புதன், ஜூலை 08, 2026

39ஆவது பேரவை விழா கவியரங்கம்




நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 39ஆவது தமிழ்விழாவில் முனைவர் கு. உமாதேவி அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மனவெளிப் பயணம் என்ற பொதுத் தலைப்பின் கீழ்விழிப்பு, முகமூடி, புலம்பெயர்வு, செயற்கை நுண்ணறிவும் மானுட மெய்யறிவும் (AI vs. OI), அமைதி, தனிமையுணர்வு போன்ற துணைத்தலைப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. முகமூடி என்ற துணைத் தலைப்பில் என்னுடைய கவிதையை வழங்கினேன். கவியரங்கத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்கள்.







நான் வாசித்த கவிதை இங்கே:

செஞ்சுடரின் ஒளியாக அகிலமெங்கும் நிறைபவளே

விண் தோன்றா அமுதமாகி மன்பதைக்கு அருள்பவளே

மூத்தவளே முதல்பொருளே மூப்பில்லா முழுமதியே

கற்கண்டே கனிச்சுவையே கன்றாத பொற்குவையே

நான்மாடக் கூடலிலே முச்சங்கம் கண்டவளே

தேன்தமிழே நின்தாள் பணிந்தேன்

என் நாவிலே நடம் புரிவாயே


ஆறாம் திணையிந்த அமெரிக்கப் பெருநிலத்தில்

பூங்கா மாநிலத்தின் புகழ்வாய்ந்த கவியரங்கில்

திரைவானின் விடிவெள்ளி தேன்சிந்தும் கவிநதி

கம்பனின் இனமிவள் கரையில்லா தமிழ்க் கடலிவள்

நவீன உமையிவள் தமிழன்னையின் இடப்பாகத்தவள்

கவியரங்கத் தலைமையிது இரண்டாம் முறையாகும்

இவர் தமிழ் முதலாம் தரமாகும்

கவிஞர் உமாதேவிக்கு என்இனிய தமிழ் வணக்கம்


பைந்தமிழ்ச் சோலையில் யாத்த தமிழமுதை

அள்ளிப் பருகிட அவைசேர்ந்த அனைவருக்கும்

கவிகிள்ளித் தருவேன் கரவொலி அளிப்பீர் 

விலையில்லாதது வாழ்த்தொலி எனவே

தடையின்றி தாராளமாய்த் தருவீர்

மனவெளிப் பயணத்தில்

முகமூடி என்பதே எனக்கான தலைப்பு


எல்லையற்ற எண்ணப் பெருவெளியில்

இரவும் பகலுமற்ற பொழுதில் 

காலத்தின் கரம் தீண்டா 

ரகசிய நிலவறையில் 

ஆசைகளும் நினைவுகளும்

ஆர்ப்பரிக்கும் நியூரான் ஆழியில் 

எண்ணங்களின் ஊடே 

வேகக் கட்டுப்பாடுகளற்ற 

மனப்புரவியில் பயணமென்பது 

இருமுனைகளைக் கொண்ட வாளினை 

கையாண்டு கொண்டே 

இருளுக்கும் வெளிச்சத்திற்கும்

இடையே ஊசலாடும் 

கயிற்றின் மேல் 

நடப்பதற்கு ஒப்பானது 

உரிக்க உரிக்க உதிரும் 

மன அடுக்குகளில் 

கண்டெடுத்த முகமூடிகள் 

மனவெளிச் சாளரத்தின் 

வெளிச்சப் பாதையை 

மறைக்கும் திரைகள் 

திரைகளை விலக்கிய பொழுதில் 

மனதோடு உறவாடிய 

மௌனச் சித்திரங்களின்

மெல்லுணர்வுகள் இதோ உங்களுக்காக 


அன்பே அமுதே ஆருயிரே என்பர்

கனிவாய்ப் பேசிக் காதலை விற்பர்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி

திரும்பிய கணத்தில் தீமைகள் செய்வர்

உறவென்ற பேரில் பொய்யன்பே முகமூடி


பேதமை களைந்தே புதுயுகம் படைப்போம்

மாசில்லா மானத் தலைமையைத் தருவோம்

இனிக்கப் பேசும் இருள் குணத்தோர்கே 

அரியாசனம் தந்து அறத்தினை கொல்வோம்

அரசியல் பிழைத்தோர்க்கு அரிதாரமே முகமூடி


மனிதம் என்றால் மகாத்மா என்பார் 

மறந்தும் உண்மையின் பக்கம் நில்லார் 

தருமம் வாழ்கவென உரக்கச் சொல்லி 

ஆபத்தில் உதவாது சுயம் காத்துக் கொள்வார் 

பொய்யின் புதல்வர்க்கு சொற்களே முகமூடி


வீணரை விடஅரவு என்போம்

தீயவரைக் குள்ளநரி என்போம்

கயவரை கருப்பாடு என்போம்

பாதகரை வல்லூறு என்போம்

மனிதனின் கீழ்மைக்கு மரபியலே முகமூடி


மரத்தைவெட்டி பல சிலுவைகள் செய்தோம் 

மனிதர்கள் கோடி அந்தோ ஒருதேவனைக் காணோம் 

ஆசையாய்ப் புத்தர் சிலையினை பெற்றே

ஞானத்தின் வேர்களில் அமிலத்தை விட்டோம் 

சாரங்கள் தோற்குமிடத்தில் சடங்குகளே முகமூடி


வாழ்தல் என்போம் வழக்கம் என்போம்

வையகம் வியந்தோத மாபாதகம் செய்வோம் 

பிறந்தது முதலாய்ப் பலமுகம் தரித்தே

சொந்த முகத்தை சடுதியில் தொலைப்போம்

பொதுநலத்தின் சிறகொடிக்கும் தன்னலமே முகமூடி 


வசதிகள் பெற்று நிலைப்பது வேண்டும் 

வரைமுறை இல்லா அதிகாரம் வேண்டும் 

தீக்கனி உண்ணும் விட்டிலைப் போல 

தன்னைத் தோற்பினும் பெயர்பெற வேண்டும் 

தனித்துவத்தின் வேரறுக்கும் தயக்கங்களே முகமூடி 


ஆதியிலே வந்தமொழி அருந்தமிழை பின்தள்ளி 

பாதியிலே வந்ததெல்லாம் தெய்வமொழி என்றேகி 

செம்மொழியின் இலக்கணமாய் பொலிகின்ற சித்திரமே 

வண்ணமயில் உன் வனப்பைத்தள்ளி வான்கோழியை வியப்பதுவோ 

மின்னுவதெலாம் பொன்யெனும் மாயையே முகமூடி 


வானம் ஒளியின் முகமூடி

நீர் நிலத்தின் முகமூடி

புகை தீயின் முகமூடி

நிலா கதிரவனின் முகமூடி

பகல் நட்சத்திரங்களின் முகமூடி

இயற்கையின் பேரழகிற்கு புறக்கண்களே முகமூடி


ஆசை தீமையின் முதல்வரி

புன்னகை துரோகத்தின் முகவரி

கனவு ஏமாற்றத்தின் மறுமுகம்

கர்வம் தீராத மதுக்குடம்

மனிதன் மதங்கொண்ட வாரணம்

சகுனியின் சூழ்ச்சியில் பகடைகளே முகமூடி


சமூகம் சுட்டிய வரைமுறை 

அரசியல் வகுத்த நடைமுறை

சாதி மதபேத அடக்குமுறை

மெலியோரை முடக்கிய வன்முறை

குமுறிய உள்ளம் அடக்கி

நடைமுறை வழக்கமென்றே

சமுதாய முகமூடி கண்டேன் 

நெற்றிக்கண்களுக்கு நடுங்கும் நெஞ்சங்களே முகமூடி என்றது 


வாழ்க்கை நாடக மேடை

பாத்திரம் நாம் அதில் என்றால்

விடைபெறும் நேரமாவது

வேடம் கலைத்தல் முறையே

கல்லறையில் தூங்கும் ஒருவன்

உண்மையிலே மறைந்தானா இல்லை 

கானலில் தோன்றும் நீர் தானா 


மனத்தின் உண்மை அகத்தில்

மறையாது ஒளிர வழிபிறந்தால் 

முகமூடி அணியா உலகம் 

ஒருநாள் சாத்தியமாகும் 

காலம் தீர்ப்பு எழுதட்டும்

                                             


பேரவையின் 39ஆவது தமிழ் விழா நியூஜெர்சி மாநிலத்தில் 2026 ஜூலை 2,3,4, தேதிகளில் நடைபெற்றது. பேரவையின் இலக்கியக் குழு மேற்றிசை வலசை என்ற நூலுக்காக கட்டுரை ஒன்று வரையச் சொல்லி கேட்டிருந்தார்கள். "காலம் தீர்ப்பு எழுதட்டும்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று புலம்பெயர் இலக்கியம் குறித்து எழுதி அனுப்பியிருந்தேன். இந்த நூலை இயக்குnaர் திரு. அம்ஷன் குமார் வெளியிட எழுத்தாளர் திரு. சாம்ராஜ், எழுத்தாளர் திருமிகு தமிழ்நதி, எழுத்தாளர் திருமிகு சரவணகார்த்திகேயன் மற்றும் கவிஞர் பெருந்தேவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அந்தக் கட்டுரை இப்போது உங்கள் பார்வைக்காக. 








இலக்கியம் என்பது இலக்கை இயம்புவது. நல்ல இலக்கியம் மொழியை  நிகழும் காலத்திற்கு ஏற்ப, உண்மைக்கு மிக நெருக்கமாக, ஆவணப்படுத்துகிறது. புலம்பெயர் இலக்கியம் என்ற வரையறை எந்த இடத்தில் தொடங்கியது என்பது தெரியவில்லை. 

எங்கே சூரியனுக்கு 

உதயமும் அஸ்தமனமும் 

இல்லையோ 

எங்கே 

மேலே வேரும் 

கீழே கிளைகளுமுள்ள 

புராதன மரம் 

நிழல் பரப்புகிறதோ 

எங்கே 

'நான்' எனும் முடிச்சு

அவிழ்ந்து போகிறதோ 

அது தான் என் ஊர்  

என்ற கவிக்கோ அப்துல் இரகுமானின் கவிதை வரிகளில் உள்ள யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கருத்தியலில் அதிக பிடிப்பு உண்டு. எனவே இடம் பெயர்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் இலக்கியம் இதுவென வரையறுக்க முடியாது. ஒரு எழுத்தாளனின் வேர்கள் எங்கே தொடங்கியதோ அந்த நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தவிர்த்து அந்த எழுத்தாளனால் நல்ல இலக்கியம் படைக்கவே முடியாது. எனவே புலம்பெயர் நிலத்தில் அடிக்கும் இலக்கிய வெயிலில் கூட தமிழ் நிலத்தின் சூட்டை உங்களால் உணர முடியும்.  

மனிதர்கள் அனைவருமே பூமிப்பந்தின் மீது மிதக்கும் ஏதோ ஒரு நிலத்திலிருந்து வேறொரு நிலத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கள் தான். ஆப்பிரிக்க இனத்தில் பிறந்து அமெரிக்க மண்ணில் வாழ்ந்த புலிட்சர் விருது பெற்ற கவிஞர் குவெண்டலின் ப்ரூக்ஸ், கவிஞர் மாயா ஏஞ்சலோ போன்றோர் ஆப்பிரிக்க மக்களின் உரிமை, சமூகநீதி, கறுப்பின பெண்களின் முன்னேற்றம்  சார்ந்த படைப்புகளைத் தந்துள்ளனர். காலித் ஹூசேய்னி  என்பவர் ஆப்கானிஸ்தானில் பிறந்து அமெரிக்க மண்ணிற்கு புலம்பெயர்ந்து,  'தி கையிட் ரன்னர்' என்ற நாவலை எழுதி உலகப் புகழ்பெற்றார். இதுவும் ஆப்கானிஸ்த மண்ணில் வாழும் ஒரு சிறுவனின் கதையாகும். அது போலவே எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்கள் ஈழத்தில் இருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து தமிழ் இலக்கிய உலகில் அவருடைய எழுத்துக்களின் வழி புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறே ஒருவரது இலக்கிய வெளி என்பது அவரது வேர்களுக்கு வெகு அருகிலேயே இருக்கும் ஒன்றாகும்.

உலகில் சமநிலை தவறி அநீதி நிகழும் போதெல்லாம் மனித உணர்வுகள்  தூண்டப்பட்டு அங்கு இலக்கியம் பிறப்பதற்கான ஒரு களம் உருவாகிறது.  அமெரிக்காவிலும் தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் உண்டு. ஆனால் ஒரு இலக்கிய களம் என்பதற்கு போர், இழப்பு போன்ற காரணிகளை விட இலக்கியவாதிகளை ஊக்குவித்து அவர்களை வளர்த்தெடுக்கும் சமூக அடுக்கு மிக முக்கியத் தேவையாகும். தமிழகத்தில் நிலவும் இலக்கியச் சூழல், தொடர் இலக்கிய உரையாடல்,  பலருடைய படைப்புகளை உடனுக்குடன் வாசிக்கும் வாய்ப்பு, வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் வசதி,  இலக்கிய சொற்பொழுவுகளில் நேரடியாக பங்கேற்கும் வசதி, எழுத்தாளர்களுடன் அவர்களுடைய படைப்புகள் குறித்து நேரடியாக விவாதிக்கும் வாய்ப்பு,  இலக்கியவாதிகளுக்கான வழிகாட்டுதல் போன்றவை அயல் மண்ணில் கிடைப்பது அரிதினும் அரிது. எனவே இலக்கிய படைப்புகள் வெகுவாக பின்தங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் இலக்கியவாதிகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் நல்கும் நல்ல வழிகாட்டிகளும்  அயல்மண்ணில் இல்லை.

பெரும்பாலான அயலக தமிழ் அமைப்புகள் இலக்கிய இதழ்களை வெளியிடுகின்றன. அது மட்டுமல்லாமல் வடஅமெரிக்காவில் இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சங்கங்களில் வாசகர் வட்டங்கள், நூல் திறனாய்வு செயற்பாடுகள் போன்றவற்றையும் செம்மையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தமிழ் இலக்கிய உலகோடு  வாசகர்களுக்கு உள்ள இணைப்பை அறுபடாமல் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பை நல்கினாலும் வாசகர்களை எழுத்தாளர்களாக மாற்றும் அளவு இன்னும் வலிமை பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால், சார்லட் நகரில் முதல் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தினேன். அந்த முயற்சியின் அடுத்த படிநிலையாக தமிழ் நூல்களைச் சார்லட் பெருநகரத்தை உள்ளடக்கிய மெக்கலன்பர்க் மாவட்ட நூலகங்களில் வைக்க பெரும் முயற்சி எடுத்து அதையும் செயல்படுத்தினேன். சார்லட் தமிழ்ப் பள்ளியில் பயிலும் உயர்நிலை மாணவர்களுக்கு  தமிழ் கதைப் புத்தங்கங்கள் எழுதப் பயிற்சி அளித்து அவர்கள் எழுதிய நூல்களையும் எங்கள் ஊர் நூலகங்களில் இடம் பெறச் செய்துள்ளேன்.  என்னுடைய இந்த முயற்சியானது இலக்கியம் என்னும் மாபெரும் கடலில் மூழ்கி ஒரு சிறிய முத்தை எடுத்ததற்கு  சமமானது என்பதை உணராமல் இல்லை. இவ்வாறான எனது பயணத்தில் இலக்கிய உலகோடு வாசர்களுக்கு இருந்த அறிமுகத்தை மட்டுமே என்னால் தக்க வைக்க முடிந்தது.

இங்கு வசிக்கும் எழுத்தாளர்களின் இன்னொரு பெரும் தடை மனம் சார்ந்தது. அதாவது தாங்கள் வாழும் மண்ணைக் குறித்து எழுதாமல் தாங்கள் பிரிந்த மண்ணையும் அது சார்ந்த இலக்கியத்தையும் படைக்க முயல்கிறார்கள்.  தாய் மண்ணில் இருந்து பல மைல்கள் கடந்து வாழும் போது நமது இலக்கிய பார்வை அவ்வளவு வீரியமானதாக இருப்பதில்லை. இது கண்ணாடியை அதே அறைக்குள் வைக்காமல், வேறு அறைக்குள் வைத்துவிட்டு, வெறும் சுவற்றை பார்த்து ஒப்பனை செய்வதற்கு சமமாகும். எவ்வளவு முயன்றாலும் ஒப்பனை சிறப்பாக அமையாது. அயலக மண்ணில் வசிக்கும் தமிழர்கள் தாங்கள் வாழும் நிலப்பகுதிகளில் உள்ள மக்களோடு இணக்கமான போக்கை கடைப்பிடித்து வாழ்ந்தாலும்  பல்வேறு மொழி, இன பேதங்கள் காரணமாக அந்த மாந்தர்களுடன் நெருக்கமான உறவுப் பாலத்தை ஏற்படுத்திக் கொள்வது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இதையும் தாண்டி அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து  தமிழில் வெளிவரும் பல்வேறு வலைப்பூக்கள், மின்னிதழ்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்பு நூல்கள் ஆகியவற்றில் வடஅமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் பெருமளவில் எழுதியே வருகிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக இலக்கியப் பணி ஆற்றுவதற்கு தாங்கள் வாழும் நிலத்தில் உள்ள மாந்தர்களின் கதைகளை, போராட்டங்களை எடுத்து இயம்புவதே, ஒரு எழுத்தாளருக்கு  அடுத்தக் கட்ட வளர்ச்சியை, நகர்வை அளிக்க வல்லது.

புலம்பெயர் நிலத்தில் அயலக தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் புகழ்மிக்க விருதுகளோ அல்லது பொருளாதாரத் தன்னிறைவை அளிக்கும் பரிசுத் தொகை கொண்ட விருதுகளோ இல்லை. வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ் பீட விருது, கனடா இயல் விருது போன்றவை செயல்பட்டாலும் அந்த விருதுகளைப் பெற்றவர்கள் பெரும்பான்மை தமிழகத்தில் இருந்து வருபவர்களே. எனவே புலம்பெயர் வாழ்வில் ஒருவர் சந்திக்கும் சவால்கள், பின்னடைவுகள்,  சோதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்த, அதிலிருந்து கதைகளும், கவிதைகளும் படைக்கத் தேவையான களம் என்பது இல்லை. அங்கீகாரம் பெறவும், வாழ்வதற்குத் தேவையான பொருள் வளத்தைப் பெறவும் ஆங்கிலத்தில் எழுதுவதே சிறந்த வழியாக இருக்கிறது. பெரும்பான்மையான புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு தங்களது பதிப்புகளை வாசித்து பின்னூட்டம் தரும் ஒரு சில வாசகர்களைக் கூடப் பெறுவதில்லை என்பதும் அவர்கள் பதிப்பிக்கும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி ஊக்குவிக்கும் அளவு இலக்கிய ஆர்வலர்களும் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே புலம்பெயர் படைப்புகள் காலத்தை வெல்லும் இலக்கியமாக இல்லாமல் காலத்தோடு மறையும் எழுத்தாகவே நின்று விடுகிறது. 

பெருகி வரும் சமூக ஊடங்கங்களின் தாக்கமும் இலக்கியப் பரப்பில் பெரிய  மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நிமிட குறுங்காணொளி ஒன்றைப் பார்ப்பதில் உள்ள ஆர்வம் சில மணி நேரம் செலவு செய்து ஒரு புத்தகம் வாசிப்பதில் இல்லை. இந்தத் தாக்கம் வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில் அதிகம் உணரப்படுகிறது. காட்சி ஊடகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவு பரந்த வாசகப் பரப்பை கொண்ட படைப்புகளை யாரும் இப்போதெல்லாம் படைப்பதில்லை.  ஹாரி பாட்டர் போன்ற உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்ட நூல்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது சமூக ஊடகத்திற்கு முற்பட்ட காலம் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

வடஅமெரிக்காவில் பெரும்பாலும் பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்த முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை தமிழர்களே அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இந்தப் புதிய நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் தேவையான போராட்டத்திலேயே கழிக்கின்றனர்.  இவர்களின் குழந்தைகள் தமிழ் மொழியை இரண்டாம் பாடமாக படித்த தலைமுறை ஆகும். இவர்களின் பேச்சும், சிந்தனையும் முதல் மொழியான ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளது. இந்தத் தலைமுறை ஆங்கிலத்தில் பெரிய தாக்கம் கொண்ட நூல்களை படைக்கலாம் என்றாலும், இவர்களுக்கு தாய் மொழியில் இலக்கியம் படைக்கும் அளவு மொழியறிவு இல்லை. திருக்குறளைத் தாண்டிய எந்த தமிழ் இலக்கியத்தையும் அறியாதவர்களே இந்தத் தலைமுறையினர். திருக்குறள் என்பது ஒரு நீதி நூல் மட்டுமே, பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உபதேசிக்க விரும்புகிறவர்களுக்கு அது ஒரு சுரங்கம், ஆனால் அது இலக்கியம் ஆகாது  என்ற எழுத்தாளர் க.நா. சுப்பிரமணியம் அவர்களின் கூற்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சிறந்த இலக்கியங்களை, புதினங்களை, கவிதைகளைப் படிக்காத முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையிடமிருந்து காலத்தை வெல்லும் தமிழ் எழுத்துக்கள் பிறக்கப்போவதில்லை. அப்படி இருந்தும் சிலர் தன்னிச்சையாக தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொண்டு படைப்புக்களை படைத்து  வருகிறார்கள். ஆனால் இவர்களின் படைப்புகள் தற்கால இலக்கியத்தை விட சில மடங்கு பின் தங்கியுள்ளது என்பதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.  "தாழ்ப்பாள் புலவர்கள் தள்ளிப்போகட்டும்" என்ற தலைப்பில், நாம் இருக்கும் நாடு என்ற நூலில் அமைந்த கவிதை ஒன்றில் மகாகவி ஈரோடு தமிழன்பன் பின்வருமாறு கூறுகிறார். 

காலம் 

தீர்ப்பு எழுதட்டும் 

கவிஞனே! நீ 

கவி எழுது 

மேலே சொன்னக் கூற்று கவிதைக்கு மட்டுமல்ல, கவிதைத்  தாண்டிய எல்லா இலக்கிய செயல்பாடுகளுக்கும் பொருந்தும். புலம்பெயர் வாழ்வில் இலக்கியப் பணி என்பது ஓடும் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்துவது போன்ற எளிதான பணி அல்ல. முதலில் ஒரு வாகனத்தை தேடிக் கண்டிபிடிக்க வேண்டும், பின்னர் அதை இயக்கத் தேவையான மனிதனைக் கண்டுபிடித்து அவனுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்குப் பிறகே வாகனத்தை இயக்கும் வேலையைச் செய்ய முடியும். இப்படியான ஆயத்தங்களுக்கு உட்பட்ட இலக்கிய பணியில்,  புலம்பெயர் எழுத்தாளர்கள் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. கூட்டுப் புழுக்களுக்கு வானத்தின் பரப்பளவு தெரியும் என்றாலும், சிறகுகள் வலிமை பெறும் வரை காத்திருப்பதைப் போல, புலம்பெயர் எழுத்துக்களும் வலிமைப் பெற்று ஒரு நாள் காலவெளியில் சிறகடித்து பறக்கும். அந்த நாள், நாம் வாழும் காலத்திலேயே அமைந்தால் அதை விட உவப்பானது வேறோன்றும் இல்லை.

செவ்வாய், ஜூன் 23, 2026

குடைராட்டினம் - கவிதை



வேலையிழந்தவனிடம் அனைவரும் கேட்பது 

இப்போது என்ன செய்கிறாய்  என்று  

இவர்களுக்கு எப்படிச் சொல்வது 

அவன் இப்போதெல்லாம் 

நழுவும் தருணங்களை

நிதானமாய்க் கடக்கிறான் 

பூக்களோடு முட்களையும் ரசிக்கிறான் 

வலிகளைத் தோல்விகளை 

அவமானங்களை 

எதைக் கொண்டும் மறக்கடிக்காமல் 

எதிர்கொண்டு ஏற்கிறான் 

நேற்றைய சுமைகளோடு  

இன்றைய பொருளாதாரச் சுமையையும்

களிப்போடு  சுமக்கிறான் 

வெற்றி பெறும் துடிப்பினைக் 

நம்பிக்கை ஊற்றி வளர்க்கிறான் 

அவன் கனவுகளை இன்னும் 

அதிகமாக நேசிக்கத் தொடங்கியுள்ளான்

 எல்லா நாட்களையும் சரிசமமாக

எதிர்கொள்ளப் பழகியுள்ளான்

குடைராட்டினத்தில் சுற்றுபவர்களிடம் 

பூமியின் அதிராத மென்சுழற்சியை

எப்படி விவரிப்பது

ஞாயிறு, மார்ச் 29, 2026

தோன்றின் புகழோடு தோன்றுக


கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய விருது, பத்ம விருது, தேசிய விருது, பல்வேறு திரைத்துறை சார்ந்த விருதுகள் என்று அவர் கடந்து வந்த நெடிய பாதையின் ஒரு மைல்கல்லாக இப்போது ஞானபீட விருதினைப் பெற்றுள்ளார். விருது பெற அவர் தனிப்பட்ட விதத்தில் முயற்சி செய்தார். அதிகார மையத்தின் பல்வேறு நபர்களுடன் இணக்கமாக இருக்கிறார் என்ற செய்திகளை முந்தைய விருதுகளின் போதே கேள்விப்பட்டோம். இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் அதே விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இன்றைய கால கட்டத்தில் விருதுகள், அங்கீகாரம் என்பதெல்லாம் ஒரு விதமான சமூக உடன்படிக்கை என்று கொள்ளலாம். அதாவது நீ இதைச் செய்தால் நான் உனக்கு இதைச் செய்வேன் என்பதோ அல்லது உன்னுடைய அரசியல் அல்லது சமூக நிலைப்பாட்டில் உன்னுடன் நிற்கிறேன் என்பதோ அல்லது 

அதிகார மையங்களின் உச்சத்தில் உள்ளவர்களுடன் ஒருவனாக இருப்பதற்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும், எனவே இந்த விருதின் மூலம் அத்தகைய இடத்திற்கு என்னை உயர்த்திக் கொள்கிறேன் என்பதோ தான் இந்த எழுதப்படாத உடன்படிக்கைகள். அப்படியான ஒரு விஷயத்தை நிகழ்த்திக் காட்டுவதற்குக் கூட தனித்திறன் வேண்டும்.

உதாரணமாக ஒரு அலுவலகத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு வேலை செய்யும் ஒரு நபருக்கு அவருடைய தகுதியைத் தாண்டி, அவருடைய மேலதிகாரிகளுடன் அவர் கொள்ளும் இணக்கமான போக்கு, சுயவிளம்பரம் செய்து அதன்வழி ஆதாயம் அடையும் போக்கு ஆகிய பல்வேறு காரணங்களுக்காக பதவி உயர்வு, பரிசுகள் ஆகியன வழங்கப்படுகின்றன. இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வதில்லை. ஏனென்றால், அப்படிச் செய்வது அதிகார மையத்திடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும். ஊருடன் ஒட்டி வாழ்வது அல்லது கொஞ்சம் நீக்கு போக்கு தெரிந்த நபராக வாழ்வது என்பது இன்றைய சூழலில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று. தனிப்பட்ட விதத்தில் நாணல் போல வாழ்ந்து விட்டு, பிறரை விமர்சனம் செய்வது முறையன்று. தமிழ் மொழியின் ஆகச் சிறந்த படைப்பாளிகள், திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலருக்கு எந்த விருதும் வழங்கப்பட்டதில்லை. உண்மையிலேயே எதையாவது கேள்விக்கு உட்படுத்த வேண்டுமென்றால் திரு. கக்கன், திரு.காமராஜ், திரு. நாகேஷ், திருமிகு மனோரமா, திரு. சிவாஜி கணேசன், திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற பலருக்கு ஏன் பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளோ அல்லது பத்ம விருதுகளே வழங்கப்படவில்லை என்பதைத் தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். நாளையே வைரமுத்து அவர்கள் பாரத ரத்னா விருது பெறலாம். அப்போதும் நாம் கண்ணாடி மாளிகைக்குள் நின்று அவர் மேல் விமர்சனக் கல்லெறிய வேண்டாம். தமிழின் நெடிய இலக்கிய வரலாற்றில் மதிக்கப்படாத, விருதுகளால் அலங்கரிக்கப்படாத, மறக்கப்பட்ட படைப்பாளிகள் தான் மிக அதிகம். வைரமுத்து அவர்கள் அந்தப் படைப்பாளிகளின் பிரதிநிதியாக இத்தகைய விருதினைப் பெற்றுள்ளார் என்பதாகக் கூட அவருடைய இந்த வெற்றியைப் பார்க்கலாம். எனினும் பல கவிதைத் தொகுப்புகள், பல்லாயிரம் சினிமாப் பாடல்கள் என்று அவருடைய தனிப்பட்ட தகுதிகளே இந்த விருதுக்கு போதுமானதாக இருக்கிறது. தமிழில் ஆழ்ந்த புலமை, தேர்ந்த சொல் நயம், கவிதை மொழி என்று அவர் போற்றத்தக்க சாதனையாளர் தான். எனினும் அவர் மேல் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், இந்த விருதுக்காக அவரை மனம் திறந்து பாராட்டும் ஒரு மனநிலையைத் தரவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. 

வானம் எனக்கொரு போதி மரம் 

நாளும் எனக்கது சேதி தரும் 

ஒரு நாள் உலகம் நீதி பெறும் 

திருநாள் நிகழும் சேதி வரும் 

கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் 

இது ஒரு பொன்மாலைப் பொழுது...

வானம் அளவு இல்லாவிட்டாலும், சில நிமிட நேரம் தோன்றும் வானவில்லாக மகிழ்விக்கும் கவிஞர் வைரமுத்து என்ற தனி நபரின் வெற்றிக்காக அவரை வாழ்த்தலாம்.

சமீபத்தில் நான் வாசித்த அவருடைய மகா கவிதை நூல் குறித்த என்னுடைய விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.

கவிஞர் கண்ணதாசன் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து பாடல்களையும் ஒப்பிட்டு பேசிய என்னுடைய உரைக்கான இணைப்பும் இங்கே உள்ளது. (2:13இல் எனது உரை தொடங்குகிறது)

#ஞானபீடவிருது 

#கவிஞர்வைரமுத்து

வெள்ளி, மார்ச் 27, 2026

ஒரு நாயகன் உதயமகிறான்


ஒரு நாயகன் உதயமகிறான் 
ஊரார்களின் இதயமாகிறான்

இந்தப் பாடல் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் நசிந்த மக்களை உயர்த்தும் ஒரு தலைவன் தோன்றி, ஒரு நொடி நேரத்தில் தன் மக்களை, முன்னேறிய சமூகமாக மாற்றும் காட்சி நம் கண்முன்னே விரிகிறது. ஒரு நல்ல தலைவன் உருவாவது ஒரு சமூகத்தின் பெரிய சாதனையாகும். அதனால்தான் அந்தத் தலைவன் வளர்ந்து வலிமை பெறும் வரை அவனை நன்முறையில் காத்து, அவனுக்கு நல்ல ஒழுக்கத்தையும், சிறந்த மாண்புகளையும் கற்பித்து, அவனை ஒரு ஆதர்ச நாயகனாக உருவாக்கும் பணியில் ஒரு சமுதாயமே இணைந்து பங்காற்றியது.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு - குறள் 384
அறநெறிகளிலிருந்து தவறாமல், மற்றவர்களால் தனது மக்களுக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் தடுத்து, வீரத்திலிருந்து வழுவாமல் இருப்பவனே பெருமைக்குரிய அரசன்/தலைவன் என்று சொல்கிறார் திருவள்ளுவர்.
ஆனால் சமூகத்தின் இன்றைய தலைவர்களைப் பற்றி எண்ணினால் அது அச்சம் தருவதாக மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் இன்றைய தலைவர்கள் சமுதாயத்தால் அன்றி தனிப்பட்ட விருப்பத்தினால் உருவானவர்கள். தன்னார்வ அமைப்புகளின் தலைவராக வருபவர்கள் பெரும்பாலும் அந்த அமைப்பின் நோக்கத்திற்கும், மாண்பிற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லாத நபர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தலைவராக இருக்கும் போது அந்த அமைப்பின் வழி எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டத்தையோ அல்லது தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டத்தையோ செயல்படுத்துவது இல்லை. தன்னுடைய இடத்தை எப்படி உறுதி செய்வது, அடுத்தவர்களை எப்படி வர விடாமல் செய்வது, அடுத்தவர்களின் பெயரை எப்படிக் கெடுப்பது என்று யோசிப்பதிலும் அதைச் செயல்படுத்துவதில் மட்டுமே நேரத்தை செலவழிக்கிறார்கள்.

இதுவே பணமும் அதிகாரமும் புழங்கும் அரசியல் களம் என்றால், அந்தத் தலைவர், மேற்கூறிய தீய வழக்கங்களை கைக்கொள்வதோடு, தனி மனித ஒழுக்கமில்லாமல், போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டு, மக்களைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல், வறட்டுச் சிந்தாந்தங்ளையும், நாகரீக வளர்ச்சிக்கு சற்றும் ஒவ்வாத கருத்துக்களையும் உடைய மனிதராக, மக்களைப் பிளவு படுத்தும் சாதீய, மத, இன பேத உணர்வுகளை தூண்டி தன்னை மட்டுமே வளர்த்துக் கொள்பவராக இருக்கிறார்.

தன்னைத் தாக்காத ஒரு நாட்டுக்கு எதிராகப் போர் செய்து அந்த நாட்டைப் பிடிப்பது, அந்த நாட்டில் பலரைக் கொன்று குவித்து ஆயுதம் விற்போருக்கு எப்போதும் ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பது, அங்கே போரால் பாதிக்கப்பட்டவர்களின் மேல் அடக்குமுறை செய்து அதன்வழி ஆதாயம் பெறுவது, அங்கிருக்கும் வளங்களை கொள்ளையடித்து தன்னுடைய நாட்டுக்கு அதைக் கொண்டு சேர்ப்பது, அளவுக்கு மிஞ்சிய ஊழல் செய்து தனக்கும் தனக்குப் பிறகு வரும் 100 தலைமுறைக்கு சொத்து சேர்ப்பது என்பது சர்வதேச தலைமையின் கோர முகம். இது வரலாற்றுப் பக்கங்களில் கூட எழுத முடியாத ஒரு மாபெரும் இழுக்காகும். இன்றைய சூழலில் ஒரு தலைவன் வளர்கிறான் என்றால், அந்தத் தலைமையின் ஆசைக்கு எத்தனை மனிதர்களை, இயற்கை வளங்களை, நாடுகளை பலி கொடுக்க முடியும் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டியிருக்கிறது. இயற்கையில் விலங்குகள் கூட தலைமைத்துவ குணங்களை கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதனைப் போல ஒரு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள விலங்கு ஏனைய விலங்குகளை என்றும் வஞ்சிப்பதில்லை.

உங்களிடம் "நான் மட்டுமே உத்தமன், நான் வந்தால் தேன் மாரி பொழியும், அரசியலில் அறத்தை நிலைநாட்டுவேன்" என்று வண்டிவண்டியாக பொய் சொல்லும் நபரை நீங்கள் ஆதரித்தால் பண மதிப்பீட்டுக்கு ஆதரவளித்து பல நாட்கள் வங்கிகளில் கால்கடுக்க காத்திருக்கும் வலிக்கு இணையான ஒன்றுக்கு உங்களை ஆட்படுத்த வாக்களிக்கிறீர்கள் என்று பொருள்.

உங்களுடைய அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் நீங்களல்ல, உங்களைச் சுற்றியுள்ள மற்ற மனிதர்கள் தான் என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் கோடீஸ்வரர்களைத் தலைமைக்கு தேர்ந்தெடுத்தால் கச்சாப் பொருட்களுக்கும், அத்தியாவசப் பொருட்களுக்கும் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராகி விட்டீர்கள் என்று பொருள்.

"உங்களில் நான் ஒருவன், நான் உங்கள் இனம்" என்று கூறும் ஒருவரை உங்களின் சுய விருப்பு வெறுப்புகளின் பேரில் தலைமைக்குத் தேர்ந்தெடுத்தால் சுய விளம்பரப் பிரியர்களையும், அந்த இனத்தின் பின்னடைவுக்கும், அந்த இனத்தின் மாண்புகளைக் குழி தோண்டிப் புதைக்கும் பெருந்தகையையும் நீங்கள் வெற்றி பெறச் செய்கிறீர்கள் என்று பொருள்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் ஒரு காட்சி வரும். அரசன் புலிகேசியாக நடிக்கும் வடிவேலு ஒரு கரடியை நோக்கி அம்பு எய்வார். அதில் எந்த அம்பும் அந்தக் கரடியைத் தாக்காமல் சென்று விடும். கரடி கடைசியில் வந்து வடிவேலுவின் முகத்தில் துப்பிவிட்டு போகும். இதனால் வீறுகொண்ட வடிவேலு விற்பயிற்சி செய்வார். எதிரில் ஒரு படைவீரன் தலையில் பழத்தோடு நிற்பான். புலிகேசி அந்த வீரனின் தலையில் இருக்கும் பழத்தை குறி வைத்து அம்புகள் எய்வார். ஆனால் அம்புகள் எதுவும் புலிகேசி குறி வைத்த பழத்தை தாக்காமல் அங்கே காவலில் எங்கெங்கோ நிற்கும் வீரர்களைத் தாக்கி அவர்களைக் கொல்லும். இதனால் புலிகேசி தயங்க, அதற்கு அவருடைய அமைச்சராக நடிக்கும் மங்குனிப் பாண்டியன் "உங்களைக் காறித் துப்பிய கரடியைப் பழி வாங்க வேண்டும், அதற்காக பத்து வீரர்களை இழந்தாலும் பரவாயில்லை". என்பார். ஆக, இன்றைய காலகட்டத்தில் தலைவனாக தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்று எவர் கிளம்பினாலும் அதில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது என்னவோ அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் தான் என்ற புரிதல் காலத்தின் தேவையாக இருக்கிறது. நம்மிடம் இருக்கும் தீய குணங்களைக் கைவிட்டுவிட்டு நம்மை நாமே செப்பனிட்டுக் கொண்டால் மட்டுமே நல்ல தலைமையை நாம் வெளிக்கொணர முடியும். ஏனென்றால் தலைவர்கள் தனி மனிதர்கள் இல்லை. இந்த சமுதாயத்தில் இருந்தே தோன்றி உயருகிறார்கள்.

கீழ்மை நிறைந்த மனிதர்களிடம் இருந்து அதைவிடக் கீழ்மையான மனிதனே தலைவராகத் தோன்றுவார் என்பதை உணர வேண்டும். மேலே சொன்ன வரிகளில் பாடலாசிரியர் நாயகன் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பார். நாயகர்கள் மேன்மை அதிகமும், கீழ்மை கொஞ்சமும் நிறைந்த சாமானிய மனிதர்கள் தான். நாயகனுக்கு பதிலாக மகாத்மா என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தால் தலைவனுக்கான தகுதிகள் எட்ட முடியாத ஒன்றாக இருக்கும் என்பது கவிஞருக்குத் தெரியும். ஆனால் விதிவிலக்கு இருக்கிறது என்பதால் இலக்கு அதுவல்ல என்பதல்ல பொருள். மகாத்மாவாகத்தான் இந்த நெடும் பயணம் என்பதை மறக்க வேண்டாம்.

ஞாயிறு, மார்ச் 08, 2026

விடியாத வைகறைகள் - கவிதை


சின்னஞ்சிறு பிள்ளைகளின்
சிறகுகளைப் பிய்த்தெறியும் மடமைகண்டு
நன்னீர் நதிகளில் அமிலம் சுரக்கிறது
வஞ்சிகளின் கனவுகளைக் கரியாக்கும்
எப்ஸ்டீன்களின் உலகில் ஆறாமறிவு
முதலாம் ஊனமாக அறியப்படுகிறது
ஆறுகரங்களுடன் எட்டுதிக்கும் ஆளும்
வளைக்கரங்களை வீழ்த்தும்
கொடுவாளின் குருதி தெறித்து
நிலவு செம்மை தீட்டிய கதிரோனாகிறது
சமையல் கூடங்களில்
சிறைப்பட்ட அறிவுச்சுடர்களின்
வெப்பம் பெருகி
நிலமெங்கும் எரிமலை வெடிக்கிறது
அலைகள் நிலத்திடம் கோபித்து
கிளிஞ்சல்களை விடுத்து
கடல் பாசிகளைக் கொணர்கிறது
வானம் வண்ணங்களை விடுத்து
இருண்ட மேகங்களை
ஆகாயமெங்கும் போர்த்துகிறது
சூரியன் காற்றில் உலர்த்தாத
சுடு கதிர்களைச் செலுத்தி
பங்கயத்தின் இதழ்களில்
கருமை பூசுகிறது
வெண்பனி இதமாய் வருடாமல்
தன் குளிர்க் கரங்களால்
இலையற்ற மரங்களுக்கு
பனி வளையங்களைச் சூட்டுகிறது
அன்பே ஆருயிரே
அகிலம் காக்கும்
தெய்வமேயெனும் புகழுரைகள்
உடன்கட்டை நெருப்பில் கருகிய
மலர்களின் மேல்
ஆகுதியாய்ப் பொழிகிறது
புலனத்திலும் உள்பெட்டியிலும் நிறையும்
மகளிர்நாள் வாழ்த்துக்களில் இடம்பெறும்
வெற்றுச்சொற்களின் கனம் தாளாது
பூமி சற்றே சுழலாமல் உறைகிறது
வருடத்தின் ஒருநாள் தவிர
ஏனைய நாளெல்லாம்
ஒடுக்கப்படுவதா சமத்துவம்?
விரும்பாத செயல் தவிர்க்க
விடியாத வைகறையா நல்வாழ்வு?
சமநீதி, சமஉரிமை சற்றும்
வாய்க்காத மண்ணகமா எம்வீடு?
சடுதியிலே தீர்ப்பெழுதி
தீக்குள்ளே தெளிவதுவா கற்புநெறி?
வற்றாத ஜீவநதி நிலமெங்கும்
பாய்ந்தோட தடைபோடா
அருங்குணமே அறமாகும்
வான்மழையின் ஒரு துளியை
எங்கு விழவேண்டும் எனாத
நற்பண்பே அன்பாகும்
வலசை போகும் புள்ளினத்தை
தங்கக் கூண்டொன்றில் தள்ளாமல்
தவிர்ப்பதே பொதுநலமாகும்
நுரையீரல் காற்றாக
நிறைந்துள்ள பெண்மையினை
சமானமாய் ஏற்பதுவே நல்லொழுக்காகும்

செவ்வாய், மார்ச் 03, 2026

அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வாரம்



அட்லாண்டா தமிழ் வாரத்தை முன்னிட்டு என்னிடம் வாழ்த்துரை வழங்கச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். நானும் அவர்களுக்கு வழங்கி இருந்தேன். அதை அவர்களுடைய வலையொளியில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கான இணைப்பு கீழே 



இது மட்டுமல்லாமல், அட்லாண்டா  மாநகரத் தமிழ்ச் சங்கத்தினர் பலரும் தமிழ் வாரத்தை முன்னிட்டு பல காணொளிகளை சமர்ப்பித்து இருந்தார்கள். இவர்களின் காணொளிகளை நீங்கள் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் கண்டு களிக்கலாம்.

ஞாயிறு, மார்ச் 01, 2026

மகா கவிதை - கவிஞர் வைரமுத்து : நூல் விமர்சனம்


மண், காற்று, நீர், நிலம், ஆகாயம் என்று அனைத்தும் மௌனம் கலைத்து பேசினால் எப்படி இருக்கும். பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றின் அழகியலை, அது உயிர்களுக்கு அளிக்கும் கொடையை, பஞ்ச பூதங்களின் அதிசயத் தன்மையை மீள் பார்வை செய்யும் இந்தக் கவிதைப் புத்தகம் ஒரு அறிவியல் கையேடாகவும், அதைக் தமிழ்க் கவிதை வடிவத்தில் காணும் போது, அழகிய தமிழ் கவியமுதத்தை பருகும் நல்வாய்ப்பாகவும் நெஞ்சம் அள்ளுகிறது. இன்னொரு முறை இந்த பூமி எத்தகைய கருணை வாய்ந்தது என்று எண்ணிப் பார்க்க ஓர் அரிய சந்தர்ப்பமே இந்த மகா கவிதை எனலாம். ம - மண், கா-காற்று, க - கனலாகிய நெருப்பு,  வி- விசும்பு சுட்டும் வெளி, தை யில் உள்ள தகரம் - தண்ணீர் என்று  இந்த நூலின் உள்ளடக்கம் இந்த நூலின் தலைப்பிலேயே அமைந்துள்ளது என்று நூலாசிரியர் உரையிலேயே கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகிறார். இந்த பூமி எப்படிப்பட்ட கொடை என்பதை எண்ணிப் பார்க்கவும், பூமியின் கருணையை எண்ணி நெகிழவும், பூமி ஏனைய கிரகங்களை விட எவ்வாறு பல்லுயிர் காக்கும் அன்னையாக விளங்குகிறது என்பதையும் தெள்ளத்தெளிவாகவே விளக்குகிறார்.


புதன் எப்போதும் ஒரு பக்கம் பகல்; 425 பாகை வெப்பத்துடனும், எதிர்மத்தில் 175 பாகை குளிர் கொண்டது. இத்தனை வெப்பத்திலோ, குளிரிலோ உயிர்கள் பிறந்து உயிர்த்திருப்பது கடினம்.  ஒளியை சிதறச் செய்ய காற்றற்ற கோள்.
 
வெள்ளி(வீனஸ்) சூரியனின் சுடுபக்கத்திற்கே முகம் காட்டும் கோள். ஓராண்டுக்கு ஒருமுறையே சுழல்வது. 400 பாகை வெப்பம் கொண்ட கொதி கோள். எண்ணெய் கடலும், அமில மழையும் அங்கே சாதாரணம்.

செவ்வாய் கோள் துருப்பிடித்த இரும்பு. அதன் வாயுமண்டலத்தில் உயிர் வளியோ சொற்பத்திலும் சொற்பம். புற ஊதாக் கதிர்களின் அணுஉலை வெப்பம் உயிர்களை கருக்கிடும் அங்கு.

1330 பூமிகளை நிறைத்து வைக்கும் கொள்ளளவு கொண்ட வியாழன் கிரகத்தில்  அமோனியா-நைட்ரஜன்-மீத்தேன் கலந்த நச்சு சகதி. அதன் கீழே உள்ள உலோகப்பாறை, அங்கு நிலவும் 10,000 பாகை வெப்பத்தில் நதியாக உருகி ஓடிக்கொண்டிருக்கிறது.

சனிக்கிரகம் மனித எலும்புகளை ஊடுருவி உடைக்கும் குளிர் கொண்டது. வளி மண்டலத்தில் 95 விழுக்காடு ஹைட்ரஜனும் 5 விழுக்காடு ஹீலியமும் கொண்டது.


யுரேனஸ் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கொண்ட வாயு மண்டலமும் ஒரு இரவு விடிய வேண்டுமென்றால் 42 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதே எண்ணிக்கையில் ஆண்டுகள் பகல் இருள வேண்டும் என்றாலும்  தேவைப்படும்.

நெப்ட்யூன் சூரியனை ஒரு சுற்று வர 165 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். 

புளூட்டோ சூரியனை ஒரு சுற்று சுற்றி வர 250 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

ஆக தண்ணீரும், உயிர்வளியும், குளிரில் இருந்து காக்கும் கதிரும், பயிர் விளைக்க மண்ணும், உணவாகும் தாவரமும், கனி தரும் தருவும், உயிர் பேண பலவிதமான உயிர்களை படைத்தளித்துள்ள பூமியைத் தவிர அறிவியல் தொடும் தூரம் வரை மனிதனும் ஏனைய உயிரினங்களும் வாழத் தகுதி படைத்த கோள்கள் எதுவும் இல்லை.

மண்ணென்னும் மங்காய்
நீ நன்மையே புரிகுவாய் 

பனியோ மழையோ 
வெயிலோ பாலைவனமோ 
பொருள் இல்லா உயிர்களுக்கும் 
அருள் பாலிப்பாய்  

கஞ்சிக்கில்லையெனில் 
கடல் கொடுப்பாய் 
மண் இழந்த குடிகளுக்கு 
மலை கொடுப்பாய் 

தாயே! நீ நல்லை 
பொய்யொன்றுமில்லை  

என்று பூமியைத் தங்கம் என்று கொண்டாடுகிறார். ஏனைய கோள்களில் பிறக்க நேர்ந்தால் என்னவாகும் என்பதையும் அவர் எச்சரிக்கையாக இவ்வாறு சொல்கிறார்.

ஒருக்கால் நாங்கள் 
புதனில் பிறந்திருந்தால்.............

ஒரு பக்க வெப்பத்தில் 
எங்கள் மாமிசம் எரித்திருக்கும் 
மறுபக்கக் குளிரில் 
எலும்புக்கூடுகள் 
உறைந்திருக்கும் 

வெள்ளியில் பிறந்திருந்தால்.....
உலையிரும்பில் வீழ்ந்த 
எறும்புநிலை எய்தியிருப்போம் 
அங்கே வளிமண்டலம் கடந்து 
உள்ளேகும் வெப்பம் 
வெளியேற வழியில்லை 

சக்கர வியூக அபிமன்யுபோல 
உட்புகும் வெப்பத்தைக்
கரியமில வாயு கைதுசெய்து விடுகிறது 
பெயர் தான் காதல் தேவதை 
உண்மையில் பூதகி 

செவ்வாயில் பிறந்திருந்தால்.....
இரும்பு குடித்த உயிர்வளி  போக 
எமக்கேது மிச்சம்?
அதன் குளிர்தாங்கும் ஜீவராசிக்குச்
சூரியனின் தோல்வேண்டும் 

வியாழனியில் பிறந்திருந்தால்....
அது திடப்பொருளே இல்லை 
பத்தாயிரம் மைல் 
ஆழங்கொண்ட நச்சுக் குழம்பு 
பூமியை ஆங்கு புதைத்தேவிடலாம் 

பூமியே! தாயே!
என் தங்கமே! 
நீ மட்டும்தான்
கோளாறில்லாத கோளம்

பூமி சூரியனிலிருந்து இருக்கும் தொலைவு, அதன் சாய்மானம், அதன் புவியீர்ப்பு விசை என்று பலவும் கச்சிதமாக  அமைந்திருப்பதாலேயே இங்கு உயிர்கள் வாழவும், அவற்றின் தொடர்ச்சி தொடரவும் இன்னும் இடமிருக்கிறது.

முக்கால் பாகம் 
நீர்கொண்ட கோளம் இது 

ஆயின்,
நீரகம் என்றுதானே 
பெயர் துலங்க வேண்டும்?
மண்ணகம் என்று பெயர்சூட
ஏது காரணம்?

எனக் கேள்வி கேட்டு 

மானுடத்தின் 
உச்சங்களையும் எச்சங்களையும்
எழுதிச்செல்வது 
மண்ணென்ற ஊடகமன்றோ?

என்று பதிலையும் தருகிறார். அப்படியே மனிதர்களுக்கு மட்டும் மண் சொந்தமல்ல என்பதையும் உரக்கச் சொல்கிறார்.

மூடிவைத்த கனிமங்களும் 
முட்டிவரும் தாவரங்களும் 

தேக்கி வைத்த நீரும் 
திரட்டிவைத்த நுண்ணுயிரும் 

ஓடியாடும் விலங்குகளும் 
உலவித்திரியும் காற்றும்

சேமித்த வானமும் 
சேகரித்த தீயும் 

உனக்கே உனக்கல்ல 
நிகழ்கால மனிதா !

நீ கால்நடையாய் வந்த 
ஒரு பயணி

பூமியை 
நீ நுகர  முடிவது 
ஐம்புலன் அளவுக்குத்தான் 

நுகர்ந்தாயா 
போ ....போய்விடு....
வாழும் உயிர்கட்கும்    
வந்துகொண்டிருக்கும்
பயணிகட்கும் வழிவிடு

உன் குழி 
எவ்வளவு கொள்ளுமோ 
அவ்வளவே உன் மண்  
 
என்று எச்சரிக்கையும் விடுக்கிறார்.

அடுத்ததாக ஒவ்வொரு ஐம்பூதம் பற்றியும் மனித குலத்திற்கு அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும்  பேசுகிறார் கவிஞர். 
 
வள்ளுவ ஞானியும் 
கடவுள் வாழ்த்தருகே 
வான்சிறப்பு வைத்தனன் ஏன்?

முதல் அதிகாரம் கிழிந்துபடில் 
மழையே கடவுளாகும் சாத்தியம் கருதித்தான் ....

ஒரு விழுக்காடு நன்னீர்தான் 
யுகம் யுகமாய்ப் 
புழங்கப்படுகிறது  
மரணத்தைப் போல 

புத்தர் 
தாகசாந்தி செய்ததும் 
மற்றும் 
போதிமரம் குடித்த மிச்சமும் 
இன்றைய தண்ணீரின் 
அன்றைய பாகம் தான்  

என்று நாம் குடிக்கும் இன்றைய நீர் அன்றைய டைனோசர் குடித்த நீரின் ஒரு பகுதி தான் அன்று புத்தருக்கு தாக சாந்தி வழங்கிய நீர், அலெக்சாண்டர் குடித்த நீர், இயேசு கிறிஸ்து குடித்த நீர் என்ற ஆச்சரிய உண்மையையும் சொல்கிறார்.  நீர் இன்று கழிவு நீர் ஓடும் கால்வாயாய், பன்றிகள் குடியிருக்கும் பள்ளியறையாய், ரத்தக் கண்ணீர் போல கழிவு சாயம் மிதக்கும் நீர் என்று நீரே நஞ்சாகிப் போயிருக்கும் நிலைமை எண்ணி துக்கம் கொள்கிறார். இறுதியில் 

வடிவமற்று 
நிறமற்று 
பூமிக்கு வந்துபோன 
தேதிகளற்று 
மண்ணின் மூலகமாய் 
மீண்டும் சுற்றிவரும் மேகமாய் 
வாழ்வின் பயன்பாடு பொருளாய் 
அழிவுக்கு சென்று - மீண்டும் 
அழியாப் பொருளாய் 
நான் நீயாக வேண்டும் 
நீர்க் கடவுளே!



என்ற வேண்டுகோள் வைப்பதன் மூலம் நீரை அவர் எந்த உயரத்தில் வைக்கிறார் என்பது புலப்படும்.

நீருக்கு அடுத்ததாக வைக்கப்படும் ஐம்பூதம் தீயாகும்.

ஒரு மொத்த மலையை 
மிச்சமின்றி அணைப்பதற்கு 
ஒரு பறவையின் 
சிறிய சிறகு சிரமமுறுவது போலவே 
எந்தச் சொல்லால் உன்னை 
முழுமையாய் அளாவுவதென 
மூச்சிரைக்கிறது மொழி 

என்று தீயை பற்றிய முன்னுரையில் சொல்கிறார். 



பேரண்டப் பெரும்பொருளே
ஆதிப் பரம்பொருளே 
உயிர் மூலமே 
உச்ச ரகசியமே என 
என்னென்ன சொல்லி விளித்தாலும் 
முழுமையுறாது
கடல் வேட்டைக்குப் போனவன் 
கிளிஞ்சல் கொணர்ந்த கதையென 

  
ஆதித் தீயை 
அண்ணாந்து வணங்குங்கள் 
கோள்களே

உங்களை உமிழ்ந்து 
உடல் கொடுத்ததும் 
உருள்வித்து உயிர் கொடுத்ததும் 
ஒளியூட்டி தொழில் கொடுத்ததும் 
இன்று வரைக்கும் இருள் கிழிப்பதும்   
அந்தத் தாய்த் தீ தான் 

கவிஞனுக்குப் பிறக்கும் 
சில கைநாட்டுப் பிள்ளைகள் மாதிரி
நெருப்புக்கு பிறந்தாலும் 
இருளின் குழந்தைகள் 
இந்தக் கோள்கள் 
 
வெறும் 
பௌதீக ரசாயனப் 
பருப்பொருள்கள் 

என்று சூரியனைத் தவிர மற்றைய கோள்கள் யாவும் நட்சத்திரமாகாமல் வெறும் கிரகமாகவே நின்றுவிட்டவை, சமருக்கு செல்லும் வழியில் சாமியாராகிப் போன சக்கரவர்த்திகள் என்கிறார்.

பூமி உயிர்களை
கோள்கள் ஒன்றையொன்றை 
சூரியன் பூமியை 
பால்வீதி சூரியனை 
அண்டத் திரட்டு பால்வீதியை 
ஈர்த்துவைக்க 
ஈர்ப்பின் அச்சாணியில் 
இயங்கும் இந்தப் பேரண்டம் 

பேரண்டத்தின் பிரதியே 
மனிதன் எனில் 
ஈர்ப்புச் சங்கிலியின் 
கண்ணிகளே நாமெல்லாம்

ஈர்த்தலும் ஈர்க்கப்படுத்தலும் 
பிறப்பு ரகசியம் 

ஈர்க்கப்படுவோன் எளியோன் 
ஈர்ப்போன் வலியோன் எனப் 
பேச்சுலாவும் பேரண்டத்தில் 
ஈர்க்கப்பார் 

என்பதே கவிஞரின் செய்தியாக அமைகிறது. கணம் தோறும் ஈர்க்கும் பூமி, அதை ஈர்க்கும் சூரியன், மானுடத்தை ஈர்க்கும் காலம் மற்றும் மரணம் என இவற்றில் எதையாவது ஈர்க்க முடிந்தால் நாமே இறையாகப் பொலிவது உறுதி. 

மேலும் சொல்கிறார் 

பூமிக்குப் பெரிது சூரியன்
பால் வீதிக்கோ சிறிது
சிறு சிறு சிறிது
இருபதாயிரம் கோடி
அரிசி காயும் களத்தில்
ஓரத்தில் ஊர்வலம் போகும்
ஒன்பது எறும்புகள் போல்
நமது சூரிய குடும்பம்
சூரியன் மட்டுமே கட்டெறும்பு
பிறகிரகங்கள் சிற்றெறும்பு 
பேரண்டத்தில் 
பேரேட்டில் அவை 
விடுபட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை
சூரிய குடும்பம்
தன் தெருவில் குடியிருப்பதே
பால் வீதிக்குப் பரிச்சயமில்லை
கண்ணாடி அணிந்து
கண்டறியும் கடப்பாடுமில்லை

பால்வீதியின் கண்களில் 
நட்சத்திரங்கள் 
பொருத்தித் தேடினாலும் 
சூரியக் குடும்பத்தின் 
சுண்டுவிரலும் தோன்றவில்லை  

என்று அவர் சொல்லும் போது நிச்சயமாக ஒரு சிறிய துகளிலும் சிறிதான நாமா சின்ன விடயங்களுக்காக அத்தனை கோபப்படுகிறோம், அடுத்தவரை காயப்படுத்துகிறோம், அடுத்தவரை குறைவாக மதிப்பிடுகிறோம் என்று தோன்றுகிறது. 

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல் 

ஒருவரின் பெருமை என்பது அவருடைய செயலைப் பொறுத்தது என்று இரு வரிகளில் திருக்குறள் கூறுவதை கவிஞர் இப்படிச் சொல்கிறார்.

பெரியனவெல்லாம் பெரியவையல்ல 
பிறிதோர் பொருளின் ஒப்பீடு 
சிறியதையெல்லாம் பெரியது செய்யும் 
செய்யும் செயலின் பயன்பாடு 

பால் வீதிக்கு சிறியது என்றாலும், பத்து லட்சம் பூமிகளை தனக்குள் உண்டியலில் போடுவது போலப் போட்டாலும் அதை தனக்குள் கொள்ளும் சூரியன் நமக்காக மட்டும் தீக்குளித்துக் கொண்டிருக்கும் தியாக நட்சத்திரம். எத்தனை எரிந்தாலும் சாம்பலே விழாத தீரா நெருப்பு என்று போற்றுகிறார் கவிஞர்.

எரிமலையின் 
அமில திரவமென புறப்பட்டு 
பிறந்த குழந்தையின் 
பாத வெப்பம்போல் 
பூமிதொடும் சூரியச் சூடு 
என்னென்னவோ கற்பிக்கிறது 

அதாவது கொடுப்பதிலும் சிறந்ததை கொடு என்கிறார். 

ஊருக்கு கொடுப்பதில் 
உயர்ந்து கொடு 
சீரென்று கொடுப்பதில் 
சிறந்தது கொடுவென 
உன் மொழியில் ஓதுகிறாய் உலகுக்கு 

இலனென்னும் எவ்வம் உரையாமை  என்று குறள் கூறும் தன்மையில் இந்த பூமிக்கு தேவையான ஆறாயிரம் பாகை வெப்பத்தை தூர வெளிகளில் சூடாற்றி  மேகச்  சல்லடையில் வடிகட்டி பூமியின் தாங்குதிறன் பார்த்து வெயிலாக மாற்றி  அளிக்கிறது சூரியன்.  பருத்தி வெடிப்பதும், நூல்கள்  பிரிப்பதும், ஆடை வடிப்பதும், அலசி முடிப்பதும், உலர்த்திக் கொடுப்பதும் சூரியனின் கருணை தான்.

தீயே நீ நிலம் 
தீயே நீ நீர்மை
தீயே நீ வெளி
நீயே காற்று 
அம்பூதங்களின் ஒன்றான நீ 
நாற்பூதங்களுக்கும் நாயகன்  

என்று சூரியனுக்கு புகழாரம் சூட்டுகிறார் கவிஞர்.

அடுத்ததாக கவிஞரின் பாடுபொருள் வளி.

நாசி வாசல் வந்து 
உயிரூட்டும் தாயாய் 

கண்காணாமல் 
உணரப்படும் கடவுளாய் 

ஒரே பொழுதில் 
உலகுக்கே பரிமாறும் 
பந்தி அமுதமாய் 

பூமிசூழ் 
காப்புக் கவசமாய் 

பூமிக்குள் இருந்தும், பூமியோடும் பிறந்தது காற்று. எரிமலைப் பாறைகளில் இருந்து  காலம் விடுவித்து பூமியில் போர்த்திய பொக்கிஷமே இந்தக் காற்று. பிறந்த போது ஈர்ப்புக்குச் சிக்காத ஹைட்ரஜன், ஹீலியம் போன்றவையும், வேதிவினைக்கு உட்பட்ட கரியமில வாயுவும் காணாமல் போயிற்று. 19 கிலோமீட்டர் உயரத்திற்கு பூமி என்னும் ஆப்பிளைச் சுற்றிய  ஒரு தோல் போன்றது இந்த வளி. அந்த வளி இல்லையேல்  

இன்னொரு நிலாவாகும் பூமி 
ஒளியும் மழையுமற்ற நிலாவுக்கு 
வானுண்டு; வானிலை இல்லை 

பூமியும் நிலாவானால் 
மற்றுமொரு
பிரேதக் கிரகம் உருவாகும் 

பூமியிடம் நான் விடைபெற்றுக் கொண்டால் 
ஒலியை என் கால்களிலும் 
மழையை என் கைகளிலும் 
எடுத்துக்கொண்டோடி விடுவேன்   

கலைந்து போகும் 
என் காற்றுக் கூரை

அப்போது 
பூமிக்கு மேலிருக்கும் 
வானம் நிர்வாணம் 

அடைக் கோழியைக் கொத்திவிரட்டிப் 
பாம்பொன்று முட்டையைச் சூழ்வதுபோல்
பூமியை சூரியன் புறங்காணும் 

அரண் இல்லாத ஆகாயத்தில் 
பூமி மேல்படையெடுக்கும் 
வெயிலும் குளிரும் 

என்று காற்றின் முக்கியத்துவத்தை கவிஞர் பாடுகிறார். பூமியைத் தாக்க வரும் விண்கல்லைக் கூட எரியுண்டு போகச் செய்யும் சக்தி படைத்த வளி, ஒரு சித்திரக்காரனும் கூட. கீழ் மேல் வானங்களில், சூரிய ஒளியைக் குழைத்து வண்ணங்கள் செய்யும் ஜாலக்காரன். 

ஆணியின்றி அடிக்கப்படும் 
ஓவியங்களை நழுவவிடாத 
வானமொன்று வாங்க வேண்டும் 

என்று வண்ணங்களை தொடாமல் வண்ணத்தை அப்படியே ஓவியமாக காட்சிப்படுத்தும் வளிக்கு புகழாரம் சூட்டுகிறார் கவிஞர். வளியில் வந்துதித்த கரியமில வாயுவே பூமிக்கு பச்சை அளித்த வள்ளல், வண்ணங்கள் யாவும் காற்றின் அலைவரிசையால் மட்டுமே சாத்தியமாகிறது என்பதெல்லாம் வளிக்கு மட்டுமே இருக்கும் தனிப்பெரும் பெருமை.





வளி அப்படியே மென்மையாகவே நீடித்து இருப்பதில்லை. சில நேரங்களில் அதுவும் வெறி கொண்டு  சுழன்றாடி புயலாகும்.   அதன் கூவலில் ஆகாயத்தின் காது செவிடாகும்.

டொர்னாடோ ரூபங்கொண்டால் 
எருமைகள் பறக்கும் 
வானத்தில் பறவைகளாய் 
நான் கடக்கும் நேரம் 
காதுகள் கழற்றி ஏறி 
பத்து லட்சம் காளைகள் 
ஒரே சமயம் கதறும் ஓசை 
பத்தாயிரம் ரயில்கள் 
ஒரே பொழுதில் 
கடக்கும் வல்லொலி 
போகும் வழியெங்கும் 
பூமலர்த்திப் போனவன்தான் 
கடக்கும் வழியெங்கும் 
திட்டமிடாத மையங்களை 
விட்டுச் செல்கிறேன் 

வளியின் ஆக்க சக்திகளும் அரிதினும் அரிதானவை தான்.

திணிந்த மண்ணோ 
செறிந்த கல்லோ 
உருக்கு உலோகமோ 
தோல் துளை நரம்பு 
கஞ்சக் கருவிகளோ 
விலங்கோ பறவையோ 
மனிதனோ மரமோ 
என் தலைமையில் 
அதிர வேண்டும் 
அந்த அதிர்வை 
ஒலியாக்குவேன் 
ஒளியை மொழியாக்குவேன் 


மனிதத் தேவையில் நான்தான்
முன்னிற்கும் முதல் மூலம் 
உணவில் திரிபா 
உதறிவிடலாம்  
நீரில் அழுக்கா 
நிராகரிக்கலாம் 
காற்றில் மாசோ 
புகையோ தூசியோ 
சுவாசித்தே தீர வேண்டும்
அது 
நுரையீரல் தர்மம் 
சுவாசச் சட்டம் 

அப்படிப்பட்ட வளியில் மாசு ஏற்பட்டால் அதை சரி செய்யும்  தீர்வும் மனிதர்களிடம் இருக்கிறது. புட்டியில் அடித்து வளி விற்கப்படும் போது அதை வாங்குவதற்கு வழியின்றி மனிதக் கூட்டம் மடிந்து சாவதைத் தவிர வேறு வழி இல்லை.

மானுடம் காப்பாற்றிய காற்றை 
மானிடன் காப்பாற்றும் காலம் 
அபாய தூரத்தில் அண்மித்துவிட்டது 

மேலும் கெட்டிப் பட்டுவிடில் 
திடப்பொருளாய் 
செலுத்த வேண்டியிருக்கும் காற்றை 

ஊசி வழி காற்றூட்டுவது
உசிதமா தெரியவில்லை 
இருள் சூழாத இரவும் 
பொய் சேராத உலகும் 
சத்திய சம்பவம் இல்லையெனுமாறு   
சுத்த சுவாசக் காற்றும் 
கிண்ணத்தளவும் கிட்டாது போகும் 

இதை நாம் தடுக்க அறுந்தே போகாத வாயுச் சங்கலியில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கண்ணி என்பதை உணர வேண்டும். 

நிலக்கரிச் சுரங்கம் 
நீச்சல் குளமாகட்டும் 

பெட்ரோலியப் பொருள்களில் 
மிட்டாய் செய்வோம் 

சூரியனைச் சேமிப்போம் 
சுவடில்லாமல் தீயெரிப்போம் 

புல்வெளியில் நடந்தாலும் 
கறைபடியாத 
பனித்துளியின் பாதங்களைப்போல் 
கரிப்படியாத அடுப்புகளைக் 
காணிக்கை செய்வோம் 

சூரிய சக்தியைச் 
செல்லமாய் சிறைசெய்து 
ஊருக்கு ஊர் கட்டமைப்போம் 
சாம்பல் பறக்காத 
மின்நிலையங்களை 

இவ்வாறாக காற்றை காப்பாற்றவில்லையெனில் பஞ்சமா பாதகம் ஐந்தல்ல, காற்றை மாசுபடுத்தினால் ஆறென்றறிக என்கிறார் கவிஞர். காற்றை பற்றி இவ்வாறு சொல்லி முடிக்கிறார்.

எந்த ஒன்றைக் 
இன்னொன்று கொண்டு 
நிரப்பவியலாதோ - அதைக் 
கடவுள் என்பர் சிலர் 
காற்றென்போம் நாம் 

கடைசியாக கவிஞர் பேசும் கருப்பொருள் வெளியாகும். வெளி என்பது எத்தகையது  என்று கவிஞர் விவரிக்கும் போது நமக்கும் நடுமண்டையில் ஓங்கிக் குட்டியது போல் இருக்கிறது. இவ்வளவு சிறியவரா மனிதராகிய நாம் என்ற எண்ணம் வருகிறது.

பலகோடி நட்சத்திரங்கள் 
தனித்தும் கூட்டமாயும் இயங்கவல்ல 
ஒளித்தொகுப்பு பால்வீதி 
 
 பல்லாயிரங்கோடி அண்டங்களின் 
பெருவெளியே பேரண்டம் 

இதில் சூரியமண்டலம் 
சுண்டைக்காய் விதை 

இடிக்கப்பட்ட கற்கண்டுத்துகளின்
நொறுக்கப்பட்ட துகளின் துகளே 
சூரிய மண்டலம் 

இதில் 
பூமியென்ற 
பொருட்டில்லாத மலர்மீது 
ஒட்டிக்கொண்டிருக்கும் 
மகரந்தத் துகள்களே 
மனிதக் கூட்டம்  
 
என்கிறார் கவிஞர். இத்தனை சிறிய மனித இனத்துக்குத் தான் எத்தனை துயரங்கள், எத்தனை கவலைகள், வாழ்ந்து முடிவதற்குள்  எத்தனை ஆசைகள். இத்தனை கோடி நட்சத்திரங்கள், அவற்றின் இடுக்குகளில் நிறைய புழுதிகள், தப்பித்த வாயுக்கள், ஒரு பனித்துளிக்குள் அடக்க முடியாத வானத்தைப் போல பால்வெளியானது பல ஒளியாண்டுகளைக் கடந்தும் விரிந்து கொண்டே இருக்கிறது.

பேரண்டப் பெருங்கடலில் 
கொத்துக் கொத்தாய் கிடக்கும் 
முத்துக்கூட்டம்தான் பால்வீதி 
 
இடம் பொருள் தூரம் அளக்க 
மனிதன் பிடித்துவைத்த
கடவுளென்ற கோலும் 
மூடிய பேரண்டத்தின் 
நகத்தை மட்டுமே 
அளக்க முடியும் 

பிறந்தநாள் எப்போது என்று தெரியாத பேரண்டம் இந்த கணத்திலும் பிறந்து கொண்டு இருக்கிறது. இந்த கணத்தில் இறந்து கொண்டும் இருக்கிறது. மனிதர்கள் வந்து வந்து போகிறார்கள், கிரகங்கள் தோன்றித் தோன்றி அழிகிறது, நட்சத்திரங்கள் உண்டாகி உண்டாகி உடைகிறது, அண்டங்கள் உருவாகி உருவாகி சிதறுகிறது.  எனினும் அண்டம் என்பதும் வெளி என்பதும் எல்லையில்லாமல் விரிந்து எங்கும் வியாபித்து நிற்கிறது. அதில் ஒன்றாக இருக்கும் புதன் கிரகத்தை பற்றி இப்படிச் சொல்கிறார் கவிஞர்.

நானூற்று இருபத்தைந்து பாகை 
பகல் வெப்பம் 
கபாலம் உருகி காலுக்கு வந்துவிடும் 

எதிர்மத்தில் ஐநூறு பாகை 
இரவுக் குளிர் 
ஓடும் ரத்தம் 
செம்பனியாய் உருகிவிடும் 

வீனஸ் என்னும் கிரகத்தின் தன்மை இவ்வாறு குறிக்கிறார்.  




வீனஸுக்கு கடல் உண்டு 
எண்ணெய்க் கடல்  
ஆவியாகும் மேகம் 
அமில மழை பெய்யும் 
வெள்ளிதான் 
விடிவெள்ளி இல்லை 

செவ்வாய் கோளின் தன்மை இது தான் 

இந்த உலர்ந்த கிரகத்தில் 
வெப்பம் 
அறுபத்தெட்டுப் பாகைக்கும் மேலே 
குளிர் உறைநிலைக்கும் கீழே 

வாயுமட்டும் உண்டு 
உப்பில் சர்க்கரை அளவுதான் 
உயிர் வளி 

அடுத்ததாக வியாழன் கிரகம் 

வெப்பமோ வெப்பம் 
உறுதிப் பாறைகளை
ஓடுகுழம்பாக்கும் 
தொடர்ச்சியான வெப்பம்  

பத்தாயிரம் பாகை 
வியாழ வெப்பம் 
ஹைட்ரஜனை உருமாற்றியுள்ளது 
உலோகப் பொருளாய் 

அடுத்ததாக சனி கிரகம் 

வாழ வழியற்ற
இதன் வளிமண்டலத்தில் 
தொண்ணூற்றேழு விழுக்காடு 
ஹைட்ரஜன் 
மூன்று விழுக்காடு 
ஹீலியம் 

உயிர்த்தோற்றமென்பது 
கிரகத்தினும் பெரிய கேள்விக்குறி 

முடிந்தால் 
ஹைட்ரஜன் எரித்து 
சுருக்கமாய் ஒரு சூரியன் செய்யலாம் 

அடுத்ததாக யுரேனஸ் 

ஹைட்ரஜன் ஹீலியத்தை 
உடுத்துக்கொண்ட வாயுமண்டலம் 
ஒருபோதும் உதவாது 
உயிர்த் தோற்றத்திற்கு 



அடுத்ததாக நெப்டியூன்

பதினான்கு நிலாக்களை  
இழுத்து வைத்திருக்கும் 
நெப்டியூன் வளிமண்டலம் 
ஒரு குளிர் மண்டலம் 

அதன் வெப்பம் 
எதிர்மத்தில் 
இருநூற்றுப் பதிமூன்று பாகை 

கனத்த போர்வை வேண்டும் 
கம்பளி ரோம விலங்குகட்கும் 
  
இறுதியாக புளூட்டோ 

சூரியனை ஒருமுறை சுற்றினாலே 
புளூட்டோ 
கால் நரைத்துப் போகும் 
இருநூற்றைம்பது ஆண்டுகள் 
எளிதா என்ன?

ஒவ்வொரு கோளையும் பற்றி கவிஞர் சொன்ன பிறகு பூமியைப் பற்றி இப்படிச் சொல்கிறார். 

சூரியனே கடவுள் 
பூமியே தெய்வம் 

மேக மகராணிகள் 
பர்வதங்களில் விட்டெறிந்த 
இரத்தின மாலைகளும் 
 
இருகரை இட்டோடும் 
திரவ வைரங்களும் 

பூமியின் கொடைகள் 
பூமிக்கு மட்டுமே 
சாசுவதங்கள்

அம்மோனிய நுரைகளும்  
மீத்தேன் சகதிகளும் 
உடம்புக்குள் உயிர்உறையும் குளிரும் 
உறுப்புக்கள் உருக்கும் வெப்பமும் 
ஏனைய கோள்களின்
இயல்புநிலை ஆகுமெனில் 
பூமி என்பது சாமியா இல்லையா 

எல்லாக் கோள்களையும் 
எட்டிப் பார்த்த பிறகு 
அத்துணை கதவுகளை 
தட்டிப் பார்த்த பிறகு 
பூமியே என் தெய்வமே என் 
மார்பு மண்பட வணங்குவான் 
மனிதன் 

பூமிகடந்தவன் சொல்வான் 
சொர்க்கம்
பூமிதான் 

என்று பூமியின் அருமைகளை அழகாக, உவமை நயத்துடன் சொல்லி முடிக்கிறார் கவிஞர். இந்தப் புத்தகம் அறிவியலும் தமிழும் சங்கமிக்கும் ஒரு அருமையான கவிதைத் தொகுப்பு. பூமிக்கும், சூரியனுக்கும், ஐம்பூதங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு உன்னத முயற்சி. உயிர்களின் தோற்றம் முதல் இன்று வரை  நமது பாதுகாப்பு அரணாக விளங்கும் பூமியை நாம் எப்படி கருத்துடன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் பல இடங்களில் வலியுறுத்திச் சொல்கிறார் கவிஞர். இந்தக் கவிதை தொகுப்பில் கவிஞர் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் அழகிய உவமைகள் மூலம் நமக்கு சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஏனைய கிரகங்களைப் பற்றி விரிவாகப் எழுதி இருப்பது அருமை. பல அறிவியல் கருத்துக்களைத் தாங்கி வரும் இந்நூல் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. 

முத்தாய்ப்பாக அவர் சொல்கிறார் 

மதங்களால் கட்டமைக்கப்பட்ட
அன்றாடங்களில் 
அக்கறை கொண்ட ஒருவராய்க் 
கருதேன் கடவுளை ஒருபோதும் 
வேண்டுமானால் 
பிரபஞ்சத்தின் 'ஒழுங்குவிதியை' யைக் 
கடவுள் என்பேன் 

அப்படியாயின் 
கடவுள் 
'அவர' ல்லர்
'அது' 

என்று அவர் இந்த நூலை முடிப்பது மிகச் சிறப்பு. அறிவுரை பெறுவதற்கோ, அழகியலுக்கோ, அறிவியல் அறிவதற்கோ உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் இந்த நூலைப் படிக்கலாம். இந்த நூல் நீங்கள் எப்பொழுதும் படித்து, சுவைத்து மகிழக் கூடிய ஒரு சிறப்பான கவிதை நூலாக உங்கள் நூலகத்தில் இடம் பெற முழுத் தகுதி வாய்ந்தது.