அன்றொரு நாள்
அலைக்கடல் கடந்து
வானவூர்தியில் விரைந்தேன்
நோயுற்றுருப்பதாய் அறிந்து
நைந்த பாயாக
உடலெங்கும் ஊசிக்குத்தி
வலியின் வேகத்தில்
போதும் போதுமென்று
தூக்கத்திலும்
அரற்றிக் கொண்டிருந்தாய்
வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையே நீயும்
அன்புக்கும் மனிதாபிமானத்திற்கும்
இடையே நானும்
ஊசலாடிக் கொண்டிருந்தோம்
ஏதேதோ மருந்துகள் உள்ளேயும்
பிராணவாயுக் குழாய்கள் வெளியேயும்
உன் உயிரைத் தேக்கிவைக்க பாடுபட்டன
உன் உயிர்ப்பறவை உடற்கூட்டில்
நில்லாமல் பறக்க எத்தனித்த
போதெல்லாம் மருத்துவக்குழாம்
இடைபுகுந்து உயிரை இழுத்து
நிறுத்தி வைத்தது
புதிய மருத்துவமனையில்
சேர்த்த மற்றொரு நாளில்
எனக்காக அதிகம்
செலவழிக்காதீர்கள் என்றோ
நீயாக எங்களை
விட்டுவிட்டு நீங்கிச் சென்றாய்
எத்தனை முறை கேட்டாலும்
நான் நல்லா இருக்கேன்பா
என்றே சொல்வாய்
வற்புறுத்திக் கேட்டால் மட்டும்
கொஞ்சம்போல் மூச்சு வாங்குது
ஆனா நல்லாத்தான்
இருக்கேன் என்பாய்
கேட்கும் எவரிடமும்
உன்னுடைய உடல் உபாதைகளை
ஒருநாள் கூடச் சொன்னதே இல்லை
உன்னுடைய இறப்பு
எல்லாருக்கும் அதிர்ச்சி
தருவதாகவே இருந்தது
எங்களுக்கு மட்டுமே
பழகவேண்டிய ஒன்றாக
மாறி விட்டது
இப்போதெல்லாம்
தொலைபேசியில் வரும்
நலம் விசாரிப்புகளின் போது
எவ்ளோ முயன்றாலும்
அம்மாவும் நானும்
நன்றாகத்தான் இருக்கிறோம்
என்பதை
பொய்யாகக் கூடச்
சொல்ல முடிவதில்லை