பேரவையின் 39ஆவது தமிழ் விழா நியூஜெர்சி மாநிலத்தில் 2026 ஜூலை 2,3,4, தேதிகளில் நடைபெற்றது. பேரவையின் இலக்கியக் குழு மேற்றிசை வலசை என்ற நூலுக்காக கட்டுரை ஒன்று வரையச் சொல்லி கேட்டிருந்தார்கள். "காலம் தீர்ப்பு எழுதட்டும்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று புலம்பெயர் இலக்கியம் குறித்து எழுதி அனுப்பியிருந்தேன். இந்த நூலை இயக்குnaர் திரு. அம்ஷன் குமார் வெளியிட எழுத்தாளர் திரு. சாம்ராஜ், எழுத்தாளர் திருமிகு தமிழ்நதி, எழுத்தாளர் திருமிகு சரவணகார்த்திகேயன் மற்றும் கவிஞர் பெருந்தேவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அந்தக் கட்டுரை இப்போது உங்கள் பார்வைக்காக.
இலக்கியம் என்பது இலக்கை இயம்புவது. நல்ல இலக்கியம் மொழியை நிகழும் காலத்திற்கு ஏற்ப, உண்மைக்கு மிக நெருக்கமாக, ஆவணப்படுத்துகிறது. புலம்பெயர் இலக்கியம் என்ற வரையறை எந்த இடத்தில் தொடங்கியது என்பது தெரியவில்லை.
எங்கே சூரியனுக்கு
உதயமும் அஸ்தமனமும்
இல்லையோ
எங்கே
மேலே வேரும்
கீழே கிளைகளுமுள்ள
புராதன மரம்
நிழல் பரப்புகிறதோ
எங்கே
'நான்' எனும் முடிச்சு
அவிழ்ந்து போகிறதோ
அது தான் என் ஊர்
என்ற கவிக்கோ அப்துல் இரகுமானின் கவிதை வரிகளில் உள்ள யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கருத்தியலில் அதிக பிடிப்பு உண்டு. எனவே இடம் பெயர்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் இலக்கியம் இதுவென வரையறுக்க முடியாது. ஒரு எழுத்தாளனின் வேர்கள் எங்கே தொடங்கியதோ அந்த நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தவிர்த்து அந்த எழுத்தாளனால் நல்ல இலக்கியம் படைக்கவே முடியாது. எனவே புலம்பெயர் நிலத்தில் அடிக்கும் இலக்கிய வெயிலில் கூட தமிழ் நிலத்தின் சூட்டை உங்களால் உணர முடியும்.
மனிதர்கள் அனைவருமே பூமிப்பந்தின் மீது மிதக்கும் ஏதோ ஒரு நிலத்திலிருந்து வேறொரு நிலத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கள் தான். ஆப்பிரிக்க இனத்தில் பிறந்து அமெரிக்க மண்ணில் வாழ்ந்த புலிட்சர் விருது பெற்ற கவிஞர் குவெண்டலின் ப்ரூக்ஸ், கவிஞர் மாயா ஏஞ்சலோ போன்றோர் ஆப்பிரிக்க மக்களின் உரிமை, சமூகநீதி, கறுப்பின பெண்களின் முன்னேற்றம் சார்ந்த படைப்புகளைத் தந்துள்ளனர். காலித் ஹூசேய்னி என்பவர் ஆப்கானிஸ்தானில் பிறந்து அமெரிக்க மண்ணிற்கு புலம்பெயர்ந்து, 'தி கையிட் ரன்னர்' என்ற நாவலை எழுதி உலகப் புகழ்பெற்றார். இதுவும் ஆப்கானிஸ்த மண்ணில் வாழும் ஒரு சிறுவனின் கதையாகும். அது போலவே எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்கள் ஈழத்தில் இருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து தமிழ் இலக்கிய உலகில் அவருடைய எழுத்துக்களின் வழி புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறே ஒருவரது இலக்கிய வெளி என்பது அவரது வேர்களுக்கு வெகு அருகிலேயே இருக்கும் ஒன்றாகும்.
உலகில் சமநிலை தவறி அநீதி நிகழும் போதெல்லாம் மனித உணர்வுகள் தூண்டப்பட்டு அங்கு இலக்கியம் பிறப்பதற்கான ஒரு களம் உருவாகிறது. அமெரிக்காவிலும் தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் உண்டு. ஆனால் ஒரு இலக்கிய களம் என்பதற்கு போர், இழப்பு போன்ற காரணிகளை விட இலக்கியவாதிகளை ஊக்குவித்து அவர்களை வளர்த்தெடுக்கும் சமூக அடுக்கு மிக முக்கியத் தேவையாகும். தமிழகத்தில் நிலவும் இலக்கியச் சூழல், தொடர் இலக்கிய உரையாடல், பலருடைய படைப்புகளை உடனுக்குடன் வாசிக்கும் வாய்ப்பு, வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் வசதி, இலக்கிய சொற்பொழுவுகளில் நேரடியாக பங்கேற்கும் வசதி, எழுத்தாளர்களுடன் அவர்களுடைய படைப்புகள் குறித்து நேரடியாக விவாதிக்கும் வாய்ப்பு, இலக்கியவாதிகளுக்கான வழிகாட்டுதல் போன்றவை அயல் மண்ணில் கிடைப்பது அரிதினும் அரிது. எனவே இலக்கிய படைப்புகள் வெகுவாக பின்தங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் இலக்கியவாதிகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் நல்கும் நல்ல வழிகாட்டிகளும் அயல்மண்ணில் இல்லை.
பெரும்பாலான அயலக தமிழ் அமைப்புகள் இலக்கிய இதழ்களை வெளியிடுகின்றன. அது மட்டுமல்லாமல் வடஅமெரிக்காவில் இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சங்கங்களில் வாசகர் வட்டங்கள், நூல் திறனாய்வு செயற்பாடுகள் போன்றவற்றையும் செம்மையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தமிழ் இலக்கிய உலகோடு வாசகர்களுக்கு உள்ள இணைப்பை அறுபடாமல் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பை நல்கினாலும் வாசகர்களை எழுத்தாளர்களாக மாற்றும் அளவு இன்னும் வலிமை பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால், சார்லட் நகரில் முதல் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தினேன். அந்த முயற்சியின் அடுத்த படிநிலையாக தமிழ் நூல்களைச் சார்லட் பெருநகரத்தை உள்ளடக்கிய மெக்கலன்பர்க் மாவட்ட நூலகங்களில் வைக்க பெரும் முயற்சி எடுத்து அதையும் செயல்படுத்தினேன். சார்லட் தமிழ்ப் பள்ளியில் பயிலும் உயர்நிலை மாணவர்களுக்கு தமிழ் கதைப் புத்தங்கங்கள் எழுதப் பயிற்சி அளித்து அவர்கள் எழுதிய நூல்களையும் எங்கள் ஊர் நூலகங்களில் இடம் பெறச் செய்துள்ளேன். என்னுடைய இந்த முயற்சியானது இலக்கியம் என்னும் மாபெரும் கடலில் மூழ்கி ஒரு சிறிய முத்தை எடுத்ததற்கு சமமானது என்பதை உணராமல் இல்லை. இவ்வாறான எனது பயணத்தில் இலக்கிய உலகோடு வாசர்களுக்கு இருந்த அறிமுகத்தை மட்டுமே என்னால் தக்க வைக்க முடிந்தது.
இங்கு வசிக்கும் எழுத்தாளர்களின் இன்னொரு பெரும் தடை மனம் சார்ந்தது. அதாவது தாங்கள் வாழும் மண்ணைக் குறித்து எழுதாமல் தாங்கள் பிரிந்த மண்ணையும் அது சார்ந்த இலக்கியத்தையும் படைக்க முயல்கிறார்கள். தாய் மண்ணில் இருந்து பல மைல்கள் கடந்து வாழும் போது நமது இலக்கிய பார்வை அவ்வளவு வீரியமானதாக இருப்பதில்லை. இது கண்ணாடியை அதே அறைக்குள் வைக்காமல், வேறு அறைக்குள் வைத்துவிட்டு, வெறும் சுவற்றை பார்த்து ஒப்பனை செய்வதற்கு சமமாகும். எவ்வளவு முயன்றாலும் ஒப்பனை சிறப்பாக அமையாது. அயலக மண்ணில் வசிக்கும் தமிழர்கள் தாங்கள் வாழும் நிலப்பகுதிகளில் உள்ள மக்களோடு இணக்கமான போக்கை கடைப்பிடித்து வாழ்ந்தாலும் பல்வேறு மொழி, இன பேதங்கள் காரணமாக அந்த மாந்தர்களுடன் நெருக்கமான உறவுப் பாலத்தை ஏற்படுத்திக் கொள்வது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இதையும் தாண்டி அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழில் வெளிவரும் பல்வேறு வலைப்பூக்கள், மின்னிதழ்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்பு நூல்கள் ஆகியவற்றில் வடஅமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் பெருமளவில் எழுதியே வருகிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக இலக்கியப் பணி ஆற்றுவதற்கு தாங்கள் வாழும் நிலத்தில் உள்ள மாந்தர்களின் கதைகளை, போராட்டங்களை எடுத்து இயம்புவதே, ஒரு எழுத்தாளருக்கு அடுத்தக் கட்ட வளர்ச்சியை, நகர்வை அளிக்க வல்லது.
புலம்பெயர் நிலத்தில் அயலக தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் புகழ்மிக்க விருதுகளோ அல்லது பொருளாதாரத் தன்னிறைவை அளிக்கும் பரிசுத் தொகை கொண்ட விருதுகளோ இல்லை. வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ் பீட விருது, கனடா இயல் விருது போன்றவை செயல்பட்டாலும் அந்த விருதுகளைப் பெற்றவர்கள் பெரும்பான்மை தமிழகத்தில் இருந்து வருபவர்களே. எனவே புலம்பெயர் வாழ்வில் ஒருவர் சந்திக்கும் சவால்கள், பின்னடைவுகள், சோதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்த, அதிலிருந்து கதைகளும், கவிதைகளும் படைக்கத் தேவையான களம் என்பது இல்லை. அங்கீகாரம் பெறவும், வாழ்வதற்குத் தேவையான பொருள் வளத்தைப் பெறவும் ஆங்கிலத்தில் எழுதுவதே சிறந்த வழியாக இருக்கிறது. பெரும்பான்மையான புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு தங்களது பதிப்புகளை வாசித்து பின்னூட்டம் தரும் ஒரு சில வாசகர்களைக் கூடப் பெறுவதில்லை என்பதும் அவர்கள் பதிப்பிக்கும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி ஊக்குவிக்கும் அளவு இலக்கிய ஆர்வலர்களும் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே புலம்பெயர் படைப்புகள் காலத்தை வெல்லும் இலக்கியமாக இல்லாமல் காலத்தோடு மறையும் எழுத்தாகவே நின்று விடுகிறது.
பெருகி வரும் சமூக ஊடங்கங்களின் தாக்கமும் இலக்கியப் பரப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நிமிட குறுங்காணொளி ஒன்றைப் பார்ப்பதில் உள்ள ஆர்வம் சில மணி நேரம் செலவு செய்து ஒரு புத்தகம் வாசிப்பதில் இல்லை. இந்தத் தாக்கம் வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில் அதிகம் உணரப்படுகிறது. காட்சி ஊடகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவு பரந்த வாசகப் பரப்பை கொண்ட படைப்புகளை யாரும் இப்போதெல்லாம் படைப்பதில்லை. ஹாரி பாட்டர் போன்ற உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்ட நூல்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது சமூக ஊடகத்திற்கு முற்பட்ட காலம் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
வடஅமெரிக்காவில் பெரும்பாலும் பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்த முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை தமிழர்களே அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இந்தப் புதிய நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் தேவையான போராட்டத்திலேயே கழிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் தமிழ் மொழியை இரண்டாம் பாடமாக படித்த தலைமுறை ஆகும். இவர்களின் பேச்சும், சிந்தனையும் முதல் மொழியான ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளது. இந்தத் தலைமுறை ஆங்கிலத்தில் பெரிய தாக்கம் கொண்ட நூல்களை படைக்கலாம் என்றாலும், இவர்களுக்கு தாய் மொழியில் இலக்கியம் படைக்கும் அளவு மொழியறிவு இல்லை. திருக்குறளைத் தாண்டிய எந்த தமிழ் இலக்கியத்தையும் அறியாதவர்களே இந்தத் தலைமுறையினர். திருக்குறள் என்பது ஒரு நீதி நூல் மட்டுமே, பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உபதேசிக்க விரும்புகிறவர்களுக்கு அது ஒரு சுரங்கம், ஆனால் அது இலக்கியம் ஆகாது என்ற எழுத்தாளர் க.நா. சுப்பிரமணியம் அவர்களின் கூற்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சிறந்த இலக்கியங்களை, புதினங்களை, கவிதைகளைப் படிக்காத முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையிடமிருந்து காலத்தை வெல்லும் தமிழ் எழுத்துக்கள் பிறக்கப்போவதில்லை. அப்படி இருந்தும் சிலர் தன்னிச்சையாக தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொண்டு படைப்புக்களை படைத்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் படைப்புகள் தற்கால இலக்கியத்தை விட சில மடங்கு பின் தங்கியுள்ளது என்பதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். "தாழ்ப்பாள் புலவர்கள் தள்ளிப்போகட்டும்" என்ற தலைப்பில், நாம் இருக்கும் நாடு என்ற நூலில் அமைந்த கவிதை ஒன்றில் மகாகவி ஈரோடு தமிழன்பன் பின்வருமாறு கூறுகிறார்.
காலம்
தீர்ப்பு எழுதட்டும்
கவிஞனே! நீ
கவி எழுது
மேலே சொன்னக் கூற்று கவிதைக்கு மட்டுமல்ல, கவிதைத் தாண்டிய எல்லா இலக்கிய செயல்பாடுகளுக்கும் பொருந்தும். புலம்பெயர் வாழ்வில் இலக்கியப் பணி என்பது ஓடும் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்துவது போன்ற எளிதான பணி அல்ல. முதலில் ஒரு வாகனத்தை தேடிக் கண்டிபிடிக்க வேண்டும், பின்னர் அதை இயக்கத் தேவையான மனிதனைக் கண்டுபிடித்து அவனுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்குப் பிறகே வாகனத்தை இயக்கும் வேலையைச் செல்ல முடியும். இப்படியான ஆயத்தங்களுக்கு உட்பட்ட இலக்கிய பணியில், புலம்பெயர் எழுத்தாளர்கள் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. கூட்டுப் புழுக்களுக்கு வானத்தின் பரப்பளவு தெரியும் என்றாலும், சிறகுகள் வலிமை பெறும் வரை காத்திருப்பதைப் போல, புலம்பெயர் எழுத்துக்களும் வலிமைப் பெற்று ஒரு நாள் காலவெளியில் சிறகடித்து பறக்கும். அந்த நாள், நாம் வாழும் காலத்திலேயே அமைந்தால் அதை விட உவப்பானது வேறோன்றும் இல்லை.















