வியாழன், செப்டம்பர் 12, 2024

இந்திரையோ சுந்தரியோ - கவிதை

இயற்கை காட்சி ஒன்றை சமீபத்தில் வரைந்தேன். இதோ அந்த ஓவியமும் அதற்கான கவிதையும். 






பச்சை இலையாடை உடுத்தி 

பலவண்ண மலர்கள் அணிந்து 

நீரலைகள் நெளிந்து ஆடும் 

தடாகத்தை இடையில் சூடி 


இயற்கையெனும் இளைய மங்கை 

இந்திரையாய் காட்சி கொண்டாள் 

இமைக்கவியலா பேரழகு பூண்டு 

இதயக்கூட்டில் உயிராய் நிறைந்தாள் 


அன்னங்கள் நடை பயிலும் 

நாணலும் வண்ணக் கோலமிடும் 

காற்று நதியின் தலைகோதி விளையாடும் 

பூக்கள் மணம்பரப்பி சதிராடும்

 

முகில்கள் வரவாயெனத் தூதனுப்பும் 

மஞ்சு நீராடியிலே முகம் திருத்தும் 

பசுமரங்கள் இலையாட்டி நடம் புரியும் 

பைங்கிளிகள் கானமிசைத்து பறந்தோடும் 

சில்வண்டு மலர்த் தாவி தேனுண்ணும் 

சிட்டுக்குருவி மரம் தாவி கீச்சிடும் 


இயற்கையின் ஜாலங்கள் பல வண்ணம் 

இன்பங்கள் பலகோடி அவை சொல்லும் 

கண்ணின் மணியாய் பூமியைக் காத்திடுவோம்

காலங்கள் தாண்டி காதலித்து தொழுதிடுவோம்


வியாழன், செப்டம்பர் 05, 2024

அவளுக்கான அவள் - கவிதை



மூன்று வேளை சமையல் 
காப்பி டீ நொறுக்குத் தீனியென
அனைவரின் பசியாற்றியபின் 
கிடைப்பதே
அவளுக்கான ஓய்வு

சரியான சம்பளம்
நியாயமான சலுகைகள்
நல்ல மேலாளர்
இல்லாத இடமே
அவளுக்கான பணியிடம்

பிள்ளைகளை நன்றாக வளர்
அனைத்திலும் அவர்களை முதல்வனாக்கு
கணவனை நன்கு கவனி
அவளுக்கான சுயமுன்னேற்றக் குறிப்புகள்

துணிகளைத் துவை
சமையலில் ஆற்றல் பெறு
வீட்டைப் பார்த்துக் கொள் 
அவளுக்கான சொத்துக் குவிப்பு

வயதானது போலத் தெரிகிறது
எடை போடாமல் பார்த்துக்கொள்
நரை விழற வயசா இது
அவளுக்கான கரிசனப் பேச்சு

குடும்பத்தின் தேவைகளை முன்வைத்து
அவள் ஆசைகளைப் புறம் தள்ளுவதே
அவளுக்கான காதல் பரிசு

சாப்பிட்டியா என்பதே
அவளுக்கான அதிகபட்ச அன்பு
விரைவில் உடல்நலம் தேறி
குடும்பத்தை பார்த்துக்கொள் என்பதே
அவளுக்கான அதிகபட்ச அக்கறை

அசதி சோர்வு உடல்வலி பொறுத்து
வேலைகள் பலவும் முடித்து 
உணர்வாலும் உழைப்பாலும் களைத்து
வருடமும் வயதும் மறந்து  
நடைபிணமாய் வாழ்வதே 
அவளுக்கான கனவு வாழ்க்கை