நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 39ஆவது தமிழ்விழாவில் முனைவர் கு. உமாதேவி அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மனவெளிப் பயணம் என்ற பொதுத் தலைப்பின் கீழ்விழிப்பு, முகமூடி, புலம்பெயர்வு, செயற்கை நுண்ணறிவும் மானுட மெய்யறிவும் (AI vs. OI), அமைதி, தனிமையுணர்வு போன்ற துணைத்தலைப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. முகமூடி என்ற துணைத் தலைப்பில் என்னுடைய கவிதையை வழங்கினேன். கவியரங்கத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்கள்.
செஞ்சுடரின் ஒளியாக அகிலமெங்கும் நிறைபவளே
விண் தோன்றா அமுதமாகி மன்பதைக்கு அருள்பவளே
மூத்தவளே முதல்பொருளே மூப்பில்லா முழுமதியே
கற்கண்டே கனிச்சுவையே கன்றாத பொற்குவையே
நான்மாடக் கூடலிலே முச்சங்கம் கண்டவளே
தேன்தமிழே நின்தாள் பணிந்தேன்
என் நாவிலே நடம் புரிவாயே
ஆறாம் திணையிந்த அமெரிக்கப் பெருநிலத்தில்
பூங்கா மாநிலத்தின் புகழ்வாய்ந்த கவியரங்கில்
திரைவானின் விடிவெள்ளி தேன்சிந்தும் கவிநதி
கம்பனின் இனமிவள் கரையில்லா தமிழ்க் கடலிவள்
நவீன உமையிவள் தமிழன்னையின் இடப்பாகத்தவள்
கவியரங்கத் தலைமையிது இரண்டாம் முறையாகும்
இவர் தமிழ் முதலாம் தரமாகும்
கவிஞர் உமாதேவிக்கு என்இனிய தமிழ் வணக்கம்
பைந்தமிழ்ச் சோலையில் யாத்த தமிழமுதை
அள்ளிப் பருகிட அவைசேர்ந்த அனைவருக்கும்
கவிகிள்ளித் தருவேன் கரவொலி அளிப்பீர்
விலையில்லாதது வாழ்த்தொலி எனவே
தடையின்றி தாராளமாய்த் தருவீர்
மனவெளிப் பயணத்தில்
முகமூடி என்பதே எனக்கான தலைப்பு
எல்லையற்ற எண்ணப் பெருவெளியில்
இரவும் பகலுமற்ற பொழுதில்
காலத்தின் கரம் தீண்டா
ரகசிய நிலவறையில்
ஆசைகளும் நினைவுகளும்
ஆர்ப்பரிக்கும் நியூரான் ஆழியில்
எண்ணங்களின் ஊடே
வேகக் கட்டுப்பாடுகளற்ற
மனப்புரவியில் பயணமென்பது
இருமுனைகளைக் கொண்ட வாளினை
கையாண்டு கொண்டே
இருளுக்கும் வெளிச்சத்திற்கும்
இடையே ஊசலாடும்
கயிற்றின் மேல்
நடப்பதற்கு ஒப்பானது
உரிக்க உரிக்க உதிரும்
மன அடுக்குகளில்
கண்டெடுத்த முகமூடிகள்
மனவெளிச் சாளரத்தின்
வெளிச்சப் பாதையை
மறைக்கும் திரைகள்
திரைகளை விலக்கிய பொழுதில்
மனதோடு உறவாடிய
மௌனச் சித்திரங்களின்
மெல்லுணர்வுகள் இதோ உங்களுக்காக
அன்பே அமுதே ஆருயிரே என்பர்
கனிவாய்ப் பேசிக் காதலை விற்பர்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி
திரும்பிய கணத்தில் தீமைகள் செய்வர்
உறவென்ற பேரில் பொய்யன்பே முகமூடி
பேதமை களைந்தே புதுயுகம் படைப்போம்
மாசில்லா மானத் தலைமையைத் தருவோம்
இனிக்கப் பேசும் இருள் குணத்தோர்கே
அரியாசனம் தந்து அறத்தினை கொல்வோம்
அரசியல் பிழைத்தோர்க்கு அரிதாரமே முகமூடி
மனிதம் என்றால் மகாத்மா என்பார்
மறந்தும் உண்மையின் பக்கம் நில்லார்
தருமம் வாழ்கவென உரக்கச் சொல்லி
ஆபத்தில் உதவாது சுயம் காத்துக் கொள்வார்
பொய்யின் புதல்வர்க்கு சொற்களே முகமூடி
வீணரை விடஅரவு என்போம்
தீயவரைக் குள்ளநரி என்போம்
கயவரை கருப்பாடு என்போம்
பாதகரை வல்லூறு என்போம்
மனிதனின் கீழ்மைக்கு மரபியலே முகமூடி
மரத்தைவெட்டி பல சிலுவைகள் செய்தோம்
மனிதர்கள் கோடி அந்தோ ஒருதேவனைக் காணோம்
ஆசையாய்ப் புத்தர் சிலையினை பெற்றே
ஞானத்தின் வேர்களில் அமிலத்தை விட்டோம்
சாரங்கள் தோற்குமிடத்தில் சடங்குகளே முகமூடி
வாழ்தல் என்போம் வழக்கம் என்போம்
வையகம் வியந்தோத மாபாதகம் செய்வோம்
பிறந்தது முதலாய்ப் பலமுகம் தரித்தே
சொந்த முகத்தை சடுதியில் தொலைப்போம்
பொதுநலத்தின் சிறகொடிக்கும் தன்னலமே முகமூடி
வசதிகள் பெற்று நிலைப்பது வேண்டும்
வரைமுறை இல்லா அதிகாரம் வேண்டும்
தீக்கனி உண்ணும் விட்டிலைப் போல
தன்னைத் தோற்பினும் பெயர்பெற வேண்டும்
தனித்துவத்தின் வேரறுக்கும் தயக்கங்களே முகமூடி
ஆதியிலே வந்தமொழி அருந்தமிழை பின்தள்ளி
பாதியிலே வந்ததெல்லாம் தெய்வமொழி என்றேகி
செம்மொழியின் இலக்கணமாய் பொலிகின்ற சித்திரமே
வண்ணமயில் உன் வனப்பைத்தள்ளி வான்கோழியை வியப்பதுவோ
மின்னுவதெலாம் பொன்யெனும் மாயையே முகமூடி
வானம் ஒளியின் முகமூடி
நீர் நிலத்தின் முகமூடி
புகை தீயின் முகமூடி
நிலா கதிரவனின் முகமூடி
பகல் நட்சத்திரங்களின் முகமூடி
இயற்கையின் பேரழகிற்கு புறக்கண்களே முகமூடி
ஆசை தீமையின் முதல்வரி
புன்னகை துரோகத்தின் முகவரி
கனவு ஏமாற்றத்தின் மறுமுகம்
கர்வம் தீராத மதுக்குடம்
மனிதன் மதங்கொண்ட வாரணம்
சகுனியின் சூழ்ச்சியில் பகடைகளே முகமூடி
சமூகம் சுட்டிய வரைமுறை
அரசியல் வகுத்த நடைமுறை
சாதி மதபேத அடக்குமுறை
மெலியோரை முடக்கிய வன்முறை
குமுறிய உள்ளம் அடக்கி
நடைமுறை வழக்கமென்றே
சமுதாய முகமூடி கண்டேன்
நெற்றிக்கண்களுக்கு நடுங்கும் நெஞ்சங்களே முகமூடி என்றது
வாழ்க்கை நாடக மேடை
பாத்திரம் நாம் அதில் என்றால்
விடைபெறும் நேரமாவது
வேடம் கலைத்தல் முறையே
கல்லறையில் தூங்கும் ஒருவன்
உண்மையிலே மறைந்தானா இல்லை
கானலில் தோன்றும் நீர் தானா
மனத்தின் உண்மை அகத்தில்
மறையாது ஒளிர வழிபிறந்தால்
முகமூடி அணியா உலகம்
ஒருநாள் சாத்தியமாகும்






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக