வியாழன், மார்ச் 28, 2024

என்னைத் தொலைத்தேன் - கவிதை



 

உறவின் பெயரால் அடிமை செய்தலை விட

தோழமையின் எல்லைக் கோட்டில் நிற்றலே என் காதல் 


மழையாய் உன்னைத் தழுவுவதை விட 

காற்றாய் நெஞ்சில் நிறைவது தான் என் அன்பு  


உன்னைக் கூட்டில் இருத்தி சிறைச் செய்தலை விட 

உந்தன் சிறகாய் மாறி உயரச் செலுத்துவதே என் பிரியம் 


உன் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கும் விரல்களை விட 

உன் வெற்றிப் பாடலை தினம் உதிர்க்கும் 

வார்த்தைகளிலேயே என் நேசம்  


என்னில் ஒரு பாதி இல்லை நீ 

பூஜியத்தின் முன்னின்று 

மதிப்புச் சேர்க்கும் மந்திரம் நீ 


சோகச் சிரிப்பொன்றை உதிர்த்தாய்

உனக்கும் காதல் பிறந்திருந்தால் 

என்னைத் தொலைத்து நம்மைக் கண்டிருப்பாய் 

அடிமையாய் வாழ்வதும் 

மழையாய் வீழ்வதும் 

கூட்டில் அடைவதும் 

கண்ணீரில் கரைவதும் 

பூஜியத்தில் முழுமை காண்பதும்

நாமிருவர் சார்ந்த முடிவு 

தனித்தே முடிவெடுத்தல் காதலில்லை 

என் பிரியத்தின் அடர்த்தி 

உனக்குள்ளும் தோன்றும் வரை 

எதிர்காலத்தின் கரையில் காத்திருப்பேன்


கண்ணில் பெருகிய கண்ணீர் 

மெல்ல என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக