சென்ற வாரம் ஜூன்டீன்த்தை முன்னிட்டு வந்த விடுமுறை மற்றும் வார இறுதி இரண்டையும் சேர்த்து ஒரு நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மிச்சிகனில் வசிக்கும் உறவினர்களைப் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். அவர்களோ, இவ்வளவு தூரம் நீங்கள் மட்டுமே பயணப்பட்டு வர வேண்டாம், நாங்களும் பாதி வழி வரை வருகிறோம் என்று சொன்னதால், ஒஹையோவில் உள்ள ஆக்ரன் ,(Akron, OH) என்ற ஊரில் சந்திப்பதற்கு AirBNB வழியாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்தோம். ஆக்ரனுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது வீட்டை புக் செய்ததால், ஒரே ஒரு குளியலறை மட்டுமே கொண்டு இருந்தது அந்த வீடு என்பதைச் சரியாக கவனிக்கவில்லை. கிட்டத்தட்ட 7 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை கொண்ட, 8 பேருக்கு ஒரே ஒரு குளியலறை என்பது கடினமாக இருந்தது. குளியலறையில் தாழ்ப்பாள் இல்லை என்பது கூடுதல் சுமையாக இருந்தது. பொதுவாக "Buyer Beware" என்று சொல்வது உண்டு. அதாவது காசு கொடுத்து எதையும் வாங்கும் போது நமக்கு அது சரியாக வருமா அல்லது இதில் ஏதாவது மறைக்கப்பட்ட ஒன்று உள்ளதா, நாம் எல்லாவற்றையும் கவனித்துத் தான் வாங்குகிறோமா, இல்லை ஏமாறுகிறோமா என்று யோசித்து வாங்கினால் மட்டுமே நமக்கு நன்மை தருவதாக அமையும். AirBNB-ஐ பொருத்தவரை beware என்பதை அடிக்கோடிட்டு நன்றாக உள்வாங்கி அணுக வேண்டும் என்பதை மீண்டும் உணர்ந்தேன். மனிதர்கள் அடுத்தவரை ஏமாற்ற வேண்டும் அல்லது அடுத்தவரின் கவனத்தை திசைத்திருப்பி வேறு ஏதோ ஒன்றை முன்னிறுத்தி குறைகளை மறைக்க வேண்டும் என்று நினைக்கும் வரை இதற்கு ஒரு விடிவு இருக்கும் என்று தோன்றவில்லை. பழைய கால வீடு என்றாலும் வீட்டின் உள்ளே ஓரளவு நன்றாகவே இருந்தது. தரை தளத்தில் சமையலறை, சாப்பிடும் அறை, பெரிய ஹால், கண்ணாடி ஜன்னலைகள் பதித்த சிட்-அவுட், மேல்தளத்தில் மூன்று தூங்கும் அறைகள் மற்றும் குளியலறை, அதற்கும் மேலே இரண்டாவது தளத்தில் விஸ்தீரணமான தூங்கும் அறை என்று வசதியான வீடு தான். வீட்டின் பின் நுழைவு வாயிலில் மட்டும் முன்பு தங்கி இருந்தோர் விட்டுச் சென்ற குப்பைகளில் இருந்து அப்படி ஒரு துர்நாற்றம். எத்தனை நாட்களாக இருந்ததோ இந்தக் குப்பைகள். பின் நுழைவாயில் வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்பதால் இந்த நுர்நாற்றத்தில் இருந்து தப்பிக்க இயலவில்லை. ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் அந்தக் குப்பைத்தொட்டிகளை ஓடிக் கடக்க வேண்டி இருந்தது.
அந்த வீடு சையோகா தேசியப் பூங்காவில் இருந்து (Cuyahoga National Park) 30 நிமிட மகிழுந்து பயண தூரத்தில் இருந்தது. சையோகா தேசியப் பூங்காவின் பாஸ்டன் மில்ஸ் பார்வையாளர் மையத்தில் இருந்து அங்கிருந்த டௌபாத் வழித் தடத்தில்(Towpath Trail) நடந்து சென்றால் ஒஹையோ ஆற்றின் கரையில் நடந்து செல்லும் ஒரு அருமையான அனுபவத்தைப் பெற முடியும். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கிளீவ்லன்ட் மற்றும் ஆக்ரன் இடையே பயணியர் மற்றும் சந்தைப் பொருட்களை கொண்டு செல்ல இந்த நீர்வழி பயன்பட்டது. இரயில் போக்குவரத்தின் வரவுக்குப் பின் இந்த பாதைகள் நடைப் பயிற்சி செய்பவர்களுக்கும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உகந்த வழித்தடங்களாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களுக்கு மேலே தரைப் போக்குவரத்துக்கு பயன்படும் பல்வேறு தரைப் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாஸ்டன் மில்ஸ் பார்வையாளர் மையத்தில் இருந்து லாக் 29 என்பது 3 மைல் தொலைவில் உள்ளது. அதுவரை நடந்து சென்று பின் மீண்டும் பார்வையாளர் மையத்தை நோக்கி நடந்து வந்து கிட்டத்தட்ட 6 மைல் தூரத்திற்கு நடைப்பயிற்சி செய்தோம். இது மிகவும் ரம்மியமான பொழுது போக்காக அமைந்தது.
நடைப்பயிற்சியை முடித்து விட்டு அருகில் உள்ள (Szalay Farm & Market) சாலே மார்க்கெட்டில் மகிழுந்தை நிறுத்தி, அங்கே கிடைத்த வேகவைத்த சோளத்தை சுவைத்தோம். அங்கே பழ வகைகள் பலவும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதையும் உண்டு மகிழ்ந்தோம். இங்கே 10 பேர் உட்கார்ந்து ஆடும் அளவு மிகப் பெரிய மரத்தாலான ஊஞ்சல் ஒன்றும் இருக்கிறது. ஆடிக் கொண்டே சாப்பிடும் வண்ணம் 4 பேர் அமரக்கூடிய உட்காரும் மேசை மற்றும் நாற்காலிகளும், ஒரு பெரிய சோளத் தோட்டத்தை பார்த்துக் கொண்டே சாப்பிடும் அனுபவமும் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்னமும் இது போன்ற கடைகளில் கிரெடிட் கார்ட் எடுத்துக் கொள்ளாமல் பணம் மட்டுமே வாங்குகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. இன்று தமிழ்நாட்டில் ஒரு சின்ன காய்கறிக் கடையில் கூட ஜிபேயில் பணம் கொடுக்கும் போது வளர்ந்த நாட்டில் இப்படியும் இன்னும் இடங்கள் இருக்கிறதா என்று எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாள் கிளம்பி பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் நகரத்திற்கு பயணப்பட்டு வந்து சேர்ந்தோம். பிட்ஸ்பர்க்கில் உள்ள பெருமாள் கோவில் பிரசித்தமானது. சனிக்கிழமை என்பதாலும், கோடை விடுமுறை என்பதாலும் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அர்ச்சனை சீட்டு வாங்கிய பின் சுவாமி தரிசனம் செய்ய அதற்கான வரிசையில் காத்திருந்தோம். அமெரிக்காவில் பல கோவில்களுக்கு போயிருந்தாலும், முக்கால் மணி நேரம் அமெரிக்க பெருமாள் கோவில் ஒன்றில் அர்ச்சனை செய்ய வரிசையில் காத்திருந்தது புதிய அனுபவமாக இருந்தது. அப்புறம் ஒரு வழியாக வரிசை முன்னேறிச் சென்றது. வரிசையில் சென்றாலும் எனக்கு தூரத்தில் இருந்தே பெருமாளின் அர்ச்சனை மற்றும் ஆராதனையை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சிறிது நேரம் கழித்து ஒவ்வொரு வரிசையாக பெருமாளை அருகில் சென்று தரிசிக்கும் வண்ணம் உள் சந்நிதிக்கு அனுப்பினார்கள். பெருமாள் கோவில்களுக்கே உரித்தான "ஜருகண்டி ஜருகண்டி" தரிசனம் தான். மின்னல் வெட்டியது போல உள்ளே சென்று வந்ததில் பெருமாளிடம் நாம் சென்று அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு வந்தது போலவே தோன்றியது.
அப்புறம் அங்கிருந்த உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு வாடகைக்கு பிடித்திருந்த வீட்டிற்கு சென்றோம். இந்த வீடும் தரைத்தளம், கீழ்த்தளம், மேல்தளம் என்று மூன்று அடுக்குகள் கொண்டிருந்தது. சிறிது நேரம் ஓய்வுக்கு பின், பிட்ஸ்பர்க்கில் இருந்த புகழ்பெற்ற கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்திற்கு (Carnegie Mellon University) சென்று அதைச் சுற்றிப் பார்த்தோம். விடுமுறை தினம் என்பதால் கல்லூரியின் பல கட்டடங்கள் பூட்டி இருந்தது. திறந்திருந்த ஒரு சில கட்டடங்களில் மாணவர்கள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். டௌன்டவுன் எனப்படும் நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது இந்தப் பல்கலைக்கழகம். இது தவிர பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக கட்டடங்களும் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தது. இந்த பழைய கால கட்டடங்கள், குறுகலான சந்துகள் மற்றும் கடைகள் ஆகியன தொலைந்து போன ஒரு காலத்தை நம் கண்முன்னே கொண்டு வந்தது. அங்கே இருந்த அந்தக் கட்டடங்களை சிறிது நேரம் சுற்றிப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துவிட்டு, அங்கிருந்த செயின்ட் பால் கதீட்ரல் சர்ச்சை அடைந்தோம். சர்ச்சில் மாஸ் நடந்து கொண்டிருந்தது என்பதால் அங்கே அதிக நேரம் செலவிட முடியவில்லை. எனினும் வழக்கமான பெரிய சர்ச்சுகளைப் போல தேவ உருவங்கள் தீட்டப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தது.
அன்று இரவு உணவினை டௌன்டவுனிலேயே ஒரு இத்தாலிய உணவகத்தில் முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்பும் நாள். சீக்கிரமே எழுந்து தயாராகி, வாடகை வீட்டில் இருந்து புறப்பட்டோம். பெருமாள் கோவில் ஊருக்குச் செல்லும் வழியிலேயே இருந்தது என்று கூகுள் தடங்காட்டி சொன்னதால், கோவிலுக்கு சென்று நன்கு பெருமாளை தரிசனம் செய்து விட்டு ஊருக்குத் திரும்பலாம் என்று எண்ணி நேராக வண்டியை கோவிலுக்கு விட்டோம். கோவிலில் அதிக கூட்டம் இல்லை. பெருமாள் சந்நிதியில் பெருமாளுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. கருவறை அருகில் இருந்த உள் சந்நிதியிலும், அதற்கு வெளியே இருந்த வெளி சந்நிதியிலும் ஆட்கள் அமர்ந்து பெருமாள் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூடத்தின் இறுதியில் பெருமாளை பார்த்த வண்ணம் நிற்கும், கருடத்தாழ்வார் சந்நிதியும் உண்டு. கிட்டதட்ட கருடத்தாழ்வார் சந்நிதிக்கு சற்று முன் வரை வரிசைக்கு மூன்று பேறென மக்கள் அமர்ந்திருந்தனர். அதிக பட்சமே 40 நபர்கள் அங்கே அமர்ந்திருக்கக் கூடும். கருடத்தாழ்வார் சந்நிதி முன்பாக நடப்பதெற்கான பாதை மட்டுமே இருந்தது. 4 அல்லது 5 பேர் நிற்கக் கூடிய அந்த குறுகிய இடத்தில் கிட்டத்தட்ட 10 பேர் வரை நின்று இருந்தனர். ஒரு பெண்மணி இல்லாத கூட்டத்தை ஒழுங்கு செய்கிறேன் பேர்வழி என பெருமாள் சந்நிதி அருகே நின்று கொண்டிருந்தார். அமர்ந்து இருப்பவர்கள் அருகில் நின்று பெருமாளை சில வினாடிகள் தரிசிக்கலாம் என்று எண்ணி அமர்ந்திருந்தோர் அருகே செல்ல முற்பட்ட போது அவசரமாக எங்களைத் தடுத்து இங்கே Sponsors மட்டுமே செல்ல அனுமதி. உங்களுக்கு தரிசனம் செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே 10 பேர் கடைக்கோடியில் கருடத் தாழ்வார் சந்நிதிக்கு முன்பு நின்று கொண்டிருந்தார்கள் அல்லவா, அங்கே சென்று பாருங்கள் என்று எங்களை அங்கே அனுப்பி வைத்தார். அங்கே ஏற்கனவே நிறைய பேர் நின்று கொண்டிருந்ததால் பெருமாளை அரைகுறையாக மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. யாரோ மறைத்துக் கொண்டு நிற்க, குழந்தைகளும் எம்பி எம்பி பெருமாளைப் பார்த்தே தரிசனத்தை முடித்தார்கள்.
கோவில் என்பது, அந்த ஊர் மக்களைத் தவிர, அந்த ஊர் வழியாக வேறு ஊருக்குச் செல்பவர்கள், அந்த கோவிலுக்கென பல்வேறு ஊர்களில் இருந்து பயணம் செய்து வருபவர்கள் என்று பல்வேறு மக்கள் கூடும் இடமாகும். sponsors-க்கு மட்டுமே பெருமாள் அருள்பாலிப்பார் என்றால் அதை தெளிவாக குறிப்பிட்டு வெளியில் ஒரு தட்டியாவது வைத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அந்த திசைக்குக் கூடச் செல்லாமல் வெளியில் இருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்திருப்பேன். அமெரிக்காவில் வளரும் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்வது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அம்மாதிரி குழந்தைகள் வைத்திருப்போருக்குத் தெரியும். அதுவும் வளர்த்த குழந்தைகளுக்கு, சரியான உடை தேர்வு செய்து அதை அவர்களை அணியச் செய்து, அவர்களை தயார் செய்து கூட்டிச் செல்வது ஒரு சாகசம். கலாச்சார பண்பாட்டு மையங்களாக இருக்க வேண்டிய கோவில்கள் வெறும் காசு பணம் பார்க்கும் இடங்களாக, சமுதாய பாகுபாட்டினை முன்னிறுத்தும் தூண்களாக இருப்பது எந்த அளவு அடுத்த தலைமுறையை ஈர்க்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணினால் நல்லது. பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள் பெருமாளை குறைந்தபட்சம் அருகில் சென்று தரிசிக்கும் வழிவகைகள் கூடச் செய்யாமல் கூட்டம் இல்லாத நேரத்தில் கூட கடைக்கோடியில் நின்று தெரிந்த வரை பாருங்கள் என்று சொல்வதெல்லாம் என்ன கீழான மனநிலையோ தெரியவில்லை. நானாவது முன்தினமே ஏதோ ஒரு அளவில் பெருமாளை பார்த்திருக்கிறேன். புதிதாக வருபவர்கள், பணம் கொடுக்க முடியாத சூழலில் இருப்பவர்கள் என்று எத்தனையோ தரப்பு மக்கள் வரும் இடத்தில் இப்படியெல்லாமா நடந்து கொள்வார்கள் என்று ஆற்றாமை மட்டுமே எழுந்தது. அப்படி தூரத்தில் இருந்து வருபவர்களுக்கு துரிதமாக பெருமாளை தரிசிக்க ஒரு வழியாவது ஏற்படுத்தி இருக்கலாம். அதைக் கூடச் நிர்வாகத்தினர் செய்யவில்லை.
தமிழக கோவில்களில் கூட கட்டணம் இல்லாமல் கடவுளை தரிசனம் செய்வது முயற்கொம்பே. சென்ற முறை மருதமலை முருகன் கோவிலுக்கு கட்டண தரிசனம் செய்யச் சென்றதே கசப்பான அனுபவமாக அமைந்தது. சரியான கூட்டம் ஒழுங்கு இல்லாமல் யார் வேண்டுமானாலும் வரிசையில் இணைந்து கொள்வது, விஐபிக்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டு வரிசையில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் இருப்பது என்பது போன்ற சங்கட அனுபவங்களே அதிகம். வீட்டின் அருகில் உள்ள கோவில்களைத் தவிர வேறு பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வது என்பது இயலாத ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்கள், சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடக்கும் இடங்கள் யாவும் கனவில் கூட நெருங்கிப் பார்க்க முடியாத ஒன்று. இவ்வாறு யோசித்தவாறே உணவுக் கூடத்திற்கு வந்து சேர்ந்தோம். 3 வெள்ளிகளுக்கு ஒரு உணவுப் பொதி கோவில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளியில்(உணவுக் கூடம்) கிடைக்கிறது. பிசைந்த சாதம், பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம் போன்ற உணவுகள் கிடைக்கின்றது. எல்லா நாட்களும் உணவு கிடைக்குமா அல்லது வார இறுதியில் மட்டும் கிடைக்குமா என்பது தெரியவில்லை. மாணவர்கள், வறுமைச் சூழலில் இருப்போர் போன்றவர்களுக்கு இது கண்டிப்பாக சலுகை விலையில் கிடைக்கும் வரப்பிரசாதம் என்றே கூறலாம். உணவை வாங்கிக் கொண்டு வெளியில் வந்த போது, வியாபார நோக்கத்தை பிரதானமாகக் கொண்டியங்கும் கருவறை மண்டபத்தை விட்டுவிட்டு, கொஞ்சமாவது மனிதநேயம் எஞ்சி இருக்கும் இந்த மடப்பள்ளியிலேயே பெருமாளும் உலாவிக் கொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக