சென்ற வார இறுதியில் அதாவது ஜூலை 17 முதல் ஜூலை 19, 2026 வரை தெலுங்கானா அமெரிக்கப் பேரவையின்(TTA) மாநாடு சார்லட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்டோர் 3 நாட்கள் நடந்த இந்த விழாவிற்கு வந்திருந்தார்கள் என்பது அதிகாரப்பூர்வமான புள்ளி விவரம். விழா நடத்த கிட்டத்தட்ட 5 மில்லியன் வெள்ளிகள் செலவு செய்யப்பட்டது என்பது கேள்வி.
முன்னதாக சூலை 18 சனிக்கிழமை அன்று காலை பல்வேறு இந்திய மாநிலங்களின் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரோமேர் பியர்டன் பூங்காவில் தொடங்கி விழா நடக்கும் வளாகம் வரை நடந்த அணிவகுப்பில் நானும் தமிழ்நாடு சார்பாக இணைந்திருந்தேன். கையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்ட பதாகையும், தமிழ்நாட்டின் சிறப்பினை குறிக்கும் வகையில் கோயில் மாதிரியும், அமெரிக்க மற்றும் இந்திய கொடிகளும் எடுத்துக் கொண்டு பறை அடித்தவாறு நடந்து சென்றோம். விழா வளாகத்தை நாங்கள் அடைந்ததும் நாதஸ்வர இசையுடன் வரவேற்றார்கள்.
ஏனைய மாநாடுகளில் பார்க்க முடியாத அளவு தாய்நாட்டின் மீதான பாடல்கள், அதைச் சார்ந்த நடனங்கள், இறை பக்திப் பாடல்கள், இறை பக்தி சார்ந்த நடனங்கள் எனப் பல நிகழ்ச்சிகள் முதன்மை மாநாட்டு மேடையிலேயே அரங்கேறியது. அது மட்டுமல்ல யாருக்கு எந்த அரசியல் கட்சி பிடிக்குமோ அந்தக் கூட்டத்தில் நீங்களே இணைந்து கொள்ளுங்கள் என்று எல்லா பெரிய கட்சிகளுக்குமான இணை அமர்வுகளை அவர்களே ஏற்பாடு செய்திருந்தார்கள். இது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
மாநாட்டில் பங்கேற்கவிருந்த பிரபலங்கள் குறித்த விவரங்களை அவர்களின் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் வந்திருந்தார்கள் என்பதும் தனிச் சிறப்பு மட்டுமல்ல ஏனைய மாநாடுகளில் காணாத ஒன்று. இயக்குநர் திரு. ராம்கோபால் வர்மா, திரு. சந்தீப் ரெட்டி வங்கா, நடிகை திருமிகு மீனாக்ஷி சௌத்ரி, நடிகர் திரு நவீன் போலிஷெட்டி, அமைச்சர் திருமிகு சீதாக்கா சின்னத்திரை நட்சத்திரங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், திரை நடனக் கலைஞர்கள் போன்ற பலரையும் மேடையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஹைதரபாத் புகழ் த்ரீயரி இசைக்குழு (Threeory Band) மற்றும் ஆஸ்கர் புகழ் திரு எம்.எம். கீரவாணி அவர்களின் இன்னிசைக் கச்சேரியைப் பார்க்கச் சென்ற போது சில பிரபலங்களின் பேச்சைக் கேட்கவும், மேடையில் அவர்களின் நடனத்தை காணவும் முடிந்தது. வழக்கமாக எல்லா மாநாடுகளிலும் இருப்பது போன்று பிரபலங்களை நடனம் ஆடச் சொல்வது, அவர்கள் நடிக்க இருக்கும் அடுத்தத் திரைப்படத்தை பற்றிய கேள்விகள், நீங்களும் மேடையில் இருக்கும் இன்னொரு பிரபலமும் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பு உண்டா, நடிக்கும் வாய்ப்பு உண்டா என்பது போன்ற வழமையான கேள்விகள் தான் என்றாலும் பிரபலங்கள் அனைவரும் அதை மகிழ்ச்சியுடனேயே எதிர் கொண்டார்கள் என்பது சிறப்பு. ராம்கோபால் வர்மா "நான் ஆக்ஷன் டைரக்டர்ங்க என்னை நடனம் ஆடச் சொல்லி கேட்கறிங்களே" என்று அங்கலாயிக்க, இல்லை ஒரே ஒரு ஸ்டெப் போடுங்க என்று அவரை பாங்கரா ஆட வைத்தது நகைச்சுவையாகவே இருந்தது.
த்ரீயரி இசைக்குழுவின் கச்சேரிக்கு நடனம் அடியவர்களின் எண்ணிக்கையை விட கீரவாணி அவர்களின் பாடல்களுக்கு ஆடியவர்கள் மிகக் குறைவே. நாமெல்லாம் இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இன்னிசைத் தென்றல் தேவா என்று ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக பிறந்திருக்கிறோம் என்று தோன்றியது. பலதரப்பட்ட மக்கள் வரக்கூடிய இன்னிசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப நிகழ்ச்சியை கொடுப்பது ஒரு கலை. அது வெகு சிலருக்கே கைவருகிறது.
மாநாட்டுக்கு பெரிய தொகை அளித்த நன்கொடையாளர்களை மேடையில் அழைத்து கௌரவித்தார்கள். இதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 30 மணித்துளிகளுக்கு மேல் ஆனது. மாநாட்டு வளாகம் எங்கும் பல இடங்களில் டிஜிட்டல் திரை அமைத்து இந்தக் கொடையாளர்களின் புகைப்படங்களை சுழற்சி முறையில் காட்டிக் கொண்டிருந்ததும் சிறப்பு.
சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும் நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட 1.5 மணி நேரம் முதல் 2 மணி நேரம் தாமதமாகச் சென்று கொண்டிருந்தது. அநேகமாக எல்லா மாநாடுகளுக்கு இத்தகைய தாமதம் தான் ஒரே ஒற்றுமை என்று எண்ண வைத்தது. இசைக்குழு நிகழ்வுகள் இரவு 11:30 மணிக்கு மேல் தான் தொடங்கியது. மாநாட்டுக்கு சென்று வந்தது குறித்து நண்பர் ஒருவரிடம் சொன்னேன். "ஆமாம், நிறைய சொதப்பல், மோசமாக நடத்தப்பட்ட மாநாடு" என்று அங்கலாய்த்தார். பல மில்லியன் வெள்ளிகள் செலவழித்து நாம் என்னதான் நட்சத்திரங்களுக்கிடையே உலவி முற்பட்டாலும், நம்மை பூமியில் இருத்த கண்டிப்பாக யாரேனும் வருவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக