அடுத்த நாள் நாங்கள் சென்றது "தி ட்யூலிப் பார்ன்" எனப்படும் ஒரு ட்யூலிப் வயலுக்கு. பல இடங்களில் ட்யூலிப் மலர்களைப் பயிர் செய்து அந்த ட்யூலிப் மலர்கள் மலர்ந்தவுடன் அதனை பார்வையாளர்கள் வந்து பார்க்க கட்டணம் வசூலித்து அனுமதிக்கின்றனர். பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதியுடன் காபி, டீ போன்ற சூடான பானங்களும் சிற்றுண்டிகளை கிடைக்கும் சிறிய உணவகங்கள் கூடிய இந்த ட்யூலிப் வயல்கள் அழகோ அழகு. என்னதான் அழகான இளவேனிற் காலம் என்றாலும் நெதர்லாந்து எப்போதும் கொஞ்சம் குளிராகவே இருக்கிறது. அதுவும் குறிப்பாக ட்யூலிப் வயல்களில் அடிக்கும் காற்று பின்பனிக் கால காற்று போல மிகவும் குளிர்ச்சியாகவே இருந்தது.
எனினும் அழகான பிராக் அல்லது நீண்ட உடை அணிந்து அந்தத் துலிப் வயல்களுக்கு நடுவே ஆடிப்பாடி நிறைய வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பலரைப் பார்த்தோம். நாங்கள் ஒரு ஸ்வெட்டர் அணிந்து அதன் மேல் ஒரு மேலுறை அணிந்த பின்னும் குளிர் தாளவில்லை. எப்படித்தான் இந்தக் குளிரில் பிராக் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு நடனம் ஆடுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அந்நியன் படத்தில் நாயகனும் நாயகியும் நாயகனின் நண்பர்களும் சாதாரண சேலை வேட்டி போன்ற உடைகளை அணிந்தே நடனமாடி இருப்பார்கள். எல்லாம் சமூக ஊடகங்கள் செய்யும் மாயை என்று தோன்றியது. கண்டிப்பாக இந்த ட்யூலிப் வயல்களுக்குச் செல்லும் முன்னர் சரியான கம்பளி உடைகளை எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.
அந்த ட்யூலிப் வயலில் கார், இதய வடிவம், மிதிவண்டி, டிராக்டர், பியானோ, மாடுகள் போன்ற பல்வேறு உருவங்களை வைத்திருந்தார்கள். ட்யூலிப் வயல்களுக்கு நடுவே இருந்த அந்த வாகனங்களிலோ அல்லது வேறு அழகிய பின்னணியிலோ நீங்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். புகைப்படம் எடுத்துவிட்டு வயல்களைச் சுற்றிப் பார்க்கலாம் நாங்கள் சில மணி நேரம் அந்த ட்யூலிப் வயல்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு சிற்றுண்டி குடிலில், சூடான பானம் அருந்திவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம். கிட்டத்தட்ட ஒரு அரை நாள் அளவு செலவு செய்யும் கூடிய ஒரு இடமே இந்த ட்யூலிப் வயல்கள். அங்கிருந்து கிளம்பி நண்பர் பரிந்துரை செய்திருந்த இன்னொரு ட்யூலிப் வயலுக்கு நாங்கள் சென்றோம். அந்த ட்யூலிப் வயலும் முன்னது போலவே இருந்தது. எனவே அதற்குள் செல்லாமல் வெளியிலிருந்து பார்த்துவிட்டு புறப்பட்டு விட்டோம். கீழே zanse Schans இல் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், காணொளியும் உள்ளன.
அடுத்ததாக நாங்கள் அன்றிரவு செல்ல வேண்டிய Geithoorn என்ற இடத்தை நோக்கிய எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அதற்கு முன் நாங்கள் சென்றது Zanse Schans என்ற இடத்திற்கு. இது Zaandijk என்ற ஊருக்கு மிக அருகில் இருக்கும் மிகப் பழமையான காற்றாலைகள் மற்றும் மர வீடுகளைக் கொண்ட ஒரு இடமாகும். வட ஆம்ஸ்டர்டாமில் உள்ள காற்றாலைகள் பலவற்றையும் பாதுகாக்கும் பொருட்டு அவற்றை ஒரே இடத்தில் அமைத்து இருக்கின்றனர். இந்த கிராமத்தில் சான்(Zaan) ஆற்றின் கரையில் நிற்கும் பல்வேறு மரக் காற்றாலைகள், வாய்க்கால்கள் நடுவே நிற்கும் டச் மரக்குடில்கள், சிற்றுண்டி சாலைகள், சீஸ்(cheese) உற்பத்தி செய்யும் பண்ணைகள், ஈயப் பாத்திரங்கள் செய்யும் சிறு தொழில்கள், பாரம்பரிய டச் மரக் காலணிகள் செய்யும் தொழில் கூடம் ஆகியன நிறைந்த இந்த இடத்திற்கு, ஆண்டொன்றிக்கு, ஏறத்தாழ 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கண்டிப்பாக உங்களின் நெதர்லாந்து பயணத்தில் இணைத்துக் கொள்ளக் கூடிய ஓரிடமாக இதை நீங்கள் கொள்ள வேண்டும். அருங்காட்சியகம், மரக் காற்றாலைகள் ஆகியவற்றை பார்வையிட்டு விட்டு Zaan ஆற்றின் பல்வேறு இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பியது என்றுமே மறக்க முடியாத ஒரு அனுபவத்தை அளித்தது என்றால் அது மிகையில்லை.
Geithoorn என்பது நெதர்லாந்தின் வெனீஸ் என்று வர்ணிக்கப்படுகிறது. தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரில் தெருக்கள் அதிகமில்லை. கைகளால் தோண்டப்பட்ட கண்மாய்கள் நிறைந்த இந்த ஊரை சிறு படகுகள் வழியாகவே சுத்திப் பார்க்க முடியும். படகுகள் ஓடும் கண்மாய்களின் கரைகளில் உணவகங்கள், காபி விற்கும் கடைகள், சர்ச், வீடுகள், லைப்ரரி யாவும் அழகாக அணிவகுத்து நிற்கின்றன.
Geithoorn கண்மாய் தோற்றம்
நேரம் போவதே தெரியாமல் அங்கே அமர்ந்து படகுகளில் செல்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாகும்.
அடுத்த நாள் காலை எழுந்த பின் Geithoorn இல் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் இருந்த Fort Bourtange என்ற கோட்டையைப் பார்க்கச் சென்றோம். நெதர்லாந்தின் வடக்குப் பகுதியில் Groningen பிராந்தியத்தில் உள்ள இந்தக் கோட்டை ஜெர்மனியின் எல்லையில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவிலேயே அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பென்டகன் கட்டடத்தைப் போல நட்சத்திர வடிவில் வடிவமைக்கப்பட்டு சுற்றிலும் அல்லிகள் மலர்ந்து அழகு சேர்க்கும் அகழிகள் கொண்ட இந்தக் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
நெதர்லாந்தில் காணப்படும் காற்றாலைகள், கற்களைக் கொண்டு செதுக்கப்பட்ட பாதைகள், அகழிகள் மேல் நான்கு திசையிலும் பாலங்கள், புல்வெளிகள், கோட்டையின் உள்ளே கடைகள், பார்வையாளர் அரங்குகள் என்று பல அம்சங்கள் நிறைந்துள்ளது. கோட்டையின் உள்ளே வீரர்கள் தங்கும் அறைகள், கோட்டையைப் பற்றிய விவரங்கள் கூறும் பார்வையாளர் அரங்குகள், குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைந்த கோட்டையைப் பற்றிய விவரங்கள் பகிர ஊடாடும் அமைப்புகள் , உள்ளேயே சாப்பிடும் இடங்கள் என்று பல அம்சங்கள் உள்ளது. வரலாற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்தக் கோட்டையை விரும்புவார்கள். ஒரு 3 மணி நேரம் கோட்டையை சுற்றிப் பார்த்துவிட்டு, சிற்றுண்டி அருந்திவிட்டு மீண்டும் Geithoorn வந்தடைந்தோம். அங்கே வந்து சேர்ந்தபின் கொஞ்ச நேரம் Geithoorn கண்மாய்க் கரையில் அமர்ந்து அந்த நகரை அமைதியாக ரசித்தோம். அன்றிரவு நாங்கள் தங்க இருந்த அறையை அடைந்து இரவு உணவு அருந்திவிட்டு உறங்கச் சென்றோம்.
அடுத்த நாள், Geithoornஐ விட்டு புறப்பட வேண்டிய நாள் என்பதால் காலையில் சீக்கிரம் எழுந்து அறையில் இருந்து கிளம்பி கண்மாய்க் கரைக்கு சென்று அங்கே மகிழுந்தை நிறுத்தி விட்டு, படகுச் சவாரி செய்தோம். படகுச் சவாரி செய்து பல நாட்கள் ஆயிற்று என்றாலும் நிறைய கூட்டம் இருந்ததால், மற்ற படகுகளுக்கு பொறுமையாக நின்று வழி விட்டு பின்னர் படகை செலுத்தி, அந்த கண்மாயை வலம் வந்தோம். பல இடங்களில் கண்மாய் ஆழமாகவே இருந்தது. குளிர் காற்றும் வீசியது. குழந்தைகள் மிகவும் ஆர்வமாக படகினை செலுத்தியதால் நாங்கள் வெறும் பயணிகளாக மட்டுமே அமர்ந்து நன்கு இயற்கை காட்சிகளை பார்வையிட்டு ரசித்தோம்.
பின்னர் நண்பகல் உணவினை உண்டு விட்டு, ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி மகிழுந்துப் பயணத்தை தொடங்கினோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் ஆம்ஸ்டர்டாமை அடைந்து விட்டோம். அன்று நகர மையத்தில்(Downtown) இருந்த பல்வேறு சிலைகள், சர்ச்சுகள், கடைகள் போன்றவற்றை பார்த்து விட்டு அடுத்த நாள் மீண்டும் ஊர் திரும்புவதாகத் திட்டம். நகர மையத்தில் ஓர் இடத்தில வண்டியை நிறுத்திவிட்டு நடந்தே அருகில் உள்ள இடங்களை சுற்றிப் பார்த்தோம். ஆன் ஃபிராங்க் வாழ்ந்த வீடு, வான் கோ அருங்காட்சியகம், ரிக்ஸ் அருங்காட்சியகம் (Rijksmuseum) போன்ற பல்வேறு சிறப்பான இடங்கள் ஆம்ஸ்டர்டாமில் உண்டு. எனினும் நாங்கள் அங்கு சென்ற போது பார்வையாளர் நேரம் கடந்து விட்டதால் இவை எதையும் பார்க்க இயலவில்லை.
அங்கு உள்ள கடைகளில், ஊருக்குக் கொண்டு செல்ல, நினைவு பரிசுகள் ஒன்றிரண்டை வாங்கினோம். அப்படியாக வாத்து பொம்மைகள் விற்கும் கடை ஒன்றிக்கு சென்றிருந்தோம். நடிகர்கள், அரசியல்வாதிகள், பாடகர்கள் போன்ற பலரை வாத்து உருவம் கொடுத்திருந்தார்கள். இது வேடிக்கையாகவும் இருந்ததோடு மிகச் சிறப்பாகவும் இருந்தது.
பின்னர் ஆம்ஸ்டர்டாமின் மிகவும் சிறப்பம்சமான ஆம்ஸ்டெல் ஆறு படகு சவாரியை கரையில் இருந்து பார்த்து ரசித்தோம். அமரும் இருக்கைகள் கொண்ட பூங்கா, அமரும் இருக்கைகள் கொண்ட கரையோர காபி கடைகள் என்று பல இடங்களில் இருந்தும் ஆம்ஸ்டெல் ஆற்றில் சுற்றுலா செல்லும் படகுகளைப் பார்க்க முடியும். ஆங்காங்கே துலிப் மலர்கள் கொண்ட பெரிய பூந்தொட்டிகளும் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டு, குளிர் காற்றில் அந்த மலர்கள் குலுங்கியது மழலைகள் தங்கள் சிவந்த கரங்களை ஆட்டி உற்சாகப்படுத்துவது போலவே இருந்தது.
நகர மையத்தில் இருந்த டாம் சதுக்கம் (Dam Square), அரண்மனை(Royal Palace) ஆகியவற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மனம் நிறைய புதிய அனுபவங்களும், மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க கேமரா நிறைய புகைப்படங்களும், காணொளிகளும் எடுத்துக் கொண்டு அன்றைய இரவு உணவினை நண்பரின் வீட்டில் முடித்துவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அன்றிரவு நாங்கள் தங்க வேண்டிய இடத்தினை அடைந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக