இயற்கை காட்சி ஒன்றை சமீபத்தில் வரைந்தேன். இதோ அந்த ஓவியமும் அதற்கான கவிதையும்.
பச்சை இலையாடை உடுத்தி
பலவண்ண மலர்கள் அணிந்து
நீரலைகள் நெளிந்து ஆடும்
தடாகத்தை இடையில் சூடி
இயற்கையெனும் இளைய மங்கை
இந்திரையாய் காட்சி கொண்டாள்
இமைக்கவியலா பேரழகு பூண்டு
இதயக்கூட்டில் உயிராய் நிறைந்தாள்
அன்னங்கள் நடை பயிலும்
நாணலும் வண்ணக் கோலமிடும்
காற்று நதியின் தலைகோதி விளையாடும்
பூக்கள் மணம்பரப்பி சதிராடும்
முகில்கள் வரவாயெனத் தூதனுப்பும்
மஞ்சு நீராடியிலே முகம் திருத்தும்
பசுமரங்கள் இலையாட்டி நடம் புரியும்
பைங்கிளிகள் கானமிசைத்து பறந்தோடும்
சில்வண்டு மலர்த் தாவி தேனுண்ணும்
சிட்டுக்குருவி மரம் தாவி தலையாட்டும்
இயற்கையின் ஜாலங்கள் பல வண்ணம்
இன்பங்கள் பலகோடி அவை சொல்லும்
இளமகளை இனியவளை எந்நாளும் காத்திடுவோம்
காலமெலாம் கருத்துடனே காதலித்து தொழுதிடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக