ஞாயிறு, மார்ச் 01, 2026

மகா கவிதை - கவிஞர் வைரமுத்து : நூல் விமர்சனம்


மண், காற்று, நீர், நிலம், ஆகாயம் என்று அனைத்தும் மௌனம் கலைத்து பேசினால் எப்படி இருக்கும். பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றின் அழகியலை, அது உயிர்களுக்கு அளிக்கும் கொடையை, பஞ்ச பூதங்களின் அதிசயத் தன்மையை மீள் பார்வை செய்யும் இந்தக் கவிதைப் புத்தகம் ஒரு அறிவியல் கையேடாகவும், அதைக் தமிழ்க் கவிதை வடிவத்தில் காணும் போது, அழகிய தமிழ் கவியமுதத்தை பருகும் நல்வாய்ப்பாகவும் நெஞ்சம் அள்ளுகிறது. இன்னொரு முறை இந்த பூமி எத்தகைய கருணை வாய்ந்தது என்று எண்ணிப் பார்க்க ஓர் அரிய சந்தர்ப்பமே இந்த மகா கவிதை எனலாம். ம - மண், கா-காற்று, க - கனலாகிய நெருப்பு,  வி- விசும்பு சுட்டும் வெளி, தை யில் உள்ள தகரம் - தண்ணீர் என்று  இந்த நூலின் உள்ளடக்கம் இந்த நூலின் தலைப்பிலேயே அமைந்துள்ளது என்று நூலாசிரியர் உரையிலேயே கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகிறார். இந்த பூமி எப்படிப்பட்ட கொடை என்பதை எண்ணிப் பார்க்கவும், பூமியின் கருணையை எண்ணி நெகிழவும், பூமி ஏனைய கிரகங்களை விட எவ்வாறு பல்லுயிர் காக்கும் அன்னையாக விளங்குகிறது என்பதையும் தெள்ளத்தெளிவாகவே விளக்குகிறார்.


புதன் எப்போதும் ஒரு பக்கம் பகல்; 425 பாகை வெப்பத்துடனும், எதிர்மத்தில் 175 பாகை குளிர் கொண்டது. இத்தனை வெப்பத்திலோ, குளிரிலோ உயிர்கள் பிறந்து உயிர்த்திருப்பது கடினம்.  ஒளியை சிதறச் செய்ய காற்றற்ற கோள்.
 
வெள்ளி(வீனஸ்) சூரியனின் சுடுபக்கத்திற்கே முகம் காட்டும் கோள். ஓராண்டுக்கு ஒருமுறையே சுழல்வது. 400 பாகை வெப்பம் கொண்ட கொதி கோள். எண்ணெய் கடலும், அமில மழையும் அங்கே சாதாரணம்.

செவ்வாய் கோள் துருப்பிடித்த இரும்பு. அதன் வாயுமண்டலத்தில் உயிர் வளியோ சொற்பத்திலும் சொற்பம். புற ஊதாக் கதிர்களின் அணுஉலை வெப்பம் உயிர்களை கருக்கிடும் அங்கு.

1330 பூமிகளை நிறைத்து வைக்கும் கொள்ளளவு கொண்ட வியாழன் கிரகத்தில்  அமோனியா-நைட்ரஜன்-மீத்தேன் கலந்த நச்சு சகதி. அதன் கீழே உள்ள உலோகப்பாறை, அங்கு நிலவும் 10,000 பாகை வெப்பத்தில் நதியாக உருகி ஓடிக்கொண்டிருக்கிறது.

சனிக்கிரகம் மனித எலும்புகளை ஊடுருவி உடைக்கும் குளிர் கொண்டது. வளி மண்டலத்தில் 95 விழுக்காடு ஹைட்ரஜனும் 5 விழுக்காடு ஹீலியமும் கொண்டது.


யுரேனஸ் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கொண்ட வாயு மண்டலமும் ஒரு இரவு விடிய வேண்டுமென்றால் 42 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதே எண்ணிக்கையில் ஆண்டுகள் பகல் இருள வேண்டும் என்றாலும்  தேவைப்படும்.

நெப்ட்யூன் சூரியனை ஒரு சுற்று வர 165 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். 

புளூட்டோ சூரியனை ஒரு சுற்று சுற்றி வர 250 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

ஆக தண்ணீரும், உயிர்வளியும், குளிரில் இருந்து காக்கும் கதிரும், பயிர் விளைக்க மண்ணும், உணவாகும் தாவரமும், கனி தரும் தருவும், உயிர் பேண பலவிதமான உயிர்களை படைத்தளித்துள்ள பூமியைத் தவிர அறிவியல் தொடும் தூரம் வரை மனிதனும் ஏனைய உயிரினங்களும் வாழத் தகுதி படைத்த கோள்கள் எதுவும் இல்லை.

மண்ணென்னும் மங்காய்
நீ நன்மையே புரிகுவாய் 

பனியோ மழையோ 
வெயிலோ பாலைவனமோ 
பொருள் இல்லா உயிர்களுக்கும் 
அருள் பாலிப்பாய்  

கஞ்சிக்கில்லையெனில் 
கடல் கொடுப்பாய் 
மண் இழந்த குடிகளுக்கு 
மலை கொடுப்பாய் 

தாயே! நீ நல்லை 
பொய்யொன்றுமில்லை  

என்று பூமியைத் தங்கம் என்று கொண்டாடுகிறார். ஏனைய கோள்களில் பிறக்க நேர்ந்தால் என்னவாகும் என்பதையும் அவர் எச்சரிக்கையாக இவ்வாறு சொல்கிறார்.

ஒருக்கால் நாங்கள் 
புதனில் பிறந்திருந்தால்.............

ஒரு பக்க வெப்பத்தில் 
எங்கள் மாமிசம் எரித்திருக்கும் 
மறுபக்கக் குளிரில் 
எலும்புக்கூடுகள் 
உறைந்திருக்கும் 

வெள்ளியில் பிறந்திருந்தால்.....
உலையிரும்பில் வீழ்ந்த 
எறும்புநிலை எய்தியிருப்போம் 
அங்கே வளிமண்டலம் கடந்து 
உள்ளேகும் வெப்பம் 
வெளியேற வழியில்லை 

சக்கர வியூக அபிமன்யுபோல 
உட்புகும் வெப்பத்தைக்
கரியமில வாயு கைதுசெய்து விடுகிறது 
பெயர் தான் காதல் தேவதை 
உண்மையில் பூதகி 

செவ்வாயில் பிறந்திருந்தால்.....
இரும்பு குடித்த உயிர்வளி  போக 
எமக்கேது மிச்சம்?
அதன் குளிர்தாங்கும் ஜீவராசிக்குச்
சூரியனின் தோல்வேண்டும் 

வியாழனியில் பிறந்திருந்தால்....
அது திடப்பொருளே இல்லை 
பத்தாயிரம் மைல் 
ஆழங்கொண்ட நச்சுக் குழம்பு 
பூமியை ஆங்கு புதைத்தேவிடலாம் 

பூமியே! தாயே!
என் தங்கமே! 
நீ மட்டும்தான்
கோளாறில்லாத கோளம்

பூமி சூரியனிலிருந்து இருக்கும் தொலைவு, அதன் சாய்மானம், அதன் புவியீர்ப்பு விசை என்று பலவும் கச்சிதமாக  அமைந்திருப்பதாலேயே இங்கு உயிர்கள் வாழவும், அவற்றின் தொடர்ச்சி தொடரவும் இன்னும் இடமிருக்கிறது.

முக்கால் பாகம் 
நீர்கொண்ட கோளம் இது 

ஆயின்,
நீரகம் என்றுதானே 
பெயர் துலங்க வேண்டும்?
மண்ணகம் என்று பெயர்சூட
ஏது காரணம்?

எனக் கேள்வி கேட்டு 

மானுடத்தின் 
உச்சங்களையும் எச்சங்களையும்
எழுதிச்செல்வது 
மண்ணென்ற ஊடகமன்றோ?

என்று பதிலையும் தருகிறார். அப்படியே மனிதர்களுக்கு மட்டும் மண் சொந்தமல்ல என்பதையும் உரக்கச் சொல்கிறார்.

மூடிவைத்த கனிமங்களும் 
முட்டிவரும் தாவரங்களும் 

தேக்கி வைத்த நீரும் 
திரட்டிவைத்த நுண்ணுயிரும் 

ஓடியாடும் விலங்குகளும் 
உலவித்திரியும் காற்றும்

சேமித்த வானமும் 
சேகரித்த தீயும் 

உனக்கே உனக்கல்ல 
நிகழ்கால மனிதா !

நீ கால்நடையாய் வந்த 
ஒரு பயணி

பூமியை 
நீ நுகர  முடிவது 
ஐம்புலன் அளவுக்குத்தான் 

நுகர்ந்தாயா 
போ ....போய்விடு....
வாழும் உயிர்கட்கும்    
வந்துகொண்டிருக்கும்
பயணிகட்கும் வழிவிடு

உன் குழி 
எவ்வளவு கொள்ளுமோ 
அவ்வளவே உன் மண்  
 
என்று எச்சரிக்கையும் விடுக்கிறார்.

அடுத்ததாக ஒவ்வொரு ஐம்பூதம் பற்றியும் மனித குலத்திற்கு அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும்  பேசுகிறார் கவிஞர். 
 
வள்ளுவ ஞானியும் 
கடவுள் வாழ்த்தருகே 
வான்சிறப்பு வைத்தனன் ஏன்?

முதல் அதிகாரம் கிழிந்துபடில் 
மழையே கடவுளாகும் சாத்தியம் கருதித்தான் ....

ஒரு விழுக்காடு நன்னீர்தான் 
யுகம் யுகமாய்ப் 
புழங்கப்படுகிறது  
மரணத்தைப் போல 

புத்தர் 
தாகசாந்தி செய்ததும் 
மற்றும் 
போதிமரம் குடித்த மிச்சமும் 
இன்றைய தண்ணீரின் 
அன்றைய பாகம் தான்  

என்று நாம் குடிக்கும் இன்றைய நீர் அன்றைய டைனோசர் குடித்த நீரின் ஒரு பகுதி தான் அன்று புத்தருக்கு தாக சாந்தி வழங்கிய நீர், அலெக்சாண்டர் குடித்த நீர், இயேசு கிறிஸ்து குடித்த நீர் என்ற ஆச்சரிய உண்மையையும் சொல்கிறார்.  நீர் இன்று கழிவு நீர் ஓடும் கால்வாயாய், பன்றிகள் குடியிருக்கும் பள்ளியறையாய், ரத்தக் கண்ணீர் போல கழிவு சாயம் மிதக்கும் நீர் என்று நீரே நஞ்சாகிப் போயிருக்கும் நிலைமை எண்ணி துக்கம் கொள்கிறார். இறுதியில் 

வடிவமற்று 
நிறமற்று 
பூமிக்கு வந்துபோன 
தேதிகளற்று 
மண்ணின் மூலகமாய் 
மீண்டும் சுற்றிவரும் மேகமாய் 
வாழ்வின் பயன்பாடு பொருளாய் 
அழிவுக்கு சென்று - மீண்டும் 
அழியாப் பொருளாய் 
நான் நீயாக வேண்டும் 
நீர்க் கடவுளே!



என்ற வேண்டுகோள் வைப்பதன் மூலம் நீரை அவர் எந்த உயரத்தில் வைக்கிறார் என்பது புலப்படும்.

நீருக்கு அடுத்ததாக வைக்கப்படும் ஐம்பூதம் தீயாகும்.

ஒரு மொத்த மலையை 
மிச்சமின்றி அணைப்பதற்கு 
ஒரு பறவையின் 
சிறிய சிறகு சிரமமுறுவது போலவே 
எந்தச் சொல்லால் உன்னை 
முழுமையாய் அளாவுவதென 
மூச்சிரைக்கிறது மொழி 

என்று தீயை பற்றிய முன்னுரையில் சொல்கிறார். 



பேரண்டப் பெரும்பொருளே
ஆதிப் பரம்பொருளே 
உயிர் மூலமே 
உச்ச ரகசியமே என 
என்னென்ன சொல்லி விளித்தாலும் 
முழுமையுறாது
கடல் வேட்டைக்குப் போனவன் 
கிளிஞ்சல் கொணர்ந்த கதையென 

  
ஆதித் தீயை 
அண்ணாந்து வணங்குங்கள் 
கோள்களே

உங்களை உமிழ்ந்து 
உடல் கொடுத்ததும் 
உருள்வித்து உயிர் கொடுத்ததும் 
ஒளியூட்டி தொழில் கொடுத்ததும் 
இன்று வரைக்கும் இருள் கிழிப்பதும்   
அந்தத் தாய்த் தீ தான் 

கவிஞனுக்குப் பிறக்கும் 
சில கைநாட்டுப் பிள்ளைகள் மாதிரி
நெருப்புக்கு பிறந்தாலும் 
இருளின் குழந்தைகள் 
இந்தக் கோள்கள் 
 
வெறும் 
பௌதீக ரசாயனப் 
பருப்பொருள்கள் 

என்று சூரியனைத் தவிர மற்றைய கோள்கள் யாவும் நட்சத்திரமாகாமல் வெறும் கிரகமாகவே நின்றுவிட்டவை, சமருக்கு செல்லும் வழியில் சாமியாராகிப் போன சக்கரவர்த்திகள் என்கிறார்.

பூமி உயிர்களை
கோள்கள் ஒன்றையொன்றை 
சூரியன் பூமியை 
பால்வீதி சூரியனை 
அண்டத் திரட்டு பால்வீதியை 
ஈர்த்துவைக்க 
ஈர்ப்பின் அச்சாணியில் 
இயங்கும் இந்தப் பேரண்டம் 

பேரண்டத்தின் பிரதியே 
மனிதன் எனில் 
ஈர்ப்புச் சங்கிலியின் 
கண்ணிகளே நாமெல்லாம்

ஈர்த்தலும் ஈர்க்கப்படுத்தலும் 
பிறப்பு ரகசியம் 

ஈர்க்கப்படுவோன் எளியோன் 
ஈர்ப்போன் வலியோன் எனப் 
பேச்சுலாவும் பேரண்டத்தில் 
ஈர்க்கப்பார் 

என்பதே கவிஞரின் செய்தியாக அமைகிறது. கணம் தோறும் ஈர்க்கும் பூமி, அதை ஈர்க்கும் சூரியன், மானுடத்தை ஈர்க்கும் காலம் மற்றும் மரணம் என இவற்றில் எதையாவது ஈர்க்க முடிந்தால் நாமே இறையாகப் பொலிவது உறுதி. 

மேலும் சொல்கிறார் 

பூமிக்குப் பெரிது சூரியன்
பால் வீதிக்கோ சிறிது
சிறு சிறு சிறிது
இருபதாயிரம் கோடி
அரிசி காயும் களத்தில்
ஓரத்தில் ஊர்வலம் போகும்
ஒன்பது எறும்புகள் போல்
நமது சூரிய குடும்பம்
சூரியன் மட்டுமே கட்டெறும்பு
பிரகிரகங்கள் சிற்றெறும்பு 
பேரண்டத்தில் 
பேரேட்டில் அவை 
விடுபட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை
சூரிய குடும்பம்
தன் தெருவில் குடியிருப்பதே
பால் வீதிக்குப் பரிச்சயமில்லை
கண்ணாடி அணிந்து
கண்டறியும் கடப்பாடுமில்லை

பால்வீதியின் கண்களில் 
நட்சத்திரங்கள் 
பொருத்தித் தேடினாலும் 
சூரியக் குடும்பத்தின் 
சுண்டுவிரலும் தோன்றவில்லை  

என்று அவர் சொல்லும் போது நிச்சயமாக ஒரு சிறிய துகளிலும் சிறிதான நாமா சின்ன விடயங்களுக்காக அத்தனை கோபப்படுகிறோம், அடுத்தவரை காயப்படுத்துகிறோம், அடுத்தவரை குறைவாக மதிப்பிடுகிறோம் என்று தோன்றுகிறது. 

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல் 

ஒருவரின் பெருமை என்பது அவருடைய செயலைப் பொறுத்தது என்று இரு வரிகளில் திருக்குறள் கூறுவதை கவிஞர் இப்படிச் சொல்கிறார்.

பெரியனவெல்லாம் பெரியவையல்ல 
பிறிதோர் பொருளின் ஒப்பீடு 
சிறியதையெல்லாம் பெரியது செய்யும் 
செய்யும் செயலின் பயன்பாடு 

பால் வீதிக்கு சிறியது என்றாலும், பத்து லட்சம் பூமிகளை தனக்குள் உண்டியலில் போடுவது போலப் போட்டாலும் அதை தனக்குள் கொள்ளும் சூரியன் நமக்காக மட்டும் தீக்குளித்துக் கொண்டிருக்கும் தியாக நட்சத்திரம். எத்தனை எரிந்தாலும் சாம்பலே விழாத தீரா நெருப்பு என்று போற்றுகிறார் கவிஞர்.

எரிமலையின் 
அமில திரவமென புறப்பட்டு 
பிறந்த குழந்தையின் 
பாத வெப்பம்போல் 
பூமிதொடும் சூரியச் சூடு 
என்னென்னவோ கற்பிக்கிறது 

அதாவது கொடுப்பதிலும் சிறந்ததை கொடு என்கிறார். 

ஊருக்கு கொடுப்பதில் 
உயர்ந்து கொடு 
சீரென்று கொடுப்பதில் 
சிறந்தது கொடுவென 
உன் மொழியில் ஓதுகிறாய் உலகுக்கு 

இலனென்னும் எவ்வம் உரையாமை  என்று குறள் கூறும் தன்மையில் இந்த பூமிக்கு தேவையான ஆறாயிரம் பாகை வெப்பத்தை தூர வெளிகளில் சூடாற்றி  மேகச்  சல்லடையில் வடிகட்டி பூமியின் தாங்குதிறன் பார்த்து வெயிலாக மாற்றி  அளிக்கிறது சூரியன்.  பருத்தி வெடிப்பதும், நூல்கள்  பிரிப்பதும், ஆடை வடிப்பதும், அலசி முடிப்பதும், உலர்த்திக் கொடுப்பதும் சூரியனின் கருணை தான்.

தீயே நீ நிலம் 
தீயே நீ நீர்மை
தீயே நீ வெளி
நீயே காற்று 
அம்பூதங்களின் ஒன்றான நீ 
நாற்பூதங்களுக்கும் நாயகன்  

அடுத்ததாக கவிஞரின் பாடுபொருள் வளி.

நாசி வாசல் வந்து 
உயிரூட்டும் தாயாய் 

கண்காணாமல் 
உணரப்படு கடவுளாய் 

ஒரே பொழுதில் 
உலகுக்கே பரிமாறும் 
பந்தி அமுதமாய் 

பூமிசூழ் 
காப்புக் கவசமாய் 

பூமிக்குள் இருந்தும் பூமியோடும் பிறந்த காற்று எரிமலைப் பாறைகளில் இருந்து  காலம் விடுவித்து பூமியில் போர்த்திய பொக்கிஷமே இந்தக் காற்று. பிறந்த போது ஈர்ப்புக்குச் சிக்காத ஹைட்ரஜன், ஹீலியம் போன்றவையும், வேதிவினைக்கு உட்பட்ட கரியமில வாயுவும் காணாமல் போயிற்று. 19 கிலோமீட்டர் உயரத்திற்கு பூமியை என்னும் ஆப்பிளைச் சுற்றிய  ஒரு தோல் போன்றது இந்த வளி. அந்த வளி இல்லையேல்  

இன்னொரு நிலாவாகும் பூமி 
ஒளியும் மழையுமற்ற நிலாவுக்கு 
வானுண்டு; வானிலை இல்லை 

பூமியும் நிலாவானால் 
மற்றுமொரு
பிரேதக் கிரகம் உருவாகும் 

பூமியிடம் நான் விடைபெற்றுக் கொண்டால் 
ஒலியை என் கால்களிலும் 
மழையை என் கைகளிலும் 
எடுத்துக்கொண்டோடி விடுவேன்   

கலைந்து போகும் 
என் காற்றுக் கூரை

அப்போது 
பூமிக்கு மேலிருக்கும் 
வானம் நிர்வாணம் 

அடைக் கோழியைக் கொத்திவிரட்டிப் 
பாம்பொன்று முட்டையைச் சூழ்வதுபோல்
பூமியை சூரியன் புறங்காணும் 

அரண் இல்லாத ஆகாயத்தில் 
பூமி மேல்படையெடுக்கும் 
வெயிலும் குளிரும் 

என்று காற்றின் முக்கியத்துவத்தை கவிஞர் பாடுகிறார். பூமியைத் தாக்க வரும் விண்கல்லைக் கூட எரியுண்டு போகச் செய்யும் சக்தி படைத்த வளி, ஒரு சித்திரக்காரனும் கூட. கீழ் மேல் வானங்களில், சூரிய ஒளியைக் குழைத்து வண்ணங்கள் செய்யும் ஜாலக்காரன். 

ஆணியின்றி அடிக்கப்படும் 
ஓவியங்களை நழுவவிடாத 
வானமொன்று வாங்க வேண்டும் 

என்று வண்ணங்களை தொடாமல் வண்ணத்தை அப்படியே ஓவியமாக காட்சிப்படுத்தும் வளிக்கு புகழாரம் சூட்டுகிறார் கவிஞர். வளியில் வந்துதித்த கரியமில வாயுவே பூமிக்கு பச்சை அளித்த வள்ளல், வண்ணங்கள் யாவும் காற்றின் அலைவரிசையால் மட்டுமே சாத்தியமாகிறது என்பதெல்லாம் வளிக்கு மட்டுமே இருக்கும் தனிப்பெரும் பெருமை.





வளி அப்படியே மென்மையாகவே நீடித்து இருப்பதில்லை. சில நேரங்களில் அதுவும் வெறி கொண்டு  சுழன்றாடி புயலாகும்.   அதன் கூவலில் ஆகாயத்தின் காது செவிடாகும்.

டொர்னாடோ ரூபங்கொண்டால் 
எருமைகள் பறக்கும் 
வானத்தில் பறவைகளாய் 
நான் கடக்கும் நேரம் 
காதுகள் கழற்றி ஏறி 
பத்து லட்சம் காளைகள் 
ஒரே சமயம் கதறும் ஓசை 
பத்தாயிரம் ரயில்கள் 
ஒரே பொழுதில் 
கடக்கும் வல்லொலி 
போகும் வழியெங்கும் 
பூமலர்த்திப் போனவன்தான் 
கடக்கும் வழியெங்கும் 
திட்டமிடாத மையங்களை 
விட்டுச் செல்கிறேன் 

வளியின் ஆக்க சக்திகளும் அரிதினும் அரிதானவை தான்.

திணிந்த மண்ணோ 
செறிந்த கல்லோ 
உருக்கு உலோகமோ 
தோல் துளை நரம்பு 
கஞ்சக் கருவிகளோ 
விலங்கோ பறவையோ 
மனிதனோ மரமோ 
என் தலைமையில் 
அதிர வேண்டும் 
அந்த அதிர்வை 
ஒலியாக்குவேன் 
ஒளியை மொழியாக்குவேன் 


மனிதத் தேவையில் நான்தான்
முன்னிற்கும் முதல் மூலம் 
உணவில் திரிபா 
உதறிவிடலாம்  
நீரில் அழுக்கா 
நிராகரிக்கலாம் 
காற்றில் மாசோ 
புகையோ தூசியோ 
சுவாசித்தே தீர வேண்டும்
அது 
நுரையீரல் தர்மம் 
சுவாசச் சட்டம் 

அப்படிப்பட்ட வளியில் மாசு ஏற்பட்டால் அதை சரி செய்யும்  தீர்வும் மனிதர்களிடம் இருக்கிறது. புட்டியில் அடித்து வளி விற்கப்படும் போது அதை வாங்குவதற்கு வழியின்றி மனிதக் கூட்டம் மடிந்து சாவதைத் தவிர வேறு வழி இல்லை.

மானுடம் காப்பாற்றிய காற்றை 
மானிடன் காப்பாற்றும் காலம் 
அபாய தூரத்தில் அண்மித்துவிட்டது 

மேலும் கெட்டிப் பட்டுவிடில் 
திடப்பொருளாய் 
செலுத்த வேண்டியிருக்கும் காற்றை 

ஊசி வழி காற்றூட்டுவது
உசிதமா தெரியவில்லை 
இருள் சூழாத இரவும் 
பொய் சேராத உலகும் 
சத்திய சம்பவம் இல்லையெனுமாறு   
சுத்த சுவாசக் காற்றும் 
கிண்ணத்தளவும் கிட்டாது போகும் 

இதை நாம் தடுக்க அறுந்தே போகாத வாயுத் சங்கலியில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கண்ணி என்பதை உணர வேண்டும். 

நிலக்கரிச் சுரங்கம் 
நீச்சல் குளமாகட்டும் 

பெட்ரோலியப் பொருள்களில் 
மிட்டாய் செய்வோம் 

சூரியனைச் சேமிப்போம் 
சுவடில்லாமல் தீயெரிப்போம் 

புல்வெளியில் நடந்தாலும் 
கறைபடியாத 
பனித்துளியின் பாதங்களைப்போல் 
கரிப்படியாத அடுப்புகளைக் 
காணிக்கை செய்வோம் 

சூரிய சக்தியைச் 
செல்லமாய் சிறைசெய்து 
ஊருக்கு ஊர் கட்டமைப்போம் 
சாம்பல் பறக்காத 
மின்நிலையங்களை 

இவ்வாறாக காற்றை காப்பாற்றவில்லையெனில் பஞ்சமா பாதகம் ஐந்தல்ல, காற்றை மாசுபடுத்தினால் ஆறென்றறிக என்கிறார் கவிஞர். காற்றை பற்றி இவ்வாறு சொல்லி முடிக்கிறார்.

எந்த ஒன்றைக் 
இன்னொன்று கொண்டு 
நிரப்பவியலாதோ - அதைக் 
கடவுள் என்பர் சிலர் 
காற்றென்போம் நாம் 

கடைசியாக கவிஞர் பேசும் கருப்பொருள் வெளியாகும். வெளி என்பது எத்தகையது  என்று கவிஞர் விவரிக்கும் போது நமக்கும் நடுமண்டையில் ஓங்கிக் குட்டியது போல் இருக்கிறது. இவ்வளவு சிறியவரா மனிதராகிய நாம் என்ற எண்ணம் வருகிறது.

பலகோடி நட்சத்திரங்கள் 
தனித்தும் கூட்டமாயும் இயங்கவல்ல 
ஒளித்தொகுப்பு பால்வீதி 
 
 பல்லாயிரங்கோடி அண்டங்களின் 
பெருவெளியே பேரண்டம் 

இதில் சூரியமண்டலம் 
சுண்டைக்காய் விதை 

இடிக்கப்பட்ட கற்கண்டுத்துகளின்
நொறுக்கப்பட்ட துகளின் துகளே 
சூரிய மண்டலம் 

இதில் 
பூமியென்ற 
பொருட்டில்லாத மலர்மீது 
ஒட்டிக்கொண்டிருக்கும் 
மகரந்தத் துகள்களே 
மனிதக் கூட்டம்  
 
என்கிறார் கவிஞர். இத்தனை சிறிய மனித இனத்துக்குத் தான் எத்தனை துயரங்கள், எத்தனை கவலைகள், வாழ்ந்து முடிவதற்குள்  எத்தனை ஆசைகள். இத்தனை கோடி நட்சத்திரங்கள், அவற்றின் இடுக்குகளில் நிறைய புழுதிகள், தப்பித்த வாயுக்கள், ஒரு பனித்துளிக்குள் அடக்க முடியாத வானத்தைப் போல பால்வெளியானது பல ஒளியாண்டுகளைக் கடந்தும் விரிந்து கொண்டே இருக்கிறது.

பேரண்டப் பெருங்கடலில் 
கொத்துக் கொத்தாய் கிடக்கும் 
முத்துக்கூட்டம்தான் பால்வீதி 
 
இடம் பொருள் தூரம் அளக்க 
மனிதன் பிடித்துவைத்து 
கடவுளென்ற கோலும் 
மூடிய பேரண்டத்தின் 
நகத்தை மட்டுமே 
அளக்க முடியும் 

பிறந்தநாள் எப்போது என்று தெரியாத பேரண்டம் இந்த கணத்திலும் பிறந்து கொண்டு இருக்கிறது. இந்த கணத்தில் இறந்து கொண்டும் இருக்கிறது. மனிதர்கள் வந்து வந்து போகிறார்கள், கிரகங்கள் தோன்றித் தோன்றி அழிகிறது, நட்சத்திரங்கள் உண்டாகி உண்டாகி உடைகிறது, அண்டங்கள் உருவாகி உருவாகி சிதறுகிறது.  எனினும் அண்டம் என்பதும் வெளி என்பதும் எல்லையில்லாமல் விரிந்து எங்கும் வியாபித்து நிற்கிறது. அதில் ஒன்றாக இருக்கும் புதன் கிரகத்தை பற்றி இப்படிச் சொல்கிறார் கவிஞர்.

நானூற்று இருபத்தைந்து பாகை 
பகல் வெப்பம் 
கபாலம் உருகி காலுக்கு வந்துவிடும் 

எதிர்மத்தில் ஐநூறு பாகை 
இரவுக் குளிர் 
ஓடும் ரத்தம் 
செம்பனியாய் உருகிவிடும் 

வீனஸ் என்னும் கிரகத்தின் தன்மை இவ்வாறு குறிக்கிறார்.  




வீனஸுக்கு கடல் உண்டு 
எண்ணெய்க் கடல்  
ஆவியாகும் மேகம் 
அமில மழை பெய்யும் 
வெள்ளிதான் 
விடிவெள்ளி இல்லை 

செவ்வாய் கோளின் தன்மை இது தான் 

இந்த உலர்ந்த கிரகத்தில் 
வெப்பம் 
அறுபத்தெட்டுப் பாகைக்கும் மேலே 
குளிர் உறைநிலைக்கும் கீழே 

வாயுமட்டும் உண்டு 
உப்பில் சர்க்கரை அளவுதான் 
உயிர் வளி 

அடுத்ததாக வியாழன் கிரகம் 

வெப்பமோ வெப்பம் 
உறுதிப் பாறைகளை
ஓடுகுழம்பாக்கும் 
தொடர்ச்சியான வெப்பம்  

பத்தாயிரம் பாகை 
வியாழ வெப்பம் 
ஹைட்ரஜனை உருமாற்றியுள்ளது 
உலோகப் பொருளாய் 

அடுத்ததாக சனி கிரகம் 

வாழ வழியற்ற
இதன் வளிமண்டலத்தில் 
தொண்ணூற்றேழு விழுக்காடு 
ஹைட்ரஜன் 
மூன்று விழுக்காடு 
ஹீலியம் 

உயிர்த்தோற்றமென்பது 
கிரகத்தினும் பெரிய கேள்விக்குறி 

முடிந்தால் 
ஹைட்ரஜன் எரித்து 
சுருக்கமாய் ஒரு சூரியன் செய்யலாம் 

அடுத்ததாக யுரேனஸ் 

ஹைட்ரஜன் ஹீலியத்தை 
உடுத்துக்கொண்ட வாயுமண்டலம் 
ஒருபோதும் உதவாது 
உயிர்த் தோற்றத்திற்கு 



அடுத்ததாக நெப்டியூன்

பதினான்கு நிலாக்களை  
இழுத்து வைத்திருக்கும் 
நெப்டியூன் வளிமண்டலம் 
ஒரு குளிர் மண்டலம் 

அதன் வெப்பம் 
எதிர்மத்தில் 
இருநூற்றுப் பதிமூன்று பாகை 

கனத்த போர்வை வேண்டும் 
கம்பளி ரோம விலங்குகட்கும் 
  
இறுதியாக புளூட்டோ 

சூரியனை ஒருமுறை சுற்றினாலே 
புளூட்டோ 
கால் நரைத்துப் போகும் 
இருநூற்றைம்பது ஆண்டுகள் 
எளிதா என்ன?

ஒவ்வொரு கோளையும் பற்றி கவிஞர் சொன்ன பிறகு பூமியைப் பற்றி இப்படிச் சொல்கிறார். 

சூரியனே கடவுள் 
பூமியே தெய்வம் 

மேக மகராணிகள் 
பர்வதங்களில் விட்டெறிந்த 
இரத்தின மாலைகளும் 
 
இருகரை இட்டோடும் 
திரவ வைரங்களும் 

பூமியின் கொடைகள் 
பூமிக்கு மட்டுமே 
சாசுவதங்கள்

அம்மோனிய நுரைகளும்  
மீத்தேன் சகதிகளும் 
உடம்புக்குள் உயிர்உறையும் குளிரும் 
உறுப்புக்கள் உருக்கும் வெப்பமும் 
ஏனைய கோள்களின்
இயல்புநிலை ஆகுமெனில் 
பூமி என்பது சாமியா இல்லையா 

எல்லாக் கோள்களையும் 
எட்டிப் பார்த்த பிறகு 
அத்துணை கதவுகளை 
தட்டிப் பார்த்த பிறகு 
பூமியே என் தெய்வமே என் 
மார்பு மண்பட வணங்குவான் 
மனிதன் 

பூமிகடந்தவன் சொல்வான் 
சொர்க்கம்
பூமிதான் 

என்று பூமியின் அருமைகளை அழகாக, உவமை நயத்துடன் சொல்லி முடிக்கிறார் கவிஞர். இந்தப் புத்தகம் அறிவியலும் தமிழும் சங்கமிக்கும் ஒரு அருமையான கவிதைத் தொகுப்பு. பூமிக்கும், சூரியனுக்கும், ஐம்பூதங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு உன்னத முயற்சி. உயிர்களின் தோற்றம் முதல் இன்று வரை  நமது பாதுகாப்பு அரணாக விளங்கும் பூமியை நாம் எப்படி கருத்துடன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் பல இடங்களில் வலியுறுத்திச் சொல்கிறார் கவிஞர். இந்தக் கவிதை தொகுப்பில் கவிஞர் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் அழகிய உவமைகள் மூலம் நமக்கு சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஏனைய கிரகங்களைப் பற்றி விரிவாகப் எழுதி இருப்பது அருமை. பல அறிவியல் கருத்துக்களைத் தாங்கி வரும் இந்நூல் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. 

முத்தாய்ப்பாக அவர் சொல்கிறார் 

மதங்களால் கட்டமைக்கப்பட்ட
அன்றாடங்களில் 
அக்கறை கொண்ட ஒருவராய்க் 
கருதேன் கடவுளை ஒருபோதும் 
வேண்டுமானால் 
பிரபஞ்சத்தின் 'ஒழுங்குவிதியை' யைக் 
கடவுள் என்பேன் 

அப்படியாயின் 
கடவுள் 
'அவர' ல்லர்
'அது' 

என்று அவர் இந்த நூலை முடிப்பது மிகச் சிறப்பு. அறிவுரை பெறுவதற்கோ, அழகியலுக்கோ, அறிவியல் அறிவதற்கோ உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் இந்த நூலைப் படிக்கலாம். இந்த நூல் நீங்கள் எப்பொழுதும் படித்து, சுவைத்து மகிழக் கூடிய ஒரு சிறப்பான கவிதை நூலாக உங்கள் நூலகத்தில் இடம் பெற முழுத் தகுதி வாய்ந்தது.

திங்கள், பிப்ரவரி 23, 2026

நினைவில் நின்ற காதல் பாடல்கள் - கட்டுரை


எங்கள் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய வட்டத்தில் காதலர் நாளை முன்னிட்டு "காதலும் அகத்திணையும்" என்ற பெருந்தலைப்பின் கீழ் "நினைவில் இருந்து நீங்காத காதல் பாடல்கள்" என்ற உபதலைப்பினில் ஒரு உரை நிகழ்த்தச் சொல்லி இருந்தார்கள்.  தமிழ் இலக்கணத்தின் ஐந்து முக்கிய பிரிவுகளான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை மொழியைப் பிழையின்றி எழுதவும், பேசவும், இலக்கியம் படைக்கவும் பயன்படும் விதிகளாகும். இதில் பொருள் இலக்கணம் என்பது தமிழுக்கு மட்டுமே உரியது.

பொருள் இலக்கணம் அகப் பொருள், புறப் பொருள் என்று இரண்டு வகைப்படும். அதில் அகத்திணை அல்லது அகப் பொருள் என்பது ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து வாழும்  அக வாழ்வினைப் பற்றி பேசுகிறது.

எனக்கு பிடித்த பாடல் என்ற தலைப்பினை சங்க இலக்கியத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று எண்ணியதும் மனதில் தோன்றிய முதல் பாடல் இந்த நற்றிணைப் பாடல் ஆகும்.

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,

அன்னை கூறினள், புன்னையது நலனே- 5


அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;

விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,

வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்

துறை கெழு கொண்க!- நீ நல்கின்,

இறைபடு நீழல் பிறவுமார் உளவே. -10

நற்றிணை -172 ஆவது பாடல்

இந்தப் பாடல் தலைவி தலைவனிடம் சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கிறது. தலைவி சொல்கிறாள், நான் சிறு பிள்ளையாக, என் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள்  ஒரு புன்னை மரத்தின் விதையை விளையாட்டாக நட்டு வைத்தேன். அப்படி நட்டத்தை நான் மறந்தே விட்டேன். ஆனால், என் தாய் மறக்கவில்லை.  என்னை வளர்த்ததைப் போலவே அவள் அந்த புன்னை மரத்தையும் நெய் கலந்த பாலை ஊட்டி வளர்த்தாள். என்னை அந்த மரத்தின் அடியில் காணும் போதெல்லாம் அந்த மரம் எனக்கு தங்கை போன்றது என்று சொல்லுவாள். அந்த மரம் வேறு எதுவும் இல்லை. இந்த மரம் தான். என் தங்கையின் முன்னால் உன்னோடு இங்கு இருப்பது சரியானது அல்ல . வா, இது போல வேறு நிறைய மரங்கள் இங்கே இருக்கின்றன...அங்கு போய் விடலாம்" என்று கூறுகிறாள். புன்னை மரத்தையும் தன்னுடைய தங்கையாகப் பார்த்த அந்தப் பெண்ணின் அன்புள்ளம் தெளிவாக விளங்குகிறது. இது மட்டுமல்ல காதல் வயப்படும் பெண்ணுக்கு காணும் யாவும், மரமாக இருந்தாலும் அது உயிர் கொண்டயாகவே தோன்றுகிறது என்ற பொருளையும் கொள்ள முடியும் என்பதால் இந்தப் பாடல் ஒரு சிறப்பான பாடல் என்ற நிலையை அடைகிறது.




பாரதியாரின் கவிதைகளில் வரும் கண்ணம்மா ஒரு கற்பனை பாத்திரம். அது அவருடைய மனைவி செல்லம்மாவாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம் அல்லது அவருடைய இஷ்ட தெய்வமான கண்ணனை அவர் கண்ணம்மாவாக எண்ணிப்பாடி இருக்கலாம். எதுவாகினும் கண்ணம்மா என்ற பாத்திரம் ஈடற்ற அன்பு, மாசற்ற காதல், உள்ளார்ந்த அன்புணர்வுக்கு பாத்திரமாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகை இல்லை.  

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!

சூரிய சந்திர ரோ?

வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் - புடவை

பதித்த நல் வயிரம்

நட்ட நடு நிசியில் - தெரியும்

நட்சத்திரங்க ளடீ!                                          1


சோலை மல ரொளியோ - உனது

சுந்தரப் புன்னகைதான்?

நீலக் கடலலையே - உனது

நெஞ்சி லலைக ளடீ!

கோலக் குயி லோசை - உனது

குரலி னிமை யடீ!

வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!

மருவக் காதல் கொண்டேன்.        

(சுட்டும் விழிச் சுடரோ கண்ணம்மா)


நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

          நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

          சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,

          பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;

சிரித்த ஒலியினிலுள் கைவி லக்கியே,

          திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன். 

(கண்ணம்மா என் காதலி)


பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;

தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;

வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!         1


வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!

மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!       2


வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;

பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு

ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;

ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!           3


வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;

பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;

கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!   4


வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!      5


காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!              6


நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;

செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!

முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!  7


தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!  8

(வீணையடி நீ எனக்கு)

இந்தப் பாடலில் பாரதியார் குறிப்பிட்டிருக்கும் உவமைகள் கூறிய அந்த பொருளுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. அதாவது வீணை நீ என்றால், நான் அதன் மேல் மேவும் விரல் என்று சொல்கிறார். வீணையில் இருந்து எழும் ஓசை வீணைக்கு சொந்தமானது இல்லை. எனவே வீணையின் இசையை அவர்  குறிப்பிடவில்லை மாறாக இசைக்கு காரணமான விரல்களை காதலனுக்கு உவமையாக சொல்கிறார்.

பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் தகப்பனுடைய மனநிலை எப்படியிருக்கும்? பஞ்சுப் பொதி போல அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் வாங்கிய நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கி ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும்போது எந்தத் தகப்பனும் கோழையாகித்தான் போகிறான்.

அபியும் நானும் என்ற திரைப்படத்தில் ஒற்றை மகளை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் மனநிலையை அழகாகக் காட்டுகிறது இந்தப் பாடல்.

மூங்கில் விட்டுச் சென்ற பின்னே

அந்தப் பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன

பெற்ற மகள் பிரிகின்றாள்

அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன

மூங்கிலில்தான் இசை பிறக்கிறது. ஆனால் அது மூங்கிலோடு இருந்து விடுவதில்லை. மேற்கூறிய சிந்தனையை வைரமுத்து அழகாக உள்வாங்கி பிரதிபலிக்கிறார்.

பாரதியார் காதல் கவிதைகள் எழுதியதோடு மட்டுமல்ல, காதலை எதிர்ப்பவரையும் ஒரு கைப்  பார்க்கின்றார். அவருடைய வரிகள் எரிமலைக் குழம்பின் தணலைப் போல மிகுந்த  வீரியமாகவே வருகிறது.  

நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே.

பெண்களுக்கான சமநீதி, காதலிக்கும் உரிமை, விதவை மறுமணம் போன்ற அவருடைய காலம் தாண்டிய பார்வையே அவரை மகாகவி என்ற ஒரு மாபெரும் உயரத்தில் வைத்தது என்றால் அது மிகையில்லை.



நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற கவிஞர் கண்ணதாசனின் காதல் வரிகள் அவருடைய தமிழ்ப் புலமைக்கு ஒரு சான்று  

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை


இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல)

என்று அவருடைய காதல் கவிதைகளிலும் இயற்கை சார்ந்த கற்பனையையும், பெண்ணின் மனதை துல்லியமாக காட்டும் விதமும், வாழ்க்கை குறித்த ஆழ்ந்த தத்துவப் பார்வையும் பாடலை உயிர்ப்பாக வைக்கும். 



வருங்காலத்தில் நிறையத் தமிழ்க் கவிஞர்கள் தோன்றுவார்கள் ஆனால் அவர்கள் ஆனந்த யாழை மீட்டிய நா.முத்துகுமார் போல் வருவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. 1500க்கும் மேற்பட்ட பாடல்கள், 2 தேசிய விருதுகள், மாநில விருது, கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது என்று அவர் பெற்ற விருதுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். திரைப்படப் பாடல்களை தமிழ்ப்புலமையுடன் புனைந்த ஒரு சிலரில் நா. முத்துகுமார் நிச்சயம் இடம் பெறுவார். 

நா முத்துக்குமார் அவர்களின் காதல் கவிதைகள் ஒரு அலாதி அழகு என்பதற்கு திகட்டத் திகட்ட காதலி என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கவிதையே ஒரு சாட்சி. 

காதலித்து கெட்டு போ.. அதிகம் பேசு.. 

ஆதி ஆப்பிள் தேடு.. மூளை கழற்றி வை.. 

முட்டாளாய் பிறப்பெடு.. கடிகாரம் உடை.. 

காத்திருந்து காண்.. நாய்க்குட்டி கொஞ்சு.. 

நண்பனாலும் நகர்ந்து செல்.. கடிதமெழுத கற்றுக்கொள்.. 

வித விதமாய் பொய் சொல்.. விழி ஆற்றில் விழு.. 

பூப்பறித்து கொடு.. மேகமென கலை.. 

மோகம் வளர்த்து மித.. மதி கெட்டு மாய்.. 

கவிதைகள் கிறுக்கு.. கால்கொலுசில் இசை உணர்.. 

தாடி வளர்த்து தவி.. எடை குறைந்து சிதை.. 

உளறல் வரும் குடி.. ஊர் எதிர்த்தால் உதய்.. 

ஆராய்ந்து அழிந்து போ.. மெல்ல செத்து மீண்டு வா.. 

திகட்ட திகட்ட காதலி !!

நா. முத்துக்குமார் எழுதிய முதல் காதல் என்ற தலைப்பில் அமைந்த கவிதை காதல் கொண்ட மனதின் தவிப்பை, உணர்வை இதை விடச் சிறப்பாக வெளிப்படுத்தி விட முடியாது.

காற்றில் பறந்து

பறவை மறைந்த பிறகும்

கிளை தொடங்கிய

நடனம் முடியவில்லை! 

இந்தக் கவிதை பிரமிள் அவர்கள் எழுதிய 

சிறகில் இருந்து உதிர்ந்த இறகு 

காற்றின் தீராப் பக்கங்களில்

எழுதிச் செல்கிறது ஒரு பறவையின் வாழ்வை  

 என்ற கவிதை அளவுக்கு மிகவும் உயர்வான கவிதை.

7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் "நினைத்து நினைத்து பார்த்து" என்று தொடங்கும் இந்தப் பாடல் வரிகள் இறந்து போன காதலியை நினைத்து காதலன் வலியுடன் பாடுவதாக அமையும். இதைக் கேட்கும் போது கண்களில் ஈரம் கசிவதை நிறுத்த முடியாது.

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்

உதிர்ந்து போன மலரின் மெளனமா...

தூது பேசும் கொலுசின் ஒலியை

அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்

உடைந்து போன வளையல் பேசுமா...

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் இன்று எங்கே

தோளில் சாய்ந்து கதைகள் பேச 

முகமும் இல்லை இங்கே

முதல் கனவு முடிந்திடும் முன்னமே

தூக்கம் கலைந்ததே




கவிஞர் வாலி அவர்களின் பாடல்களில் "ரோஜா ரோஜா" என்று தொடங்கும்  புகழ்வாய்ந்த பாடல், 

உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன

நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா ரோஜா ரோஜா

சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலனுக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள் என்ற பொருள் தரும் குறள் ஒன்று காதல் சிறப்புரைத்தல் என்னும் அதிகாரத்தில் உண்டு. 

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து. (குறள்  1128)

வாலிபக் கவிஞர் வாலி அதை அப்படியா தீனா என்ற படத்தில் "காதல் வைரஸ் ஒன்று" என்ற பாடலில் பயன்படுத்தி இருப்பார். ஒரு நவநாகரிக யுவதியும் தன்னுடைய காதலை ஒரு சங்க இலக்கியப் பெண்ணுடன் ஒப்பீடு செய்ய முடியும் என்பதை அழகாக கூறி இருப்பார். இது ஒரு நல்ல கற்பனை மட்டும் அல்ல எந்த காலத்திலும் காதலுக்கு இப்படிப்பட்ட மகத்தான சக்தி உண்டு என்பதையும் இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

ஹாட் பாக்ஸில் வைத்த ஃபூட்
உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளம் எங்கும் நீ நின்றெடுக்க
உனை உஷ்ணம் தாக்கக்கூடும்



கவிஞர் வைரமுத்து அவர்கள் கடல் என்ற திரைப்படத்தில் நெஞ்சுக்குள்ள என்று தொடங்கும் ஒரு பாடல் எழுதி இருப்பார்.

காச நோய்க் காரிகளும்

கண்ணுறங்கும் வேளையில

ஆச நோய் வந்து மக அரநிமிசம் தூங்கலையே….

ஏல இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலயே

ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே


இது குறுந்தொகை பாடல் -138 ஆவது பாடலை காணப்படும் கருத்தினை ஒட்டி அமைத்துள்ளது.

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே

 
இந்தப் பாடலின் பொருளானது கீழே உள்ளது.

இரவு நேரத்தில் நாம் தூங்காமல்தான் இருக்கிறோம். ஊரில் உள்ள மக்கள் அனைவரும் தூங்கினாலும் நாம் தூங்குவது இல்லை. நள்ளிரவில் நொச்சிப்பூக்கள் உதிரும் மெல்லிய ஓசைகூட நம் காதுகளில் விழுகின்றது. ஆகவே, இரவு நேரத்தில் தலைவர் வந்தால் உன்னைச் சந்திக்கலாம்.” என்று தோழி தலைவியிடம் கூறுவதாகக் கருதலாம்.




கவிஞர் வைரமுத்து சங்க இலக்கிய பாடல் தமிழ் சினிமாவில் நிறைய இடங்களில் பயன்படுத்தி உள்ளார்.

தாமரைத் தாண் தாது ஊதி, மீமிசை

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல

புரைய மன்ற, புரையோர் கேண்மை

இந்த நற்றிணை பாடலின் பொருள், தாமரையின் குளிர்ச்சியான மகரந்தத்தை உண்டு, சந்தன மரத்தின் மீது வண்டுகள் கட்டிய இனிய தேனைப் போன்றது சான்றோர்களின் நட்பு என்று கபிலர் பெருமையுடன் பகர்வதாக அமைகிறது. 

மெல்லினமே மெல்லினமே

நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்

என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி     

அதை வானம் அண்ணாந்து பார்க்கும். 

அத்தகைய ஒரு உயர்வான காதலைத் தான் தன்னுடைய காதலி மேல் கொண்டிருப்பதாக ஒரு காதலன் \பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இது ஷாஜஹான் என்ற திரைப்படத்தில் வரும் மெல்லினமே என்ற பாடல்.



அப்படியே இருவர் திரைப்படத்தில் நறுமுகையே என்ற பாடல் கிட்டத்தட்ட குறுந்தொகைப் பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயு மெவ்வழி யறிதுஞ் . . .

என்ற வரிகளை வைரமுத்து கீழ்வருமாறு மாற்றி எழுதியிருப்பார்.

யாயும் ஞாயும் யாராகியரோ

நெஞ்சு நேர்ந்ததென்ன?

யானும் நீயும் எவ்வழி அறிதும்

உறவு சேர்ந்ததென்ன?

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை

நெஞ்சம் கலந்ததென்ன                               

உன் தாயும் என் தாயும் தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. செம்மண்ணில் பெய்த மழை செந்நிறத்தைப் பெற்றுப் பிரிக்க முடியாததுபோல நம்மிருவர் நெஞ்சங்கள் கலந்துவிட்டன. எனவே நம் காதல் நிலைக்குமா? நிறைவேறுமோ? எனக் கவலை கொளல் வேண்டாம் என்று காதலியைத் தேற்ற காதலன் பாடியதாக வரும் இந்தப் பாடலின் விளக்கம் இதுதான். 



கபாலி படத்தில் மாயநதி என்ற பாடலில் பாடலாசிரியர் உமாதேவி 



நானுன்னை காணும் வரையில் தாபத நிலையே 
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே 

என்று எழுதி இருப்பர். தாபத நிலை என்பது தவநிலை என்பதை இது குறிக்கிறது. தவத்தோர் போலப் புலன் அடக்கி வாழும் கைம்மைநிலை என்றும் பொருள் கொள்ளலாம். 

குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்

கருந்தடங் கண்ணி கைம்மைகூ றின்று

தன் கணவனைக் கூற்றுவன் பிரித்துவிட, தான் இறந்துபோகாது வருந்தும் மனைவி, தன்னை விட்டுவிட்டு இறந்து போனவனின் குருந்தப் பூ மாலையிடம் கோபித்துக் கொண்டு தான் பூச்சூடாமல் வெற்றுத் தரையில் படுத்துக் கரிய இலை உணவை உண்டு வாழ்கிறாள் என்பது இந்தப் பாடலின் பொருள். ஆண்களும் இதே போல தன்னுடைய துணைவியை இழந்தால் அது தபுதார நிலை என்கிறது புறப் பொருள் வெண்பாமாலை என்ற நூல்.

என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன்

உந்தன் அன்புதரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன்

தீ கூட தீண்டத் தீண்ட தித்திக்கும் என்று கண்டேன்

அன்பே நீ பக்கம் வந்தாய் புத்திக்கு ஓய்வு தந்தேன்

(மின்சாரம் என் மீது - ரன் திரைப்படம், கவிஞர் விவேகா)


உயிரைத் திருகி உந்தன்

கூந்தல் சூடிக்கொள்ளாதே

என் உதிரம் கொண்டு

உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே

விண்மீன் பறிக்க விழியில்லை

என்று கண்களை பறிக்காதே

என் இரவை எடுத்துக் குழைத்துக்

குழைத்து கண் மை பூசாதே


என்னை விடவும் என்னை அறிந்தும்

யார் நீ என்று கேட்காதே

இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்

என்னையும் கவிஞன் ஆக்காதே(2)…

(குல்மோகர் மலரே - மஜ்னு)

என்று கவிஞர் வைரமுத்துவின் காதல் வரிகள் பல இடங்களில் நெஞ்சை அள்ளும் விதமாக அமைத்துள்ளது.

  எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது

  பாதங்கள் இரண்டும் பறவை ஆனது

  விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது

  புருவங்கள் இறங்கி மீசை ஆனது.

  ஆனந்தக் கண்ணீர் மொண்டு  குளித்தேன்

  ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்

  கற்கண்டைச் சுற்றிக்கொண்டே நடந்தேன் சிறு எறும்பாய்

   நான்   தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்

   காதல் சொன்ன கணமே!"

 (திரைப்படம்: பாய்ஸ், வரிகள்: கவிஞர் கபிலன்)

என்ற கவிஞர் கபிலரின் வரிகள் ஆகட்டும் 


அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ

அஸ்த் அஸ்த் லைபே

அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா

இஷ்க் இஷ்க் மைலே - லவ்

இஷ்ட பிரேம பியாரோ பியாரோ

ஒரு காதல் உந்தன் மேலே

அத்தனை

மொழியிலும் வார்த்தை

ஒவ்வொன்று கொய்தேன்

மொத்தமாய் கோர்த்துதான்

காதல் சென்டொன்று

செய்தேன் 

உன்னிடம்

நீட்டினேன் காதலை

காட்டினேன்

என்று 16 மொழிகளில் காதலைப் பேசும் இந்தப் பாடல் காதல் பாடல்களில் ஒரு புதுமையான வெற்றிகரமான முயற்சி என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.


அஸ்க் (Ask): துருக்கிய மொழி (Turkish).
லஸ்கா (Laska): ஸ்லோவாக் மொழி (Slovak).
அமோர் (Amour): பிரஞ்சு/ஸ்பானிஷ் (French/Spanish).
ஐ (Ai): சீனம் (Chinese).
லைபே (Liebe): ஜெர்மன் (German).
அஹாவா (Ahava): எபிரேய மொழி (Hebrew).
போலிங்கோ (Bolingo): லிங்காலா (Lingala).
சிந்தா (Cinta): மலாய் (Malay).
இஷ்க் (Ishq): அரபு/இந்தி (Arabic/Hindi).
மைலே (Meile): லிதுவேனியன் (Lithuanian).
லவ் (Love): ஆங்கிலம்.
காதல்/இஷ்டம்/பிரேமம் /பியார்: தமிழ்/மலையாளம்/தெலுங்கு /இந்தி




கவிதைகள் சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஓவியம் வரையவா உன்

கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

(உள்ளம் கொள்ளை போகுதே)

என்ற பா.விஜயின் வரிகள் ஆகட்டும்


 

மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன் வேலையை காட்டுதடி

என்னை வாட்டும் வேலை ஏனடி 

நீ சொல்வாய் கண்மணி

முகம் காட்டு எந்தன் பௌர்ணமி 

எந்தன் காதல் வீணை நீ

வேதனை சொல்லிடும் ராகத்திலே

வேகுதே என் மனம் மோகத்திலே 


பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று 

நுரையீரல் தீண்டமால் திரும்புது காற்று

(பிரியாத வரம் வேண்டும்) 

என்ற அறிவுமதி பாடல்கள் ஆகட்டும்



அற்றைத் திங்கள் வானிடம்.
அல்லிச் செண்டோ நீரிடம்.
சுற்றும் தென்றல் பூவிடம்.
சொக்கும் ராகம் யாழிடம்.
காணுகின்ற காதல் என்னிடம்.
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

(சிவப்பதிகாரம்)

என்று யுகபாரதி கொண்டாடும் காதல் வரிகள் ஆகட்டும் தமிழின் இலக்கியத் தெறிப்பு நமது திரையிசைப் பாடல்களில் கலந்துள்ளதாலேயே அது காலம் கடந்து இன்றும் விரும்பப்படும் இசையாக உள்ளது. தமிழ் மொழியானது திரையிசை தாண்டி, தமிழ்க் கவிதைகள், தமிழ் எழுத்துக்களிலும், ஊடகங்களிலும் தமிழ் இலக்கியத்தின் பரவலான தாக்கம் உள்ளது. இதுவே நல்ல இசையை, நல்ல சிந்தனையை, நல்ல ரசனையை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அரும்பணியை செய்கிறது.



மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்

முயங்கிய நாடவச் சிலவே அலரே

கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்

பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன்

களிறொடு பட்ட ஞான்றை

ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே. 

குறுந்தொகை 393

இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பசும்பூண் பாண்டியன் எனப்படும்  தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் தளபதியான  அதிகன் என்பவன்கொங்கர்களை அடக்கி வெற்றி பெற  வாகைப் பறந்தலை என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் தோல்வியுற்று இறந்தான்அதிகன் இறந்ததால்கொங்கர்கள் ஆரவாரித்தனர். இந்த ஆரவார ஒலியை விட என்னைப் பற்றி அலர் பேசும் ஊர் மக்களின் ஆரவார ஒளியே அதிகமாக இருக்கிறது என்று தலைவி பேசுவதாக அமைகிறது. 

ஒரு பெரிய மன்னனின் தளபதிக்கு எதிராக போரிட்ட கொங்கர்கள் என்னும் எளிய மனிதர்களின் வெற்றியை ஒரு அகப் பாடலில் சொல்ல முடியும் என்றால் தமிழ் இலக்கியம் எவ்வளவு நுட்பமானது என்பதை நாம் அறிய முடியும். அகத்திணை பாடல்கள் தமிழரின் அக வாழ்வை களவு கற்பு என்று இரு நிலைகளில் நின்று பேசுகிறது.  இத்தகைய செறிவான ஒரு இலக்கிய மரபு வேறு எந்த மொழியிலும் காணப்படுவது இல்லை என்பதாலேயே தமிழ் இன்றும் உலகின் மூத்த மொழியாக போற்றப்படுகிறது. 

சில காதல் பாடல்கள் குறித்த என்னுடைய முந்தைய பதிவு:

நான் எழுதி செயற்கை தொழிநுட்பம் வழி இசை கோர்த்த அகத்திணை பாடல்