கறுப்பின மனிதருக்கோர் சிறுமை
வெள்ளை அறிக்கை
வீட்டின் கதவடைந்தாலும்
நம்பிக்கை கொள்வதில்லை
நாளத்தில் குருதி தகிக்கவில்லை
வெள்ளைப் பக்கங்களில்
கருமை பூசிய சொற்கள்
உண்மையை பேசின நாளும்
தோட்டாக்கள் பேனாக்களை
வஞ்சகமாய் வதம் செய்து
பத்திரிக்கை தருமத்தை மாய்த்த போதும்
நெஞ்சம் கலங்கவில்லை
கண்ணீர் துளிர்க்கவில்லை
கலவர பூமியில்
இளமங்கையை மாய்த்த பேரை
திலகமிட்டு மாலைச் சூட்டி
வீரனென பாரினில் ஏத்தும்
மடமை கண்டே நொந்து
நீதியின் நீள்துயில் கலையவில்லை
பேதமெனும் நெருஞ்சியை பொசுக்கவில்லை
வாய் பேசாக் குரங்கு
கண்களை மூடிய குரங்கு
காதுகளைப் பொத்திய குரங்கு
மூன்று பொம்மைகள் எதற்கென
ஒரே பொம்மையாய்ச் செய்தோம்
அநீதிகண்டும் கேட்டும் வாயடைத்து
சமூக ஊடகத்தில் தொலைந்து
சகதியில் வீழ்ந்த மனிதம்
சூழ்ந்த காரிருள் விலகவில்லை
சமத்துவ உலகம் மலரவில்லை
அநீதி தனக்கே நிகழும் வரை
எதிர்ப்புக் குரல் ஒலிப்பதில்லை
உதவிக் கரம் நீளுவதில்லை
துயில் கொள்வோரை எழுப்பலாம்
நடிப்போரை எந்நாளும் எழுப்பவியலாது
அகழ்வாரைத் தாங்கும் நிலமென்றாலும்
நெருப்புமிழும் எரிமலைகள்
அடியினில் கனன்று கொண்டிருக்கும்
புவியிடம் பாடம் படிப்போம்
மௌனம் சம்மதமல்ல
புதுவெள்ளம் கரைக்குள் நிறைவதல்ல
அச்சமெனும் முள்ளில் சிக்கி
அடிமையாய்க் கோழையாய்
முகமின்றி வாழ்வது தொலைத்து
ரௌத்திரம் பழகுவோம்
வீழ்ந்தாலும் ஆங்கொருவர்
வாழ்வதற்கென்றே மாற்றுவோம்
கள்ளிக் காட்டில் மறைத்தாலும்
காடழிக்கும் தீப்பொறியாய்த் தோன்றுவோம்
உப்புக்கடல் சேர்ந்தாலும்
ஒற்றைத் தேன்துளியாய் ஆகுவோம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக