பச்சை மண்ணு பக்கம்
வியாழன், பிப்ரவரி 19, 2026
புத்தம் புதிய நான் - கவிதை
வியாழன், பிப்ரவரி 12, 2026
அக்னிச் சிறகுகள்
பட்டிமன்றம் புகழ் திரு. ராஜா அவர்கள் அட்லாண்டாவிற்கு பட்டிமன்றம் பேச சென்ற வாரம் பிப்ரவரி 3, 2026 அன்று வந்துள்ளார். அங்கு தங்கி இருந்த போது அவருக்கு உணவு எடுத்து வந்த ஒரு பெண்மணியைப் பார்த்து நீங்கள் காரைக்குடி என்கிறீர்களே, நீங்கள் எடுத்து வந்தது செட்டிநாட்டு உணவா என்று கேட்டதாகவும் அதற்கு அந்தப் பெண் இல்லை என்று சொல்ல, அப்பறம் நீங்க என்ன ஆளுங்க என்று கேட்டதாகவும், அது அந்தப் பெண்மணிக்கு மனவருத்தத்தையும, துயரத்தையும் அளித்ததாக திரு. கார்த்திகேயன் என்பவர் எழுதிய பதிவு நேற்று மிகவும் பரபரப்பாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் ஜாதியா என்ற கருத்தும், ராஜா அவர்களை காட்டமாக விமரிசித்தும் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
என்பது தான் அந்தக் குறுங்கவிதை. அமெரிக்காவிலும் இனவெறி, தீண்டாமை என்று பலதும் இருக்கிறதே இது குறித்தெல்லாம் பேசவும், தொடர்ந்து இந்த போக்கிற்கு எதிராக குரல் எழுப்பவும் பலரும் முன் வருவதில்லையே ஏன்? தனக்கு எங்கெல்லாம் பதவி, பணம் என்று ஆதாயம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சமூக நீதி என்பதெல்லாம் பெயரளவில் மட்டுமே என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஒருவன் அடுத்தவர் மேல் அதிகாரம் செலுத்தும் நிலைக்கு வரும் போது அவன் எந்த சமூக படிநிலையில் இருந்து வந்திருந்தாலும் அவனுடைய இயல்பு எப்படியாவது தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் மட்டும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற மனநிலை தான். அதுவரை சம வாய்ப்பு, சம நீதி, தகுதி அடிப்படை(merit) என்றெல்லாம் கம்பு சுத்தும் மனநிலை கொண்ட அவன், முன்னேறிய பிறகு, அவனிடம் இருந்த நல்ல எண்ணங்கள் சுத்தமாக காணாமல் போய், மற்றவர்களை தனக்குக் கீழே அடிமையாக வைத்து இருப்பதையே விரும்புகிறான். அனைவருக்கும் இது பொருந்தாது என்றாலும் பெரும்பான்மையோருக்கு இதே மனநிலை தான். Outrage is selectively weaponized only when someone's needs are not met. Until such a time he/she is just a mute spectator.
அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் ஆண் பெண் பாகுபாடு, இனப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு என பல அவலங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் எனக்கு நடக்கவில்லை, இதை எதிர்ப்பதால் எனக்கு என்ன கிடைக்கும் அல்லது இப்போது எனக்குப் பயன் தரும் ஒன்றைக் குறித்து கருத்துக் கூறி அதனால் எனக்கு வரும் ஆதாயத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற விட்டேத்தியான சுயநல மனோபாவம் தான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் தொடரக் காரணம். நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணம் கொண்டால் எந்த அநியாயத்தையும் எதிர்த்து குரல் கொடுக்கும் வலிமையை நாம் பெறுவோம். அனைவரும் சமம் என்று நினைத்தால் தகுதி அடிப்படையிலேயே(merit) நமது எல்லா முடிவுகளையும் அமைப்போம். நாம் மட்டுமன்றி நம்மைச் சுற்றி உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நமக்கு எந்த நிலையிலும் தடுமாற்றம் வராது. அப்படிப்பட்ட சரிநிகர் சமானமான உலகம் மலர்வதே நமது குறிக்கோள் என்றால் அந்த மாற்றத்திற்கான பொறி நம்மிடம் இருந்தே தோன்ற வேண்டும். புத்தனாக வேண்டும் என்றால் அரண்மனையைத் துறந்து நாடோடியாக அலைந்து ஞானத்தை தேடும் தியாக மனம் வேண்டும். ஏசுவாக வேண்டுமென்றால் முள் கிரீடத்தை துணிந்து தரிக்கும் மனோதைரியமும், சிலுவையைச் சுமக்கும் உள்ளமும் நமக்கு வேண்டும். நல்ல மனிதனாக வேண்டுமென்றால் எல்லா நிலைகளிலும் மோசமான விளைவுகளை தரும் எளிதான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் சரியான விளைவுகளை தரும் கடினமான பாதையை தேர்ந்தெடுக்கும் மனம் வேண்டும். Choose the harder right instead of the easier wrong and never let your wishbone grow where your backbone should be.
வியாழன், ஜனவரி 22, 2026
தேசாந்திரி - கவிதை
குண்டு குழியான சாலைகள்
அவசரமாய் விரையும் மனிதர்கள்
சாலையோரங்களில் கடைவிரிக்கும் சிறு வியாபாரிகள்
விளக்குகள் மின்னும் பெரும் அங்காடிகள்
தென்னை, மா, வாழை மரங்கள் வளர்க்கும் வீடுகள்
குரைக்கும் நாய்கள்
சுடும் வெயில்
திடீரென்று பொழியும் மழை
திட்டும் முதலாளி
வேலை பார்க்கும் தொழிலாளி
துரோகம் வஞ்சகம் கபடம்
வாஞ்சை நம்பிக்கை அன்பு
நிறைந்த மனிதர்கள்
இப்படியாக எல்லா ஊரும் ஒன்று தான்
இத்தகைய ஊர்களைக் கொண்ட
எல்லா நாடுகளும்கூட ஒன்றுதான்
தன்னை மட்டுமே அதிகம்
தன்னைத் தவிர
ஊருக்கு ஊர் வேறுபடுகிறது
ஞாயிறு, ஜனவரி 11, 2026
உன்னதம் - கவிதை
ஞாயிறு, டிசம்பர் 07, 2025
நடை மறந்த நதி - மகாகவி ஈரோடு தமிழன்பன்
மழை மண்ணில் விழுந்த பின் அது என்னவாகிறது? உணவாகிறது, மணமாகிறது, மருந்தாகிறது, பார்க்கும் எல்லாமுமாகிறது. மழையைப் போல வெகு சிலருக்கு சொற்கள் அமைந்து விடுகிறது. துவளும் போது ஊக்கமும், மகிழ்ச்சியின் போது இனிமையும், குழப்பத்தில் புது வழிகாட்டுதலுமாகிறது. அத்தகைய வீரிய சொற்களுக்கு சொந்தக்காரர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். ஓயாத அலை போல தமிழ்ச் சொல்லாலே கவி நெய்து தமிழன்னைக்கு மகுடம் சூட்டியவர். தன்னுடைய உலராத வார்த்தைகளால் வறண்ட உலகின் மனசாட்சியை ஈரப்படுத்தியவர். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என்று தமிழின் புது வேகப் பாய்ச்சலுக்கு வித்திட்டவர். பாரதி, பாரதிதாசன், பெரியார், பாப்லோ நெருடா, வால்ட் விட்மன் எனப் பல ஆளுமைகளைப் பார்த்து, படித்து பாடலாக்கி, புதுக் கவிதைக்கு புத்துணர்வு ஊட்டியவர். எத்தனை உயரத்தில் இருந்தாலும் அனைவரையும் சமமாகப் பாவிக்கும் எளிய மனம் படைத்தவர்.
சனி, நவம்பர் 01, 2025
ஹாலோவீன் 2025
சமீபத்திய இந்திய பயணத்தின் போது, எங்கள் ஊரில் உள்ள ஒரு அரசு வங்கிக்குச் சென்றிருந்தேன். கூட்டு வங்கிக் கணக்கில் இணைந்த இருவரில் ஒருவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை சேர்க்க வேண்டும். புதியதாக இணைப்பவருக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் போட்டோ, விண்ணப்பப் படிவம், விண்ணப்பக் கடிதம், எந்த நபரை நீக்குகிறோமோ அவருக்குமான அதே சுய விவரங்கள் என்று இதற்கான தரவுகள் மட்டுமே அத்துணை தேவைப்படுகிறது. இதற்கும் புதிதாக சேர்க்கப்படும் நபர் அதே வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர். ஆனாலும் எல்லா தரவுகளையும் கேட்கிறார்கள்.
ஒவ்வொரு ஆபிஸிலும் வேலை செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களிடமிருந்து இவ்வளவு தரவுகளை பெற வேண்டும் என்று ஏதோ இலக்கு வைத்திருப்பார்கள் போலும். ஒவ்வொரு அலுவலரும் தரவுகளை வாங்கி அடுக்கி அடுத்த மேசைக்கு தள்ளும் பணியையே பெரும்பாலும் செய்கின்றனர்(Paper Pushers). ஆனாலும் வேலை முடிந்ததா என்றால் கண்டிப்பாக இல்லை. சார், ஒரு லெட்டர் வாங்கிட்டு வாங்க, இந்த ஆவணம் எங்களுக்கு பத்தாது வேற ஆவணம் (நம்ம கிட்ட இல்லாதது) வெச்சிருக்கிங்களா? இதையெல்லாம் கூட உடனே சொல்ல மாட்டார்கள், ஓரிரு நாள் ஒவ்வொரு வழங்கிடமாக(counter) அலைய விட்டு அப்புறம் போனால் போகிறது என்று சொல்வார்கள்.
ஆனால், அதை விட முக்கியமானது வங்கிகளின் வேலை நேரம். காலை 10:30 முதல் மதியம் ஒரு 2 மணி வரை மட்டுமே வங்கிக்குள் அனுமதிப்பார்கள். அதற்குப் பிறகு உள்ளே போவது என்றால் உங்களுக்கு ஃப்யூன் முதல் ரிசப்ஷனிஸ்ட் முதல் உள்ளிருக்கும் மானேஜர் முதல் அவர் வணங்கும் கடவுள் வரை அனைவரையும் தெரிந்திருக்க வேண்டும். வெளியூரில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, இது போன்ற ஒரு வங்கி வேலையை முடித்து விட்டு இத்தனை நாட்களுக்குள் ஊர் திரும்ப வர வேண்டும் என்று செல்பவர்கள் ஆகப் பெரும் நேர்மறைச் சிந்தனையாளர்கள் எனலாம். அப்படியே வெளிநாட்டில் இருந்து ஓரிரு வார விடுமுறையில் சென்று இதே போன்ற ஒரு சில வேலைகளை முடித்து விட்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் நேர்மறைச் சிந்தனையாளர்களில் உயர்ரகம். ஏனென்றால் அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதம் மற்றும் சிபாரிசு கடிதம், உச்ச கிரகங்களின் பார்வை என்று அனைத்தும் நமக்காக வேலை செய்தால் மட்டுமே இது சாத்தியம்.
இது மட்டுமல்ல, மாற்றப்பட்ட புதிய வங்கிக் கணக்கில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களுடைய நேரத்தை நீங்களே மதிக்கவில்லை என்று அர்த்தம். இதற்கு வங்கிக்கு எத்தனை தடவை செல்ல வேண்டி இருக்கும், என்னென்ன தரவுகள் தர வேண்டும், தோராயமாக எத்தனை வருடங்கள் ஆகும் என்பதையெல்லாம் அறுதியிட்டு சொல்ல இயலாத ஒன்று. கூட்டுறவு வங்கிகளோ இதில் இன்னொரு படி முன்னே நிற்கிறது. பல நேரத்தில் முக்கியமான தரவு அல்லது தேவைகளை கடைசி நேரத்தில் சொல்லி நாம் ஊருக்குக் திரும்பும் முன் நமது வேலை கண்டிப்பாக முடியாது என்பதை உறுதி செய்வதில் வல்லவர்கள்.
வெள்ளி, அக்டோபர் 24, 2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கவிதை
கண்மணியின் கணவன்
நான்கு சிறிய பிள்ளைகளோடு
அவளை விட்டுப்போய்
பத்து வருடமாகிறது
மழைக்கு ஒழுகும் வீட்டில்
இரு வேளை உணவுக்காக
குப்பை அள்ளி
குழந்தைகளோடு கஷ்டஜீவனம் நடத்துகிறாள்
கணவன் சந்தேகப்பட்டானென
தீவைத்து சிதைந்த உடலுடன்
இருள் கவிந்த நேரங்களில் மட்டும்
பிறஆண்களுடன் சென்று வருகிறாள்
சுலோச்சனா வயிற்றுப்பாட்டுக்காக
சரசுவின் அப்பா
அவளுடைய பதினைந்தாவது வயதில்
ஒரு சாராய பாட்டிலுக்காக
அவளை எவனுக்கோ
விற்றுச் சீரழித்ததில்
கையில் பிள்ளையோடு
பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கிறாள்
சற்றே மனப்பிறழ்வோடு
தினமும் குடிகார கணவனிடம்
அடிஉதை வாங்கி
மயக்கத்தில் கிடக்கும் மாலினிக்கு
அவ்வப்போது உதவுவது
மும்பை சென்று
உயிர்வதை அனுபவித்து
பெண்ணாக மாறிய
எதிர்வீட்டு பிருந்தா அக்கா
ஆணவக் கொலை என்றெல்லாம் பதியப்படாமல்
தவறுதலாக நேர்ந்தது என்றே பதியப்பட்ட
மரணம் தான் ஆஷாவுடையது
கள்ளிப் பாலில் இறந்த
பெயரிப்படாத பெண்சிசு
புதைக்கப்பட்ட மரத்தின் அடியிலெல்லாம்
பறவைகள் எப்போதும் கூடு
கட்டுவதேயில்லை
பெண் பெயரிட்ட நதிகள் தோறும்
நெகிழிக் கழிவுகள் கொண்டு அடைத்து
பூமிப் பெண்ணின் மேனியெங்கும் மலடாக்கும்
இரசாயனக்கொல்லி தெளித்துப் புண்ணாக்கி
பூமித்தாயின் வயிற்றில் துளையிட்டு
பீச்சிடும் எண்ணெய் திரவம்
குடித்து பணமோகம் தீர்த்துக் கொள்ளும்
பணமுதலைகள் நடைபயிலும் வீதிதோறும்
வன்கொடுமை, ஆசிட் வீச்சு
வரதட்சிணை கொடுமையென
பாழும் குழிகள் ஆங்காங்கே
பரமபிதாவின் ஆசிபெற்ற பெண்ணே
உன்னை இந்தப் பூலோகச் சொர்க்கத்தில்
சுகவாழ்வு வாழ அழைக்கிறோம்
உன்னைத் துன்பத்திலிருந்து
காக்கும் ராஜகுமாரன் வந்துவிட்டான்
உன்னை மிகவும் நேசிக்கிறான்
நிதமும் ரட்சிப்பானென
பசப்புச் சொற்களை வீசும் கனவான்களே
பூமியை எப்போது
பெண்களின் நரகமென
அதிகாரப்பூர்வமாய் அறிவிப்பீர்கள்?
Dude(டியூட்) தமிழ்ப்பட விமர்சனம்
ஹீரோ என்பவன் யார்? 100 பேரை ஒரே நேரத்தில் அடித்து வீழ்த்துபவன், ஹீரோயின் பின் தன்னுடைய நண்பர் குழாமுடன் சுற்றி அவளை காதலிக்க வைப்பவன், பெண்ணிற்கான இடம் எது, பெண் எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசுபவன் என்று தமிழ் சினிமா காலங்காலமாக அடித்த பல்வேறு ஆணிகளை எல்லாம் "இது பூராவுமே தேவையில்லாத ஆணி" என்று தைரியமாக பிடுங்கி போட்டிருக்கிறது டியூட். ஆணவக் கொலைக்கு எதிரான கருத்துகள், ஹீரோயிசம் என்றால் என்ன, பெண்ணியம் என்பது என்ன, திருமணம் என்பதற்கான உண்மையான அர்த்தம் வரும் தலைமுறையிடத்தில் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் நகைச்சுவை என்னும் வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசியாக மனதில் தைக்கும் விதத்தில் சொல்லி இருக்கிறார்கள். மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி, பிரதீப்பின் தோழனாக வரும் சத்யா அக்காலா, ஹ்ரிது என்று பலரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். பெண்ணியம், சாதியம், ஹீரோயிசம் என்று பல கனமான விஷயங்களை ரொம்ப யதார்த்தமாக இந்த காலத்திற்கு ஏற்ப கையாண்டிருப்பதற்கே முதலில் டியூட் படக்குழுவினர்க்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.
தாலிக்கு பின்னாடி இருக்கற அந்த பொண்ணோட பீலிங்சுக்கு தான் மரியாதை என்று தாலி சென்டிமெண்டை காலி செய்தது, ஒரு பொண்ணுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலை அதுக்கு ரீசன் எல்லாம் தேவையில்லை என்று பெண்ணின் உணர்வுகளை முன்னிலைப்படுத்துவது, அவ்வளவு ஆணவம் இருந்தா நீங்க போய் சாகுங்கடா என்று ஆணவக் கொலைக்கு எதிராக சாட்டை சுழற்றுவது, எதுவா இருந்தாலும் நான் face பண்ணிக்கறேன், Frontல வெச்ச லெக்கை backல வைக்கறது நம்ம ஹிஸ்டரிலேயே இல்லை, 100 பேர் வந்தாலும் அடி வாங்க முடியும், போன்ற டயலாக்குகள் மூலம் ஹீரோயிசத்திற்கு புதிய அர்த்தம் தந்தது , "தேவதாஸ் சார், நீங்க ஏன் எனக்கு இவ்ளோ பண்றிங்க" என்று மமிதா கேட்கும் போது ஒலிக்கும் பாடலும் அதில் வெளிப்படும் பிரதீப்பின் முக உணர்வும், ஆழமான அன்பும் என்று படம் நெடுக பல அடடேக்கள். சில இடங்களில் பிரதீப் காட்டும் சராசரி ஆணின் உணர்வும் அந்த பாத்திரத்திக்கு நம்பகத் தன்மையை அளிக்கிறது.
இன்றைய இளைஞர்களின் பல்ஸ் பிடித்து சொல்ல வந்த விஷயத்தை எந்தவித சமரசமும் இல்லாமலும், பிரச்சார நெடி இல்லாமலும், பார் காட்சி அல்லது ஹீரோ குடித்துவிட்டு பாடும் காட்சி இல்லாமலும், ஒரு சில நச் வசனங்கள் வழியாக அழகாக சொல்வதிலும் நிமிர்ந்து நிற்கிறான் இந்த டியூட். பாலக்காட்டு மாதவனை பூமராக்கும் ஒரு அகன் வருவதற்கு தமிழ் சினிமாவிற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தான் சற்று ஆயாசத்தை தருகிறது. மொத்தத்தில் Dude அரிதானவன், அன்பானவன், அசலானவன்.
#dudemovie #dudetamilmovie #dude #dude2025
வியாழன், அக்டோபர் 09, 2025
காபி கவிதைகள்
வெள்ளி, செப்டம்பர் 12, 2025
பூக்கள் பூக்கும் தருணம் -சுற்றுலா - பாகம் 4
அடுத்த நாள் நாங்கள் சென்றது "தி ட்யூலிப் பார்ன்" எனப்படும் ஒரு ட்யூலிப் வயலுக்கு. பல இடங்களில் ட்யூலிப் மலர்களைப் பயிர் செய்து அந்த ட்யூலிப் மலர்கள் மலர்ந்தவுடன் அதனை பார்வையாளர்கள் வந்து பார்க்க கட்டணம் வசூலித்து அனுமதிக்கின்றனர். பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதியுடன் காபி, டீ போன்ற சூடான பானங்களும் சிற்றுண்டிகளை கிடைக்கும் சிறிய உணவகங்கள் கூடிய இந்த ட்யூலிப் வயல்கள் அழகோ அழகு. என்னதான் அழகான இளவேனிற் காலம் என்றாலும் நெதர்லாந்து எப்போதும் கொஞ்சம் குளிராகவே இருக்கிறது. அதுவும் குறிப்பாக ட்யூலிப் வயல்களில் அடிக்கும் காற்று பின்பனிக் கால காற்று போல மிகவும் குளிர்ச்சியாகவே இருந்தது.
எனினும் அழகான பிராக் அல்லது நீண்ட உடை அணிந்து அந்தத் துலிப் வயல்களுக்கு நடுவே ஆடிப்பாடி நிறைய வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பலரைப் பார்த்தோம். நாங்கள் ஒரு ஸ்வெட்டர் அணிந்து அதன் மேல் ஒரு மேலுறை அணிந்த பின்னும் குளிர் தாளவில்லை. எப்படித்தான் இந்தக் குளிரில் பிராக் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு நடனம் ஆடுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அந்நியன் படத்தில் நாயகனும் நாயகியும் நாயகனின் நண்பர்களும் சாதாரண சேலை வேட்டி போன்ற உடைகளை அணிந்தே நடனமாடி இருப்பார்கள். எல்லாம் சமூக ஊடகங்கள் செய்யும் மாயை என்று தோன்றியது. கண்டிப்பாக இந்த ட்யூலிப் வயல்களுக்குச் செல்லும் முன்னர் சரியான கம்பளி உடைகளை எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.
அந்த ட்யூலிப் வயலில் கார், இதய வடிவம், மிதிவண்டி, டிராக்டர், பியானோ, மாடுகள் போன்ற பல்வேறு உருவங்களை வைத்திருந்தார்கள். ட்யூலிப் வயல்களுக்கு நடுவே இருந்த அந்த வாகனங்களிலோ அல்லது வேறு அழகிய பின்னணியிலோ நீங்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். புகைப்படம் எடுத்துவிட்டு வயல்களைச் சுற்றிப் பார்க்கலாம் நாங்கள் சில மணி நேரம் அந்த ட்யூலிப் வயல்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு சிற்றுண்டி குடிலில், சூடான பானம் அருந்திவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம். கிட்டத்தட்ட ஒரு அரை நாள் அளவு செலவு செய்யும் கூடிய ஒரு இடமே இந்த ட்யூலிப் வயல்கள். அங்கிருந்து கிளம்பி நண்பர் பரிந்துரை செய்திருந்த இன்னொரு ட்யூலிப் வயலுக்கு நாங்கள் சென்றோம். அந்த ட்யூலிப் வயலும் முன்னது போலவே இருந்தது. எனவே அதற்குள் செல்லாமல் வெளியிலிருந்து பார்த்துவிட்டு புறப்பட்டு விட்டோம். கீழே zanse Schans இல் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், காணொளியும் உள்ளன.
அடுத்ததாக நாங்கள் அன்றிரவு செல்ல வேண்டிய Geithoorn என்ற இடத்தை நோக்கிய எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அதற்கு முன் நாங்கள் சென்றது Zanse Schans என்ற இடத்திற்கு. இது Zaandijk என்ற ஊருக்கு மிக அருகில் இருக்கும் மிகப் பழமையான காற்றாலைகள் மற்றும் மர வீடுகளைக் கொண்ட ஒரு இடமாகும். வட ஆம்ஸ்டர்டாமில் உள்ள காற்றாலைகள் பலவற்றையும் பாதுகாக்கும் பொருட்டு அவற்றை ஒரே இடத்தில் அமைத்து இருக்கின்றனர். இந்த கிராமத்தில் சான்(Zaan) ஆற்றின் கரையில் நிற்கும் பல்வேறு மரக் காற்றாலைகள், வாய்க்கால்கள் நடுவே நிற்கும் டச் மரக்குடில்கள், சிற்றுண்டி சாலைகள், சீஸ்(cheese) உற்பத்தி செய்யும் பண்ணைகள், ஈயப் பாத்திரங்கள் செய்யும் சிறு தொழில்கள், பாரம்பரிய டச் மரக் காலணிகள் செய்யும் தொழில் கூடம் ஆகியன நிறைந்த இந்த இடத்திற்கு, ஆண்டொன்றிக்கு, ஏறத்தாழ 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கண்டிப்பாக உங்களின் நெதர்லாந்து பயணத்தில் இணைத்துக் கொள்ளக் கூடிய ஓரிடமாக இதை நீங்கள் கொள்ள வேண்டும். அருங்காட்சியகம், மரக் காற்றாலைகள் ஆகியவற்றை பார்வையிட்டு விட்டு Zaan ஆற்றின் பல்வேறு இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பியது என்றுமே மறக்க முடியாத ஒரு அனுபவத்தை அளித்தது என்றால் அது மிகையில்லை.
Geithoorn என்பது நெதர்லாந்தின் வெனீஸ் என்று வர்ணிக்கப்படுகிறது. தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரில் தெருக்கள் அதிகமில்லை. கைகளால் தோண்டப்பட்ட கண்மாய்கள் நிறைந்த இந்த ஊரை சிறு படகுகள் வழியாகவே சுத்திப் பார்க்க முடியும். படகுகள் ஓடும் கண்மாய்களின் கரைகளில் உணவகங்கள், காபி விற்கும் கடைகள், சர்ச், வீடுகள், லைப்ரரி யாவும் அழகாக அணிவகுத்து நிற்கின்றன.
Geithoorn கண்மாய் தோற்றம்
நேரம் போவதே தெரியாமல் அங்கே அமர்ந்து படகுகளில் செல்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாகும்.
அடுத்த நாள் காலை எழுந்த பின் Geithoorn இல் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் இருந்த Fort Bourtange என்ற கோட்டையைப் பார்க்கச் சென்றோம். நெதர்லாந்தின் வடக்குப் பகுதியில் Groningen பிராந்தியத்தில் உள்ள இந்தக் கோட்டை ஜெர்மனியின் எல்லையில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவிலேயே அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பென்டகன் கட்டடத்தைப் போல நட்சத்திர வடிவில் வடிவமைக்கப்பட்டு சுற்றிலும் அல்லிகள் மலர்ந்து அழகு சேர்க்கும் அகழிகள் கொண்ட இந்தக் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
நெதர்லாந்தில் காணப்படும் காற்றாலைகள், கற்களைக் கொண்டு செதுக்கப்பட்ட பாதைகள், அகழிகள் மேல் நான்கு திசையிலும் பாலங்கள், புல்வெளிகள், கோட்டையின் உள்ளே கடைகள், பார்வையாளர் அரங்குகள் என்று பல அம்சங்கள் நிறைந்துள்ளது. கோட்டையின் உள்ளே வீரர்கள் தங்கும் அறைகள், கோட்டையைப் பற்றிய விவரங்கள் கூறும் பார்வையாளர் அரங்குகள், குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைந்த கோட்டையைப் பற்றிய விவரங்கள் பகிர ஊடாடும் அமைப்புகள் , உள்ளேயே சாப்பிடும் இடங்கள் என்று பல அம்சங்கள் உள்ளது. வரலாற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்தக் கோட்டையை விரும்புவார்கள். ஒரு 3 மணி நேரம் கோட்டையை சுற்றிப் பார்த்துவிட்டு, சிற்றுண்டி அருந்திவிட்டு மீண்டும் Geithoorn வந்தடைந்தோம். அங்கே வந்து சேர்ந்தபின் கொஞ்ச நேரம் Geithoorn கண்மாய்க் கரையில் அமர்ந்து அந்த நகரை அமைதியாக ரசித்தோம். அன்றிரவு நாங்கள் தங்க இருந்த அறையை அடைந்து இரவு உணவு அருந்திவிட்டு உறங்கச் சென்றோம்.
அடுத்த நாள், Geithoornஐ விட்டு புறப்பட வேண்டிய நாள் என்பதால் காலையில் சீக்கிரம் எழுந்து அறையில் இருந்து கிளம்பி கண்மாய்க் கரைக்கு சென்று அங்கே மகிழுந்தை நிறுத்தி விட்டு, படகுச் சவாரி செய்தோம். படகுச் சவாரி செய்து பல நாட்கள் ஆயிற்று என்றாலும் நிறைய கூட்டம் இருந்ததால், மற்ற படகுகளுக்கு பொறுமையாக நின்று வழி விட்டு பின்னர் படகை செலுத்தி, அந்த கண்மாயை வலம் வந்தோம். பல இடங்களில் கண்மாய் ஆழமாகவே இருந்தது. குளிர் காற்றும் வீசியது. குழந்தைகள் மிகவும் ஆர்வமாக படகினை செலுத்தியதால் நாங்கள் வெறும் பயணிகளாக மட்டுமே அமர்ந்து நன்கு இயற்கை காட்சிகளை பார்வையிட்டு ரசித்தோம்.
பின்னர் நண்பகல் உணவினை உண்டு விட்டு, ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி மகிழுந்துப் பயணத்தை தொடங்கினோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் ஆம்ஸ்டர்டாமை அடைந்து விட்டோம். அன்று நகர மையத்தில்(Downtown) இருந்த பல்வேறு சிலைகள், சர்ச்சுகள், கடைகள் போன்றவற்றை பார்த்து விட்டு அடுத்த நாள் மீண்டும் ஊர் திரும்புவதாகத் திட்டம். நகர மையத்தில் ஓர் இடத்தில வண்டியை நிறுத்திவிட்டு நடந்தே அருகில் உள்ள இடங்களை சுற்றிப் பார்த்தோம். ஆன் ஃபிராங்க் வாழ்ந்த வீடு, வான் கோ அருங்காட்சியகம், ரிக்ஸ் அருங்காட்சியகம் (Rijksmuseum) போன்ற பல்வேறு சிறப்பான இடங்கள் ஆம்ஸ்டர்டாமில் உண்டு. எனினும் நாங்கள் அங்கு சென்ற போது பார்வையாளர் நேரம் கடந்து விட்டதால் இவை எதையும் பார்க்க இயலவில்லை.
அங்கு உள்ள கடைகளில், ஊருக்குக் கொண்டு செல்ல, நினைவு பரிசுகள் ஒன்றிரண்டை வாங்கினோம். அப்படியாக வாத்து பொம்மைகள் விற்கும் கடை ஒன்றிக்கு சென்றிருந்தோம். நடிகர்கள், அரசியல்வாதிகள், பாடகர்கள் போன்ற பலரை வாத்து உருவம் கொடுத்திருந்தார்கள். இது வேடிக்கையாகவும் இருந்ததோடு மிகச் சிறப்பாகவும் இருந்தது.
பின்னர் ஆம்ஸ்டர்டாமின் மிகவும் சிறப்பம்சமான ஆம்ஸ்டெல் ஆறு படகு சவாரியை கரையில் இருந்து பார்த்து ரசித்தோம். அமரும் இருக்கைகள் கொண்ட பூங்கா, அமரும் இருக்கைகள் கொண்ட கரையோர காபி கடைகள் என்று பல இடங்களில் இருந்தும் ஆம்ஸ்டெல் ஆற்றில் சுற்றுலா செல்லும் படகுகளைப் பார்க்க முடியும். ஆங்காங்கே துலிப் மலர்கள் கொண்ட பெரிய பூந்தொட்டிகளும் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டு, குளிர் காற்றில் அந்த மலர்கள் குலுங்கியது மழலைகள் தங்கள் சிவந்த கரங்களை ஆட்டி உற்சாகப்படுத்துவது போலவே இருந்தது.
நகர மையத்தில் இருந்த டாம் சதுக்கம் (Dam Square), அரண்மனை(Royal Palace) ஆகியவற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மனம் நிறைய புதிய அனுபவங்களும், மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க கேமரா நிறைய புகைப்படங்களும், காணொளிகளும் எடுத்துக் கொண்டு அன்றைய இரவு உணவினை நண்பரின் வீட்டில் முடித்துவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அன்றிரவு நாங்கள் தங்க வேண்டிய இடத்தினை அடைந்தோம்.

.jpg)
























