது "நான் உனக்காக வாங்கியது என்பதை கடந்து, நீ என்னுடைய நினைவில் இருந்தாய்(You were in my thoughts) என்ற அளவிலேயே அடையாளப்படுத்தப்படுகிறது.  அவ்வாறு உள்ள போது பரிசை உரித்த நேரத்தில் தர முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு இயலாவிட்டால் அடுத்த முறை அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். "காலத்தினால் செய்த உதவி" என்பது இதற்கும் கூட பொருந்தும்.

மிகுந்த பொருள் செலவிற்கும், உடல் சிரமத்திற்கும் இடையே இந்தியா சென்று வந்தாலும் சில பல நெருடல்களுடனையே இந்த பயணம் நிறைவுற்றது. உறவுகளை இத்துணை தூரத்தில் இருந்து பேணுவது என்பது மிகவும் கடினம்.எனினும் கடல் கடந்த நாடுகளில் பலகாலமாக வசிப்பவர்களுக்கு வேறு ஒன்றும் மார்க்க்கம் இல்லை. "என்னுடைய வீட்டிற்கே என்னை விருந்தாளியாய்  அழைத்து வந்தது இந்த வெளி நாட்டு வாழ்க்கை' என்று ட்விட்டரில் ஒரு அன்பர் எழுதியிருந்தார்.  நம் நண்பர் உறவினர்  எண்ணங்களில் நாம் முதன்மையானவராய் இல்லாவிட்டாலும் எங்கேனும் ஒரு ஓரத்திலேனும் இருப்போம் என்ற நம்பிக்கை எல்லா வெளிநாட்டு வாழ் மக்களுக்கும் இருக்கும் ஒரு நம்பிக்கை.எனினும் அந்த நம்பிக்கையின் ஆணிவேரை அசைப்பதாகவே இருந்தது இந்த பயணம் என்றால் அது மிகை இல்லை.