வியாழன், ஆகஸ்ட் 07, 2025
கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா 2025 உரை
வெள்ளி, ஜூலை 18, 2025
சக்தியில்லையேல் சகமில்லை
விளம்பரங்களை நமது சமூகத்தின் கண்ணாடி என்று கொண்டால், விளம்பரங்களில் வரும் பெண்கள், மணமும் குணமும் நிறைந்த சாம்பாரை செய்கிறவளாக இருக்கிறாள். கணவனின் அழுக்கு உடைகளை வெளுப்பவளாக இருக்கிறாள். ஊக்க பானம் கொடுத்து மகனை படிக்க வைப்பவளாக இருக்கிறாள்.தனக்குள் இருக்கும் ஐஸ்வர்யா ராயை பலவித களிம்பு பூசி, கொக்கி போட்டு இழுக்கும் வித்தையை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறாள். எத்தனை வேலைகள் செய்தாலும் எவ்வித சோர்வும் இன்றி அழகாக வலம் வருபவளாக இருக்கிறாள்.
சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை ஒரு கண்ணாடி எனக் கொண்டால், சில ஆண்டுகளுக்கு முன், தில்லியில் ஒரு இரண்டு வயது குழந்தையின் தாய் ஒரு நபரின் தற்கொலைக்கு காரணமானாள் என்று அந்த நபருடைய குடும்பத்தினரால் மானபங்கப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, முகத்தினில் கருப்பு மை பூசப்பட்டு வீதியில் இழுத்து வரப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறாள். ஒரு ஆணின் காதலை ஏற்காத பெண்ணிற்கு கத்தி குத்து, ஆசிட் வீச்சு, உடலுக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்மை போன்றவை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தலித் பெண் என்றால் ஹத்ராஸ் சம்பவம் போல வன்கொடுமை செய்யப்பட்டு மரணமடைந்த அவளுடைய உடல் கூட எந்த வித குற்ற உணர்வும் இன்றி நள்ளிரவில் எரிக்கப்படுகிறது. ஒரு பெண் காதல் வயப்பட்டு வேறு ஒரு சாதி ஆடவனை கைப்பிடித்தால் கௌரவக் கொலை என்ற பெயரில் அழிக்கப்படுகிறாள். 15 முதல் 18 வயது வரை இளவயது பெண் திருமணங்கள் கொரோனா காலத்தில் அதிக அளவு நடந்ததாக நாம் அறிய வருகிறோம்.
மரணப் படுக்கையில் இருக்கும் பாட்டி
ஆசைப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவி மனைவி ஆனாள்
முகம் தெரியாதவனின் கையை பிடித்து ஏழடி எடுக்கையில்
ஹோம குண்டத்தில் சாம்பல்
வழியெங்கும் நெருப்பு
இதற்கு முக்கிய காரணம் பெண்கள் படித்தவர்களாக இருந்தால் தங்களுக்கு என்று குடும்பம், வேலை என்று எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரு வலிமையான இடத்திற்கு வந்து விடுவாள் என்ற பயம் தான்.
அதிகம் பேசும் பெண்ணை வாயாடி என்போம், ஆனால் அதிகம் பேசும் ஆணுக்கு தமிழில் பெயர் இல்லை வீட்டை விட்டுச் சென்ற பெண்ணிற்கு ஓடு காலி என்றும், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்ணுக்கு மலடி என்றும் பெயர் உண்டு. நேர்த்தியாக உடை உடுத்தினால் எத்தனை ஜோடிக் கண்கள் ஒரு பெண்ணை உரசிச் செல்கிறது. ஒரு பெண் கொஞ்சம் அழகாக இருந்தால் அவளை எத்தனை கரங்கள் தீண்டத் துடிக்கிறது. இவ்வாறாக பெண்ணின் சிறகுகளை வெட்டி விட்டால் அவளால் எத்தனை உயரங்களைத் தொட முடியும்?
பெண் விடுதலை என்பது ஆண்களைச் மட்டும் சார்ந்தது அல்ல, தவறிழைக்கும் ஆண்கள் வளர்ந்த குடும்பத்தில் இருக்கும் பெண்களையும் சார்ந்தது தான். பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வு ஆண்களிடம் எந்த அளவு இருக்கிறதோ அளவு பெண்களிடமும் உள்ளது.
ஆற்றின் நீரோட்டத்துக்கு எதிராக ஒரு நீர் நாய் எப்படி அணைக்கட்டுகிறதோ அப்படி ஒரு பெண்ணும் நினைத்தால் சமூக போக்கிற்கு எதிராக உயர்ந்து நிற்க முடியும். இதற்கு முக்கியத் தேவை பெண்ணிற்கு மனஉறுதியும், எதற்கும் அஞ்சாத திறனும் மட்டுமல்ல, அவளுடைய குடும்பத்தின் முழு ஒத்துழைப்பும் தான். ஒரு பெண்ணுக்கு அரணாக ஒரு சமூகமோ, அரசாங்கமோ உதவிக்கு வராத சூழலில் ஒரு பெண்ணின் கரங்களுக்கு வலு சேர்ப்பது அவளுடைய குடும்பம் மட்டுமே. ஆனாலும் குடும்ப கௌரவம், சாதிப் பெருமை போன்றவற்றை முன்னிறுத்தும் குடும்பச் சூழலில் பெண்கள் தங்களுடைய குடும்பங்களில் இருந்து பாதுகாப்பும், உதவியும் பெறுவது இல்லை. எனவே தான் ரிதன்யா போன்ற இளம் பெண்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும் பரிதாப நிலையை காணும் சூழலில் வாழ்கிறோம்.
ஆண்களைப் பற்றிய புரிதல் இல்லாமலும், பெண் பிள்ளைகளின் சொந்த விருப்பங்களை மதிக்காமலும் வளர்த்து, திருமணம் என்பதே அவளுக்கான விடுதலை என்ற எண்ணத்தை விதைத்து, சுய சார்பு என்ன என்பதே தெரியாமல், தவறான உறவுகளிடம் இருந்து பிரிந்து தனியாகவும் வாழ முடியும், சாதிக்க முடியும் என்பதைப் பற்றிய புரிதல் இல்லாமல் வளர்ப்பதே பெண் பிள்ளை வளர்ப்பு என்பதையே இன்றும் பல குடும்பங்கள் கடைப்பிடிக்கின்றன. என்னுடைய தோழி ஒருத்தி மேலே படிக்க விரும்பியபோதும், அவளுக்கு பிடித்த ஒருவரை மணக்க விரும்பிய போதும் உனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி அவளை மேற்படிப்புக்கு அனுப்பாமல், அவள் விரும்பியவரைப் பற்றியும் கவலைப்படாமல் அவளுக்கு வேறு ஒரு இடத்தில் மணம் முடித்ததும் நிகழ்ந்த ஒன்று. திருமணம் என்பது பெரும்பாலும் பெண்ணின் விருப்பதிற்கு மாறாக நிகழும் ஒன்று என்பதும் எழுதப்படாத விதி.
கோடிக்கணக்கில் யாரோ ஒருவனை நம்பி கொடுக்கப்படும் வரதட்சணை பணத்தை தவிர்த்து, சொந்த பெண்ணின் மீது நம்பிக்கை வைத்து அவள் சொந்தக் காலில் நிற்க, சுயசார்புடன் வாழ, சமுதாயத்தை புரிந்து கொள்ள, வெற்றி தோல்விகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களை பெற்றோர் அளிக்க வேண்டும். பெண்களுக்கு சுய சம்பாத்யம் தேவை. எதிர்பார்ப்புகளுக்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து வாழ, சமூக ஓட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் இத்தகைய சுயசார்பு அவர்களுக்கு அளிக்கும் என்பது திண்ணம். நாளை பற்றிய நம்பிக்கையுடன் வாழும் ஒரு பெண்ணை அசைக்கக் கூடிய சக்தி இந்த உலகத்தில் இல்லை.
"நீ கல்யாணத்துக்கு அப்புறம் உன் இஷ்டத்துக்கு கணவனுடன் எங்கு வேண்டுமானாலும் போ, இப்போ எங்கேயும் போகணும்னு சொல்லாதே", "நீ வேலையெல்லாம் பார்க்க வேண்டாம், ஊரு எங்களை பொண்ணோட சம்பாத்தியத்துல வாழறோம்னு சொல்லும்", "பொண்ணை ஆண் வாசனை படாம கட்டுக்கோப்பா வளர்த்துட்டோம்", "படிக்கறது எல்லாம் புகுந்த வீட்டுக்கு போன பிறகு பார்த்துக்கோ" என்று அரதப் பழசான வசனங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் பெண்களுக்கு எதிராக ஒலிக்கும் போதெல்லாம் அழகான வாழ்வைத் தொலைக்கும் ரிதன்யாக்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்காக, வாழ்வின் பக்கங்களில் தனக்கென வாழாமல், நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை வாழ்ந்து கொள்ளலாம் என்று வாழ்வைத் தள்ளிப் போடும் பெண்களே இங்கு மிகுதி. ஒரு ஆணுக்கு வாழ்வில் ஒரு சில பகுதிகள் கடினமாக இருக்கலாம். ஆனால் வாழ்தலே கடினமாக இருப்பது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒன்று. இன்று உலகத்தில் போர் நடக்கும் நாடுகள் எல்லாம், ஆண் பெண் பாகுபாடு அதிகம் நிலவும் இடங்களே. கல்வி, வேலை வாய்ப்பு, சுதந்திரம் என்று எல்லாமும் சமநிலையில் கிடைக்கும் நாடுகளிலேயே அமைதியும், வளர்ச்சியும் குடியிருக்கும். "மரபு" என்ற தலைப்பில் கவிஞர் ந. ஜெயபாஸ்கரன் எழுதியிருக்கும் இந்தக் கவிதை தற்கால வாழ்வின் அவலத்தை காட்டும் காலக் கண்ணாடி.
ஏதாவதொன்றை
எனதறையில்
எங்காவது வைத்துவிட்டுத் தேடுவது
அன்றாட வேலைகளில்
ஒன்றாகிவிட்டது எனக்கு
நீண்ட நேரத் தேடலுக்குப் பின்
கிடைக்கும் ஒவ்வொன்றும்
முந்தைய தேடுதலில்
கிடைத்திருக்க வேண்டியதாக
இருந்து தொலைக்கின்றன.
வியர்த்துச் சொட்டச் சொட்ட
எனக்கு நானே புலம்பியபடி
எதையாவது தேடிக் கொண்டிருப்பதை
சமையல் அறை ஜன்னல் வழியே
பார்த்துப் பரிகசிப்பது
பிடித்தமான வேலையாகி விட்டது
என் மனைவிக்கு
சமையலறையில்
என் கண்களைக் கட்டி விட்டாலும்
எந்தப் பொருளிலும் விரல் படாமல்
கேட்ட பொருனைக் கேட்ட மாத்திரத்தில்
எடுத்துத் தருவேன் என்று
சவால் விடவும் செய்கிறாள் அங்கிருந்து
அவளிடம்
சொல்லிக் கொள்வதில்லை நான்
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
அங்கேயிருக்கிறாய் என்று!
ஞாயிறு, ஜூலை 06, 2025
யாதுமாகி நின்றாய் தமிழே
சென்ற வாரம் சூலை 4, 2025 அன்று பேரவையின் 38ஆவது விழாவில் "யாதுமாகி நின்றாய் தமிழே" என்ற தலைப்பில் வாசித்த கவிதை.
இராலே மாநகரில் நற்றமிழர் கூடலிலே
தமிழ்த்தென்றல் கமழுமிந்த கவியரங்க மேடையிலே
சுடாத சூரியனை சினேகனை நடிவிருத்தி
எண்கோளாய் சுழல்கின்றோம் தமிழன்னையை தோளுயர்த்தி
முக்கூடல் சிப்பிக்குள் பிறந்திட்ட தமிழ்முத்து
விண்தோன்றா அமுதமென வேர்விட்ட நல்வித்து
யாதுமாகி நின்றாய் தமிழேவெனும் பொருண்மையிலே
கவிபாட விழைந்தே வணங்குகின்றேன் சபையினையே
நான்முகனின் நெஞ்சிலுறை நாயகியின்
கைகளிலே கன்னலெனநீ விளைந்தாயோ
குமரிக்கண்டத்திலே சங்கம் கண்டு
கற்றறிந்தோர் சிந்தையிலேநீ கிளைத்தாயோ
கத்தும்கடல் தோணியேகி மொழிகட்கு
தாயுமாகி சொற்களீந்து கரம்சிவந்தாயோ
கணியன் காதலினால் கசிந்துருகி கேளிரென
மொழிந்ததனால் மூப்பில்லா முகம்பெற்றாயோ
ஆதியிலே வந்ததெல்லாம் பாதியிலே
பொலிவிழந்து போனவிடம் யார் பகர்வாரோ
உன்மேனியிலே மேகலையாய் மாற்றமதை
பூட்டுகிறாய் பூக்களிடம் புதுமை கற்றாயோ
வடமொழியே வண்மொழியாம் வாய்பேச்சு
வீரரெல்லாம் அலர்கூறி வேலெறிந்தபின்னே
சிந்துவெளி விட்டதெல்லாம் சங்கத்தமிழ்
தொட்டதென வளம்காட்டி வாகை சூடினாயே
காலத்தால் கரைக்கவொண்ணா கருத்தான
பனுவல்பல பெற்றிங்கே பாரில் உயர்ந்தாயே
சர்ப்பமாக சிறப்பு ழகரம் முப்புள்ளியை
சிரசில்சூடி மலைமகளின் பதியை ஒத்தாயே
வல்லினமும் மெல்லினமும் கொடியிடைமேல்
இடையினமும் சமத்துவமாய் பெயரில் சுமந்தாயோ
பித்தா எனவழைத்து பரமனையும்
பலசொல்லி வைதாலும் வாழ்விக்கும் தாயோ
நெற்றிக் கண்ணைக் காட்டிடினும்
நற்றமிழே வேதமெனும் நக்கீரப்படை அடைந்தாயோ
யானே கள்வனென்ற கோமகனின்
கொற்றம்சாய்த்து அறத்திற்கு காப்புமானாயோ
செம்மொழிக்கு இலக்கணமாய் சுட்டுகின்ற
தகுதியாவும் தன்னகத்தே தாங்கி நின்றாயே
உன்னருமை உணராத உணர்விழந்த
பேர்களுக்கு பகற்கனவே பாரில்நிறை வாழ்வே
அன்பெனும் மாமருந்தே மறத்துக்கும் மாற்றாகுமென
வள்ளுவமாய் மண்ணில் மலர்ந்தாயே
அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றாகுமென
அரியணைக்கும் சிலம்பில் உரைத்தாயே
குறிஞ்சியிலே கூவும்குயில் ஓசையிலே
குடிபுகுந்து ஐம்பூதமுங்களின் ஐயை ஆனாயே
மருதத்திலே யாழிசையாய் முத்தமிழே முன்பிறந்தாய்
வையமாளும் வளைக்கரமும் நீயே
வான்மழையை வரவேற்ற வண்ணமயில்
வனப்பெல்லாம் வஞ்சியுந்தன் பேரெழில்முன் வீணோ
ஒருபொருட் பன்மொழியாய் பல்பொருள்
ஒருமொழியாய் மொழிவானில் விடிவெள்ளியும் நீயோ
வடவேங்கடம் தென்குமரி இடையினிலே
இளைக்காமல் இணையமேறி தடம் பதித்தாயே
அருஞ்சொல் களஞ்சியமே கன்றாத
மொழிவளத்தால் நடமாடும் நாமகள் ஆனாயே
யாப்புக் கட்டுடைத்து புதுக்கவிதை ஏர்பிடித்தே
எளியோர்க்கும் அருள்கின்ற தாயே
மாற்றத்தின் முகவரியே முன்தோன்றிய மாமணியே
மரணமில்லா பெருவாழ்வாய் மலர்ந்ததாயே
நிலையில்லா நிலவுலகில் நீள்புகழை
நாட்டிவிட்டு அமுதமாக அகத்தில் உறைந்தாயே
கொற்றவையே குலக்கொழுந்தே தெவிட்டாத
தீஞ்சுவையே யாதுமாகி எங்கும் நிறைந்தாயே
வியாழன், ஜூன் 26, 2025
வடிவக் கவிதைகள்
கவிதைக்கு ஒரு வடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறு கற்பனை. கவிதைக்கு உருவம் உண்டா? நமது மனதில் ஒரு தாக்கம் அல்லது ஒரு நினைவை மீட்டெடுக்கும் கவிதை அதுவே ஒரு வடிவத்தை எடுத்துக் கொள்ளும் என்பதே உண்மை. ஆனால் கவிதையையே ஒரு வடிவத்தில் எழுதி, அது என்ன வடிவத்தை எடுக்க வேண்டும் என்று நாமே முடிவு செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் எழுந்ததே இந்தக் கவிதைகள்.
#முக்கோணக் கவிதை
செல்பேசி வந்த பின் தொலைந்தது, சிட்டுக் குருவிகள் மட்டுமல்ல, சிட்டுக் குருவிகள் போன்று சுறுசுறுப்பாக விளையாடிய குழந்தைகள், செய்தித்தாள்கள், புத்தகம் படிப்பவர்கள் என்று பலரும் தானே. ஒரு கண்டுபிடிப்பு மும்முனை தாக்குதல் தொடுத்து பலவற்றை வீழ்த்தியது உண்மை என்பதால் இந்தக் கவிதைக்கு இந்த முக்கோண வடிவம் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
#வட்டக் கவிதை
சட்டங்களில் உள்ள ஓட்டைகள், சட்டம் படித்தவர்களை விட குற்றவாளிகளே அதிகம் காண்கின்றனர். அவர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அவ்வாறான ஓட்டைகள், ஓட்டை எதுவும் இல்லாத கண்களில் இருந்து பொழியும் கண்ணீரினை ஒத்ததாகவே இருக்கிறது அல்லவா, அதாவது சமூகக் கண்களை கண்ணீரில் நனைய வைப்பவர்கள் தானே இவர்கள்!!
செவ்வாய், ஜூன் 24, 2025
தீயின் இதம் சொல்லவா - பாடல்
என்னுடைய எழுத்தில் உருவான புதிய பாடலுக்கான முன்னோட்டக் காணொளி இப்போது வெளியாகி உள்ளது. பாடல் எழுதி, இசை சேர்த்து சில நாட்களாகி விட்டது. பாடல் எழுதியவுடன், இசை கோர்த்தும், சில பல காரணங்களால் அதற்கான காணொளி தயாரிப்பில் சிறிது கால தாமதம் ஏற்பட்டதால் பாடலை உடனடியாக வெளியிட முடியவில்லை. பாடலுக்கான வலையொளி இணைப்பு கீழே.
திங்கள், ஜூன் 23, 2025
ஜருகண்டி ஜருகண்டி
சென்ற வாரம் ஜூன்டீன்த்தை முன்னிட்டு வந்த விடுமுறை மற்றும் வார இறுதி இரண்டையும் சேர்த்து ஒரு நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மிச்சிகனில் வசிக்கும் உறவினர்களைப் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். அவர்களோ, இவ்வளவு தூரம் நீங்கள் மட்டுமே பயணப்பட்டு வர வேண்டாம், நாங்களும் பாதி வழி வரை வருகிறோம் என்று சொன்னதால், ஒஹையோவில் உள்ள ஆக்ரன் ,(Akron, OH) என்ற ஊரில் சந்திப்பதற்கு AirBNB வழியாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்தோம். ஆக்ரனுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது வீட்டை புக் செய்ததால், ஒரே ஒரு குளியலறை மட்டுமே கொண்டு இருந்தது அந்த வீடு என்பதைச் சரியாக கவனிக்கவில்லை. கிட்டத்தட்ட 7 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை கொண்ட, 8 பேருக்கு ஒரே ஒரு குளியலறை என்பது கடினமாக இருந்தது. குளியலறையில் தாழ்ப்பாள் இல்லை என்பது கூடுதல் சுமையாக இருந்தது. பொதுவாக "Buyer Beware" என்று சொல்வது உண்டு. அதாவது காசு கொடுத்து எதையும் வாங்கும் போது நமக்கு அது சரியாக வருமா அல்லது இதில் ஏதாவது மறைக்கப்பட்ட ஒன்று உள்ளதா, நாம் எல்லாவற்றையும் கவனித்துத் தான் வாங்குகிறோமா, இல்லை ஏமாறுகிறோமா என்று யோசித்து வாங்கினால் மட்டுமே நமக்கு நன்மை தருவதாக அமையும். AirBNB-ஐ பொருத்தவரை beware என்பதை அடிக்கோடிட்டு நன்றாக உள்வாங்கி அணுக வேண்டும் என்பதை மீண்டும் உணர்ந்தேன். மனிதர்கள் அடுத்தவரை ஏமாற்ற வேண்டும் அல்லது அடுத்தவரின் கவனத்தை திசைத்திருப்பி வேறு ஏதோ ஒன்றை முன்னிறுத்தி குறைகளை மறைக்க வேண்டும் என்று நினைக்கும் வரை இதற்கு ஒரு விடிவு இருக்கும் என்று தோன்றவில்லை. பழைய கால வீடு என்றாலும் வீட்டின் உள்ளே ஓரளவு நன்றாகவே இருந்தது. தரை தளத்தில் சமையலறை, சாப்பிடும் அறை, பெரிய ஹால், கண்ணாடி ஜன்னலைகள் பதித்த சிட்-அவுட், மேல்தளத்தில் மூன்று தூங்கும் அறைகள் மற்றும் குளியலறை, அதற்கும் மேலே இரண்டாவது தளத்தில் விஸ்தீரணமான தூங்கும் அறை என்று வசதியான வீடு தான். வீட்டின் பின் நுழைவு வாயிலில் மட்டும் முன்பு தங்கி இருந்தோர் விட்டுச் சென்ற குப்பைகளில் இருந்து அப்படி ஒரு துர்நாற்றம். எத்தனை நாட்களாக இருந்ததோ இந்தக் குப்பைகள். பின் நுழைவாயில் வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்பதால் இந்த நுர்நாற்றத்தில் இருந்து தப்பிக்க இயலவில்லை. ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் அந்தக் குப்பைத்தொட்டிகளை ஓடிக் கடக்க வேண்டி இருந்தது.
அந்த வீடு சையோகா தேசியப் பூங்காவில் இருந்து (Cuyahoga National Park) 30 நிமிட மகிழுந்து பயண தூரத்தில் இருந்தது. சையோகா தேசியப் பூங்காவின் பாஸ்டன் மில்ஸ் பார்வையாளர் மையத்தில் இருந்து அங்கிருந்த டௌபாத் வழித் தடத்தில்(Towpath Trail) நடந்து சென்றால் ஒஹையோ ஆற்றின் கரையில் நடந்து செல்லும் ஒரு அருமையான அனுபவத்தைப் பெற முடியும். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கிளீவ்லன்ட் மற்றும் ஆக்ரன் இடையே பயணியர் மற்றும் சந்தைப் பொருட்களை கொண்டு செல்ல இந்த நீர்வழி பயன்பட்டது. இரயில் போக்குவரத்தின் வரவுக்குப் பின் இந்த பாதைகள் நடைப் பயிற்சி செய்பவர்களுக்கும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உகந்த வழித்தடங்களாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களுக்கு மேலே தரைப் போக்குவரத்துக்கு பயன்படும் பல்வேறு தரைப் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாஸ்டன் மில்ஸ் பார்வையாளர் மையத்தில் இருந்து லாக் 29 என்பது 3 மைல் தொலைவில் உள்ளது. அதுவரை நடந்து சென்று பின் மீண்டும் பார்வையாளர் மையத்தை நோக்கி நடந்து வந்து கிட்டத்தட்ட 6 மைல் தூரத்திற்கு நடைப்பயிற்சி செய்தோம். இது மிகவும் ரம்மியமான பொழுது போக்காக அமைந்தது.
நடைப்பயிற்சியை முடித்து விட்டு அருகில் உள்ள சாலே மார்க்கெட்டில் (Szalay Farm & Market) மகிழுந்தை நிறுத்தி, அங்கே கிடைத்த வேகவைத்த சோளத்தை சுவைத்தோம். அங்கே பழ வகைகள் பலவும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதையும் உண்டு மகிழ்ந்தோம். இங்கே 10 பேர் உட்கார்ந்து ஆடும் அளவு மிகப் பெரிய மரத்தாலான ஊஞ்சல் ஒன்றும் இருக்கிறது. ஆடிக் கொண்டே சாப்பிடும் வண்ணம் 4 பேர் அமரக்கூடிய உட்காரும் மேசை மற்றும் நாற்காலிகளும், ஒரு பெரிய சோளத் தோட்டத்தை பார்த்துக் கொண்டே சாப்பிடும் அனுபவமும் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்னமும் இது போன்ற கடைகளில் கிரெடிட் கார்ட் எடுத்துக் கொள்ளாமல் பணம் மட்டுமே வாங்குகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. இன்று தமிழ்நாட்டில் ஒரு சின்ன காய்கறிக் கடையில் கூட ஜிபேயில் பணம் கொடுக்கும் போது வளர்ந்த நாட்டில் இப்படியும் இன்னும் இடங்கள் இருக்கிறதா என்று எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாள் கிளம்பி பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் நகரத்திற்கு பயணம் வந்தோம். பிட்ஸ்பர்க்கில் உள்ள பெருமாள் கோவில் பிரசித்தமானது. சனிக்கிழமை என்பதாலும், கோடை விடுமுறை என்பதாலும் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அர்ச்சனை சீட்டு வாங்கிய பின் சுவாமி தரிசனம் செய்ய அதற்கான வரிசையில் காத்திருந்தோம். அமெரிக்காவில் பல கோவில்களுக்கு போயிருந்தாலும், முக்கால் மணி நேரம் அமெரிக்க பெருமாள் கோவில் ஒன்றில் அர்ச்சனை செய்ய வரிசையில் காத்திருந்தது புதிய அனுபவமாக இருந்தது. அப்புறம் ஒரு வழியாக வரிசை முன்னேறிச் சென்றது. வரிசையில் சென்றாலும் எனக்கு தூரத்தில் இருந்தே பெருமாளின் அர்ச்சனை மற்றும் ஆராதனையை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சிறிது நேரம் கழித்து ஒவ்வொரு வரிசையாக பெருமாளை அருகில் சென்று தரிசிக்கும் வண்ணம் உள் சந்நிதிக்கு அனுப்பினார்கள். பெருமாள் கோவில்களுக்கே உரித்தான "ஜருகண்டி ஜருகண்டி" தரிசனம் தான். மின்னல் வெட்டியது போல உள்ளே சென்று வந்ததில் பெருமாளிடம் நாம் சென்று அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு வந்தது போலவே தோன்றியது.
அப்புறம் அங்கிருந்த உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு வாடகைக்கு பிடித்திருந்த வீட்டிற்கு சென்றோம். இந்த வீடும் தரைத்தளம், கீழ்த்தளம், மேல்தளம் என்று மூன்று அடுக்குகள் கொண்டிருந்தது. சிறிது நேரம் ஓய்வுக்கு பின், பிட்ஸ்பர்க்கில் இருந்த புகழ்பெற்ற கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்திற்கு (Carnegie Mellon University) சென்று அதைச் சுற்றிப் பார்த்தோம். டௌன்டவுன் எனப்படும் நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது இந்தப் பல்கலைக்கழகம். விடுமுறை தினம் என்பதால் கல்லூரியின் பல கட்டடங்கள் பூட்டி இருந்தது. திறந்திருந்த ஒரு சில கட்டடங்களில் மாணவர்கள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். இது தவிர பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக கட்டடங்களும் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தது. இந்த பழைய கால கட்டடங்கள், குறுகலான சந்துகள் மற்றும் கடைகள் ஆகியன தொலைந்து போன ஒரு காலத்தை நம் கண்முன்னே கொண்டு வந்தது. அங்கே இருந்த அந்தக் கட்டடங்களை சிறிது நேரம் சுற்றிப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துவிட்டு, அங்கிருந்த செயின்ட் பால் கதீட்ரல் சர்ச்சை அடைந்தோம். சர்ச்சில் மாஸ் நடந்து கொண்டிருந்தது என்பதால் அங்கே அதிக நேரம் செலவிட முடியவில்லை. எனினும் வழக்கமான பெரிய சர்ச்சுகளைப் போல தேவ உருவங்கள் தீட்டப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தது.
அன்று இரவு உணவினை டௌன்டவுனிலேயே ஒரு இத்தாலிய உணவகத்தில் முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்பும் நாள். சீக்கிரமே எழுந்து தயாராகி, வாடகை வீட்டில் இருந்து புறப்பட்டோம். பெருமாள் கோவில் ஊருக்குச் செல்லும் வழியிலேயே இருந்தது என்று கூகுள் தடங்காட்டி சொன்னதால், கோவிலுக்கு சென்று நன்கு பெருமாளை தரிசனம் செய்து விட்டு ஊருக்குத் திரும்பலாம் என்று எண்ணி நேராக வண்டியை கோவிலுக்கு விட்டோம். கோவிலில் அதிக கூட்டம் இல்லை. பெருமாள் சந்நிதியில் பெருமாளுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. கருவறை அருகில் இருந்த உள் சந்நிதியிலும், அதற்கு வெளியே இருந்த வெளி சந்நிதியிலும் ஆட்கள் அமர்ந்து பெருமாள் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூடத்தின் இறுதியில் பெருமாளை பார்த்த வண்ணம் நிற்கும், கருடத்தாழ்வார் சந்நிதியும் உண்டு. கிட்டதட்ட கருடத்தாழ்வார் சந்நிதிக்கு சற்று முன் வரை வரிசைக்கு மூன்று பேரென மக்கள் அமர்ந்திருந்தனர். அதிக பட்சமே 40 நபர்கள் அங்கே அமர்ந்திருக்கக் கூடும். கருடத்தாழ்வார் சந்நிதி முன்பாக நடப்பதெற்கான பாதை மட்டுமே இருந்தது. 4 அல்லது 5 பேர் நிற்கக் கூடிய அந்த குறுகிய இடத்தில் கிட்டத்தட்ட 10 பேர் வரை நின்று இருந்தனர். ஒரு பெண்மணி இல்லாத கூட்டத்தை ஒழுங்கு செய்கிறேன் பேர்வழி என பெருமாள் சந்நிதி அருகே நின்று கொண்டிருந்தார். அமர்ந்து இருப்பவர்கள் அருகில் நின்று பெருமாளை சில வினாடிகள் தரிசிக்கலாம் என்று எண்ணி அமர்ந்திருந்தோர் அருகே செல்ல முற்பட்ட போது அவசரமாக எங்களைத் தடுத்து இங்கே Sponsors மட்டுமே செல்ல அனுமதி. உங்களுக்கு தரிசனம் செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே 10 பேர் கடைக்கோடியில் கருடத் தாழ்வார் சந்நிதிக்கு முன்பு நின்று கொண்டிருந்தார்கள் அல்லவா, அங்கே சென்று பாருங்கள் என்று எங்களை அங்கே அனுப்பி வைத்தார். அங்கே ஏற்கனவே நிறைய பேர் நின்று கொண்டிருந்ததால் பெருமாளை அரைகுறையாக மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. யாரோ மறைத்துக் கொண்டு நிற்க, குழந்தைகளும் எம்பி எம்பி பெருமாளைப் பார்த்தே தரிசனத்தை முடித்தார்கள்.
கோவில் என்பது, அந்த ஊர் மக்களைத் தவிர, அந்த ஊர் வழியாக வேறு ஊருக்குச் செல்பவர்கள், அந்த கோவிலுக்கென பல்வேறு ஊர்களில் இருந்து பயணம் செய்து வருபவர்கள் என்று பல்வேறு மக்கள் கூடும் இடமாகும். sponsors-க்கு மட்டுமே பெருமாள் அருள்பாலிப்பார் என்றால் அதை தெளிவாக குறிப்பிட்டு வெளியில் ஒரு தட்டியாவது வைத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அந்த திசைக்குக் கூடச் செல்லாமல் வெளியில் இருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்திருப்பேன். அமெரிக்காவில் வளரும் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்வது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அம்மாதிரி குழந்தைகள் வைத்திருப்போருக்குத் தெரியும். அதுவும் வளர்த்த குழந்தைகளுக்கு, சரியான உடை தேர்வு செய்து அதை அவர்களை அணியச் செய்து, அவர்களை தயார் செய்து கூட்டிச் செல்வது ஒரு சாகசம். கலாச்சார பண்பாட்டு மையங்களாக இருக்க வேண்டிய கோவில்கள் வெறும் காசு பணம் பார்க்கும் இடங்களாக, சமுதாய பாகுபாட்டினை முன்னிறுத்தும் தூண்களாக இருப்பது எந்த அளவு அடுத்த தலைமுறையை ஈர்க்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணினால் நல்லது. பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள் பெருமாளை குறைந்தபட்சம் அருகில் சென்று தரிசிக்கும் வழிவகைகள் கூடச் செய்யாமல் கூட்டம் இல்லாத நேரத்தில் கூட கடைக்கோடியில் நின்று தெரிந்த வரை பாருங்கள் என்று சொல்வதெல்லாம் என்ன கீழான மனநிலையோ தெரியவில்லை. நானாவது முன்தினமே பெருமாளை அருகில் சென்று மின்னல் வேகத்தில் பார்த்திருக்கிறேன். புதிதாக வருபவர்கள், பணம் கொடுக்க முடியாத சூழலில் இருப்பவர்கள் என்று எத்தனையோ தரப்பு மக்கள் வரும் இடத்தில் இப்படியெல்லாமா நடந்து கொள்வார்கள் என்று ஆற்றாமை மட்டுமே எழுந்தது. தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு துரிதமாக பெருமாளை தரிசிக்க ஒரு வழியாவது ஏற்படுத்தி இருக்கலாம். அதைக் கூடச் நிர்வாகத்தினர் செய்யவில்லை.
தமிழக கோவில்களில் கூட கட்டணம் இல்லாமல் கடவுளை தரிசனம் செய்வது முயற்கொம்பே. சென்ற முறை மருதமலை முருகன் கோவிலுக்கு கட்டண தரிசனம் செய்யச் சென்றதே கசப்பான அனுபவமாக அமைந்தது. சரியான கூட்ட ஒழுங்கு இல்லாமல் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரிசையில் இணைந்து கொள்வது, விஐபிக்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டு வரிசையில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் இருப்பது என்பது போன்ற சங்கட அனுபவங்களே அதிகம். வீட்டின் அருகில் உள்ள கோவில்களைத் தவிர வேறு பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வது என்பது இயலாத ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்கள், சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடக்கும் இடங்கள் யாவும் கனவில் கூட நெருங்கிப் பார்க்க முடியாத ஒன்று. இவ்வாறு யோசித்தவாறே உணவுக் கூடத்திற்கு வந்து சேர்ந்தோம். 3 வெள்ளிகளுக்கு ஒரு உணவுப் பொதி கோவில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளியில்(உணவுக் கூடம்) கிடைக்கிறது. பிசைந்த சாதம், பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம் போன்ற உணவுகள் கிடைக்கின்றது. எல்லா நாட்களும் உணவு கிடைக்குமா அல்லது வார இறுதியில் மட்டும் கிடைக்குமா என்பது தெரியவில்லை. மாணவர்கள், குறைந்த விலையில் உணவு வேண்டுபவர்களுக்கு இது கண்டிப்பாக சலுகை விலையில் கிடைக்கும் வரப்பிரசாதம் என்றே கூறலாம். உணவை வாங்கிக் கொண்டு வெளியில் வந்த போது, வியாபார நோக்கத்தை பிரதானமாகக் கொண்டியங்கும் கருவறை மண்டபத்தை விட்டுவிட்டு, கொஞ்சமாவது மனிதநேயம் எஞ்சி இருக்கும் இந்த மடப்பள்ளியிலேயே பெருமாளும் உலாவிக் கொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றியது.
புதன், ஜூன் 18, 2025
காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன்
கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!
நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ!
தனைப் புகழ் தன்னிடத்தோர் சொல்லில்லாத
தமிழே என் தாயே நின் பாதம் போற்றி
நினைப்பில் எழும் அத்தனையும் வடிவம் இன்றி
நிழலாகத் தோன்றிடினும் சிறிய நெஞ்சின்
நினைப்பினுக்கு மதிப்பீந்து வாழ்த்தாய் உன்
நிழல் கண்ட நானும் உன்னை வணங்குகின்றேன்!
என்று கண்ணதாசனின் இனிமையான தமிழ் பாடல் வரிகளோடு இந்தக் கட்டுரையை தொடங்குவது சாலப் பொருத்தமாக இருக்கும். எனக்குப் பிடித்த கண்ணதாசன் பாடல்களில் காணப்படும் இலக்கிய நயம், வாழ்வியல் தத்துவங்கள், அனுபவத் தெறிப்புகள் என்று பலவற்றையும் என்னால் முடிந்த அளவு ஒரு கட்டுரையாக கொடுக்க முயன்றுள்ளேன். கண்ணதாசனின் பாடல்களை அல்லது கவிதைகளை ஒரு கட்டுரையாகச் சொல்வது முயற்கொம்பே. எனவே அவருடைய சில பாடல்கள், அவற்றில் காணப்படும் தமிழின் இனிமை, அனுபவ மேன்மை, வாழ்வியல் ஞானம் ஆகியவற்றை கட்டுரையாக்க முயற்சித்துள்ளேன்.பலர் முனைவர் பட்ட ஆய்வுக்கு உட்படுத்தி எழுதக் கூடிய அளவு ஆழமான கற்பனை வளம் கொண்ட கவிஞரின் கடலளவு ஞானத்தை ஒரு கையளவேனும் எடுத்துக் கொடுத்தால் இதை இன்னும் ஆழ்ந்து படித்து சுவைக்க இன்னும் சிலர் முன்வருவர் என்ற எண்ணத்தில் எழுந்ததே இந்தக் கட்டுரை.
நீங்கள் அனைவரும் அறிந்த காதல் பாடல் ஒன்று.
அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
நான் உன்னைப் போல் பெண்ணல்லவோ
அத்திக்காய், ஆலங்காய். இத்திக்காய், கன்னிக்காய், ஆசைக்காய், பாவைக்காய், அங்கேகாய், அவரைக்காய், கோவைக்காய், மாதுளங்காய் என்று முப்பதிற்கும் மேற்பட்ட காய்களை இந்தப் பாடலில் கவிஞர் சொல்லி இருப்பார். தலைவனும் தலைவியும் பாடக் கூடிய பாட்டிலே காய்களைப் பற்றி கவிஞர் சொல்லி இருக்காரே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ் இலக்கணத்தில் உள்ள சிலேடையை மிகவும் சிறப்பாக இந்தப் பாடலில் கையாண்டிருப்பார் கவிஞர்.
அத்திக்காய் காய்காய்
(அந்த திக்கில், அதாவது திசையில் காய்வாயாக)
ஆலங்காய் வெண்ணிலவே
(ஆலம் என்ற விஷத்தின் தன்மையை ஒத்த வெண்ணிலவே)
இத்திக்காய் காயாதே
(இந்த திக்கில், அதாவது நான் இருக்கும் திக்கில் காயாமல், என்னுடைய தலைவன் இருக்கும் திக்கில் காய்ந்தால் அவன் என்னைத் தேடி வரும் வாய்ப்பு இருக்கும்)
நான் உன்னைப் போல் பெண்ணல்லவோ
(நானும் உன்னைப் போல ஒரு பெண் தானே, என்னுடைய நிலையை அறிந்து எனக்கு உதவுவாயாக)
கன்னிக்காய் ஆசைக்காய்
(கன்னிக்காக ஆசைக்காக)
காதல்கொண்ட பாவைக்காய்
( காதல்கொண்ட பாவைக்காக)
அங்கேகாய் அவரைக்காய்
(அங்கே சென்று காய்வாயாக, அவரை அதாவது என்னுடைய தலைவனைப் போய் காய்வாயாக)
மங்கை எந்தன் கோவைக்காய்
(மங்கை என்னுடைய கோ, அதாவது கோ என்பது இங்கே தலைவனைக் குறிக்கும், மங்கை என்னுடைய தலைவனை காய்வாயாக)
மாதுளங்காய் ஆனாலும்
(தலைவன் பாடும் போது சொல்வது - மாது, அதாவது என்னுடைய மங்கையின் உள்ளம் காயாக ஆனாலும்)
என்னுளங்காய் ஆகுமோ
(என்னுடைய உள்ளம் காயாக ஆகாது)
உள்ளமெலாம் மிளகாயோ
(உள்ளமெல்லாம் இளகாயோ அல்லது உள்ளமெல்லாம் மிளகாயோ என்று இரு பொருளில் வந்துள்ள வரிகள் இவை)
ஒவ்வொருபேச் சுரைக்காயோ
(ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ, அதாவது ஒவ்வொரு பேச்சையும் கூறுவாயாக)
கோதை எனைக் காயாதே
(கோதை போன்ற பெண்ணாகிய என்னைக் காயாதே)
கொற்றவரைக்காய் வெண்ணிலா
(கொற்றவன், அதாவது மன்னவனைக் காய்வாயாக வெண்ணிலா)
இப்படியெல்லாம் தமிழில் சிலேடையை பயன்படுத்தி எழுதுவது கவிஞர் அவர்களுக்கு கைவந்த கலை என்பதை கூறவும் வேண்டுமா!!
அடுத்ததாக இயற்கை பற்றிய கவிஞர் அவர்களின் வர்ணனையைப் பார்ப்போம். இயற்கை வர்ணனைகளில் கவிஞருடன் நாமும் இணைந்து பயணம் செய்வது போன்ற ஒரு உணர்வைக் கடத்துவதில் கவிஞருக்கு நிகர் அவரே தான். தாலாட்டு பாடலைக்கூட கேட்பவர் அனைவரும் சொக்கும்படி இயற்கை வர்ணனையை கலந்து தருவது அவருக்கு கைவந்த கலை. என்னே இவரின் கவிதை நயம் என்று நம்மை வியக்க வைக்கும் மாணிக்க வரிகள் அவை.
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
(படம்/; பாசமலர்)
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா....
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
இயற்கை அழகு என்ன என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் கண்ணதாசன். அழகிய இயற்கை காட்சிக்கு நடுவேயும் ஒரு பள்ளத்தாக்கு சில மனிதர்களின் உள்ளம் போல இருப்பதாக கவிஞருக்கு தோன்றுகிறது. இயற்கை காட்சியில் கூட அவருள் எழும் உவமை நமக்கு வியப்பை ஊட்டுகிறது. அவருடைய எழுத்தில் தீட்டும் காட்சியானது கவிஞருடன் நாமும் பயணித்து இதே காட்சியை நேரிடையாக பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது.
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் வாழ்வே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
(படம்:சாந்தி நிலையம்)
கம்பராமாயணத்தில் வரும் காட்சி ஒன்றை இந்தப் பாடல் ஒத்திருக்கிறது .
எதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனயைும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே.
அதாவது இராமர் நகர்வலம் வரும்போது எதிரில் வரும் நபர்களை நோக்கி உங்கள் தொழில் எப்படி போகிறது, உங்களுக்கு ஒன்றும் துன்பம் இல்லையே, உங்கள் மனைவி நன்றாக உள்ளாரா? உங்கள் மைந்தர்கள் நலமா என்று கேட்பார் என்பதை இந்த பாடலுக்குள் கொண்டு வருகிறார். இந்த இலக்கிய நயமே அவருடைய பாடல் காலம் கடந்து இன்னும் நிற்பதற்கு ஒரு பெரிய காரணம் ஆகும்.
கண்ணதாசன் தன்னுடைய என்ன அனுபவத்தை சொன்னாலும் அதில் ஒரு இலக்கிய செய்தியை கொண்டு வருகிறார்.
ஒரு புறம் பார்த்தால் மிதிலையில் மைதிலி
மறுபுறம் பார்த்தல் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
(படம்: அபூர்வ ராகம்)
என்ற பாடல் வரிகளில் கதாநாயகியை வர்ணிக்கும் போது கூட மாதவியும், ஜானகியும் அவருக்கு நினைவில் வந்து நிற்கிறார்கள்.
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ்
சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல,
தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே.
அதாவது எதுவும் நிலையானது அல்ல என்று சொல்லும் இந்தக் கருத்தை அப்படியே தன்னுடைய பாடலிலும் பிரதிபலிக்கிறார் கவிஞர்.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா.
சந்தையில் வந்து சேர்ந்த மாடுகளைப், பொருள் கொடுத்து வாங்குபவர், ஓட்டிச் செல்லுவது வாடிக்கை. நாமும் அது போலவே இந்த உலகிற்கு வந்து சேர்ந்தவர்கள். இங்கே யாரும் யாருக்கும் சொந்தம் அல்ல என்பதை இரண்டு அடியில் குறள் போல எடுத்து உரைக்கிறார்.
(படம்:காலமகள் கண்திறப்பாள்)
கண்ணனின் தாசனாக, தோழனாக, சரணாகதியும் அவர் அடைந்திருக்கிறார். கண்ணன் அவருக்கு யார் என்பதை இப்படிச் சொல்கிறார்.
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா..
ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு
(படம்:சுமைதாங்கி)
இதைவிட சிறப்பாக மனதை ஆற்றுப்படுத்தக் கூடிய ஒரு பாடலை இந்தக் காலத்தில் ஒன்று கூட எடுத்துக் காட்டாகச் சொல்ல முடியாது.
செங்கயல் ஓடி விழுந்த விழிக்கு ஒரு சித்திரம் தீட்டுகிறாள்
தீராத வயிற்று வலி பிணித்ததாலே
திருநாவுக்கரசர்வர் இறையைக் கண்டார்
சீர்காழி குளக்கரையில் ஒருவர் கண்டார்
(ஞானசம்பந்தர் சீர்காழி குளக் கரையில் ஞானம் பெற்றவர்)
ஸ்ரீரங்கச் சந்நிதியில் பலபேர் கண்டார்
(ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கத்தில் ஞானம் பெற்றார்)
சோதியிலே ராமலிங்கர் இறையைக் கண்டார்
கண்ணதாசன் வீடு பேற்றை எங்கு கண்டார் என்றால் அவர் பெற்ற அனுபவத்தின் வழி கண்டார். அதைக் கண்டது மட்டும் அல்லாமல், அதை நமக்கும், அவர் பாடல்களின் வழி சொல்லிச் சென்றிருக்கிறார்.
சாகித்ய விருது, தேசிய விருது, 5000 திரைப்பாடல்கள், 4000 கவிதைகள் என்று கவிஞர் எந்த வரைமுறைக்குள்ளும் அடங்காத ஒரு மகா சகாப்தம். தமிழ் உள்ளவரை அவர் புகழ் என்றும் வாழும். "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்ற வரிகளுக்கு முழுவதும் தன்னை ஒப்புக்கொடுத்த கண்ணதாசனுக்கு ஈடு இணை எவரும் இல்லை.