கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!
நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ!
தனைப் புகழ் தன்னிடத்தோர் சொல்லில்லாத
தமிழே என் தாயே நின் பாதம் போற்றி
நினைப்பில் எழும் அத்தனையும் வடிவம் இன்றி
நிழலாகத் தோன்றிடினும் சிறிய நெஞ்சின்
நினைப்பினுக்கு மதிப்பீந்து வாழ்த்தாய் உன்
நிழல் கண்ட நானும் உன்னை வணங்குகின்றேன்!
என்று கண்ணதாசனின் இனிமையான தமிழ் பாடல் வரிகளோடு இந்தக் கட்டுரையை தொடங்குவது சாலப் பொருத்தமாக இருக்கும். எனக்குப் பிடித்த கண்ணதாசன் பாடல்களில் காணப்படும் இலக்கிய நயம், வாழ்வியல் தத்துவங்கள், அனுபவத் தெறிப்புகள் என்று பலவற்றையும் என்னால் முடிந்த அளவு ஒரு கட்டுரையாக கொடுக்க முயன்றுள்ளேன். கண்ணதாசனின் பாடல்களை அல்லது கவிதைகளை ஒரு கட்டுரையாகச் சொல்வது முயற்கொம்பே. எனவே அவருடைய சில பாடல்கள், அவற்றில் காணப்படும் தமிழின் இனிமை, அனுபவ மேன்மை, வாழ்வியல் ஞானம் ஆகியவற்றை கட்டுரையாக்க முயற்சித்துள்ளேன்.பலர் முனைவர் பட்ட ஆய்வுக்கு உட்படுத்தி எழுதக் கூடிய அளவு ஆழமான கற்பனை வளம் கொண்ட கவிஞரின் கடலளவு ஞானத்தை ஒரு கையளவேனும் எடுத்துக் கொடுத்தால் இதை இன்னும் ஆழ்ந்து படித்து சுவைக்க இன்னும் சிலர் முன்வருவர் என்ற எண்ணத்தில் எழுந்ததே இந்தக் கட்டுரை.
நீங்கள் அனைவரும் அறிந்த காதல் பாடல் ஒன்று.
அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
நான் உன்னைப் போல் பெண்ணல்லவோ
அத்திக்காய், ஆலங்காய். இத்திக்காய், கன்னிக்காய், ஆசைக்காய், பாவைக்காய், அங்கேகாய், அவரைக்காய், கோவைக்காய், மாதுளங்காய் என்று முப்பதிற்கும் மேற்பட்ட காய்களை இந்தப் பாடலில் கவிஞர் சொல்லி இருப்பார். தலைவனும் தலைவியும் பாடக் கூடிய பாட்டிலே காய்களைப் பற்றி கவிஞர் சொல்லி இருக்காரே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ் இலக்கணத்தில் உள்ள சிலேடையை மிகவும் சிறப்பாக இந்தப் பாடலில் கையாண்டிருப்பார் கவிஞர்.
அத்திக்காய் காய்காய்
(அந்த திக்கில், அதாவது திசையில் காய்வாயாக)
ஆலங்காய் வெண்ணிலவே
(ஆலம் என்ற விஷத்தின் தன்மையை ஒத்த வெண்ணிலவே)
இத்திக்காய் காயாதே
(இந்த திக்கில், அதாவது நான் இருக்கும் திக்கில் காயாமல், என்னுடைய தலைவன் இருக்கும் திக்கில் காய்ந்தால் அவன் என்னைத் தேடி வரும் வாய்ப்பு இருக்கும்)
நான் உன்னைப் போல் பெண்ணல்லவோ
(நானும் உன்னைப் போல ஒரு பெண் தானே, என்னுடைய நிலையை அறிந்து எனக்கு உதவுவாயாக)
கன்னிக்காய் ஆசைக்காய்
(கன்னிக்காக ஆசைக்காக)
காதல்கொண்ட பாவைக்காய்
( காதல்கொண்ட பாவைக்காக)
அங்கேகாய் அவரைக்காய்
(அங்கே சென்று காய்வாயாக, அவரை அதாவது என்னுடைய தலைவனைப் போய் காய்வாயாக)
மங்கை எந்தன் கோவைக்காய்
(மங்கை என்னுடைய கோ, அதாவது கோ என்பது இங்கே தலைவனைக் குறிக்கும், மங்கை என்னுடைய தலைவனை காய்வாயாக)
மாதுளங்காய் ஆனாலும்
(தலைவன் பாடும் போது சொல்வது - மாது, அதாவது என்னுடைய மங்கையின் உள்ளம் காயாக ஆனாலும்)
என்னுளங்காய் ஆகுமோ
(என்னுடைய உள்ளம் காயாக ஆகாது)
உள்ளமெலாம் மிளகாயோ
(உள்ளமெல்லாம் இளகாயோ அல்லது உள்ளமெல்லாம் மிளகாயோ என்று இரு பொருளில் வந்துள்ள வரிகள் இவை)
ஒவ்வொருபேச் சுரைக்காயோ
(ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ, அதாவது ஒவ்வொரு பேச்சையும் கூறுவாயாக)
கோதை எனைக் காயாதே
(கோதை போன்ற பெண்ணாகிய என்னைக் காயாதே)
கொற்றவரைக்காய் வெண்ணிலா
(கொற்றவன், அதாவது மன்னவனைக் காய்வாயாக வெண்ணிலா)
இப்படியெல்லாம் தமிழில் சிலேடையை பயன்படுத்தி எழுதுவது கவிஞர் அவர்களுக்கு கைவந்த கலை என்பதை கூறவும் வேண்டுமா!!
அடுத்ததாக இயற்கை பற்றிய கவிஞர் அவர்களின் வர்ணனையைப் பார்ப்போம். இயற்கை வர்ணனைகளில் கவிஞருடன் நாமும் இணைந்து பயணம் செய்வது போன்ற ஒரு உணர்வைக் கடத்துவதில் கவிஞருக்கு நிகர் அவரே தான். தாலாட்டு பாடலைக்கூட கேட்பவர் அனைவரும் சொக்கும்படி இயற்கை வர்ணனையை கலந்து தருவது அவருக்கு கைவந்த கலை. என்னே இவரின் கவிதை நயம் என்று நம்மை வியக்க வைக்கும் மாணிக்க வரிகள் அவை.
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
(படம்/; பாசமலர்)
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா....
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
இயற்கை அழகு என்ன என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் கண்ணதாசன். அழகிய இயற்கை காட்சிக்கு நடுவேயும் ஒரு பள்ளத்தாக்கு சில மனிதர்களின் உள்ளம் போல இருப்பதாக கவிஞருக்கு தோன்றுகிறது. இயற்கை காட்சியில் கூட அவருள் எழும் உவமை நமக்கு வியப்பை ஊட்டுகிறது. அவருடைய எழுத்தில் தீட்டும் காட்சியானது கவிஞருடன் நாமும் பயணித்து இதே காட்சியை நேரிடையாக பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது.
கம்பராமாயணத்தை கரைத்துக் குடித்தவர் கவிஞர் கண்ணதாசன். தன்னுடைய பாடல்களில் கம்பரை கொண்டாடிய கவிஞன் என்றால் அவரைப் போல் வேறொருவர் இல்லைன்னு தான் சொல்லணும்.
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் வாழ்வே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
(படம்:சாந்தி நிலையம்)
கம்பராமாயணத்தில் வரும் காட்சி ஒன்றை இந்தப் பாடல் ஒத்திருக்கிறது .
எதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனயைும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே.
அதாவது இராமர் நகர்வலம் வரும்போது எதிரில் வரும் நபர்களை நோக்கி உங்கள் தொழில் எப்படி போகிறது, உங்களுக்கு ஒன்றும் துன்பம் இல்லையே, உங்கள் மனைவி நன்றாக உள்ளாரா? உங்கள் மைந்தர்கள் நலமா என்று கேட்பார் என்பதை இந்த பாடலுக்குள் கொண்டு வருகிறார். இந்த இலக்கிய நயமே அவருடைய பாடல் காலம் கடந்து இன்னும் நிற்பதற்கு ஒரு பெரிய காரணம் ஆகும்.
கண்ணதாசன் தன்னுடைய என்ன அனுபவத்தை சொன்னாலும் அதில் ஒரு இலக்கிய செய்தியை கொண்டு வருகிறார்.
ஒரு புறம் பார்த்தால் மிதிலையில் மைதிலி
மறுபுறம் பார்த்தல் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
(படம்: அபூர்வ ராகம்)
என்ற பாடல் வரிகளில் கதாநாயகியை வர்ணிக்கும் போது கூட மாதவியும், ஜானகியும் அவருக்கு நினைவில் வந்து நிற்கிறார்கள்.
பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு!
சீதை நடையழகும்
ஸ்ரீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப்
போட்டான் மதுக்குடத்தில் அள்ளி!
அண்ணனொடு தம்பியர்கள்
நாலாகி ஐந்தாகி
ஆறேழு ஆனவிதம் கூறி - எனை
ஆளுகிறான் மூளைதனில் ஏறி!
தென்னிலங்கைச் சோலையிலே
சீதை அனுமனிடம்
சொன்னதொரு வாசகத்தைப் பார்த்து - நான்
துள்ளிவிட்டேன் மெனியெல்லாம் வேர்த்து!
கள்ளிருக்கும் கூந்தலினாள்
உள்ளிருப்பாள் என்று சொல்லி
பள்ளமிடும் ராகவனின் அம்பு - அது
பாட்டல்ல உண்மையென்று நம்பு!
காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு - அது
தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு!
கம்பனெனும் மாநதியில்
கால்நதிபோல் ஆவதென
நம்புகிறேன் பாட்டெழுதும் நானே - அந்த
நாயகன்தான் என்ன நினைப்பானோ?
கம்ப சூத்திரம் என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கவிதையில் கம்பனை அவர் எந்த உயரத்தில் வைத்திருந்தார் என்பதை விளங்கும். கம்பன் மட்டுமல்ல சித்தர் பாடல்களும் அவருக்கு கைவந்த கலை.
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி
அழுகணிச் சித்தர் எழுதிய இந்தப் பாடலில், இருக்கும் எண் ஜான் உடம்பு என்ற இந்தச் செய்தியை அவர் பாத காணிக்கை என்ற திரைப்படத்தின் பாடல் வரிகளில் வைக்கிறார்.
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி
காதலன் என்னை கைவிட்டு விட்டு சென்றான் என்ற பிரச்சனையை பாடலில் சொல்லும் போது அதே பாட்டிலேயே அதற்கு ஒரு தீர்வும் சொல்றார்.
இந்த காலங்கள் உள்ள
வரை கன்னியர்கள் யார்க்கும்
இந்த காதல் வர வேண்டாமடி
எந்தன் கோலம் வர வேண்டாமடி
என்று அந்தப் பெண் காதல் கொண்டால் என்னுடைய நிலைமை வரும், எனவே காதல் கொள்ளாமல் இருந்தால் எந்த துன்பமும் இல்லாமல் இருக்கும் என்று துன்பத்தில் இருந்து தப்பிக்க உபாயமும் கூறுகிறாள்.
உலகப் பற்றை விடுதல் பற்றி நிறைய கருத்துக்கள் இருக்கிறது. குறிப்பாக பட்டினத்தார் பாடல்களில் இதைப் பற்றிய கருத்துக்கள் ஏராளமாய் உண்டு.
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ்
சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல,
தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே.
அதாவது எதுவும் நிலையானது அல்ல என்று சொல்லும் இந்தக் கருத்தை அப்படியே தன்னுடைய பாடலிலும் பிரதிபலிக்கிறார் கவிஞர்.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா.
சந்தையில் வந்து சேர்ந்த மாடுகளைப், பொருள் கொடுத்து வாங்குபவர், ஓட்டிச் செல்லுவது வாடிக்கை. நாமும் அது போலவே இந்த உலகிற்கு வந்து சேர்ந்தவர்கள். இங்கே யாரும் யாருக்கும் சொந்தம் அல்ல என்பதை இரண்டு அடியில் குறள் போல எடுத்து உரைக்கிறார்.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
(படம்: பாத காணிக்கை)
என்று இதே கருத்தை இவ்வளவு இயல்பாக நாலடியில் கொடுத்திருக்கிறார் கவிஞர். வள்ளுவத்தையும், நாலடியாரையும் இப்படிக் கொடுக்க கவிஞரால் மட்டுமே முடியும்.
இந்த உலகம் துன்பமும் இன்பமும் நிறைந்த ஒன்று. ஒரு வீட்டில் ஜனனம் நடக்க மற்றொரு வீட்டில் இறப்பை குறிக்கும் முழவின் ஓசை ஒலிக்க, துன்பமும் இன்பமும் நிறைந்தது இந்த வாழ்வு, எனவே இந்த உலகத்தின் இயல்பு உணர்ந்து இன்பத்தை அனுபவியுங்கள் என்று சொல்கிறது பக்குடுக்கை நன்கணியார் எழுதிய கீழ்கண்ட புறநானூற்றுப் பாடல்.
ஓர் இல் நெய்தல் கறங்க,
ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணிய,
பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே.
"இருவினை நேர் ஒப்ப" என்ற கருத்தியலை, அதாவது இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரு பகுதியாகும். இரண்டையும் சமமாக பார்த்தால் இன்பம் அடங்கும், துன்பம் ஒடுங்கும் என்ற ஒரு கருத்தை இந்தப் பாடல் அழகாகச் சொல்கிறது.
சட்டி சுட்டதடா...
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆடி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோவில் கொண்டதடா
மனம் அடங்கிவிட்டால், அமைதி உள்ளே குடி புகும். அதை கீழே உள்ள வரிகள் நேர்த்தியாக வெளிப்படுத்துகின்றன.
ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்மதேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா
சினம் இறக்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே
என்று தாயுமானவர் சுவாமி இந்த அமைதியை பற்றி மிகச் சிறப்பாக சொல்கிறார். இவ்வளவு அமைதி கொண்ட மனதில் இருந்து ஞானம் என்ற உண்மை துலங்கும்.
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத்தோலை (பாசத்தை) உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் (தூய்மை) இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா.
அதாவது கடவுள் படைப்பில் சிறுத்த எறும்புக்கு உள்ளிருந்தும் உரித்துப்பார்த்தால் யானை அளவிற்கு பரந்து விரிந்த ஞானம் வெளிப்படும். நான் சிறுத்திருந்த என் உள்ளத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வெளிப்பட்டது. மனதின் ஆரவார பேய்களெல்லாம் அடங்கி, உள்ளத்திலிருந்து ஞானம் என்ற கடவுள் வெளிப்பட்டான். ஏனென்றால் அவன் கட+ உள் = கடவுள் அல்லவா? அவனைக் காண நீங்கள் உங்கள் உள்ளத்தின் உள்ளே தான் தேட வேண்டும் என்பது இப்பாடல் நிலைநிறுத்தும் கருத்து.
சித்தர்களின் ஜீவன் மிகுந்த பாடல்களை தமிழ் என்னும் இனிமைக்குள் தோய்த்து மிகவும் எளிமையாக கொடுத்ததே அவரின் வெற்றி என்பதை உறுதியாகக் கூறலாம்.
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்
(படம்: வானம்பாடி)
என்றெல்லாம் காதல் துன்பத்தை கடவுள் மேல் ஏற்றிப் பாடக் கூடிய உரிமையை தமிழ்ப் புலமையினால் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். இதில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும் கடவுள் என்ற சொல்லை உச்ச ஸ்தாயியில் ..கட....உள் என்று இசைமையமைத்து இருப்பார். அதாவது மனிதன் கடவுளை விடத் தாழ்ந்தவன் என்பதனால் பாடலிலும் "மனிதனாக பிறக்க வேண்டும்" என்பது கீழ் ஸ்தாயியில் ஒலிக்கும். மொழி அறிந்தவர்கள் பாடலில் இணைந்தால் என்னென்ன அதிசயம் நடக்கும் என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி.
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
ஆண்டுகொண்டு புரியாமலே
இருப்பான் ஒருவன் –
அவனைப் புரிந்துகொண்டால்
அவன்தான் இறைவன்
ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன்
அவன் தடம் தெரிந்தால்
அவன்தான் இறைவன்
முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
அவனைத் தொடர்ந்து சென்றால்
அவன்தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்
அவனைத் தெரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்
வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன்
அவனைஉணர்ந்து கொண்டால்
அவன்தான் இறைவன்
வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன்
அவனை நாடிவிட்டால்
அவன்தான் இறைவன்
அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன்
அவனை நினைத்துக்கொண்டால்
அவன்தான் இறைவன்
கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன்
அவனை பின்தொடர்ந்தால்
அவன்தான் இறைவன்
பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்
ஆறுதலைத் தந்தருளும் இறைவன்
கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் – அதை
உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்
முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் – அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்
நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் – உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்
உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் – ஓர்
உருவமில்லா அவன்தான் இறைவன்.
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் – அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்
சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மை மறந்தே இருக்கும் ஒருவன் – அவனைத்
தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்
தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்*
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் – அவன்தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்..!
ஒரு சிற்பி கல்லை உடைக்கும் போது அதில் உள்ளே இருந்து ஒரு தேரை குதித்தோடியது. பழத்தை உரிக்கும் போது உள்ளிருந்த வண்டு பறந்தோடியது. அப்படி கல்லின் உள்ளே உள்ள தேரைக்கும், பழத்தின் உள்ளே உள்ள வண்டுக்கும் கருணை செய்வான் இறைவன் என்பதையும் கண்ணதாசன் தன்னுடைய கவிதையில் கொண்டு வந்திருக்கிறார்.
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை செய்த தெய்வம்
கனி இருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்
நெல்லுக்குள்ளே மணியை நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
உனக்கு இல்லையா தம்பி நமக்கு இல்லையா…
(படம்:காலமகள் கண்திறப்பாள்)
கண்ணனின் தாசனாக, தோழனாக, சரணாகதியும் அவர் அடைந்திருக்கிறார். கண்ணன் அவருக்கு யார் என்பதை இப்படிச் சொல்கிறார்.
ஆத்திகன் வீட்டிலும் அருளும் சங்கமம்
நாத்திகன் வீட்டிலும் நடந்திடும் தைவதம்
சாத்திரக் கூட்டில் தழைக்கும் மெய்தவம்
பாத்திரம் நான் அதில்பால் என் கண்ணனே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற பாடல் கண்ணன் பற்றிய ஒரு பக்தி ரசம் பொங்கும் பாடல் .
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
புல்லாங்குழல் என்பது கண்ணனின் உதடுகளோடும், இடையோடும் ஒட்டி உறவாடிக் கூடியது. புல்லாங்குழல் என்பது இன்பமான ஒரு சூழலை எடுத்துச் சொல்லும் கருவி. சங்கோ அல்லது சக்கரமோ போர் போன்ற அச்சுறுத்தும் சூழலை சொல்லக் கூடியது. எனவே தான் புல்லாங்குழலை பாடச் சொல்கிறார் கண்ணதாசன்.
ஒரு முறை கங்கையின் ஆழமான பகுதியில் துரியோதனன், பீமனை கொல்லும் பொருட்டு விஷம் தோய்ந்த ஈட்டிகளை நட்டு வைத்தான். அந்தப் பகுதி, தினமும் பீமன் வேகமாக ஓடி வந்து நீரில் குதித்து விளையாடும் இடம். இதை உணர்ந்த கண்ணன், பீமனை அழைத்து, "பீமா, நீ தினமும் குதித்து விளையாடும் இந்த இடத்தில் வண்டுகள் இன்று அதிகம் இருக்கின்றன. எனவே நீ ஓடி வந்து இந்த இடத்தைத் தாண்டி குதித்து விளையாடு" என்றான். பீமனும் அப்படியே செய்தான். எனவே பீமனை மட்டும் அல்ல, கங்கை நதியில் அன்று கண்ணன் காப்பாற்றிய வண்டுகளே நீங்களும் கண்ணனின் புகழ் பாடுங்கள் என்று மகாபாரதக் கதையை இந்தப் பாடலில் கோர்க்கிறார் கவிஞர். அவருடைய ஒவ்வொரு வரிகளும், அர்த்தம் இல்லாமல் கவி நயத்திற்கு சேர்க்கப்பட்ட வரிகள் அல்ல. ஆழ்ந்த அர்த்தம் மிகுந்த வரிகள் இவை என்பதால் தான் இத்தனை காலம் கடந்த பின்பும் நமக்கு பிடித்த வரிகளாக திகழ்கின்றன.
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பரந்தாமனின் உண்மையான மெய்யழகை, வசுதேவர் கண்ணனை சுமந்து கொண்டு செல்லும் போது மேகங்கள் பார்த்தன. எனவே பன்னீர் போன்று கண்ணனின் மேனியில் அன்று மழை பொழிந்த மேகங்களே நீங்கள் அவனுடைய உண்மையான மேனி அழகைப் பாடுங்கள் என்கிறார் கண்ணதாசன். தென்கோடியில் வாசித்த ஆழ்வார்களை விட கண்ணனை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை. எனவே அங்கிருந்து புறப்பட்டு வரும் தென்றலே ஸ்ரீகிருஷ்ணனின் புகழைப் பாடத் தகுதி கொண்டது என்று நிறுவுகிறார் கவிஞர் .
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பெருமாளுக்கு நின்ற கோலம், இருந்த கோலம், கிடந்த கோலம் என்று மூன்று கோலங்கள் உண்டு. இதில் தவழ்ந்த கோலம் என்ற நான்காவதாக ஒன்றையும் சேர்த்து, குருவாயூரில் தவழ்ந்த கோலம் காட்டி, வேறு பகைவர்கள் யாரும் இல்லாத வண்ணம் ஒரே கொடியின் கீழ் மதுராவில் இருந்த கோலம் காட்டி, திருப்பதியில் நின்ற கோலம் காட்டி, ஸ்ரீரங்கத்தில் கிடந்த கோலம் காட்டி நிற்கிறவன் என்னுடைய கண்ணன் என்கிறார் கவிஞர்.
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலிக்கு அவளுடைய உரிமையை, அதாவது அவள் கொண்டிருந்த சபதத்தை முடித்து அவளுக்கு உரித்தான புகழை திரும்பக் கொடுத்தான். பாரதப் போரை முடித்து, பாண்டவர்களுக்கு அவர்களுக்கு உரிமையான நாட்டினை பெற்றுக் கொடுத்தான். மக்கள் அனைவருக்கும் உரியதான கீதையை நமக்கு கொடுத்தான் என்று ஒவ்வொருவரின் உரிமையை அவரவருக்கு பெற்றுக் கொடுத்தவன் கண்ணன் என்று சொல்லும் அவரின் கவிநயம், ஆஹா ஆஹா காவியம் அல்லவோ!!
கண்ணனுடன் தனக்கு எப்படிப்பட்ட நெருங்கிய உணர்வு இருந்தது என்பதை அவர் இவ்வாறு கூறுகிறார்.
நள்ளிராப் பொழுதினில் நானும் என் கண்ணனும்
உள்ளிரும் பொருட்களை உரைப்பது உண்டு காண்
கள்ளினும் இனிய என் கண்ணன் சொல்வது
பிள்ளைபோல் வாழும் நீ பிதற்றலும் கவிதையே
என்று தன்னுடைய கவிதையை பற்றி சுய விமர்சனம் செய்கிறார் கவிஞர். ஆனாலும் அவரைப் போல தன்னுடைய கருத்துகளிலேயே முரண்பட்டவர் யாரும் இல்லை.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவை சரி யென்றால் இயம்புவ தென்தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!
செல்வர்தன் கையிற் சிறைப்பட மாட்டேன்
பதவிவா ளுக்கும் பயப்பட மாட்டேன்
பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லா யினெமர் இல்லந் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்
பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்
கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!
மேலுள்ள கவிதையில் படைப்பதினால் நானும் இறைவன் என்று தன்னுடைய படைப்புத் திறனைப் போற்றவும் செய்கிறார் கண்ணதாசன் . இப்படியாக எந்த வரைமுறைக்குள்ளும் சிக்காதவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் அரசியல் களத்தில் ஒரு காலத்தில் தான் சேர்த்திருந்தவர்களை விட்டு பிரிந்தபின் அவர்களைப் பற்றிய விமர்சனமும் முன் வைத்துள்ளார். பிரதமர் நேருவைக் கூட விமர்சித்தவர் அவர். பின்பு நேரு அவர்கள் மறைந்த போது "சாவே உனக்கு ஒரு நாள் சாவு வந்து சேராதோ, தீயே உனக்கொரு நாள் தீமூட்டிப் பாரோமோ" என்று இரங்கற்பா எழுதியவர். எனவே அவருடைய கருத்துக்கள் முரணானவை என்று கூறும் எவருக்கும் விளங்கும் வகையில் "தலைவன் மாறும் தர்பார் மாறும், தத்துவம் மட்டும் அட்சயப் பாத்திரம்" என்று தன்னுடைய முரண்பாடுகளுக்கும் காரணத்தை போகிற போக்கில் சொல்லிச் சென்றிருப்பார்.
கண்ணதாசனின் கவிதைப் பாடல்களைப் பற்றி சொல்லும் போது தத்துவப் பாடல்களைப் பற்றி சொல்லாமல் இந்தக் கட்டுரை நிறைவுறாது.
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா..
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா..
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே
(படம்: பழநி)
அப்போது பந்தம் பாசம் இல்லாமல் எப்படி வாழ்வது, யாருடன் பழகுவது என்பதற்கும் விடையை தன்னுடைய பாடல் வழி விடை சொல்கிறார். யாருடனும் பழகும் போது அவர்களுடைய இயல்பை தெரிந்து கொண்டு பழகுங்கள். இயல்பை அறியாமல் பழகினால் பெரும் துன்பம் வந்து சேரும்.
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா..
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா.
உறவுகள் என்பது நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் நம்மை பிணைத்து வைக்கக் கூடிய ஒன்றாக இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
இதே கருத்தை வேறு விதமாக யாரை நம்பி நான் பொறந்தேன் என்ற பாடலில் சொல்லி இருப்பார்
பானையிலே.. சோறிருந்தா, பூனைகளும்.. சொந்தமடா..
சோதனையைப் பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே...
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா.. போங்க..
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா.. வாங்க...
உனக்கு பொருள் இருக்கும் போது உன்னை தேடி வரும் ஒருவனை நீ பற்றிக் கொள்ளும் போது மேலும் மேலும் துன்பம் தான் வரும்.
ஏறும் போது எரிகின்றான்
இறங்கும் போது சிரிக்கின்றான்
பொருள் சேரும் போது வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்
என்று கவிதையில் அனுபவத்தை பொதித்துத் தருகின்றார். சரி இதை எப்படி எதிர் கொள்வது என்பதையும் தன்னுடைய பாட்டிலேயே சொல்லி இருக்கிறார். அதாவது துன்பம் வரும் வேளையில், இருவினை நேர் ஒப்ப நோக்கினால் துன்பம் மறையும் என்பதை தன்னுடைய பாடலிலே சொல்லிச் சென்றிருக்கிறார்.
சின்ன சின்ன துன்பம் எல்லாம் எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா
ஒரு பொழுதில் துன்பம் வரும்
மறு பொழுதில் இன்பம் வரும்
இருளினும் ஒளி தெரியும்
ஏக்கம் ஏனடா தம்பி தூக்கம் கொள்ளடா
பற்றிக் கொள்வதாலேயே நாம் துன்பம் அடைகிறோம். பற்றுதலை விட்டு விட்டால் துன்பம் நம்மை பற்றிக்கொள்ளாது. அதை எப்படி அடைவது என்பதயும்
ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு
(படம்:சுமைதாங்கி)
இதைவிட சிறப்பாக மனதை ஆற்றுப்படுத்தக் கூடிய ஒரு பாடலை இந்தக் காலத்தில் ஒன்று கூட எடுத்துக் காட்டாகச் சொல்ல முடியாது.
பேரின்பம் என்ன என்பதை கவிஞர் கண்ணதாசன் சொல்வது
அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்
இப்படி வாழ்ந்ததால் பேரின்ப நிலையை நானும் அடைந்து விட்டேன் என்பதை தன்னுடைய கவிதையில் இப்படி சொல்கிறார்.
ஈதலறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு
என்பார் ஒளவையார். பரம்பொருளை நினைவிற்கொண்டு அறம் பொருள் இன்பமாகிய இவற்றின் பால் கொள்ளும் பற்றினை விட்டுவிடுவதே வீடு ஆகும். அதுவே நிலையான பேரின்பம் தருவதும் ஆகும்.
செங்கயல் ஓடி விழுந்த விழிக்கு ஒரு சித்திரம் தீட்டுகிறாள்
பங்கயம் என்ற முகத்தில் ஒளிக்கதிர் பாய்ந்திட வெம்முகிறாள்
மங்கல குங்கும ரேகையில் ஓர்விரல் வைத்து நகர்த்துகிறாள்
பொங்கிய வாயிதழ் காட்டி எனக்கொரு போதையை ஊட்டுகிறாள்
இப்படியாக ஒரு பெண்ணைப் பற்றி சொல்கிறார் என்று நாம் நினைத்தால் அங்கே நாம் நினைத்திராத ஒரு திருப்பத்தை வைத்திருக்கிறார் கவிஞர். கீழ் கண்ட வெண்பாவினை அவருடைய அடுத்த வரிகள் நினைவுபடுத்துகிறது.
கால ரயிலோட காசானோம் நாமெல்லாம்
நான் ஒரு பெண்ணுடன் இருப்பதைப் பற்றியோ அல்லது ஒரு பெண்ணைப் பற்றியோ பேசவில்லை. நான் சொல்வது என்னுடைய தொலைந்த வாலிப நாட்களைப் பற்றி என்று கவிஞர் நாம் எதிர்பாராத ஒன்றைச் சொல்கிறார். கவிதையில் ஒரு திருப்பம் அதாவது element of surprise என்று ஆங்கிலத்தில் சொல்வதை தன்னுடைய கவிதையில் சேர்த்திருக்கிறார்.
காதல் இளங்கவி போலிதை எண்ணி கனிந்திடும் மானிடரே
நான் மாதெனச் சொல்வது ஓடி மறைந்த என்வாலிப நாட்களையே
எது நடப்பினும் என்ன நடப்பினும் இளமை திரும்பிடுமோ
ஒரு தேதி நகர்ந்திட ஒரு தேதி நகர்ந்திட திரையும் விழுந்திடுமோ
இன்னும் உடலினுள் இரத்தம் இருப்பினும் எண்ணம் அரும்பவில்லை
அதில் மின்னிடும் சிந்தனை ஞானமல்லால் சுக வேதனை ஏதுமில்லை
மன்னிய பக்குவம் எய்திய நாட்களை வாழ்வில் அடைந்துவிட்டேன்
இனி தன்னந்தனிமையில் தவம் புரிவோம் எனக் கதவினை சாத்திவிட்டேன்
சுண்ணாம்புக் காலவாயில் திருநாவுக்கரசரை இட்டு கதவைச் சார்த்தினார்கள். அவர் வெந்து தணிவார் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அங்கே தன்னந்தனிமையில் தவமியற்றினார். கவிஞர் தன்னுடைய புறக் கதவினைச் சாத்தி நமது அறிவுக் கதவினை திறந்து வைக்கும் பாடல்களை தன்னுடைய அனுபவத்தினால் நம் அனைவருக்கும் அளித்தார் என்பதே உண்மை.
தனக்காகவே இரங்கற்பா எழுதிய கவிஞன் ஒருவன் உலகில் இருப்பான் என்றால் அது கவிஞர் கண்ணதாசன் மட்டுமே.
பாரியொடும் கொடைபோகப் பார்த்தனொடும்
கணைபோகப் படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை
வள்ளுவனோ டுரையும் போக
வாரிநறுங் குழல்சூடும் மனைவியொடும்
சுவைபோக, மன்னன் செந்தீ
மாரியொடுந் தமிழ்போன வல்வினையை
என்சொல்லி வருந்து வேனே!
தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல்
செய்தவன்மெய் தீயில் வேக,
போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு
வாய்தீயிற் புகைந்து போக,
மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை
மாந்தியவன் மறைந்து போக,
தானேஎந் தமிழினிமேல் தடம்பார்த்துப்
போகுமிடம் தனிமை தானே!
பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
எம்மொழி யாற்செப்பு வேனே!
பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
கொண்டவன் தான் புறப்ப டானோ!
வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை
கொண்டானை வாத மன்றில்
தாக்குரிமை கொண்டானைத் தமிழுரிமை
கொண்டானைத் தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை
என்றந்த நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே! போயுரிமை
நாம்கேட்டால் பொருள்செய் யானோ!
கட்டியதோர் திருவாயிற் காற்பணமும்
பச்சரிசி களைந்தும் போட்டு
வெட்டியதோர் கட்டையினில் களிமண்ணால்
வீடொன்றும் விரைந்து கட்டி
முட்டியுடைத் தொருபிள்ளை முன்செல்லத்
தீக்காம்பு முனைந்து நிற்கக்
கொட்டியசெந் தமிழந்தக் கொழுந்தினிலும்
பூப்பூத்த கோல மென்னே!
போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
அவன்பாட்டை எழுந்து பாடு!
ஒரு வீடு என்பது எப்படி இருக்கும் என்றால், வீட்டின் முகப்பில் ஒரு வாசல்படி இருக்கும். வாழ்வில் முதல் படி, படிப்பு என்பதை நமக்கு இது சொல்கிறது. அதைத் தாண்டிச் சென்றால் ஒரு நடை வாசல் இருக்கும். படித்தபின் படிப்பின் வழி ஒழுகி நடக்க வேண்டும். என்பதை இந்த நடை என்ற பகுதி நமக்கு காட்டுகிறது. அவ்வாறு நடந்தால் நிலை வாசல் ஒன்று வரும். படி, பின்பு அதன்படி ஒழுகு, அவ்வாறு ஒழுகினால் ஒரு நிலை வரும் என்பதை இது நமக்கு விளக்குகிறது. இந்த நிலை வாசற்படி தாண்டிப் போனால் வருவது கூடம். படித்து, அதன் வழி ஒழுகி, வாழ்வில் ஒரு நிலையை அடைந்து குடும்பத்தாரோடும், சுற்றத்தோடும், உயர்ந்த மனிதர்களோடும் வாழ்வில் கூடி இருக்கும் இடமே கூடம். இந்தக் கூடத்தை தாண்டி வருவது முற்றம். இப்படி வாழ்ந்தால் உன்னுடைய வாழ்க்கை நல்லவிதமாக முற்று பெறும். அதன் பின் நீ வீடு பேறை அடைவாய் என்ற உயரிய தத்துவத்தை நமது வீடுகளே நமக்கு காட்டுகின்றன.
தீராத வயிற்று வலி பிணித்ததாலே
திருநாவுக்கரசர்வர் இறையைக் கண்டார்
சீர்காழி குளக்கரையில் ஒருவர் கண்டார்
(ஞானசம்பந்தர் சீர்காழி குளக் கரையில் ஞானம் பெற்றவர்)
ஸ்ரீரங்கச் சந்நிதியில் பலபேர் கண்டார்
(ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கத்தில் ஞானம் பெற்றார்)
சோதியிலே ராமலிங்கர் இறையைக் கண்டார்
கண்ணதாசன் வீடு பேற்றை எங்கு கண்டார் என்றால் அவர் பெற்ற அனுபவத்தின் வழி கண்டார். அதைக் கண்டது மட்டும் அல்லாமல், அதை நமக்கும், அவர் பாடல்களின் வழி சொல்லிச் சென்றிருக்கிறார்.
சாகித்ய விருது, தேசிய விருது, 5000 திரைப்பாடல்கள், 4000 கவிதைகள் என்று கவிஞர் எந்த வரைமுறைக்குள்ளும் அடங்காத ஒரு மகா சகாப்தம். தமிழ் உள்ளவரை அவர் புகழ் என்றும் வாழும். "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்ற வரிகளுக்கு முழுவதும் தன்னை ஒப்புக்கொடுத்த கண்ணதாசனுக்கு ஈடு இணை எவரும் இல்லை.