குறிப்பு: ஓவியம் முன்பு நான் வரைந்தது. இந்த சம்பவத்திற்கு பொருத்தமாக இருந்ததால் இதையே முகப்புப் படமாக்கி விட்டேன்.
பக்கத்து வீட்டு மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. பெரும்பாலும் கீச் கீச் என்னும் பறவைகளின் ஒலியைத் தவிர கூடு இருக்கிறது என்பதற்கு வேறு எதுவும் பெரிய அடையாளம் இருந்ததில்லை. சென்ற வாரத்தில் ஒரு நாள் மாலை வேளையில் பக்கத்து வீட்டுப் பையன் என் மகனிடம், மரத்தில் இருந்த கூட்டில் இருந்து குருவிக் குஞ்சு ஒன்று தவறி கீழே விழுந்திருக்கிறது என்று சொல்லி அந்தப் பறவையை காட்டி இருக்கிறான். மரச் சருகுகள் மீது அமர்ந்திருந்த குட்டிக் குருவி கண்களை மூடியவாறே இருந்தது. சற்றே தத்தித் தாவவும் செய்தது. அப்படி தாவித் தாவி கூட்டை விட்டு வெளியே விழுந்திருக்கலாம். குருவிக்கு என்ன உணவு கொடுப்பது என்று யோசித்து, ரொட்டித் துண்டினை நீரில் நனைத்து கொடுக்கலாம் என்று சிறுவர்கள் அதை முதலில் முயற்சி செய்துள்ளார்கள். குருவி ரொட்டித் துண்டினை ஓரிரு முறை கண்ணைத் திறக்காமலேயே வாயை அகல விரித்து சாப்பிட்டுள்ளது. அதற்குப் பிறகு என்ன செய்வது என்று சிறியவர்களுக்குத் தெரியவில்லை. தண்ணீர் கொடுக்க வேண்டுமா அல்லது வேறு உணவு கொடுக்க வேண்டுமா, என்ன செய்ய வேண்டும் என்று ஏகக் குழப்பம். குருவிக் குஞ்சு வேறு கிரீச் கிரீச் என்று அடிக்கடி ஒலி எழுப்பியதால் அதற்குப் பசிக்கிறதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்றும் தெரியாததால் இப்போது என்ன செய்வது என்று கேட்க என்னை அழைத்தார்கள்.
குருவியைக் கூட்டில் சேர்ப்பித்துவிடுங்கள். அதற்கு நம்முடைய உணவு எதுவும் கொடுக்கக்கூடாது என்று கூகுள் அறிவுறுத்துகிறது என்றேன். சின்ன பறவை என்பதால் தாய்ப் பறவை கொடுக்கும் உணவினை மட்டுமே உண்ணக் கூடும் என்றேன்.
இதைக் கேட்ட மகன், அம்மா நீயும் வந்து உதவேன் என்றான். மரம் பக்கத்து வீட்டீனுடையது. அந்த வீட்டில் உள்ளவர்களின் உதவி இருந்தால் தான் இதைச் செய்ய முடியும் என்றேன். இப்படியான பேச்சினிடையே மாலை நேரம் மெல்லக் கடந்து சற்றே இருட்டிவிட்டது. கூடு வேறு மரத்தின் உச்சியில் இருந்தது. மரத்தின் மேல் ஏறினாலொழிய கூட்டை எட்ட முடியாது. பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது நண்பனின் பெற்றோரிடம் இப்போதே குருவியை கூட்டில் சேர்க்க வேண்டும், நேரம் சென்றால் இன்னும் இருட்டாகி விடும் அப்பறம் மேலே ஏறி கூட்டைக் கண்டுபிடிப்பது கடினம், அதனால் இப்போதே வாருங்கள் என்று சிறுவர்கள் இருவரும் பேசி இருக்கிறான். அவர்களும் சரி உதவுகிறோம் என்று டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு வர, மகன் ஒரு இரும்பு ஏணியை வீட்டிலிருந்து இருந்து கொண்டு வந்தான்.
என்ன செய்வது, எப்படிக் கூட்டை அடைவது என்று முடிவு செய்வதற்குள்ளாகவே நன்றாக இருட்டு விட்டது. மரத்தினை சுற்றி சிறிய சுவர் ஒன்று எழுப்பப்பட்டதால் ஏணியை முழுமையாக மரத்தில் சாத்தி வைக்க முடியவில்லை. ஏணியை மரத்தின் அடிக் கிளையில் ஒருவாறு சாத்தி வைத்து பின்பு அடிக்கிளையில் இருந்து மரத்தின் உச்சியில் இருந்த கூடு வரை கிளைகளைப் பற்றியவாரே என் மகனின் நண்பனை ஏற்றி விடலாம் என்று முடிவெடுத்து அவனை மரத்தில் ஏற்றினோம் .அவனை அடிக்கிளை வரை ஏற்றி, பின்பு அதற்கும் மேலிருந்த கிளையில் ஏற்றி விட்ட பின்பும் அவனுக்கு உயரத்தில் இருந்த கூடு எட்டவில்லை. எனவே அவனை இறங்கச் சொல்லி விட்டு, அவனுடைய தாயார் கிளைகள் சிராய்ப்பதை பொருட்படுத்தாமல் மரத்தில் ஏறி மிகவும் கஷ்டப்பட்டு அந்த குட்டிப் பறவையை மரத்தில் இருந்த கூட்டில் சேர்ப்பித்தார். நாங்கள் வற்புறுத்தி அழைக்கவில்லை என்றால் இன்று அந்தச் சிறிய பறவை கூட்டில் பத்திரமாக சென்று சேர்ந்திருக்காது, ஏதேனும் விலங்கிற்கு இந்தப் பறவை இன்று இரவு உணவாகி இருக்கும் என்றார்கள் என் மகனும் அவன் நண்பனும். உண்மைதான், குழந்தைகளின் உலகில் தான் எந்தப் பாகுபாடின்றி எல்லாரும் காப்பாற்றப்படுகிறார்கள்.
இயற்கை சீரழிவினால் நேபாளில் இயற்கை பேரிடர் நிகழும் போதும், கார்ப்பரெட் அமெரிக்காவின் பண வேட்கைக்கு எண்ணற்ற மனிதர்கள் வேலையிழப்பு போன்ற வாழ்வியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகும் போதும், உலகெங்கிலும் போரும், இன அழிப்புகளும் தொடரும் போதும், வாழ்வாதாரத்திற்காக பலர் அகதிகளாக வேறொரு நாட்டின் கதவை தட்டி இடம் கேட்கும் போது கருணையின்றி விரட்டப்படும் போதும், அதிகார வர்க்கத்தைச் சார்ந்த, பெரியவர்கள் என்று மார் தட்டிக் கொள்ளும் மனிதர்கள் இயற்கை மீதும், சக மனிதர்கள் மீதும் வரைமுறையற்ற போரை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்தப் போரில் அதிகார வர்க்கம் வெற்றி பெற்றால், அது இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமான தோல்வி என்பதே நிதர்சனம்.
வெகு நாட்களாக இசை கோர்த்து வெளியிட வேண்டும் என்று நினைத்த ஒரு பாடலை இன்று தான் முடிக்க நேர்ந்தது. தற்போது இந்தப் பாடலை வலையொளியில் கேட்கலாம். தீயின் இதம் சொல்லவா என்று தொடங்கும் இந்தப் பாடல் ஒரு காதல் பாடல். பாடலின் பல வரிகள் உயிரோட்டமாகவும், மனதிற்கு நெருக்கமாகவும் வந்திருக்கிறது. பாடலுக்கான இணைப்பு கீழே.
கலையும் மேகத்தில் காவியம் எழுதினேன்
காகிதக் கப்பலில் காலங்கள் கடக்கிறேன்
கனவிலே தழுவும் கவிதையும் நீதானே
கண்ணிமை நடுவினில் உன்முகம் நிறுத்தினேன்
காதலில் தொலைந்து உன்மத்தம்
கொள்கிறேன்
காலத்தில் நமது பெயரும் நிலைக்காதோ
என்று உணர்வுகளை வெளிக்காட்டும் அற்புதமான எனக்குப் பிடித்தமான வரிகள் இப்பாடலில் அமைந்துள்ளது. பாடல் எழுதுவது எளிதாக இருந்தாலும் அதற்குத் தேவையான காட்சியமைப்பு செய்வதற்கு நேரம் அதிகம் தேவைப்படுகிறது இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. எனினும் இசையோடு காட்சியமைப்பும் இயல்பாக வந்துள்ளது மகிழ்ச்சியளித்தது.
பாட்டுக்கு மெட்டமைப்பது என்பது AI தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின் சாத்தியமே. வரிகளைக் கூட AI தொழில்நுட்பத்தின் வழி எழுதி விடலாம் என்றாலும் எழுதிய வரிகள் மனதிற்கு நெருக்கமாக இருப்பதில்லை. நெருக்கமான வரிகள் மனதின் உணர்வுகளில் இருந்து பிறக்கின்றன. எனவே வரிகளில் உணர்ச்சியும், மொழி லாவகமும், அடுத்தவரை சிந்திக்க வைக்கும் கருத்தும் கொண்ட பாடலை மனிதன் ஒருவனால் மட்டுமே வெற்றிகரமாய்ப் படைக்க முடியும் என்ற அளவில் கருவியின் முன் மனித அனுபவம் இன்னமும் விஞ்சியே நிற்கிறது. சென்ற வருடம் நான் இசை கோர்த்த அனுபவத்தை விட இந்த வருடம் நான் இசை கோர்த்த இந்தப் பாடல் மிகவும் அருமையாக அமைந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் தொழில்நுட்பத்தின் பெரும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. பாடலை இப்போது என்னுடைய வலையொளியில் கேட்கலாம்.
பாடல் வரிகளை இயற்கைக்கும், இயற்கையைப் போல கொடுக்கும் இயல்புள்ள பெண்ணுக்கும் பொருந்தும் வகையில் அமைத்திருக்கிறேன்.
சென்ற வார இறுதியில் அதாவது ஜூலை 17 முதல் ஜூலை 19, 2026 வரை தெலுங்கானா அமெரிக்கப் பேரவையின்(TTA) மாநாடு சார்லட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்டோர் 3 நாட்கள் நடந்த இந்த விழாவிற்கு வந்திருந்தார்கள் என்பது அதிகாரப்பூர்வமான புள்ளி விவரம். விழா நடத்த கிட்டத்தட்ட 5 மில்லியன் வெள்ளிகள் செலவு செய்யப்பட்டது என்பது கேள்வி.
முன்னதாக சூலை 18 சனிக்கிழமை அன்று காலை பல்வேறு இந்திய மாநிலங்களின் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரோமேர் பியர்டன் பூங்காவில் தொடங்கி விழா நடக்கும் வளாகம் வரை நடந்த அணிவகுப்பில் நானும் தமிழ்நாடு சார்பாக இணைந்திருந்தேன். கையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்ட பதாகையும், தமிழ்நாட்டின் சிறப்பினை குறிக்கும் வகையில் கோயில் மாதிரியும், அமெரிக்க மற்றும் இந்திய கொடிகளும் எடுத்துக் கொண்டு பறை அடித்தவாறு நடந்து சென்றோம். விழா வளாகத்தை நாங்கள் அடைந்ததும் நாதஸ்வர இசையுடன் வரவேற்றார்கள்.
விழா நடந்த வளாகத்தின் முகப்பில் வரவேற்பு வளைவு, தெலுங்கு மக்களின் வாழ்க்கை முறையைக் காட்டும் குடில்கள், சினிமா சம்பந்தப்பட்ட குடில்கள், டீக்கடை, கிராம கோவில்கள் என்று விலாவரியாக குடில் அமைத்து காட்சிப்படுத்தி இருந்தார்கள். மாநாட்டில் முக்கியப் பிரமுகர்களுக்கான தனியான சொகுசு இருக்கையுடன் கூடிய அமரும் இடங்கள், உணவுக் கூடங்கள், நிஜ மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூச்சாடிகள் கொண்ட உணவு மேஜைகள், வளாகத்தின் உள்ளேயே உணவு விற்கும் கடைகள், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வணிக வளாகங்கள் என்று அனைத்திலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் உழைப்பு தெரிந்தது. விருந்தினர்களைப் பதிவு செய்ய சிவப்பு மற்றும் பச்சை சமிக்ஞை விளக்கு பொருத்திய விருந்தினர் சேவை மையம் மாநாட்டு வளாகத்திலேயே அமைத்திருந்தது வெகு சிறப்பு. ஏனைய மாநாடுகளில் நுழைவு அட்டை வாங்க மாநாட்டு வளாகத்திற்கும், தங்கும் இடத்திற்கும் இடையே பல முறை அலைந்தது மனதில் நிழலாடியது. பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான விடயங்களை மற்றவர்களைப் பார்த்துப் பின்பற்றும் நாம், வாடிக்கையாளர் சேவையைக் குறித்து அக்கறைக் கொள்வதில்லை என்ற என் மனக்குறைக்கு இது சற்றே ஆறுதலளித்தது.
ஏனைய மாநாடுகளில் பார்க்க முடியாத அளவு தாய்நாட்டின் மீதான பாடல்கள், அதைச் சார்ந்த நடனங்கள், இறை பக்திப் பாடல்கள், இறை பக்தி சார்ந்த நடனங்கள் எனப் பல நிகழ்ச்சிகள் முதன்மை மாநாட்டு மேடையிலேயே அரங்கேறியது. அது மட்டுமல்ல யாருக்கு எந்த அரசியல் கட்சி பிடிக்குமோ அந்தக் கூட்டத்தில் நீங்களே இணைந்து கொள்ளுங்கள் என்று எல்லா பெரிய கட்சிகளுக்குமான இணை அமர்வுகளை அவர்களே ஏற்பாடு செய்திருந்தார்கள். இது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
மாநாட்டில் பங்கேற்கவிருந்த பிரபலங்கள் குறித்த விவரங்களை அவர்களின் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் வந்திருந்தார்கள் என்பதும் தனிச் சிறப்பு மட்டுமல்ல ஏனைய மாநாடுகளில் காணாத ஒன்று. இயக்குநர் திரு. ராம்கோபால் வர்மா, திரு. சந்தீப் ரெட்டி வங்கா, நடிகை திருமிகு மீனாக்ஷி சௌத்ரி, நடிகர் திரு நவீன் போலிஷெட்டி, அமைச்சர் திருமிகு சீதாக்கா சின்னத்திரை நட்சத்திரங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், திரை நடனக் கலைஞர்கள் போன்ற பலரையும் மேடையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஹைதரபாத் புகழ் த்ரீயரி இசைக்குழு (Threeory Band) மற்றும் ஆஸ்கர் புகழ் திரு எம்.எம். கீரவாணி அவர்களின் இன்னிசைக் கச்சேரியைப் பார்க்கச் சென்ற போது சில பிரபலங்களின் பேச்சைக் கேட்கவும், மேடையில் அவர்களின் நடனத்தை காணவும் முடிந்தது. வழக்கமாக எல்லா மாநாடுகளிலும் இருப்பது போன்று பிரபலங்களை நடனம் ஆடச் சொல்வது, அவர்கள் நடிக்க இருக்கும் அடுத்தத் திரைப்படத்தை பற்றிய கேள்விகள், நீங்களும் மேடையில் இருக்கும் இன்னொரு பிரபலமும் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பு உண்டா, நடிக்கும் வாய்ப்பு உண்டா என்பது போன்ற வழமையான கேள்விகள் தான் என்றாலும் பிரபலங்கள் அனைவரும் அதை மகிழ்ச்சியுடனேயே எதிர் கொண்டார்கள் என்பது சிறப்பு. ராம்கோபால் வர்மா "நான் ஆக்ஷன் டைரக்டர்ங்க என்னை நடனம் ஆடச் சொல்லி கேட்கறிங்களே" என்று அங்கலாயிக்க, இல்லை ஒரே ஒரு ஸ்டெப் போடுங்க என்று அவரை பாங்கரா ஆட வைத்தது நகைச்சுவையாகவே இருந்தது.
த்ரீயரி இசைக்குழுவின் கச்சேரிக்கு நடனம் அடியவர்களின் எண்ணிக்கையை விட கீரவாணி அவர்களின் பாடல்களுக்கு ஆடியவர்கள் மிகக் குறைவே. நாமெல்லாம் இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இன்னிசைத் தென்றல் தேவா என்று ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக பிறந்திருக்கிறோம் என்று தோன்றியது. பலதரப்பட்ட மக்கள் வரக்கூடிய இன்னிசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப நிகழ்ச்சியை கொடுப்பது ஒரு கலை. அது வெகு சிலருக்கே கைவருகிறது.
மாநாட்டுக்கு பெரிய தொகை அளித்த நன்கொடையாளர்களை மேடையில் அழைத்து கௌரவித்தார்கள். இதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 30 மணித்துளிகளுக்கு மேல் ஆனது. மாநாட்டு வளாகம் எங்கும் பல இடங்களில் டிஜிட்டல் திரை அமைத்து இந்தக் கொடையாளர்களின் புகைப்படங்களை சுழற்சி முறையில் காட்டிக் கொண்டிருந்ததும் சிறப்பு.
சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும் நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட 1.5 மணி நேரம் முதல் 2 மணி நேரம் தாமதமாகச் சென்று கொண்டிருந்தது. அநேகமாக எல்லா மாநாடுகளுக்கு இத்தகைய தாமதம் தான் ஒரே ஒற்றுமை என்று எண்ண வைத்தது. இசைக்குழு நிகழ்வுகள் இரவு 11:30 மணிக்கு மேல் தான் தொடங்கியது. மாநாட்டுக்கு சென்று வந்தது குறித்து நண்பர் ஒருவரிடம் சொன்னேன். "ஆமாம், நிறைய சொதப்பல், மோசமாக நடத்தப்பட்ட மாநாடு" என்று அங்கலாய்த்தார். பல மில்லியன் வெள்ளிகள் செலவழித்து நாம் என்னதான் நட்சத்திரங்களுக்கிடையே உலவி முற்பட்டாலும், நம்மை பூமியில் இருத்த கண்டிப்பாக யாரேனும் வருவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 39ஆவது தமிழ்விழாவில் முனைவர் கு. உமாதேவி அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மனவெளிப் பயணம் என்ற பொதுத் தலைப்பின் கீழ்விழிப்பு, முகமூடி, புலம்பெயர்வு, செயற்கை நுண்ணறிவும் மானுட மெய்யறிவும் (AI vs. OI), அமைதி, தனிமையுணர்வு போன்ற துணைத்தலைப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. முகமூடி என்ற துணைத் தலைப்பில் என்னுடைய கவிதையை வழங்கினேன். கவியரங்கத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்கள்.
பேரவையின் 39ஆவது தமிழ் விழா நியூஜெர்சி மாநிலத்தில் 2026 ஜூலை 2,3,4, தேதிகளில் நடைபெற்றது. பேரவையின் இலக்கியக் குழு மேற்றிசை வலசை என்ற நூலுக்காக கட்டுரை ஒன்று வரையச் சொல்லி கேட்டிருந்தார்கள். "காலம் தீர்ப்பு எழுதட்டும்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று புலம்பெயர் இலக்கியம் குறித்து எழுதி அனுப்பியிருந்தேன். இந்த நூலை இயக்குnaர் திரு. அம்ஷன் குமார் வெளியிட எழுத்தாளர் திரு. சாம்ராஜ், எழுத்தாளர் திருமிகு தமிழ்நதி, எழுத்தாளர் திருமிகு சரவணகார்த்திகேயன் மற்றும் கவிஞர் பெருந்தேவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அந்தக் கட்டுரை இப்போது உங்கள் பார்வைக்காக.
இலக்கியம் என்பது இலக்கை இயம்புவது. நல்ல இலக்கியம் மொழியை நிகழும் காலத்திற்கு ஏற்ப, உண்மைக்கு மிக நெருக்கமாக, ஆவணப்படுத்துகிறது. புலம்பெயர் இலக்கியம் என்ற வரையறை எந்த இடத்தில் தொடங்கியது என்பது தெரியவில்லை.
எங்கே சூரியனுக்கு
உதயமும் அஸ்தமனமும்
இல்லையோ
எங்கே
மேலே வேரும்
கீழே கிளைகளுமுள்ள
புராதன மரம்
நிழல் பரப்புகிறதோ
எங்கே
'நான்' எனும் முடிச்சு
அவிழ்ந்து போகிறதோ
அது தான் என் ஊர்
என்ற கவிக்கோ அப்துல் இரகுமானின் கவிதை வரிகளில் உள்ள யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கருத்தியலில் அதிக பிடிப்பு உண்டு. எனவே இடம் பெயர்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் இலக்கியம் இதுவென வரையறுக்க முடியாது. ஒரு எழுத்தாளனின் வேர்கள் எங்கே தொடங்கியதோ அந்த நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தவிர்த்து அந்த எழுத்தாளனால் நல்ல இலக்கியம் படைக்கவே முடியாது. எனவே புலம்பெயர் நிலத்தில் அடிக்கும் இலக்கிய வெயிலில் கூட தமிழ் நிலத்தின் சூட்டை உங்களால் உணர முடியும்.
மனிதர்கள் அனைவருமே பூமிப்பந்தின் மீது மிதக்கும் ஏதோ ஒரு நிலத்திலிருந்து வேறொரு நிலத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கள் தான். ஆப்பிரிக்க இனத்தில் பிறந்து அமெரிக்க மண்ணில் வாழ்ந்த புலிட்சர் விருது பெற்ற கவிஞர் குவெண்டலின் ப்ரூக்ஸ், கவிஞர் மாயா ஏஞ்சலோ போன்றோர் ஆப்பிரிக்க மக்களின் உரிமை, சமூகநீதி, கறுப்பின பெண்களின் முன்னேற்றம் சார்ந்த படைப்புகளைத் தந்துள்ளனர். காலித் ஹூசேய்னி என்பவர் ஆப்கானிஸ்தானில் பிறந்து அமெரிக்க மண்ணிற்கு புலம்பெயர்ந்து, 'தி கையிட் ரன்னர்' என்ற நாவலை எழுதி உலகப் புகழ்பெற்றார். இதுவும் ஆப்கானிஸ்த மண்ணில் வாழும் ஒரு சிறுவனின் கதையாகும். அது போலவே எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்கள் ஈழத்தில் இருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து தமிழ் இலக்கிய உலகில் அவருடைய எழுத்துக்களின் வழி புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறே ஒருவரது இலக்கிய வெளி என்பது அவரது வேர்களுக்கு வெகு அருகிலேயே இருக்கும் ஒன்றாகும்.
உலகில் சமநிலை தவறி அநீதி நிகழும் போதெல்லாம் மனித உணர்வுகள் தூண்டப்பட்டு அங்கு இலக்கியம் பிறப்பதற்கான ஒரு களம் உருவாகிறது. அமெரிக்காவிலும் தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் உண்டு. ஆனால் ஒரு இலக்கிய களம் என்பதற்கு போர், இழப்பு போன்ற காரணிகளை விட இலக்கியவாதிகளை ஊக்குவித்து அவர்களை வளர்த்தெடுக்கும் சமூக அடுக்கு மிக முக்கியத் தேவையாகும். தமிழகத்தில் நிலவும் இலக்கியச் சூழல், தொடர் இலக்கிய உரையாடல், பலருடைய படைப்புகளை உடனுக்குடன் வாசிக்கும் வாய்ப்பு, வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் வசதி, இலக்கிய சொற்பொழுவுகளில் நேரடியாக பங்கேற்கும் வசதி, எழுத்தாளர்களுடன் அவர்களுடைய படைப்புகள் குறித்து நேரடியாக விவாதிக்கும் வாய்ப்பு, இலக்கியவாதிகளுக்கான வழிகாட்டுதல் போன்றவை அயல் மண்ணில் கிடைப்பது அரிதினும் அரிது. எனவே இலக்கிய படைப்புகள் வெகுவாக பின்தங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் இலக்கியவாதிகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் நல்கும் நல்ல வழிகாட்டிகளும் அயல்மண்ணில் இல்லை.
பெரும்பாலான அயலக தமிழ் அமைப்புகள் இலக்கிய இதழ்களை வெளியிடுகின்றன. அது மட்டுமல்லாமல் வடஅமெரிக்காவில் இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சங்கங்களில் வாசகர் வட்டங்கள், நூல் திறனாய்வு செயற்பாடுகள் போன்றவற்றையும் செம்மையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தமிழ் இலக்கிய உலகோடு வாசகர்களுக்கு உள்ள இணைப்பை அறுபடாமல் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பை நல்கினாலும் வாசகர்களை எழுத்தாளர்களாக மாற்றும் அளவு இன்னும் வலிமை பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால், சார்லட் நகரில் முதல் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தினேன். அந்த முயற்சியின் அடுத்த படிநிலையாக தமிழ் நூல்களைச் சார்லட் பெருநகரத்தை உள்ளடக்கிய மெக்கலன்பர்க் மாவட்ட நூலகங்களில் வைக்க பெரும் முயற்சி எடுத்து அதையும் செயல்படுத்தினேன். சார்லட் தமிழ்ப் பள்ளியில் பயிலும் உயர்நிலை மாணவர்களுக்கு தமிழ் கதைப் புத்தங்கங்கள் எழுதப் பயிற்சி அளித்து அவர்கள் எழுதிய நூல்களையும் எங்கள் ஊர் நூலகங்களில் இடம் பெறச் செய்துள்ளேன். என்னுடைய இந்த முயற்சியானது இலக்கியம் என்னும் மாபெரும் கடலில் மூழ்கி ஒரு சிறிய முத்தை எடுத்ததற்கு சமமானது என்பதை உணராமல் இல்லை. இவ்வாறான எனது பயணத்தில் இலக்கிய உலகோடு வாசர்களுக்கு இருந்த அறிமுகத்தை மட்டுமே என்னால் தக்க வைக்க முடிந்தது.
இங்கு வசிக்கும் எழுத்தாளர்களின் இன்னொரு பெரும் தடை மனம் சார்ந்தது. அதாவது தாங்கள் வாழும் மண்ணைக் குறித்து எழுதாமல் தாங்கள் பிரிந்த மண்ணையும் அது சார்ந்த இலக்கியத்தையும் படைக்க முயல்கிறார்கள். தாய் மண்ணில் இருந்து பல மைல்கள் கடந்து வாழும் போது நமது இலக்கிய பார்வை அவ்வளவு வீரியமானதாக இருப்பதில்லை. இது கண்ணாடியை அதே அறைக்குள் வைக்காமல், வேறு அறைக்குள் வைத்துவிட்டு, வெறும் சுவற்றை பார்த்து ஒப்பனை செய்வதற்கு சமமாகும். எவ்வளவு முயன்றாலும் ஒப்பனை சிறப்பாக அமையாது. அயலக மண்ணில் வசிக்கும் தமிழர்கள் தாங்கள் வாழும் நிலப்பகுதிகளில் உள்ள மக்களோடு இணக்கமான போக்கை கடைப்பிடித்து வாழ்ந்தாலும் பல்வேறு மொழி, இன பேதங்கள் காரணமாக அந்த மாந்தர்களுடன் நெருக்கமான உறவுப் பாலத்தை ஏற்படுத்திக் கொள்வது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இதையும் தாண்டி அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழில் வெளிவரும் பல்வேறு வலைப்பூக்கள், மின்னிதழ்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்பு நூல்கள் ஆகியவற்றில் வடஅமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் பெருமளவில் எழுதியே வருகிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக இலக்கியப் பணி ஆற்றுவதற்கு தாங்கள் வாழும் நிலத்தில் உள்ள மாந்தர்களின் கதைகளை, போராட்டங்களை எடுத்து இயம்புவதே, ஒரு எழுத்தாளருக்கு அடுத்தக் கட்ட வளர்ச்சியை, நகர்வை அளிக்க வல்லது.
புலம்பெயர் நிலத்தில் அயலக தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் புகழ்மிக்க விருதுகளோ அல்லது பொருளாதாரத் தன்னிறைவை அளிக்கும் பரிசுத் தொகை கொண்ட விருதுகளோ இல்லை. வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ் பீட விருது, கனடா இயல் விருது போன்றவை செயல்பட்டாலும் அந்த விருதுகளைப் பெற்றவர்கள் பெரும்பான்மை தமிழகத்தில் இருந்து வருபவர்களே. எனவே புலம்பெயர் வாழ்வில் ஒருவர் சந்திக்கும் சவால்கள், பின்னடைவுகள், சோதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்த, அதிலிருந்து கதைகளும், கவிதைகளும் படைக்கத் தேவையான களம் என்பது இல்லை. அங்கீகாரம் பெறவும், வாழ்வதற்குத் தேவையான பொருள் வளத்தைப் பெறவும் ஆங்கிலத்தில் எழுதுவதே சிறந்த வழியாக இருக்கிறது. பெரும்பான்மையான புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு தங்களது பதிப்புகளை வாசித்து பின்னூட்டம் தரும் ஒரு சில வாசகர்களைக் கூடப் பெறுவதில்லை என்பதும் அவர்கள் பதிப்பிக்கும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி ஊக்குவிக்கும் அளவு இலக்கிய ஆர்வலர்களும் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே புலம்பெயர் படைப்புகள் காலத்தை வெல்லும் இலக்கியமாக இல்லாமல் காலத்தோடு மறையும் எழுத்தாகவே நின்று விடுகிறது.
பெருகி வரும் சமூக ஊடங்கங்களின் தாக்கமும் இலக்கியப் பரப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நிமிட குறுங்காணொளி ஒன்றைப் பார்ப்பதில் உள்ள ஆர்வம் சில மணி நேரம் செலவு செய்து ஒரு புத்தகம் வாசிப்பதில் இல்லை. இந்தத் தாக்கம் வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில் அதிகம் உணரப்படுகிறது. காட்சி ஊடகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவு பரந்த வாசகப் பரப்பை கொண்ட படைப்புகளை யாரும் இப்போதெல்லாம் படைப்பதில்லை. ஹாரி பாட்டர் போன்ற உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்ட நூல்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது சமூக ஊடகத்திற்கு முற்பட்ட காலம் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
வடஅமெரிக்காவில் பெரும்பாலும் பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்த முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை தமிழர்களே அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இந்தப் புதிய நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் தேவையான போராட்டத்திலேயே கழிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் தமிழ் மொழியை இரண்டாம் பாடமாக படித்த தலைமுறை ஆகும். இவர்களின் பேச்சும், சிந்தனையும் முதல் மொழியான ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளது. இந்தத் தலைமுறை ஆங்கிலத்தில் பெரிய தாக்கம் கொண்ட நூல்களை படைக்கலாம் என்றாலும், இவர்களுக்கு தாய் மொழியில் இலக்கியம் படைக்கும் அளவு மொழியறிவு இல்லை. திருக்குறளைத் தாண்டிய எந்த தமிழ் இலக்கியத்தையும் அறியாதவர்களே இந்தத் தலைமுறையினர். திருக்குறள் என்பது ஒரு நீதி நூல் மட்டுமே, பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உபதேசிக்க விரும்புகிறவர்களுக்கு அது ஒரு சுரங்கம், ஆனால் அது இலக்கியம் ஆகாது என்ற எழுத்தாளர் க.நா. சுப்பிரமணியம் அவர்களின் கூற்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சிறந்த இலக்கியங்களை, புதினங்களை, கவிதைகளைப் படிக்காத முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையிடமிருந்து காலத்தை வெல்லும் தமிழ் எழுத்துக்கள் பிறக்கப்போவதில்லை. அப்படி இருந்தும் சிலர் தன்னிச்சையாக தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொண்டு படைப்புக்களை படைத்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் படைப்புகள் தற்கால இலக்கியத்தை விட சில மடங்கு பின் தங்கியுள்ளது என்பதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். "தாழ்ப்பாள் புலவர்கள் தள்ளிப்போகட்டும்" என்ற தலைப்பில், நாம் இருக்கும் நாடு என்ற நூலில் அமைந்த கவிதை ஒன்றில் மகாகவி ஈரோடு தமிழன்பன் பின்வருமாறு கூறுகிறார்.
காலம்
தீர்ப்பு எழுதட்டும்
கவிஞனே! நீ
கவி எழுது
மேலே சொன்னக் கூற்று கவிதைக்கு மட்டுமல்ல, கவிதைத் தாண்டிய எல்லா இலக்கிய செயல்பாடுகளுக்கும் பொருந்தும். புலம்பெயர் வாழ்வில் இலக்கியப் பணி என்பது ஓடும் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்துவது போன்ற எளிதான பணி அல்ல. முதலில் ஒரு வாகனத்தை தேடிக் கண்டிபிடிக்க வேண்டும், பின்னர் அதை இயக்கத் தேவையான மனிதனைக் கண்டுபிடித்து அவனுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்குப் பிறகே வாகனத்தை இயக்கும் வேலையைச் செய்ய முடியும். இப்படியான ஆயத்தங்களுக்கு உட்பட்ட இலக்கிய பணியில், புலம்பெயர் எழுத்தாளர்கள் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. கூட்டுப் புழுக்களுக்கு வானத்தின் பரப்பளவு தெரியும் என்றாலும், சிறகுகள் வலிமை பெறும் வரை காத்திருப்பதைப் போல, புலம்பெயர் எழுத்துக்களும் வலிமைப் பெற்று ஒரு நாள் காலவெளியில் சிறகடித்து பறக்கும். அந்த நாள், நாம் வாழும் காலத்திலேயே அமைந்தால் அதை விட உவப்பானது வேறோன்றும் இல்லை.
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய விருது, பத்ம விருது, தேசிய விருது, பல்வேறு திரைத்துறை சார்ந்த விருதுகள் என்று அவர் கடந்து வந்த நெடிய பாதையின் ஒரு மைல்கல்லாக இப்போது ஞானபீட விருதினைப் பெற்றுள்ளார். விருது பெற அவர் தனிப்பட்ட விதத்தில் முயற்சி செய்தார். அதிகார மையத்தின் பல்வேறு நபர்களுடன் இணக்கமாக இருக்கிறார் என்ற செய்திகளை முந்தைய விருதுகளின் போதே கேள்விப்பட்டோம். இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் அதே விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இன்றைய கால கட்டத்தில் விருதுகள், அங்கீகாரம் என்பதெல்லாம் ஒரு விதமான சமூக உடன்படிக்கை என்று கொள்ளலாம். அதாவது நீ இதைச் செய்தால் நான் உனக்கு இதைச் செய்வேன் என்பதோ அல்லது உன்னுடைய அரசியல் அல்லது சமூக நிலைப்பாட்டில் உன்னுடன் நிற்கிறேன் என்பதோ அல்லது அதிகார மையங்களின் உச்சத்தில் உள்ளவர்களுடன் ஒருவனாக இருப்பதற்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும், எனவே இந்த விருதின் மூலம் அத்தகைய இடத்திற்கு என்னை உயர்த்திக் கொள்கிறேன் என்பதோ தான் இந்த எழுதப்படாத உடன்படிக்கைகள். அப்படியான ஒரு விஷயத்தை நிகழ்த்திக் காட்டுவதற்குக் கூட தனித்திறன் வேண்டும்.
உதாரணமாக ஒரு அலுவலகத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு வேலை செய்யும் ஒரு நபருக்கு அவருடைய தகுதியைத் தாண்டி, அவருடைய மேலதிகாரிகளுடன் அவர் கொள்ளும் இணக்கமான போக்கு, சுயவிளம்பரம் செய்து அதன்வழி ஆதாயம் அடையும் போக்கு ஆகிய பல்வேறு காரணங்களுக்காக பதவி உயர்வு, பரிசுகள் ஆகியன வழங்கப்படுகின்றன. இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வதில்லை. ஏனென்றால், அப்படிச் செய்வது அதிகார மையத்திடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும். ஊருடன் ஒட்டி வாழ்வது அல்லது கொஞ்சம் நீக்கு போக்கு தெரிந்த நபராக வாழ்வது என்பது இன்றைய சூழலில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று. தனிப்பட்ட விதத்தில் நாணல் போல வாழ்ந்து விட்டு, பிறரை விமர்சனம் செய்வது முறையன்று. தமிழ் மொழியின் ஆகச் சிறந்த படைப்பாளிகள், திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலருக்கு எந்த விருதும் வழங்கப்பட்டதில்லை. உண்மையிலேயே எதையாவது கேள்விக்கு உட்படுத்த வேண்டுமென்றால் திரு. கக்கன், திரு.காமராஜ், திரு. நாகேஷ், திருமிகு மனோரமா, திரு. சிவாஜி கணேசன், திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற பலருக்கு ஏன் பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளோ அல்லது பத்ம விருதுகளே வழங்கப்படவில்லை என்பதைத் தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். நாளையே வைரமுத்து அவர்கள் பாரத ரத்னா விருது பெறலாம். அப்போதும் நாம் கண்ணாடி மாளிகைக்குள் நின்று அவர் மேல் விமர்சனக் கல்லெறிய வேண்டாம். தமிழின் நெடிய இலக்கிய வரலாற்றில் மதிக்கப்படாத, விருதுகளால் அலங்கரிக்கப்படாத, மறக்கப்பட்ட படைப்பாளிகள் தான் மிக அதிகம். வைரமுத்து அவர்கள் அந்தப் படைப்பாளிகளின் பிரதிநிதியாக இத்தகைய விருதினைப் பெற்றுள்ளார் என்பதாகக் கூட அவருடைய இந்த வெற்றியைப் பார்க்கலாம். எனினும் பல கவிதைத் தொகுப்புகள், பல்லாயிரம் சினிமாப் பாடல்கள் என்று அவருடைய தனிப்பட்ட தகுதிகளே இந்த விருதுக்கு போதுமானதாக இருக்கிறது. தமிழில் ஆழ்ந்த புலமை, தேர்ந்த சொல் நயம், கவிதை மொழி என்று அவர் போற்றத்தக்க சாதனையாளர் தான். எனினும் அவர் மேல் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், இந்த விருதுக்காக அவரை மனம் திறந்து பாராட்டும் ஒரு மனநிலையைத் தரவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது.
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன்மாலைப் பொழுது...
வானம் அளவு இல்லாவிட்டாலும், சில நிமிட நேரம் தோன்றும் வானவில்லாக மகிழ்விக்கும் கவிஞர் வைரமுத்து என்ற தனி நபரின் வெற்றிக்காக அவரை வாழ்த்தலாம்.
சமீபத்தில் நான் வாசித்த அவருடைய மகா கவிதை நூல் குறித்த என்னுடைய விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.
கவிஞர் கண்ணதாசன் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து பாடல்களையும் ஒப்பிட்டு பேசிய என்னுடைய உரைக்கான இணைப்பும் இங்கே உள்ளது. (2:13இல் எனது உரை தொடங்குகிறது)
இந்தப் பாடல் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் நசிந்த மக்களை உயர்த்தும் ஒரு தலைவன் தோன்றி, ஒரு நொடி நேரத்தில் தன் மக்களை, முன்னேறிய சமூகமாக மாற்றும் காட்சி நம் கண்முன்னே விரிகிறது. ஒரு நல்ல தலைவன் உருவாவது ஒரு சமூகத்தின் பெரிய சாதனையாகும். அதனால்தான் அந்தத் தலைவன் வளர்ந்து வலிமை பெறும் வரை அவனை நன்முறையில் காத்து, அவனுக்கு நல்ல ஒழுக்கத்தையும், சிறந்த மாண்புகளையும் கற்பித்து, அவனை ஒரு ஆதர்ச நாயகனாக உருவாக்கும் பணியில் ஒரு சமுதாயமே இணைந்து பங்காற்றியது.
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு - குறள் 384
அறநெறிகளிலிருந்து தவறாமல், மற்றவர்களால் தனது மக்களுக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் தடுத்து, வீரத்திலிருந்து வழுவாமல் இருப்பவனே பெருமைக்குரிய அரசன்/தலைவன் என்று சொல்கிறார் திருவள்ளுவர்.
ஆனால் சமூகத்தின் இன்றைய தலைவர்களைப் பற்றி எண்ணினால் அது அச்சம் தருவதாக மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் இன்றைய தலைவர்கள் சமுதாயத்தால் அன்றி தனிப்பட்ட விருப்பத்தினால் உருவானவர்கள். தன்னார்வ அமைப்புகளின் தலைவராக வருபவர்கள் பெரும்பாலும் அந்த அமைப்பின் நோக்கத்திற்கும், மாண்பிற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லாத நபர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தலைவராக இருக்கும் போது அந்த அமைப்பின் வழி எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டத்தையோ அல்லது தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டத்தையோ செயல்படுத்துவது இல்லை. தன்னுடைய இடத்தை எப்படி உறுதி செய்வது, அடுத்தவர்களை எப்படி வர விடாமல் செய்வது, அடுத்தவர்களின் பெயரை எப்படிக் கெடுப்பது என்று யோசிப்பதிலும் அதைச் செயல்படுத்துவதில் மட்டுமே நேரத்தை செலவழிக்கிறார்கள்.
இதுவே பணமும் அதிகாரமும் புழங்கும் அரசியல் களம் என்றால், அந்தத் தலைவர், மேற்கூறிய தீய வழக்கங்களை கைக்கொள்வதோடு, தனி மனித ஒழுக்கமில்லாமல், போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டு, மக்களைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல், வறட்டுச் சிந்தாந்தங்ளையும், நாகரீக வளர்ச்சிக்கு சற்றும் ஒவ்வாத கருத்துக்களையும் உடைய மனிதராக, மக்களைப் பிளவு படுத்தும் சாதீய, மத, இன பேத உணர்வுகளை தூண்டி தன்னை மட்டுமே வளர்த்துக் கொள்பவராக இருக்கிறார்.
தன்னைத் தாக்காத ஒரு நாட்டுக்கு எதிராகப் போர் செய்து அந்த நாட்டைப் பிடிப்பது, அந்த நாட்டில் பலரைக் கொன்று குவித்து ஆயுதம் விற்போருக்கு எப்போதும் ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பது, அங்கே போரால் பாதிக்கப்பட்டவர்களின் மேல் அடக்குமுறை செய்து அதன்வழி ஆதாயம் பெறுவது, அங்கிருக்கும் வளங்களை கொள்ளையடித்து தன்னுடைய நாட்டுக்கு அதைக் கொண்டு சேர்ப்பது, அளவுக்கு மிஞ்சிய ஊழல் செய்து தனக்கும் தனக்குப் பிறகு வரும் 100 தலைமுறைக்கு சொத்து சேர்ப்பது என்பது சர்வதேச தலைமையின் கோர முகம். இது வரலாற்றுப் பக்கங்களில் கூட எழுத முடியாத ஒரு மாபெரும் இழுக்காகும். இன்றைய சூழலில் ஒரு தலைவன் வளர்கிறான் என்றால், அந்தத் தலைமையின் ஆசைக்கு எத்தனை மனிதர்களை, இயற்கை வளங்களை, நாடுகளை பலி கொடுக்க முடியும் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டியிருக்கிறது. இயற்கையில் விலங்குகள் கூட தலைமைத்துவ குணங்களை கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதனைப் போல ஒரு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள விலங்கு ஏனைய விலங்குகளை என்றும் வஞ்சிப்பதில்லை.
உங்களிடம் "நான் மட்டுமே உத்தமன், நான் வந்தால் தேன் மாரி பொழியும், அரசியலில் அறத்தை நிலைநாட்டுவேன்" என்று வண்டிவண்டியாக பொய் சொல்லும் நபரை நீங்கள் ஆதரித்தால் பண மதிப்பீட்டுக்கு ஆதரவளித்து பல நாட்கள் வங்கிகளில் கால்கடுக்க காத்திருக்கும் வலிக்கு இணையான ஒன்றுக்கு உங்களை ஆட்படுத்த வாக்களிக்கிறீர்கள் என்று பொருள்.
உங்களுடைய அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் நீங்களல்ல, உங்களைச் சுற்றியுள்ள மற்ற மனிதர்கள் தான் என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் கோடீஸ்வரர்களைத் தலைமைக்கு தேர்ந்தெடுத்தால் கச்சாப் பொருட்களுக்கும், அத்தியாவசப் பொருட்களுக்கும் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராகி விட்டீர்கள் என்று பொருள்.
"உங்களில் நான் ஒருவன், நான் உங்கள் இனம்" என்று கூறும் ஒருவரை உங்களின் சுய விருப்பு வெறுப்புகளின் பேரில் தலைமைக்குத் தேர்ந்தெடுத்தால் சுய விளம்பரப் பிரியர்களையும், அந்த இனத்தின் பின்னடைவுக்கும், அந்த இனத்தின் மாண்புகளைக் குழி தோண்டிப் புதைக்கும் பெருந்தகையையும் நீங்கள் வெற்றி பெறச் செய்கிறீர்கள் என்று பொருள்.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் ஒரு காட்சி வரும். அரசன் புலிகேசியாக நடிக்கும் வடிவேலு ஒரு கரடியை நோக்கி அம்பு எய்வார். அதில் எந்த அம்பும் அந்தக் கரடியைத் தாக்காமல் சென்று விடும். கரடி கடைசியில் வந்து வடிவேலுவின் முகத்தில் துப்பிவிட்டு போகும். இதனால் வீறுகொண்ட வடிவேலு விற்பயிற்சி செய்வார். எதிரில் ஒரு படைவீரன் தலையில் பழத்தோடு நிற்பான். புலிகேசி அந்த வீரனின் தலையில் இருக்கும் பழத்தை குறி வைத்து அம்புகள் எய்வார். ஆனால் அம்புகள் எதுவும் புலிகேசி குறி வைத்த பழத்தை தாக்காமல் அங்கே காவலில் எங்கெங்கோ நிற்கும் வீரர்களைத் தாக்கி அவர்களைக் கொல்லும். இதனால் புலிகேசி தயங்க, அதற்கு அவருடைய அமைச்சராக நடிக்கும் மங்குனிப் பாண்டியன் "உங்களைக் காறித் துப்பிய கரடியைப் பழி வாங்க வேண்டும், அதற்காக பத்து வீரர்களை இழந்தாலும் பரவாயில்லை". என்பார். ஆக, இன்றைய காலகட்டத்தில் தலைவனாக தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்று எவர் கிளம்பினாலும் அதில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது என்னவோ அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் தான் என்ற புரிதல் காலத்தின் தேவையாக இருக்கிறது. நம்மிடம் இருக்கும் தீய குணங்களைக் கைவிட்டுவிட்டு நம்மை நாமே செப்பனிட்டுக் கொண்டால் மட்டுமே நல்ல தலைமையை நாம் வெளிக்கொணர முடியும். ஏனென்றால் தலைவர்கள் தனி மனிதர்கள் இல்லை. இந்த சமுதாயத்தில் இருந்தே தோன்றி உயருகிறார்கள்.
கீழ்மை நிறைந்த மனிதர்களிடம் இருந்து அதைவிடக் கீழ்மையான மனிதனே தலைவராகத் தோன்றுவார் என்பதை உணர வேண்டும். மேலே சொன்ன வரிகளில் பாடலாசிரியர் நாயகன் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பார். நாயகர்கள் மேன்மை அதிகமும், கீழ்மை கொஞ்சமும் நிறைந்த சாமானிய மனிதர்கள் தான். நாயகனுக்கு பதிலாக மகாத்மா என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தால் தலைவனுக்கான தகுதிகள் எட்ட முடியாத ஒன்றாக இருக்கும் என்பது கவிஞருக்குத் தெரியும். ஆனால் விதிவிலக்கு இருக்கிறது என்பதால் இலக்கு அதுவல்ல என்பதல்ல பொருள். மகாத்மாவாகத்தான் இந்த நெடும் பயணம் என்பதை மறக்க வேண்டாம்.
அட்லாண்டா தமிழ் வாரத்தை முன்னிட்டு என்னிடம் வாழ்த்துரை வழங்கச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். நானும் அவர்களுக்கு வழங்கி இருந்தேன். அதை அவர்களுடைய வலையொளியில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கான இணைப்பு கீழே
இது மட்டுமல்லாமல், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தினர் பலரும் தமிழ் வாரத்தை முன்னிட்டு பல காணொளிகளை சமர்ப்பித்து இருந்தார்கள். இவர்களின் காணொளிகளை நீங்கள் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் கண்டு களிக்கலாம்.