செவ்வாய், ஜூன் 13, 2023

நினைவுகளில் வாழ்கிறாய் நீ - கவிதை

 



மெல்லிய மழைச்சாரல் கட்டவிழ்க்கும் மண்வாசம்

மின்னல் கீற்றெனவே உன் நினைவூட்டும் கார்காலம் 

பின்னிரவின் மௌனம் கலைக்கும் மெல்லிய இசை கானம்

மென்மையாய் தான் வருடும் உன் நினைவினை கிளறும்


காதல் ஒரு மாயவலை நீரின் மேல் எழுத்தென்றேன்  

இதில் விழுந்தவர் பலருண்டு எழுந்ததில்லை எவருமென்றேன்

அழகான பணம் படைத்த  பெண்துணை தேடும் ஆணுக்கு

பகுதிநேர இன்பமென்பேன் கேளிக்கை மட்டுமென்பேன்

 

அழகிய சுருள்முடி, ஆறடி உயரம், மனதிற்கினிய புன்சிரிப்பு 

மேகம் கடந்து பின்தோன்றும் ஆதவன் போல் முகவனப்பு 

இருசக்கர வாகனத்தை ஆகாய விமானம் போல 

லாவகமாய் ஓட்டி செல்வாய் தேவலோக கந்தர்வன் போல

 

அழகான முகமல்ல அன்பைக் கொட்டும் மனம் கேட்டேன்

அன்பிலோர் சிகரமென்றாய்  உன் பயணத்தில் பங்குகொண்டேன்

உலகையே வீழ்த்தியதாய் இறுமாந்து மமதைக் கொண்டேன்

உன்உறுதியான தோள் பற்றி இமயத்தை விஞ்சி நின்றேன்  

 

அழகான ஆபத்து என்பதெல்லாம் அறிந்திருந்தும்

கண்ணுள்ள குருடனாய் ஆக்கியது இந்த காதலடா      

கருணை ஏதுமின்றி பிரிவு என்ற பெருஞ்சோகம் 

இயல்பாய் நீ கொடுத்தாய் விதியென்று நொந்தேனடா

 

உலகத்தை வெறுத்திருந்தேன் உறங்காமல் நிலைகுலைந்தேன்

வேறு பாதையில் வாழ்க்கைத் தள்ள தயங்கினேன் தவிதவித்தேன்

கடவுள் போடும் முடிச்சு எல்லாம் புரியாத விளையாட்டென்பேன்

பழைய முகமூடி தொலைத்து புதிய முகமூடி அணிந்தேன்

 

தூக்கம் தொலைத்த பின்னிரவில் அணைக்க உன் கை

களைத்த ஒரு மாலை நேரம் புதிதாக்க உன் புன்னகை 

உலகத்தையே காலில் சேர்க்கும் எனக்கான குறும்புப் பார்வை

தொலைந்தும் வாழப் பழகிக் கொண்டேன் விந்தை விந்தை    

 

உடைந்த சிறு இதயம் தைத்து புதியபல உறவை கோர்த்தேன்

முதுகில் தைத்த துரோகம் துடைத்து யதார்த்தம் என்ற பார்வை கொண்டேன்

நிழற்படத்தை தூக்கி வீசி இதுவும் கடக்கும் என்றிருந்தேன்     

என் நினைவடுக்கில் உந்தன் முகம் அழித்துவிடும் வித்தை சொல்லேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக