புதன், நவம்பர் 22, 2023

பட்டாம்பூச்சி வாழ்க்கை - கவிதை



என்னிடம் காசில்லா நாட்களில் 
காலியான பேருந்துகள் மட்டுமே 
நிறுத்தத்திற்கு வருகின்றது
கூட்டத்தில் தொலையும் 
வாய்ப்பினைத் தராமல் 

நேர்வழியைத் தவிர்த்து 
விரைவுப் பாதையில் 
செல்ல நேரும் போதெல்லாம் 
எவர் காலிலும் படாதமுட்கள் 
என் காலில் தைக்கிறது 

எப்படியேனும் அடுத்தவருக்கு
வெற்றிகரமாய் முடிந்து விடும்
காரியங்களில் ஒன்றிரண்டு கூட 
எத்தனை முயற்சி செய்தாலும்
ஒரு போதும் நிறைவேறுவதில்லை எனக்கு

இளைப்பாறல் இல்லா
நெடிய பயணங்கள் 
தொடர்த் தோல்விகள்
விழலாகும் முயற்சிகள்
நெகிழ்வற்ற வாழ்வில்
மூச்சு முட்டும் வரை சவால்கள்
வாழும் தகுதி இருப்பதை 
நொடி தோறும் மெய்ப்பித்தல் 
தீராதக் களைப்பைத் தருகிறது 

பிறப்பு முதல் இறப்பு வரை
விரும்பினாலும் விரும்பவிட்டாலும் 
பலவித அனுபவங்களில் தோய்த்து
அடிமையைப் போல இழுத்துச் செல்கிறது 

மலரில் அமரும் பட்டாம்பூச்சியாய் 
காற்றை அளவளாவும் இறகாய்
இருளில் உதிர்ந்த சருகாய் 
வாழ்வைக் கடத்தல் அசாத்தியமாகிறது
கைவராத வாழ்வின் மீதான
எதிர்பார்ப்பு தவறும் போதெல்லாம்
பிறரை எச்சரிக்கவென
இக்கவிதையை மட்டுமாவது
விட்டுச் செல்கிறேன்
அதை என்றாவது 
யாரேனும் வாசித்து
ஆறுதல் பெற 
கருணையோடு அனுமதிக்கூடும் 
இந்த வாழ்வு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக