திங்கள், ஜூன் 12, 2023

கவிதை எல்லாம் செய்யும் - கவிதை





கனமற்ற காகிதமொன்று

கண்ணீரால் கரைய வைக்கும் 

மாயக் கரமாய் ஆற்றுப்படுத்தும் 

உணர்வுகள் ஊற்றி வரைந்த 

ஒற்றைக் கவிதையால் 


இலகுவான மனம் ஒன்று

இரும்பாய்க் கனக்கும்  

காலங்கள் மறக்கும் 

உயிரினை உருக்கும் 

ஒற்றைப் பார்வையால் 


இன்பப் பயணம் ஒன்று 

சுவையற்றுப் போகும்

சுமையாய் மாறும்

நேசமில்லா நட்புடன் 

கரம் கோர்த்துச் செல்கையில் 


மனதை ஆற்றுப்படுத்தவும் 

உறுதியாய் சமைக்கவும் 

பேசா வார்த்தையால் 

தொடுதல் வேண்டா

உணர்வால் முடியுமென்றால் 

புறக்கணிப்பையும் 

புதிய கசப்புகளையும் 

பரிசளிக்கும் மனிதர்களிடம்

அலங்கார வார்த்தைகள்

வீசிக் கடக்கின்றேன்

வானக் கூரையில் மின்னும் 

எண்ணிலடங்கா நட்சத்திரங்களாய்  

அவர்தம் வாசலை அலங்கரிக்கும் 

பயனில்லா வார்த்தைக் குப்பைகள் 


எஞ்சிய வார்த்தைகள் போதும்

காலம் தாண்டி வாழும்

கவிதைகள் நெய்ய 

உணர்வுகள் ஊற்றி

மௌனத்தில் ஆழ்ந்து

சொல்லோவியம் வரைகின்றேன்

இக்கவிதைகளிடம் எச்சரிக்கையாயிருங்கள்

தாள முடியாத மகிழ்ச்சியையோ

விவரிக்க முடியாத துயரத்தையோ 

நொடியில் கடத்தக் கூடும்

கொஞ்சும் தமிழும்

நற்றமிழ் கவிதையும் போதும்

அவ்வப்போது நானும் கடவுளாக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக