வெள்ளி, ஜூலை 15, 2011

கதம்ப மாலை - 2

அடேங்கப்பா கோவில்

பத்மநாபா கோவிலின் சொத்து மதிப்பு வெளியாகி அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 1 லட்சம் கோடி அளவு சொத்து மதிப்புள்ளதாகவும் இன்னும் திறக்கப்படாத ஒரு நிலவறையை திறந்தால் சொத்து மதிப்பு மேலும் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி வெங்கடேஸ்வரரை  விட இரு மடங்கு சொத்து மதிப்பு கொண்ட கோவிலாகவும் இந்தியாவிலேயே  அதிக சொத்து உள்ள கோவிலாகவும் ஒரே மாதத்தில் மாறி உள்ளது. கோவிலின் சொத்துக்களை சமுதாய நலத்தை மேம்படுத்த கூடிய காரியங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன. இது நன்மை தருவது என்றாலும் இன்றைய ஆட்சியாளர்கள் கையில் கோயில் சொத்துக்கள் குரங்கிடம் அளித்த பூ மாலை போல் ஆகிவிடும். எத்தனை ராஜாக்களை, கல்மாடிகளை இந்த நாடு தாங்கும். எனவே இந்த விஷப்பரிட்சை வேண்டாம்.
தவிரவும் இதையே மேற்கோளாக கொண்டு சர்சுகள், மசூதிகள் ஆகியவற்றில் உள்ள விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களை எடுத்து மக்கள்
நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று நாளையே  வேறு சிலர் குரல் கொடுக்கலாம். இது மக்களின் உளப்பாட்டுக்கு எதிரான ஒன்று. எனவே கோவிலுக்கு அதிகபட்ச  பாதுகாப்பு அளிப்பது, தற்போது உள்ள நிர்வாக நடைமுறையை பின்பற்றுவது, சுப்ரீம்/ஹை  கோர்ட் உத்தரவுப்படி மட்டுமே பொக்கிஷங்களை கொண்ட நிலவறையை திறப்பது போன்ற நடை முறைகளை பின்பற்றினால் மட்டுமே போதுமானது.  சுவாமி பத்மநாபனின் சொத்துக்கள் மக்களுக்கு எவ்வாறு பயன் அளிக்க வேண்டும் என்பதை அவனின் விருப்பத்திற்கே விட்டு விடுவோம். இது பழமைவாத கருத்தாக தோன்றினாலும் இன்றைய நிலவரங்களை கணக்கில் கொண்டு பார்த்தால் இதுவே சரியான தீர்வாக இருக்கும் என்றே தோன்றுகிறது.          


இன்பச் சுற்றுலா     
கொளுத்தும் சூரியனின் கிடுக்கி பிடியில் இருந்து விடுபெற எண்ணி இந்த வாரம் நீண்ட வார இறுதியை கழிக்க நாங்கள் சென்றது ஹில்டன் ஹெட் என்ற தீவு.  தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள இந்த தீவு
சார்லஸ்டன் நகரில் இருந்து 95 மைல் தொலைவிலும் ஜியார்ஜியாவில் உள்ள சவானாவில் இருந்து 20 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. பிளாடினத்தை உருக்கி வார்த்தது போன்ற அழகான நீர் பரப்பு, தங்க துகள்களை வாரி இறைத்தது போன்ற மென்மையான மணல்வெளி, குழந்தைகள்  விளையாட செயற்கை நீருற்று மற்றும் ஊஞ்சல், கடலில் நீராடுபவர்களுக்கு குளியலறை வசதிகள் என்று அனைத்து அம்சங்களும் அழகுற அமைந்து இருந்தது. இது தவிர உடல் ஊனமுற்றோர்களுக்கு கடற்கரை வரை பாதை, லைப் கார்ட் பாதுகாப்பு மற்றும் ஆழமான பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் உண்டு. நேரம் போவதே தெரியாமல் அலைகளில் நனைந்தும், கிளிஞ்சல்களை சேகரித்தும், மணலில் மண் வீடு கட்டியும் பொழுதை இனிமையாக கழித்தோம்.

டைபி கலங்கரை விளக்கத்தில் இருந்து ஒரு பார்வை

அடுத்த நாள் சவானாவில் இருந்து 20 மைல் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ள டைபி தீவிற்கு சென்றோம். டைபி தீவில் பார்க்க வேண்டியது என்றால் அது  சவானா நதிக்கரையில் அமைந்துள்ள டைபி கலங்கரை விளக்கம். ஜியார்ஜியா மாநிலத்தில மிகவும் பழமை வாய்ந்த இந்த கலங்கரை விளக்கம் இன்றும் அழகாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. 178 படிகளை கொண்ட இந்த கலங்கரை விளக்கத்தில் மேலே ஏறி சென்றால் உச்சியில் இருந்து சுற்றியுள்ள எழில்மிகு காட்சிகளை கண்டு களிக்கலாம். படிகள் வளைந்து வளைந்து அமைந்து இருப்பதால் மேலே ஏறும் போது எச்சரிக்கையாக ஏறுவது நலம். கலங்கரை விளக்கத்தில் இருந்து நடக்கும் தொலைவிலேயே உள்ளது அழகான கடற்கரை. கரையோரம் வளர்ந்த நாணல் புற்கள் காற்றின் தாளத்திற்கேற்ப தலையாட்டும் அழகும், பாறைகள் மேல் அலைகள் மோதும் சத்தமும், ஆரவாரிக்கும் குழந்தைகளின் குரலும் அங்கு ஒரு இன்னிசை கச்சேரி நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. இயற்கை நடத்திய அந்த இசை மழையில் நனைந்து மகிழ்ந்தோம். அங்கிருந்து கிளம்பவே மனம் கிளம்பி இல்லாமல் அன்றிரவே கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். அழகான இடங்களை படைத்த அந்த இறைவனுக்கு நன்றி. அதை அழகு கெடாமல் பாதுகாக்கும் மக்களுக்கும் நன்றி. 

டைபி கலங்கரை விளக்கம்



மெல்ல தமிழ் இனி சாகும்

உறவினர் ஒருவருடன் "கோ" திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். கோ என்றால் என்ன என்று தெரியுமா என்று விளையாட்டாக கேட்டேன். உடனே அவர் "Co" அதாவது கம்பெனி என்பதை குறிக்கும் ஆங்கில வார்த்தை தானே அது என்று கேட்டவுடன் மயக்கமே வந்து விட்டது. தமிழ் பெயர் வைப்பதால் தமிழ் வளரும் என்று தமிழ் படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் தமிழக அரசு கவனிக்க. ஒரு புறம் தமிழில் பேசவோ எழுதவோ தெரியாத இன்றைய இளம் தலைமுறையால் தமிழ் மொழி வழக்கொழிந்து வரும் நிலையில், அந்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கும் பெற்றோர்களுக்கு தமிழ் மொழியில் பாதி சொற்பதங்களுக்கு என்ன பொருள் என்று கூட தெரியவில்லை. இப்படி இருந்தால் தமிழ் மொழி எவ்வாறு முன்னேறும்? அடுத்த தலைமுறைக்கு பேசும் மொழியாக எவ்வாறு மாறும்?




சரி சொற்பதங்களுக்கு என்ன பொருள் என்று தெரியவில்லையாயினும் பொருள் என்ன என்பதை கணிப்பொறியிலாவது தேடி அறிந்து கொள்ளலாம் அல்லவா. அந்த முயற்சி கூட அவர் எடுக்க முயலவில்லை. இதற்கும் இந்த படம் வந்து பல நாள் ஆகிவிட்டது. அதனால் தேடுவதற்கு கால அவகாசம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படியே "வாரணம் ஆயிரம்" என்று ஒரு திரைப்படம் வந்ததே. வாரணம் என்றால் என்ன என்று கேட்க எனக்கு தைரியம் வரவில்லை. இதற்கும் உறவினர் பத்தாம் வகுப்பு வரை தமிழை இரண்டாம் பாடமாக படித்தவர் தான். பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் பிரெஞ்சு மொழியை இரண்டாம் பாடமாக படித்தவர். பத்தாம் வகுப்பு வரை தமிழை படித்தவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பிற மொழிகளை இரண்டாம் பாடமாக எடுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே மாற்று மொழி படிக்கும் வாய்ப்பு அளிக்க பட வேண்டும். இல்லா விட்டால் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல எந்த மொழியையும் சரி வர தெரியாத நிலையே ஏற்படும்.
மீண்டும் மும்பை

மும்பையில் மீண்டும் இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. உயிர் பலி 20 என்றும் மேலும் 100 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சகம், ரா, தேசிய பாதுகாப்பு கழகம் போன்ற அத்தனை அமைப்புகளின் பணி தான் என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை. 2008 ஆம் ஆண்டு 26 /11 அன்று நடந்த தாக்குதலின் பாதிப்பில் இருந்து மீளும் முன்பே திரும்பவும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது இந்தியாவிற்கு சர்வேதேச அளவில் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு என்ன கவலை. அவர்களுக்கு இந்தியாவின் மதிப்போ, இந்திய உயிர்களின் மதிப்போ என்று தெரிந்தது இன்று வருந்துவதற்கு. அமெரிக்கா மீதான தீவிரவாத தாக்குதல் நடந்து 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வேறு எந்த தாக்குதலும் நிகழாமல் அமெரிக்கர்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை நமது ஆட்சியாளர்கள் சிந்தித்தால் தேவலை. தேவை இல்லாத விஷயங்களில் அமெரிக்காவை காப்பி அடிக்கும் நம்மவர்கள் இந்த விஷயத்தில் அமெரிக்காவை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
எப்பொழுதும் போல் ஒரு கமிஷன் அமைத்து குற்றவாளிகளை பிடித்தாலும் அவர்களுக்கு ஜெயிலில் சகல வசதிகளும் செய்து கொடுத்து நன்றாக வைத்திருக்க மட்டுமே இன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரிந்துள்ளது. உதாரணமாக மும்பை தீவிரவாத தாக்குதலில் சிக்கிய கசாபை சொல்லலாம். பல ராணுவ வீரர்களின் இன்னுயிரை ஈந்துப்  பிடித்த தீவிரவாதியை சகல வசதிகளுடன் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியாத புதிர். நாட்டை காக்கும் உயரிய பொறுப்பில் உள்ள பிரதமரோ சோனியாவின் கைப்பாவையாகவே செயல்படுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார். அவர் தும்முவதற்கு கூட ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையிடம் கேட்டால் மட்டுமே முடியும் என்னும் போது நாட்டின் பாதுகாப்புக்கு யார் தார்மீக பொறுப்பு ஏற்றுள்ளார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.
என்ன செய்வது இது மன்மோகன்களின் காலம். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் வெறும் பார்வையாளராகவே மட்டுமே தன்னை பதிவு செய்து கொண்டிருக்கும் பொம்மை பிரதமர் உள்ளவரை இது போன்ற துயர நிகழ்வுகளில் இருந்து நம்மை எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே காக்க முடியும்.
   
"Those who would give up essential liberty to purchase a little temporary safety deserve neither liberty nor safety." - பெஞ்சமின் பிராங்க்ளின்.

நமது பிரதமர் இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்று பதவி விலகுவாரா அல்லது தனக்கும் இதற்கும் எதுவும் சம்பந்தம் இல்லாதது போல் இருந்து விடுவரோ என்பது போக போகத்தான் தெரியும். தீவிரவாதத்திற்கு நிறைய உயிர்களை விலையாக தந்திருக்கிறது இந்த தேசம். ஆனால் பதவி ஆசைக்கும், ஆட்சியாளர்களின் கையலாகதனத்திற்கும் இன்னும் எவ்வளவு பேரை விலையாக தர வேண்டி இருக்கும்.

வானம்
சமீபத்தில் வானம் என்ற திரைப்படத்தை பார்த்தேன். சிம்பு, அனுஷ்கா, பரத், சரண்யா, பிரகாஷ்ராஜ் நடித்து கிருஷ் இயக்கத்தில் வெளி வந்த இந்த படம் நன்றாக இருந்தது. தெலுங்கில் வெளிவந்த வேதம் திரைப்படத்தின் ரீமேக் இது என்றாலும் அழகாக தமிழ் படுத்தபட்டிருந்தாக தோன்றியது. பாடல்கள் பரவாயில்லை. யுவன் "எவன்டி உன்னை", "தெய்வம் வாழ்வது" போன்ற பாடல்களில் மிளிர்கிறார். மற்ற பாடல்கள் கொட்டாவி ரகம். சிம்பு பஞ்ச் டயலாக் இல்லாமல், ஓவர் பில்ட் அப் இல்லாமல் கேபிள் ராஜாவாக வாழ்ந்து இருக்கிறார். சரண்யா கந்து வட்டிகாரனிடம் சிக்கி கஷ்டப்படும் ஏழை தாயாக அருமையான நடிப்பை அள்ளித் தருகிறார். அவர் தன்னுடைய மகனுடன் சேர்ந்தாரா என்பது கடைசி காட்சி வரை திக் திக். பரத், பிரகாஷ்ராஜ் போன்றோர் அவரவர் பாத்திரங்களை உணர்ந்து அழகாக செய்திருக்கிறார்கள். சலாம்-இ-இஷ்க் என்ற ஹிந்தி திரைப்படத்தில் வருவது போல பல இணைக்கதைகள் கொண்ட திரைக்கதையை வெற்றிகரமாக இணைத்து இருக்கிறார் இயக்குனர். அனுஷ்காவின் கதாபாத்திரம் கவர்ச்சிக்கு உதவுகிறது. மற்றபடி அந்த கதை படத்தில் இல்லாவிட்டாலும் நமக்கு அதனால் பெரிய இழப்பு இல்லை. நெடு நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த திருப்தி வந்தது. பல பெரிய நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிது. அந்த வகையில் இது ஒரு நல்ல முயற்சி. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம்.