இறந்தவரைப் பற்றிய இரங்கல்பா
முகநூலில் முளைத்த
அரை மணி நேரத்தில்
கவிதையொன்று இடப்படுகிறது
மெழுகுவர்த்தி உருக சில மணித்துளிகள்
பட்டாம்பூச்சியொன்று மறைய சில நாட்கள்
ஈசலொன்று தேய சில மாதங்கள்
மானுட சமுத்திரத்தின் ஒருதுளி
விண்ணேக வருடங்கள் பல
இயற்கை கூட இறந்தவற்றை செரிக்க
காலம் எடுக்கிறது
ஒரு பெரும் அலையில் தோன்றும்
நீர்முகத்தை ஒத்தது மரணம்
சமூக ஊடகத்தின்
செய்தி அலையில் நசுங்கி
மறைந்த அன்றாவது
மற்றுமொரு பதிவால் மறக்கப்படாமல்
இருக்கும் அளவாவது
வாய்க்க வேண்டும் ஒரு வாழ்வு