திங்கள், பிப்ரவரி 23, 2026

நினைவில் நின்ற காதல் பாடல்கள் - கட்டுரை


எங்கள் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய வட்டத்தில் காதலர் நாளை முன்னிட்டு "காதலும் அகத்திணையும்" என்ற பெருந்தலைப்பின் கீழ் "நினைவில் இருந்து நீங்காத காதல் பாடல்கள்" என்ற உபதலைப்பினில் ஒரு உரை நிகழ்த்தச் சொல்லி இருந்தார்கள்.  தமிழ் இலக்கணத்தின் ஐந்து முக்கிய பிரிவுகளான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை மொழியைப் பிழையின்றி எழுதவும், பேசவும், இலக்கியம் படைக்கவும் பயன்படும் விதிகளாகும். இதில் பொருள் இலக்கணம் என்பது தமிழுக்கு மட்டுமே உரியது.

பொருள் இலக்கணம் அகப் பொருள், புறப் பொருள் என்று இரண்டு வகைப்படும். அதில் அகத்திணை அல்லது அகப் பொருள் என்பது ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து வாழும்  அக வாழ்வினைப் பற்றி பேசுகிறது.

எனக்கு பிடித்த பாடல் என்ற தலைப்பினை சங்க இலக்கியத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று எண்ணியதும் மனதில் தோன்றிய முதல் பாடல் இந்த நற்றிணைப் பாடல் ஆகும்.

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,

அன்னை கூறினள், புன்னையது நலனே- 5


அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;

விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,

வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்

துறை கெழு கொண்க!- நீ நல்கின்,

இறைபடு நீழல் பிறவுமார் உளவே. -10

நற்றிணை -172 ஆவது பாடல்

இந்தப் பாடல் தலைவி தலைவனிடம் சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கிறது. தலைவி சொல்கிறாள், நான் சிறு பிள்ளையாக, என் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள்  ஒரு புன்னை மரத்தின் விதையை விளையாட்டாக நட்டு வைத்தேன். அப்படி நட்டத்தை நான் மறந்தே விட்டேன். ஆனால், என் தாய் மறக்கவில்லை.  என்னை வளர்த்ததைப் போலவே அவள் அந்த புன்னை மரத்தையும் நெய் கலந்த பாலை ஊட்டி வளர்த்தாள். என்னை அந்த மரத்தின் அடியில் காணும் போதெல்லாம் அந்த மரம் எனக்கு தங்கை போன்றது என்று சொல்லுவாள். அந்த மரம் வேறு எதுவும் இல்லை. இந்த மரம் தான். என் தங்கையின் முன்னால் உன்னோடு இங்கு இருப்பது சரியானது அல்ல . வா, இது போல வேறு நிறைய மரங்கள் இங்கே இருக்கின்றன...அங்கு போய் விடலாம்" என்று கூறுகிறாள். புன்னை மரத்தையும் தன்னுடைய தங்கையாகப் பார்த்த அந்தப் பெண்ணின் அன்புள்ளம் தெளிவாக விளங்குகிறது. இது மட்டுமல்ல காதல் வயப்படும் பெண்ணுக்கு காணும் யாவும், மரமாக இருந்தாலும் அது உயிர் கொண்டயாகவே தோன்றுகிறது என்ற பொருளையும் கொள்ள முடியும் என்பதால் இந்தப் பாடல் ஒரு சிறப்பான பாடல் என்ற நிலையை அடைகிறது.




பாரதியாரின் கவிதைகளில் வரும் கண்ணம்மா ஒரு கற்பனை பாத்திரம். அது அவருடைய மனைவி செல்லம்மாவாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம் அல்லது அவருடைய இஷ்ட தெய்வமான கண்ணனை அவர் கண்ணம்மாவாக எண்ணிப்பாடி இருக்கலாம். எதுவாகினும் கண்ணம்மா என்ற பாத்திரம் ஈடற்ற அன்பு, மாசற்ற காதல், உள்ளார்ந்த அன்புணர்வுக்கு பாத்திரமாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகை இல்லை.  

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!

சூரிய சந்திர ரோ?

வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் - புடவை

பதித்த நல் வயிரம்

நட்ட நடு நிசியில் - தெரியும்

நட்சத்திரங்க ளடீ!                                          1


சோலை மல ரொளியோ - உனது

சுந்தரப் புன்னகைதான்?

நீலக் கடலலையே - உனது

நெஞ்சி லலைக ளடீ!

கோலக் குயி லோசை - உனது

குரலி னிமை யடீ!

வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!

மருவக் காதல் கொண்டேன்.        

(சுட்டும் விழிச் சுடரோ கண்ணம்மா)


நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

          நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

          சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,

          பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;

சிரித்த ஒலியினிலுள் கைவி லக்கியே,

          திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன். 

(கண்ணம்மா என் காதலி)


பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;

தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;

வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!         1


வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!

மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!       2


வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;

பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு

ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;

ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!           3


வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;

பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;

கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!   4


வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!      5


காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!              6


நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;

செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!

முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!  7


தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!  8

(வீணையடி நீ எனக்கு)

இந்தப் பாடலில் பாரதியார் குறிப்பிட்டிருக்கும் உவமைகள் கூறிய அந்த பொருளுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. அதாவது வீணை நீ என்றால், நான் அதன் மேல் மேவும் விரல் என்று சொல்கிறார். வீணையில் இருந்து எழும் ஓசை வீணைக்கு சொந்தமானது இல்லை. எனவே வீணையின் இசையை அவர்  குறிப்பிடவில்லை மாறாக இசைக்கு காரணமான விரல்களை காதலனுக்கு உவமையாக சொல்கிறார்.

பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் தகப்பனுடைய மனநிலை எப்படியிருக்கும்? பஞ்சுப் பொதி போல அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் வாங்கிய நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கி ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும்போது எந்தத் தகப்பனும் கோழையாகித்தான் போகிறான்.

அபியும் நானும் என்ற திரைப்படத்தில் ஒற்றை மகளை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் மனநிலையை அழகாகக் காட்டுகிறது இந்தப் பாடல்.

மூங்கில் விட்டுச் சென்ற பின்னே

அந்தப் பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன

பெற்ற மகள் பிரிகின்றாள்

அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன

மூங்கிலில்தான் இசை பிறக்கிறது. ஆனால் அது மூங்கிலோடு இருந்து விடுவதில்லை. மேற்கூறிய சிந்தனையை வைரமுத்து அழகாக உள்வாங்கி பிரதிபலிக்கிறார்.

பாரதியார் காதல் கவிதைகள் எழுதியதோடு மட்டுமல்ல, காதலை எதிர்ப்பவரையும் ஒரு கைப்  பார்க்கின்றார். அவருடைய வரிகள் எரிமலைக் குழம்பின் தணலைப் போல மிகுந்த  வீரியமாகவே வருகிறது.  

நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே.

பெண்களுக்கான சமநீதி, காதலிக்கும் உரிமை, விதவை மறுமணம் போன்ற அவருடைய காலம் தாண்டிய பார்வையே அவரை மகாகவி என்ற ஒரு மாபெரும் உயரத்தில் வைத்தது என்றால் அது மிகையில்லை.



நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற கவிஞர் கண்ணதாசனின் காதல் வரிகள் அவருடைய தமிழ்ப் புலமைக்கு ஒரு சான்று  

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை


இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல)

என்று அவருடைய காதல் கவிதைகளிலும் இயற்கை சார்ந்த கற்பனையையும், பெண்ணின் மனதை துல்லியமாக காட்டும் விதமும், வாழ்க்கை குறித்த ஆழ்ந்த தத்துவப் பார்வையும் பாடலை உயிர்ப்பாக வைக்கும். 



வருங்காலத்தில் நிறையத் தமிழ்க் கவிஞர்கள் தோன்றுவார்கள் ஆனால் அவர்கள் ஆனந்த யாழை மீட்டிய நா.முத்துகுமார் போல் வருவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. 1500க்கும் மேற்பட்ட பாடல்கள், 2 தேசிய விருதுகள், மாநில விருது, கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது என்று அவர் பெற்ற விருதுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். திரைப்படப் பாடல்களை தமிழ்ப்புலமையுடன் புனைந்த ஒரு சிலரில் நா. முத்துகுமார் நிச்சயம் இடம் பெறுவார். 

நா முத்துக்குமார் அவர்களின் காதல் கவிதைகள் ஒரு அலாதி அழகு என்பதற்கு திகட்டத் திகட்ட காதலி என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கவிதையே ஒரு சாட்சி. 

காதலித்து கெட்டு போ.. அதிகம் பேசு.. 

ஆதி ஆப்பிள் தேடு.. மூளை கழற்றி வை.. 

முட்டாளாய் பிறப்பெடு.. கடிகாரம் உடை.. 

காத்திருந்து காண்.. நாய்க்குட்டி கொஞ்சு.. 

நண்பனாலும் நகர்ந்து செல்.. கடிதமெழுத கற்றுக்கொள்.. 

வித விதமாய் பொய் சொல்.. விழி ஆற்றில் விழு.. 

பூப்பறித்து கொடு.. மேகமென கலை.. 

மோகம் வளர்த்து மித.. மதி கெட்டு மாய்.. 

கவிதைகள் கிறுக்கு.. கால்கொலுசில் இசை உணர்.. 

தாடி வளர்த்து தவி.. எடை குறைந்து சிதை.. 

உளறல் வரும் குடி.. ஊர் எதிர்த்தால் உதய்.. 

ஆராய்ந்து அழிந்து போ.. மெல்ல செத்து மீண்டு வா.. 

திகட்ட திகட்ட காதலி !!

நா. முத்துக்குமார் எழுதிய முதல் காதல் என்ற தலைப்பில் அமைந்த கவிதை காதல் கொண்ட மனதின் தவிப்பை, உணர்வை இதை விடச் சிறப்பாக வெளிப்படுத்தி விட முடியாது.

காற்றில் பறந்து

பறவை மறைந்த பிறகும்

கிளை தொடங்கிய

நடனம் முடியவில்லை! 

இந்தக் கவிதை பிரமிள் அவர்கள் எழுதிய 

சிறகில் இருந்து உதிர்ந்த இறகு 

காற்றின் தீராப் பக்கங்களில்

எழுதிச் செல்கிறது ஒரு பறவையின் வாழ்வை  

 என்ற கவிதை அளவுக்கு மிகவும் உயர்வான கவிதை.

7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் "நினைத்து நினைத்து பார்த்து" என்று தொடங்கும் இந்தப் பாடல் வரிகள் இறந்து போன காதலியை நினைத்து காதலன் வலியுடன் பாடுவதாக அமையும். இதைக் கேட்கும் போது கண்களில் ஈரம் கசிவதை நிறுத்த முடியாது.

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்

உதிர்ந்து போன மலரின் மெளனமா...

தூது பேசும் கொலுசின் ஒலியை

அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்

உடைந்து போன வளையல் பேசுமா...

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் இன்று எங்கே

தோளில் சாய்ந்து கதைகள் பேச 

முகமும் இல்லை இங்கே

முதல் கனவு முடிந்திடும் முன்னமே

தூக்கம் கலைந்ததே




கவிஞர் வாலி அவர்களின் பாடல்களில் "ரோஜா ரோஜா" என்று தொடங்கும்  புகழ்வாய்ந்த பாடல், 

உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன

நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா ரோஜா ரோஜா

சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலனுக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள் என்ற பொருள் தரும் குறள் ஒன்று காதல் சிறப்புரைத்தல் என்னும் அதிகாரத்தில் உண்டு. 

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து. (குறள்  1128)

வாலிபக் கவிஞர் வாலி அதை அப்படியா தீனா என்ற படத்தில் "காதல் வைரஸ் ஒன்று" என்ற பாடலில் பயன்படுத்தி இருப்பார். ஒரு நவநாகரிக யுவதியும் தன்னுடைய காதலை ஒரு சங்க இலக்கியப் பெண்ணுடன் ஒப்பீடு செய்ய முடியும் என்பதை அழகாக கூறி இருப்பார். இது ஒரு நல்ல கற்பனை மட்டும் அல்ல எந்த காலத்திலும் காதலுக்கு இப்படிப்பட்ட மகத்தான சக்தி உண்டு என்பதையும் இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

ஹாட் பாக்ஸில் வைத்த ஃபூட்
உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளம் எங்கும் நீ நின்றெடுக்க
உனை உஷ்ணம் தாக்கக்கூடும்



கவிஞர் வைரமுத்து அவர்கள் கடல் என்ற திரைப்படத்தில் நெஞ்சுக்குள்ள என்று தொடங்கும் ஒரு பாடல் எழுதி இருப்பார்.

காச நோய்க் காரிகளும்

கண்ணுறங்கும் வேளையில

ஆச நோய் வந்து மக அரநிமிசம் தூங்கலையே….

ஏல இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலயே

ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே


இது குறுந்தொகை பாடல் -138 ஆவது பாடலை காணப்படும் கருத்தினை ஒட்டி அமைத்துள்ளது.

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே

 
இந்தப் பாடலின் பொருளானது கீழே உள்ளது.

இரவு நேரத்தில் நாம் தூங்காமல்தான் இருக்கிறோம். ஊரில் உள்ள மக்கள் அனைவரும் தூங்கினாலும் நாம் தூங்குவது இல்லை. நள்ளிரவில் நொச்சிப்பூக்கள் உதிரும் மெல்லிய ஓசைகூட நம் காதுகளில் விழுகின்றது. ஆகவே, இரவு நேரத்தில் தலைவர் வந்தால் உன்னைச் சந்திக்கலாம்.” என்று தோழி தலைவியிடம் கூறுவதாகக் கருதலாம்.




கவிஞர் வைரமுத்து சங்க இலக்கிய பாடல் தமிழ் சினிமாவில் நிறைய இடங்களில் பயன்படுத்தி உள்ளார்.

தாமரைத் தாண் தாது ஊதி, மீமிசை

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல

புரைய மன்ற, புரையோர் கேண்மை

இந்த நற்றிணை பாடலின் பொருள், தாமரையின் குளிர்ச்சியான மகரந்தத்தை உண்டு, சந்தன மரத்தின் மீது வண்டுகள் கட்டிய இனிய தேனைப் போன்றது சான்றோர்களின் நட்பு என்று கபிலர் பெருமையுடன் பகர்வதாக அமைகிறது. 

மெல்லினமே மெல்லினமே

நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்

என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி     

அதை வானம் அண்ணாந்து பார்க்கும். 

அத்தகைய ஒரு உயர்வான காதலைத் தான் தன்னுடைய காதலி மேல் கொண்டிருப்பதாக ஒரு காதலன் \பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இது ஷாஜஹான் என்ற திரைப்படத்தில் வரும் மெல்லினமே என்ற பாடல்.



அப்படியே இருவர் திரைப்படத்தில் நறுமுகையே என்ற பாடல் கிட்டத்தட்ட குறுந்தொகைப் பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயு மெவ்வழி யறிதுஞ் . . .

என்ற வரிகளை வைரமுத்து கீழ்வருமாறு மாற்றி எழுதியிருப்பார்.

யாயும் ஞாயும் யாராகியரோ

நெஞ்சு நேர்ந்ததென்ன?

யானும் நீயும் எவ்வழி அறிதும்

உறவு சேர்ந்ததென்ன?

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை

நெஞ்சம் கலந்ததென்ன                               

உன் தாயும் என் தாயும் தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. செம்மண்ணில் பெய்த மழை செந்நிறத்தைப் பெற்றுப் பிரிக்க முடியாததுபோல நம்மிருவர் நெஞ்சங்கள் கலந்துவிட்டன. எனவே நம் காதல் நிலைக்குமா? நிறைவேறுமோ? எனக் கவலை கொளல் வேண்டாம் என்று காதலியைத் தேற்ற காதலன் பாடியதாக வரும் இந்தப் பாடலின் விளக்கம் இதுதான். 



கபாலி படத்தில் மாயநதி என்ற பாடலில் பாடலாசிரியர் உமாதேவி 



நானுன்னை காணும் வரையில் தாபத நிலையே 
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே 

என்று எழுதி இருப்பர். தாபத நிலை என்பது தவநிலை என்பதை இது குறிக்கிறது. தவத்தோர் போலப் புலன் அடக்கி வாழும் கைம்மைநிலை என்றும் பொருள் கொள்ளலாம். 

குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்

கருந்தடங் கண்ணி கைம்மைகூ றின்று

தன் கணவனைக் கூற்றுவன் பிரித்துவிட, தான் இறந்துபோகாது வருந்தும் மனைவி, தன்னை விட்டுவிட்டு இறந்து போனவனின் குருந்தப் பூ மாலையிடம் கோபித்துக் கொண்டு தான் பூச்சூடாமல் வெற்றுத் தரையில் படுத்துக் கரிய இலை உணவை உண்டு வாழ்கிறாள் என்பது இந்தப் பாடலின் பொருள். ஆண்களும் இதே போல தன்னுடைய துணைவியை இழந்தால் அது தபுதார நிலை என்கிறது புறப் பொருள் வெண்பாமாலை என்ற நூல்.

என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன்

உந்தன் அன்புதரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன்

தீ கூட தீண்டத் தீண்ட தித்திக்கும் என்று கண்டேன்

அன்பே நீ பக்கம் வந்தாய் புத்திக்கு ஓய்வு தந்தேன்

(மின்சாரம் என் மீது - ரன் திரைப்படம், கவிஞர் விவேகா)


உயிரைத் திருகி உந்தன்

கூந்தல் சூடிக்கொள்ளாதே

என் உதிரம் கொண்டு

உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே

விண்மீன் பறிக்க விழியில்லை

என்று கண்களை பறிக்காதே

என் இரவை எடுத்துக் குழைத்துக்

குழைத்து கண் மை பூசாதே


என்னை விடவும் என்னை அறிந்தும்

யார் நீ என்று கேட்காதே

இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்

என்னையும் கவிஞன் ஆக்காதே(2)…

(குல்மோகர் மலரே - மஜ்னு)

என்று கவிஞர் வைரமுத்துவின் காதல் வரிகள் பல இடங்களில் நெஞ்சை அள்ளும் விதமாக அமைத்துள்ளது.

  எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது

  பாதங்கள் இரண்டும் பறவை ஆனது

  விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது

  புருவங்கள் இறங்கி மீசை ஆனது.

  ஆனந்தக் கண்ணீர் மொண்டு  குளித்தேன்

  ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்

  கற்கண்டைச் சுற்றிக்கொண்டே நடந்தேன் சிறு எறும்பாய்

   நான்   தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்

   காதல் சொன்ன கணமே!"

 (திரைப்படம்: பாய்ஸ், வரிகள்: கவிஞர் கபிலன்)

என்ற கவிஞர் கபிலரின் வரிகள் ஆகட்டும் 


அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ

அஸ்த் அஸ்த் லைபே

அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா

இஷ்க் இஷ்க் மைலே - லவ்

இஷ்ட பிரேம பியாரோ பியாரோ

ஒரு காதல் உந்தன் மேலே

அத்தனை

மொழியிலும் வார்த்தை

ஒவ்வொன்று கொய்தேன்

மொத்தமாய் கோர்த்துதான்

காதல் சென்டொன்று

செய்தேன் 

உன்னிடம்

நீட்டினேன் காதலை

காட்டினேன்

என்று 16 மொழிகளில் காதலைப் பேசும் இந்தப் பாடல் காதல் பாடல்களில் ஒரு புதுமையான வெற்றிகரமான முயற்சி என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.


அஸ்க் (Ask): துருக்கிய மொழி (Turkish).
லஸ்கா (Laska): ஸ்லோவாக் மொழி (Slovak).
அமோர் (Amour): பிரஞ்சு/ஸ்பானிஷ் (French/Spanish).
ஐ (Ai): சீனம் (Chinese).
லைபே (Liebe): ஜெர்மன் (German).
அஹாவா (Ahava): எபிரேய மொழி (Hebrew).
போலிங்கோ (Bolingo): லிங்காலா (Lingala).
சிந்தா (Cinta): மலாய் (Malay).
இஷ்க் (Ishq): அரபு/இந்தி (Arabic/Hindi).
மைலே (Meile): லிதுவேனியன் (Lithuanian).
லவ் (Love): ஆங்கிலம்.
காதல்/இஷ்டம்/பிரேமம் /பியார்: தமிழ்/மலையாளம்/தெலுங்கு /இந்தி




கவிதைகள் சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஓவியம் வரையவா உன்

கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

(உள்ளம் கொள்ளை போகுதே)

என்ற பா.விஜயின் வரிகள் ஆகட்டும்


 

மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன் வேலையை காட்டுதடி

என்னை வாட்டும் வேலை ஏனடி 

நீ சொல்வாய் கண்மணி

முகம் காட்டு எந்தன் பௌர்ணமி 

எந்தன் காதல் வீணை நீ

வேதனை சொல்லிடும் ராகத்திலே

வேகுதே என் மனம் மோகத்திலே 


பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று 

நுரையீரல் தீண்டமால் திரும்புது காற்று

(பிரியாத வரம் வேண்டும்) 

என்ற அறிவுமதி பாடல்கள் ஆகட்டும்



அற்றைத் திங்கள் வானிடம்.
அல்லிச் செண்டோ நீரிடம்.
சுற்றும் தென்றல் பூவிடம்.
சொக்கும் ராகம் யாழிடம்.
காணுகின்ற காதல் என்னிடம்.
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

(சிவப்பதிகாரம்)

என்று யுகபாரதி கொண்டாடும் காதல் வரிகள் ஆகட்டும் தமிழின் இலக்கியத் தெறிப்பு நமது திரையிசைப் பாடல்களில் கலந்துள்ளதாலேயே அது காலம் கடந்து இன்றும் விரும்பப்படும் இசையாக உள்ளது. தமிழ் மொழியானது திரையிசை தாண்டி, தமிழ்க் கவிதைகள், தமிழ் எழுத்துக்களிலும், ஊடகங்களிலும் தமிழ் இலக்கியத்தின் பரவலான தாக்கம் உள்ளது. இதுவே நல்ல இசையை, நல்ல சிந்தனையை, நல்ல ரசனையை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அரும்பணியை செய்கிறது.



மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்

முயங்கிய நாடவச் சிலவே அலரே

கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்

பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன்

களிறொடு பட்ட ஞான்றை

ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே. 

குறுந்தொகை 393

இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பசும்பூண் பாண்டியன் எனப்படும்  தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் தளபதியான  அதிகன் என்பவன்கொங்கர்களை அடக்கி வெற்றி பெற  வாகைப் பறந்தலை என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் தோல்வியுற்று இறந்தான்அதிகன் இறந்ததால்கொங்கர்கள் ஆரவாரித்தனர். இந்த ஆரவார ஒலியை விட என்னைப் பற்றி அலர் பேசும் ஊர் மக்களின் ஆரவார ஒளியே அதிகமாக இருக்கிறது என்று தலைவி பேசுவதாக அமைகிறது. 

ஒரு பெரிய மன்னனின் தளபதிக்கு எதிராக போரிட்ட கொங்கர்கள் என்னும் எளிய மனிதர்களின் வெற்றியை ஒரு அகப் பாடலில் சொல்ல முடியும் என்றால் தமிழ் இலக்கியம் எவ்வளவு நுட்பமானது என்பதை நாம் அறிய முடியும். அகத்திணை பாடல்கள் தமிழரின் அக வாழ்வை களவு கற்பு என்று இரு நிலைகளில் நின்று பேசுகிறது.  இத்தகைய செறிவான ஒரு இலக்கிய மரபு வேறு எந்த மொழியிலும் காணப்படுவது இல்லை என்பதாலேயே தமிழ் இன்றும் உலகின் மூத்த மொழியாக போற்றப்படுகிறது. 

சில காதல் பாடல்கள் குறித்த என்னுடைய முந்தைய பதிவு:

நான் எழுதி செயற்கை தொழிநுட்பம் வழி இசை கோர்த்த அகத்திணை பாடல் 

வியாழன், பிப்ரவரி 19, 2026

புத்தம் புதிய நான் - கவிதை

 


வாழ்க்கையில் 
சறுக்கிய போது 
எள்ளி நகையாடியென்னை 
விமர்சித்திருக்கிறார்கள்
அவமானத்தினால் 
மருகிய போது 
கண்டும் காணாமலும் 
கடந்திருக்கிறார்கள் 
உயரங்களை நோக்கிய 
பயணத்தின் போது 
என்னுறுதியை 
குலைத்துப் போடும்
வஞ்சகத்தை செய்துள்ளார்கள் 
என் கனவுகளை நொறுக்கிவிட்டு 
நிர்கதியாய் தெருவில் 
நிறுத்தியிருக்கிறார்கள்

என் கண்ணீர்
பாலையில் விழுந்த மழையாய் 
கரைந்து விட்டது
என் மௌனம்
சிறகினை உதிர்க்கும் பறவையாய்
காற்றில் கலந்து விட்டது
என் கோபம்
கடலில் விழுந்த தீப்பொறியாய்
ஆழங்களில் குளிர்ந்து விட்டது
என் துன்பம்
பகலில் ஒளிரும் மின்மினியாய்
எவரும் காணாமல் மறைந்தது

நழுவிப் போன நம்பிக்கையை
காப்பாற்றிக் கை சேர்த்துக் கொண்டேன்
சிதறிப் போன புன்னகையை
பொறுக்கியெடுத்து ஒன்றாக்கிவிட்டேன்
விலகிப் போன உறுதியை
மீண்டும் நட்பாக்கிக் கொண்டேன்
எடையுள்ளதாய் இருக்கும் 
என்னிதயத்தை
எடையற்றதாய் மாற்றும்
ரசவாதம் மட்டும் கற்றுக்கொண்டால்
பூரணமாகி விடுவேன் 


வியாழன், பிப்ரவரி 12, 2026

அக்னிச் சிறகுகள்


பட்டிமன்றம் புகழ் திரு. ராஜா அவர்கள் அட்லாண்டாவிற்கு பட்டிமன்றம் பேச சென்ற வாரம் பிப்ரவரி  3, 2026 அன்று  வந்துள்ளார். அங்கு தங்கி இருந்த போது அவருக்கு உணவு எடுத்து வந்த ஒரு பெண்மணியைப் பார்த்து நீங்கள் காரைக்குடி என்கிறீர்களே, நீங்கள் எடுத்து வந்தது செட்டிநாட்டு உணவா என்று கேட்டதாகவும் அதற்கு அந்தப் பெண் இல்லை என்று சொல்ல, அப்பறம் நீங்க என்ன ஆளுங்க என்று கேட்டதாகவும், அது அந்தப் பெண்மணிக்கு மனவருத்தத்தையும, துயரத்தையும் அளித்ததாக திரு. கார்த்திகேயன் என்பவர் எழுதிய பதிவு நேற்று மிகவும் பரபரப்பாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் ஜாதியா என்ற கருத்தும், ராஜா அவர்களை காட்டமாக விமரிசித்தும் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

இது மட்டுமல்லாமல் முக நூலில், ட்விட்டரில்(எக்ஸ்) பலரும் நெருப்பில்லாமல் புகையாது என்றும் கருத்துச் சொல்லி வருகிறார்கள். இது குறித்து திரு, ராஜா அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்கும் காணொளி கீழே உள்ளது.



இந்த சம்பவம் குறித்து அட்லாண்டா தமிழ்ச் சங்கமும்(GATS) ஒரு விளக்கத்தை அளித்து உள்ளது. அந்த விளக்கப் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பட்டிமன்ற பேச்சாளர் திருமிகு அனுக்கிரகா ஆதிபகவன் அவர்கள் திரு. ராஜா அவர்களுக்கு ஆதரவாக வெளியிட்ட பதிவும்  கீழே உள்ளது .


இது மட்டுமல்லாமல் பட்டிமன்றப் புகழ் திரு.சாலமன் பாப்பையா அவர்களும் திரு ராஜா அவர்களுக்கு ஆதரவாக ஒரு காணொளி பதிவு செய்துள்ளார்.




இதைக் குறித்து மீண்டும் முகநூலில் திரு கார்த்திகேயன் அவர்கள் இன்னொரு விளக்கத்தை அளித்து, இதுவே நான் இந்த நிகழ்வு குறித்து அளிக்கும் கடைசி பதிவு என்றும் என்னுடைய தங்கையின் மனநிம்மதிக்காக நான் இதைப் பற்றி மேலும் பேச விரும்பவில்லை என்ற ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.  


எனினும் அமெரிக்காவில் சாதியா, சாதிகளை அமெரிக்காவிலும் தூக்கிப் பிடிக்கிறார்களா என்றெல்லாம் சூடான விவாதம் வலைத்தளத்திலும், முகநூலிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒரு தமிழ்ச் சங்கத்தை சார்ந்த தன்னார்வலர்கள், அவர்கள் ஊருக்கு வந்த  விருந்தினர்களுக்கு உணவு அளிக்க சென்ற இடத்தில், அவர்கள் எதிர்பாராத எந்த ஒரு அனுபவம் ஏற்பட்டு இருந்தாலும், அதை அவர்களின் தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம். பெரும்பாலும் அலுவலங்களில், பணியிடங்களில் ஒரு சம்பவம் நடக்கும் போது அதை சரி செய்ய ஒரு நெறிமுறை(protocol) இருக்கும். முதலில் மேலாளர், அப்புறம் அவருடைய உயர் அலுவலர், அதற்குப் பிறகு மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்று எப்படி இந்தப் பிரச்னையை சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு ஒரு சங்கலித் தொடர்(Chain of Command) போலத் தேவையான ஆட்கள் இருப்பார்கள். இந்த முறையில் அந்தப் பிரச்னையை கொண்டு செல்வதே சரியானது, விதிமுறைகளுக்கு  உட்பட்டு அனைவருமே எளிதாகச் செய்யக் கூடிய ஒரு வழிமுறையாகவும் இது இருக்கும். அட்லாண்டா தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சொல்லாமல் நேரடியாக முகநூலில் பதிவு செய்யும் போது இந்த நிகழ்வு குறித்த உண்மைத் தன்மை குறைந்து இது ஆதாயம் தேடும் முயற்சியோ என்ற சந்தேகமே  மேலோங்குகிறது. 

அந்தப் பெண் எதிர் கொண்ட கேள்வி அவருக்குச் சங்கடம் அளித்தால் அது குறித்து திரு. ராஜா அவர்களிடம் அப்பொழுதே கேள்வி எழுப்பி இருக்கலாம் அல்லது அவர்களுடன் சென்ற நண்பர்களுடன் பேசி அவர்களைக் கேட்கச் சொல்லி இருக்கலாம், இதுவும் இல்லையா அட்லாண்டா தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுவினருடன் பேசி திரு. ராஜா தரப்பை அணுகி இருக்கலாம், அல்லது அந்த பட்டிமன்ற நிகழ்விலேயே, நிகழ்ச்சிக்குப் பிறகு நேரடியாக திரு. ராஜாவை சந்தித்து விளக்கம் கேட்டிருக்கலாம். இப்படி எதுவுமே செய்யாமல் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் எழுதுவது முறைமையல்ல. இல்லையென்றால் எதிர்த்தரப்புடன் பேசி அவர்களின் கருத்தையும் அறிந்து கொண்டு, ஒரு நடுநிலையான பதிவினை எழுதியிருக்கலாம். சம்பந்தப்பட்டவரோடு பேசி பிரச்சனையை சுமூகமாக முடிப்பது நோக்கமாக இல்லாமல் இருப்பதற்கு வேறு ஏதேனும் வெளியில் தெரியாத காரணங்கள் இருக்குமா என்பதும், சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பின் எழுப்பப்பட்ட இந்த விடயம் சிலரின் தூண்டுதலால் நடைபெற்றதோ என்றும் இது நம்மை யோசிக்க வைக்கிறது.  

சமூக வலைத்தளங்களில் ஒரு பெண் ஒரு ஆணைக் குறித்து பேசினாலோ அல்லது பதிவு எழுதினாலோ அல்லது ஒரு பெண் சார்பாக ஒரு ஆண் உறவினர் அல்லது நண்பர் அதைச் செய்தாலோ அந்தப் பதிவுக்கு ஆதரவு குவிகிறது. பொய்ப் புகாரோ, உண்மைப் புகாரோ சமூக வலைத்தளங்கள் தாங்களே இந்த நபர் குற்றவாளி என்று முடிவு செய்து வேறு எங்கேனும் இருக்கும் ஆதங்கத்தை, வன்மத்தை இந்த பதிவுகளுக்குக் கொட்டித் தீர்க்கிறார்கள். You are guilty until proven innocent என்ற ஒரு மனநிலையிலேயே இதைப் பலரும் அணுகுகிறார்கள். கேரளாவில், சில தினங்களுக்கு முன், பெண் ஒருவர் திலீப் என்ற நபர் பேருந்தில் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்தார் என்று வெளியிட்ட வீடியோ பதிவினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, திலீப் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஒரு தனி நபர் பல ஆண்டுகளாக கட்டிக் காத்த நற்பெயரை ஒரே ஒரு பதிவினால் வீழ்த்த முடியும் என்பது தனி நபர் பாதுகாப்பையே கேள்விக்குறி ஆக்கும் கவலைக்குரிய விடயம்.

இந்தியாவில் அரசு அலுவலங்களில்,, பள்ளிகளில், கல்லூரிகளில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சர்வ சாதாரணமாக கேட்கப்படும் சாதி குறித்தான கேள்விகளை எளிதாக எதிர்கொண்டு சாதி வழங்கும் பாதுகாப்பு மற்றும் சலுகைகளை பல தலைமுறைகளாக அனுபவித்து, அது குறித்து எந்த ஒரு  நெருடலும்  இல்லாமல், யாரோ தனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் என்னுடைய  சாதியைக் கேட்டார் என்று விமர்சித்துப் பதிவிடுவது இரட்டை வேடம் இல்லையா? நான் படிக்கும் காலத்தில் 12ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் எப்போதும் ப்ராக்டிக்கல் வகுப்பில் குறிப்பிட்ட சில மாணவிகளுக்குக் குறைந்த மதிப்பெண்களையே வழங்குவார். ஆமாம், இதுங்க என்ன தவளையையும், கரப்பான் பூச்சியையும் சரியாவா வெட்டி ப்ராக்டிக்கல் செய்யப் போறாங்க என்று அதற்கு காரணமும் சொல்வார். அதே பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் விளையாட்டில் பங்கேற்க வரும் பெண்களில் ஒரு சிலரை உங்களால இதெல்லாம் முடியாது, நீங்கள் இதில் பங்கேற்காதீர்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவார். இதெல்லாம் சாதி என்ன என்பதைக் கேட்டு வந்தது அல்ல, அந்தப் பெண்களின் தோற்றம், பேச்சு வழக்கு மற்றும் அவர் தந்தையின் பெயர் போன்ற ஒரு சில விடயங்களை வைத்தே எளிதாகவே ஊகித்து முடிவு செய்யப்படும். ஒரு சமூகம் எப்படி தன்னைப் பார்க்கிறது என்று அறியாத பள்ளிப்  பருவத்திலேயே இது போன்ற பாகுபாட்டை(discrimination) அந்த மாணவிகள் எதிர்கொள்ள  நேர்ந்தது பெரும் துயரமே.

பிறப்பால் யாரும் உயர்ந்தோர் இல்லை யாரும் தாழ்ந்தோர் இல்லை என்று சொல்லும் போராளிகள் அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவில் ஏன் உலகெங்கும் வேலைவாய்ப்புகளில், அரசியலில், சினிமாவில் என்று யார் வெற்றிகரமாக பவனி வருகிறார்களோ அவர்கள் தங்கள் சமூகத்தில்  உள்ளவர்களையே அடுத்து முன்னேற வழி விடுகிறார்கள். தெலுங்குப் பட உலகம், பாலிவுட் பட உலகம் போன்றவற்றில் உள்ள நிலையை எண்ணிப் பாருங்கள். நான் அமெரிக்காவில் பணிபுரிந்த நிறுவனத்திலேயே ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவர்களை மட்டுமே திறமை அல்லது தகுதி இருக்கிறதோ இல்லையோ அவர் தன் மொழி பேசுபவர் என்ற ஒரே காரணத்தால் வேலைக்குச் சேர்த்த மேலாளரை அறிவேன். ஆங்கிலம் அல்லாத என்னுடைய தாய்மொழியிலேயே என்னால் பணியாளர்க் கூட்டம்(Staff Meeting) நடத்த முடியும், அது என் குழுவில் உள்ள அனைவருக்கும் புரியும் என்று அந்த மேலாளர் பெருமையாகச் சொன்னதை என்னுடைய அலுவலகத்தில் பலரும் அறிவார்கள். கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான நபர்களைக் கொண்ட குழு இது.  இந்த சம்பவம்  ஒரு பெரும் கடலில் சிறு துளி தான். இதைப் போல பலரும் பரிந்துரை(referral) முறையில் தங்களுக்கு தெரிந்தவர், தங்கள் மொழி பேசுபவர், தங்கள் உறவினர் என்று தகுதியைத் தாண்டிய பல்வேறு காரணங்களுக்காக, ஒரு நபருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதும், இன்னொருவருக்கு பதவியைப் பறிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.  அப்போது இது குறித்து நான் ஒரு சிறு கவிதை எழுதி இருந்தேன். அது என்னுடைய நூலான அம்புலிக்கு அப்பால் என்ற கவிதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

ஒருவனுடைய 
உண்மையான குணத்தை 
அறிய விரும்பினால் 
அவனுக்கு கொஞ்சம் 
அதிகாரத்தை அளித்துப் பாருங்கள்  

என்பது தான் அந்தக் குறுங்கவிதை. அமெரிக்காவிலும் இனவெறி,  தீண்டாமை என்று பலதும் இருக்கிறதே இது குறித்தெல்லாம் பேசவும், தொடர்ந்து இந்த போக்கிற்கு எதிராக குரல் எழுப்பவும் பலரும் முன் வருவதில்லையே ஏன்? தனக்கு எங்கெல்லாம் பதவி, பணம் என்று ஆதாயம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சமூக நீதி என்பதெல்லாம் பெயரளவில் மட்டுமே என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஒருவன் அடுத்தவர் மேல் அதிகாரம் செலுத்தும் நிலைக்கு வரும் போது அவன் எந்த சமூக படிநிலையில் இருந்து வந்திருந்தாலும் அவனுடைய இயல்பு எப்படியாவது தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் மட்டும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற மனநிலை தான். அதுவரை சம வாய்ப்பு, சம நீதி, தகுதி அடிப்படை(merit) என்றெல்லாம் கம்பு சுத்தும் மனநிலை கொண்ட அவன், முன்னேறிய பிறகு, அவனிடம் இருந்த நல்ல எண்ணங்கள் சுத்தமாக காணாமல் போய், மற்றவர்களை தனக்குக் கீழே அடிமையாக வைத்து இருப்பதையே விரும்புகிறான். அனைவருக்கும் இது பொருந்தாது என்றாலும் பெரும்பான்மையோருக்கு இதே மனநிலை தான். Outrage is selectively weaponized only when someone's needs are not met. Until such a time he/she is just a mute spectator.  

இனப் பாதுகாப்பு, சமூக நீதி, மொழி உரிமை என்பதெல்லாம் தனி மனிதனை ஈர்க்கும்படி கட்டமைக்கப்பட்ட வலிமையான பொறிகள். இதில் எந்த ஆதாயமும், உள்நோக்கமும் இன்றி அப்பாவிகள் களத்தில் நின்று போராடும் போது, பின்புலத்தில் இந்த விஷயத்தை பெரிதாக்கி தூண்டி விட்ட ஒரு சிலர் இதனால் அரசியல் ஆதாயமும் , பண ஆதாயமும் அடைவது தான் நடக்கிறது.  இவன் தான் உன் எதிரி என்று யார் சொன்னாலும் அதை நம்பாமல் நம்முடைய எதிரி யார், நம்முடைய நண்பன் யார் என்பதை நாமே முடிவு செய்வோம். 

அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் ஆண் பெண் பாகுபாடு, இனப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு என பல அவலங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் எனக்கு நடக்கவில்லை, இதை எதிர்ப்பதால் எனக்கு என்ன கிடைக்கும் அல்லது  இப்போது எனக்குப் பயன் தரும் ஒன்றைக் குறித்து கருத்துக் கூறி அதனால் எனக்கு வரும் ஆதாயத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற விட்டேத்தியான சுயநல மனோபாவம் தான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் தொடரக் காரணம். நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணம் கொண்டால் எந்த அநியாயத்தையும் எதிர்த்து குரல் கொடுக்கும் வலிமையை  நாம் பெறுவோம். அனைவரும் சமம் என்று நினைத்தால் தகுதி அடிப்படையிலேயே(merit) நமது எல்லா முடிவுகளையும் அமைப்போம்.  நாம் மட்டுமன்றி நம்மைச் சுற்றி உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நமக்கு எந்த நிலையிலும் தடுமாற்றம் வராது. அப்படிப்பட்ட சரிநிகர் சமானமான உலகம் மலர்வதே நமது குறிக்கோள் என்றால் அந்த மாற்றத்திற்கான பொறி  நம்மிடம் இருந்தே தோன்ற வேண்டும். புத்தனாக வேண்டும் என்றால் அரண்மனையைத் துறந்து நாடோடியாக அலைந்து ஞானத்தை தேடும் தியாக மனம் வேண்டும். ஏசுவாக வேண்டுமென்றால் முள் கிரீடத்தை துணிந்து தரிக்கும் மனோதைரியமும், சிலுவையைச் சுமக்கும் உள்ளமும் நமக்கு வேண்டும். நல்ல மனிதனாக வேண்டுமென்றால் எல்லா நிலைகளிலும் மோசமான விளைவுகளை தரும் எளிதான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் சரியான விளைவுகளை தரும் கடினமான பாதையை தேர்ந்தெடுக்கும் மனம் வேண்டும். Choose the harder right instead of the easier wrong and never let your wishbone grow where your backbone should be.

வியாழன், ஜனவரி 22, 2026

தேசாந்திரி - கவிதை


 கூட்டம் முண்டியடிக்கும் பேருந்துகள்
புகை கக்கும் வாகனங்கள் 
குண்டு குழியான சாலைகள் 
அவசரமாய் விரையும் மனிதர்கள் 
சாலையோரங்களில் கடைவிரிக்கும் சிறு வியாபாரிகள் 
விளக்குகள் மின்னும் பெரும் அங்காடிகள் 
தென்னை, மா, வாழை மரங்கள் வளர்க்கும் வீடுகள் 
குரைக்கும் நாய்கள் 
சுடும் வெயில் 
திடீரென்று பொழியும் மழை 
திட்டும் முதலாளி 
வேலை பார்க்கும் தொழிலாளி 
துரோகம் வஞ்சகம் கபடம் 
வாஞ்சை நம்பிக்கை அன்பு
நிறைந்த மனிதர்கள்
இப்படியாக எல்லா ஊரும் ஒன்று தான்
இத்தகைய ஊர்களைக் கொண்ட
எல்லா நாடுகளும்கூட ஒன்றுதான் 
தன்னை மட்டுமே அதிகம் 
நேசிப்பவர்களின் எண்ணிக்கையும்
தன்னைத் தவிர 
யாரோ ஒரு அந்நியனை நேசிப்பவர்களின்
எண்ணிக்கையும் மட்டுமே
ஊருக்கு ஊர் வேறுபடுகிறது

ஞாயிறு, ஜனவரி 11, 2026

உன்னதம் - கவிதை



தலைப்பு: உன்னதம்

பூமியிடம்
வேகம் கற்றுத்தரக் கேட்டேன்
வானிடம்
எல்லைக்குள் வாழும் முறைமை கேட்டேன்
காற்றிடம்
சரித்திரத்தில் தடம் பதிக்கும் மந்திரம் கேட்டேன்
நெருப்பிடம்
வாழ்விக்கும் வழிமுறைக் கேட்டேன்
நீரிடம்
ஓய்வின் உன்னதம் கேட்டேன்
யாரிடம்
எதைக் கேட்பதெனத்
தெரியாதா என்றது கவிதை
இருளின் சிறப்பை
ஒளியே அதிகம் அறியுமென்றேன்
இப்போது கவிதை
சிந்திக்கத் தொடங்கிவிட்டது



கவிதையைக் காணொளியாக இங்கே பார்க்கலாம்



ஞாயிறு, டிசம்பர் 07, 2025

நடை மறந்த நதி - மகாகவி ஈரோடு தமிழன்பன்




மழை மண்ணில் விழுந்த பின் அது என்னவாகிறது? உணவாகிறது, மணமாகிறது, மருந்தாகிறது, பார்க்கும் எல்லாமுமாகிறது. மழையைப் போல வெகு சிலருக்கு சொற்கள் அமைந்து விடுகிறது. துவளும் போது ஊக்கமும், மகிழ்ச்சியின் போது இனிமையும், குழப்பத்தில் புது வழிகாட்டுதலுமாகிறது. அத்தகைய வீரிய சொற்களுக்கு சொந்தக்காரர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். ஓயாத அலை போல தமிழ்ச் சொல்லாலே கவி நெய்து தமிழன்னைக்கு மகுடம் சூட்டியவர். தன்னுடைய உலராத வார்த்தைகளால் வறண்ட உலகின் மனசாட்சியை ஈரப்படுத்தியவர். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என்று தமிழின் புது வேகப் பாய்ச்சலுக்கு வித்திட்டவர். பாரதி, பாரதிதாசன், பெரியார், பாப்லோ நெருடா, வால்ட் விட்மன் எனப் பல ஆளுமைகளைப் பார்த்து, படித்து பாடலாக்கி, புதுக் கவிதைக்கு புத்துணர்வு ஊட்டியவர். எத்தனை உயரத்தில் இருந்தாலும் அனைவரையும் சமமாகப் பாவிக்கும் எளிய மனம் படைத்தவர்.



உலகனாய் இருக்கும் நான்
நிச்சயமாய் இந்தியன்
அதைவிடச் சத்தியமாய்த்
தமிழன்
தமிழனாக இருப்பதற்குத்
தடைபோட்டால்
இந்தியனாகத் தொடர்வது பற்றிச்
சிந்திக்க வேண்டிவரும்
என்று தமிழினத்தின் உணர்வைப் பேசி நமது உரிமை வானத்தை இன்னும் கொஞ்சம் விரிவடையச் செய்த வானம்பாடி.
முள்ளையும்
மலரையும்
வெளிப்படையாகவே
காட்டிக் கொண்டிருக்கிறது
ரோஜா;
நாம்?
என்று மனித மனங்களை போகிற போக்கில் தோலுரித்துக் காட்டியவர்.

துவண்டு கிடந்த மனிதனுக்கு ஆறுதல் வார்த்தைகள் தேவை என்றால்

பத்தாவது முறை விழுந்தவனை
முத்தமிட்டு சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா?
என்ற அவர் பாடலைச் சுட்டலாம். அடுத்தவரின் வளர்ச்சியில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்.

படித்துப் படித்து - நீயே
புத்தகமாகி விடு
புத்தகமான பின்னும்
படித்துக் கொண்டிரு

என்று ஒரு ஆசிரியர் எப்படி தன் மாணவனுக்கு எடுத்துச் சொல்வாரோ அப்படி அன்புடன் அறிவுறுத்துவார்.

அவர் தொடாத உயரங்கள் இல்லை, எழுதாத பொருண்மை இல்லை, எண்ணிலடங்கா கவிதைகளை, ஆழ்ந்த ஜென் தத்துவங்களை, சிந்தனைச் சிதறல்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார். 2022 பேரவை விழாவில் அவர் தலைமையில் கவிதை வாசித்தது, என்னுடைய மகள் எழுதிய புத்தகத்தை அவர் வெளியிட்டது, அவருடைய பெயரில் அளிக்கப்படும் தமிழன்பன் 80 விருதினை பெற்றது, வல்லினச் சிறகுகள் இதழ்/உலகப் பெண் கவிஞர் பேரவைப் பணிகளின் போது ஐயாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது என்று பல்வேறு நினைவுகள் விரிகிறது.
சடலத்தைக் கைப்பற்றி
என்
சரித்திரத்தின் கடைசிப் பக்கத்தை
நெருப்பு
சுடச்சுட எழுதும்போது
அதைப்
படித்தபடி நான் முடிவதற்கு
இரு சொட்டு தமிழ்த் தேன்துளிகள்
என் செவியில்
விழ வேண்டும்
என்று எழுதியதோடு நில்லாமல் கடைசி நொடி வரை தமிழ்ச் சேவை ஆற்றி, ஒரு மகா கவிஞனின் வார்த்தைகள் என்றுமே பொய்ப்பதில்லை என்பதை அழுத்தமாக நிறுவியவர்.

அவரைக் குறித்து நான் எழுதிய சில வரிகள்.

இளந்தென்றல் தழுவாத இளவேனில் காலப் பகலாய் இளமஞ்சள் வெய்யோனின் இன்முகங் காணா இரவாய் இருவிழி இடைநின்ற முள்ளாய் இமைப் பொழுதும் ஆறாத ரணமாய் இலங்கும் கறைப்பட்டு கலங்கும் ஈரோட்டு இளங்கவியின் கவிகேளா நாளும் கன்னலும் கனி சிந்தும் தேனும் கனியமுதும் தெவிட்டாத பாலும் குன்றும் நின்தமிழின் முன் குறையும் மாற்றுப் பொன்னல்லோ வளையாத நின் எழுதுகோலும் பல்லாயிரம் பொருண்மையில் கவிதீட்டி பாரோர் வாழ நல்வழி காட்டி அன்பிலா நெஞ்சுக்கும் அருள் கூட்டி அணியணியாய் தமிழுக்கு அழகூட்டி சென்ரியு, லிமரிக்கூவென பல் வகைமை தந்தாய் கவிஞருள் மேருவாய் பலர் நெஞ்சில் நின்றாய் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு ஆழ்ந்த வாசிப்பு, தேர்ந்த உச்சரிப்பு பரந்த நுண்ணறிவு மேன்மையில் பணிவு அருங்குணங்கள் பல கொண்டாய் அவனியில் ஆன்ற புகழ் கண்டாய் வள்ளுவனைப் பார்த்ததில்லை வான்புகழ் கம்பனைக் கண்டதில்லை பாரதியை அறிந்ததில்லை பாரதிதாசனுடன் பழகியதில்லை உன் அகம் கண்ட பின்னாளில் இக்குறைகள் எழுவதில்லை தமிழ் மைந்தனே பெருங் கவிஞரே தமிழ் ஆழியில் உந்தன் அலை ஓய்ந்ததில் துயரக்கடலில் நாங்கள் ஆண்டு பல செல்லட்டும் ஆயிரம் பிறை உதிக்கட்டும் போதவிழ் சோலைக்கெல்லாம் யாத்த உன்பண் விதையாகட்டும் இளங்காற்று அதை ஏந்தி இதயமெல்லாம் நிறைக்கட்டும் விண்ணும் மண்ணும் நின்புகழ்பாடி களிக்கட்டும்

புரட்சிக்கவி பாரதிதாசன் தமிழ் மன்றம் 12/06/2025 அன்று நடத்திய நினைவேந்தல்


வல்லினச் சிறகுகள் மின்னிதழ் மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை ஆகிய அமைப்புகள் 12/05/2025 அன்று நடத்திய நினைவேந்தல் கூட்டம் 




தமிழன்பன் அவர்கள் ஏன் மகாகவி என்று அழைக்கப்படுகிறார் என்பதை கீழே உள்ள இந்த ஆவணப்படத்தை பார்த்தால் தெளிவாக விளங்கும். இரண்டு பகுதிகளாக உள்ள அவரைப் பற்றிய இந்த காணொளியில் அவரின் படைப்புகளைப் பற்றி பெரிய எழுத்தாளர்கள், வெளிநாட்டு படைப்பாளிகள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் பேசி இருக்கிறார்கள்.
முதல் பகுதி:
 
இரண்டாம் பகுதி:



மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று. எளிமை, இனிமை, புதுமை என்று மூன்றின் கலவை அவர். அவரின் கவிதைகள் காலம் உள்ளவரை நிலைத்து நின்று நெஞ்சகத்து இருள் நீக்கும் செஞ்சுடராய் ஒளி வீசிக்கொண்டே இருக்கும்.