திங்கள், ஜூன் 12, 2023

பூக்கள் பூக்கும் தருணம் -சுற்றுலா - பாகம் 1

சென்ற ஆண்டு அலுவலக தோழி ஒருவர் நெதர்லாந்து சென்று திரும்பி இருந்தார். இளவேனில் பருவத்தில், துலிப் மலர்கள் மலரும் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் நெதர்லாந்து துலிப் தோட்டங்கள் என்று அவர் சொன்னதில் இருந்து துலிப் மலர்கள் அதிகம் விளைவிக்கும் நெதர்லாந்து நாட்டினைக் காண வேண்டும் என்று மனதிற்குள் ஒரு குறிப்பு எடுத்துக் கொண்டேன். இந்த வருடம் இளவேனில் பருவத்தில் பத்து நாட்கள் பள்ளி விடுமுறை உண்டு என்பதால் சரி இந்த பத்து நாட்கள் கண்டிப்பாக துலிப் தோட்டங்களை காணச் செல்லலாம் என்று எண்ணம் தோன்றியது. அவசரமாக என்னென்ன இடங்களுக்கு செல்லலாம் என்று பார்க்கும் முன்பே கல்லூரி நண்பர் ஒருவர் நெதர்லாந்தில் இருப்பது ஞாபகம் வந்தது. அவனிடம் விசாரித்து பிறகு பத்து நாட்கள் பார்க்கக் கூடிய விதத்தில் பயண திட்டம் தயாரித்து விமான டிக்கெட், ஏர்பிஎன்பி இணையதளம் வழியே தங்கும் இடங்கள் என்று எல்லாம் முன்பதிவு செய்தோம். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் சென்று அங்கிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இரு நாட்கள்  இருந்துவிட்டு பின்பு நெதர்லாந்து திரும்பி அங்கே பல்வேறு இடங்களைப் பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு அங்கிருந்து கிளம்புவதாகத் திட்டம். அந்நியன் படத்தில் வரும் குமாரி பாடலை கேட்டு வேறு அழகான துலிப் தோட்டங்களை மீண்டும் எண்ணத்தில் பத்திரப்படுத்திக் கொண்டோம். 

துலிப் மலர் தோட்டங்களிலும் நெதர்லாந்தில் அதிகமாக காணப்படும் காற்றாடி இயந்திரங்களின் பின்புலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் பாடல் உங்கள் நினைவூட்டலுக்காக கீழே. பாடலைப் பார்த்து விட்டு பயண அனுபவத்தை மேலே படியுங்கள்.


குளிரும் பனியுமான பனிக்காலம் மெதுவாக உருண்டோட இனிய இளவேனில் வந்தது. செடிகளில் புதிய இலைகளும், புதிய மலர்களும் மனதிற்கு இனிமையைத் தந்தது. பயண ஏற்பாடுகள், மளிகை சாமான்கள் கொள்முதல், காலை உணவிற்கான பண்டங்கள் வாங்குதல் மற்றும் அவற்றை பெட்டியில் அடுக்குதல் என்று பயணத்திற்கு தேவையான பணிகளும் முடிந்து பயண நாளும் வந்தது.

வீட்டில் இருந்து இரண்டு மணி நேர பயணத்தில் இருந்த ராலே விமான நிலையத்தில் இருந்து ஐஸ்லாந்து ஏர் வழியாக பயணத்தை முன்பதிவு செய்திருந்தோம். வீட்டில் இருந்து கிளம்ப கிட்டத்தட்ட ஏர்போர்ட் அடைவதற்கு முன்னர் மோசமான வானிலை காரணமாக ஐஸ்லாந்து ஏர் விமானம் அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வந்தது. சரி ஏர்போர்ட் சென்று அங்கிருந்து வேறு எதுவும் விமானம் பிடித்து செல்வோம் என்று ஒருவாறு சமாதானம் செய்து கொண்டு ஏர்போர்ட்டை அடைந்து ஐஸ்லாந்து ஏர் கவுண்டரை அடைந்தால் அங்கு ஒருவர் கூட இல்லை. சரி என்ன செய்வது என்று விசாரித்த போது அங்கிருந்து அடுத்த நாள் செல்லக் கூடிய ராலே விமானத்திற்கு ஆகும் கட்டணம் மிகவும் அதிகம் என்று தெரிந்தது. பக்கத்து கவுண்டரில் இருந்த விமான நிலைய ஊழியர் எங்களுக்காக பல்வேறு பயண திட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். எனினும் விலை அதிகம் என்பதால் கொஞ்சம் திகைப்பாகவே இருந்தது. எனினும் போக முடியவில்லை என்றால் எங்கள் பயணத்திட்டத்தின் படி பதிவு செய்திருந்த தங்கும் இடங்கள், வாடகைக் கார், ரயில் பயணத்திற்கான முன் பதிவு, சுற்றுலா தளங்களுக்கான முன் பதிவுக்கான செலவு என்று பலவற்றையும் இழக்க வேண்டி இருக்கும் என்பதால் போயே ஆக வேண்டிய கட்டாயம் வேறு. வெளியில் கொட்டும் மழை என்பதால் வேறு எங்கும் போகாமல் விமான நிலைய பயணிகள் அமரும் அறையிலேயே அமர்ந்து இணையதளத்தில் ஆம்ஸ்டர்டம் செல்லவேறு வழி இருக்கிறதா என்று தேடினோம். ஆம்ஸ்டர்டம் சென்றோமா என்பது அடுத்த பதிவில். 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக