நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 39ஆவது தமிழ்விழாவில் முனைவர் கு. உமாதேவி அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மனவெளிப் பயணம் என்ற பொதுத் தலைப்பின் கீழ்விழிப்பு, முகமூடி, புலம்பெயர்வு, செயற்கை நுண்ணறிவும் மானுட மெய்யறிவும் (AI vs. OI), அமைதி, தனிமையுணர்வு போன்ற துணைத்தலைப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. முகமூடி என்ற துணைத் தலைப்பில் என்னுடைய கவிதையை வழங்கினேன். கவியரங்கத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்கள்.
பச்சை மண்ணு பக்கம்
புதன், ஜூலை 08, 2026
காலம் தீர்ப்பு எழுதட்டும்
பேரவையின் 39ஆவது தமிழ் விழா நியூஜெர்சி மாநிலத்தில் 2026 ஜூலை 2,3,4, தேதிகளில் நடைபெற்றது. பேரவையின் இலக்கியக் குழு மேற்றிசை வலசை என்ற நூலுக்காக கட்டுரை ஒன்று வரையச் சொல்லி கேட்டிருந்தார்கள். "காலம் தீர்ப்பு எழுதட்டும்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று புலம்பெயர் இலக்கியம் குறித்து எழுதி அனுப்பியிருந்தேன். இந்த நூலை இயக்குnaர் திரு. அம்ஷன் குமார் வெளியிட எழுத்தாளர் திரு. சாம்ராஜ், எழுத்தாளர் திருமிகு தமிழ்நதி, எழுத்தாளர் திருமிகு சரவணகார்த்திகேயன் மற்றும் கவிஞர் பெருந்தேவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அந்தக் கட்டுரை இப்போது உங்கள் பார்வைக்காக.
இலக்கியம் என்பது இலக்கை இயம்புவது. நல்ல இலக்கியம் மொழியை நிகழும் காலத்திற்கு ஏற்ப, உண்மைக்கு மிக நெருக்கமாக, ஆவணப்படுத்துகிறது. புலம்பெயர் இலக்கியம் என்ற வரையறை எந்த இடத்தில் தொடங்கியது என்பது தெரியவில்லை.
எங்கே சூரியனுக்கு
உதயமும் அஸ்தமனமும்
இல்லையோ
எங்கே
மேலே வேரும்
கீழே கிளைகளுமுள்ள
புராதன மரம்
நிழல் பரப்புகிறதோ
எங்கே
'நான்' எனும் முடிச்சு
அவிழ்ந்து போகிறதோ
அது தான் என் ஊர்
என்ற கவிக்கோ அப்துல் இரகுமானின் கவிதை வரிகளில் உள்ள யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கருத்தியலில் அதிக பிடிப்பு உண்டு. எனவே இடம் பெயர்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் இலக்கியம் இதுவென வரையறுக்க முடியாது. ஒரு எழுத்தாளனின் வேர்கள் எங்கே தொடங்கியதோ அந்த நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தவிர்த்து அந்த எழுத்தாளனால் நல்ல இலக்கியம் படைக்கவே முடியாது. எனவே புலம்பெயர் நிலத்தில் அடிக்கும் இலக்கிய வெயிலில் கூட தமிழ் நிலத்தின் சூட்டை உங்களால் உணர முடியும்.
மனிதர்கள் அனைவருமே பூமிப்பந்தின் மீது மிதக்கும் ஏதோ ஒரு நிலத்திலிருந்து வேறொரு நிலத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கள் தான். ஆப்பிரிக்க இனத்தில் பிறந்து அமெரிக்க மண்ணில் வாழ்ந்த புலிட்சர் விருது பெற்ற கவிஞர் குவெண்டலின் ப்ரூக்ஸ், கவிஞர் மாயா ஏஞ்சலோ போன்றோர் ஆப்பிரிக்க மக்களின் உரிமை, சமூகநீதி, கறுப்பின பெண்களின் முன்னேற்றம் சார்ந்த படைப்புகளைத் தந்துள்ளனர். காலித் ஹூசேய்னி என்பவர் ஆப்கானிஸ்தானில் பிறந்து அமெரிக்க மண்ணிற்கு புலம்பெயர்ந்து, 'தி கையிட் ரன்னர்' என்ற நாவலை எழுதி உலகப் புகழ்பெற்றார். இதுவும் ஆப்கானிஸ்த மண்ணில் வாழும் ஒரு சிறுவனின் கதையாகும். அது போலவே எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்கள் ஈழத்தில் இருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து தமிழ் இலக்கிய உலகில் அவருடைய எழுத்துக்களின் வழி புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறே ஒருவரது இலக்கிய வெளி என்பது அவரது வேர்களுக்கு வெகு அருகிலேயே இருக்கும் ஒன்றாகும்.
உலகில் சமநிலை தவறி அநீதி நிகழும் போதெல்லாம் மனித உணர்வுகள் தூண்டப்பட்டு அங்கு இலக்கியம் பிறப்பதற்கான ஒரு களம் உருவாகிறது. அமெரிக்காவிலும் தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் உண்டு. ஆனால் ஒரு இலக்கிய களம் என்பதற்கு போர், இழப்பு போன்ற காரணிகளை விட இலக்கியவாதிகளை ஊக்குவித்து அவர்களை வளர்த்தெடுக்கும் சமூக அடுக்கு மிக முக்கியத் தேவையாகும். தமிழகத்தில் நிலவும் இலக்கியச் சூழல், தொடர் இலக்கிய உரையாடல், பலருடைய படைப்புகளை உடனுக்குடன் வாசிக்கும் வாய்ப்பு, வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் வசதி, இலக்கிய சொற்பொழுவுகளில் நேரடியாக பங்கேற்கும் வசதி, எழுத்தாளர்களுடன் அவர்களுடைய படைப்புகள் குறித்து நேரடியாக விவாதிக்கும் வாய்ப்பு, இலக்கியவாதிகளுக்கான வழிகாட்டுதல் போன்றவை அயல் மண்ணில் கிடைப்பது அரிதினும் அரிது. எனவே இலக்கிய படைப்புகள் வெகுவாக பின்தங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் இலக்கியவாதிகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் நல்கும் நல்ல வழிகாட்டிகளும் அயல்மண்ணில் இல்லை.
பெரும்பாலான அயலக தமிழ் அமைப்புகள் இலக்கிய இதழ்களை வெளியிடுகின்றன. அது மட்டுமல்லாமல் வடஅமெரிக்காவில் இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சங்கங்களில் வாசகர் வட்டங்கள், நூல் திறனாய்வு செயற்பாடுகள் போன்றவற்றையும் செம்மையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தமிழ் இலக்கிய உலகோடு வாசகர்களுக்கு உள்ள இணைப்பை அறுபடாமல் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பை நல்கினாலும் வாசகர்களை எழுத்தாளர்களாக மாற்றும் அளவு இன்னும் வலிமை பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால், சார்லட் நகரில் முதல் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தினேன். அந்த முயற்சியின் அடுத்த படிநிலையாக தமிழ் நூல்களைச் சார்லட் பெருநகரத்தை உள்ளடக்கிய மெக்கலன்பர்க் மாவட்ட நூலகங்களில் வைக்க பெரும் முயற்சி எடுத்து அதையும் செயல்படுத்தினேன். சார்லட் தமிழ்ப் பள்ளியில் பயிலும் உயர்நிலை மாணவர்களுக்கு தமிழ் கதைப் புத்தங்கங்கள் எழுதப் பயிற்சி அளித்து அவர்கள் எழுதிய நூல்களையும் எங்கள் ஊர் நூலகங்களில் இடம் பெறச் செய்துள்ளேன். என்னுடைய இந்த முயற்சியானது இலக்கியம் என்னும் மாபெரும் கடலில் மூழ்கி ஒரு சிறிய முத்தை எடுத்ததற்கு சமமானது என்பதை உணராமல் இல்லை. இவ்வாறான எனது பயணத்தில் இலக்கிய உலகோடு வாசர்களுக்கு இருந்த அறிமுகத்தை மட்டுமே என்னால் தக்க வைக்க முடிந்தது.
இங்கு வசிக்கும் எழுத்தாளர்களின் இன்னொரு பெரும் தடை மனம் சார்ந்தது. அதாவது தாங்கள் வாழும் மண்ணைக் குறித்து எழுதாமல் தாங்கள் பிரிந்த மண்ணையும் அது சார்ந்த இலக்கியத்தையும் படைக்க முயல்கிறார்கள். தாய் மண்ணில் இருந்து பல மைல்கள் கடந்து வாழும் போது நமது இலக்கிய பார்வை அவ்வளவு வீரியமானதாக இருப்பதில்லை. இது கண்ணாடியை அதே அறைக்குள் வைக்காமல், வேறு அறைக்குள் வைத்துவிட்டு, வெறும் சுவற்றை பார்த்து ஒப்பனை செய்வதற்கு சமமாகும். எவ்வளவு முயன்றாலும் ஒப்பனை சிறப்பாக அமையாது. அயலக மண்ணில் வசிக்கும் தமிழர்கள் தாங்கள் வாழும் நிலப்பகுதிகளில் உள்ள மக்களோடு இணக்கமான போக்கை கடைப்பிடித்து வாழ்ந்தாலும் பல்வேறு மொழி, இன பேதங்கள் காரணமாக அந்த மாந்தர்களுடன் நெருக்கமான உறவுப் பாலத்தை ஏற்படுத்திக் கொள்வது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இதையும் தாண்டி அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழில் வெளிவரும் பல்வேறு வலைப்பூக்கள், மின்னிதழ்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்பு நூல்கள் ஆகியவற்றில் வடஅமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் பெருமளவில் எழுதியே வருகிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக இலக்கியப் பணி ஆற்றுவதற்கு தாங்கள் வாழும் நிலத்தில் உள்ள மாந்தர்களின் கதைகளை, போராட்டங்களை எடுத்து இயம்புவதே, ஒரு எழுத்தாளருக்கு அடுத்தக் கட்ட வளர்ச்சியை, நகர்வை அளிக்க வல்லது.
புலம்பெயர் நிலத்தில் அயலக தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் புகழ்மிக்க விருதுகளோ அல்லது பொருளாதாரத் தன்னிறைவை அளிக்கும் பரிசுத் தொகை கொண்ட விருதுகளோ இல்லை. வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ் பீட விருது, கனடா இயல் விருது போன்றவை செயல்பட்டாலும் அந்த விருதுகளைப் பெற்றவர்கள் பெரும்பான்மை தமிழகத்தில் இருந்து வருபவர்களே. எனவே புலம்பெயர் வாழ்வில் ஒருவர் சந்திக்கும் சவால்கள், பின்னடைவுகள், சோதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்த, அதிலிருந்து கதைகளும், கவிதைகளும் படைக்கத் தேவையான களம் என்பது இல்லை. அங்கீகாரம் பெறவும், வாழ்வதற்குத் தேவையான பொருள் வளத்தைப் பெறவும் ஆங்கிலத்தில் எழுதுவதே சிறந்த வழியாக இருக்கிறது. பெரும்பான்மையான புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு தங்களது பதிப்புகளை வாசித்து பின்னூட்டம் தரும் ஒரு சில வாசகர்களைக் கூடப் பெறுவதில்லை என்பதும் அவர்கள் பதிப்பிக்கும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி ஊக்குவிக்கும் அளவு இலக்கிய ஆர்வலர்களும் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே புலம்பெயர் படைப்புகள் காலத்தை வெல்லும் இலக்கியமாக இல்லாமல் காலத்தோடு மறையும் எழுத்தாகவே நின்று விடுகிறது.
பெருகி வரும் சமூக ஊடங்கங்களின் தாக்கமும் இலக்கியப் பரப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நிமிட குறுங்காணொளி ஒன்றைப் பார்ப்பதில் உள்ள ஆர்வம் சில மணி நேரம் செலவு செய்து ஒரு புத்தகம் வாசிப்பதில் இல்லை. இந்தத் தாக்கம் வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில் அதிகம் உணரப்படுகிறது. காட்சி ஊடகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவு பரந்த வாசகப் பரப்பை கொண்ட படைப்புகளை யாரும் இப்போதெல்லாம் படைப்பதில்லை. ஹாரி பாட்டர் போன்ற உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்ட நூல்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது சமூக ஊடகத்திற்கு முற்பட்ட காலம் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
வடஅமெரிக்காவில் பெரும்பாலும் பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்த முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை தமிழர்களே அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இந்தப் புதிய நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் தேவையான போராட்டத்திலேயே கழிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் தமிழ் மொழியை இரண்டாம் பாடமாக படித்த தலைமுறை ஆகும். இவர்களின் பேச்சும், சிந்தனையும் முதல் மொழியான ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளது. இந்தத் தலைமுறை ஆங்கிலத்தில் பெரிய தாக்கம் கொண்ட நூல்களை படைக்கலாம் என்றாலும், இவர்களுக்கு தாய் மொழியில் இலக்கியம் படைக்கும் அளவு மொழியறிவு இல்லை. திருக்குறளைத் தாண்டிய எந்த தமிழ் இலக்கியத்தையும் அறியாதவர்களே இந்தத் தலைமுறையினர். திருக்குறள் என்பது ஒரு நீதி நூல் மட்டுமே, பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உபதேசிக்க விரும்புகிறவர்களுக்கு அது ஒரு சுரங்கம், ஆனால் அது இலக்கியம் ஆகாது என்ற எழுத்தாளர் க.நா. சுப்பிரமணியம் அவர்களின் கூற்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சிறந்த இலக்கியங்களை, புதினங்களை, கவிதைகளைப் படிக்காத முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையிடமிருந்து காலத்தை வெல்லும் தமிழ் எழுத்துக்கள் பிறக்கப்போவதில்லை. அப்படி இருந்தும் சிலர் தன்னிச்சையாக தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொண்டு படைப்புக்களை படைத்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் படைப்புகள் தற்கால இலக்கியத்தை விட சில மடங்கு பின் தங்கியுள்ளது என்பதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். "தாழ்ப்பாள் புலவர்கள் தள்ளிப்போகட்டும்" என்ற தலைப்பில், நாம் இருக்கும் நாடு என்ற நூலில் அமைந்த கவிதை ஒன்றில் மகாகவி ஈரோடு தமிழன்பன் பின்வருமாறு கூறுகிறார்.
காலம்
தீர்ப்பு எழுதட்டும்
கவிஞனே! நீ
கவி எழுது
மேலே சொன்னக் கூற்று கவிதைக்கு மட்டுமல்ல, கவிதைத் தாண்டிய எல்லா இலக்கிய செயல்பாடுகளுக்கும் பொருந்தும். புலம்பெயர் வாழ்வில் இலக்கியப் பணி என்பது ஓடும் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்துவது போன்ற எளிதான பணி அல்ல. முதலில் ஒரு வாகனத்தை தேடிக் கண்டிபிடிக்க வேண்டும், பின்னர் அதை இயக்கத் தேவையான மனிதனைக் கண்டுபிடித்து அவனுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்குப் பிறகே வாகனத்தை இயக்கும் வேலையைச் செய்ய முடியும். இப்படியான ஆயத்தங்களுக்கு உட்பட்ட இலக்கிய பணியில், புலம்பெயர் எழுத்தாளர்கள் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. கூட்டுப் புழுக்களுக்கு வானத்தின் பரப்பளவு தெரியும் என்றாலும், சிறகுகள் வலிமை பெறும் வரை காத்திருப்பதைப் போல, புலம்பெயர் எழுத்துக்களும் வலிமைப் பெற்று ஒரு நாள் காலவெளியில் சிறகடித்து பறக்கும். அந்த நாள், நாம் வாழும் காலத்திலேயே அமைந்தால் அதை விட உவப்பானது வேறோன்றும் இல்லை.
செவ்வாய், ஜூன் 23, 2026
குடைராட்டினம் - கவிதை
வேலையிழந்தவனிடம் அனைவரும் கேட்பது
இப்போது என்ன செய்கிறாய் என்று
இவர்களுக்கு எப்படிச் சொல்வது
அவன் இப்போதெல்லாம்
நழுவும் தருணங்களை
நிதானமாய்க் கடக்கிறான்
பூக்களோடு முட்களையும் ரசிக்கிறான்
வலிகளைத் தோல்விகளை
அவமானங்களை
எதைக் கொண்டும் மறக்கடிக்காமல்
எதிர்கொண்டு ஏற்கிறான்
நேற்றைய சுமைகளோடு
இன்றைய பொருளாதாரச் சுமையையும்
களிப்போடு சுமக்கிறான்
வெற்றி பெறும் துடிப்பினைக்
நம்பிக்கை ஊற்றி வளர்க்கிறான்
அவன் கனவுகளை இன்னும்
அதிகமாக நேசிக்கத் தொடங்கியுள்ளான்
எல்லா நாட்களையும் சரிசமமாக
எதிர்கொள்ளப் பழகியுள்ளான்
குடைராட்டினத்தில் சுற்றுபவர்களிடம்
பூமியின் அதிராத மென்சுழற்சியை
எப்படி விவரிப்பது
ஞாயிறு, மார்ச் 29, 2026
தோன்றின் புகழோடு தோன்றுக
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய விருது, பத்ம விருது, தேசிய விருது, பல்வேறு திரைத்துறை சார்ந்த விருதுகள் என்று அவர் கடந்து வந்த நெடிய பாதையின் ஒரு மைல்கல்லாக இப்போது ஞானபீட விருதினைப் பெற்றுள்ளார். விருது பெற அவர் தனிப்பட்ட விதத்தில் முயற்சி செய்தார். அதிகார மையத்தின் பல்வேறு நபர்களுடன் இணக்கமாக இருக்கிறார் என்ற செய்திகளை முந்தைய விருதுகளின் போதே கேள்விப்பட்டோம். இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் அதே விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இன்றைய கால கட்டத்தில் விருதுகள், அங்கீகாரம் என்பதெல்லாம் ஒரு விதமான சமூக உடன்படிக்கை என்று கொள்ளலாம். அதாவது நீ இதைச் செய்தால் நான் உனக்கு இதைச் செய்வேன் என்பதோ அல்லது உன்னுடைய அரசியல் அல்லது சமூக நிலைப்பாட்டில் உன்னுடன் நிற்கிறேன் என்பதோ அல்லது
அதிகார மையங்களின் உச்சத்தில் உள்ளவர்களுடன் ஒருவனாக இருப்பதற்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும், எனவே இந்த விருதின் மூலம் அத்தகைய இடத்திற்கு என்னை உயர்த்திக் கொள்கிறேன் என்பதோ தான் இந்த எழுதப்படாத உடன்படிக்கைகள். அப்படியான ஒரு விஷயத்தை நிகழ்த்திக் காட்டுவதற்குக் கூட தனித்திறன் வேண்டும்.
உதாரணமாக ஒரு அலுவலகத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு வேலை செய்யும் ஒரு நபருக்கு அவருடைய தகுதியைத் தாண்டி, அவருடைய மேலதிகாரிகளுடன் அவர் கொள்ளும் இணக்கமான போக்கு, சுயவிளம்பரம் செய்து அதன்வழி ஆதாயம் அடையும் போக்கு ஆகிய பல்வேறு காரணங்களுக்காக பதவி உயர்வு, பரிசுகள் ஆகியன வழங்கப்படுகின்றன. இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வதில்லை. ஏனென்றால், அப்படிச் செய்வது அதிகார மையத்திடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும். ஊருடன் ஒட்டி வாழ்வது அல்லது கொஞ்சம் நீக்கு போக்கு தெரிந்த நபராக வாழ்வது என்பது இன்றைய சூழலில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று. தனிப்பட்ட விதத்தில் நாணல் போல வாழ்ந்து விட்டு, பிறரை விமர்சனம் செய்வது முறையன்று. தமிழ் மொழியின் ஆகச் சிறந்த படைப்பாளிகள், திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலருக்கு எந்த விருதும் வழங்கப்பட்டதில்லை. உண்மையிலேயே எதையாவது கேள்விக்கு உட்படுத்த வேண்டுமென்றால் திரு. கக்கன், திரு.காமராஜ், திரு. நாகேஷ், திருமிகு மனோரமா, திரு. சிவாஜி கணேசன், திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற பலருக்கு ஏன் பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளோ அல்லது பத்ம விருதுகளே வழங்கப்படவில்லை என்பதைத் தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். நாளையே வைரமுத்து அவர்கள் பாரத ரத்னா விருது பெறலாம். அப்போதும் நாம் கண்ணாடி மாளிகைக்குள் நின்று அவர் மேல் விமர்சனக் கல்லெறிய வேண்டாம். தமிழின் நெடிய இலக்கிய வரலாற்றில் மதிக்கப்படாத, விருதுகளால் அலங்கரிக்கப்படாத, மறக்கப்பட்ட படைப்பாளிகள் தான் மிக அதிகம். வைரமுத்து அவர்கள் அந்தப் படைப்பாளிகளின் பிரதிநிதியாக இத்தகைய விருதினைப் பெற்றுள்ளார் என்பதாகக் கூட அவருடைய இந்த வெற்றியைப் பார்க்கலாம். எனினும் பல கவிதைத் தொகுப்புகள், பல்லாயிரம் சினிமாப் பாடல்கள் என்று அவருடைய தனிப்பட்ட தகுதிகளே இந்த விருதுக்கு போதுமானதாக இருக்கிறது. தமிழில் ஆழ்ந்த புலமை, தேர்ந்த சொல் நயம், கவிதை மொழி என்று அவர் போற்றத்தக்க சாதனையாளர் தான். எனினும் அவர் மேல் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், இந்த விருதுக்காக அவரை மனம் திறந்து பாராட்டும் ஒரு மனநிலையைத் தரவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது.
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன்மாலைப் பொழுது...
வானம் அளவு இல்லாவிட்டாலும், சில நிமிட நேரம் தோன்றும் வானவில்லாக மகிழ்விக்கும் கவிஞர் வைரமுத்து என்ற தனி நபரின் வெற்றிக்காக அவரை வாழ்த்தலாம்.
சமீபத்தில் நான் வாசித்த அவருடைய மகா கவிதை நூல் குறித்த என்னுடைய விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.
கவிஞர் கண்ணதாசன் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து பாடல்களையும் ஒப்பிட்டு பேசிய என்னுடைய உரைக்கான இணைப்பும் இங்கே உள்ளது. (2:13இல் எனது உரை தொடங்குகிறது)
#ஞானபீடவிருது
#கவிஞர்வைரமுத்து
வெள்ளி, மார்ச் 27, 2026
ஒரு நாயகன் உதயமகிறான்
ஞாயிறு, மார்ச் 08, 2026
விடியாத வைகறைகள் - கவிதை
செவ்வாய், மார்ச் 03, 2026
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வாரம்
அட்லாண்டா தமிழ் வாரத்தை முன்னிட்டு என்னிடம் வாழ்த்துரை வழங்கச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். நானும் அவர்களுக்கு வழங்கி இருந்தேன். அதை அவர்களுடைய வலையொளியில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கான இணைப்பு கீழே
இது மட்டுமல்லாமல், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தினர் பலரும் தமிழ் வாரத்தை முன்னிட்டு பல காணொளிகளை சமர்ப்பித்து இருந்தார்கள். இவர்களின் காணொளிகளை நீங்கள் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் கண்டு களிக்கலாம்.
ஞாயிறு, மார்ச் 01, 2026
மகா கவிதை - கவிஞர் வைரமுத்து : நூல் விமர்சனம்
மண், காற்று, நீர், நிலம், ஆகாயம் என்று அனைத்தும் மௌனம் கலைத்து பேசினால் எப்படி இருக்கும். பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றின் அழகியலை, அது உயிர்களுக்கு அளிக்கும் கொடையை, பஞ்ச பூதங்களின் அதிசயத் தன்மையை மீள் பார்வை செய்யும் இந்தக் கவிதைப் புத்தகம் ஒரு அறிவியல் கையேடாகவும், அதைக் தமிழ்க் கவிதை வடிவத்தில் காணும் போது, அழகிய தமிழ் கவியமுதத்தை பருகும் நல்வாய்ப்பாகவும் நெஞ்சம் அள்ளுகிறது. இன்னொரு முறை இந்த பூமி எத்தகைய கருணை வாய்ந்தது என்று எண்ணிப் பார்க்க ஓர் அரிய சந்தர்ப்பமே இந்த மகா கவிதை எனலாம். ம - மண், கா-காற்று, க - கனலாகிய நெருப்பு, வி- விசும்பு சுட்டும் வெளி, தை யில் உள்ள தகரம் - தண்ணீர் என்று இந்த நூலின் உள்ளடக்கம் இந்த நூலின் தலைப்பிலேயே அமைந்துள்ளது என்று நூலாசிரியர் உரையிலேயே கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகிறார். இந்த பூமி எப்படிப்பட்ட கொடை என்பதை எண்ணிப் பார்க்கவும், பூமியின் கருணையை எண்ணி நெகிழவும், பூமி ஏனைய கிரகங்களை விட எவ்வாறு பல்லுயிர் காக்கும் அன்னையாக விளங்குகிறது என்பதையும் தெள்ளத்தெளிவாகவே விளக்குகிறார்.
திங்கள், பிப்ரவரி 23, 2026
நினைவில் நின்ற காதல் பாடல்கள் - கட்டுரை
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே- 5
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. -10
நற்றிணை -172 ஆவது பாடல்
இந்தப் பாடல் தலைவி தலைவனிடம் சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கிறது. தலைவி சொல்கிறாள், நான் சிறு பிள்ளையாக, என் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள் ஒரு புன்னை மரத்தின் விதையை விளையாட்டாக நட்டு வைத்தேன். அப்படி நட்டத்தை நான் மறந்தே விட்டேன். ஆனால், என் தாய் மறக்கவில்லை. என்னை வளர்த்ததைப் போலவே அவள் அந்த புன்னை மரத்தையும் நெய் கலந்த பாலை ஊட்டி வளர்த்தாள். என்னை அந்த மரத்தின் அடியில் காணும் போதெல்லாம் அந்த மரம் எனக்கு தங்கை போன்றது என்று சொல்லுவாள். அந்த மரம் வேறு எதுவும் இல்லை. இந்த மரம் தான். என் தங்கையின் முன்னால் உன்னோடு இங்கு இருப்பது சரியானது அல்ல . வா, இது போல வேறு நிறைய மரங்கள் இங்கே இருக்கின்றன...அங்கு போய் விடலாம்" என்று கூறுகிறாள். புன்னை மரத்தையும் தன்னுடைய தங்கையாகப் பார்த்த அந்தப் பெண்ணின் அன்புள்ளம் தெளிவாக விளங்குகிறது. இது மட்டுமல்ல காதல் வயப்படும் பெண்ணுக்கு காணும் யாவும், மரமாக இருந்தாலும் அது உயிர் கொண்டயாகவே தோன்றுகிறது என்ற பொருளையும் கொள்ள முடியும் என்பதால் இந்தப் பாடல் ஒரு சிறப்பான பாடல் என்ற நிலையை அடைகிறது.
பாரதியாரின் கவிதைகளில் வரும் கண்ணம்மா ஒரு கற்பனை பாத்திரம். அது அவருடைய மனைவி செல்லம்மாவாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம் அல்லது அவருடைய இஷ்ட தெய்வமான கண்ணனை அவர் கண்ணம்மாவாக எண்ணிப்பாடி இருக்கலாம். எதுவாகினும் கண்ணம்மா என்ற பாத்திரம் ஈடற்ற அன்பு, மாசற்ற காதல், உள்ளார்ந்த அன்புணர்வுக்கு பாத்திரமாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகை இல்லை.
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நட்சத்திரங்க ளடீ! 1
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
(சுட்டும் விழிச் சுடரோ கண்ணம்மா)
நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுள் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.
(கண்ணம்மா என் காதலி)
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2
வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5
காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6
நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7
தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8
(வீணையடி நீ எனக்கு)
இந்தப் பாடலில் பாரதியார் குறிப்பிட்டிருக்கும் உவமைகள் கூறிய அந்த பொருளுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. அதாவது வீணை நீ என்றால், நான் அதன் மேல் மேவும் விரல் என்று சொல்கிறார். வீணையில் இருந்து எழும் ஓசை வீணைக்கு சொந்தமானது இல்லை. எனவே வீணையின் இசையை அவர் குறிப்பிடவில்லை மாறாக இசைக்கு காரணமான விரல்களை காதலனுக்கு உவமையாக சொல்கிறார்.
பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் தகப்பனுடைய மனநிலை எப்படியிருக்கும்? பஞ்சுப் பொதி போல அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் வாங்கிய நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கி ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும்போது எந்தத் தகப்பனும் கோழையாகித்தான் போகிறான்.
அபியும் நானும் என்ற திரைப்படத்தில் ஒற்றை மகளை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் மனநிலையை அழகாகக் காட்டுகிறது இந்தப் பாடல்.
மூங்கில் விட்டுச் சென்ற பின்னே
அந்தப் பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன
மூங்கிலில்தான் இசை பிறக்கிறது. ஆனால் அது மூங்கிலோடு இருந்து விடுவதில்லை. மேற்கூறிய சிந்தனையை வைரமுத்து அழகாக உள்வாங்கி பிரதிபலிக்கிறார்.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற கவிஞர் கண்ணதாசனின் காதல் வரிகள் அவருடைய தமிழ்ப் புலமைக்கு ஒரு சான்று
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
(உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல)
என்று அவருடைய காதல் கவிதைகளிலும் இயற்கை சார்ந்த கற்பனையையும், பெண்ணின் மனதை துல்லியமாக காட்டும் விதமும், வாழ்க்கை குறித்த ஆழ்ந்த தத்துவப் பார்வையும் பாடலை உயிர்ப்பாக வைக்கும்.
வருங்காலத்தில் நிறையத் தமிழ்க் கவிஞர்கள் தோன்றுவார்கள் ஆனால் அவர்கள் ஆனந்த யாழை மீட்டிய நா.முத்துகுமார் போல் வருவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. 1500க்கும் மேற்பட்ட பாடல்கள், 2 தேசிய விருதுகள், மாநில விருது, கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது என்று அவர் பெற்ற விருதுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். திரைப்படப் பாடல்களை தமிழ்ப்புலமையுடன் புனைந்த ஒரு சிலரில் நா. முத்துகுமார் நிச்சயம் இடம் பெறுவார்.
நா முத்துக்குமார் அவர்களின் காதல் கவிதைகள் ஒரு அலாதி அழகு என்பதற்கு திகட்டத் திகட்ட காதலி என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கவிதையே ஒரு சாட்சி.
காதலித்து கெட்டு போ.. அதிகம் பேசு..
ஆதி ஆப்பிள் தேடு.. மூளை கழற்றி வை..
முட்டாளாய் பிறப்பெடு.. கடிகாரம் உடை..
காத்திருந்து காண்.. நாய்க்குட்டி கொஞ்சு..
நண்பனாலும் நகர்ந்து செல்.. கடிதமெழுத கற்றுக்கொள்..
வித விதமாய் பொய் சொல்.. விழி ஆற்றில் விழு..
பூப்பறித்து கொடு.. மேகமென கலை..
மோகம் வளர்த்து மித.. மதி கெட்டு மாய்..
கவிதைகள் கிறுக்கு.. கால்கொலுசில் இசை உணர்..
தாடி வளர்த்து தவி.. எடை குறைந்து சிதை..
உளறல் வரும் குடி.. ஊர் எதிர்த்தால் உதய்..
ஆராய்ந்து அழிந்து போ.. மெல்ல செத்து மீண்டு வா..
திகட்ட திகட்ட காதலி !!
நா. முத்துக்குமார் எழுதிய முதல் காதல் என்ற தலைப்பில் அமைந்த கவிதை காதல் கொண்ட மனதின் தவிப்பை, உணர்வை இதை விடச் சிறப்பாக வெளிப்படுத்தி விட முடியாது.
காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!
இந்தக் கவிதை பிரமிள் அவர்கள் எழுதிய
சிறகில் இருந்து உதிர்ந்த இறகு
காற்றின் தீராப் பக்கங்களில்
எழுதிச் செல்கிறது ஒரு பறவையின் வாழ்வை
என்ற கவிதை அளவுக்கு மிகவும் உயர்வான கவிதை.
7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் "நினைத்து நினைத்து பார்த்து" என்று தொடங்கும் இந்தப் பாடல் வரிகள் இறந்து போன காதலியை நினைத்து காதலன் வலியுடன் பாடுவதாக அமையும். இதைக் கேட்கும் போது கண்களில் ஈரம் கசிவதை நிறுத்த முடியாது.
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
கவிஞர் வைரமுத்து அவர்கள் கடல் என்ற திரைப்படத்தில் நெஞ்சுக்குள்ள என்று தொடங்கும் ஒரு பாடல் எழுதி இருப்பார்.
காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்து மக அரநிமிசம் தூங்கலையே….
ஏல இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலயே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற, புரையோர் கேண்மை
இந்த நற்றிணை பாடலின் பொருள், தாமரையின் குளிர்ச்சியான மகரந்தத்தை உண்டு, சந்தன மரத்தின் மீது வண்டுகள் கட்டிய இனிய தேனைப் போன்றது சான்றோர்களின் நட்பு என்று கபிலர் பெருமையுடன் பகர்வதாக அமைகிறது.
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்.
அத்தகைய ஒரு உயர்வான காதலைத் தான் தன்னுடைய காதலி மேல் கொண்டிருப்பதாக ஒரு காதலன் \பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இது ஷாஜஹான் என்ற திரைப்படத்தில் வரும் மெல்லினமே என்ற பாடல்.
அப்படியே இருவர் திரைப்படத்தில் நறுமுகையே என்ற பாடல் கிட்டத்தட்ட குறுந்தொகைப் பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயு மெவ்வழி யறிதுஞ் . . .
என்ற வரிகளை வைரமுத்து கீழ்வருமாறு மாற்றி எழுதியிருப்பார்.
யாயும் ஞாயும் யாராகியரோ
நெஞ்சு நேர்ந்ததென்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்ததென்ன?
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை
நெஞ்சம் கலந்ததென்ன
உன் தாயும் என் தாயும் தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. செம்மண்ணில் பெய்த மழை செந்நிறத்தைப் பெற்றுப் பிரிக்க முடியாததுபோல நம்மிருவர் நெஞ்சங்கள் கலந்துவிட்டன. எனவே நம் காதல் நிலைக்குமா? நிறைவேறுமோ? எனக் கவலை கொளல் வேண்டாம் என்று காதலியைத் தேற்ற காதலன் பாடியதாக வரும் இந்தப் பாடலின் விளக்கம் இதுதான்.
கபாலி என்ற படத்தில் வந்த மாயநதி என்ற பாடலில் பாடலாசிரியர் திருமிகு உமாதேவி
என்று எழுதி இருப்பர். தாபத நிலை என்பது தவநிலை என்பதை இது குறிக்கிறது. தவத்தோர் போலப் புலன் அடக்கி வாழும் கைம்மைநிலை என்றும் பொருள் கொள்ளலாம்.
குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
கருந்தடங் கண்ணி கைம்மைகூ றின்று
தன் கணவனைக் கூற்றுவன் பிரித்துவிட, தான் இறந்துபோகாது வருந்தும் மனைவி, தன்னை விட்டுவிட்டு இறந்து போனவனின் குருந்தப் பூ மாலையிடம் கோபித்துக் கொண்டு தான் பூச்சூடாமல் வெற்றுத் தரையில் படுத்துக் கரிய இலை உணவை உண்டு வாழ்கிறாள் என்பது இந்தப் பாடலின் பொருள். ஆண்களும் இதே போல தன்னுடைய துணைவியை இழந்தால் அது தபுதார நிலை என்கிறது புறப் பொருள் வெண்பாமாலை என்ற நூல்.
என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்புதரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன்
தீ கூட தீண்டத் தீண்ட தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தாய் புத்திக்கு ஓய்வு தந்தேன்
(மின்சாரம் என் மீது - ரன் திரைப்படம், கவிஞர் விவேகா)
உயிரைத் திருகி உந்தன்
கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு
உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே
விண்மீன் பறிக்க விழியில்லை
என்று கண்களை பறிக்காதே
என் இரவை எடுத்துக் குழைத்துக்
குழைத்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும்
யார் நீ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே(2)…
(குல்மோகர் மலரே - மஜ்னு)
என்று கவிஞர் வைரமுத்துவின் காதல் வரிகள் பல இடங்களில் நெஞ்சை அள்ளும் விதமாக அமைத்துள்ளது.
எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவை ஆனது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசை ஆனது.
ஆனந்தக் கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைச் சுற்றிக்கொண்டே நடந்தேன் சிறு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
காதல் சொன்ன கணமே!"
(திரைப்படம்: பாய்ஸ், வரிகள்: கவிஞர் கபிலன்)
என்ற கவிஞர் கபிலரின் வரிகள் ஆகட்டும்
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே
அத்தனை
மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் சென்டொன்று
செய்தேன்
உன்னிடம்
நீட்டினேன் காதலை
காட்டினேன்
என்று 16 மொழிகளில் காதலைப் பேசும் இந்தப் பாடல் காதல் பாடல்களில் ஒரு புதுமையான வெற்றிகரமான முயற்சி என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
கவிதைகள் சொல்லவா உன் பெயர்
சொல்லவா இரண்டுமே
ஒன்று தான் ஓஹோ
ஓவியம் வரையவா உன்
கால் தடம் வரையவா
இரண்டுமே ஒன்று தான்
ஓஹோ
(உள்ளம் கொள்ளை போகுதே)
என்ற பா.விஜயின் வரிகள் ஆகட்டும்
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டமால் திரும்புது காற்று
(பிரியாத வரம் வேண்டும்)
என்ற அறிவுமதி பாடல்கள் ஆகட்டும்
அற்றைத் திங்கள் வானிடம்.
அல்லிச் செண்டோ நீரிடம்.
சுற்றும் தென்றல் பூவிடம்.
சொக்கும் ராகம் யாழிடம்.
காணுகின்ற காதல் என்னிடம்.
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
(சிவப்பதிகாரம்)
என்று யுகபாரதி கொண்டாடும் காதல் வரிகள் ஆகட்டும் தமிழின் இலக்கியத் தெறிப்பு நமது திரையிசைப் பாடல்களில் கலந்துள்ளதாலேயே அது காலம் கடந்து இன்றும் விரும்பப்படும் இசையாக உள்ளது. தமிழ் மொழியானது திரையிசை தாண்டி, தமிழ்க் கவிதைகள், தமிழ் எழுத்துக்களிலும், ஊடகங்களிலும் தமிழ் இலக்கியத்தின் பரவலான தாக்கம் உள்ளது. இதுவே நல்ல இசையை, நல்ல சிந்தனையை, நல்ல ரசனையை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அரும்பணியை செய்கிறது.
மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாடவச் சிலவே அலரே
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.
குறுந்தொகை 393
இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பசும்பூண் பாண்டியன் எனப்படும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் தளபதியான அதிகன் என்பவன், கொங்கர்களை அடக்கி வெற்றி பெற வாகைப் பறந்தலை என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் தோல்வியுற்று இறந்தான். அதிகன் இறந்ததால், கொங்கர்கள் ஆரவாரித்தனர். இந்த ஆரவார ஒலியை விட என்னைப் பற்றி அலர் பேசும் ஊர் மக்களின் ஆரவார ஒளியே அதிகமாக இருக்கிறது என்று தலைவி பேசுவதாக அமைகிறது.
ஒரு பெரிய மன்னனின் தளபதிக்கு எதிராக போரிட்ட கொங்கர்கள் என்னும் எளிய மனிதர்களின் வெற்றியை ஒரு அகப் பாடலில் சொல்ல முடியும் என்றால் தமிழ் இலக்கியம் எவ்வளவு நுட்பமானது என்பதை நாம் அறிய முடியும். அகத்திணை பாடல்கள் தமிழரின் அக வாழ்வை களவு கற்பு என்று இரு நிலைகளில் நின்று பேசுகிறது. இத்தகைய செறிவான ஒரு இலக்கிய மரபு வேறு எந்த மொழியிலும் காணப்படுவது இல்லை என்பதாலேயே தமிழ் இன்றும் உலகின் மூத்த மொழியாக போற்றப்படுகிறது.
நான் எழுதி செயற்கை தொழிநுட்பம் வழி இசை கோர்த்த அகத்திணை பாடல்
சில காதல் பாடல்கள் குறித்த என்னுடைய முந்தைய பதிவு





















