மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 90வது பிறந்த நாள் கொண்டாட்டம் இணைய வழியில் சென்ற வாரம் நடந்தது. அதற்காக நான் எழுதிய கவிதை கீழே. அய்யா அவர்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்.
இளந்தென்றல் தழுவாத
இளவேனில் காலப் பகலாய்
இளமஞ்சள் வெய்யோனின்
இன்முகங் காணா இரவாய்
இருவிழி இடைநின்ற முள்ளாய்
இமைப் பொழுதும் ஆறாத ரணமாய்
இளைக்கும் கறைப்பட்டு கலங்கும்
ஈரோட்டு இளங்கவியின் கவிகேளா நாளும்
கன்னலும் கனி சிந்தும் தேனும்
கனியமுதும் தெவிட்டாத பாலும்
குன்றும் நின்தமிழின் முன் குறையும்
மாற்றுப் பொன்னல்லோ
வளையாத நின் எழுதுகோலும்
பல்லாயிரம் பொருண்மையில் கவிதீட்டி
பாரோர் வாழ நல்வழி காட்டி
அன்பிலா நெஞ்சுக்கும் அருள் கூட்டி
அணியணியாய் தமிழுக்கு அழகூட்டி
சென்ரியு, லிமரிக்கூவென
பல் வகைமை தந்தாய்
கவிஞருள் மேருவாய்
பலர் நெஞ்சில் நின்றாய்
தமிழன்பர் அகவையோ தொண்ணூறு
தமிழும்நீ வாழும்கவிதைநீ
உனக்கு மூப்பேது
சாகித்ய விருது
உன்கை சேர்ந்தது அக்காலம்
உமது பெயரில் விருதுகள்
பெறுவது இக்காலம்
சென்னிமலையில் பிறந்தாய்
செந்தமிழின் மகவாய்
சின்னத்திரையில் ஒளிர்ந்தாய்
சீர்மிகு கவியாய் மிளிர்ந்தாய்
சமத்துவம் மலர உழைத்தாய்
சகத்தினை மாற்றி அமைத்தாய்
விருதுக்கு புகழ் சேர்த்த மாமணியே
பாவேந்தர் பாசறையில் மலர்ந்திட்ட ஒளிச்சுடரே
அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு
ஆழ்ந்த வாசிப்பு, தேர்ந்த உச்சரிப்பு
பரந்த நுண்ணறிவு
மேன்மையில் பணிவு
அருங்குணங்கள் பல கொண்டாய்
அவனியில் ஆன்ற புகழ் கண்டாய்
வள்ளுவனைப் பார்த்ததில்லை
வான்புகழ் கம்பனைக் கண்டதில்லை
பாரதியை அறிந்ததில்லை
பாரதிதாசனுடன் பழகியதில்லை
உன் அகம் கண்ட பின்னாளில்
இக்குறைகள் எழுவதில்லை
வாழிய வாழிய இன்னும் பல்லாண்டு
வளர்க வளர்க சீர்மிகு நின் தமிழ்த் தொண்டு
பொன்னான நின் அகவை நூறுக்கும்
பொலிவான என் வாழ்த்துக் கவி ஒலிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக