சமீபத்திய இந்திய பயணத்தின் போது, எங்கள் ஊரில் உள்ள ஒரு அரசு வங்கிக்குச் சென்றிருந்தேன். கூட்டு வங்கிக் கணக்கில் இணைந்த இருவரில் ஒருவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை சேர்க்க வேண்டும். புதியதாக இணைப்பவருக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் போட்டோ, விண்ணப்பப் படிவம், விண்ணப்பக் கடிதம், எந்த நபரை நீக்குகிறோமோ அவருக்குமான அதே சுய விவரங்கள் என்று இதற்கான தரவுகள் மட்டுமே அத்துணை தேவைப்படுகிறது. இதற்கும் புதிதாக சேர்க்கப்படும் நபர் அதே வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர். ஆனாலும் எல்லா தரவுகளையும் கேட்கிறார்கள்.
ஒவ்வொரு ஆபிஸிலும் வேலை செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களிடமிருந்து இவ்வளவு தரவுகளை பெற வேண்டும் என்று ஏதோ இலக்கு வைத்திருப்பார்கள் போலும். ஒவ்வொரு அலுவலரும் தரவுகளை வாங்கி அடுக்கி அடுத்த மேசைக்கு தள்ளும் பணியையே பெரும்பாலும் செய்கின்றனர்(Paper Pushers). ஆனாலும் வேலை முடிந்ததா என்றால் கண்டிப்பாக இல்லை. சார், ஒரு லெட்டர் வாங்கிட்டு வாங்க, இந்த ஆவணம் எங்களுக்கு பத்தாது வேற ஆவணம் (நம்ம கிட்ட இல்லாதது) வெச்சிருக்கிங்களா? இதையெல்லாம் கூட உடனே சொல்ல மாட்டார்கள், ஓரிரு நாள் ஒவ்வொரு வழங்கிடமாக(counter) அலைய விட்டு அப்புறம் போனால் போகிறது என்று சொல்வார்கள்.
ஆனால், அதை விட முக்கியமானது வங்கிகளின் வேலை நேரம். காலை 10:30 முதல் மதியம் ஒரு 2 மணி வரை மட்டுமே வங்கிக்குள் அனுமதிப்பார்கள். அதற்குப் பிறகு உள்ளே போவது என்றால் உங்களுக்கு ஃப்யூன் முதல் ரிசப்ஷனிஸ்ட் முதல் உள்ளிருக்கும் மானேஜர் முதல் அவர் வணங்கும் கடவுள் வரை அனைவரையும் தெரிந்திருக்க வேண்டும். வெளியூரில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, இது போன்ற ஒரு வங்கி வேலையை முடித்து விட்டு இத்தனை நாட்களுக்குள் ஊர் திரும்ப வர வேண்டும் என்று செல்பவர்கள் ஆகப் பெரும் நேர்மறைச் சிந்தனையாளர்கள் எனலாம். அப்படியே வெளிநாட்டில் இருந்து ஓரிரு வார விடுமுறையில் சென்று இதே போன்ற ஒரு சில வேலைகளை முடித்து விட்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் நேர்மறைச் சிந்தனையாளர்களில் உயர்ரகம். ஏனென்றால் அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதம் மற்றும் சிபாரிசு கடிதம், உச்ச கிரகங்களின் பார்வை என்று அனைத்தும் நமக்காக வேலை செய்தால் மட்டுமே இது சாத்தியம்.
இது மட்டுமல்ல, மாற்றப்பட்ட புதிய வங்கிக் கணக்கில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களுடைய நேரத்தை நீங்களே மதிக்கவில்லை என்று அர்த்தம். இதற்கு வங்கிக்கு எத்தனை தடவை செல்ல வேண்டி இருக்கும், என்னென்ன தரவுகள் தர வேண்டும், தோராயமாக எத்தனை வருடங்கள் ஆகும் என்பதையெல்லாம் அறுதியிட்டு சொல்ல இயலாத ஒன்று. கூட்டுறவு வங்கிகளோ இதில் இன்னொரு படி முன்னே நிற்கிறது. பல நேரத்தில் முக்கியமான தரவு அல்லது தேவைகளை கடைசி நேரத்தில் சொல்லி நாம் ஊருக்குக் திரும்பும் முன் நமது வேலை கண்டிப்பாக முடியாது என்பதை உறுதி செய்வதில் வல்லவர்கள்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக