செவ்வாய், மார்ச் 06, 2012

கானல் நீர் தடாகம்

சமீபத்திய இந்தியப்  பயணத்தின் போது எனது மனதை தைத்த பல தினசரி காட்சிகளை மனதில் கொண்டு புனைந்த கவிதை. இன்னும் எவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தாலும் எனது ஜன்னல் வழி காட்சி மாறாது என்றே தோன்றுகிறது.




இதோ அந்தக் கவிதை.

கானல் நீர் தடாகம்

குழந்தையை காட்டி
கையேந்தும் சிறுமி
போதையில் சாலையை
சோலையாய் எண்ணி
புரளும் குடிகாரர்கள்
ஊரில் மழை பொழியும்
அதிசயத்தை வார்த்தையின்றி உணர்த்தும்
ஒல்லியான தெரு நாய்
சாக்கடை ஓரம்
மானுட வாழ்வின் உச்சத்தில்
எச்சமாய் புறந்தள்ளப்பட்ட  மூதாட்டி
கொளுத்தும் வெயிலிலும்
ஈர மனம் தேடும்
பிச்சைக்கார கிழவன்
பன்றியும் புறக்கணிக்கும்
குப்பை கூளத்தை
பிழைப்புக்காக பிழை
திருத்தும் பணியாளர்
கடக்கும் மனிதர்களின்
துயர் துடைக்க
கரம் கொடுக்காமல்
கவி புனையும்  நான் என
மாற்றத்திற்கே சவாலாய்
எனது இன்றும் நாளையும்