திங்கள், நவம்பர் 07, 2011

வந்தான் வென்றான்


சமீபத்திய தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில் வேலாயுதம் முந்தியதா இல்லை 7 -ஆம் அறிவு முந்தியதா என்று விஜய் ரசிகர்களும் சூர்யா ரசிகர்களும் கச்சை கட்டி மோதிக் கொள்ளும் இந்த நேரத்தில் எந்த திரைப்படம் வெற்றி வாகை சூடியது என்பது பற்றி ஒரு அலசல். முதலில் தெளிவு படுத்த வேண்டியது ஒன்று உண்டு - அது நான் விஜய் ரசிகையும் அல்ல சூரியா ரசிகையும் அல்ல. எனவே எனது விமர்சனம் எந்த சமரசத்திற்கும் உடன் பட்டது அல்ல என்பதே.
சூர்யா, விஜய் இருவரும் திறமையான நடிகர்கள்.  திரைத்துறையில் பல வருடமாக இருந்து பல வெற்றி திரைப்படங்களை நமக்கு அளித்து  இருக்கிறார்கள். சூர்யா படத்திற்கு படம் காட்டும் வித்யாசமான நடிப்பும், தன் உடலை வருத்தி - 20 வயது இளைஞன் கதாபாத்திரம் முதல் 60 வயது முதிய கதாபாத்திரம் வரை பொருந்துவதற்காக மெனக்கிடுவதாகட்டும், நடனம், சண்டை என்று எல்லாவற்றிலும் அற்புதமாக மிளிர்பவர். விஜய்யும் சூரியாவிற்கு இளைத்தவர் அல்ல. நடனம், சண்டை, காமெடி என்று பல தளங்களில் பரிமளிப்பவர். இப்படி இருக்க எந்த நடிகர் சினிமாவின் அடுத்த தளத்திற்கு தனது புதிய திரைப்படம் மூலம் சென்றார் என்ற கேள்வி எழுகிறது. 


விஜய் படம் என்றால் பொழுது போக்குக்கு கண்டிப்பான கியாரண்டி உண்டு. மசாலா ஆக்ஷன் தூக்கலான கதை, அரசியல் பலம் வாய்ந்த அல்லது மந்திரியாகவோ முதலமைச்சராகவோ பதவியில் உள்ள வில்லன், தொப்புள் காட்டும் செகண்ட் ஹீரோயின் , குடும்ப குத்துவிளக்கு பர்ஸ்ட் ஹீரோயின், அண்ணனே/மகனே உலகம் என்று வாழும் தங்கை அல்லது தாய் கதாபாத்திரம் என்று சினிமாவின் இலக்கணங்கள் மீறாத கதை அமைப்பு கொண்ட படம்  என்றால் கண்ணை மூடிக் கொண்டு விஜய் படம் என்று தைரியமாக சொல்லலாம்.

சூரியா படங்கள் அந்தளவுக்கு யூகிக்க கூடிய கதை அமைப்பு உள்ள படங்கள்  இல்லை என்றாலும் பல சமயம் நல்ல திரை கதையிலும் சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்திற்காக திணிக்கப்படும் மசாலா விஷயங்கள் விஜய் படத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல. ஆக்ரோஷமாக படம் முழுவதும் கத்திக் கொண்டிருக்கும் வில்லன், அறிமுக தத்துவ பாடல், முறுக்கு மீசை, அருவாள் என்று பல படங்களில் சூரியா படமும்  பார்முலா வட்டத்தில் சிக்கியுள்ளது கொஞ்சம் வருந்த தக்கதே.

 
ஒரு திரைக்கதை பல சமரசங்களுக்கு பிறகே திரைப்படமாக எடுக்கப்படுகிறது என்பதும், வியாபார நோக்கதிற்காக மட்டுமே எடுக்கப்படுகிறது   என்பதும், எப்படியாவது ரசிகர்களை இரண்டரை மணி நேரம்  தியேட்டரில் உட்கார வைக்க  வேண்டும் என்ற கட்டாயத்திற்காக பல கவர்ச்சி அம்சங்கள் சேர்க்கப்பட்டு அலங்கோலப்படுகிறது என்பதும் நான் அறியாதது அல்ல. எனினும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களான சூரியா மற்றும் விஜய்யும் தனது புதிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றார்களா என்றால் இல்லை என்றே தான் சொல்ல வேண்டும்.




முதலில் வேலாயுதம் - விஜய் ஜெயம் ரவிக்கு இணையாக "ரீமேக்" விஜய்யாக அவதாரம் எடுத்து ரொம்ப நாள் ஆயிற்று. கடைசியாக எந்தப் விஜய் படம் ரீமேக் இல்லை என்பதே நினைவில் இல்லை. வேலாயுதமும் "ஆசாத்" என்ற தெலுங்கு படத்தின் தழுவலே. விஜய் தனது ரோலுக்காக எந்த படத்திலும் பெரிய அளவு மெனக்கிடுவதில்லை என்பது அடுத்த குறை. அதாவது எந்த படத்திலும் பெரிய அளவுக்கு கெட்டப்பை மாத்தி நடிக்க எத்தனிப்பதில்லை. (அப்படி நடிச்சாலும் யார் பார்ப்பா என்று நீங்க முணுமுணுக்கறது கேட்குது) பார்முலா மரத்தையே சுற்றி சுற்றி வரும் விஜய் நாலு பாட்டு, அஞ்சு சண்டை, இரண்டு அழுகை சீன் என்று சின்ன வட்டத்தில் சுழன்று பார்ப்பவருக்கும் அலுப்பு மூட்டுகிறார்.
வேலாயுதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சந்தானம் காமெடியில் ஏற்கனவே உச்சத்தில் உள்ளார். விவேக், வடிவேலு ஆகியோர் விட்ட இடத்தை அவர் நிரப்ப வேண்டிய அந்தஸ்தில் உள்ளதால் இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனை என்று கூற முடியாது. விஜய் அந்தோணி பாடல்கள் மாஸ் மற்றும் கிளாஸ் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தின் மூலம் சிறிதளவாவது பயன் அடைந்தவர் என்றால் அது ஹன்சிகாவும், ஜெனீலியாவும் தான். ஏன் என்றால் அவர்களுக்கு மட்டும் தான் புதிய பட வாய்ப்பு கிடைக்கும் முகாந்திரம் உள்ளது. மற்றபடி வேலாயுதம் - புதிய மொந்தையில் பழைய கள்.

அடுத்து 7-ஆம் அறிவு. அற்புதமாக தொடங்கும் திரைக்கதை காதல், டூயட் பாடல்,  பிரிவு மீண்டும் சோகப் பாட்டு என்று பாதியிலேயே நொண்டி அடிக்கிறது. சுருதிஹாசன் அற்புதமாக நடித்துள்ளார். சில பல இடங்களில் சூரியாவையே மறக்கச் செய்கிறார். ஆனாலும் திரைக்கதையில் பல கதாபாத்திரங்கள்  என்ன ஆகியது என்பதே தெரியாமல் அமைக்கப் பட்டுள்ளது. உதாரணம் அந்த ப்ரொபசர் பாத்திரம். அவரை போலீஸ் கைது செய்ததா என்பது கடைசி வரை தெரியவில்லை. வழக்கம் போல கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் அத்தனை அடி அடித்த பின் எழும் ஹீரோ வில்லனை துவைத்து தொங்கபோடுவதை இன்னும் எத்தனை சினிமாவில் பார்த்து  நொந்து போக வேண்டுமோ. கின்னஸ் பக்ரு மற்றும் சுருதி ஹாசன் போன்றோருக்கு இந்த படத்தின் மூலம் வேறு பட வாய்ப்புகள் கிடைக்க வழி உண்டு. ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல தாளம் போட வைக்கிறார். முருகதாசிற்கு அடுத்த படத்திலாவது நல்ல எடிட்டர் அமைய வாழ்த்துக்கள்.  7-ஆம் அறிவு - ஆற்றின் குறுக்கே எழுப்பட்ட மணல் பாலம். 



சரி ரெண்டு படமுமே சுமார் தானா ரெண்டுமே நல்லா இல்லையா என்று கேட்பவர்களுக்கு என்னோட அட்வைஸ். படத்தோட மெசேஜ் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக 7-ஆம் அறிவு வேலாயுதத்தை விட நிச்சயம் முன்னணியில் உள்ளது அப்படின்னு சொல்லுவேன். தமிழர்கள் எத்தகைய பாரம்பரியம் கொண்டவர்கள் என்பதும்  நமது மருத்துவம், வான சாஸ்திரம், அறிவியல் அறிவு ஆகியன இன்றிருக்கும் மேற்கத்திய நாகரிகத்தை விட எத்தனை உயர்வானது, விரிவானது, ஆழமானது என்பதை காட்டும் முகமாக இருந்ததால் 7-ஆம் அறிவு-க்கே  எனது வோட்டு . எல்லாருக்கும் தெரிஞ்ச மெசேஜ் தான். இருந்தாலும் தமிழன்  திரைப்படத்தின் மூலமாக மெசேஜ் சொன்னா தானே கேட்பான். வேலாயுதம் மெசேஜ் நல்லா இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் அடாவடி பண்றவனை தட்டி கேட்டால் என்ன நடக்கும் என்று கொஞ்சம் மதுரை அல்லது சென்னை பக்கம் போய் பாத்துட்டு வந்து சொல்லுங்க பாஸ் என்றே சொல்ல தோன்றுகிறது. காவலன் வந்த போது ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காமல் தவித்த விஜய் அநியாயத்தை தட்டி கேளுங்கள் என்று சொல்லும் போது கேட்க கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது. தட்டி கேட்ட ஜெனீலியா மற்றும் அவரது நண்பர்களுக்கு என்ன ஆச்சின்னு படத்துல வர்ற முதல் காட்சியை நீங்க பார்த்திங்களா விஜய் அப்படின்னும் கேட்க தோணுது. 


இத்தகைய படங்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த இரண்டு நடிகர்களும் செய்ய  வேண்டியது உண்டு. அது திரை துறையில் காலுன்ற கஷ்டப்படும் இளம் நடிகர்களுக்கு தங்கள் படத்தின் மூலம் வாய்ப்பு அளிப்பது, நல்ல இயக்குனர்களை அறிமுகப்படுத்துவது, ஆண்டு தோறும் ஒரு படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்று நடிப்பது அல்லது அப்படிப் பட்ட கதை அம்சம் உள்ள திரைப்படத்தை தயாரிப்பது போன்ற எதாவது ஒன்றை கடைபிடித்தால் இவர்களுக்கு திரைத்துறையில் அழிவில்லாத ஒரு இடம் நிச்சயம் உண்டு.


உங்களுக்கு ரெண்டு படத்தையும் பார்க்க நேரம் கிடைத்தால் ரெண்டு படத்தையும் பாருங்க. அப்படி இல்லேன்னா 7-ஆம் அறிவு-க்கு நேரம் ஒதுக்குங்கள்.  யாம் பெற்ற இன்பம்(உங்களுக்கு துன்பமாக இருந்தால்..மன்னிக்கவும்) பெருக இவ்வையகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக