புதன், ஜனவரி 18, 2023

மெல்லோட்டம் ஓடியவள் - கவிதை




திசம்பர் மாத நந்தவனம் இதழில் வெளியான எனது கவிதை.


அனுதினமும் சில மைல் இலக்கு
மழையோ பனியோ சுடும் வெயிலோ
வானிலை எப்படி இருந்தாலும்
மெது நடையாகவோ வேக ஓட்டமாகவோ 
நிச்சயம் கடந்திருக்க வேண்டும்

அலுவலக வேலை அடுக்களை வேலையென 
வேலைப் பட்டியலில் இணைந்து
பற்பல நாளாகி விட்டது
மெல்லிடை மனிதர்களைப் பார்த்தால்
கால்மணி நேரம் கூடுதலாய்ச் செய்யப்படுகிறது 

அப்படியே இருக்கிறாய்
அலுவலக நண்பர்களின் சிலாகிப்பிற்கு
எல்லா உடையும் சரியாகப் பொருந்துகிறது
சுய பெருமிதத்திற்கு
வயதே தெரியவில்லை உனக்கு
வெகு நாளைக்குப் பின் 
சந்திக்கும் தோழமைக்கு 
உள்ளும் புறமும் இளமையைத்
தக்க வைக்கிறது 
மருத்துவரின் அக்கறைக்கு
அவரவர்க்குப் பல காரணங்கள்

அத்தனை பிறவியும் 
பிறந்திளைத்தேன் என்பார் மாணிக்கவாசகர்
இப்பிறவியில் இளைப்பதே 
முயற்கொம்பாகி விட்டது

வாழும் இறுதி நொடி வரை
வாழ்தலைப் போலவே  
கற்கும் முகமாக இருப்பதால் 
உடற்பயிற்சி என்று அழைக்கிறார்கள் போலும்

ஏழை பணக்காரன்
கறுப்பு வெள்ளை
பேதங்கள் பல கடப்போரும் 
உடல் எடைக்கான பிரிவுகளில் 
கட்டாயம் சிக்கிக் கொள்வர் 

எப்படியேனும் ஏதோ ஒரு பிரிவில் 
என்னை அடைத்துவிடத் துடிக்கும் உலகினை விட்டு 
வெகு தொலைவு செல்லும் முயற்சியே 
என் மெல்லோட்டம் என்பது 
நான் மட்டும் அறிந்த ரகசியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக