திங்கள், ஏப்ரல் 22, 2024

சித்திரைத் திருநாள் வாழ்த்து - கவிதை

 

சித்திரைத் திருநாள் வாழ்த்துக் கவிதையை முகநூலில் பதிந்திருந்தேன். நேரம் கடந்தாலும் பரவாயில்லை என இங்கேயும் பதிகிறேன்.



சந்தனத் தென்றல் தேரில்
சரக்கொன்றைப் பூந்துகில் சூடி
சோதிப் பேரொளியாய்ப் பூத்த
சித்திரை மகளே வருக!

பத்தரை மாற்றுப் பொன்னை
இளவேனில் காலம் தன்னை
பதினோரு திங்களாய்க் காண
இகத்தில் தவம் நோற்றோம்!

தேனுறைத் தமிழின் சுவையாய்
தண்ணிலவு உலவும் பொழிலாய்
தெளிந்த நன்னீரின் இதமாய்
தரைமேல் மலர்ந்த திருவே!

குன்றாத வளங்கள் தருவாய்
நலியாத நன்மை சேர்ப்பாய்
வெற்றித் திருமகள் நாளும்
நீங்காத தன்மை அருள்வாய்!

சங்கம்கண்ட தமிழைப் போல
சகத்தில் யாண்டும் இன்பமேவ
முத்திரை பதிக்கும் சித்திரையாக
மேதினியில் யாவரையும் வாழ்விப்பாயே!

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள். 

பூக்கள் பூக்கும் தருணம் -சுற்றுலா - பாகம் 2

"தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்"  என்ற வாசகத்தை மனதில்  நிறுத்தித்  தேடினாலும் ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானங்கள் ராலே ஏர்போர்ட்டில் இருந்து செல்ல மிகவும் அதிக விலையாகத் தான் இருந்தது. அடுத்த நாள் வேறு ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாரிஸ் செல்ல பயணச் சீட்டு பதிவு  செய்திருந்தோம்.  எனவே எங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் வேறு. பக்கத்தில் இருந்த அட்லாண்டா, சார்லட் என்று தேடல் விரிவடைந்து சரி எப்படியும் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி. யில் இருந்து டிக்கெட் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தேட, வானத்தில் உள்ள தேவதைகள் ஆசிர்வதித்தது போல நாங்கள் எதிர் பார்த்ததை விடக் ஏற்றுக் கொள்ளத்தக்க  விலையில், குறித்த நேரத்தில் சென்று சேரும் விதத்தில் பயணச்சீட்டு கிடைத்தது.  ஆனால் பாரிஸ் செல்லும் ரயிலிற்கான முன்பதிவை மாற்றும்படி இருந்தது. சரி, பரவாயில்லை என்று அதையும் ஒரு வழியாக மாற்றியது  பண விரயம் என்றாலும் வேறு வழியில்லை. நெடும் பயணம் செல்பவர்கள் அங்கிருந்து வேறு ஊருக்கு செல்லும் எண்ணம் இருந்தால் அந்த பயணங்கள் உங்கள் பயண திட்டத்தில் இடையே உள்ள நாட்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கடைசியில் இருந்தாலோ அல்லது ஆரம்பத்தில் இருந்தாலோ விமான சேவையில் தாமதம் மற்றும் எதிர்பாராத ஏதோ ஒரு காரணத்தால் பயணம் தள்ளிச் சென்றாலும் உங்களுக்கு அதனால்  பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. இந்தப் படிப்பினையை இவ்வளவு பணம் செலவு பண்ணித் தெரிந்து கொண்டோமே என்று எண்ணிக் கொண்டே வாஷிங்டன், டிசி க்கு விரைந்தோம்.

பயணத்தில் இருந்து நாங்கள் திரும்பும் வரை காரை சேமிக்கும் வசதியுடன் கூடிய தங்கும் அறையைத் தேர்வு செய்திருந்தோம். ஒரு வழியாக தங்கும் அறைக்குச் சென்று படுத்துறங்கி, அடுத்த நாள் சாவகாசமாய் எழுந்து, குளித்து, ஒரு நல்ல உணவகத்தில் உணவு உண்டுவிட்டு,  விடுதிக்கு திரும்பி காரை அங்கே  நிறுத்தி விட்டு,  விமான நிலையத்திற்கு செல்வதற்கான பேருந்தில் ஏறி விமான நிலையத்திற்கு சென்றோம். விமான நிலையத்திற்கு அருகில் உள்ள விடுதிகளில் பெரும்பாலும் விமான நிலையத்திற்கு இலவசமாகச்  செல்லக் கூடிய பேருந்து வசதி உண்டு. விமான நிலையத்தை அடைந்து பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு, பாதுகாப்பு பரிசோதனைகளை  முடித்துவிட்டு உள்ளே சென்று அமர்ந்திருந்தோம். குறித்த நேரத்தில் விமானம் புறப்பட்டு ஆம்ஸ்ட்ரடாமை அடைந்தது. ஆம்ஸ்ட்ரடாம் விமான நிலையத்திலிருந்து எங்களை அழைத்துச் செல்ல நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவருடைய மகிழுந்தில் ஏறி, அவருடைய இல்லத்தை அடைந்தோம். பல வருடங்களுக்குப் பிறகு அவருடைய குடும்பத்தை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஆனால் அதிக நேரம் அங்கிருக்க இயலவில்லை. அனைவரும் தயாராகி அன்று மதியம் பாரீசு செல்லும் ரயிலுக்கு தயார் ஆனோம்.



இரயில் நிலையத்தை ஐந்து நிமிடங்களுக்கு முன் அடைந்து வேகமாய் ஓடி இரயிலில் ஏறி அமர்ந்தோம். ஆம்ஸ்ட்ரடாமை பொறுத்தவரை சாலையில் வேகமாகச் செல்லும் கார்களை புகைப்படம் எடுத்து பெரிய தொகையை அபராதமாக இட்டு விடும் வாய்ப்பு அதிகம். எனவே சாலையில் விதிகளை கவனித்து அதற்கு ஏற்ப வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும். சில சாலைகளில் வேக அளவு என்பதை விட சராசரி நேரத்தை மட்டுமே கணக்கிட்டு அதற்கேற்ப அபாரதத் தொகை வசூலிக்கப்படும். அதாவது சராசரியாக சில மைல் தூரத்தை கடக்க இவ்வளவு நேரம் ஆகும் என்பதைக் கொண்டு, நாம் அந்த சராசரி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அந்தச் சாலையைக் கடந்து சென்றால், அதற்கும் பெரிய அளவில் அபராதத்தை தலையில் கட்டி விடுவார்கள். அயல்நாட்டில் இருந்து செல்பவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். எங்களுக்கும் ஓரிரு இடங்களில் வேகமாக சென்றோம் என்று கூறி அபராதம் கட்டும்படி, ஊருக்கு வந்த பின், வீட்டிற்கே ரசீது வந்தது. இதை நாம் நீதிமன்றத்திற்கு சென்றெல்லாம் வாதிட்டு வெற்றி பெற வழியில்லை என்பதால் அவர்கள் சொன்ன தொகையை காட்டும்படி நேர்ந்தது .   



லூவ்ர நுழைவாயிலைக் கடந்து உள்ளே




உலகப் புகழ் பெற்ற மோனோலிசா 
 

இரயிலில் ஏறி அமர்ந்த பிறகு தான் தோன்றியது, செல்போன் சார்ஜர் எடுத்து வரவில்லை என்பது. சரி பாரீசில் வாங்கிக் கொள்ளலாம் என்று வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக் கொண்டோம். இரயிலில் இருந்து இறங்கிய பின் ஊபர்(Uber) செயலி வழியாக டாக்ஸியை அழைத்து நாங்கள் செல்ல வேண்டிய தங்கும் விடுதிக்குச் சென்றோம். அங்கே கொஞ்சம் களைப்பாறிவிட்டு மீண்டும் ஊபர் எடுத்து லூவ்ரா (Louvre) அருங்காட்சியகத்திற்கு சென்றோம். அருங்காட்சியகம் மூட ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது. அதனால் அவசரமாக டாவின்சி வரைந்த மோனா லிசாவை சென்று பார்த்தோம். பல பிரம்மாண்ட ஓவியங்கள் சூழ இருந்த அந்தக் காட்சி அறையில் 30 இன்ச் நீளமும் 21 இன்ச் அகலமும் கொண்ட மோனா லிசாவை பார்க்கும் போது, இதற்காகவா  இத்தனை அமர்க்களம் என்ற எண்ணம் வராமல் இல்லை.  ஆனாலும் அதனை சிறிய மோனா லிசா ஓவியத்தின் முன் நின்று புகைப்படம் எடுக்க நல்ல கூட்டம் இருந்தது. மோனா லிசா ஓவியத்தைச் சுற்றி தி வெட்டிங் ஃபீஸ்ட் (The Wedding Feast), லா பெல்லா நானி (La Bella Nani), பாரடைஸ் (Paradise) உள்ளிட்ட பல்வேறு புகழ் பெற்ற ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மோனா லிசா உள்ள காட்சி அறைக்கு செல்லும் வழியில் தி விங்கிட் விக்டரி ஆப் சோமத்ரேசு (The Winged Victory of Somathrace)  என்ற  தலையில்லாத  கிரேக்கக் கடவுளின் சிலையையும் பார்த்தோம். வரலாறு நமக்கு சொல்வதெல்லாம் எத்தனை நுட்பமானது.  அரசனோ, தேவதையோ, மேன்மை பொருந்திய கடவுளோ கால ஓட்டத்தில் எல்லாமும் எப்படிக் கரைந்து போகிறது. பஞ்ச பூதங்கள் பொருந்திய இவ்வுலகில் காலத்தையும், ஐம்பூதங்களையும் தவிர எல்லாமும் நிலையற்றது. பஞ்சபூதங்கள் உயிர்களாக உருவெடுத்து காலவெளியில் வாழ்ந்து கரைந்து போகிறது. மீண்டும் மீண்டும் உயிர்ப்பதும் பின் இறப்பதுமான இந்த சுழற்சி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதைத் தவிர வேறு எதுவுமே உண்மை இல்லை அல்லவா. காலத்தின் நீண்ட பக்கங்களில் நாம் எழுதுவதற்கு அன்பைத் தவிர வேறு உன்னதமானது  எதுவும் இல்லை. காலம் எப்போதும் ஒரு அன்பை விட்டுவிட்டு  வேறொரு வகை அன்பை தேடி அலையும் பயணியைப் போலவே எண்ணத்  தோன்றுகிறது. அவ்வாறான  அன்பு கிடைக்குமிடங்களில் இளைப்பாறி மீண்டும் பயணத்தை தொடர்கிறது என்றவாறு பலவித சிந்தனை ஓட்டங்கள். ஒரு தலையில்லாத கிரேக்க சிலையிடம் இருந்து இத்தனை சிந்தனைகளா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பெரும்பாலும் பெரிய பெரிய மன்னர்கள், சாம்ராஜ்யங்கள் எல்லாவற்றையும் அருங்காட்சியகத்தில் அல்லது கோவில்களில் காணும் போது எப்போதும்  தோன்றும் எண்ணக் குவியல்கள் தான் அப்போதும் வந்து போனது.





                                                லூவ்ர வெளித் தோற்றம் மேலே

லூவ்ர அருங்காட்சியகம் மிகவும் பெரியது ஆனால் ஒரு மணி நேரத்தில் பார்க்க முடிந்தது ஓரிரு இடங்கள் மட்டுமே. நீங்கள் கலா ரசிகர் என்னும் பட்சத்தில் 2 நாட்கள் எடுத்து ஒவ்வொரு அறையையும் பொறுமையாகப் பாருங்கள். ஓவியங்களை பார்த்து அதை நமது பாணியில் புரிந்து கொள்ளவும் நமது சிந்தனையில் இருத்தி அந்த ஓவியர் அதை வரைந்த காலத்தை புரிந்து கொள்ளவும், அந்த ஓவியர் அதை வரையும் போது என்ன மனநிலையில் இருந்திருப்பார் என்பதையும் எண்ணினால் அந்த ஓவியம் காலத்தைக் கடந்து நமது மனவெளியில் உறைந்து இருக்கும். இதைப் போலவே ஒவ்வொன்றையும் ரசித்து நுகரும் அளவு நேரமும், அப்படிப்பட்ட மனமும் வாய்த்தால் இந்த வாழ்க்கை இந்த பூமியிலேயே நிச்சயம் சொர்க்கமாக விளங்கும் என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.  

லூவ்ர அருங்காட்சியகம் பார்த்து முடிந்ததும் அதற்கு வெளியிலேயே ஒரு உணவகம் இருந்தது. அங்கே சாப்பிடும் போதே கொஞ்ச நேரம் போனை சார்ஜ் செய்து விட்டு அடுத்ததாக ஒரு வாடகை டாக்ஸி (ஊபர்) பிடித்து அருகில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க பாரிசின் அடையாளமாக விளங்கும் ஐஃபில்  டவர் சென்றோம். ஐஃபில் டவர், குஸ்தாவ் ஐஃபில் என்பவரால் கட்டப்பட்டது.  இந்த இரும்பு கோபுரம் 81 அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடத்தின் உயரம் கொண்டது. 3 நிலைகள் கொண்ட இந்தக் கோபுரத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் உணவகங்கள் மற்றும் பார்வையாளர்கள் சுற்றிலும் தெரியும் இயற்கை காட்சிகளை பார்க்கவும் வசதிகள் உள்ளது. மேலே இருக்கும் மூன்றாவது அடுக்கில், குஸ்தாவ் ஐஃபில் அவர்களின் வீடும், பார்வையாளர்கள் பாரிசைப் பறவைப் பார்வையாக பார்வையிடும் தளமும் உள்ளது. ஐரோப்பாவிலேயே மிக உயரமான பார்வையிடும் தளமாக இந்த மூன்றாவது நிலை விளங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு.

இருட்டிய பின்னர் இரவு பனிரெண்டு மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, அந்த ஒரு மணி நேரத்தின் முதல் ஐந்து நிமிடங்கள் மட்டும்,  ஐஃபில் டவர் பொன்னிறமாக ஒளிரும். கிட்டத்தட்ட 12,000 விளக்குகள் பொருத்தப்பட்ட  ஐஃபில் டவர் பொன்னிறமாக மின்னி ஒளி சிந்தும் காட்சியைக் காணக் காத்திருந்தோம்.  இதை படம் அல்லது காணொளியாக எடுக்கும் அளவுக்கு கூட எங்கள் ஒருவரின் போனிலும் சார்ஜ் இல்லை. இருந்த கொஞ்சம் சார்ஜில்  புகைப்படம் ஒன்றிரண்டு எடுத்து முடித்த பின்பு அனைவரின் போனும் சார்ஜ் இல்லாமல் அணைந்து விட்டது.

இப்போது எப்படி அறைக்கு திரும்புவது என்று தெரியவில்லை. ஏனெனில் போன் அணைந்து விடும் என்று தெரிந்து அட்ரசை மட்டும் குறித்து வைத்திருந்தோம். எனினும் செல்பேசி இருந்தால் மட்டுமே ஊபரை அழைக்க முடியும். ஆனால் நாங்கள் பேசும் ஆங்கிலம் கலந்த அந்த பிரெஞ்சு முகவரியை புரிந்து, எங்களை எங்கள் இடத்திற்கு அழைத்துச் செல்ல டாக்சி எதுவும் கிடைக்கவில்லை. அரை மணி நேரத்திற்கும் மேலாக சார்ஜ் போட முடியுமா என்று அலைந்து  திரிந்தோம். அப்புறம் கொஞ்ச நேரம் டாக்சி பிடிக்க அலைந்து திரிந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அலைச்சலுக்குப் பின் எப்படியோ ஒரு டாக்சி டிரைவர் இரு மடங்கு விலையில்  நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு எங்களை அழைத்துப் போவதாக ஒத்துக் கொண்டார். ஒரு வழியாக 1.5 மணி நேர போராட்டத்திற்குப் பின் நாங்கள் தங்கி இருந்த இடத்தை அடைந்தோம்.

ஒரு பெரிய நகரத்தில் நாம் தொலைந்து போக நமது செல்பேசி வேலை செய்யாமல் இருப்பதே போதுமானதாக இருக்கிறது என்பது எத்தனை பெரிய உண்மை என்பதை நினைத்துக் கொண்டே அறையை அடைய கதவை திறந்து உள்ளே சென்றோம். நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் ஒரு சிறிய வளாகத்தில் நான்காவது மாடியில் இருந்தது.  கிட்டத்தட்ட 5 முதல் 6 அபார்ட்மெண்ட் வரை இருக்கலாம் என்று எண்ணுகிறேன். அது ஈஸ்டர் வார இறுதி என்பதால் பெரும்பாலான அபார்ட்மெண்ட்டில் ஆட்கள் இல்லாததால்  எந்த அபார்ட்மெண்டிலும் விளக்குகள் பொருத்தப்படவில்லை. அன்றைய ஒரு இரவு மட்டுமே அங்கே தங்க வேண்டிய தேவை என்பதாலும் நாங்கள் அதைப் பெரியதாக எண்ணவில்லை. வளைவான மிகக் குறுகலான படிகளில் நடந்து மேலேறினால் ஒரு படுக்கை அறை, ஒரு சிறிய சமையல் அறை, அதை விட மிகச் சிறிய குளியலறை என்று தீப்பெட்டி அளவு அகலம் கொண்ட எங்கள் அபார்ட்மெண்டை அடையலாம். 

நாங்கள் படிகளில் மேலே ஏற அங்கிருந்த மின்தூக்கியை அழைக்க கணவர் பொத்தானை அழுத்தினார். புதிய ஒரு நகரத்தில், இரவு நேரத்தில், ஒரு ஆள் மட்டுமே செல்லக் கூடிய வகையில் இருந்த அந்த லிஃப்டை ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டு வாய் மூடவில்லை, அந்த லிப்ட் மெதுவாக கீழே வரத் தொடங்கியது. கிட்டத்தட்ட நான்காவது மாடியில் இருந்து மூன்றாவது மாடி வரை வந்த அந்த லிப்ட் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக நான்காவது மற்றும் மூன்றாவது மாடிக்கு இடையிலேயே நின்று விட்டது. அப்படி இசகு பிசகாக நின்று விட்டதால், அதில் இருந்து அபாய ஒலி வரத் தொடங்கியது. அபாய ஒலி நின்றுவிடும் என்று பார்த்தால் நிற்பது போலத் தெரியவில்லை. பலதும் முயற்சித்தும் அந்த ஒலி நிற்கவில்லை. அந்த கட்டடத்தில் யாரும் இல்லாததால் அதை எப்படி நிறுத்துவது என்பதையும்  யாரையும் கேட்க இயலவில்லை. எல்லோரும் படிகளில் வழியே மேலேறி எங்கள் அறைக்குச் சென்ற பின்னும் அந்த அபாய ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. குடும்பத்தினர் அனைவரும் ஒரு கட்டத்தில் ஒலியை மீறித்  தூங்கி விட, தூங்க முடியாமல் அன்றிரவு புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக அதிகாலை நேரத்தில் என்னையும் அறியாமல் உறங்கிப் போனேன். அன்று காலை எழுந்த பின்னும் அபாய ஒலியின் வீரியம் குறையாமல் அடித்துக் கொண்டே இருந்தது. அந்த ஒலிப் பின்னணியிலேயே அவசர அவசரமாக கிளம்பி அறையை விட்டு வெளியேறினோம். காலை 9 மணி அளவில் ஐஃபில் டவரை மேலேறிப் பார்க்கும் சுற்றுலாவிற்கு பதிவு செய்திருந்தோம். அதற்காக சென்று வரிசையில் காத்திருந்தோம். பசிக்குமே என்று அருகில் திறந்திருந்த ஒருஉணவகத்தில் அவசரமாக காபி மற்றும் கிரோயிசாண்ட்(Croissant) எனப்படும் வெண்ணையில் செய்யப்பட்ட ரொட்டியை வாங்கிப் பசியாறினோம்.  பாரிசில் நாங்கள் உண்டவரை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்த உணவு எதுவென்றால் இங்கு கிடைக்கும்  பிரட், கேக் வகைகள் (Pastry) மற்றும்  எங்கேயும் கிடைக்கும் கிரெப்(Crepe) எனப்படும் தோசை போன்ற  ஒரு வகை உணவு எனலாம். கிரெப்பின் உள்ளே பழங்கள்  அல்லது  பீனட்பட்டர் (நிலக்கடலை கூழ்)  அல்லது நட்டல்லா(Nutella) என்ற ஒரு வகை சாக்லேட் கூழ் போன்ற எதுவும் வைத்துக் கிடைக்கும்.  கிட்டத்தட்ட பாரிசு முழுவதும், ஏன் தள்ளுவண்டிக் கடைகளில் கூட கிடைக்கும் ஒரு உணவாக இந்தக் கிரெப் அமைந்தது.  இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் இஷ்டம் போல கிரெப் வாங்கி உண்டார்கள்.  உணவகத்தை பொருத்தவரையில்  அமெரிக்கா அளவிற்கு  வாடிக்கையாளர் சேவை  இருப்பதில்லை.  எனவே நீங்கள்  உணவகங்களில் பெரியதாக  சேவையை  எதிர்பார்க்க  வேண்டாம்.

நின்றோம் நின்றோம் நீண்ட நேரம் நின்றோம் என்று சொல்லும் அளவிற்கு கிட்டத்தட்ட 5 மணி நேர காத்திருப்பிற்கு பின் மேலே செல்லும் லிப்ட்டைப் பிடித்தோம்.  முதலில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இப்படிக் காத்திருந்து வாயிலை அடைந்த பிறகு இரண்டு அடுக்கு பாதுகாப்பு சோதனை உண்டு.  அதையும் கடந்த பிறகு  ஐபில் டவரின் மேலே செல்ல அதன் நான்கு கால்களிலும்  லிப்ட் வசதி உண்டு . ஆனால்  நாங்கள் சென்றபோது  இரண்டு  மின் தூக்கிகள்  வேலை செய்யவில்லை  எனவே  அனைவரையும்  இரண்டு மின் தூக்கிகள் வழியாகவே  முதல் தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.  இதனால்  கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அளவிற்கு  நிற்கும் நிலை ஏற்பட்டது.  கீழே  வாயிலைக் கடந்து பாதுகாப்பு சோதனைக்குப் பின்  கீழே  நிறைய உணவகங்கள் உண்டு  கூளிர்பானங்கள் தின்பண்டங்கள்  போன்றவை அங்கே விற்கப்படும். அதிக நேரம் வரிசையில் நின்றதனால்  பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.  வேறு வழியில்லாமல்  குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று  சில தின்பண்டங்கள் வாங்கி வர  கணவர் சென்றார்.  அப்படி  சாப்பிட்டு விட்டுத் திரும்பும் போது  பர்சை அங்கேயே  வைத்து விட்டு வந்து விட்டார். 

நல்லவேளை தூரத்திலிருந்து இதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். எனவே நான் சென்று அந்த  பர்சை  எடுத்து பத்திரப்  படுத்திவிட்டேன்.  ஏற்கனவே நிறைய  தொல்லைகளுடனும், அலைச்சல்களுடனும் சென்று கொண்டிருந்த இந்தப்  பயணம்  பர்சை தொலைத்திருந்தால்  இன்னும் என்ன ஆகி இருக்கும் என்று சொல்ல இயலாது. நல்லவேளை அவ்வாறு நடக்கவில்லை  என்பது  மனதுக்கு ஆறுதலாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து பர்சை காணோம் என்று அவர் பதட்டம் அடைய பர்சை திரும்ப கொடுத்துவிட்டு கவனமாக இருங்கள் என்று அறிவுறுத்தினேன். இப்படியாக ஒரு வழியாக  ஐஃபில் டவரின் முதலாவது தளத்தை அடைந்தோம்.  என்னதான் இளவேனில் காலம் என்றாலும் ஐஃபில் டவர் மேலே செல்லச் செல்ல குளிர் அதிகம்.  முன்பே இதை அறிந்து  நாங்கள் அதற்கு ஏற்ப உடைகள் அணிந்திருந்தோம். எனவே மேலே செல்பவர்கள் கண்டிப்பாக குளிர் தாங்கும் உடைகளை அணிவது சிறந்தது.  இல்லையென்றால்  அங்கே வீசும் குளிர் காற்றுக்கு  சிறிது நேரம் கூட அங்கு இருக்க முடியாது. முதலாவது தளத்திலிருந்து  பாரிசை  பார்த்துவிட்டு நிறைய புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்து விட்டு,  மேலே உள்ள இரண்டாவது தளத்திற்கு செல்லக் கூடிய மின் தூக்கியைப் பிடித்து இரண்டாவது தளத்திற்கு சென்று அங்குள்ள உணவகத்தில் உணவருந்தினோம். மின் தூக்கி முதலாவது மற்றும் இரண்டாவது தளத்திற்கு இடையே எப்போதும் சென்று கொண்டு இருக்கும். அதைப் பிடிப்பது அத்தனைக் கடினம் அல்ல. அதிக நேரமும் காத்திருக்க வேண்டாம். முதலாவது தளத்தில் கண்ணாடி பதித்த தரைகள் உண்டு அதில் நின்று கீழே பார்த்தால் மனிதர்கள் எறும்பு போல சிறிதாகத் தெரிந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.


ஒருவழியாக ஐபில் டவரின்  சுற்றுலா முடிந்து  கீழே இறங்கினோம். ஒரு உணவகத்தில்  துரிதமாக  உணவு உண்டு விட்டு  ஊபரைப்  பிடித்து  மீண்டும் நெதர்லாந்து  செல்லும்  இரயிலைப்  பிடிக்க  இரயில் நிலையத்தை அடைந்தோம்.  அந்த இரயில் நிலையத்திற்கு அருகிலேயே நினைவுப் பரிசுகள் விற்கும் கடைகள் நிறையஇருந்தது.  அதில்  பாரிசின் ஞாபகமாக,  ஒரு சில பொருட்கள் வாங்கிவிட்டு  இரயில் நிலையத்திற்கு வந்து  காத்திருந்தோம்.  இரயில் வந்து நின்றதும்,  பாதுகாப்பு சோதனை முடிந்து,  நாங்கள் பதிவு செய்திருந்த  கம்பார்ட்மெண்ட்டை  அடைந்தோம்.  அந்த கம்பார்ட்மென்ட்  கிட்டத்தட்ட இரயில் வண்டியின் இறுதியில் இருந்தது.  முதல் கம்பார்ட்மெண்டில் இருந்து,  நாங்கள் ஏற வேண்டிய கம்பார்ட்மெண்ட் வரை  செல்வதற்குள்,  மழையான மழை.  ஓரளவு நனைந்தே  பாரிசை விட்டுக்   கிளம்பினோம்.  அடுத்த நான்கு மணி நேரம்  ஈரமான அந்த உடைகளுடனே  பயணம் செய்ய நேர்ந்தது.  இப்படியாக பாரீஸ் அனுபவம் அதிக அலைச்சலாக  கொஞ்சம் நெருடலாகவே அமைந்தது.

அடுத்து வரும்  பயண அனுபவங்களாவது சிறப்பாக அமையுமா என்பதை  அடுத்த பதிவில் பார்க்கலாம்.

முந்தைய பகுதியை  வாசிக்க இங்கே சொடுக்குங்கள்.

வியாழன், மார்ச் 28, 2024

என்னைத் தொலைத்தேன் - கவிதை



 

உறவின் பெயரால் அடிமை செய்தலை விட

தோழமையின் எல்லைக் கோட்டில் நிற்றலே என் காதல் 


மழையாய் உன்னைத் தழுவுவதை விட 

காற்றாய் நெஞ்சில் நிறைவது தான் என் அன்பு  


உன்னைக் கூட்டில் இருத்தி சிறைச் செய்தலை விட 

உந்தன் சிறகாய் மாறி உயரச் செலுத்துவதே என் பிரியம் 


உன் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கும் விரல்களை விட 

உன் வெற்றிப் பாடலை தினம் உதிர்க்கும் 

வார்த்தைகளிலேயே என் நேசம்  


என்னில் ஒரு பாதி இல்லை நீ 

பூஜியத்தின் முன்னின்று 

மதிப்புச் சேர்க்கும் மந்திரம் நீ 


சோகச் சிரிப்பொன்றை உதிர்த்தாய்

உனக்கும் காதல் பிறந்திருந்தால் 

என்னைத் தொலைத்து நம்மைக் கண்டிருப்பாய் 

அடிமையாய் வாழ்வதும் 

மழையாய் வீழ்வதும் 

கூட்டில் அடைவதும் 

கண்ணீரில் கரைவதும் 

பூஜியத்தில் முழுமை காண்பதும்

நாமிருவர் சார்ந்த முடிவு 

தனித்தே முடிவெடுத்தல் காதலில்லை 

என் பிரியத்தின் அடர்த்தி 

உனக்குள்ளும் தோன்றும் வரை 

எதிர்காலத்தின் கரையில் காத்திருப்பேன்


கண்ணில் பெருகிய கண்ணீர் 

மெல்ல என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறது

வெள்ளி, மார்ச் 01, 2024

காலக் கண்ணி - கவிதை

Time


குறிப்பு: காலம் என்னும் நீண்டச் சங்கிலியில் நாம் ஒரு சிறிய கண்ணி என்ற எண்ணத்தில் எழுந்த கவிதை 


யாருமற்ற இருள் பொழுதில்
மெல்ல நடை பயில்கிறேன் 
மனதின் ஏக்கங்கள் 
தார்ச் சாலையைப் போல் நீள்கின்றன

எங்கும் புகும் காற்றைப் போல 
மனத்தின் சலனங்களை 
வானத்தின் மேல் வாரி இறைக்கிறேன்
உதிர்ந்த நட்சத்திரங்களைப் பொருக்கி
ஒவ்வொன்றாக ஞாபக ஓடையில் எறிகிறேன்
ஒவ்வொன்றும் ஏதோ ஒரு
கசப்பான அனுபவத்தை நினைவூட்டி
மனக்குளத்தில் அதிர்வலைகளை 
எழுப்பிச் செல்கிறது

அடர்ந்த கானகங்களை கடந்து விரைகிறேன் 
அதன் ஓசைகளும் அசைவுகளும்
மிரட்சித் தருவதாக இருந்தாலும்
அதன் கனவுகள் என்னுடன் ஒத்திருப்பதால் 
அவற்றுள் ஒன்றாகவே உணர்கிறேன் 
கூகைகளும் ஆந்தைகளும் கூவும்
ஓசைக் கேட்டும் மனம் கலங்கவில்லை 
மாறாக இருளில் மறையும் நிழலாய்
ஓசைக் காட்டில் சுயம் மீட்கின்றேன் 

வெளிச்சக் கதிர்களின் கிரணக் கைகள் 
மெல்ல என்னைத் தொடுகிறது
இருநாக்கு கொண்ட நாகமாய்
சுயம் களைந்து 
நகர முகம் அணிகிறேன்

போலியாய் சிரிக்கும் ஓநாய்களும்
மானுட உருவம் கொண்ட நரிகளும் 
உலவும் நகரக் காடு பரந்து கிடக்கிறது
இங்கே கனவுகளும் 
லட்சியங்களும் நுழைய அனுமதியில்லை 
சுதந்திரக் காற்றுக்கு சற்றுமிடமில்லை 
மனவிருப்பங்கள் தடைக்கு உட்பட்டவை 
இறக்கும் நாள்வரை வரிகட்டி
அரசாங்கம் முதல் இல்லாளன் வரை
எவருக்கும் தலையாட்டி வாழும் 
அடிமாட்டு வாழ்க்கை
வீதிதோறும் அதிகம் கிடைக்கிறது
கனவுகளை சேமிக்க
சுயத்தை பாதுகாக்க 
காதலிலும் சுதந்திரத்தை காக்க
எஞ்சிய நாட்களை சுயமரியாதையுடன் கழிக்க
வீதிகள் ஏதுமில்லை 
விதிகள் செய்யப்படவில்லை

மயானத்தை கடக்கிறேன்
காலடியில் சருகுகளாய் 
மிதிபடும் கனவுகள் கண்டு 
கண்ணீர்த் துளிர்த்தது
கனக்கும் துயரை 
நெஞ்சின் ஆழம்வரை 
செல்லும் காற்று 
வனமெங்கும் கொண்டு சேர்க்கிறது 
காலத்தால் அரியணை 
ஏற்றவியலாத் துயரை 
யாரும் கேட்டிராத ராகத்தில் 
காட்டு மூங்கில் மெலிதாய் 
இசைத்துக் கொண்டது 
என் சாயல் கொண்ட 
யுவதி ஒருத்தி
என் கனவுகளை 
வளையங்களாக்கி  
அணிந்து கொண்டாள் 

காலம் முட்கரங்களை 
முன்னகர்த்தி சலனமின்றிக்  
கடக்கிறது 
காலத்தின் தீராப் பக்கங்களில் 
கனவுக் கடத்தியாய் 
என் பணி நிறைவுற்று 
நகரத்தில் ஓர் அங்கமானேன் 

 


சனி, பிப்ரவரி 10, 2024

இயற்கையை கைவிடாதீர் !!




சொந்த நாட்டை காணச் சென்றேன் 
கார்ப்பரேட் உலகிலிருந்து
சற்றே விடைபெற்று 
வேலை இளமையைத் திருடி
கனவுகளை ஒத்தி வைக்கிறது 
முதுமைக்கான நோயினைச் சேர்க்கிறது 
சுயத்தை அழித்து
யாருடைய கனவிற்கோ 
உழைக்க வைக்கிறது 
அறிந்திருந்தும் கைவிடவியலாது
பொருளாதாரச் அடிமையாய் 
மண்புகழ் மாய்க்கும்  
மலினச் சலுகையாய்   
பெரு நிறுவனத்தின் சிறைக் கைதியாய்
நவீன உலகின் கொத்தடிமையாய் 

நிறமில்லா வானவில்லாய் 
தாய் மண் சிரித்தது
நெகிழிப் பைகள்
காலிக் குடுவைகள் புட்டிகள்
மக்காத குப்பைகள்
நிலத்தின் அவயம்
எங்கும் பூட்டப்பட்டிருந்தன 
நிலம் செரிக்காத மிச்சத்தை
நீரில் சேர்த்து
மக்கள் கவலையற்று இருந்தனர்

நல்லவேளையாய் விவசாய நிலங்கள்
ஆங்காங்கே பொலிவாய்த் தோன்றி 
குப்பை மலைகளை கண்டே 
சோர்வுற்ற கண்களுக்கு ஒளியூட்டின
நிலம் மனிதனுக்கு முதல் தாய்
மண்ணில் தோன்றி
மண்ணிலேயே முடியும் வாழ்வு
பிறப்பு முதல் இறப்பு வரை
நிலத்துடன் தொடரும் உறவு
வீழ்ச்சி கண்டிருப்பது
மனித மனதைச் சொல்கிறது
மனிதனின் முதல் உறவே
பட்டுப் போன பின்
என்ன மிச்சமுள்ளது
அக்கம் பக்கத்தினரோடு 
உறவைப் பேணாமல் போனதில்
ஆச்சரியம் இல்லை 
கோவில்களில் கூட்டம்
மதகுருமாரின் சாயல் கொண்ட 
சிலையைக் காண கூட்டம்
யானை வழித்தடங்களில் அமைந்த
ஆசிரமத்தில் மனித வெள்ளம்
செவ்வாடை உடுத்திய பக்தர்கள்
இருமுடி ஏந்திய பக்தர்கள்
அலையலையாய் அத்துணைக் கூட்டம்
ஆலயம் இறைவனின் வீடல்ல
மக்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள் 
ஆலயங்களில் உண்ட இடத்திலேயே 
போடப்படும் காலித் தட்டுகள் 
அருகிலேயே இருக்கும் குப்பை தொட்டிக்குள்
சேராத தண்ணீர்க் குவளைகள்
காலை இடறியதைவிட 
மனதை அதிகம் இடறியது
   
இன்னொரு மனிதனிடம் 
முயன்றே நேசம் கொள்ள வேண்டும்
ஆனால் இயற்கையுடனான நேசம் இயல்பானது
அதையும் உதறித் தள்ளும் மனிதக் குலம்
அழிவுப் பாதையில் வேகமாய் பயணிக்கிறது 
இயற்கையின் கோலத்தைக் காணச் சகியாமல்
கனத்த இதயத்துடன் திரும்பினேன்
குப்பை மலைகளைப் பார்த்துப் பார்த்து
மனமதையே  எதிர்ப்பார்க்க தொடங்கி விடுகிறது
இன்னும்.நாட்கள் போனால் 
அதுவே பழகி விடும் போல் தோன்றும் முன்பே
தாய்நாட்டில் இருந்து புறப்பட்டேன் 
அறிந்து தெளியுங்கள்  
இயற்கையை கைவிடும் மனிதர்களை
இறைவனும் கைவிடுவான்

வெள்ளி, ஜனவரி 19, 2024

தங்கத் தமிழன்


தனது 100-வது படத்தின் பெயரை உச்சரிக்கவே பல ஹீரோக்கள் யோசிப்பார்கள். ஏனெனில் அந்தப் படம் அப்படிப்பட்ட பயங்கரமானத் தோல்விப் படமாக அமைவது தான் தமிழ் சினிமா ஹீரோக்களின் தலையெழுத்தாக இருந்தது. 100-வது படம் வெற்றிப் படமாகவும் அமைந்து, அந்தப் படத்தின் பெயர், அடைமொழியாக நிஜப் பெயருடன் இணைந்து ஒருவரின் அடையாளமாக மாறும் அதிசயம் எல்லாம் ஒரு சிலருக்குத் தான் வாய்க்கும். அப்படிப்பட்ட அதிசயத்தை நிகழ்த்தியவர் நடிகர் விஜயகாந்த். 'கேப்டன்' என்ற தனிப்பெரும் அடையாளத்திற்குச் சொந்தக்காரர். "சாப்பிட்டீங்களா" என்பதைக் கேள்வியோடு மட்டும் நிறுத்தி விடாமல், இல்லை என்று பதில் வராத வண்ணம் தன்னை வந்து சந்திக்கும் அனைவருக்கும் உணவு வழங்கியவர். இப்போது விஜயகாந்த் பற்றி பல பேட்டிகளில் பல நடிகர்கள், பாடலாசிரியர்கள், டைரக்டர்கள் தாங்கள் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்தின் அலுவலகத்திற்கு சென்றால் கண்டிப்பாக உணவு கிடைக்கும் என்று கூறுவதைக் கேட்டு வருகிறோம். 

தனது ரசிகர் மன்றம் வாயிலாகவும், தனிப்பட்ட முறையிலும் இலவசத் திருமண உதவி, விஜயகாந்த் மருத்துவமனை வாயிலாக மருத்துவ உதவி, மகளிருக்கான உதவி எனப் பல உதவிகளைச் செய்துள்ளார். உதவி என்று யார் கேட்டாலும் "நான் இப்போது அதிக வேலைப்பளுவில் இருக்கிறேன், அப்பறம் பார்க்கலாம்" என்று ஒருபோதும் சொன்னதில்லை என்று அவரைப் பற்றி கமலஹாசன் சமீபத்தில் சொல்லி இருக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் நான் என்னுடைய கடமையைத் தான் செய்தேன் இதில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவு என்ன இருக்கிறது என்று விஜயகாந்த் எப்போதும் இதைப் பெரியதாக எண்ணியதில்லை.

தலைமை பண்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லில் காட்டாமல் செயலில் காட்டி விட்டுச் சென்றுள்ளார் கேப்டன் விஜயகாந்த். பிரச்சனைகளை நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லாமல் இன்றே அதைத் தீர்ப்பது என்ற முனைப்பு அவருடைய தனிப்பெருங் குணங்களில் ஒன்று. நடிகர் சங்கத் தலைவராக இருந்த போதும், அந்தப் பொறுப்பில் இல்லாத போதும், யாராவது அழைத்து, எனக்கு இந்தப் பிரச்சனை என்று சொன்னால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் ஒரு சுமூகமான முடிவினை எட்டாமல் ஓய மாட்டார் கேப்டன். "என்னுடைய மகள் மருத்துவராக இன்று இருப்பதற்கு விஜயகாந்த் தான் காரணம், அவர் மருத்துவர் ஆக முயற்சித்து தோல்வி அடைந்ததை தெரிந்து கொண்ட விஜயகாந்த் தானாகவே ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பேசி அவர் அந்த மருத்துவக் கல்லூரியில் சேர ஏற்பாடு செய்தார்" என்று இயக்குனர் கஸ்தூரிராஜா சமீபத்தில் அவரைப் பற்றிய இரங்கல் உரையில் தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.

ஒரு பொறுப்பை எடுத்து விட்டால் அதை செம்மையாக செய்து முடிப்பது இன்றியமையாதது. நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடித்து சாயங்காலம் நடிகர் சங்கத்திற்கு வந்து ஒரு தலைவர் என்றால் அனைவரையும் சந்திக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

எளிமை என்பதை வார்த்தையாக இல்லாமல் நிஜமாகவே அதைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். எந்தவொரு ஈகோவும் பார்க்காமல் பொது விஷயத்திற்காக யாரையும் எந்த நேரத்திலும் சந்தித்து பேசுவது, நான் பெரிய நடிகர், என்னைத்தான் எல்லாரும் வந்து பார்க்க வேண்டும் என்று எண்ணாமல் ஒருவர் உச்ச நடிகரோ, சாதாரண மனிதரோ எப்படியானவராக இருந்தாலும் ஈகோ இல்லாமல் அனைவரையும் சென்று சந்தித்தது அவருடைய சிறந்த குணத்தில் ஒன்று. அவருடைய 18 படங்களை இயக்கிய திரு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்கள் "விஜயகாந்த் அவர்கள் உச்ச நடிகராக வளர்ந்த பின்னும் நான் சென்று அவரைப் பார்த்ததே இல்லை. நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்து கொண்டு அவரே தான் என்னை வந்து பார்ப்பார்" என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பண்பு திரைத்துறையில் மிகவும் அரிதான ஒன்று.

கடைசி வரை தமிழ்ப் படங்கள் அல்லாமல் வேறு எந்த மொழிப் படத்திலும் எந்த காரணத்திற்காகவும் நடித்ததே இல்லை. கொள்கை என்பதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட கொள்கைப்பிடிப்புடன் இருந்ததெல்லாம் அதிசயமே.

திரையின் முன் மட்டுமே நடித்தவர். நிஜத்தில் நடிக்காமல் வெள்ளந்தியான மனிதராகவே வாழ்ந்தார். பத்திரிக்கைகள் அவரைப் பற்றிய எழுதியதையோ அல்லது சக கலைஞர்கள் அவரைப் பற்றி தேர்தல் நேரத்தில் பேசியதையோ எந்த நேரத்திலும் விமர்சித்ததும் இல்லை, தன்னிலை விளக்கம் அளித்ததும் இல்லை. "காந்த்" என்று பெயர் வைத்துக்கொண்டால் இவர் பெரிய நடிகரா என்று இவரை ஒதுக்கிய நடிகைகளை எல்லாம் தான் வளர்ந்து பெரிய நடிகரான பிறகு ஒதுக்காமல் அவர்களுடனும் இணைந்து நடித்தார்.

அவருடைய தலைமைப் பண்பிலேயே மிகவும் உயரியது அவருடைய மனத்திண்மை தான். கலைஞர், ஜெயலலிதா என்று இரு வேறு ஆளுமைகள் இருந்த போதும் துணிந்து அரசியலில் இறங்கி எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தது எல்லாம் அவருடைய மனவுறுதிக்கு சிறந்த எடுத்துக்காட்டன்றி வேறென்ன. நிஜ வாழ்விலும் களத்தில் இறங்கி அவர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பாங்கு பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவர்களே சொல்லியிருக்கிறார். எந்த ஊராக இருந்தாலும், என்ன பிரச்சனை வந்தாலும் சக நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு அளித்து அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்று திரும்பும் துணிவு கொண்ட நடிகர் அவர் ஒருவரே. திமுக, அதிமுக என்று இரண்டு கட்சிகள் மக்களுக்கு நல்லது செய்யுமாயின் என்னுடைய கட்சியை கலைத்துவிடத் தயார் என்று பகிரங்கமாக சொன்னவர். உண்மையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட ஒருவருக்கே அந்த எண்ணம் வரும்.

நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்க நடிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மலேஷியாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தாமல், கேப்டன் விஜயகாந்தே ஒரு திரைப்படத்தில் நடித்து அந்தப் பணத்தை கொண்டு கடனை அடைத்திருக்க முடியாதா என்ன. ஆனால் நடிகர்கள் அனைவரையும் இந்தப் பணியில் இணைந்து அவர்கள் அனைவரிடமும் நடிகர் சங்கம் என்ற குழு மனப்பான்மையை வளர்த்த பெருமை கேப்டன் அவர்களையே சாரும்.

150 படங்கள் வரை நடித்திருக்கிறார். முழு சம்பளம் வாங்கிய படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அவர் வீட்டில் தயாரிப்பாளர்கள் அளித்தும், இன்னும் வங்கியில் போடப்படாமல் வைத்திருக்கும் காசோலைகள் பலவுண்டு என்று திரைத்துறையில் பலர் தெரிவித்து இருக்கிறார்கள். அவர் தூக்கி விட்ட நடிகர்கள் பலருண்டு. யாரையும் போட்டியாக எண்ணாமல் அனைவரும் வரட்டும் என்று இன்று முன்னணியில் உள்ள பல நடிகர்களுக்கு உதவிய நல்ல மனிதர். ஐம்பதுக்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்களை இயக்குனராக்கி அழகு பார்த்தது, திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு படவாய்ப்பு அளித்தது, தன்னுடன் இருந்த அனைவரும் வாழ வேண்டும் என்று தன்னைச் சுற்றி இருந்த பலரையும் தயாரிப்பாளர்களாக்கி அழகு பார்த்தவர். வடிவுக்கரசி அவர்கள் "அன்னை என் தெய்வம்" என்ற திரைப்படத்தை தயாரித்த போது யாரைக் கதாநாயகனாகப்  போடலாம் என்று விஜயகாந்த் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, "இப்போது நடிகர் மோகன் அவர்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே அவரைப் போடுங்கள்" என்று பரிந்துரை செய்தார். நான் பெரிய ஹீரோ என்னை போடுங்கள் என்றோ, என்னிடமே வந்து யாரை ஹீரோவாக போடலாம் என்று கேட்கிறீர்களே என்றெல்லாம் அவர் கேட்கவே இல்லை. எத்தனை பரந்த மனம் கொண்டவர் என்பதற்காக இந்த சம்பவத்தை குறிப்பிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். 



மதுரையில் இருந்து வந்து மிகவும் கடினமாக உழைத்து பல உயரங்களைத் தொட்டவர். எம்.ஜி.ஆர் அவர்களின் தயாள குணத்தைக் கண்டு, வாழ்ந்தால்  இப்படிப்பட்ட கொடையுள்ளத்துடன் வாழ வேண்டும் என்று உறுதி கொண்டவர். ஒரு உயரிய சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டு அதற்கு நம்மை ஒப்புக் கொடுத்தால் அந்த சிந்தாந்தமே நம்மை உயர்வான நிலைக்கு இட்டுச் சென்று விடும் என்பதை விஜயகாந்த் அவருடைய வாழ்க்கையும் , அவருடைய இறப்புக்கு கூடிய கூட்டமே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. "கருப்பு எம்.ஜி.ஆர்" என்ற பட்டப்பெயருக்கு முழு தகுதி பெற்றவர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்

என்ற குறள் காட்டும் நெறியில் நின்று, வள்ளல் என்று மக்கள் போற்றும் ஒரு மாமனிதராக வாழ்ந்தவர். இன்றைய நவீன காலத்தில் இப்படிப்பட்ட மனிதரா என்று சொல்லும் அளவிற்கு அவருடைய சொல்லும் செயலும் என்றும் மாறுபடாமல் ஒன்றாகவே இருந்தது. "தப்பு பண்ணா மன்னிக்கணும், அது தான் பண்பு" என்று தன்னை விட்டுப் போன தன் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் கூட அவர் என்றும் குத்திக் காட்டியதில்லை.  இதற்கும் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களையும், தன்னுடன் இருபத்தைந்து, முப்பது வருடங்களளாக பயணித்தவர்களையும் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக அழகு பார்த்தவர். தான் வளர்த்தவர்கள் தன்னை உதறித் தள்ளி செல்கிறார்கள் என்ற கோபம் கூட இல்லாதவர். சில நேரங்களில் அவருடைய நேர்மையான கோபத்தை கூட அன்றைய காலத்தில் பத்திரிக்கைகள் எப்படி சித்தரித்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அதற்கு பிரயாசித்தமாகத் தான் இன்று சினிமாவில் ஏதோ ஒரு பணியில் இருப்பவரைக் கூட "விஜயகாந்த் எப்படிப்பட்ட நல்லவர் என்று சொல்லுங்களேன்" என்று   பத்திரிக்கைகளும் ,ஊடகங்களும் வலிந்து பேட்டி கண்டு ஒளிபரப்பி வருகின்றன. விஜயகாந்த் ஆட்சிக்கு வந்திருந்தால் இங்கே எல்லாமும் சரியாக நடந்திருக்கும் என்ற கோணமும் உண்டு.  ஆனால் வாழ்நாள் முழுவதும் அவரைச் சுற்றி இருந்த பலர் நம்மில் சிலர் தானே. ஒரு சின்ன உயர்விற்கே அகங்காரத்துடனும், சக மனிதனை மதிக்காத தன்மையுடனும், புகழ், பணம், அதிகார போதையில் அடுத்தவரை இம்சிக்கும் மனமும் கொண்ட மனிதர்கள் இருக்கும் வரை விஜயகாந்த் போன்ற நல்ல மனிதன் தலைவனாகி இருந்தாலும் தமிழகத்தின் தலையெழுத்து மாறுவதற்கு வழியில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

ஆனால் விஜயகாந்த் உண்மையிலேயே எல்லா விதமான  அச்சங்களையும்  கடந்தவர். சினிமாவில் காதல் காட்சிகளை விடவும், குடும்பக் காட்சிகளை விடவும், சண்டைக் காட்சிகளை மிகவும் விரும்புபவர் என்பார்கள். தன்னை நாடி வந்த மக்களுக்கு நல்லது செய்து எதையும் திரும்ப எதிர்பார்க்காதவர். தன்னை சுற்றி இருந்தவர்கள் உயர்த்திப் பார்த்தவர். துரோகம் செய்தவர்களை, தன்னை விட்டு விலகியவர்களை ஒரு போதும் குறை கூறாதவர். தன்னை பழித்தவர்களை என்றுமே அவர் பெரியதாகக் கருதியதே இல்லை. இதற்கு தனி துணிவு  வேண்டும். அத்தகைய துணிவும், நல்ல மனமும் கொண்ட ஒரு மனிதன் இன்று நம்மிடையே இல்லை என்ற துயரமே நமக்குப் பெரிய தண்டனை தான். அத்தகைய துணிவும், நல்லெண்ணமும் இந்த மண்ணில் தழைக்க வேண்டும். விஜயகாந்த் போல ஒரு நல்ல மனிதன் மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்று நமக்கு எழும் எண்ணமே அவருடைய செம்மாந்த வாழ்க்கைக்கு ஒரு சிறந்த சாட்சி.

போய் வாருங்கள் கேப்டன்!! வரலாறும், மண்ணும், இந்த மக்களும் என்றும்  உங்கள் பெயரை உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

வியாழன், ஜனவரி 18, 2024

உலகத் திருநாள் - கவிதை



மார்கழி கடிதாய் மறைந்து
தைமகள் பூத்தாள் மலர்ந்து
எழிலான கோலம் வரைந்து
ஏத்தி வரவேற்போம் விரைந்து
பழையன போக்கினால் போகி
உழவு பழமை உழைப்பு பழமை
பகிர்வது பழமை உயர்பண்புகள் பழமை
ஊக்கம் பழமை உயர்தமிழ் பழமை
கொள்வது பழசு கொடுமனம் பழசு
பகைப்பது பழசு பசிப்பிணி பழசு
வேற்றுமை பழசு வீண்பெருமை பழசு
பழையன விடுத்து பழமையை ஏற்போம்
பாரினில் தமிழ்க்குடி பெருமையைக் காப்போம்
நிலத்தில் விழும் நீர் நெல்லாய்
ஆவின் மடியில் தீம் பாலாய்
கார்வண்ணக் கரும்பில் பாகாய்
பலவாய்ப் பிரிந்தே தோன்றும்
இணைத்தால் புதுசுவைக் காட்டும்
பிறப்பிடம் எதுவென்றாலும்
உணர்வால் யாவரும் கேளிர்
சமத்துவம் உரத்தே பேசும்
தனிப்பெரும் நாளாம் பொங்கல்
தமிழர் திருநாள் அல்ல
உலகத் திருநாள் ஆகும்
கழனி செழிக்க உழைக்கும்
காளைக்கும் நன்றி சொன்னோம்
மாட்டுப் பொங்கல் கண்டோம்
மாசில்லா அன்பைத் தந்தோம்
உற்றோர் உறவினர் மூத்தோர்
இணைந்தால் காணும் பொங்கல்
அன்பால் இணைந்த இந்நாள்
வீரம் வளர்க்கும் நன்னாள்
வள்ளுவம் காட்டும் வாழ்வியல்
உள்ளுவோம் என்பதற்கு ஓர்நாள்
கள்ளுடைத் தீமைக் களைந்து
கடைத்தேறி பண்பட்டு உயர்வோம்
வள்ளுவர் அறத்தினை கொள்வோம்
வான்வரை நீள்புகழ் கொள்வோம்
மாரியும் கதிரும் இணைந்தால்
காடும் கழனியும் உயரும்
இயற்கை அன்னையைப் போற்றி
பொங்கலோ பொங்கல் என்போம்!

வியாழன், நவம்பர் 23, 2023

அருவி ஒரு பக்கக் கதைப் போட்டி




அருவி இலையுதிர் இதழ் சென்ற மாதம் வெளியானது. இது வரை ஓராண்டு கடந்து அருவியுடன் பயணித்து வருகிறேன். ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு சவால்கள்.குறிப்பாக, கொரோனா நோய் தொற்று காலத்தில் அருவி இதழ் வெளிவராத சூழல். ஆனால் நோய் தோற்று முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின் வந்த எங்கள் குழு அத்தனை காலம் முடங்கிக்  கிடந்த பேரவையின் அருவி இதழை மீண்டும் கொணர்ந்து பேரவையின் செய்திகளை தமிழ்ச் சங்கங்கள் பற்றிய செய்திகளை, இலக்கிய கட்டுரைகளை, அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் விருந்தாக தொடர்ந்து கொடுத்து வருகிறோம்.






இந்த பயணத்தின் ஒரு மைல்கல்லாக அருவி குறுங்கதைப் போட்டி ஒன்றினை அறிவித்து நடத்தி வருகிறது. இந்த போட்டியின் விதிகளை மேலே இணைத்துள்ள சுற்றோலையில் காணலாம். சுற்றோலையில் உள்ள QR கோட் வழியே கதையினை பதியலாம். சிறப்பான பணப் பரிசுகளும் காத்து இருக்கின்றன. போட்டி வட அமெரிக்காவில் உள்ள எழுத்தாளர்களுக்கு மட்டும். (யுஎஸ்ஏ, கனடா) .போட்டியில்  கலந்து கொண்டு வெற்றி பெற அனைவரையும் அழைக்கின்றேன்.


புதன், நவம்பர் 22, 2023

பட்டாம்பூச்சி வாழ்க்கை - கவிதை



என்னிடம் காசில்லா நாட்களில் 
காலியான பேருந்துகள் மட்டுமே 
நிறுத்தத்திற்கு வருகின்றது
கூட்டத்தில் தொலையும் 
வாய்ப்பினைத் தராமல் 

நேர்வழியைத் தவிர்த்து 
விரைவுப் பாதையில் 
செல்ல நேரும் போதெல்லாம் 
எவர் காலிலும் படாதமுட்கள் 
என் காலில் தைக்கிறது 

எப்படியேனும் அடுத்தவருக்கு
வெற்றிகரமாய் முடிந்து விடும்
காரியங்களில் ஒன்றிரண்டு கூட 
எத்தனை முயற்சி செய்தாலும்
ஒரு போதும் நிறைவேறுவதில்லை எனக்கு

இளைப்பாறல் இல்லா
நெடிய பயணங்கள் 
தொடர்த் தோல்விகள்
விழலாகும் முயற்சிகள்
நெகிழ்வற்ற வாழ்வில்
மூச்சு முட்டும் வரை சவால்கள்
வாழும் தகுதி இருப்பதை 
நொடி தோறும் மெய்ப்பித்தல் 
தீராதக் களைப்பைத் தருகிறது 

பிறப்பு முதல் இறப்பு வரை
விரும்பினாலும் விரும்பவிட்டாலும் 
பலவித அனுபவங்களில் தோய்த்து
அடிமையைப் போல இழுத்துச் செல்கிறது 

மலரில் அமரும் பட்டாம்பூச்சியாய் 
காற்றை அளவளாவும் இறகாய்
இருளில் உதிர்ந்த சருகாய் 
வாழ்வைக் கடத்தல் அசாத்தியமாகிறது
கைவராத வாழ்வின் மீதான
எதிர்பார்ப்பு தவறும் போதெல்லாம்
பிறரை எச்சரிக்கவென
இக்கவிதையை மட்டுமாவது
விட்டுச் செல்கிறேன்
அதை என்றாவது 
யாரேனும் வாசித்து
ஆறுதல் பெற 
கருணையோடு அனுமதிக்கூடும் 
இந்த வாழ்வு 


ஞாயிறு, அக்டோபர் 08, 2023

மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 90வது பிறந்த நாள் கொண்டாட்டம் இணைய வழியில் சென்ற வாரம் நடந்தது. அதற்காக நான் எழுதிய கவிதை கீழே. அய்யா அவர்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்.






இளந்தென்றல் தழுவாத

இளவேனில் காலப் பகலாய்

இளமஞ்சள் வெய்யோனின் 

இன்முகங் காணா இரவாய்

இருவிழி இடைநின்ற முள்ளாய்

இமைப் பொழுதும் ஆறாத ரணமாய்

இளைக்கும் கறைப்பட்டு கலங்கும்

ஈரோட்டு இளங்கவியின் கவிகேளா நாளும்


கன்னலும் கனி சிந்தும் தேனும்

கனியமுதும் தெவிட்டாத பாலும்

குன்றும் நின்தமிழின் முன் குறையும்

மாற்றுப் பொன்னல்லோ 

வளையாத நின் எழுதுகோலும்


பல்லாயிரம் பொருண்மையில் கவிதீட்டி

பாரோர் வாழ நல்வழி காட்டி

அன்பிலா நெஞ்சுக்கும் அருள் கூட்டி

அணியணியாய் தமிழுக்கு அழகூட்டி

சென்ரியு, லிமரிக்கூவென

பல் வகைமை தந்தாய்

கவிஞருள் மேருவாய்

பலர் நெஞ்சில் நின்றாய்


தமிழன்பர் அகவையோ தொண்ணூறு

தமிழும்நீ வாழும்கவிதைநீ

உனக்கு மூப்பேது

சாகித்ய விருது 

உன்கை சேர்ந்தது அக்காலம்

உமது பெயரில் விருதுகள்

பெறுவது இக்காலம்


சென்னிமலையில் பிறந்தாய்

செந்தமிழின் மகவாய்

சின்னத்திரையில் ஒளிர்ந்தாய்

சீர்மிகு கவியாய் மிளிர்ந்தாய்

சமத்துவம் மலர உழைத்தாய்

சகத்தினை மாற்றி அமைத்தாய்

விருதுக்கு புகழ் சேர்த்த மாமணியே

பாவேந்தர் பாசறையில் மலர்ந்திட்ட ஒளிச்சுடரே


அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு

ஆழ்ந்த வாசிப்பு, தேர்ந்த உச்சரிப்பு

பரந்த நுண்ணறிவு

மேன்மையில் பணிவு

அருங்குணங்கள் பல கொண்டாய்

அவனியில் ஆன்ற புகழ் கண்டாய்


வள்ளுவனைப் பார்த்ததில்லை

வான்புகழ் கம்பனைக் கண்டதில்லை

பாரதியை அறிந்ததில்லை

பாரதிதாசனுடன் பழகியதில்லை

உன் அகம் கண்ட பின்னாளில்

இக்குறைகள் எழுவதில்லை


வாழிய வாழிய இன்னும் பல்லாண்டு

வளர்க வளர்க சீர்மிகு நின் தமிழ்த் தொண்டு

பொன்னான நின் அகவை நூறுக்கும்

பொலிவான என் வாழ்த்துக் கவி ஒலிக்கும்  



மௌனம் களைவோம் - கவிதை


கறுப்பின மனிதருக்கோர் சிறுமை

வெள்ளை அறிக்கை 

வீட்டின் கதவடைந்தாலும் 

நம்பிக்கை கொள்வதில்லை

நாளத்தில் குருதி தகிக்கவில்லை 


வெள்ளைப் பக்கங்களில்

கருமை பூசிய சொற்கள்

உண்மையை பேசின நாளும் 

தோட்டாக்கள் பேனாக்களை 

வஞ்சகமாய் வதம் செய்து 

பத்திரிக்கை தருமத்தை மாய்த்த போதும் 

நெஞ்சம் கலங்கவில்லை

கண்ணீர் துளிர்க்கவில்லை 


கலவர பூமியில்

இளமங்கையை மாய்த்த பேரை 

திலகமிட்டு மாலைச் சூட்டி 

வீரனென பாரினில் ஏத்தும் 

மடமை கண்டே நொந்து 

நீதியின் நீள்துயில் கலையவில்லை

பேதமெனும் நெருஞ்சியை பொசுக்கவில்லை 


வாய் பேசாக் குரங்கு

கண்களை மூடிய குரங்கு

காதுகளைப் பொத்திய குரங்கு 

மூன்று பொம்மைகள் எதற்கென 

ஒரே பொம்மையாய்ச் செய்தோம் 

அநீதிகண்டும் கேட்டும் வாயடைத்து 

சமூக ஊடகத்தில் தொலைந்து 

சகதியில் வீழ்ந்த மனிதம் 

சூழ்ந்த காரிருள் விலகவில்லை 

சமத்துவ உலகம் மலரவில்லை 


அநீதி தனக்கே நிகழும் வரை 

எதிர்ப்புக் குரல் ஒலிப்பதில்லை

உதவிக் கரம் நீளுவதில்லை 

துயில் கொள்வோரை எழுப்பலாம் 

நடிப்போரை எந்நாளும் எழுப்பவியலாது 

அகழ்வாரைத் தாங்கும் நிலமென்றாலும்

நெருப்புமிழும் எரிமலைகள் 

அடியினில் கனன்று கொண்டிருக்கும்

புவியிடம் பாடம் படிப்போம் 

மௌனம் சம்மதமல்ல 

புதுவெள்ளம் கரைக்குள் நிறைவதல்ல 

அச்சமெனும் முள்ளில் சிக்கி

அடிமையாய்க் கோழையாய் 

முகமின்றி வாழ்வது தொலைத்து 

ரௌத்திரம் பழகுவோம்

வீழ்ந்தாலும் ஆங்கொருவர் 

வாழ்வதற்கென்றே மாற்றுவோம்

கள்ளிக் காட்டில் மறைத்தாலும் 

காடழிக்கும் தீப்பொறியாய்த் தோன்றுவோம் 

உப்புக்கடல் சேர்ந்தாலும் 

ஒற்றைத் தேன்துளியாய் ஆகுவோம்!!



வெள்ளி, ஆகஸ்ட் 11, 2023

கவியும் இயற்கையும் - கவிதை

 


வெண்மேகம் திரட்டி 

செந்தேனில் தோய்த்து 

இளமஞ்சள் கதிரால் வாட்டி 

இயற்கை இட்ட தேனப்பமோ?

வானமகள் உடுத்திக் களைந்த  

வண்ணச் சேலையோ?

நீல வயல்களில் 

தங்கக் கிரணங்களை இறக்கி 

இளைப்பாறிய பின் அணியும் 

வெய்யோனின் மோன வித்தையா?

அறியேன் யான் 

என் பணி  

கால நதிக்கரையில் அமர்ந்து 

இயற்கை பேரெழில் மைத் தொட்டு 

கவிதை வரைவது மட்டுமே 

இயற்கை மட்டும் 

மற்றுமோர் கவிதையாய்  மாற 

புதிய வண்ணங்களைச்  

சிந்தித்துக் கொண்டிருக்கிறது  






புதன், ஜூலை 19, 2023

கதை கேட்கலாம் கதை பேசலாம்

 


சென்ற வார இறுதியில் எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி திரு பவா செல்லதுரை மற்றும் திருமிகு கே.வி. ஷைலஜா பங்குபெற்ற இலக்கிய நிகழ்வு நடைபெற்றது. சார்லட் தமிழ்ச் சங்கம் மற்றும் அதில் ஒரு அங்கமாகிய சார்லட் இலக்கிய வட்டம் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் இருவரும் பங்கேற்று சிறப்பித்தனர். அவர்கள் இருவரின் உரைகளும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களை கட்டிப் போட்டிருந்தது. பவா அவர்களின் எதிர் வரும் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினோம். நிகழ்ச்சியில் இருந்து சில புகைப்படங்கள் கீழே. வலையொளியில் நேரலையில் வந்த இணைப்பும் இங்கே உள்ளது.





இலக்கிய வாசிப்பு/புத்தக வாசிப்பு என்பது நுட்பமான ஒரு இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட காலப்(Gallup) ஆய்வின் படி அமெரிக்கர்கள் ஆண்டுக்கு சராசரியாக 12.6 புத்தகங்களை வாசிக்கிறார்கள். இது 2001 முதல் 2016 வரை இருந்ததை விட 2 முதல் 3 புத்தகங்கள் வரை குறைவான எண்ணிக்கை ஆகும்.




கதைகள் கேட்டு வளர்ந்த குழந்தைகள் கூட இன்று சமூக ஊடங்களில் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தேடிக் கேட்க/பார்க்க முடியும் என்ற நிலையில், வாசிப்பு என்பது தேய்ந்து "செல்வத்தில் செல்வம் செவிச் செல்வம்" என்ற அளவிலேயே நின்று விட்டதோ என்று தோன்றுகிறது. கதை சொல்லிகள் இலக்கிய உலகின் துரித உணவு பரிமாறுபவர்கள் எனலாம். கதைகளைப் படித்து அவர்கள் விரும்பும் பாத்திரங்களை அவர்களுக்கு எட்டிய கருத்துக்களை நமக்கு அறியத் தருகிறார்கள். அறியாத எழுத்தாளர்களை நமக்கு அறிமுகம் செய்கிறார்கள், புதிய கோணத்தில் ஒன்றை நமக்கு அறியத் தருகிறார்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனோடு கூடவே நடந்து ரகசிய நிலவறைக்கு செல்லும் தருணத்தை நீங்கள் மட்டுமே வாசித்து உணர முடியும், வேள்பாரியில் நீலன் கூடவே பறம்பு மலையில் நடக்கும் சுகத்தை நீங்கள் மட்டுமே கற்பனை செய்ய முடியும். வாசிப்பு அனுபவத்தை பகிரலாம், ஆனால் வாசிப்பையே பிறரிடம் விட்டுவிட்டு சென்று கொண்டிருக்கிறோமோ என்ற கேள்வி எழுகிறது. மதுரையில் புதிய நூலகம் திறக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சி. ஆனால் நூலகம் என்பது இருட்டிய பின் யாருமே செல்லாத இடமாக மாறக் கூடாது. வாசிப்பை சுவாசிப்போம் என்பதை விட வாசிப்பைக் காப்போம் என்பதே இன்றைய தேவையாகி இருக்கிறது.