புதன், ஜனவரி 18, 2023

பொங்கல் நல்வாழ்த்துக்கள் - கவிதை

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டுகிறேன்.





பாருக்கொரு மணி விளக்காம் தமிழ்நாடு 
கன்னித் தமிழுக்கு நிகரும்தான் ஏது? 
யாவருமே கேளிரென்ற கோட்பாடு 
காசினியில் முன் கேட்டதுண்டா கூறு!

இந்திர விழாவென்று
தொல் தமிழர் போற்றியதை 
பொங்கலென்று ஏத்தி 
தைப் பெண்ணை வரவேற்போம் 

மழை தருவிக்கும் தெய்வம் போகி
சகம் தழைக்க ஒளிர்ந்திடும் பரிதி 
மண் கொழிக்க பாடுபடும் ஏறு
மனம் திருத்த வெண்பாவளித்த பாவலரேறு 
அகம் நிறைக்க, கூடிமகிழ, உற்றார்
நன்றி நவில கிடைத்ததோர் பொன்னாளே!

தனித்தமிழில் பேசி செம்மொழி வளர்ப்போம் 
பேதம் கடந்து வானமளவு உயர்ந்து நிற்போம் 
உழவின் பெருமை யாவருக்கும் எடுத்துச் சொல்வோம் 
ஊறு நீக்கி இயற்கையினை கண்ணாய்க் காப்போம்

குறள்நெறியைக் கடைப்பிடித்து உலகை வெல்வோம் 
வரும் தலைமுறைக்கும் நற்பாதை விளக்காய் நாமிருப்போம் 
பழங்கலைகள் பல பயின்றே களித்து வாழுவோம் 
ஆதிகுடியின் நலிந்த புகழை இணைந்தே மீட்போம் 

மண்ணடுப்பு மெழுகி
மாக்கோலமிட்டு  பொட்டு வைத்து
சந்தன விறகும்
அகில் மணமும் கமழ 
செந்நெல் ஈன்ற புது அரிசியும் 
தித்திக்கும் கட்டி வெல்லமும் 
தீஞ்சுவைப் பாலும் 
நெய் தோய்ந்த முந்திரியும் 
கலந்தே பொங்கலிட்டு
மண்ணும், மனிதர்களும் 
இயற்கையும், இன்னுயிர்களும்
ஆல் போலத் தழைத்தோங்கி 
அறத்தின் வழியேகி 
மகிழ்ச்சியாய் நீடுவாழ்கவென 
உளமார வாழ்த்துகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக