சனி, பிப்ரவரி 10, 2024

இயற்கையை கைவிடாதீர் !!




சொந்த நாட்டை காணச் சென்றேன் 
கார்ப்பரேட் உலகிலிருந்து
சற்றே விடைபெற்று 
வேலை இளமையைத் திருடி
கனவுகளை ஒத்தி வைக்கிறது 
முதுமைக்கான நோயினைச் சேர்க்கிறது 
சுயத்தை அழித்து
யாருடைய கனவிற்கோ 
உழைக்க வைக்கிறது 
அறிந்திருந்தும் கைவிடவியலாது
பொருளாதாரச் அடிமையாய் 
மண்புகழ் மாய்க்கும்  
மலினச் சலுகையாய்   
பெரு நிறுவனத்தின் சிறைக் கைதியாய்
நவீன உலகின் கொத்தடிமையாய் 

நிறமில்லா வானவில்லாய் 
தாய் மண் சிரித்தது
நெகிழிப் பைகள்
காலிக் குடுவைகள் புட்டிகள்
மக்காத குப்பைகள்
நிலத்தின் அவயம்
எங்கும் பூட்டப்பட்டிருந்தன 
நிலம் செரிக்காத மிச்சத்தை
நீரில் சேர்த்து
மக்கள் கவலையற்று இருந்தனர்

நல்லவேளையாய் விவசாய நிலங்கள்
ஆங்காங்கே பொலிவாய்த் தோன்றி 
குப்பை மலைகளை கண்டே 
சோர்வுற்ற கண்களுக்கு ஒளியூட்டின
நிலம் மனிதனுக்கு முதல் தாய்
மண்ணில் தோன்றி
மண்ணிலேயே முடியும் வாழ்வு
பிறப்பு முதல் இறப்பு வரை
நிலத்துடன் தொடரும் உறவு
வீழ்ச்சி கண்டிருப்பது
மனித மனதைச் சொல்கிறது
மனிதனின் முதல் உறவே
பட்டுப் போன பின்
என்ன மிச்சமுள்ளது
அக்கம் பக்கத்தினரோடு 
உறவைப் பேணாமல் போனதில்
ஆச்சரியம் இல்லை 
கோவில்களில் கூட்டம்
மதகுருமாரின் சாயல் கொண்ட 
சிலையைக் காண கூட்டம்
யானை வழித்தடங்களில் அமைந்த
ஆசிரமத்தில் மனித வெள்ளம்
செவ்வாடை உடுத்திய பக்தர்கள்
இருமுடி ஏந்திய பக்தர்கள்
அலையலையாய் அத்துணைக் கூட்டம்
ஆலயம் இறைவனின் வீடல்ல
மக்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள் 
ஆலயங்களில் உண்ட இடத்திலேயே 
போடப்படும் காலித் தட்டுகள் 
அருகிலேயே இருக்கும் குப்பை தொட்டிக்குள்
சேராத தண்ணீர்க் குவளைகள்
காலை இடறியதைவிட 
மனதை அதிகம் இடறியது
   
இன்னொரு மனிதனிடம் 
முயன்றே நேசம் கொள்ள வேண்டும்
ஆனால் இயற்கையுடனான நேசம் இயல்பானது
அதையும் உதறித் தள்ளும் மனிதக் குலம்
அழிவுப் பாதையில் வேகமாய் பயணிக்கிறது 
இயற்கையின் கோலத்தைக் காணச் சகியாமல்
கனத்த இதயத்துடன் திரும்பினேன்
குப்பை மலைகளைப் பார்த்துப் பார்த்து
மனமதையே  எதிர்ப்பார்க்க தொடங்கி விடுகிறது
இன்னும்.நாட்கள் போனால் 
அதுவே பழகி விடும் போல் தோன்றும் முன்பே
தாய்நாட்டில் இருந்து புறப்பட்டேன் 
அறிந்து தெளியுங்கள்  
இயற்கையை கைவிடும் மனிதர்களை
இறைவனும் கைவிடுவான்