வியாழன், ஜனவரி 18, 2024

உலகத் திருநாள் - கவிதை



மார்கழி கடிதாய் மறைந்து
தைமகள் பூத்தாள் மலர்ந்து
எழிலான கோலம் வரைந்து
ஏத்தி வரவேற்போம் விரைந்து
பழையன போக்கினால் போகி
உழவு பழமை உழைப்பு பழமை
பகிர்வது பழமை உயர்பண்புகள் பழமை
ஊக்கம் பழமை உயர்தமிழ் பழமை
கொள்வது பழசு கொடுமனம் பழசு
பகைப்பது பழசு பசிப்பிணி பழசு
வேற்றுமை பழசு வீண்பெருமை பழசு
பழையன விடுத்து பழமையை ஏற்போம்
பாரினில் தமிழ்க்குடி பெருமையைக் காப்போம்
நிலத்தில் விழும் நீர் நெல்லாய்
ஆவின் மடியில் தீம் பாலாய்
கார்வண்ணக் கரும்பில் பாகாய்
பலவாய்ப் பிரிந்தே தோன்றும்
இணைத்தால் புதுசுவைக் காட்டும்
பிறப்பிடம் எதுவென்றாலும்
உணர்வால் யாவரும் கேளிர்
சமத்துவம் உரத்தே பேசும்
தனிப்பெரும் நாளாம் பொங்கல்
தமிழர் திருநாள் அல்ல
உலகத் திருநாள் ஆகும்
கழனி செழிக்க உழைக்கும்
காளைக்கும் நன்றி சொன்னோம்
மாட்டுப் பொங்கல் கண்டோம்
மாசில்லா அன்பைத் தந்தோம்
உற்றோர் உறவினர் மூத்தோர்
இணைந்தால் காணும் பொங்கல்
அன்பால் இணைந்த இந்நாள்
வீரம் வளர்க்கும் நன்னாள்
வள்ளுவம் காட்டும் வாழ்வியல்
உள்ளுவோம் என்பதற்கு ஓர்நாள்
கள்ளுடைத் தீமைக் களைந்து
கடைத்தேறி பண்பட்டு உயர்வோம்
வள்ளுவர் அறத்தினை கொள்வோம்
வான்வரை நீள்புகழ் கொள்வோம்
மாரியும் கதிரும் இணைந்தால்
காடும் கழனியும் உயரும்
இயற்கை அன்னையைப் போற்றி
பொங்கலோ பொங்கல் என்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக