நேசத்தின் பெயரால் நுழைபவன்
துரோகமெனும் நஞ்சு விதைத்து
கண்டத்தில் ஆலகாலமாய் உறைகிறான்
காதலாய் கசிந்துருகி
எண்ணம் நிறைப்பவன்
அந்நியனாய் வார்த்தை இறைத்து
கண்ணீராய்க் கனம் தருகிறான்
நேற்றுவரை காய்தல் உவத்தலின்றி
உரிமையுடன் பழகியவன்
என் பொருளாதார நிலையறிந்து
அறியாதவன் போல் எட்டிச் செல்கிறான்
உறவென்று ஆதரவாய் கைக் கோர்த்தவன்
குறுகிய வெற்றியை விரும்பி
பொருந்தாப்பல பொய்யுரைத்து
என்தோல்வியில் அரியணை ஏறுகிறான்
தடித்த வார்த்தைகள் சாய்த்த போதும்
துரோகத்தின் தீயினில் கருகிய பின்னும்
நம்பியே நாளும் நலிந்த பின்னும்
புதியவர்களுக்கு முதல் சந்தர்ப்பமாவது
வழங்கென வாதிக்கும் என் மனதிடம்
யார் சொல்வது
ஒவ்வொரு துரோகமும்
முதன்முறையாக நடந்ததேயென்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக